Sunday, August 31, 2008

இலங்கையில் வ.உ.சி.

1906அக்டோபர் 16ல் தூத்துக்குடியில் வ.உ.சி.யின் பெருமுயற்சியால் ""சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி லிமிடெட்'' எனும் பெயரில் சுதேசிக் கப்பல் கம்பெனி அமைக்கப்பட்டது.
தமது அருமைச் சீடர் சிதம்பரம் பிள்ளையின் புதிய சுதேசிய முயற்சியை அறிந்து திலகர் பாராட்டியது, சென்னை "சுதேசமித்திரன்' இதழில் (24101906) பின்வருமாறு செய்தியாக வெளியிடப்பட்டது.
""திருநெல்வேலியில் உத்தம தேசாபிமானியாகிய சிதம்பரம்பிள்ளை, தூத்துக்குடிக்கும் சிலோனுக்கும் சுதேசிக் கப்பல் போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது சுதேசியத்திற்கு அவர் செய்திருக்கும் பெரும் பணிவிடையாகும்''.
2782008 "தினமணி'யில் "தூத்துக்குடியில் செப்டம்பர் 5ல் சுதேசிக் கப்பல் நூற்றாண்டு விழா' எனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
2006ல் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய "நூற்றாண்டு விழா'வை 2008லாவது நடத்த முற்பட்டவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் பெரும்பாலோர் அறிந்திராத வ.உ.சி.யின் இலங்கைப் பயணம் பற்றிய செய்தி அறியப்பட வேண்டியதாகும்.
சுதேசி நாவாய்ச் சங்கத்திற்கு ஆதரவு திரட்ட வ.உ.சி. மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுள் ஒன்று, இலங்கைப் பயணம் ஆகும்.
வ.உ.சி. இலங்கை, கொழும்பு நகரில் பேட்டா எனும் பகுதியில் வாழ்ந்த தமிழ் வர்த்தகர்களின் ஆதரவைத் திரட்டச் சென்றார்.
கொழும்பு நகரில் இருந்து அக்காலத்தில் வெளிவந்த "தி சிலோன் அப்சர்வர்' எனும் மாலை நாளிதழில் ஏப்ரல் 6 (வெள்ளிக்கிழமை), 1906 இதழில் ""இலங்கையில் சுதேசி இயக்கம் கொழும்பு தூத்துக்குடியிடையே புதிய நீராவிக்கப்பல்'' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
இந்தச் செய்தியில் வ.உ.சி.யை பேட்டி கண்டு அவருடைய கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் சுருக்கம் வருமாறு.
""இந்தியாவில் சில காலத்திற்கு முன்பு தொடங்கிய சுதேசிய இயக்கம் வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 16க்குப் பிறகு விறுவிறுப்பு பெற்றது.
இதனுடைய பிரதிநிதியாக தூத்துக்குடி வழக்கறிஞர் (பிளீடர்) நம்மிடையே வந்துள்ளார். இவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் புரியும் செட்டிகளுக்குமிடையே அவர் ஆங்கிலம் அறிந்தவர் என்பதைத் தவிர வேறுபாடு ஏதும் இல்லை.
அப்சர்வரின் பிரதிநிதியொருவர் இன்று காலை பேட்டாவில் தங்கியிருந்த மிஸ்டர் சிதம்பரம் பிள்ளையை சில நிமிடங்கள் சந்தித்து சுதேசி இயக்கம் தொடர்பாக உரையாடினார்.
ஐரோப்பிய வர்த்தகத்தை பகிஷ்கரிப்பதே இந்த இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள் என்றும், "அந்நிய வர்த்தகம்' என்றால் "பிரிட்டிஷ் வர்த்தகமும்' அடங்கும் என்று மிஸ்டர் பிள்ளை கூறினார்.
இந்தியத் தொழில்களை மேம்படுத்தவே இந்த இயக்கம் முக்கியமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலோர் ஆதரவளித்துள்ளனர். இப்பொழுது இலங்கையின் ஆதரவைப் பெற விரும்புகின்றோம்.
இங்கு இயக்கத்தின் கொள்கைகளை விளக்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் போவதாகவும், முக்கியமானவர்களைச் சந்திக்கப் போவதாகவும் மிஸ்டர் பிள்ளை தெரிவித்தார்.
கொழும்பு தூத்துக்குடிக்கு இடையே நீராவிக்கப்பல் 20ம் தேதியில் இருந்து நாள்தோறும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிது காலம் கொழும்பு தூத்துக்குடிக்கு இடையே நிகழும் சேவை, பிறகு கடற்கரையைச் சுற்றி நிகழும் என்றும் மிஸ்டர் பிள்ளை கூறினார்.
புதிய கப்பல் சேவையானது, தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து தென்னிந்தியாவுக்கும் கூலிகளை ஏற்றிச் செல்லாது என்பதை சுதேசிய இயக்கத்தின் பிரதிநிதியிடமிருந்து அறிந்தோம்.
இந்த விளையாட்டை பி.ஐ. கம்பெனி சில காலத்திற்கு முன்பு தொடங்கியது என்றும், கூலிகளைக் கட்டணமின்றி இலவசமாக ஏற்றிக்கொண்டும், உடுக்க சிறிதளவு துணியும் கொடுத்தது என்றும் அவர் கூறினார்.''
அதிகார வருக்கத்தின் பக்கபலத்துடன் தூத்துக்குடி கொழும்பு கப்பல் போக்குவரத்தை நடத்திய "பி.ஐ.எஸ்.என்.'' எனும் பிரிட்டிஷ் கம்பெனியை எதிர்த்து வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனி இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
உதயதாரகை
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து 1841 முதல் அமெரிக்கன் மிஷன் சார்பில் வெளிவந்து கொண்டிருந்த, "மார்னிங்ஸ்டார் உதயதாரகை' எனும் நாளிதழிலும் வ.உ.சி.யின் இலங்கை விஜயம் குறித்து எழுதப்பட்டது.
ஏப்ரல் 12 (வியாழக்கிழமை), 1906ல் வெளிவந்த ""சுதேசாபிமானக் கிளர்ச்சி தி ஸ்வதேசி மூவ்மெண்ட்'' எனும் தலையங்கத்தில் வ.உ.சி. பற்றியும், "தி சிலோன் அப்சர்வர்' செய்தியும் இடம் பெற்றுள்ளன.
இலங்கையிலும் சுதேச தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று "உதயதாரகை' எழுதியது. வ.உ.சி. பற்றிய செய்தி மட்டும் இங்கு பின்வருமாறு எடுத்தாளப்படுகின்றது.
""வங்காளத்தில் தொடங்கிய இவ்வெழுச்சி இந்தியா முழுவதிலும் பரந்து இப்போது இலங்கையிலும் தாவியிருக்கின்றது... இலங்கையிலும் இவ்வாறு உபந்நியாசங்கள் செய்வதாய் தூத்துக்குடி வாசராகிய மெஸ் சிதம்பரம் பிள்ளை என்னுமொருவர் கொழும்பு வந்திருக்கின்றனர்.
""ஒப்சேவர்' பத்திரிகைக் கடிதரொருவர் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவர், "சுதேச கைத்தொழில் முயற்சிகளைத் தைரியப்படுத்தி பிற நாட்டுப் பொருள்களின் வரவைக் குறைப்பது மேற்குறித்த எழுச்சியின் நோக்கமென்றுங்..... கூறினார்....
தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையில் பிரித்தானிய கொம்பனிக் கப்பல்களுக்கெதிராய், பம்பாய்ப் பட்டணத்திலுள்ள "ஈசாயீ' கொம்பனியாரின் கப்பல்களோடும்படி செய்வதும் மேற்குறித்த சங்கத்தவர்களின் தீர்மானமென மெஸ். சிதம்பரப்பிள்ளை கூறுகின்றனர். இந்த பம்பாய்க் கொம்பனியாரின் கீழ் 50 கப்பல்கள் அங்கு மிங்குமோடி வியாபாரப் பொருள்களையும் பிரயாணிகளையுமேற்றித் திரிகின்றன.
தொடக்கத்தில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையிலோடும். சில நாள்களாய் வேறு கப்பல்களும் சேர்ந்து இலங்கையைச் சுற்றியும், இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலும் ஓடித் திரியும். இந்த மாதம் 20ம் தேதி முதல் இக் கப்பல்கள் ஓடத் தொடங்குமாம்!
வ.உ.சி. யின் இலங்கைப் பயணச் சுதேச இயக்கச் சொற்பொழிவுகள் அங்கிருந்த இதழ்களிலும், தமிழக இதழ்களிலும் பதிவாகியுள்ளனவா? என்பதும் கண்டறியப்பட வேண்டியதாகும்.
பெ.சு. மணி
(கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர்)
நன்றி ; தினமணி

இருண்ட காலத்துக்கான முன்னோட்டம்

கடந்த சில நாள்களாகவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரப்பூர்வ மின்வெட்டுடன் கூடுதலாக முன்னறிவிப்பற்ற மின்வெட்டையும் செயல்படுத்தி வருகிறது மின் வாரியம்.
பெரும்பாலும் நள்ளிரவிலும் அதிகாலையிலும் மேற்கொள்ளப்படும் இந்த மின்வெட்டால், மின் பயன்பாடற்ற கடந்த நூற்றாண்டு வாழ்க்கையை நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.
இந்நிலையில், நாமக்கல்லில் திங்கள்கிழமை ஒரு விழாவில் பேசிய மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, ""அரசு உத்தரவுக்கு மாறாக, கூடுதல் நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
ஆனால், அமைச்சர் இப்படி பேசிய அடுத்த 24 மணி நேரத்துக்குள் ""எந்த நேரமும் மின்தடை ஏற்படலாம்; மின்தடை ஏற்படும் நேரத்தைக் கணிக்க முடியாது'' என அறிவித்திருக்கிறது மின் வாரியம்.
ஏதோ அரசுக்குத் தெரியாமல் அலுவலர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைபோல் மின்தடையைச் சித்தரிக்கும் அமைச்சரின் பேச்சும் அதைத் தொடர்ந்து வந்திருக்கும் தலைகீழான இந்த அறிவிப்பும் கேலிக்குரியவை!
தமிழகத்தில் 2.95 கோடி மின் இணைப்புகள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் 6 லட்சம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
இதற்கேற்ப மின் தேவையும் ஆண்டுதோறும் 500 மெகாவாட் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
மாநிலத்தின் மின் தேவை 2005 06ல் 8,301 மெகாவாட்டாக இருந்தது. 2008 09ல் அது 9,576 மெகாவாட்டாக அதிகரித்திருக்கும் நிலையில், உற்பத்தி அதிகரிக்கப்படாததுடன் குறைந்தும் இருப்பதால் கடந்த சில மாதங்களாகவே 1,000 மெகாவாட் பற்றாக்குறை நீடித்து வருகிறது.
தென்னிந்தியாவிலேயே அதிக அளவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலகட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தடையற்ற மின் விநியோகம் என்ற உறுதிமொழியுடன் தொழில் நிறுவனங்களை வரவேற்கும் அரசு, அவற்றின் மின் தேவையைக் கணிக்காததும் அதற்கேற்ப மின் உற்பத்தியைப் பெருக்காததும் யாருடைய தவறு?
பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய அரசிடம் நாள்தோறும் 300 மெகாவாட் கேட்ட அரசு, முதல்கட்டமாக அளிக்கப்பட்ட 100 மெகாவாட்டுடன் பரிபூரண திருப்தியடைந்துவிட்டது.
1,000 மெகாவாட் தேவைப்படும் இடத்தில் 100 மெகாவாட் எந்த மூலை?
மின்தடை ஓர் அரசியல் பிரச்னையாக உருவெடுத்ததும் செய்யூர், மரக்காணம் அல்லது கடலூரில் இரு அல்ட்ரா மெகா மின் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகக் கூறியது அரசு. ஆனால், "ஜயங்கொண்டம் மின் திட்ட'மே 15 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்துக்கொண்டிருக்கும்போது இந்தப் புதிய திட்டங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எந்தக் காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை.
கடந்த இரு ஆண்டுகளில் மின் உற்பத்திக்கென எந்த உருப்படியான திட்டத்தையும் மின் துறை மேற்கொள்ளவில்லை. கைவசம் உள்ள திட்டங்களும் 2011க்குள் நிறைவடைய வாய்ப்பில்லை.
அரதப் பழசான சாதனங்களுடனும் நடைமுறைகளோடும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மின் வாரியத்தை லாபத்தில் இயங்கச் செய்யும் நடவடிக்கைகளும் இல்லை.
இவையெல்லாமே மின் துறை தோல்வியின் அப்பட்டமான வெளிப்பாடுகள். ஆனால், அதற்கான தண்டனையையோ மக்கள் மீது சுமத்திக்கொண்டிருக்கிறது அரசு.
ஏதோ இன்றோடு முடியப்போவதில்லை இந்தப் பிரச்னை. அடுத்த ஆண்டில் இப்பற்றாக்குறை 1,280 மெகாவாட்டாகவும் அதற்கடுத்த ஆண்டில் 1,860 மெகாவாட்டாகவும் அதிகரிக்கும் என மின் வாரியத்தினரே தெரிவிக்கின்றனர்.
இப்போதே நிலைமை இப்படியென்றால் அப்போது எப்படியிருக்கும்? நினைத்தாலே ஒரே இருட்டாக இருக்கிறது!
இந்தக் கொடுமையெல்லாம் கொசுக்களுக்கோ போர்வைகளுக்கோ புரிகிறதா என்ன? போர்த்தினால் வியர்க்கிறது; விலக்கினால் கடிக்கிறது!
சமஸ்
நன்றி : தினமணி

Saturday, August 30, 2008

தமிழர்களுக்கு தலைக்குனிவு!

மதுவின் சுவையே தெரியாமல் வளர்ந்த தலைமுறை ஒன்று உண்டு; அந்த ருசிக்கு அடிமையானவர்கள் கூட, குடிப்பழக்கத்திலிருந்து மீளமுடியாமல் ஊருக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக் குடித்த காலம் ஒன்று உண்டு.
""இருபது ஆண்டுகள் ஆண்டுவிட்டு எலியைத் தின்னச் சொன்னதாக'' கூறப்படும் காங்கிரஸ் கட்சி ஆண்ட ""இருண்ட காலம்'' அது. இப்போதோ, தமிழர்களின் நலனுக்காகவே அவதாரம் எடுத்துள்ள பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் மது அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி தமிழகம் முழுவதுமே தவிக்கிறது.
செங்கோட்டை அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 12வது வகுப்பு மாணவர்கள் இருவர் கடந்த திங்கள்கிழமை மது புட்டியுடன் பள்ளிக்கூடத்துக்கு போதையிலேயே வந்து, பையிலிருந்து எடுத்து மேலும் குடித்திருக்கின்றனர். சக மாணவர்கள் அவர்களை ஆசிரியரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். பிறகு, தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தி பெற்றோரை வரவழைத்து பள்ளியைவிட்டு நீக்கியுள்ளார்
இந்த பள்ளிக்கூடத்தின் புகழ் இத்தோடு நின்றுவிடவில்லை, ஏற்கெனவே பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் இதே போல குடித்துவிட்டுப் பள்ளிக்கூடத்துக்கு வந்ததற்காக, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனராம்.
சென்னையிலே மற்றொரு சம்பவம். ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் தனது திருமண நாளுக்கு முதல் நாள் இரவு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க மது அருந்தியிருக்கிறார். நண்பர்களில் ஒருவன் குடி போதையில், ""உனக்குப் பார்த்த பெண் அழகாக இல்லை'' என்று கூறியிருக்கிறார். அந்தக் குடி வெறியிலும் அதை அப்படியே எடுத்துக் கொண்ட மணமகன், ""எனக்கு இந்தத் திருமணமே வேண்டாம்'' என்று அந்தத் திருமண மண்டபத்தைவிட்டு வெளியேறி எங்கோ போய் உட்கார்ந்திருக்கிறார். போலீஸார் தலையிட்டு அவரை, சமாதானம் செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துவந்துள்ளனர். ""குடிகாரனைத் திருமணம் செய்துகொண்டு என்னால் நிம்மதியாக வாழ முடியாது'' என்று அந்த மணமகளோ சரியான முடிவெடுத்து அவரை நிராகரித்துவிட்டாள்.
இவ்விரு செய்திகளையும் படித்ததும் தமிழ்நாடு போகும் பாதை சரியானதுதானா என்ற கவலைதான் மேலிடுகிறது. தமிழ்நாட்டை ஆளும் கட்சியும், ஆளத்துடிக்கும் பிரதான எதிர்க்கட்சியும் மதுவிலக்கில் தங்களுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை என்பதை ஏற்கெனவே தெரிவித்துவிட்டன.
இலவசத் திட்டங்களை அறிவித்து அதை ஏழைகளுக்குக் கொடுத்தாலே தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற புதிய உத்தியைக் கட்சிகள் கண்டுபிடித்துவிட்டன. ""கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க'' தமிழ் இனம் தயாராக இருக்கும்போது சுயநலத் தலைவர்களுக்கு இனி என்ன கவலை?
""தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு இனி சாத்தியமில்லை; கள்ளச்சாராயம் ஆறாகப் பெருக்கெடுக்கும்; அதைத் தடுக்க நமது காவல்துறையைப் பத்து மடங்காகப் பெருக்கினாலும் போதாது; பிற மாநிலங்களுக்கு நம் தமிழர்கள் குடிப்பதற்காகவே குடியேறிவிடுவார்கள்; குடிப்பதை நிறுத்தினால் உடல் நலம் கெட்டு விரைவிலேயே பரலோகம் போவார்கள்; நம்முடைய நல திட்டங்களுக்குப் பணம் கிடைக்காமல் திண்டாட நேரிடும்; காமராஜ் காலத்திலேயே கள்ளச் சாராயத்தைத் தடுக்க முடியவில்லை'' என்றெல்லாம்தான் ஆள்வோர் தரப்பிலிருந்து பதிலாக வருகிறது.
மதுவிலக்கு அவசியம் என்று இப்போதைக்கு ஒரேயொரு கட்சிதான் கூறி வருகிறது. இந்தக் குரல் தனிக்குரலாக இருந்துவிடக்கூடாது. காந்தியவாதிகளும் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை உள்ள நல்லவர்களும் இதற்கு வலு சேர்க்க வேண்டும். இது சவாலான வேலைதான்; இந்தச் சவாலில் வெற்றி காணும் நாள்தான் தமிழர்களுக்கு உண்மையிலேயே நல்லநாள். தமிழர்களுக்கு எதிரி வெளியில் இல்லை, மது என்ற வடிவில் நம்முடனேயே இருக்கிறான். மதுவை ஒழிப்போம், மனிதர்களைக் காப்போம்.
நன்றி : தினமணி

சில சிந்தனைகள்

ஒகேனக்கல் பிரச்னைக்காக உண்ணாவிரதத்தில் ரஜினி பேசிய பேச்சிற்கு கன்னட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கன்னடத்தில் ரஜினி படங்களை ஓட விட மாட்டோம் என்றும் கண்டனக் குரல் எழுப்பினர். அன்று அது குறித்து எதுவும் கருத்துத் தெரிவிக்காத ரஜினி தனது படம் குசேலன் அங்கே திரையிடப்பட வேண்டுமென்பதற்காக பழைய கன்னட எதிர்ப்புப் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார். பயன் இரண்டு மாநிலங்களிலும் படம் ஓடவில்லை. உமியும் போய் தீயும் போயிட்டென்று ஒரு பழமொழி உண்டு தமிழில்.
உண்ணாவிரதம் என்கிற ஓர் அரிய போராட்டத்தை தேசத் தந்தை காந்தி அடிகள் அறிமுகம் செய்தார். இருபது நாள்கள் முப்பது நாள்கள் என்று உண்ணாவிரதம் இருந்தார் அந்தப் பெரியவர்.
ஆனால் தேசத் தந்தையின் அந்த உன்னதமான போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஒரு நாள் அரை நாள் என்றெல்லாம் உண்ணாவிரதத்தை நடத்தத் தொடங்கி விட்டனர் நமது அரசியலார்.
மக்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட பாபா ஆம்தே, மேதா பட்கர் போன்றவர்களின் தியாகத்தை எல்லாம் மறைத்து இந்தப் போலி உண்ணாவிரதங்களுக்கு விளம்பரங்கள் அதிகமாயின.
ரஜினி செய்த தவறு ஒன்றே ஒன்றுதான். கடவுளை முழுமையாக நம்புகின்ற ரஜினி நல்ல மழை தர வேண்டி இறைவனை வேண்டி நின்றிருக்க வேண்டும். சரியான மழை மட்டும் பெய்து விட்டால் எடியூரப்பாவோ தேவகெளடாவோ தண்ணீரை நிறுத்தி விட முடியுமா?
இன்னொன்றும் புரியவில்லை. ஒகேனக்கல் தமிழகத்தின் பகுதி. அதற்குள்ளே தண்ணீர் வந்து விட்ட பிறகு எதற்கு கர்நாடகத்தின் அனுமதி வேண்டும். அங்கே காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தலில் இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது என்று நமது முதல்வர் கூட்டணி தர்மத்திற்காகச் செய்த வேலை இது.
எல்லாவற்றிலும் மத உணர்வுகளை மொழி உணர்வுகளைத் தூண்டியது நாம் தானே. அதன் பின்னர்தான் மற்றவர்கள் ஆரம்பித்தார்கள்.
மதுரை முத்து, தமிழர் படை துவக்கிய பின்னர்தான் மராட்டியத்தில் சிவசேனை, கர்நாடகத்தில் வட்டாள் நாகராஜின் இயக்கம் போன்றவை தோன்றின.
கேரளத்துப் பருவ மழைதான் குற்றாலத்தில் அருவியாகக் கொட்டுகின்றது.
நமது தமிழ்நாட்டிற்குள்ளேயே ஒரு ஊர்க்காரர்கள் மற்றொரு ஊருக்குத் தண்ணீர் தர மறுக்கின்றார்களே. இது என்ன கூத்து.
இயற்கையை அழிக்கின்ற அதில் பணம் சம்பாதிக்கின்ற ஒழுங்கீனத்தைக் கற்றுத் தந்தது யார்?
திரைப்படக் கலைஞர்களும் மனிதர்கள்தான். ஆனால் மொழி கடந்து மதம் கடந்து அவர்கள் வாழ்பவர்கள். அவர்களை இந்தச் சர்ச்சைகளுக்குள் இழுப்பது சரியல்ல.
ஒட்டுமொத்த மனித குலத்திற்கான போராட்டங்களில் கலைஞர்கள் ஈடுபடுவதுதான் அவர்களுக்குப் பெருமை.
அதேபோல் அரசியல் காரணங்களுக்காகத்தான் தமிழ்மொழி செம்மொழியென்று அறிவிக்கப்பட்டதென்று சொன்னபோது கோபப்பட்டவர்கள் இன்று உணர்வார்கள் கன்னடமும் தெலுங்கும் செம்மொழியாகப் போகின்ற காரணத்தை.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் கூற்று மேடைக்கு மட்டும் என்ற நடிப்பினால்தான் நாம் மொழி பேசி இனம் பேசி அழிகின்றோம்.
மனிதர்கள் மனிதப் பண்பினை இழந்ததனாலேயும், பணம் ஒன்றே குறிக்கோளாக நமது தலைவர்கள் கோடிகளிலே புரள்வதனாலேயும் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையினை ஒழுங்கீனமான வாழ்க்கையினால் நமது மக்கள் பிரதிநிதிகள் பலர் காட்டியதனாலேயும் காடுகளை அழித்தேனும் பணம் சம்பாதிக்க சிலர் முற்பட்டதனாலேயும் உண்மையும் ஒழுக்கமும் போயிற்று; மழையும் போயிற்று.
மீண்டும் மீண்டும் ஒழுங்கீனமானவர்களையே பார்க்கின்ற படித்த இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் இந்தத் தவறானவர்களிடம் சிக்கியிருப்பதனைப் பார்த்து வெதும்புவதும் அதன் விளைவாக சிலர் ஆயுதம் ஏந்துவதும் அவர்களை நமது நாட்டுக் காவல் துறை வேட்டையாடுவதும் எந்த வகையில் நியாயம். நியாயம் அற்ற முறைகளிலே செல்வம் சேர்த்து அவர்கள் வாழ்க்கையோடும் எதிர்காலத்தோடும் விளையாடுகின்ற அந்த மக்கள் பிரதிநிதிகளையல்லவா கைது செய்ய வேண்டும்.
மின் வெட்டு என்று சொன்னால் உடனே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதைச் சொல்லத் தகுதியற்றவர் என்பதுவும் அவர் ஆட்சியிலே மின் வெட்டு அதிகம் என்பதுவும் எப்படி சரியான பதிலாகும். அதனால்தானே அவரை நீக்கி விட்டு உங்களை ஆட்சியில் அமர்த்தினார்கள்.
இதாவது பரவாயில்லை. இன்னொரு கூத்து வேறு மாநிலங்களைச் சுட்டிக்காட்டுவது. குஜராத்தில் இருக்கின்றதா உ.பி.யில் இருக்கின்றதா என்பது. எனக்குப் புத்தகங்கள் வேண்டும் என்று குழந்தைகள் தங்கள் தந்தையிடம் கேட்டால் எதிர்த்த வீட்டுக்காரர் அவர் பிள்ளைகளுக்கு வாங்கித் தந்திருக்கின்றாரா என்று ஒரு தந்தை கேட்பதுபோல் இல்லையா.
தி.மு.க. ஆகட்டும் அ.இ.அ.தி.மு.க. ஆகட்டும். யார் நல்லதே செய்தாலும் குறை கூறி நிற்கின்ற அரசியல்.
காங்கிரஸை எதிர்த்து 1967ல் தேர்தலில் இன்றைய முதல்வர் பேசியதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கின்றனர்.
காமராசரை அவர் கேட்காத கேள்விகளா?
ஆனால் இன்று அவரை நோக்கிக் கேள்விகளை வைத்தால் "என் வயதென்ன... என் அனுபவமென்ன... என்னைக் கேட்கின்ற தகுதி இல்லாதவர்களெல்லாம் கேட்கின்றார்கள்' என்கின்றார்.
ஆனால் பெரியவர் இராஜாஜியையும் பெருந்தலைவர் காமராஜையும் இவர் கேட்ட போது இவர் வயசென்ன என்று அவர்கள் கேட்டதில்லை. மக்களாட்சியைக் கொண்டு வரப் பாடுபட்ட அந்தத் தலைவர்களுக்கு அதன் மகத்துவம் புரிந்திருக்கிறது.
பண்டித நேருவின் மருமகன்தான் முந்த்ரா ஊழலை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். தனது நல்ல நண்பர் என்று பார்க்காமல் டி.டி.கே.யை பதவி நீக்கம் செய்தார் நேரு.
சொந்த ஜாதியில் ஒருவர் இருக்கின்றார் என்று சிபாரிசு வந்தபோதும் நெ.து. சுந்தரவடிவேலுவைத்தான் கல்வித்துறை இயக்குநராகக் காமராஜ் நியமித்தார்.
உறவினர்கள் தம்மை வந்து பார்ப்பதைக் கூட காமராஜும், ராஜாஜி போன்றோரும் அனுமதித்ததில்லை.
உடுத்திய வேட்டிக்கு மாற்று வேட்டி இல்லாமல் உழவர்களுக்கும் ஏழைகளுக்கும் பாடுபட்டார் ஜீவா.
அரசியல் என்பது சேவை என்று வாழ்ந்தவர்கள் அவர்கள்.
ஆனால் அவர்களால் கிடைத்த இந்த வாழ்வில் ஒரு ஆட்சியைக் காப்பாற்ற நடந்த கூத்துகளை மொத்த நாடும் பார்த்து வெதும்பியது.
அரசியல் கூத்துகளுக்கென்று ஒரு பதக்கம் மட்டும் இருக்குமென்றால் அபிநவ் பிந்த்ரா பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பார்.
நெல்லை கண்ணன்

Friday, August 29, 2008

நீதிக்கு ஏங்கும் நீதிதேவதை!

ஆசிரியப் பணி என்பது மிகவும் புனிதமானது. அதிலும் நீதி தேவர்களை உருவாக்கும் சட்ட ஆசிரியப் பணியை மேன்மையானது என்றே சொல்ல வேண்டும். ஆனால் தங்களது மேன்மையையும், பொறுப்பையும் உணர்ந்து பெரும்பாலான ஆசிரியர்கள் செயல்படுவதில்லை என்பதுதான் வருத்தமான ஒன்று.
சட்டக் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என இரு பிரிவுகளாகச் செயல்படுகின்றனர். இதில் நிரந்தர ஆசிரியர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் தாங்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவதில்லை என்பதே பெரும்பாலான பகுதி நேர ஆசிரியர்களின் ஆதங்கமாக உள்ளது.
நிரந்தர ஆசிரியர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இதை பெரும்பாலான ஆசிரியர்கள் மதிப்பதில்லை.
தங்களுக்குள் பேசிவைத்துக் கொண்டு தங்களுக்கு வகுப்புள்ள நேரத்தில் மட்டும் கல்லூரிக்கு வந்துவிட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது.
எது எப்படியோ? நீதிமன்ற நடவடிக்கைகளை பகுதி நேர ஆசிரியர்களால்தான் மாணவர்களுக்கு நன்கு கற்றுக் கொடுக்க முடியும். எனவே, அவர்களை நியமித்து உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தி வருகிறது.
இதுபோன்ற நிலையில் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்கள் அளவுக்கு நடத்தாவிட்டாலும் அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமாவது வழங்கப்படுவதே நியாயம்.
நிரந்தர ஆசிரியர்கள் வாரத்துக்கு 12 மணி நேரம் பாடம் நடத்துகிறார்கள். பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்துக்கு 9 மணி நேரம் பாடம் நடத்த வேண்டிய கட்டாயம். இருவரின் பணி நேரத்திலும் 3 மணி நேரமே வித்தியாசம். ஆனால் ஊதியத்திலோ மிகப்பெரிய வித்தியாசம்.
நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்திலேயே அதிகப்படியான மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 5,500 மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த இடத்தில் "சம உழைப்புக்கு சம ஊதியம்' வழங்கப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன விதிமுறையை பின்பற்றி பிறருக்கு முன்மாதிரியாய் திகழ வேண்டிய சட்டக்கல்லூரிகளின் நிர்வாகமே இவ்வாறு நடந்து கொள்வது கவலை அளிக்கிறது.
சட்டக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் தேர்வுக்கு முன்னதாகப் பாடத்திட்டம் எப்போதுமே நடத்தி முடிக்கப்பட்டதாக வரலாறு இல்லை என்ற கவலையும் மாணவர்கள் மத்தியில் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இதுபோன்ற நிலையில் காலிப் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க அரசு முன்வர வேண்டும். அந்த தருணத்தில் அனுபவமிக்க பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தால் மாணவர்களுக்கு தரமானக் கல்வி கிடைக்க வாய்ப்புள்ளது.
பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களை சட்டக் கல்லூரிகளில் "டெபுடேஷன்' முறையில் நியமித்து, அவர்களுக்கு பல்கலை. மானியக் குழுவின் ஊதிய நிர்ணயப்படி ஊதியம் வழங்கும் நடைமுறையும் வழக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற நடவடிக்கை சட்டக்கல்லூரிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை குமுறவைத்துள்ளது. "உடற்கல்வி இயக்குநர்களை போல் பள்ளிகளில் பிற பாடங்களை நடத்தும் ஆசிரியர்களை சட்டக்கல்லூரிகளில் நியமிக்க முடியுமா?' என்று அவர்கள் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
சட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்துறையில் சட்ட ஆசிரியர்களாக பணியில் அமர்த்தப்பட்டவர்களை மட்டுமே பணியில் நியமிக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்து வந்தது.
ஆனால் இந்த விதிமுறையில் திடீர் திருத்தம் செய்து, சட்ட ஆசிரியர்கள் அல்லாத ஆசிரியர்களையும் நிர்வாகத்துறையில் நியமிக்கும் நடைமுறையை கொண்டுவந்துள்ளனர்.
சட்ட ஆசிரியர்கள் இருக்கும்போது இதுபோன்ற விதிமுறை திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
சின்டிகேட், செனட் ஆகியவற்றிலும் இந்த நடைமுறையை புகுத்தியுள்ளதன் உள்நோக்கம் என்ன? என்பதே பெரும்பாலான சட்டக் கல்லூரி ஆசிரியர்களின் கேள்வி.
இது ஒருபுறம் இருக்க, மாணவர்கள் தங்களுக்கு எதிராகவும் சட்டக்கல்லூரிகள் நிர்வாகம் அநீதியை இழைத்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
சட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்கள் கடைசி செமஸ்டரில் தாங்கள் வேண்டுமென்றே தோல்வியடைய வைக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.
பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தால்தான் வழக்கறிஞராகப் பணியாற்ற பதிவு செய்ய முடியும். இல்லையேல் இயலாது.
எனவே, இதை ஆயுதமாகப் பயன்படுத்தும் சிலர், பணம் கொடுக்கும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதும், பணம் கொடுக்காதவர்களை தோல்வி அடையச் செய்து வாழ்க்கையை நாசமாக்கும் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுபோன்றவர்களின் சதிச் செயலால் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் கூட வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பகிரங்கமாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த மோசமான செயலைக் கண்டித்து அண்மையில் தாங்கள் போராட்டம் நடத்தியதையும் நினைவுகூர்ந்தனர்.
பணத்தைக் கொடுத்து படிப்பவர்களுக்கு பி.ஏ.பி.எல் (ஹானர்ஸ்) என்று பட்டம் கொடுக்கிறார்கள், பணம் கட்ட முடியாத ஏழை மாணவர்களுக்கு பி.ஏ.பி.எல் என்ற பட்டம் அளிக்கிறார்கள். அரசே இது போன்றப் பாகுபாடுடன் செயல்படுவது எந்த வகையில் நியாயம்?
காசு இருந்தால் கல்வியை வாங்கிவிடலாம் என்பதற்கு சட்டக்கல்லூரியே வழிகாட்டியாகத் திகழ்வது வேதனை அளிப்பதாக உள்ளது. என்று மாறும் இந்த நிலை? நீதி தேவதைக்குத்தான் வெளிச்சம்!
நீதி. செங்கோட்டையன்
நன்றி : தினமணி

பதவியின் விலை பதவி!

பேரம் படிந்தது; அரசு பிழைத்தது; பதவி நீடித்தது. இதனால் பிரதமரின் மரியாதை அதிகரித்ததா, ஆளும் கட்சியின் செல்வாக்கு அதிகரித்ததா என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஆட்சி கவிழாமல் இருந்தது என்பதுடனும், பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார் என்பதுடனும், அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இருந்த தடை விலகியது என்பதுடனும் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டும்.
பிரதமர் மன்மோகன் சிங்கைப் பொருத்தவரை அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க அவர் தயாராக இருக்கலாம். ஆனால், அதை இந்திய ஜனநாயகம் தாங்கியாக வேண்டி இருக்கிறதே, அதுதான் வேதனையிலும் வேதனை. தனது பதவியையும், ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சார்பில் தரப்பட்டிருக்கும் விலை, மக்களாட்சித் தத்துவத்தின் மீது இருக்கும் மரியாதையைக் குலைத்து, மக்களுக்கு அதில் வெறுப்பை ஏற்படுத்துவதாக அமைந்து விட்டிருக்கிறது.
ஆதிகேசவலு நாயுடு என்பவர் ஆந்திராவில் ஒரு மிகப்பெரிய சாராய வியாபாரி. நரசிம்ம ராவ் காலத்தில் காங்கிரஸ்காரராக இருந்த ஆதிகேசவலு நாயுடு, சந்திரபாபு நாயுடு பதவிக்கு வந்ததும் தெலுங்கு தேசம் கட்சிக்குத் தாவிவிட்டார். அதற்கு நன்றிக் கடனாக சந்திரபாபு நாயுடு ஆதிகேசவலு நாயுடுவை, திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக நியமித்தார்.
ஒரு சாராய வியாபாரியை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக நியமித்து, அந்தக் கோயிலின் புனிதத்தையே சந்திரபாபு நாயுடு கெடுத்துவிட்டார் என்று எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்புக்குத் தலைமை வகித்தவர் இன்றைய முதல்வர் ராஜசேகர ரெட்டி.
அது பழைய கதை. இப்போது ஆதிகேசவலு நாயுடு ஒரு மக்களவை உறுப்பினர். அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுடன் அவர் நடத்திய பேரத்தின் விளைவாக, அரசுக்கு ஆதரவாகக் கட்சி மாறி வாக்களித்தவர்களில் ஆதிகேசவலு நாயுடுவும் ஒருவர் என்று நம்பப்படுகிறது. இப்போது, அதற்கான விலையை அளித்து ஆதிகேசவலு நாயுடுவை கெளரவித்திருக்கிறார் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி. ஆமாம், அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அவர் மீண்டும் திருப்பதி தேவஸ்தானத்தில் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆந்திராவில் இப்படி என்றால், ஜார்க்கண்டில் இன்னும் ஒருபடி மேலே போய், மிகப்பெரிய விலையைக் கொடுத்திருக்கிறது ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. கிரிமினல் குற்றங்கள் இருப்பதால் ஒருவரை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளத் தயங்கியவர்கள், இப்போது அவரை மாநில முதலமைச்சராக்க முன்வந்திருக்கிறார்கள். காரணம்? அரசுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்ததற்கு நன்றிக்கடன்!
தனது முதல் சட்டப்பேரவைத் தேர்தலை கடந்த பிப்ரவரி 2005ல் சந்தித்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை ஐந்து அமைச்சரவைகள் அமைந்துவிட்டிருக்கின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன், நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் ஆதரவு கொடுப்பதற்குப் பிரதி உபகாரமாக மத்திய அமைச்சர் பதவி தனக்குத் தரப்படுகிறது என்று அப்போதே தெரிவித்திருந்தார். பொறுத்துப் பார்த்தார். சிபு சோரனுக்குத் தந்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவதாகக் காணோம்.
ஜார்க்கண்ட் கூட்டணி அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கி, அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி, பெரிய ரகளையே செய்துவிட்டார். வேறு வழியில்லாமல், மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளத் தகுதி இல்லாதவர் என்று ஓரம்கட்டப் பட்டவரை, மாநில முதலமைச்சராக்கி அழகு பார்க்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி.
அரசியல் என்பது பதவி மற்றும் ஆட்சியை மையமாக்கி நடத்தப்படும் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் தன்மானத்தை இழப்பதும், பேரம் பேசுவதும், தார்மிக நெறிகளுக்கு மாறாக நடப்பதும், தவறான நபர்களுக்குப் பதவிகளை வழங்குவதும் அரசியலின் அடிப்படையான மக்களாட்சித் தத்துவத்தைக் கேலிப்பொருளாக்கி விடும்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர், பொருளாதார நிபுணர். திறமையான நிதியமைச்சர், நேர்மையான மனிதர், கெளரவமான பிரதமர் என்றெல்லாம் இத்தனை வருடங்களாகச் சேர்த்து வைத்திருந்த பெயரை எல்லாம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிக்காகப் பேரம் பேசிவிட்ட டாக்டர் மன்மோகன் சிங்கிற்காகப் பரிதாபப்படுவதைத் தவிர வழியில்லை. அவருக்காக மட்டுமா, இந்திய ஜனநாயகத்துக்காகவும்கூட!
நன்றி : தினமணி

சமச்சீர் கல்வியா, தரமான கல்வியா?

பொருளாதார முன்னேற்றம்தான் ஒரு நாட்டிற்கு அத்தியாவசியம் எனும் அடிப்படையான கருத்து பழைய காலங்களில் உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை. பின்னர் பொருளாதார முன்னேற்றம் ஒன்றினால் மட்டும் எல்லா தரப்பு மக்களும் முன்னேறிவிட மாட்டார்கள் எனும் கசப்பான உண்மை எல்லோருக்கும் புரிந்தது. வேலைவாய்ப்பு பெருகாத முன்னேற்றம் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்தது.
குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் சரியான முறையில் அரசின் தலையீட்டினால் பொருளாதார முன்னேற்றத்தின் பலன் எல்லா மக்களையும் சென்றடையாதபட்சத்தில் ஒருதலையான முன்னேற்றமே மிஞ்சும் எனும் அனுபவத்தை நாம் உணர்ந்துள்ளோம்.
பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆன போதிலும் ஏழைகள் ஏழைகளாகவே தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் கவலையளிக்கும் ஓர் அம்சம்.
அதிகமான ஏழை மக்களைக் கொண்ட நாட்டில் இரண்டு நடவடிக்கைகள் மிக முக்கியமானவை ஒன்று கல்வி; மற்றொன்று சுகாதாரம்.
கல்வியைப் பொறுத்தமட்டில் ""எல்லோருக்கும் கல்வி'' எனும் திட்டத்தை ஐக்கிய நாட்டு சபையின் யுனெஸ்கோ (மசஉநஇஞ) நிறுவனம் 2002ம் ஆண்டு உலகமெங்கும் பறைசாற்றி நிதியுதவியும் நல்ல பல ஆலோசனைகளையும் வழங்கியது. அதனை ஏற்று நமது நாட்டிற்கு ஏற்ப சர்வ சிக்ஷ அபியான் எனும் திட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
மற்ற எல்லா அரசுத் திட்டங்களையும்போல் இத்திட்டத்திலும் பணம் அதிகம் செலவிடப்படுவதை மட்டும் அறிவிக்கின்றார்களேயன்றி திட்டம் நல்ல பலனை அளிக்கின்றதா எனும் விவரம் தெரிவிக்கப்படவில்லை.
கிராமப்புறங்களிலும், நகரின் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியிலும் கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்பது எல்லோரின் விருப்பமாகும்.
தமிழக அரசு சமச்சீர் கல்விக்குழு ஒன்றினை அமைத்து அவர்கள் ஒரு பெரிய அறிக்கையைத் தயாரித்துள்ளனர். அதை முழுமையாக நிறைவேற்றினால் நமது மாநிலத்தில் கல்வியின் வளர்ச்சி அபரிமிதமாகும் என ஆளுங்கட்சி பறைசாற்றுகிறது.
ஆனால் இந்த அறிக்கையை ஆராய்ந்து பார்த்தால் அறிக்கை தயாரித்தவர்கள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியினைச் சரியாகப் புரிந்துகொண்டார்களா? எனும் சந்தேகம் எழுகிறது.
நமது மாநிலத்தில் தற்சமயம் நடைமுறையில் ஐந்து வகையான கல்வி முறைகள் உள்ளன.
அவை, மாநிலவாரி கல்விமுறை, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பாடத்திட்டம், நர்சரி பள்ளிக் கல்வி முறை ஆகியன.
இவ்வாறு ஐந்து கல்வி முறைகள் ஒரே மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதனால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதாகவும், எனவே இவற்றை ஒரே சீராக்கி சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையின் முன்னுரை கூறுகின்றது.
சமச்சீர் கல்வி என்பது நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும், நகரின் எல்லாப் பகுதிகளிலும், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வியை மாணவர்களுக்கும் கற்பிப்பது ஆகும். அதற்கு என்ன நடைமுறை தேவை எனும் வகையில் ஆராய்ச்சி செய்து அரசிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய குழு சமச்சீர் கல்வி என்பது மேலே சொல்லப்பட்ட ஐந்து வகையான கல்வி முறைகளையும் அழித்துவிட்டு ஒரே வகையான கல்வி முறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வகையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அதாவது எல்லோருக்கும் ஒரேவகையான பொது பாடமுறைத்திட்டம் என்பதுதான் சமமான ஒரே சீரான கல்வி கற்பிப்பதற்கான வழி எனும் கருத்து இக் கமிட்டியின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்துள்ளது என்பது உள்ளபடியே கவலை அளிக்கின்றது.
கல்வியில் முறை என்பது வேறு, தரம் என்பது வேறு. எந்த முறையான பாடத்திட்டத்துடனும் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும்.
நாங்கள் சிறுபிள்ளைகளாயிருந்தபோது 4 வயதில் பெற்றோர் கைப்பிடித்து சரஸ்வதி பூஜை நாளில் பள்ளிக்குச் சென்று ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கி காணிக்கை செலுத்தி ஓலைச்சுவடியில் பெயரெழுதப்பட்டு பள்ளியில் சேர்ந்து, ஊரில் உள்ள பெரியவர்கள் எல்லோரிடமும் ஆசி பெற்று, பின் ஆனா, ஆவன்னா பயின்றது நினைவுக்கு வருகிறது.
கிராமத்து கூரைப்பள்ளியில் தரையில் ஆற்று மண், உட்கார குட்டையான பலகைப் பெஞ்சுகள். ஒரே அறையில் முதலாவது பெஞ்ச்சில் முதல் வகுப்பு மாணவர்களும், இரண்டாம் வரிசையில் இரண்டாம் வகுப்பு மாணவர்களும், மூன்றாம் வரிசையில் மூன்றாம் வகுப்பு மாணவர்களும் இருப்போம்.
எங்கள் ஆசிரியரின் மிக சிரத்தையான போதனைகளும் அவரது வீட்டு வேலைகளை மாணவர்களாகிய நாங்கள் முறை வைத்துச் செய்ததும் நினைவில் உள்ளது.
ஐந்தாம் வகுப்பில்தான் முதன்முதலாக ஆங்கிலத்தில் ஏ, பி, ஸி, டி படித்தது நினைவிற்கு வருகிறது. அந்த நாள்களில் இன்ஸ்பெக்டர் வருகிறார் என்பது ஒரு வாரத்திற்கு முன்னரேயே அறிவிக்கப்பட்டு, பள்ளி முழுவதும் பெருக்கி, கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு, மாணவர்கள் யாவரும் சரியாக ஆடையணிந்து தயாராக காத்திருப்போம்.
எங்கள் வகுப்பில் ஆங்கிலத்தில் வாரத்தின் நாள்களை சண்டே, மண்டே என வரிசைப்படுத்தி கூறியதற்காக இன்ஸ்பெக்டரால் பாராட்டப்பட்டு, அதனால் எனது வகுப்பு ஆசிரியர் முகம் மலர்ந்தது நினைவில் நிற்கின்றது.
இதுபோன்ற ஒரு கிராமப்பள்ளியில் நல்லாசிரியர்கள் எங்களுக்கு அளித்த தரமான கல்வியினால் அதிக மதிப்பெண்களுடன் தேறி கல்லூரி படிப்பிற்காக நகரத்திற்கு வந்து விடுதியில் தங்கி, அங்கேயும் மிக அதிகமான கடமை உணர்ச்சியுடன் தரமான கல்வியினைப் போதித்த பேராசிரியர்கள் சொல்லிக் கொடுத்த உன்னதமான நடைமுறைகளைப் பயன்படுத்தி முன்னேறியதும் நினைவில் நிற்கின்றது.
என்ன அப்படி உன்னதமான நடைமுறை என்பதை இன்றைய மாணவர்களின் நலனுக்காகச் சொல்ல வேண்டும். ஒரு 40 பக்கம் நோட்டில் தனக்குத் தெரியாத ஆங்கில வார்த்தைகளைக் குறித்துக் கொண்டு அதற்கான அர்த்தத்தை எழுதி, தனக்குத் தெரிந்த வாக்கியங்களை அமைத்துப் பழக வேண்டும்.
மாதக்கடைசியில் ஆங்கில ஆசிரியர் அதனைச் சரிபார்த்து, திருத்த வேண்டியிருந்தால் திருத்தங்களை எங்களுக்குச் சொல்லித் தருவார்.
இதுபோன்ற வேலையை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்யும் எங்கள் ஆங்கில ஆசிரியருக்கு இது வரையறுக்கப்பட்ட வேலையில்லை. அவராக முன்வந்து மாணவர்களின் கல்வி அறிவு வளர வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் கூடுதலாக அவர் செய்த பணி இது என்பதை இன்றைய மாணவர்கள் உணர வேண்டும்.
பிற்காலத்தில் அமெரிக்காவில் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பில் ஒரு பாடமாகிய அக்கவுண்ட்ஸ் வகுப்பில் ஒரு வருடத்தில் சில மாதங்களுக்கு 31 நாள்களும் மற்றும் சிலவற்றிற்கு 30 நாள்களும் உள்ள கணக்கை எப்படி மனதில் நிறுத்துவது எனும் பயிற்சி நடந்தது.
கை விரல்களை மடக்கி எலும்பின் நுனி 31 நாள்கள் எனவும் இடைப்பகுதி 30 நாள்கள் எனும் எண்ணும் முறையை நான் சொன்னபோது, இது எங்கே நீங்கள் கற்றது என அவர்கள் கேட்க கிராமத்தின் 6ம் வகுப்பில் ஆசிரியர் சொல்லித் தந்தது எனச் சொல்ல முடிந்தது.
அமெரிக்காவில் பள்ளிகளில் வருடத்தின் மாதங்களை ஒரு பேப்பரில் எழுதி 30, 31 நாள்களைக் குறித்து மனப்பாடம் செய்து கொள்வார்களாம். நமது கல்வி முறையைப் பார்த்து அவர்கள் வியந்தது எனது பள்ளிப் படிப்பின் மகிமை எனக்குப் புரிந்தது.
எனவே கடமையுணர்ச்சியுடன், சிரத்தையுடன் தன் மாணாக்கர்களை இட்டுச்சென்ற ஆசிரியர்களே என்போன்ற பலரது கல்வித்திறனுக்குக் காரணம். அந்தக் காலத்தில் அகில இந்தியாவிலும் மிக அதிகமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவானது சென்னை மாகாணத்தில்தான். மஹாராஷ்டிராவில், பிகாரில், மேற்கு வங்கத்தில் மற்றும் குஜராத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இரண்டு பிரிவினர் ஒன்று சென்னை மாகாணத்தைச் சார்ந்தவர்கள். மற்றொன்று ஏனைய எல்லா மாநிலத்தையும் சார்ந்தவர்கள்! இன்றைய நிலைமை தலைகீழ். ஏன்?
அரசியல்வாதிகளையும் மிஞ்சிய வகையில் ஆசிரியர்கள் அணியமைத்து மேடையில் அரசியல் தலைவர்களுக்கு இணையாக முழங்கி வருடம் முழுவதும் அரசியல் செய்கின்றனர்!
ஓட்டு வங்கி அரசியல் காரணங்களால் ஆளுங்கட்சியும் அவர்களை எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. சங்க உறுப்பினர்களைக் கண்டு பள்ளி நிர்வாகம் பயப்படும் சூழ்நிலை. எந்த ஒரு பள்ளிக்கும் கல்வித்துறை இன்ஸ்பெக்டர்கள் ஆய்வுக்குச் செல்கிறார்களா என்பது தெரியவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது 56,000 பள்ளிகளில் 1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் பயில்கிறார்கள். 4 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.
இப்பள்ளிகளின் தரத்தையும், ஆசிரியர் பணியின் தன்மையையும் ஆய்வு செய்ய போதிய பணியாளர்கள் இல்லை எனவும் எனவே அதிகப் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் சமச்சீர் கல்வி அறிக்கை கூறுகின்றது.
ஏறக்குறைய 3,500க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு 10 ஆய்வாளர்களே உள்ளனர் எனவும், அதிகமான ஆய்வாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அறிக்கை கூறுகிறது. ஆனால் இந்த 10 ஆய்வாளர்கள் 500 பள்ளிகளையாயினும் ஆண்டு ஒன்றிற்கு ஆய்வு செய்தனரா எனும் கணக்கினைப் பார்க்கத் தவறி விட்டனர் சமச்சீர் குழுவினர்.
ஆய்வுப்பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன என்பதுதான் உண்மை. 2002ம் ஆண்டில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அல்டர்மேன் எனும் ஆராய்ச்சியாளர் எல்லாப் பள்ளிகளையும் ஆராய்ந்து பள்ளிகளின் கல்வித்தரம் உயர என்ன காரணிகள் தேவை என்பதை அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
அதில் ஊக்கத்துடனும் நன்னெறியுடனும் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கே முதலிடம் கொடுத்துள்ளார்.
எங்கள் கிராமத்து மக்கள் எல்லோரும் பள்ளி ஆசிரியர்களை மிக்க கண்ணியத்துடன் நடத்துவார்கள்.
தங்கள் வருங்காலச் சந்ததியாரை உருவாக்கும் பணி செய்யும் இவர்கள்தான் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை என்ற சூழ்நிலை அன்றைய கிராமங்களில் இருந்தது.
நாங்கள் பெரிய பதவிக்கு வந்த பின் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மிகப் பெருமிதத்துடன் எங்கள் பெயரைக் கூறி என் மாணாக்கர்கள் இவர்கள் என தனது ஓய்வுபெற்ற வயதிலும் பெருமையுடன் அவர்கள் கூறி மகிழ்ந்தது நினைவிலாடுகின்றது.
பாகிஸ்தானிலும், வியட்நாமிலும், நம் நாட்டில் ஆந்திரப் பிரதேசத்திலும், ஆராய்ச்சி செய்த யுனெஸ்கோ நிறுவனம், ஆசிரியர்களின் கல்வித்தகுதி மற்றும் பெற்ற பட்டங்களைவிட அவர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் தன்மை பெற்றிருந்தால் அதுவே நல்ல மாணாக்கர்களை உருவாக்குகின்றது எனும் முடிவிற்கு வந்துள்ளது.
இவையெல்லாவற்றையும்விட தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் ஆகிய இரண்டும் ஒரேநேரத்தில் இயங்க முடியும். மிக அதிகமான கட்டணங்களை வசூல் செய்து கொண்டு உயர் கல்வியை வழங்கும் தனியார் பள்ளிகளும், இலவசக் கல்வியளிக்கும் கார்ப்பரேஷன் மற்றும் அரசுப் பள்ளிகளும் ஒரேநேரத்தில் இயங்கலாம். தரமான கல்வியை அரசுப் பள்ளிகளும் வழங்குமாறு கண்காணிப்புப் பணிகளை அரசு கல்வித்துறை முடுக்கிவிட வேண்டும்.
ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களும், திருச்சி ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியும், சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் அரசுத் துறையில் இயங்கி உலகத் தரத்து பொறியாளர்களை உருவாக்கும்போது அரசு கலைக்கல்லூரிகளும், பள்ளிகளும் ஏன் தரத்தினை உயர்த்தக் கூடாது எனும் கேள்வி எழுகிறது.
""முன்னேற்றத்திற்கான திட்டங்களை நான் வேறு நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எங்கள் நாட்டின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்து எப்போது எப்படி உயரிய நடவடிக்கைகள் இருந்தன என்பதைக் கண்டுபிடித்துச் செயலாற்றுவேன்'' என இத்தாலியின் முசோலினி சொல்லியதை நினைவில் கொள்வோம். நம் தமிழ்நாட்டின் பழைய கால அனுபவத்தைச் செயலாக்குவோம். தரமான கல்வியை அளிப்போம்.
கிராமத்து மாணவனுக்கும் நகரத்தின் சிறந்த பள்ளி மாணவனுக்குக் கிடைக்கும் தரமான கல்வியை அளிப்பதே ""சமச்சீர் கல்விமுறை'' எனும் உண்மையை உணர்ந்து கொண்டு நடவடிக்கை எடுப்போம்!
என். முருகன்
நன்றி :தினமணி

Thursday, August 28, 2008

கள்ளச்சந்தைக்கு காரணமாகாதீர்!

தமிழகத்தைவிட அதிக மின்பற்றாக்குறை கர்நாடக மாநிலத்தில் நிலவுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை கோலோச்சும் பெங்களூர் நகரில், மின்தடை இருந்தாலும், அங்கு டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால் சென்னையில் ஏற்படுகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தட்டுப்பாடு.
எரியும் நெருப்பில் "பெட்ரோல்' ஊற்றியதைப் போல, ""செப்டம்பர் 15ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் செயல்படாது; காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரைதான் பெட்ரோல் டீசல் விற்பனை நடைபெறும்'' என்று தமிழ்நாடு பெட்ரோல் முகவர் சங்கம் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மூடுவதாலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை விற்பனையை நிறுத்தி வைப்பதாலும் ஊழியர் சம்பளம் மற்றும் மின்கட்டணத்தில் சேமிப்பு ஏற்படும் என்று சங்கத் தலைவர் சொல்லும் காரணம் வியப்பாக இருக்கிறது.
பெட்ரோல் நிலையங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் அல்ல. "கடைவிரித்தோம் கொள்வாரில்லை' என்ற கவலைக்கு வாய்ப்பே இல்லாதவர்கள் பெட்ரோல் முகவர்களும் சமையல் எரிவாயு முகவர்களும்தான்! இவர்களின் பிரச்னையே தாங்கள் கேட்கும் அளவுக்கு வழங்கப்படுவதில்லை என்பதுதான்.
தங்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு குறைவின்றி பெட்ரோலியப் பொருளை ஆயில் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அவர்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தால் அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதைவிடுத்து, இரவில் விற்பனையை நிறுத்துவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறப்பதில்லை என்ற முடிவும் பிரச்னைக்கு தீர்வு ஆகாது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் நிலையங்களை திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாலும், இப்போதும்கூட எல்லா பெட்ரோல் நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவுகளிலும் திறக்கப்படுவதில்லை. நெடுஞ்சாலைகளிலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பெட்ரோல் நிலையங்கள் இரவிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுகின்றன. இரவுப் பயணம் மேற்கொள்வோர் இவற்றையே நம்பியுள்ளனர். இப்போது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, இவை செயல்படாதென்றால், நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வோர் மட்டுமல்ல, உள்ளூர் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவிய காலங்களில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு லிட்டருக்கு மிகாமலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 10 லிட்டருக்கு மிகாமலும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்தபோது யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பெட்ரோல் நிலையங்களின் தன்னிச்சையான இந்த முடிவை நியாயமானதாகவும் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நடவடிக்கையாகவும் பொதுமக்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டனர். ஆனால் தற்போது பெட்ரோல் முகவர் சங்கம் எடுத்துள்ள முடிவு பொதுமக்களுக்கு இடையூறாக மாறுவது மட்டுமல்ல, கள்ளச்சந்தைக்கும் வழி வகுக்கும். இரவு நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல், டீசலை கேன்களிலும் பாட்டில்களிலும் அடைத்து வைத்து, இரு மடங்கு விலைக்கு விற்கப்படும் நிலைமை உருவாக பெட்ரோல் முகவர் சங்கமே காரணமாக ஆகிவிடலாமா? இவர்களால் வேலை இழக்கப்போகும் பெட்ரோல் நிலைய இரவு நேர ஊழியர்கள் வேறு எந்த தொழிலுக்குப் போக முடியும்?
பெட்ரோலியப் பொருள்களில் கள்ளச்சந்தை மூலம் கொழுத்த லாபம் தருவது தற்போதைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே. இனி பெட்ரோல், டீசலுக்கும் கள்ளச் சந்தை என்றால்...நடுத்தர வருவாய் பிரிவினருக்குத் திண்டாட்டம்தான். பெட்ரோல் முகவர் சங்கம் சமூக நலன் கருதியும், தங்கள் தொழிலாளர் நன்மை கருதியும் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பெட்ரோல் நிலையமும் கடந்த ஓராண்டில் விற்ற பெட்ரோல், டீசல் அளவை கணக்கிட்டு, அந்த அளவை குறைந்தபட்சமாக வைத்துக்கொண்டு, அந்தப் பகுதியில் எத்தனை சதவீதம் வாகனங்கள் அதிகரித்துள்ளதோ அதற்கேற்ப பெட்ரோல், டீசலை அதிகரித்து வழங்க வேண்டிய பொறுப்பு ஆயில் நிறுவனங்களுக்கு உள்ளது.
தொழில்நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் டீசலை ஆயில் நிறுவனங்களிடம் நேரடியாக, பெட்ரோல் நிலையங்கள் பெறும் அதே கொள்முதல் விலையிலேயே பெறுவதற்கு அரசு வகை செய்தால், தொழில்நிறுவனங்களும் பயன்பெறும். இதனை தொழில்நிறுவனங்களுடன் அரசும் ஆயில் நிறுவனங்களும் பேசித் தீர்மானிக்கலாம்.
நன்றி : தினமணி

தீதும் நன்றும் பிறர் தர வாரா

61வது சுதந்திர தின விழா எல்லா மாநிலங்களிலும் விமரிசையாகவும், அசம்பாவிதம் எதுவுமின்றி கொண்டாடப்பட்டது. சுதந்திர தினம் என்றாலே எல்லோருக்கும் அந்நாளில் ஏற்பாடு செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தான் நினைவுக்கு வரும். ஒரு லட்சம் போலீஸார் குவிப்பு, டிக் டிக் டிக்... சுதந்திர தினம் நெருங்குகிறது போன்ற தலைப்புச் செய்திகள் நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு.
சமீபத்திய பெங்களூரு, ஆமதாபாத், சூரத் நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. ஆமதாபாத்தில் நடந்த சம்பவம் மற்ற நிகழ்வுகளைவிட கொடுமையானது. சூரத்தில் ஒவ்வொரு நாளும் உயிருள்ள குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்படுகின்றன. இதுவரை 29 வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
""நல்ல தீவிரவாதி செத்தவனாகவே இருப்பான்'' இது பயங்கரவாத படிப்பில் கூறப்படும் முதுமொழி. பயங்கரவாதத்தில் தீவிரமாக ஈடுபடுபவன் தன் உயிரையும் இழப்பதற்குத் தயாராக இருப்பான்; அவன் சேர்ந்த அமைப்பிற்கு அவன் நல்ல தீவிரவாதி. பயங்கரவாதத்தை ஒடுக்கும் பணியில் உள்ள போலீஸார் இம்மாதிரி உயிர் தியாகத்திற்குத் தயாராக இருக்கும் தீவிரவாதியைச் சுட்டு வீழ்த்துவதிலே குறியாயிருப்பார்கள் அதற்காக தான் மேற்சொன்ன முதுமொழி.
வன்முறையாளர்கள் தங்களது முயற்சியில் பல முறை தோற்கலாம். ஒருமுறையாவது அவர்களது தீய எண்ணம் நிறைவேறினாலும் சமுதாயத்திற்கு பேரிழப்பாக முடிகிறது. உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும். ஒரு சிறு அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் எடுத்த முயற்சிகள் பெரும் பின்னடைவு அடையும். பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவு அணிகள் பல இடங்களில் பயங்கரவாதக் குழுக்களைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்துள்ளன. ஆனால் நுண்ணறிவுப் பிரிவுகள் தங்களது வெற்றிகளைப் பறைசாற்ற முடியாது. தோல்வியைத் தழுவினால் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
2003ல் இருந்து 95 இடங்களில் இந்தியாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஓர் உண்மை புலப்படும். தீய செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதக் குழுக்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ உள்ளூரில் உதவி கிடைத்துள்ளது. ஒரு சம்பவத்தில் தீவிரவாதிகள் அதிக வாடகை கொடுத்து வீடு எடுத்து தங்கி சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகியுள்ளனர். 1991ல் நிகழ்ந்த ""திருப்பெரும்புதூர்'' குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சிவராசன், சுபா சென்னை புறநகர்ப் பகுதியில் தங்கிப் பின்பு பெங்களூரு சென்றனர். மும்பையில் 2003ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குறித்த நேரத்தில் வெடிக்கக் கூடிய குண்டு மறைத்து வைக்கப்பட்ட பெட்டியைச் சம்பந்தமே இல்லாத மூன்றாம் மனிதர்கள் மூலம் மக்கள் நடமாடும் இடத்தில் வைக்கப்பட்டு சேதம் ஏற்படுத்தப்பட்டது. எவ்வளவுதான் மறைமுகமாக நாசவேலையில் ஈடுபடுபவர்கள் சதித் திட்டம் தீட்டினாலும் தெரிவு செய்த இடங்களில் செயல்முறைப்படுத்துவதற்கு முகப்பாளர்கள் வெளியில் வர வேண்டும். அல்லது சம்பந்தப்படாத மூன்றாம் மனிதர் மூலம் பொருள்களை வைக்க வேண்டும். இங்கு தான் உள்ளூர் சரக காவல் நிலையத்தினர் பொறுப்பு கவனத்திற்கு வருகிறது. காவல் நிலைய அதிகாரிக்கு பெரிய அளவில் மறைமுகமாக சதித்திட்டம் வகுப்பவர்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தனது சரகத்தில் புதிதாக வந்தவர்கள் பற்றியும், சந்தேகத்திற்குரிய நபர்கள் பற்றியும் கணித்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பு காவல் நிலைய அதிகாரிக்கு உண்டு.
இந்திய காவல் சட்டம் 1861 காவல் துறையின் முக்கிய பொறுப்பு எனப்படுவன குற்றங்கள் நடவாமல் தடுத்தல், தகவல் சேகரித்தல். இதை நிறைவேற்றுவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பொது மக்களும் சீருடை அணியாத போலீஸார் என்று கூறுவது உண்டு. ஏனெனில் ஏற்ற நடைமுறை சட்டத்தில் காவல்துறையினர்களுக்கான சில அதிகாரங்கள் பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தை அமல்படுத்துவதில் காவல்துறையினருக்கு உதவுவது ஒருவரின் பொறுப்புடன் கூடிய கடமையாகும்.
பொது மக்களின் நன்மதிப்பைப் பெறுவது காவல் நிலைய அதிகாரியின் அணுகுமுறையைப் பொறுத்தது. தமது எல்லைக்குட்பட்ட நிகழ்வுகளைப் பற்றியும், பிரச்னைகள் பற்றியும், குடியிருப்புகள், வியாபார மையங்கள், கல்வி நிலையங்கள், முக்கிய அலுவலகங்கள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். சமுதாயக் காவல் பணி என்பது மக்களோடு இணைவதற்கு முக்கிய பாலமாக அமைந்துள்ளது. சமுதாயக் காவல் மையங்கள் காவல் நிலைய சரகத்தின் முக்கிய இடங்களில் மக்களோடு தொடர்பு கொள்ள ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளன.
சமுதாயக் காவல் பணியை வெற்றிகரமாக திருச்சி நகரத்தில் வடிவமைத்துச் செயலாக்கியதற்காக திரிபாதி, இ.கா.ப. (ஐ.ஜி)க்கு பாரத பிரதமரின் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. திருச்சி நகரின் பிரச்னைகளைக் கண்டறிந்து பொது மக்களுக்கு உதவும் வகையில் குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்ற நிகழ்வுகள் பற்றிய அச்சத்தைப் போக்குவதற்கும், நகரத்தை ஒரு பிரிவில் 12,000 ஜனத்தொகை அடங்கிய 57 ரோந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. அந்த ரோந்து பிரிவிற்கு நான்கு காவலர்களை பிரத்யேகமாக நியமித்து அவர்களை ரோந்து அதிகாரிகள் என்ற உயர் தகுதியைக் கொடுத்து, அவர்கள் மக்களது பிரச்னையைக் கண்டறிந்து சுமுகமான தீர்வு காணும் திறமைசாலிகளாகச் செயல்பட்டனர். அந்தந்தப் பகுதிவாழ் மக்களிடம் சென்று அவர்களைப் பற்றிக் கணக்கெடுத்து, புதியவர்கள் குடிவந்தால் தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. குடிசைப் பகுதிகளை அரவணைக்கும் திட்டத்தின் கீழ் அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை மற்ற அரசாங்கத் துறைகளுடனும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடும் நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்து அவர்களது நம்பிக்கை பெறப்பட்டது. வேலை வாய்ப்புக்கான உதவியும் நல்கியதால் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.
இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கையால் குற்றங்களின் உறைவிடமாக இருந்த குலப்பட்டி என்ற பகுதி, குற்றப்பாதையை விடுத்து நல்வழியில் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொடுத்தது இந்த சமுதாயக் காவல் பணித் திட்டத்தின் சிறந்த சாதனையாகும். இதே மாதிரியான சாராய ஒழிப்புத் திட்டம் 1999ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு, குத்தப்பாக்கம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் இளங்கோவுடன் இணைந்து வெற்றிகரமாக மதுவிலக்கு போலீஸாரால் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கை அந்த கிராமம், பஞ்சாயத்து நிர்வாகத்தில் முன்மாதிரி கிராமமாக மாற வித்திட்டது.
சாதாரண நாள்களில் மக்களோடு ஒன்றிப் பழகி மனிதநேயத்தோடு குறைகளைத் தீர்வு செய்தால் அசாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எழும்பொழுது மக்களே முன்வந்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து நிலைமையைச் சீர்செய்ய உதவுவார்கள். ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குற்றங்கள் மூன்று வகை 1. தெருக் குற்றங்கள் 2. வட்டாரக் குற்றங்கள் 3. சரக எல்லைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் தாக்கத்தினால் விளையும் குற்றங்கள். தெருக் குற்றங்களை பார்வைபடக்கூடிய ரோந்து மூலம் நடவாமல் தடுக்கலாம். வட்டாரக் குற்றங்களைத் தெரிவு செய்து தடுப்பதற்கும், நடந்தால் கண்டுபிடிப்பதற்கும் அந்த சரக மேல் அதிகாரிகள் அண்டை சரகங்களோடு ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவது வகை குற்ற நிகழ்வுகள் நடவாமல் கண்காணிப்பது உயர்மட்ட காவல் அதிகாரிகளின் தலையாய கடமையாகும். பல மட்டங்களில் செயல்படும் நுண்ணறிவுப் பிரிவுகளோடு தொடர்பு வைத்து பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை ஆராய்தல் வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவைப் பற்றி பெங்களூரு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகுதான் பெங்களூரு போலீஸார் தெரிந்து கொண்டனர் என்பது நடைமுறையில் காவல் பிரிவுகளில் நிலவும் இடைவெளியைக் குறிக்கிறது. முன்பே அறிந்திருந்தால் பெங்களூரு ஜுலை சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகின்றது.
தொழில் நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி பெற்ற இந்நிலையில் காவல்துறை நவீன உபகரணங்களை உபயோகிக்காவிட்டால் வெற்றி இலக்கை அடைய முடியாது. லண்டன் நகரில் 7 / 7 என்று கூறப்படும் 2005ம் ஆண்டு ஜூலை 7ம் நாள் காலை 8.55 மணி முதல் ஒரு மணி நேரம் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 56 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். லண்டன் மாநகர பல முக்கிய இடங்களில் தானியங்கி காமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து கிடைக்கப்பெற்ற 2000க்கும் மேற்பட்ட படங்கள் ஆராயப்பட்டு சம்பவம் நடந்த காலை 8.30 மணிக்கு "கிங்க்ராஸ்' ரயில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட விடியோ படங்கள் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடிந்தது.
நியூயார்க் போன்ற நகரங்களில் பொது இடங்கள், தெருமுனைகள், வியாபார வளாகங்கள், அலுவலகங்கள் போன்ற பல இடங்களில் பொருத்தப்பட்ட காமிராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட படங்கள் தொடர்ச்சியாக ஆராயப்பட்டு காப்பகத்தில் வைக்க தனி அமைப்பு உள்ளது. சென்னை மாநகரக் காவலுக்கு சாலைகள், பொது இடங்களில் காமிராக்கள் மூலம் கண்காணிக்கவும், சமுதாய உதவி மையங்கள் அமைக்கவும், வெடிமருந்து கண்டுபிடிக்கக்கூடிய நவீன தணிக்கை மையங்கள் அமைக்கவும், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உபகரணங்கள் "மெகா சிட்டி போலீஸ்' திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ளன. நவீன அணுகுமுறை காவல்துறைக்கு அவசியம். காவல் நிலையங்களுக்கிடையேயான முக்கிய பிரச்னையான எல்லைப் பிரச்னை, குற்றங்கள் தலைதூக்குவதற்குதான் உதவும். இங்குதான் காவல்துறையின் உயர் ஆளுமை தலையிட்டு ஆரோக்கியமான தகவல் பரிமாற்றம் ஏற்பட வழி செய்தால் தான் அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும்.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதிகள். குற்றத்திற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்தையோ, பேசும் மொழி அடிப்படையிலோ, அவரது மதத்தை வைத்தோ ஒட்டுமொத்த சமூகத்தினரைப் பழிப்பது சமுதாயத்தில் பிரிவினையைத்தான் தூண்டும். இது மிக அபாயகரமானது. குற்றம் களையப்பட வேண்டும். வன்முறைகள் கவனமாக ஆராயப்பட வேண்டும். உடனடி புலன்விசாரணை, குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் பிரிவினை சக்திகள் தலைதூக்குவதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்து குறைகள் அகற்றப்பட்டு எல்லோரும் ஆரோக்கியமான முறையில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டால்தான் சுமூகமான தீர்வு ஏற்படும்.
நிலையான இந்த அஸ்திவாரத்தை மேலும் பலப்படுத்தி நல்லிணக்கத்தைப் பரிமளிக்கச் செய்வது சமுதாய நல்லெண்ணம் படைத்தவர்களின் பொறுப்பு.
ஆர். நடராஜ்
நன்றி :தினமணி

வெப்பம் குறைய மூன்று வழிகள்

பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகத்துக் கொண்டே வருகிறது. அண்மையில் ஜப்பானில் கூடிய ஜி8 மாநாட்டின்போது, இதுபற்றி ஓர் அறிக்கையை உலக நாடுகளில் உள்ள 12 சிறந்த விஞ்ஞானிகள் வெளியிட்டனர். அதன்படி, 20 ஆண்டுகளில் பூமியின் வெப்பம் 0.2 முதல் 0.4 சென்டிகிரேடு என்ற அளவில் அதிகக்கப் போகிறது என்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். பூமி வெப்பம் உயர்ந்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் தொடர்ந்து உருகத் தொடங்கிவிடும். அவ்வாறு உருகினால் கடல்நீர் அளவு உயர்ந்து கடற்கரையை ஒட்டியுள்ள நகரங்கள் மெல்ல மெல்ல மூழ்கிவிடும் அபாயம் உள்ளதாகக் கணித்துள்ளார்கள். இதுகுறித்து பேசுவதற்குத்தான் டோக்கியோவில் ஜி8 நாடுகளின் உச்சி மாநாடு சென்ற ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் ஜி8 நாடுகள் மட்டுமல்லாமல் சீனா, இந்தியா, தென்னாப்பிக்கா, பிரேசில், மெக்சிகோ ஆகிய ஐந்து நாடுகளும் பங்கு பெற்றன. இந்த ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் வெப்பநிலை குறித்த ஒரு வரைவு அறிக்கையைத் தயாப்பதில் கூட்டாக ஈடுபட்டனர். இந்த உச்சி மாநாட்டில் ஜி8 நாடுகள் அல்லாமல் இதில் பங்குபெற்ற அந்த ஐந்து நாடுகளும் பூமி வெப்பத்திற்குக் காரணமான 37 தொழில்வள நாடுகளில் முதல் ஐந்து நாடுகளாகும். பூமி வெப்பம் அதிகக்கக் காரணமாக இருந்து வருகிற நாடுகளில் முதல் நாடு அமெக்கா. அது ஜி8 நாடுகளில் ஒன்று. இரண்டாவது நாடு சீனா. இது மற்ற 5 நாடுகளில் ஒன்று. எதிர்காலத்தில் சீனாவும், இந்தியாவும்தான் க மாசுவை அதிக அளவில் வெளியிடும் நாடுகளாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்தியாவில் ஆண்டுக்கு நபர் ஒருவர் 1.2 டன் க மாசுவையும், அமெக்காவில் நபர் ஒருவர் 20 டன் க மாசுவையும் வெளியிடுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தொழில்வள நாடுகள் தங்கள் தொழிற்சாலைகளிலிருந்து மாசைப் புகையாக, தூசியாக, வெப்பமாக, சப்தமாகத் தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. இதனால் பூமிக்கு மேலே வியாபித்துக் கிடக்கிற 5 கி.மீ. உயரத்திற்குக் காற்று மண்டலம் நச்சுப்படுத்தப்பட்டு வருகிறது. இது பூமியின் தட்பவெப்ப நிலைகளுக்குக் கேடு விளைவிக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த 12 விஞ்ஞானிகளும் உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இந்தக் கேடுகளை எந்தெந்த வகையில் எல்லாம் குறைக்க முடியுமோ, அதைச் செய்வதற்கு முன்வரும்படி உலக நாடுகளை அவ்விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ரஷிய விஞ்ஞானி யூ இஸ்ரேல் என்பவர்தான் இந்தக் கூட்டறிக்கையைத் தயாத்ததில் பெரும் பங்காற்றியவர். நம்முடைய பூமிப் பரப்பில் பரவியுள்ள க மாசு நச்சுத்தன்மை உடையது. இதை எப்படிக் குறைப்பது என்பதற்கு ஜப்பான் நாடு ஒரு புதிய ""உற்பத்திஉத்தி'' ஒன்றைக் கையாண்டுள்ளது. அதைப் பின்பற்றினால் 2050க்குள் சுற்றுச்சூழலில் படிந்துள்ள நச்சுத்தன்மையுள்ள க மாசை 70 சதவீதம் அளவுக்குப் படிப்படியாகக் குறைத்துவிடலாம் என்கிறார்கள் ஒரு பிவினர். இந்த உற்பத்திஉத்தி உலகத்திலுள்ள ராட்சதத் தொழிற்சாலைகள் அனைத்திலும் கையாளப்பட்டாலும், நச்சுத்தன்மையுள்ள க மாசைக் குறைப்பது சிரமமே என்கிறார்கள் இன்னொரு பிவினர். ஆகவே, பூமி வெப்பத்தைக் குறைப்பதற்கு வேறு சில உத்திகளைக் கையாள வேண்டியவர்களாக நாம் உள்ளோம். அவற்றில் ஒன்று நிலப் பொறியியல் தொழில்நுட்பம். பூமியின் மேல் விழுகிற சூய வெப்பத்தின் ஒரு பகுதியை பூமி உள்வாங்கிக் கொள்கிறது. இன்னொரு பகுதியை பூமி பிரதிபலித்து வெளிவிடுகிறது. பூமியின் மேலுள்ள மரங்கள்தான் இந்த வெப்பத்தின் ஒரு பகுதியைத் தன்மயப்படுத்திக் கொண்டு மறுபகுதியைப் பிரதிபலித்து வெளிவிடுகின்றது. இந்தப் பிரதிபலிப்புத் திறன் மரத்தின் வயதுக்கேற்ப வேறுபடுகிறது. இளமையான மரங்கள் இந்தக் க மாசைத் தனது வளர்ச்சிக்குத் தேவையான அளவுக்கு எடுத்துக் கொள்கிறது. அதேசமயம், வயதான மரங்கள் இதே க மாசை அந்த அளவுக்கு எடுத்துக் கொள்வதில்லை. இந்த உண்மையை விஞ்ஞானிகள் இப்போதுதான் கண்டறிந்து தெவித்துள்ளனர். இதன் மூலம், க மாசை அதிகம் உள்கொண்டு பிராணவாயுவை அதிகமாக வெளியிடுபவை, வளர்ந்து வருகிற இளமையான மரங்கள்தான். வயதான மரங்கள் தமது முதுமை காரணமாக இந்தப் பணியைச் செய்வதிலிருந்து ஓய்வு பெற்று விடுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். மரக்கன்றுகளைப் புதிது புதிதாக நட்டு வனவளத்தைத் தொடர்ந்து அதிகப்படுத்தி வருவோமானால், நமக்குத் தேவையான பிராண வாயுவை மரங்கள் கொடுக்கும். நமது கயமில வாயுவை மரங்கள் வாங்கிக் கொள்ளும். இதைச் சுறுசுறுப்பாகச் செய்து பூமியின் சுற்றுச்சூழலைச் சுத்திகக்கின்ற பணியை எல்லா மரங்களுமே செய்வதாகவே இதுவரை நாம் எண்ணி வந்தோம். அப்படி இல்லை. பூமியின் தட்பவெப்பநிலையைச் சமநிலையில் பராமக்க வேண்டுமானால், வனங்களில் உள்ள வயதான மரங்களைத் தொடர்ந்து அப்புறப்படுத்தவும் வேண்டும்; புதிய மரக் கன்றுகளை நட்டு வளர்க்கவும் வேண்டும். பூமியில் க மாசு என்ற கார்பன் டை ஆக்ஸைடு உருவாவதற்குக் காரணம், நமது தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுகள்தான். பூமியில் காட்டு வளம் 33 சதவீதம் இருந்தால்தான் தட்பவெப்பச் சமநிலை பராமக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இப்போது 12 சதவிகிதம் வரைதான் காட்டுவளம் இருப்பதால் பூமியில் அதிகத்துள்ள க மாசுவைக் குறைக்க முடியாமல் போகிறது. அதனால்தான் மேலும் மேலும் பூமியின் வெப்பம் அதிகத்து வருகிறது. க மாசை உள்கொண்டு பூமியின் வெப்பத்தை மரங்கள் குறைப்பதைப் போலவே கடல்பாசிகளும் இந்தக் க மாசுவை உள்கொண்டு வெப்பத்தைக் குறைக்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மரக் கன்றுகளை நடுவதைப் போல கடல்பாசிகளை அதிகப்பதற்கும் உய நடவடிக்கையை எடுத்தால், காட்டு மரங்கள் செய்கிற அதே பணியைக் கடல்பாசிகளும் செய்து பூமியின் வெப்பத்தைக் குறைக்க உதவும். பூமியில் கூடுதலாக ஏற்படும் க மாசுவைக் கூட, கடலிலேயே சேமித்து வைத்துக் கொள்ள முடியுமாம். இந்த இரண்டு வழிகளும் அல்லாமல், சூய வெப்பம் பூமியைத் தாக்காமல் இருக்க மேலும் ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேல் ஆகாயத்தில் விக்க ஒரு ரசாயனப் போர்வையை ரஷிய விஞ்ஞானிகள் இப்போது உருவாக்கியுள்ளனர். கந்தக அமிலக் கரைசலை சில ரசாயனப் பொருள்களோடு கலந்து, பூமிக்கு மேல் 12 16 கி.மீ. உயரத்திற்குச் சென்று விமானம் மூலம் பரவலாகத் தெளித்துவிடும் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு செய்தால், பூமிக்கு வரும் சூயக் கதிர்களின் வெப்பத்தை அது பாதியாகக் குறைத்து விடுகிறது. அவ்வாறு குறையுமானால், பூமியின் வெப்பநிலையும் குறைந்து விடுகிறது. இவ்வாறு, இளமையான காட்டு மரங்களின் மூலமாகவும், அதிகமான கடல்பாசிகளின் மூலமாகவும், கந்தகக் கரைசல் போர்வை மூலமாகவும் பூமியின் வெப்பத்தைச் சில "டிகிகள்' குறைக்க முடியும். இந்த கந்தக அமிலக் கரைசலைத் தெளித்து, பூமியின் வெப்பத்தைக் குறைக்கலாம் என்பதை, ஒரு தற்செயலான நிகழ்வால்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொதிக்கும் குழம்பை எமலை வெளியே கக்குகிற போது, அந்தக் குழம்பில் உள்ள கந்தக அமிலம் ஆகாயப் பரப்பில் வீசப்படுகிறது. அதன் காரணமாக, அந்த எமலைப் பிரதேசத்தில் வெப்பநிலை வெகுவாகக் குறைகிறது. இதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் அதே கந்தக அமிலக் கரைசலைத் தயாத்து விமானங்களில் எடுத்துச் சென்று ஆகாயத்தில் தெளித்து, சூய வெப்பத்தைக் குறைத்துவிடலாம் என்று சோதனை செய்து அதில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தச் சோதனையை ரஷியாவிலுள்ள சில பகுதிகளில் தற்போது செய்து பார்த்து வருவதாகவும், இதிலுள்ள ஒரே குறைபாடு, தெளித்த பிறகு ஆகாயத்திலிருந்து அக்கரைசல் பூமியை நோக்கி வேகமாகக் கீழே வந்துவிடுகிறது என்பதுதான். அதனை ஆகாயத்திலேயே நிரந்தரமாகப் பந்தலிட முடியவில்லை என்கிறார் ரஷிய விஞ்ஞானி யூ இஸ்ரேல். பூமியின் வெப்பநிலையை மாற்றுவதற்கு ஜப்பானில் கூடிய 12 விஞ்ஞானிகளின் உச்சி மாநாட்டு அறிக்கை இந்நூற்றாண்டின் அய சிந்தனையாகும். அந்த அறிக்கையின்படி, காடுகளில் தொடர்ந்து வயதான மரங்களை வெட்டிவிட்டுக் கன்றுகளை நட்டு வளர்த்துக் கொண்டே வர வேண்டும். மரங்களையே வெட்டக் கூடாது என்று சூற்றுச்சூழல்வாதிகள் சொல்வதை மறுயோசனை செய்ய வேண்டியவர்களாகவே உள்ளோம். வனங்களில் வெட்டப்படுவதற்குயவை வயதான மரங்கள் என்பதையும் வளர்ப்பதற்குயவை மரக் கன்றுகள் என்பதையும் தெளிவாகப் புந்துகொள்ள வேண்டும். இரண்டாவது, மரங்களைப் போலவே, கயமில வாயுவை உள்கொண்டு வாழ்கிற கடல்பாசிகளைப் பெருக்குவதன் மூலமும் பூமி வெப்பத்தைக் குறைக்க முடியும். மூன்றாவதாக, மக்கள் வாழ்கிற நகரங்களில் கந்தக அமிலக் கரைசலை விமானத்தின் மூலம் தெளிப்பதாலும் புவி வெப்பத்தைக் குறைக்க முடியும். இந்த மூன்றும் புதிய கண்டுபிடிப்புகள். இவற்றை உலக நாடுகள் நடைமுறைப்படுத்தினால், பூமி வெப்பத்திலிருந்து விடுதலை பெற முடியுமென்று அண்மையில் கூடிய டோக்கியோ மாநாடு வலியுறுத்தியிருக்கின்றது.
பெ. சிதம்பரநாதன்
(கட்டுரையாளர்: ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசியர்).
நன்றி : தினமணி

Wednesday, August 27, 2008

போராடும் பேனா போராளிகள்!

""எழுத்தாளர்கள், பத்திகையாளர்கள் தெற்காசிய நாடுகளில் தீவிரவாதிகளைப் போல் கருதப்படுகிறார்கள். ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்களின் குறைகளை எழுதுவதால், பேனா போராளிகள் மீது அடக்குமுறை, நெருக்கடி, அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கின்றன'', என்கிற கருத்து புலனாய்வுப் பத்திகையாளர்களிடம் நிலவுகிறது. சுதந்திரமாக செயல்படும் பத்திகையாளர்கள் இதனால் பெய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை குறித்து அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய ஊடகவியலாளர் மாநாட்டில் கவலை தெவிக்கப்பட்டது. இந்தியாவின் மூத்த பத்திகையாளர்கள் கே.கே. கட்யால், நிகில் சிங், வினோத் சர்மா, பாகிஸ்தான் மூத்த பத்திகையாளர் இம்தியாஸ் ஆலம், இலங்கை முன்னணி பத்திகையாளர்கள் அமீன், லட்சுமண் குணசேகர, சர்மிணி எனப் பலர் பங்கேற்றனர். தெற்காசிய நாடுகளில், குறிப்பாக நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் பத்திகையாளர்கள் மத்தளம் போல் ஆட்சியாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பினன் நெருக்குதல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) உச்சி மாநாட்டுக்கு முன்னதாக நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு தெற்காசிய சுதந்திர ஊடகவியலாளர் சங்கம் (சாஃப்மா), தெற்காசிய ஊடக ஆணையம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. "பத்திகையாளர்களின் பாதுகாப்பு' என்பதே மாநாட்டின் மையக் கருத்து. சுதந்திரமாக கருத்துகளைச் சேகத்தல், எழுதுதல், தகவல் அறியும் உமை, பத்திகையாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் குழு அமர்வுகளில் விவாக விவாதிக்கப்பட்டது. கொந்தளிக்கும் சூழல்களில் பத்திகையாளர்கள் செய்தி சேகத்து வெளியிடுவதில் உள்ள இடர்ப்பாடுகள், அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெவிக்கப்பட்டது. தகவல் அறியும் உமை தெற்காசிய நாடுகளில் எந்த அளவில் உள்ளது என்பதை விவாக அந்தந்த நாட்டுப் பத்திகையாளர்கள் விளக்கினர். ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் இது குறித்த சட்டமே இல்லை. வங்க தேசம், பூடான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் தகவல் அறியும் உமை குறித்து திட்டம் உள்ளது; ஆனால், சட்டம் உருவாகவில்லை. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இச்சட்டம் உருவாகியுள்ளது. எனினும், இன்னும் தீவிரமாகச் செயலுக்கு வரவேண்டும் என்று கருத்து தெவிக்கப்பட்டது. மாநாட்டில் நேபாளத்தில் பத்திகையாளர்களின் நிலைமை குறித்த ஆய்வுக் கட்டுரை வழங்க வந்த கிஷோர் ஷ்ரேஸ்தா கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. ""இது இந்த மாநாட்டுக்கு வருவதற்கு இரு தினங்களுக்கு முன் கிடைத்த பசு'' என்று வேதனையுடன் காட்டினார். பத்திகையாளர்கள் மீதான தாக்குதல், காட்டுமிராண்டித்தனமாக இருப்பதை அவர் உருக்கமாக விவத்தார். நேபாளத்தில் மன்னராட்சிக் காலத்திலும் இப்போதும் தாக்குதல் தொடர்கிறது என்றும், மாவோ தீவிரவாதிகளும் இதற்கு விதி விலக்கல்ல என்றும் தெவித்தார் அவர். சில அரசியல் கட்டுரைகளை வெளியிட்டதற்காக நேபாளத்தின் பெய தேசிய நாளேடுகள் நிறுத்தப்பட்டன. பிரேந்திர ஷா என்ற பத்திகையாளர் கடத்தப்பட்டு, சில தினங்களில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்; பிரகாஷ் சிங் தாக்கு என்ற பத்திகையாளன் கதி தெயவில்லை என்றார் அவர். கடந்த ஆண்டு பத்திகையாளர்களுக்கு எதிராக 575 சம்பவங்கள் நடைபெற்றன. ""எத்தனை அடக்குமுறைகள் இருந்தாலும் நேபாளத்தில் பத்திகைகள் எதிர்கொள்ளும்'' என்றார் கிஷோர் ஷ்ரேஸ்தா. இலங்கையில் தமிழ்ப் பத்திகையாளர்கள் மட்டுமின்றி, சிங்கள முற்போக்கு பத்திகையாளர்களும் நெருக்குதலுக்கு ஆளாவதை சிங்களப் பத்திகையாளர்கள் சுட்டிக் காட்டினர். ""ஒரு புறம் தமிழ்ப் பத்திகையாளர்களைச் சந்தேகக் கண்ணுடன் இலங்கை அரசு பார்க்கிறது. மறுபுறம், விடுதலைப் புலிகளும் அவ்வப்போது நெருக்கி வருகிறார்கள்'' என்றார் ஒரு பத்திகையாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு பத்திகையாளர் தொழில் தொடர்பாக டென்மார்க் சென்று திரும்பினார். இதை வைத்து, அவர் டென்மார்க்கில் புலிகளுக்கு ஆதரவாகப் பயணம் செய்து வந்தார் என்று வருணிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, திட்டவட்டமாக மறுத்தார். ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களில் மட்டும் இரு பத்திகையாளர்கள் கொல்லப்பட்டனர். இரு பெண் பத்திகையாளர்கள் தாக்குதல் காரணமாக ராஜிநாமா செய்துவிட்டனர். ஒரு கட்டுரைக்காக ஒரு பத்திகையாளருக்கு மாகாண கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. பலருக்கு அபராதம், சிறை, காவல், கெடுபிடி விசாரணை என்பது சகஜமாகிவிட்டது. கடந்த ஆண்டு 5 பேர் கொலையுண்டனர். வங்க தேசத்தில் அரசியல் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கார்ட்டூனிஸ்ட் சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார். இது தவிர போலீஸ் ஊழலை எழுதிய நிருபர் கைது செய்யப்பட்டிருகிறார். பொதுவாக, சார்க் நாடுகளில் ஜனநாயகம் நிலை பெற வேண்டும் என்பதில் அந்தந்த அரசுகள் மிகுந்த கவனம் எடுத்து வருகின்றன. ஆனால், எழுத்துச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் இருந்தால் மட்டும்தான் ஜனநாயகம் தழைக்க முடியும் என்பதை அந்த அரசுகள் ஏனோ உணர மறுக்கின்றன!
பா. கிருஷ்ணன்
நன்றி ;தினமணி

போகுமிடம் வெகுதூரம்!

"கடந்த முறை ஒன்று கிடைத்ததற்கு... இந்த முறை மூன்று' என்று ஆறுதல்பட்டுக் கொள்வதைத் தவிர, பெய அளவில் பெருமிதம் அடைய ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது. ஒலிம்பிக் திருவிழாவில் ஒரே வீரருக்கு 8 தங்கம், 3 தங்கம் என அமெக்காவும், ஜமைக்காவும் பதக்க அறுவடையில் ஈடுபட்டபோது, 110 கோடி மக்களின் பிரதிநிதியாகச் சென்ற இந்தியக் குழு பெற்ற மூன்று பதக்கங்கள், ஆறுதலைத் தவிர வேறு எதைத் தந்துவிட முடியும்? வெற்றிக்கான திறமை இங்கு உள்ளது; சயான வழிகாட்டுதலும், தயார்படுத்துதலும் இல்லை என்று வழக்கமான தோல்விக் காரணிகளை ஆராயும் வேளையில் சில ஆத்ம பசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒலிம்பிக்கில் இந்திய அணியின் ஒட்டுமொத்த திறமையை மதிப்பிடும் அதே நேரத்தில் தனிப்பட்ட வீரர்கள் சிலன் அலட்சியத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தங்கம் வென்ற அபினவ், வெண்கலம் வென்ற சுசில்குமார், விஜேந்தருக்கு ஒரு "சல்யூட்', காலிறுதிக்கு முன்னேறிய சாய்னா, ஜிதேந்தர், அகில்குமார் ஆகியோருக்கு ஒரு "சபாஷ்' போடும் வேளையில், அலட்சியத்தால் வாய்ப்பை கோட்டைவிட்டவர்களுக்கு ஒரு "குட்டு' வைத்தால் என்ன என்றே தோன்றுகிறது. ஆசிய அளவில் சாதனை படைத்த, நம்பிக்கை நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்ட நீளம்தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், ஒலிம்பிக் போட்டியில் மூன்றுமுறையும் "ஃபவுல்' செய்து, தகுதிச் சுற்றிலேயே வெளியேறி நம்பிக்கையைப் பொய்யாக்கினார். "கணுக்கால் காயம்' என அஞ்சு மிகச் சாதாரணமாக அதற்குக் காரணமும் கூறினார். புற்றுநோயின் கொடூரத் தாக்குதல் இருந்தாலும் 10 கி.மீ. நீச்சல்போட்டியில் தங்கம் வென்ற நெதர்லாந்து வீரர், விபத்தில் ஒரு காலை இழந்தாலும் நீச்சல் போட்டியில் பங்கேற்று பந்தயதூரத்தை நிறைவுசெய்த வீராங்கனை போன்றவர்களின் வெற்றிக்கான போராட்டத்துடன் அஞ்சு கூறிய காரணத்தை ஒப்பிட்டுப்பார்த்தால், அவர் யாரை ஏமாற்றுகிறார் என்பது புயும். அடுத்து டென்னிஸ் புயல்(?). உடை விஷயத்தில் இந்தியாவில் ஆங்காங்கே கிளம்பிய எதிர்ப்பையடுத்து, இந்தியாவில் இனி விளையாடவே மாட்டேன் என்று சபதம்(!) செய்து வெளிநாடுகளில் மட்டுமே விளையாடி வந்த சானியா. சொந்த நாட்டில் விளையாட மாட்டேன் என்று கூறியவரால், சொந்த நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் அந்நிய மண்ணில் எப்படி விளையாட முடியும்? முடியாது என்று முதல்சுற்றிலேயே தோற்று வெளியேறி பதில்சொன்னார் சானியா. டென்னிஸ் இரட்டையர் போட்டியிலும் சானியா சுனிதா ஜோடி 2வது சுற்றில் தோற்றுப்போனது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது வரை இருவரும் சேர்ந்து பயிற்சி ஆட்டத்தில்கூட ஆடியது இல்லையாம். தொடர்ந்து... டென்னிஸ் இரட்டையர்களாகப் போற்றிப் புகழப்பட்ட பயஸ், பூபதி. பல சர்வதேச போட்டிகளில் மகுடம் சூடிய இந்த ஜோடி, "ஈகோ' மோதலால் அண்மைக்காலமாக பிந்தே இருந்தது. பின்னர், "நாட்டு நன்மைக்காக' வேறு வழியின்றி ஒலிம்பிக்கில் சேர்ந்துவிளையாடுவதாக அறிவித்தனர். வெற்றி என்ன மந்திரத்தில் காய்க்கும் மாங்காயா? போட்டிக்கு முந்தையநாள் வரையில் சேர்ந்து பயிற்சி செய்யாமல், நேராக மைதானத்திற்கு வந்தால், தோற்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இவை தனிப்பட்ட குறைபாடுகள் என்றால், விளையாட்டில் அரசியல் விளையாடுவதை நிரூபித்தது ஒரு சம்பவம். பளுதூக்கும் வீராங்கனை மோனிகா ஊக்கமருந்து உட்கொண்டதாக கடைசி நேரத்தில் பிரச்னை கிளப்பி, அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டது. காலம் கடந்தபிறகு அவர் மீதான குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. "தனக்கு எதிரான சதியால் தான் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போய்விட்டதாக' மோனிகா குமுறலை வெளிப்படுத்தினார். ஒலிம்பிக்கில் பங்கேற்று இருந்தால் மோனிகா பதக்கம் வென்றிருப்பாரா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அவரது ஒலிம்பிக் வாய்ப்பு பறிக்கப்பட்டதற்கு யார் காரணம்? அவசரப்பட்டு குற்றம்சாட்டி பின்னர் மறுத்தது ஏன் என்று ஒரு விசாரணைகூட நடத்தப்பட்டதாகத் தெயவில்லை. அடுத்து காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் ஆசை உள்ளது. ஆனால், அடிப்படையிலேயே ஏராளமான குறைபாடுகளுடன் விளையாட்டில் இன்னும் தவழும் குழந்தையாகவே இருக்கிறது. மக்கள்தொகையில், தொழில்வளர்ச்சியில், தகவல்தொழில்நுட்ப புரட்சியில் வீறுநடைபோடும் இந்தியாவை விளையாட்டில் மட்டும் எத்தியோப்பியா, நைஜீயா, அஜர்பைஜான், ஜிம்பாப்வே போன்ற குட்டிதேசங்கள் புறந்தள்ளி முந்துவது பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது. ரயில்வேயில் வேலைசெய்து கொண்டே மல்யுத்தத்தில் கவனம் செலுத்தி அதில் பதக்கமும் வென்ற சுசில்குமார் போல எல்லோரும் அமைந்துவிட மாட்டார்கள். எத்தனையோ திட்டங்களுக்கு கோடி கோடியாக செலவு செய்யும் மத்திய, மாநில அரசுகள்... நாட்டின் கெளரவத்தை உலக அரங்கில் பறைசாற்றும் விளையாட்டுத் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே சிறந்த வீரர்களை தத்தெடுத்து உலகளாவிய போட்டிகளுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து தயார்செய்ய வேண்டும். திறமையான வீரர்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் திறமையான பயிற்சியாளர்களும். விளையாட்டில் அரசியல் விளையாடுவதை அனுமதிக்கக் கூடாது. இன்னும் ஏராளமான நடவடிக்கைகள் அவசியம். ஏனெனில், விளையாட்டுத் துறையில் நாம் போகுமிடம் வெகுதூரம்!
எஸ். ராஜாராம்
நன்றி :தினமணி

புதிய தசரதனின் பதவித் துறப்பு

கம்பன் எழுதிய காவியத்தின் தனிச் சிறப்பாகக் கருதப்படுவது ஒவ்வொரு பாத்திரத்தின் பண்பு நலன்களைச் சில சொற்களால் சுட்டிக் காட்டுவதே ஆகும். தசரத மன்னன் தனது மூத்த மைந்தன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்த சூழ்நிலையை மிக அற்புதமாக பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறார். மன்னனே யவனியை மகனுக்கீத்து நீ பன்னருந் தவம்பு பருவ மீதெனக் கன்ன மூலத்தினிற் கழற வந்தென மின்னெனக் கருமை போய் வெளுத்ததோர் மயிர் ""மூத்த மகனாகிய இராமனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு சிறப்புமிக்க தவ வாழ்வை மேற்கொள்வதற்கு ஏற்ற முதிர்ந்த பருவம் அடைந்துவிட்டாய் என்பதை அவனது காதோரத்தில் ரகசியமாகக் கூற வந்ததைப் போல மயிர் ஒன்று மின்னலைப் போல வெளுத்து நரைத்துத் தோன்றலாயிற்று'' என பாடுகிறான் கம்பன். கண்ணாடியின் முன் நின்ற தசரதன் காதோரத்தில் ஒரேயொரு முடி நரைத்துக் காட்சியளித்ததைப் பார்த்தவுடனேயே முதிய பருவத்தை அடைந்து விட்டதை உணர்கிறான். உடனடியாக அயணையில் இருந்து இறங்கித் துறவுகோலம் பூணுவது குறித்து சிந்திக்கிறான். குலகுருவான வசிட்ட மாமுனிவரையும், அமைச்சர்களையும் அழைக்கிறான். அவர்களும் விரைந்து வந்து கூடுகிறார்கள். அப்படி கூடியவர்கள் நடுவே தனது மனக் கருத்துகளை தசரதன் வெளியிடுகிறான். இந்த இடத்தில் தசரதனின் மிக உயர்ந்த பண்பு நலன்களைச் சுட்டிக்காட்டும் வண்ணம் கம்பனின் மற்றொரு பாடல் அமைந்துள்ளது. இறந்திலன் செருக்கலத் திராமன் தாதைதான் அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும் துறந்தில னென்பதோர் சொல்லுண் டாயபின் பிறந்தில னென்பதிற் பிறிதுண் டாகுமோ ""இராமனின் தந்தையான தசரதன் போர்க்களத்தில் இறந்தானில்லை. முதிர்ந்த வயதை அடைந்த பிறகும் பற்றுகளைத் துறந்தானில்லை என்பதாகிய ஒரு பழிச்சொல் உண்டான பிறகும் வாழ்வது சயோ'' என்கிறான். ஒரேயொரு நரை மயிர் தோன்றியதைக் கண்டவுடனேயே முதுமை அடைந்து விட்டோம் என்ற எண்ணம் மேலோங்க மைந்தனுக்கு முடி சூட்ட நினைக்கிறான் தசரதன். இன்னும் பற்றுகளைத் துறக்காத பாவியாக அயணையில் தொடர்ந்து அமர்ந்திருக்க அவன் விரும்பவில்லை. தசரதனின் உயர்ந்த பண்பு நலன்களை இவ்வாறு சுட்டிக்காட்டி வியக்கிறான் கம்பன். கம்பன் கண்ட தசரதன் அவன். ஆனால் இன்று புதிய தசரதனாக முதல்வர் கருணாநிதி காட்சி தருகிறார். ""5 முறை முதலமைச்சராக இருந்து விட்டேன். இனி அடுத்த முறை முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை''யெனத் திடீரென அறிவித்திருக்கிறார். இதுபோன்ற வேளைகளில் அவர் வழக்கமாக பேசும் பேச்சா? அல்லது உண்மையிலேயே அப்படி கூறுகிறாரா? என்பது விவாதத்திற்கு உயதாகும். 1993ஆம் ஆண்டில் கழகத்திலிருந்து வைகோவும் அவரது தோழர்களும் விலக்கப்பட்ட வேளையில் அரசியலிலிருந்தே நான் விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தவர் கருணாநிதியே ஆவார். ஒரு வாரம் கழித்து வழக்கம் போல தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பைத் திரும்பப் பெற்றார். 2001ஆம் ஆண்டில் இதுதான் நான் கடைசியாக நிற்கும் தேர்தல் எனக் கூறினார். ஆனால் 2006ஆம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டார். 2008ஆம் ஆண்டில் தனக்கு பிறந்தநாள் விழா வேண்டாம் என்றார். உடனே சொல்லி வைத்தாற்போல கழகத் தொண்டர்கள் அலறியடித்துக் கொண்டு அய்யோ அப்படிக் கூறாதீர்கள் நாடு தாங்காது. நாங்களும் தாங்க மாட்டோம் எனக் கெஞ்சினார்கள். பிறகு அவரது பிடிவாதம் தளர்ந்தது. உங்களுக்காக எனக் கூறி பிறந்தநாள் விழாவுக்கு ஒப்புக்கொண்டார். இது அவருக்கே ஆகி வந்த கலையாகும். ஆனால் மீண்டும் முதல்வர் பதவி ஏற்கத் தனக்கு விருப்பம் இல்லை என்று அவர் கூறிய பிறகு நாட்டிலும், கழகத்திலும் எத்தகைய பிரளயமும் ஏற்பட்டுவிடவில்லை. இது ஏன்? ""நியாயம் தானே! முதிய வயதில் இனி அவர் ஓய்வெடுத்துக் கொள்வது நாட்டுக்கும் நல்லது அவருக்கும் நல்லது'' என நினைத்து அனைவரும் அமைதி காத்து விட்டார்களா? முதுமையின் காரணமாக இவ்வாறு கூறியுள்ளாரே தவிர பதவிப் பற்றினை வெறுத்தோ, இளைய தலைமுறைக்கு வழிவிட்டு கழகத்தில் தான் முன்மாதியாகத் திகழ்ந்தால் மற்றவர்களும் அதன்படி அமைச்சர் பதவிகளிலிருந்தும், கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விலக முன்வருவார்கள் என நினைத்தோ இவ்வாறு கூறியதாகத் தெயவில்லை. விலைவாசி உயர்வு, காவி, முல்லைப் பெயாறு, பாலாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகள், ஈழத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, கச்சத்தீவுப் பிரச்னை, சேதுக் கால்வாய் பிரச்னை போன்ற உண்மையான மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாத நிலைமையில் இவ்வாறு கூறினாரா? அல்லது தீராத இப்பிரச்னைகளிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்ப இவ்வாறு கூறினாரா? என்பதும் புயாத புதிர்தான். சக அமைச்சர்கள் மீதும், உயர் அதிகாகள் மீதும் அடுக்கடுக்காக எழுப்பப்படும் ஊழல் புகார்களைக் கண்டு மனம் நொந்த நிலையில் பதவி விலக முடிவெடுத்திருக்க முடியாது. ஏனெனில் இவரது குடும்ப அதிகார மையங்களின் ஊழலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் அமைச்சர்களையும் விஞ்சிவிட்டது. தவறுகளை இடைவிடாது சுட்டிக்காட்டிய பாமகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றியாகிவிட்டது. கம்யூனிஸ்டுகளும் வெளியேறத் தயாராகி வருகிறார்கள். எஞ்சியிருக்கும் காங்கிரஸ் கட்சியிலோ பல்வேறு குழுக்களின் ஓய்வு ஒழிச்சல் இல்லாத மோதல்! மனிதர் பாவம் வயதான நிலையில் என்னதான் செய்வார்? அதனால் இந்த முடிவெடுத்தாரா என்பது அவருக்கு மட்டுமே புயக் கூடியது. அடுத்த தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்து கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முற்படும்போது தான் மீண்டும் முதல்வராக வர விரும்பவில்லை என பேச வேண்டிய பேச்சை இப்போது பேச வேண்டியது எதற்காக? என்ன நோக்கத்திற்காக? அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட இவருடன் கூட்டு சேருமா வேறு கட்சிகளைத் துணைக்கு அழைக்குமா என்ற நிலையில் திமுகவின் வெற்றி பெய கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மீண்டும் முதல்வராக வர விருப்பம் இல்லை என்று கூறுவது நகைப்புக்கிடமானது. ஒருவேளை முதல்வர் பதவியைத் துறக்க நேட்டாலும், கழகத் தலைவர் பதவியை ஒருபோதும் உதறித் தள்ளத் துணியமாட்டார். அப்போதுதான் ஆட்சியும், கழகமும் அவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்ற சூட்சுமத்தை அறியாதவரா அவர்? இராமாயண கால தசரதனுக்கு இந்த சூட்சுமங்கள் புந்திருக்கவில்லை. எனவேதான் காதருகே ஒரேயொரு மயிர் நரைத்ததைப் பார்த்தவுடன் ஆட்சியைத் துறக்கத் துணிந்தான். தன் மகன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தான். இவ்வளவுக்கும் பரம்பரை பரம்பரையாகக் கடைப்பிடிக்கப்பட்ட மரபுப்படி அவனுக்குக் கிடைத்த அயணை அது. அவன் தலை சாயும் வரை அமர்ந்திருக்கலாம். யாரும் அவனைக் கீழிறங்கச் செய்ய முடியாது. ஆனால் தசரதன் தானே முன் வந்து அயணையைத் துறக்க முற்படுகிறான். ஆனால் ஜனநாயக நாட்டில் புதிய தசரதனுக்குப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும் மற்றவர்களுக்குப் போக்குக்காட்டி ஏமாற்றவும் தெயும். எனவே அவர் பதவி நாற்காலியில் தொடர்கிறார்.

பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி

சின்னமனூர் வழிகாட்டுகிறது!

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்ற வசனம் தமிழ் திரைப்படங்களில் ""ஆலம் ஆரா'' காலத்திலிருந்து கேட்டுகேட்டு காது புளித்துவிட்டது. ஆனால் அந்தக் கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படாமல் இப்பூவுலகில் நிச்சயிக்கப்படுவதால் பெண்ணைப் பெற்றவர்கள் முன்னெச்சக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. சின்னமனூர் என்ற சிற்றூல் உள்ள மறவர் மக்கள் மன்ற திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் மணமகன், மணமகள் இருவரும் "எய்ட்ஸ்' பசோதனைக்கு உள்பட்டு சான்றிதழ் பெற்ற பிறகே திருமண அழைப்பிதழை அச்சிட்டு பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு அது மக்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நல்ல ஏற்பாட்டை தமிழ்நாட்டின் பிற பகுதியினர் அறிந்திருக்கவில்லை. சமீபத்தில் நடக்கவிருந்த ஒரு திருமணமே, மணமகனுக்கு "எய்ட்ஸ்' நோய் அறிகுறி இருப்பது ரத்தப் பசோதனையில் தெயவந்ததால் நின்று போனது. அதன் பிறகுதான் இந்தத் திருமண மண்டப நிர்வாகிகளின் முன் யோசனை வெளி உலகுக்குத் தெய வந்திருக்கிறது. இப்படியொரு நிபந்தனையை பெண்ணைப் பெற்றவரோ அவர் சார்பில் மற்ற உறவினர்களோ, பெண் பார்க்க வரும்போதே விதித்தால், ""உன் பெண்ணே வேண்டாம், என் பையனையா சந்தேகப்படுகிறாய்?'' என்றுதான் பிள்ளையைப் பெற்றவர் சீறியிருப்பார். இந்தப் பொறுப்பை ஒரு திருமண மண்டபம் தானாகவே முன்வந்து எடுத்துக்கொண்டிருப்பது பாராட்ட வேண்டிய செயல். பொதுவாக இன்றைய இளைய தலைமுறையினர் தவறான வழிகாட்டலாலோ, அல்லது சாகச முயற்சியாக நினைத்தோ திருமணத்துக்கு முன்னதாக தவறிவிடும் வாய்ப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படுகிறது. அதனால் ரகசிய வியாதிகளுக்கு ஆளாகிறவர்கள் தங்களுடைய நெருங்கிய நண்பர்களிடத்தில்கூட இதைச் சொல்லாமல் மறைத்துவைத்து நோயைத் தீவிரமாக்கிக்கொள்கின்றனர். இது குறித்து பால்வினை நோய் டாக்டர்களைக் கேட்டால் வண்டி வண்டியாகச் சொல்வார்கள். இந் நிலையில் "எய்ட்ஸ்' பசோதனையைத் தாங்களாகவே யாராவது செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவே முடியாது. மிகவும் முற்போக்கான முதல்வர் ஆட்சி செய்யும் இந்தச் சமயத்தில், சின்னமனூர் விவகாரம் குறித்து மாநில அரசு கருத்துக்கூட தெவிக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு சொத்துமை போன்றவற்றுக்கு முதல் முதலில் சட்டம் இயற்றிய மாநிலம் என்று பெருமை பேசும் முதலமைச்சர், இந்தச் செய்தி வந்தவுடனேயே, ""தமிழ்நாடு முழுக்க இனி நடக்கும் எல்லாவிதமான திருமணங்களுக்கும் எய்ட்ஸ் பசோதனை மட்டும் அல்ல, முழு உடல் தகுதி பசோதனையும் அவசியம், அத்துடன் திருமணத்தைப் பதிவு செய்வதும் கட்டாயம்'' என்று ஒருங்கிணைந்த சட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அமல்படுத்தியிருக்க வேண்டும். இப்போதும் காலம்கடந்துவிடவில்லை. வெளிநாடுகளில் வேலைபார்க்கும் மணமகன்கள் சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்துகொண்டாலும், "விசா' பெறுவதற்காகவே திருமணத்தைப் பதிவு செய்துகொள்கின்றனர். எனவே சம்பிரதாயத் திருமணம், பகுத்தறிவுத் திருமணம் என்று எல்லாவற்றையுமே கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். 2 தலைமுறைகளுக்கு முன்னால் எல்லோரும் அவரவர் உறவினர்களிடையேதான் பெண் எடுத்து, பெண் கொடுத்து வந்தனர். பிறகு தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றால் வேறு மாவட்டமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஒப்புக்கொண்டனர். இப்போது படிப்பு, தொழில் ஆகியவற்றின் காரணமாக வெளிநாடுகளில் வாழும் மாப்பிள்ளைகளைக் கூட இணையதளப் பவர்த்தனை மூலம் நிச்சயிக்கின்றனர். இன்னும் சிலர் துணிந்து இதர ஜாதிகளிலும் சம்பந்தம் செய்துகொள்கின்றனர். எனவே இந்த விஷயத்தில் சின்னமனூர் திருமண மண்டபத்தின் வழிகாட்டல் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய நல்ல முன்னுதாரணம் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இருக்க முடியாது. பெற்றோர்களுக்கு ஒரு வார்த்தை; நல்ல படிப்பு, நல்ல சம்பளம், நல்ல வேலை என்று மற்றவர்கள் கூறுவதை மட்டுமே கேட்டு அவசரப்பட்டு மணம் பேசி முடிப்பதைவிட மண மகன் அல்லது மண மகள் குறித்து தீர விசாத்துவிட்டு பிறகு நிச்சயிப்பது வம்பு, வழக்குகளையும் வீண் மன உளைச்சலையும் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.
நன்றி :தினமணி

Saturday, August 23, 2008

திருப்புமுனை ஒலிம்பிக்ஸ்?

முப்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு உலக விளையாட்டு அரங்கில் நாங்களும் இருக்கிறோம் என்று இந்தியா நிரூபித்திருக்கிறது. அபிநவ் பிந்த்ராவின் தங்கப் பதக்கத்தைத் தொடர்ந்து, மல்யுத்தத்தில் சுஷில் குமாரும், குத்துச் சண்டையில் விஜேந்தர் சிங்கும் பெய்ஜிங் ஒலிம்பிக் பந்தயங்களில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்.
108 கோடி பேர் கொண்ட, ஒரு நாடு உலக அரங்கில் முன்னணியில் நிற்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது மனித வளத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத நமது சோம்பேறித்தனம்தான் என்று கூற வேண்டும். திறமைசாலிகளான சிறுவர்களைப் பள்ளிகளிலேயே அடையாளம் கண்டு, அவர்களுக்கு முறையாக விளையாட்டுப் பயிற்சிகளை அளிப்பதற்கான முயற்சியில் சுதந்திர இந்தியா ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டவில்லை.
கேரளத்திலுள்ள கண்ணூர், தலைச்சேரி பகுதியினர்தான் விரும்பி சர்க்கஸ் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றுபவர்கள். இப்போதும்கூட அதே நிலைமைதான். அந்தக் குழந்தைகள் இயற்கையிலேயே உடலை வளைத்து வித்தை காட்டும் "ஜிம்னாஸ்டிக்ஸ்' விளையாட்டில் திறமைசாலிகளாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு முறையான தேர்ச்சி அளித்தால் உலக அரங்கில் இந்தியா ஜிம்னாஸ்டிக்கில் முதலிடம் வகிக்கும் என்று கடந்த 40 ஆண்டுகளாகக் கைவலிக்கப் பலரும் எழுதியதுதான் மிச்சம். அதற்கான முயற்சிகளை அரசு செய்யவில்லை.
கிரிக்கெட், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டிற்குத் தரப்படும் ஊக்கமும், உதவியும் ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, தடகளம், மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளுக்குத் தரப்படுவதில்லை.
வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் சுஷில் குமார் மற்றும் விஜேந்தர்சிங் போன்றவர்கள், தங்களது கிராமங்களில் கட்டாந்தரையில்தான் மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டைப் பயிற்சிகளை மேற்கொண்டு, வளர்ந்த பிறகு சர்வதேச சங்கங்களின் பந்தய மேடைகளைத் தரிசிக்கவே முடிந்திருக்கிறது. உலக வல்லரசாகப் போகிறோம் என்று மார்தட்டும் இந்தியாவில், முறையான பயிற்சி மையங்களும், பந்தய மைதானங்களும் மாவட்ட அளவில்கூட அல்ல, எல்லா மாநிலங்களிலும்கூட இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
2001ஆம் ஆண்டில் 0.06 சதவிகிதமாக இருந்த விளையாட்டுக்கான நிதி ஒதுக்கீடு இப்போதுதான் 0.97 சதவிகிதமாக ஆகியிருக்கிறது. அதாவது, மத்திய அரசின் மொத்த நிதி ஒதுக்கீடான ரூ. 7,85,583.70 கோடியில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுக்காக நாம் ஒதுக்கீடு செய்யும் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ. 764 கோடி மட்டுமே! இந்த லட்சணத்தில் இந்தியா தங்கப் பதக்கங்களைக் குவிக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டால் எப்படி?
இன்னொரு விஷயம். துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, தடகளம், செஸ் போன்ற தனிநபர் விளையாட்டுகளில்தான் அவ்வப்போது இந்திய வீரர்களின் சாதனைகள் வெளிப்படுகின்றனவே தவிர, அணியாகப் போட்டியிடும் ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து போன்றவைகளில் நாம் ஏன் வெற்றி பெற முடியவில்லை? கிரிக்கெட்டில்கூட அதிர்ஷ்டம் ஒத்துழைத்தால் வெற்றி என்கிற நிலைமைதானே தொடர்கிறது. அது ஏன்?
2000 ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் அமெரிக்காவுக்கு 39 தங்கப் பதக்கங்களும் சீனாவுக்கு வெறும் 28 தங்கப் பதக்கங்களும்தான் கிடைத்தன. 2004ல் நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் சீனா 32 தங்கப் பதக்கங்களை வென்று, 35 பதக்கங்களை வென்ற அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது. இப்போது 46 தங்க மெடல்களுடன் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி விட்டிருக்கிறது. இதற்குக் காரணம் சீன அரசு விளையாட்டு வீரர்களுக்கு அளித்த ஊக்கமும், உற்சாகமும், ஏற்படுத்திக் கொடுத்த வசதிகளும்தான்.
முழு மூச்சுடன் அரசு இயந்திரம் செயல்பட்டு, அடுத்த ஒலிம்பிக்கில் தங்க மெடல்களைக் குவித்தே தீர்வது என்கிற முனைப்புடன் செயல்பட்டால் சீனாவால் செய்ய முடிந்த சாதனையை நம்மாலும் செய்து காட்ட முடியும். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் நமது மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் ஒரு திருப்புமுனையாக அமையக்கடவது!
நன்றி : தினமணி

வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்

பெண்கள் கண்ணியமாக உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் குரல் எழுப்பி வருகிறார்கள்.
ஆணாயினும், பெண்ணாயினும் உடுக்கும் உடையும், பாணியும் தனிப்பட்ட உரிமைதான். ஆனால், இங்கு மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் பெண்களின் உடைகள் பற்றி மட்டுமே கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனை ஓரவஞ்சனை என்று பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். ஆனால், காரணங்களை ஒருதலைப்பட்சமற்று ஆராய்ந்தால், பெண்கள் இந்த உடைக் கட்டுப்பாட்டை எதிர்க்க மாட்டார்கள்.
இயல்பில் ஆண் முரட்டுத் தசைவலிமையில் பெண்ணைக் காட்டிலும் உயர்ந்தவனாகவும், மனவலிமையில் பெண்ணைக் காட்டிலும் தாழ்ந்தவனாகவும் படைக்கப்பட்டிருக்கிறான். பெண்ணின் உடல் சார்ந்த வலுவின்மையை ஆண் தனக்குச் சாதகப்படுத்திக் கொண்டு அவளை வெற்றி கொள்வதைப் பெண் எவ்வாறு நியாயமென்று ஒப்புக்கொள்ள மாட்டாளோ, அவ்வாறே மனம் சார்ந்த தனது வலுவின்மையைப் பெண் சீண்டுவது கூடாது என்று நினைக்கவும், அது பெண்ணுரிமை என்பதை மறுப்பதற்கும் ஆணுக்கு உரிமை உண்டு.
ஒருவர் எடுத்துக்கொள்ளும் உரிமை பிறருக்கும் ஏன்? தனக்கேயும் கூடத்தான் தீமை செய்யும்போது அதைக் கைவிட வேண்டிய பொறுப்பும் அறிவும் ஒருவருக்கு இருக்க வேண்டும். அண்மைக்காலமாய்ப் பெண்களில் சிலர் நல்ல வேளை! சிலர்தான்! அருவருக்கத்தக்க முறையில் வெளிப்பாடாய் உடுக்கத் தலைப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் சிலர் அணியும் பனியன்களிலும், டி ஷர்ட்டுகளிலும் உள்ள வாசகங்களை இங்கே எடுத்து எழுதி, இந்தக் கண்ணியமான நாளிதழின் பக்கத்தை மாசுபடுத்த விரும்பவில்லை. வம்புக்கு இழுக்கும் இந்த வாசகங்களைப் படிக்கும் ஆண் அருவருப்பான முறையில் எதிரொலிக்கவே செய்வான். அவன் என்னை இடிக்காமல் விலகிப் போகட்டுமே? அவன் இடிப்பான் அல்லது அசிங்கமாய் ஏதேனும் விமர்சிப்பான் என்பதற்காக நான் ஏன் என் உடையணியும் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்? எனும் பெண்ணின் பதில் கேள்வியில் அசட்டுத்தனமே ததும்புகிறது. பெண்களுக்கு வெட்க உணர்வுகள் போதிக்கப்பட்டு வந்துள்ளது அவர்களது நன்மையை உத்தேசித்தே என்பதைப் பெண் புரிந்துகொள்ள வேண்டும்.
1968இல் இருந்து பெண்ணுரிமை சார்ந்த கதை கட்டுரைகளை எழுதி வரும் என் மீது யாரும் பத்தாம்பசலி என்று முத்திரை குத்த முடியாது.
பழையன என்பதற்காக எல்லாக் கட்டுப்பாடுகளையும் துறப்பதோ அல்லது புதியவை என்பதற்காக அனைத்துச் சுதந்திரங்களையும் "பெண் விடுதலை' என்பதன் பெயரால் ஏற்பதோ புத்திசாலித்தனம் ஆகாது.
பெண்கள் தமது கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடு நின்று சிந்தித்துப் பழையன, புதியன ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஓர் அறிவார்ந்த நிலையை எடுக்க வேண்டும். கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளவும் தள்ள வேண்டியவற்றைத் தள்ளவும் அவள் அறிய வேண்டும்.
பெண்ணைத் துய்பொருளாய்க் கருதி ஊடகங்கள் வணிகம் செய்வதாய்க் குற்றம்சாட்டும் பெண்ணியவாதிகள், வம்புக்கு இழுக்கும் வாசகங்கள் கொண்ட டி ஷர்ட்டுகளை அணியும் பெண்களை ஏன் கண்டிப்பதில்லை? மாறாக, எதையும், எப்படியும் உடுப்பது பெண்ணின் உரிமை என்றல்லவோ வக்காலத்து வாங்குகிறார்கள்?
எனினும், செய்யும் பணிக்கேற்ப, வசதியான உடைகளைத்தான் பெண் அணிய வேண்டும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எந்தப் பணியிலும் பெண் அமர்த்தப்படும் இந்நாளில் அவள் சேலைதான் கட்ட வேண்டும் என்பது சரியன்று. சேலை வசதிக்குறைவானது. விரைந்து நடக்கவும், பேருந்தைப் பிடிக்கவும், பல்வேறு ஆபத்துகள் இன்று பெண்களைத் துரத்தும் நிலையில் சட்டென்று ஓடவும் கால்சராய் / ஜீன்ஸ்தான் ஏற்றது. சேலை காலை வாரிவிட்டுவிடும். நான் சொல்ல வருவதெல்லாம் இதுதான் அணியும் உடை எதுவாக இருந்தாலும் அதைக் கண்ணியமான முறையில் பெண்கள் அணிய வேண்டும். பதினெட்டு முழப் புடவையையும் கண்ணியக் குறைவான முறையில் உடுக்கலாம்தான்!
பல நாள் முன்பு, பெண்களுக்கான ஓர் ஆங்கில இதழில் அதன் ஆசிரியை, பெண்களின் எறிபந்து / கூடைப்பந்து விளையாட்டுகளுக்கு ஆண்களின் கூட்டம் அலைமோதுவதையும், பெண்கள் விளையாடுகையில் ஆபாசமான விமர்சனத்துடன் அவர்கள் ஊளை இடுவதையும் பற்றி அங்கலாய்த்துக் கட்டுரை எழுதியிருந்தார். உறுப்புகள் வெளித்தெரியும் வண்ணம் உடையணிந்து குதித்தால் அப்படித்தான் எதிரொலிப்பார்கள்.
அண்மையில் ஒரு கட்டுரையில், பெண்களின் உடைக்கட்டுப்பாடு பெண்களின் மீதான தாக்குதல் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அரைகுறை ஆடைகளோ ஆண்களின் பலவீனத்தின் மீதான தாக்குதலே என்பதை நாம் உணர வேண்டும்! அதே கட்டுரையின் ஓரிடத்தில், "உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்கள் உடைகளைக் கால்கள் தெரிய, தூக்கிச் செருகிக்கொண்டால்தான் வேலை செய்ய முடியும்.
நம் நாட்டில் வயலில் உழைக்கும் பெண்களும், கட்டட வேலை செய்யும் பெண்களும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்தப் பெண்கள்தான் பாலியல் கொடுமைகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள்' என்றும் சொல்லப்பட்டிருந்தது. கண்கூடான நிலை என்பது இதுதான். இது ஆண்களின் பொதுவான, மாறாத மனப்பான்மையையே காட்டுகிறது.
பெண்ணுரிமை என்பதைத் தவறாய்ப் புரிந்துகொண்டுள்ளவர்களின் கருத்து என்னவெனில், "பெண் எப்படி வெளிப்பாடாக உடுத்திக்கொண்டாலும், ஆண் அதனால் பாதிப்பு அடையக் கூடாது. அவன் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்' என்பதேயாகும். பல ஆண்கள் பெரிதும் முயன்று அப்படித்தான் வலுக்கட்டாயமாய்க் கண்ணியம் காக்கிறார்கள். இல்லையெனில், ஒரு பெண் கூட வீட்டு வாசற்படியைத் தாண்ட முடியாது! ஆனால், வேறு பலரால் தங்கள் இயல்பை வெல்ல முடிவதில்லை. ஏனெனில், அவர்கள் படைக்கப்பட்ட விதம் அப்படி! அவர்கள் திருந்த வேண்டும் என்றும், ஆபாசமாக உடுக்கும் பெண்களை விமர்சிக்கவோ அவர்களைச் சீண்டவோ கூடாது என்றும் கூறுவது "நாய் தன் வாலை நிமிர்த்திக் கொள்ள வேண்டும்' என்று சொல்வதற்கு ஒப்பானதே.
ஆபாசப் படங்களால் அனைத்துப் பக்கங்களையும் நிரப்பிப் பெண்சீண்டலை ஆண்களிடம் தூண்டிவிட்டுவிட்டு, பெண்சீண்டலால் உயிர் நீக்க நேர்ந்த சரிகா ஷா பற்றி மாய்ந்து மாய்ந்து கட்டுரை எழுதி நினைவுநாள் கொண்டாடும் ஏடுகளும், ஆபாச ஆட்டங்கள் நிறைந்த திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிப்பவர்களும் நகைச்சுவையின் பெயரால் ஆபாசமாகப் பதிலளிக்கும் கேள்வி பதில் ஆசிரியர்களும் மலிந்துகொண்டு வரும் இந்நாளில் பெற்றோர்க்கும், கல்விக்கூட ஆசிரியர்களுக்கும் உள்ள பொறுப்பு மகத்தானது. அவர்களும் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும்.
குழந்தைகளைப் பெறுவதோடும் படிக்க வைப்பதோடும் பெற்றோர்களின் கடமை முடிந்துவிடுவதில்லை. நற்போதனைகளின் மூலம், நல்ல குடிமக்களாகக் குழந்தைகளை வளர்த்து நாட்டுக்குத் தர இயலாதவர்கள் பெறாமலிருத்தலே மேல்.
ஜோதிர்லதா கிரிஜா
நன்றி : தினமணி

Friday, August 22, 2008

கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்?

ஔவை சொல்கிறாள்: "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே'. வங்கிகளில் கல்விக் கடன் வாங்குவதைப் பிச்சை என்று சொல்ல முடியாதுதான். ஆனால் மாணவர்களையும் பெற்றோர்களையும் பிச்சைக்காரர்களைப் போலத்தான் நடத்துகின்றன வங்கிகள்.
அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 8800 இடங்களும் சுயநிதிக் கல்லூரிகளில் 67500 இடங்களும் உள்ளன.
அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஆகிறது. ஆனால் சுயநிதி கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ. 75 ஆயிரம் தேவைப்படுகிறது. கல்விக்கடனைத் தேடி அலைபவர்களில் 90 சதவீதம் பேர் சுயநிதி கல்லூரிகளைத் தேர்வு செய்தவர்களே.
"ரூ. 4 லட்சம் வரை எந்தப் பிணையும் இல்லாமல் கல்விக் கடன் வழங்க வேண்டும்' என்பது மத்திய அரசின் நிபந்தனை. ஆனால் வங்கிகள் "காற்றில் பறக்கவிடும்' முதல் நிபந்தனை இதுதான்.
தொழிற்கல்வியை முடித்தவுடன் வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நிலையிலும்கூட, பிணை (ஸூரிடி) இல்லாமல் கல்விக்கடன் தர வங்கி மேலாளர்கள் எவரும் தயாராக இல்லை. எல்லாரும் முன்ஜாக்கிரதையுடன் இருக்கிறார்கள்.
வங்கிகள் கேட்கும் மற்ற "போனபைடு சர்டிபிகேட்', சம்பளச் சான்று போன்றவை கல்வித்துறையை வங்கிகள் புரிந்துகொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
போனபைடு சர்டிபிகேட் முதலாண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கும்போதுதான் கிடைக்கும். ஆனால் மாணவர்கள் அதற்கு முன்பாக ரூ.75 ஆயிரம் கட்ட வேண்டும். இதில் விடுதிக் கட்டணமும் சேர்ந்தால் குறைந்தது ரூ.1 லட்சமாக இருக்கும்.
வங்கிகள் கடன் தராத நிலையில், கந்துவட்டிக்கு கடன்வாங்கி கல்லூரியில் சேர்ந்துவிட்டு பின்னர் போனபைடு சர்டிபிகேட்டுடன் வங்கி வாசல்படியை மிதிக்க வேண்டும். கந்துவட்டி வாங்கி கல்லூரிக்குப் பணம் செலுத்திய கட்டண ரசீதுகளை ஏற்க மறுக்கின்றன வங்கிகள்.
அடுத்து சம்பளச் சான்றிதழ். மாத வருவாய் ரூ.12,000க்கு குறையாமல் இருந்தால் மட்டுமே கல்விக் கடன் வழங்க பரிசீலிக்கலாம் என்று வங்கிகள் தங்களுக்குள் ஒரு ரகசிய வரையறை வைத்துக்கொண்டுள்ளன.
மாதச்சம்பளம் ரூ.12,000க்கு இருக்க எல்லாரும் என்ன அரசு ஊழியர்களா? சாதாரண நிறுவனங்களில் மாதக்கூலியாகப் பணியாற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் பலர்.
சம்பளப் பதிவேட்டையே பார்த்திருக்காதவர்கள். சம்பளச் சான்று கிடைக்கவே வழியில்லை.
நிலைமை இப்படியாக இருக்கும்போது வங்கிகளின் அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்து கல்விக் கடன் பெறுவோர் யார் யார்? சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக இடஒதுக்கீட்டுக்கு சில "ல'கரங்களைக் கொடுத்துவிட்டு, கல்விக்கட்டணம் செலுத்தும் வசதி படைத்தோர் மட்டுமே!. இவர்களில் பலர் பணக்காரர்கள், பெரும்வியாபாரிகள், அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள்.
இவர்களுக்கு பிணை கையெழுத்துப் போட ஆட்கள் உண்டு. இவர்கள் கல்விக் கடன் பெறுவது பணம் இல்லாமையால் அல்ல. அரசு தரும் வரிச்சலுகையைப் பெறவும், தங்கள் சட்டவிரோதப் பணத்தை முறைப்படுத்திக்கொள்ளவும்தான்.
வங்கி அலுவலர்களுக்கு இவர்களைக் கண்டால் கொள்ளை மகிழ்ச்சி. ஏனென்றால் கல்விக்கடன் இலக்கை எட்ட முடிவதுடன் தங்களுக்குப் பிரச்னையும் வராது.
ஆனால், மிக நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் நடுத்தர வருவாய் பிரிவைச்சேர்ந்த மாணவன் என்றால் வங்கிகள் கடன் தராமல் இழுத்தடிக்கும்.
தொழிற்கல்வி பயிலும் அனைத்து மாணவனுக்கும் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் எந்த சான்று, பிணை இல்லாமல் கல்விக்கடன் தர முடியும். அதற்கு வங்கிகள் இஸ்லாமிய வங்கி நடைமுறைக்கு மாறியாக வேண்டும்குறைந்தபட்சம் கல்விக்கடனில் மட்டுமாகிலும்.
வட்டிக்குப் பணம் கொடுப்பதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஒருவரை முன்னேற்றுவதற்கு கடனுதவி அளிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது.
இந்தக் கடனுதவி வட்டியை எதிர்நோக்கியதாக இல்லாமல், லாபத்தில் பங்கு என்பதாக மாறுவதுதான் இஸ்லாமிய வங்கி முறையின் நுட்பம். இதை "முதரபா' அல்லது "லாபத்தில் பங்கிடுதல்' என்பதாக இஸ்லாமிய சட்டம் சொல்கிறது.
இஸ்லாமிய வங்கியில் தொழில் கடன் பெறுவோர், முதலில் தனது தொழில் திட்டத்தை, தனது திறமையை, சந்தை வாய்ப்புகளை வங்கியிடம் விவரிக்க வேண்டும்.
வங்கியின் தொழில் வல்லுநர் குழு இந்த புதிய தொழில்முயற்சியின் வெற்றிவாய்ப்பை ஆராயும். அவர்கள் இது முறையான, நஷ்டம் தராத தொழில்தான் என்று உறுதிகூறிய பிறகு கடன் கிடைக்கும். இந்த புதிய தொழிலில் வங்கி ஒரு பங்குதாரராக இருக்கும்.
தொழில் விருத்தியடைந்து, லாபம் பெருகும்போது, ஒரு பங்குதாரரை அவருக்கான தொகையைக் கொடுத்து வெட்டிவிடுவதைப்போல விலக்கிவிடலாம். நஷ்டம் வந்தால்? வங்கியின் வல்லுநர் குழுவின் கணிப்புகள் எந்த இடத்தில் தவறாகப் போனது என்பதை வங்கி ஆராயும். சரிசெய்யும் வாய்ப்பு இருந்தால் தானே களத்தில் இறங்கும். இல்லையானால், நஷ்டம் தொடங்கியபோது அத்தொழிலை நிறுத்திவிடும். கணிப்புகள் தவறானால் வல்லுநர் குழுவுக்குப் பெருத்த அவமானம் என்பதால், சரியான விதத்தில் கணிப்பார்கள்.
தொழில்கடனுக்குப் பொருந்தும் இந்த இஸ்ஸாமிய வங்கி நடைமுறை ஏன் தொழிற்கல்வி பயிலும் மாணவருக்குப் பொருந்தாது?
ஒரு மாணவரின் மதிப்பெண், அவரது அறிவுத்திறன், பேச்சுத்திறன், அவர் தேர்வு செய்துள்ள பாடப்பிரிவு, அதில் அவருக்கு உள்ள வேலைவாய்ப்பு அனைத்தையும் வங்கியின் வல்லுநர் குழு மதிப்பீடு செய்து, எந்தப் பிணையும் இல்லாமல் கல்விக் கடன் தர முடியும். லாபத்தில் பங்கீடு என்ற அதே முறையில், இவர்கள் சம்பாதிக்கத் தொடங்கியதும் இவர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு பகுதியை ஒப்பந்தப்படி பெறலாமே.
இதை செய்வதற்கு, ஒரு மாணவனை கணிக்கும் அறிவும் ஆற்றலும், துணிச்சலும் தேவை.
வாழ்க்கையில் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் மாதம்தோறும் சம்பளம் மட்டும் கைநிறைய எதிர்பார்க்கும் அதிகாரிகளே நிறைந்து வழியும் வங்கிகளில் ரிஸ்க் எடுப்பவர்கள் சிலர் மட்டுமே.
அதனால்,
பாத்திரம் அறிந்து பிச்சைபோடும் திறன் இல்லாத வங்கிகள் முன்பாக மாணவரும் பெற்றோரும் பிச்சைக்காரர்களாக நிற்கிறார்கள் கைகளை ஏந்தியபடி!
ஏழை சொல் அம்பலம் ஏறாது எனும்போது அதிகாரிகளிடம் செல்லுமா என்ன?
இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி

சிறு தொழிலுக்கு உதவிக்கரம்


சிறு தொழிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. சமீப காலம் வரை, இந்தியாவின் ஒட்டுமொத்தத் தொழில் உற்பத்தியில், கிட்டத்தட்ட 40 சதவீதம் சிறு தொழில்களின் பங்களிப்பே. அதேபோல் ஏற்றுமதியில் இதன் பங்கு 40 முதல் 45 சதவீதம் ஆகும். முக்கியமாக வேலைவாய்ப்புகள் அளிப்பதில் சிறு தொழில்களின் பங்களிப்பு 40 சதவீதத்துக்குக் குறையாமல் இருந்து வந்தது.
வேலைவாய்ப்புகள் தொடர்பாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ஒரு தொழில் முனைவோர் ரூ.10 லட்சம் வங்கிக்கடன் வாங்கி சிறு தொழில் தொடங்கினால் அதன் மூலம் 10 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி என்ற நிலை இருந்தது. தற்போது, நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பெரிய அளவில் முதல் போட்டு தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் சராசரியாக ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.
சிறு தொழில்களுக்கு இருந்த சிறப்புகள் பழம் கதையாகி வருகின்றன. சமீபத்தில் வெளிவந்துள்ள இந்திய தொழில் சங்கங்களின் சம்மேளனம் (Assocham) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை கவலை அளிக்கிறது.
ஏற்கெனவே நலிவுற்று இருந்த சிறு தொழில்கள் மேலும் சரிந்துள்ளதை அது படம் பிடித்துக் காட்டுகிறது. ஒட்டு மொத்த உற்பத்தியில், சிறு தொழில்களின் பங்கு 10 சதவீதம் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் 7 சதவீதம் குறைந்து விட்டது என அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதற்குக் காரணம், பெரிய தொழில் கூடங்களும் நடுத்தர தொழில் கூடங்களும் தங்களது உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருள்களின் தேவைகளை மலிவான இறக்குமதியின் மூலம் பூர்த்தி செய்து கொள்கின்றன என்பதுதான்.
அதிலும் குறிப்பாக தற்போது தலை தூக்கியுள்ள பொருளாதார மந்தநிலையின் காரணமாக, சிறு தொழில் நிறுவனங்களால் பெரும் மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் தேவைகளை சகாயமான விலையில் வழங்க முடியவில்லை. வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து வரும் சூழலில், சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்கூடங்களை நவீனமாக்கிக் கொள்ள இயலவில்லை. தொழில் நுட்பத்தை மேம்படுத்திக்கொள்ள தேவையான நிதி ஆதாரம் இல்லை. இதனால், சிறு தொழில்கள், அதிகரித்துவரும் போட்டிகளை எதிர்கொள்ளும் சக்தியை இழந்துவிட்டன.
""அசோசெம்'' தலைவர் சஜ்ஜன் ஜின்டால் கூற்றின் படி, கடந்த நிதி ஆண்டு இறுதியில் 44 லட்சமாக இருந்த சிறு தொழில் நிறுவனங்கள் தற்போது 40 லட்சமாகக் குறைந்து விட்டன. இத்துறையில் 2 கோடியே 38 லட்சம் பேர் பணியாற்றி வந்தார்கள். அவர்களில் 13 லட்சம் பேர் வேலை இழந்து விட்டனர். இவ்வளவும் கடந்த 6 மாதங்களில் நிகழ்ந்துள்ளன.
தொழிற் சங்கங்களின் சம்மேளனம் தரும் தகவல்கள், பிரச்னையின் விளிம்பை மட்டுமே தொட்டுள்ளன. முழுமையான பிரச்னை இன்னும் கடுமையானது என்பதே உண்மை.
200102ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் சிறு தொழில் பிரிவுகளில் மூன்றில் ஒரு பங்கு நலிவடைந்த நிலையில் இருக்கின்றன. இவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மூடப்படும் நிலையை எட்டிவிட்டன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், பஞ்சாப், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகியவை இதில் முக்கிய இடம் வகிக்கின்றன.
1970 முதல் 1990 களின் தொடக்கம் வரை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் சிறு தொழில்களுக்கு கடன் வழங்குவதை முன் உரிமை அடிப்படையில் செய்தன. 1992இல் இருந்து பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் என்ற பெயரில் வங்கிகள் பெரிய தொழில்களுக்கு கடன் வழங்குவதில் காட்டிய அக்கறையை சிறு தொழில்களுக்கு கடன் வழங்குவதில் காட்டவில்லை. காரணம் வங்கிகளின் லாப நோக்கத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. சிறு தொழில் பிரிவுகளுக்கு முன்னுரிமை கடன் வழங்கும் மரபு பின்னுக்குத் தள்ளப்பட்டது.
சிறு தொழில்களுக்கு வழங்கும் கடன் வாராக்கடனாக மாறிவிடுமோ என்று வங்கிகள் அஞ்சின. பின்னர் வந்த நாயக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் கடன் உத்திரவாத நிதி (Credit Guarantee Fund) போன்ற திட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
உலகமயமாக்கல் விளைவாக, இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அந்நியநாட்டுப் பொருள்கள் மலிவு விலையில் இந்திய சந்தையில் குவிக்கப்பட்டன.
இதனால் சிறு தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. அவற்றின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதில் முன் எப்போதும் இல்லாத அளவு கடும் போட்டி ஏற்பட்டது.
அதே நேரம், எண்ணற்ற சட்டதிட்டங்கள், ஆய்வு அதிகாரிகளின் கெடுபிடி ஆகியவை சிறு தொழில் நிறுவனங்களின் குரல்வளையை சுற்றி வளைக்கின்றன. இதனால், சிறு தொழில்கள் திணறுகின்றன.
மீண்டும் சிறு தொழில்கள் புத்துயிர் பெறவேண்டுமானால் பாரத ரிசர்வ் வங்கி, மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்.
சிறு தொழில்கள் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் கடனுதவியை உரிய நேரத்தில், போதிய அளவில் வங்கிகள் அளிப்பதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை வகுத்து செயல்படுத்த வேண்டும். வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது விவசாயம், சிறு தொழில் ஆகிய இரண்டும் முன்னுரிமை பெற்ற பிரிவுகளாகக் கருதப்படும் என நாடாளுமன்றத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்படி வங்கிகள் மீண்டும் செயல்பட்டாலே போதுமானது. வங்கிக் கடன்கள் மூலம்தான் சிறு தொழில்களுக்கு புதிய ரத்தம் பாய்ச்ச முடியும்.
மின்சாரம், தண்ணீர் ஆகிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதற்கு மாநில அரசுகள் முன்னுரிமை வழங்கவேண்டும். ஆய்வு அதிகாரிகளின் இடைவிடாத கெடுபிடிகள் குறைக்கப்பட வேண்டும்.
உற்பத்தியாகும் பொருள்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில், சர்வதேச தரத்துக்கு உற்பத்தி முறையையும், சாதனங்களையும் மாற்றிக்கொள்ள சிறு தொழில்கள் முன் வரவேண்டும். இதற்கு உதவியாக, ஜவுளித்துறைக்கு ஏற்கெனவே இருப்பதுபோல், தொழில்நுட்ப மேம்பாடு நிதி (Credit Guarantee Fund) போன்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு சிறு தொழில்களுக்கும் உருவாக்கலாம். இதன் மூலம் ஏற்றுமதிக்கும் ஊக்குவிப்பு தரமுடியும்.
சிறு தொழில்கள் நவீன இயந்திரங்கள், தளவாடங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தால், இறக்குமதி தீர்வையை மத்திய அரசு குறைத்து இறக்குமதி செய்ய உதவ வேண்டும்.
சிறு தொழில் உற்பத்திப் பொருள்களை மத்திய, மாநில அரசுத் துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும் முடிந்த அளவு வாங்குவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, அவை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். ஏற்கெனவே இருந்த இது போன்ற நடைமுறைகள் காலப்போக்கில் கைவிடப்பட்டன. பெரிய நிறுவனங்கள், சிறு தொழில் பிரிவுகளிலிருந்து கொள்முதல் செய்திடும் பொருள்களுக்கான பணத்தை பட்டுவாடா செய்வதற்கு பல மாதங்கள் ஆகின்றன. பொருள்களுக்கான தொகை குறிப்பிட்ட காலவரையறைக்குள் பட்டுவாடா செய்யப்படவேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே இதுபோன்ற நியதிகள் இருந்தன.
உதாரணமாக பெரிய தொழில் நிறுவனங்கள் அரசு வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதற்கு விண்ணப்பிக்கையில், மேற்கூறிய இனத்தில் நிலுவை ஏதும் இல்லை என உறுதி அளிக்க வேண்டும்.
ஆனால் இந்த நியதிகள் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. செயலளவில் நீர்த்துப்போய்விட்டன.
இதுபோல் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய விரிவான சிறுதொழில் கொள்கையை வகுத்து அதனை பாரத ரிசர்வ் வங்கி, மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு ஆகியவை முனைப்புடனும் இதய சுத்தியுடனும் செயல்படுத்தினால்தான் சிறு தொழில்கள் மீண்டும் தழைக்க முடியும்.

எஸ். கோபாலகிருஷ்ணன்
(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர்சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

நன்றி : தினமணி

Thursday, August 21, 2008

ஆசை..ஆசை...பேராசை...

புதிதாக ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்படும்போதும், ராஜிவ் காந்தி, இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களின்போதும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்கிற ஆசையும் வேகமும் நமது காங்கிரஸ்காரர்களுக்கு வரும். மேடையேறிப் பேசும்போது இருக்கும் அந்த ஆவேசமும் ஆசையும், அடுத்த நாள் காலையில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் விழாவில் பேசிய தலைவர்கள் அனைவரும் சேர்ந்து காமராஜ் அரங்கத்தில் வழக்கம்போல மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது, கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது போன்ற பேசிப்பேசிச் சலித்த விஷயங்களை மீண்டும் ஒருமுறை பேசி ஓய்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு, தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்வரை ஓயப்போவதில்லை என்று சூளுரை வேறு விடுத்திருக்கிறார்.
இதுவரை காமராஜ் ஆட்சி என்று சொன்னவர்கள் இப்போது காங்கிரஸ் ஆட்சி என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். காமராஜ் மீண்டும் உயிர்த்தெழுந்து வரமுடியாது என்பதையும், அப்படியே வந்தாலும் அவரைப் போன்ற நேர்மையான ஆட்சியாளர்களுக்கு இங்கே இடமில்லை என்பதையும் இப்போதாவது நமது தமிழக காங்கிரஸ்காரர்கள் உணர்ந்தார்களே, அதுவரை மகிழ்ச்சி.
பெருந்தலைவர் காமராஜ் மறைவுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ்காரர்கள் கோஷ்டிப் பூசலில் நேரத்தை வீணாக்காமல் ஒன்றுபட்டு செயல்பட்டிருந்தால், தமிழக அரசியலின் போக்கே மாறியிருக்கும். அப்போதைய திண்டுக்கல் மற்றும் கோவை இடைத்தேர்தல்களின் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, காங்கிரஸா அல்லது எம்.ஜி.ஆரின் அதிமுகவா என்கிற கேள்வி எழுந்து திமுக என்கிற கட்சி காணாமல் போயிருக்க வேண்டும். திமுக இப்போதும் பலமான அரசியல் சக்தியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் காங்கிரஸாரின் கையாலாகாத்தனம்தான் என்பது சிறு பிள்ளைகளுக்குக்கூடத் தெரியும்.
காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதைவிட தங்களை வளர்த்துக் கொள்வதில் முனைப்பு காட்டும் தலைவர்கள் ஒருபுறம். தமிழகத்தில் செல்வாக்குள்ள தலைவர் யாரும் வளர்ந்துவிடாமல் தலையாட்டி பொம்மைகள்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று விரும்பும் காங்கிரஸ் மேலிடம் இன்னொருபுறம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர்வது என்பது எப்படி சாத்தியம்?
தனிப்பட்ட முறையில் தமிழக மக்களுக்கு நேரு குடும்பத்தின் மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் மதிப்பும் மரியாதையும் இருப்பதை மறுப்பதற்கில்லை. 1984 பொதுத் தேர்தலில், ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். பெற்ற வாக்குகளைவிட, அந்தத் தொகுதியில் மக்களவைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட கே.ஆர். நடராஜன் பெற்ற வாக்குகள் அதிகம். காரணம், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்ந்த அணியின் வேட்பாளர்களைத்தான் மக்கள் விரும்பினார்கள்.
இப்போது அதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாக காங்கிரஸ் உருவாக வேண்டும் என்று நினைத்த மக்களின் எண்ணத்தில் மண்ணை வாரிப்போட்ட பெருமை காங்கிரஸ் தலைவர்களைத்தான் சாரும். திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பத்தோ, இருபதோ மக்களவை இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்று காங்கிரஸ் தலைமை மட்டும் அல்ல, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களும் விரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை.
தனித்துப் போட்டியிடுவது என்று 1977லும், 1989லும், 1998லும் முடிவெடுத்த காங்கிரஸ் கட்சி, பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றதுமே, மீண்டும் திமுக மற்றும் அதிமுகவின் தோளில் சவாரி செய்ய முடிவெடுத்ததே தவிர, தனித்து நின்று கட்சியை வளர்க்கவோ ஆட்சியைப் பிடிக்கவோ முயலவில்லை.
ஒரு காலத்தில் திமுகவானாலும் சரி, அதிமுகவானாலும் சரி ஆட்சி அமைக்க வேண்டுமானால் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால்தான் சாத்தியம் என்கிற நிலைமை இருந்தது. ஏறத்தாழ 15%க்கும் அதிகமான வாக்குகளுடன் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் செல்வாக்குடன் திகழும் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. தொடர்ந்து திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சாமரம் வீசி, தனது வாக்கு வங்கியைத் தேர்தலுக்குத் தேர்தல் சுருக்கிக் கொண்டுவிட்டிருக்கிறது காங்கிரஸ். தேமுதிகவின் வளர்ச்சி என்பதே காங்கிரஸ் வாக்கு வங்கியில் ஏற்பட்டிருக்கும் சரிவுக்கான அடையாளம்தான்.
""தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி'' என்றெல்லாம் பேசினால், வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக தங்களுக்கு அதிக இடங்களைத் தராதா என்று தங்கபாலு எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவானா?' என்கிற பழமொழி தங்கபாலுவுக்குத் தெரியுமோ என்னவோ, திமுக தலைவர் கருணாநிதிக்கு நிச்சயம் தெரியும்!
நன்றி : தினமணி

காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் யார்?

வரும் மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்றால் மன்மோகன் சிங்தான் பிரதமராவார் என வாரத்துக்கு இருமுறை தவறாமல் கூறி வருகிறார் சரத்பவார். மன்மோகன் மீது இவருக்கு என்ன கரிசனம்? எதற்காக இந்த விஷயத்தை மக்கள் கவனிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்? பொதுவாகவே பரபரப்புக்காக உதவாக்கரை அறிக்கைகளை விடக்கூடியவர் அல்ல சரத்பவார். அதனால், மன்மோகனை முன்னிறுத்த வேண்டும் என்ற அவரது பேச்சு வேறு சில அர்த்தங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதில் முக்கியமானது, "ராகுல் காந்தி பிரதமராவதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது' என்பதுதான்.
காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருப்பது மன்மோகன்தான் என்பதையும் சரத்பவாரின் பேச்சு கோடிட்டுக் காட்டுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவது சந்தேகத்துக்கிடமாக இருந்தபோது, பிரதமருக்கான வேட்பாளராக மன்மோகன் சிங்கை யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறு. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மன்மோகன் சிங்கின் உறுதியான நிலைப்பாட்டை பாராட்டியிருக்கின்றன. அதனால், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தலைவராக அவர் உருவெடுத்திருக்கிறார். இதை மக்கள் மனதில் பதியச் செய்வதுதான் சரத்பவாரின் நோக்கம்.
மன்மோகன் சிங்கை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதைத் தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழியே இப்போதைக்கு இல்லை. அறிவிக்காவிட்டாலும் அவர்தான் முன்னிலையில் இருக்கிறார். தாம் பிரதமர் பதவிக்கு வருவதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்று ராகுல் காந்தியே நினைக்கக்கூடும். அதையேதான் பவாரும் பிரதிபலிக்கிறார். தற்போதையை மக்களவை விட அடுத்த மக்களவையில் காங்கிரசின் மேலாண்மை குறைவாகவே இருக்கும்.
சிறு கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், அடுத்து அமையப்போகும் அரசுக்கு பூரண ஆயுள் இருக்கும் எனக் கூற முடியாது. இந்தச் சூழலில் தாமோ அல்லது ராகுல் காந்தியோ பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவதை சோனியா விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார் என்பதனாலேயே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிக இடங்களைப் பிடித்தால், மன்மோகன்தான் பிரதமராவார் என்று அர்த்தமல்ல. எப்படிப் பார்த்தாலும், இடதுசாரிகளின் உதவி இல்லாமல் "மதச்சார்பற்ற' அணி ஆட்சி அமைக்க முடியாது. இப்போது இருக்கும் எண்ணிக்கையிலிருந்து குறைந்தது 30,40 இடங்களைத்தான் இடதுசாரிகள் பெறமுடிந்தாலும், ஆட்சியமைப்பதில் அவர்களது ஆதரவு கட்டாயத் தேவையாக இருக்கும். மன்மோகன் சிங் பிரதமராவதை இடதுசாரிகள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சி வேறொருவரைப் பிரதமராக்க வேண்டியிருக்கும். இன்னொரு பக்கம், மாநிலக் கட்சிகளையும் இடதுசாரிகளையும் கொண்ட மூன்றாவது அணியின் தலைமையில் ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க முடியாது. பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்பதற்காகவே அந்த அரசை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், மாயாவதி, சரத் பவார், முலாயம் சிங், நிதீஷ் குமார், தேவ கௌடா, ஐ.கே. குஜ்ரால் உள்பட மிகப்பலர் பிரதமர் பதவிக்குப் போட்டியிடக்கூடும்.
மாநிலக் கட்சிகளை வழிநடத்தும் அளவுக்குத் திறன் வாய்ந்த தலைவராக மாயாவதி உருவெடுத்திருக்கிறார். மூன்றாவது அணியை மறுநிர்மாணம் செய்து, புதிய பெயரிட்டு அதை வழிநடத்தும் பொறுப்பையும் மாயாவதி ஏற்றுக்கொள்வார். மாநிலக் கட்சிகளை மூன்றாவது அணிக்கு அழைத்து வரும் பணியைச் செய்ய சந்திரபாபு நாயுடு இருக்கிறார். முடிந்தால், ஜெயலலிதாவுடனும் அவர் பேசுவார்.
மாயாவதி பிரதமராவதற்கு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இந்த அணி வெற்றி பெற்றால், தேர்தலுக்குப் பிறகு பாஜகவை முடக்குவதற்காக மாயாவதியை ஆதரிக்க வேண்டிய நிலை காங்கிரஸுக்குக்கூட ஏற்படலாம். மாயாவதி, சரத் பவார் ஆகிய இருவரில் ஒருவரை தேர்ந்தெடுத்தே ஆக வேண்டுமென்றால், தமக்கு யார் அதிக தொந்தரவு தர மாட்டார்கள் என்பதை சோனியா காந்தி சிந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் பவாருக்குத்தான் அதிக வாய்ப்பு. நிர்வாகத் திறன், மக்கள் ஆதரவு, இடதுசாரிகளிடம் நற்பெயர் ஆகியவற்றால் பவாருக்கு வாய்ப்புக் கிடைக்கும். எனினும், அவரது கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கின்றன என்பதைப் பொருத்துத்தான், அவருக்குப் பிரதமர் பதவி கிடைப்பது பற்றிய கணக்குகள் செல்லுபடியாகும்.
அடுத்தது முலாயம் சிங். அவர் பிரதமராவதற்குரிய சூழல் ஏற்பட்டால், காங்கிரஸ் குறுக்கே நிற்காது. ஆனால், முலாயம் சிங்கும் சமாஜவாதி கட்சியினரும் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸை முற்றிலும் ஒழித்து விடுவார்கள் என்ற சந்தேகம் சோனியாவுக்கு எப்போதுமே இருந்து வருகிறது. அது முலாயமின் வாய்ப்பைக் கொஞ்சம் குறைக்கும்.
மாநிலத் தலைவரில் யாராவது ஒருவரைப் பிரதமராக்கும் சூழ்நிலை வந்தால், சோனியா காந்தியின் தேர்வு லாலு பிரசாத்தாகத்தான் இருக்கும். ஆயினும், வரும் தேர்தலில் அவரது கட்சிக்கு அதிக இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்பதால் பிரதமர் பதவிக்கு அவர் பெயர் பரிசீலிக்கப்படுவது சந்தேகம்தான்.
நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி