Tuesday, September 23, 2008

அமெரிக்காவைப் பாருங்கள்...

அமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்று அந்த நாட்டின் பொருளாதார நிபுணர்கள் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா மட்டுமல்ல, உலக சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு, சுமார் 700 பில்யன் டாலர்களை (அடேயப்பா, 70,000 கோடி டாலர்கள்) திவாலாக இருக்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வாரி வழங்கி, தனது ஒட்டுமொத்தப் பொருளாதாரமே தகர்ந்து விடாமல் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அமெரிக்காவின் நிதிநிலைமை ஆட்டம் காணும் அளவுக்கு அப்படி என்ன பொருளாதார நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டது? எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத சந்தைப் பொருளாதாரம் சந்திக்க நேரும் விபத்தைத்தான் இப்போது அமெரிக்காவும் சந்தித்துள்ளது. உலகிற்கெல்லாம் பொருளாதார நடவடிக்கையில் அரசின் தலையீடு கிஞ்சித்தும் கூடாது என்று உபதேசம் செய்தவர்கள் இப்போது அரசின் தலையீடு இல்லாமல் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க முடியாது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

1990-ன் பிற்பகுதியில், அமெரிக்காவில் அனைவருக்கும் குடியிருக்க வீடு வேண்டும் என்கிற முனைப்புடன் அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பெருமளவில் குறைந்த வட்டிக்கு வீட்டுக்கடனை வாரி வழங்கத் தொடங்கின. அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் நிறுவனங்களின் வளர்ச்சிதான் இப்படியொரு திட்டத்தின் பின்னணியாக இருந்தது என்பதைச் சொல்த் தெரிய வேண்டியதில்லை.

இப்போது, இந்தியாவில் யார், இன்னர் என்று கேள்வி இல்லாமல் வங்கிகள் கடன் அட்டைகளையும், வாகனக் கடன்களையும் கொடுப்பதுபோல, அமெரிக்காவிலும் தராதரம் பார்க்காமல் எல்லோருக்கும் வீட்டுக்கடன் வழங்கும் திட்டத்தில் வங்கிகள் இறங்கின. என்ன வேலை, என்ன சம்பளம், என்ன பின்னணி என்பதைக் கருத்தில்கொள்ளாமல் வாங்க இருக்கும் வீடுகளையே அடமானமாக ஏற்றுக்கொண்டு அதிகரித்த வட்டிக்குக் கடன்கள் தரப்பட்டன.

கேட்டதும் கடன் கிடைக்கிறது எனும்போது வீடு வாங்கும் ஆசை அனைவருக்கும் ஏற்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ரியல் எஸ்டேட் தொழில் அபரிமிதமான வளர்ச்சியும், வீடுகளின் விலைகளில் எண்ணிப் பார்க்க முடியாத உயர்வும் ஏற்பட்டன. இந்தச் செயற்கையான வளர்ச்சியை எத்தனை காலம் தக்க வைக்க முடியும்? ஒரு கட்டத்தில் தேவையும் குறைந்து விலையும் சரியத் தொடங்கியது. வேறு காரணங்களால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிறு பின்னடைவு, அதிகரித்த வேலைஇழப்புக்கு வழிகோயது. பலருடைய வீட்டுக்கடன்களின் தவணைகள் அடைக்கப்படாத நிலைமை ஏற்பட்டது. அந்தக் குடியிருப்புகளை கடன் கொடுத்த வங்கிகள் கையகப்படுத்தினவே தவிர, அவைகளை விற்றுப் பணமாக்க முடியவில்லை. அவற்றை வாங்க ஆள் இல்லை.

வங்கிகள் தாங்கள் விநியோகம் செய்திருந்த கடன்களையும், அதற்காக அடமானமாகப் பெற்றிருந்த வீடுகளின் பத்திரங்களையும் காட்டி பெரிய நிதிநிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்றிருந்தன. தவணைப் பணம் தடைப்பட்டு, அடமானமாகப் பெற்ற வீடுகளையும் விற்க முடியாத நிலையில் வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஆட்டம் காணத் தொடங்கின. விளைவு? இந்த வங்கிகளில் வீட்டுக் கடனுக்காக முதலீடு செய்திருந்த நிதி நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கின.

இதன் தொடர்விளைவாக இந்த நிதி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருந்த பொதுமக்கள், தங்களது முதலீடு மதிப்பிழந்ததால் நஷ்டமடைந்தனர். இது அமெரிக்கா முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. பங்குச்சந்தை சார்ந்த பொருளாதாரத்தின் மிகப்பெரிய சாபக்கேடு இது என்பதற்கு அமெரிக்கா இப்போது சந்திக்கும் பொருளாதார நெருக்கடி ஓர் எடுத்துக்காட்டு.

உலகமெல்லாம் பெயரும் பெருமையும் பேசிய பியர் ஸ்டேர்ன்ஸ், லெஹ்மான் பிரதர்ஸ், ஏ.ஐ.ஜி. நிறுவனங்களில் தொடங்கி சிறிய மற்றும் அமெரிக்காவில் மட்டுமே செயல்படும் பல நிதி நிறுவனங்களும் வாராக்கடனக மாறிய வீட்டுக் கடன்களால் பாதிக்கப்பட்டு திவாலாகும் நிலைமை. அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேக்கம் ஏற்பட்டு விடாமல் தடுக்க, அமெரிக்க மத்திய வங்கி முதல் வட்டிவிகிதத்தைக் குறைத்தது.

பிரச்னை தீர்ந்தது என்று கருதும் வேளையில் ஒன்றன்பின் ஒன்றாக நிதி நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கியதும், அரசு அந்த நிறுவனங்களின் உதவிக்கு ஓட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிதி நிறுவனங்களில் கண்ணை மூடிக்கொண்டு கடன் வழங்கும் நமது ஐசிஐசிஐ போன்ற வங்கிகள், தாங்கள் உலகப் பொருளாதாரத்தில் ஒன்றியவர்கள் என்று காட்டிக்கொள்ள முதலீடு செய்துவிட்டு இப்போது முழிக்கின்றன. உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இப்போது அமெரிக்கா சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியும், அதனல் உலகின் பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் தொடர் விளைவுகளும் உதாரணங்கள்.

இந்தியாவிலும் கடன்களை வாரி வழங்கி பொருளாதார வளர்ச்சியை மிகைப்படுத்திக் காட்டும் முயற்சி நடக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அமெரிக்காவின் அவலத்திருந்து நம்மவர்கள் பாடம் படித்தால் நல்லது!

Thursday, September 18, 2008

புரிதல் இருந்தால் சாதிக்கலாம்!

மாணவர்களுக்கு கல்வி சுமையாவதும், சுவையாவதும் அவர்களுக்கு அமையும் ஆசிரியர்களைப் பொருத்தே நடக்கிறது. மாணவர்கள் நெறிப்படுவதும் தரமான கல்வியால்தான். ஆனால் எத்தனை பேருக்கு வாய்க்கிறது தரமான கல்வி?
"பணமிருந்தால் பவிசாய்ப் படிக்கலாம்' என்ற நிலையில் தான் இன்றைய கல்வி முறை இருக்கிறது. ஒன்றாம் வகுப்பிலிருந்தே கணினி முதல் நீச்சல் வரை, உயர்தரப் பள்ளிகளில் கற்றுத்தரப்படுகிறது. இதற்குக் கட்டணமும் லகரங்களில் வசூலிக்கப்படுகிறது என்பது வேறு விஷயம். அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களுடன் இயங்கி வரும் இதுபோன்ற பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி, குழந்தைகளுக்குக்கூட பள்ளியில் மாலை நேர டியூசன் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
ஆனால், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களின் குழந்தைகள் படித்து வரும் அரசுப் பள்ளிகள் இன்றும் பரிதாபகரமான நிலையிலேயே இயங்கி வருகின்றன. சத்துணவு என்ற பெயரில் வழங்கப்படும் மதிய உணவிலாகட்டும், சுகாதாரத்தைப் பேணவேண்டிய கழிப்பிடமாகட்டும் எல்லாமே இங்கு பிரச்னைதான். இடிந்து விழும் நிலையிலான மேற்கூரை; ஆடிக் காற்றுக்கு அடியோடு சாய்ந்து விடுமோ என அச்சுறுத்தும் பக்கச் சுவர்கள்; மழை பெய்தால் மரத்தடிக் கல்வி; சுற்றுச்சுவர் இல்லாமல் பாம்பு, பல்லிகள் பள்ளிக்குள் படையெடுப்பு என மாணவர்கள் சந்திக்கும் துயரப் பட்டியல் நீளும்.
இது எல்லாவற்றையும் விட முக்கியம் ஆசிரியர்கள். அனேகப் பள்ளிகள் இன்றும் ஓராசிரியர் பள்ளிகளாகவே இயங்கிவருவது துரதிஷ்டவசமானது. இருக்கும் ஒரு ஆசிரியரும் திடீரென்று முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்தால், பள்ளிக்கு வரும் குழந்தைகள் வெளியில் காத்திருந்து விட்டு திரும்பிச் செல்லவேண்டிய நிலை.
கிராமப் பகுதி, நகர் பகுதி என பாகுபாடில்லாமல் பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது பொதுவான விஷயமாகிவிட்டது. இதனால் பள்ளியில் பாதி நேரம் மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் நேரத்தைப் போக்க வேண்டியுள்ளது; அல்லது இரண்டு, மூன்று வகுப்பு மாணவர்கள் ஒன்றாக அமர வைத்து பாடம் போதிக்கப்படுகிறது. சிறிய வகுப்பறைகளில் அதிகளவிலான மாணவர்கள் அடைக்கப்படுகையில் அவர்கள் பாடத்தை கவனிப்பதைவிடவும் சேஷ்டைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபடுவதுதான் அதிகம்.
சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை டீ வாங்கவும், போண்டா வாங்கவும் அனுப்புவதாக புகார்கள் அடிக்கடி வருவது உண்டு. கிராமப்புறங்களில் வீட்டு வேலைகளைக் கூட ஆசிரியர்கள் செய்ய வைப்பதாக மாணவர்கள் புலம்புவதும் உண்டு. இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் காட்டும் "ஒத்துழைப்பை' வைத்துத்தான் அவர்களுக்கு "முக்கியத்துவம்' காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பணி நேரத்தில் பள்ளியிலேயே சீட்டுப் பிடிப்பது முதல் புடவை வியாபாரம் வரை செய்யும் பொறுப்பான(?) சில ஆசிரியப் பெருந்தகைகளையும் இங்கு பார்க்கலாம். தனியார் பள்ளிகள் போல் இங்கு ஆசிரியர்கள் வேலைப் பளுவால் கசக்கிப் பிழியப்படுவதில்லை என்பது ஒரு காரணமாய் இருக்கலாம்.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு "ஆல் பாஸ்' முறை அமலானது. இதனால், சில ஆசிரியர்களுக்கு வேலை இன்னும் சுலபமாகிவிட்டது எனலாம். ஆசிரியர்கள் வகுப்புக்கே வருவதில்லை என கல்லூரி மாணவர்கள் போராடிய நிலை மாறி, இன்று பள்ளி மாணவர்களும் "நல்ல ஆசிரியர்கள்' கேட்டு நடுத்தெருவில் இறங்கி போராட ஆரம்பித்து விட்டனர்.
அண்மையில்..கோவையில் ஒரு அரசுப் பள்ளியில் ஆங்கிலப் பாடம் நடத்தும் ஆசிரியர் வகுப்புக்கே வருவதில்லை என்றும், வந்தாலும் பாடம் நடத்துவதில்லை என்றும் கூறி பள்ளிக்கு வெளியில் வந்து மாணவர்கள் போராடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. உடனடி நடவடிக்கை எடுப்பதாக கல்வி அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. அதேபோல் மற்றொரு பள்ளியிலும், "ஆசிரியைகள் சரிவர பாடம் நடத்துவதில்லை; அவர்களை மாற்றவேண்டும்' என்று மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனுக் கொடுத்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பது அதிகரித்து வருவது ஆபத்தானது. "எஸ்எஸ்ஏ' எனப்படும் "சர்வ சிக்ஷ அபியான்' திட்டம் மூலம் பள்ளி இடைநிற்றல் மாணவர்களை திரும்பவும் பள்ளியில் சேர்க்க முயற்சிக்கப்படுகிறது. குறிப்பாக, கிராமப் புறங்களில் மிகுந்த அக்கறையுடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற திட்டங்கள் வெற்றி பெறுவது சாத்தியம். ஆனால், திரும்பவும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை வைத்தே இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து தீர்மானிக்கலாம்.
எனவே, ஆசிரியர்கள் விழிப்புடன் செயல்படாத பட்சத்தில் மாணவர்கள் திசைமாறும் நிலை நிச்சயம் ஏற்படும். அவர்களது எதிர்காலத்தையே இது கேள்விக்குறியாக்கும். ஆசிரியர்மாணவர் புரிதல் இருந்தால் மட்டுமே சாதனைகள் சாத்தியமாகும்.
கோவை ஜீவா
நன்றி : தினமணி

Tuesday, September 16, 2008

வீடுதோறும் கஞ்சித்தொட்டி

அன்புப் பேரன் அநிருத்,
இந்தக் கடிதத்தை உன் தந்தை முகிலனுக்கு எழுத நினைத்தேன். அதில் பயனில்லை என்பதால் உனக்கு எழுதுகிறேன். உன் பெயரில் சம்ஸ்கிருதம் இருந்தாலும், உன் மரபீனியில் தமிழ் உணர்வு இருக்கவே செய்யும்.
ஆகவேதான். அரசின் உயர்அலுவலரின் மகனாகிய, இருசக்கர வாகனத்தில் பறக்கும் உனக்கு, ஏழைத் தமிழன் பற்றிச் சொல்லவே இக்கடிதம்.
தமிழகம் முழுவதும் எழும் வாழ்த்தொலிகள் உன் காதுகளையும் எட்டியிருக்கும். ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. என் தலைவர் அண்ணாவின் நூற்றாண்டு விழா அறிவிப்பு இது. ஆனால் எனக்கு இது மகிழ்ச்சி அளிக்கவில்லை.
மின்தொடர் வண்டிகளிலும், பேருந்துகளிலும் விற்கப்படும் மிகச்சிறிய வேர்கடலைப் பொட்டலங்கள்கூட ரூ.2 என்றாகிவிட்டது. கட்டணக் கழிப்பறைகளில்கூட ரூ.2 கட்டணம் ஒரு ரூபாய் என்பதற்கு இன்றைய உலகில் மதிப்பே இல்லை. ஆனால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ஏன்? இது இலவசம் என்று சொல்லாமல் கொடுப்பதற்கு ஒப்பானது.
இதில் என்ன தவறு? வயிற்றுக்குச் சோறிட வேண்டும் என்பதுதானே பாரதியின் வரிகள் என்று கேட்பாய். அநிருத், உன் இளமனதுக்கு உலக இயல்புகள் தெரியா.
சமூகவியல் நூல்கள் எழுதிய அமெரிக்க அறிஞனின் நூல் "நடுத்தர மக்களின் துரோகம்' (Betrayal of Middle class). அந்த நூல் சொல்லும் விஷயம் இதுதான். மக்களாட்சியில் பத்து அல்லது பதினைந்து விழுக்காடு மக்கள் உன் தந்தையைப் போல, வசதியானவர்கள். அவர்களுக்குப் பணம் மட்டுமே குறிக்கோள். அதனால் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள். அடுத்த நிலையில் உள்ள நடுத்தர மக்கள் கல்வியறிவு, ஓரளவு நல்ல வாழ்க்கை பெற்றிருந்தபோதிலும், அரசியலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தி படைத்திருந்தாலும் அவர்கள் கோழைகள். எதிர்க்கவே மாட்டார்கள். வீட்டுக்குள் இருந்தபடியே திட்டிக்கொண்டிருப்பார்கள். வாய்ச்சொல் வீரர்கள். அதிலும் இரு கட்சியாகப் பிரிந்து கிடப்பார்கள். நன்றி சிறுதும் இல்லாதவர்கள்.
ஆனால், தெருவில் இறங்கித் திட்டவும், கேள்வி கேட்கவும் துணிச்சல் உள்ளவன் ஏழை மட்டுமே. அரசனின் அம்மணத்தை எள்ளி நகையாடும் சிறுகுழந்தை போன்றவன் ஏழை. வெளிப்படையான மனிதன். நன்றி நினைப்பவன். உப்பிட்டவரை அது உள்ளவரை நினைப்பவன். ஆகவேதான் அவன் கேள்வி கேட்காமலும், வீதியில் இறங்காமலும் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறது அரசு. அவன் நன்றிக்கடன் பட்டவனாக, வாக்களிக்கும் நேரத்தில் அவன் மனச்சான்றை நன்றியால் மயங்கும்படி பார்த்துக்கொள்கிறது அரசு..
காய்கறி விலை உயர்கிறது. இன்றியமையா உணவுப்பொருள்களின் விலை உயர்கிறது. வாகன எரிபொருள் விலை உயர்கிறது. கல்விக் கட்டணம் லட்ச ரூபாய்க்கு மேலாகச் செல்கிறது. ஆனால் அரசுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. ஏனென்றால் இவற்றால் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான். உன் தந்தையைப் போன்று அரசின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு இந்த விலையேற்றம் கவலையளிக்காது. விலையேற்றம் 12 விழுக்காடு உயர்ந்தால் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் 40 விழுக்காடு உயருமெனில், அதிலும் அவர்கள் அரசு இயந்திரத்தின் அங்கமாக இருப்பதால், அவர்களுக்கு இதுபற்றிய கவலை இல்லை.
ஆனால், விலையேற்றத்தின் வலி ஏழையைத் தொட்டுவிடக்கூடாது. ஆகவே அவனுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி. அதாவது இலவசம் என்று சொல்லும் விலையில்!.
பொழுதுபோக்குக்கு வண்ணத் தொலைக்காட்சி. அடுத்து அரசு கேபிள் இலவசம். ஏழைக் குடிசைக்கு மின்சாரம் இலவசம். எரிவாயு இணைப்பு போல இதையும் இலவசமாக கொடுக்க இயலாதா? என்று நீ கேட்பாய். இயலாது. ஏனென்றால், உணவுப்பொருளை இலவசமாக பெறுவது பிச்சை என்ற உணர்வு இன்றும்கூட தமிழனிடம் மரத்துப்போகாமல் உள்ளது. கோயில் விழாக்களைத் தவிர (திருக்கோயில் அன்னதான திட்டத்தில்கூட, சாப்பிடும் பக்தர்கள் எத்தனைப் பேர்? போய்ப் பார்) மற்ற இடங்களில் இலவச உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தால் வாங்குதற்கு ஆள் இருக்காது. ஆகவேதான் இலவசம் போல, ஆனால் ஒரு ரூபாய் விலையில்!
அனைவருக்கும் பொதுவாக கஞ்சித் தொட்டி வைத்தால் ஏழைகள் பிச்சையெடுக்கும் அவமானம் கருதி வாங்கத் தயங்குவார்கள். அதனால் வீடுதோறும் கஞ்சித்தொட்டி என்கிற அளவில் இந்த "ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்'த் திட்டம்.
அநிருத், ஏழையின் தேவை மிகக் குறைவு. குடும்பத்துக்கான சோறு. அதற்கு ஊறு நேராமல் பார்த்துக்கொள்பவர் யாரு என்றாலும் அவனுக்கு அவர் நல்லவரு. "அளித்தல் அரசின் கடனே; அந்த அரசுக்கே வாக்களித்தல் நன்றிக்கடனே! இது அரசியல்நானூறு சொல்லும் பாடம்.
வயிற்றுக்கு சோறிட வேண்டும். ஆனால் அந்த சோறு கிடைக்கும் வழியைச் சொல்லி, உழைப்பைப் பெற்றுத்தான் தரவேண்டும். உணவு இலவசம் என்றால், ஒரு சமூகம் தன்மானத்தை இழக்கும். உழைப்பை மறக்கும் சமூகம் துன்பத்தை எதிர்கொள்கிறது என்பதே உலக வரலாறு.
படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றையும் செய்பவன் இறைவன் என்கிறார்கள். மக்களாட்சியில் இதைச் செய்யக்கூடியது தேர்தல். அதாவது எலெக்ஷன்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது அண்ணா சொன்னது. ஆனால் ஏழையின் சிரிப்பில் "எலக்ஷனை' காண்போம் என்றால்...
உனக்கு தமிழ் படிப்பது கடினமாகத்தான் இருக்கும். இருந்தாலும் இந்த தாத்தாவுக்காக இந்தக் கடிதத்தை முழுதும் படிப்பாய் என நம்புகிறேன்.
அன்புடன்,
நெடுஞ்சேரலாதன்.
கட்டுரையாளர் :இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி

Monday, September 15, 2008

நீதியே நிலைபிறழ்ந்தால்...?

உத்தரப்பிரதேசம் காஜியாபாதில் நான்காம் நிலை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருந்து ரூ.23 கோடி ரூபாயைச் சட்டவிரோதமாகக் கையாடிய ஊழலில், நீதித்துறையின் மூன்றடுக்கு வரிசை நீதிபதிகளுக்குப் பங்கிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.
பஞ்சாபில் அதைவிட வேடிக்கை; ஒரு நீதிபதிக்கு லஞ்சமாக அனுப்பப்பட்ட பணம் தவறுதலாக, அதே பெயரை உடைய இன்னொரு நீதிபதியிடம் தரப்பட, விஷயம் வெளிப்பட்டு பத்திரிகைகளில் வந்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த கே.கே. சபர்வால் தனது சொந்த மகன்கள் நலனை உத்தேசித்துத் தீர்ப்பு வழங்கினார் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே, அதற்கு என்ன சொல்ல?
சௌமித்ர சென், கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி. அவர் வழக்கறிஞராக இருந்தபோது ஒரு வழக்கில் நீதிமன்றத்தின் சார்பில் பெறப்பட்ட பணத்தைத் தனது சொந்த வங்கிக் கணக்கில் போட்டு மோசடி செய்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் 2006ம் ஆண்டு அந்தப் பணத்தைக் குறைந்த வட்டியுடன் திருப்பிச் செலுத்தியிருக்கிறார் சௌமித்ர சென். இதுபற்றிய விசாரணைகள் நடந்ததும், ""விருப்ப ஓய்வு பெறுங்கள் அல்லது ராஜிநாமா செய்துவிடுங்கள்'' என்று அவரிடம் கூறப்பட்டது. அவரோ இதில் எதையும் செய்ய மறுத்துவிட்டார். விடாப்பிடியாக, நீதிபதியாகத் தொடரத்தான் செய்வேன் என்று அடம்பிடிக்கும் அவரை என்ன செய்வது? அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரையே செய்திருக்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி.
ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. குறைந்தபட்சம் 100 மக்களவை உறுப்பினர்களோ அல்லது 50 மாநிலங்களவை உறுப்பினர்களோ, ""சம்பந்தப்பட்ட நீதிபதி பதவியிறக்கம் செய்யப்பட வேண்டும்'' என்று குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்க வேண்டும். இரு அவைகளிலும் தனித்தனியே பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்தால் மட்டும் போதாது; மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அவையில் இருந்தாக வேண்டும். 1968ம் ஆண்டு நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தின்படி ஒருவரைப் பதவி நீக்குவது என்பது உடனடியாக நடக்கக்கூடிய விஷயமல்ல என்பது நீதிபதி சௌமித்ர சென்னுக்குத் தெரியாதா என்ன?
தனது நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை சந்திப்பதைக்கூடத் தவிர்த்த நீதிபதிகள் இருந்த காலம் ஒன்று இருந்தது. இவ்வளவு இழிவான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியும் நீதிபதி பதவியிலிருந்து விலக மறுக்கும் சௌமித்ர சென் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இந்தக் காலம். இதற்கு முக்கியமான காரணம், நீதிபதிகள் தேர்வில் நடக்கும் முறைகேடுகள்தான்.
நீதிபதிகள் அந்தப் பதவியில் நியமிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களுடைய பின்னணி பற்றிய முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு, அப்பழுக்கில்லாதவர் என்று உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அவை எதுவும் பின்பற்றப்படுவதே இல்லை.
2006ல் நீதிபதிகள் விசாரணைச் சட்டம் பற்றிய முன்வடிவு தயாரிக்கப்பட்டு தூங்குகிறது. பதவியில் இருக்கும் நீதிபதிகளைக் கொண்ட தேசிய நீதிக்குழுமம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், தவறு நிரூபிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் ஆலோசனையைக் குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் அதிகாரத்தை அதற்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் விசாரணைச்சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏனோ அந்தச் சட்டம் இப்போதும் முன்வரைவாகவே தொடர்கிறது.
இந்திய ஜனநாயகத்தில் எத்தனை எத்தனையோ குறைகள் இருந்தாலும், நீதித்துறை ஓரளவுக்கு நேர்மையாக இருப்பதால்தான் அந்தக் குறைகளை மீறி நாம் தொடர்கிறோம். நீதித்துறை களங்கப்படுவதும், அதன் மீது மரியாதை குறைவதும் ஒரு நல்ல ஜனநாயகத்தின் அறிகுறி அல்ல. தவறுகள் வெளியில் தெரியக்கூடாது என்று மூடிமறைப்பதும், யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று தடுப்பதும், தவறுகள் அதிகரிக்கத்தான் உதவும்.
""தர்மோ ரக்ஷதி ரக்ஷித:'' என்று வடமொழியில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது, நாம் தர்மத்தைக் காப்பாற்றினால், தர்மம் நம்மைக் காப்பாற்றும் என்று அதற்குப் பொருள். நமக்கு நீதி வழங்கும் நீதித்துறையை நாம் பாதுகாக்கத் தயார்; நீதியே நிலை பிறழ்ந்தால் நம்மை யார் பாதுகாப்பது?
நன்றி : தினமணி

முதியோர் இல்லம் எனும் சமூகச் சீரழிவு!

மனித சமுதாயத்தின் மத்தியில் அன்பு, பாசம், அரவணைப்பு, சகிப்புத்தன்மை போன்ற உயரிய குணநலன்கள் மெதுவாகத் தேய்ந்து வருகிறது. உறவுச் சங்கிலியை அறுத்து உன்னதமான வாழ்க்கையின் பொருள் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறான் மனிதன்.
சுயநலம், சொந்த சௌகரியம் ஆகிய குணாதிசயங்கள் மனித சமுதாயத்தில் நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது.
ஒவ்வொரு உயிரும் முதுமை என்ற மைல்கல்லை கடந்தே தீர வேண்டும். இதிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது என்பதை ஏனோ இந்த மனிதன் உணருவதில்லை.
முதுமை அடைந்துவிட்டால் அவர்களை எதற்குமே உபயோகப்படாத பொருளாகக் கருதி, வீட்டில் பயன்படாத குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவது போல் ஓரங்கட்டிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற இழிவான, மனிதாபிமானமற்ற செயல் மேலை நாடுகளைவிட, உறவு முறையின் உன்னதத்தை உலகுக்கே உணர்த்திய இந்தியாவில் சர்வசாதாரண நிகழ்வாகிப் போனதுதான் இதயத்தில் ஈட்டியாய் குத்துகிறது. நாடுமுழுவதும் காளான்களாய் முளைத்திருக்கும் முதியோர் இல்லங்களே இதற்குச் சாட்சி.
2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் முதியோர்கள் எண்ணிக்கை 7 கோடியே 62 லட்சம். இதுவே அடுத்த 25 ஆண்டுகளில் 17 கோடியாக உயரும் என்பது சமூக நீதித் துறையின் கணிப்பு. தற்போதைய மொத்த முதியோரில் பாதிக்கு மேற்பட்டோர் தங்களது குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடைந்து, பாசத்துக்காக ஏங்கி, சோகமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் 33 சதவீதம் பேர் தங்களது வாழ்க்கைத் துணையை பிரிந்து வாழ்கிறார்கள்.
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட இன்னும் எத்தனையோ பெற்றோர்கள் விழிகளில் கண்ணீர் வழிய, விதியை நினைத்து, பித்துப் பிடித்தாற்போல் வீதிகளில் உலா வருவதைக் கண்கூடாய் காணும் போது, "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்' என்ற புரட்சிக் கவியின் வரிகள்தான் நெஞ்சில் தீப்பொறியாய் கிளம்புகிறது.
இன்று இளையவன், நாளைய முதியவன். இன்று ஒருவருக்கு பிள்ளை; நாளை மற்றொருவருக்கு தந்தை. இதுதான் மாறாத வாழ்வியல் விதி. இதை மறந்து மனம் போன போக்கிலே வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தால் நாம் செய்யும் தவறுக்கு நமது வருங்கால சந்ததி அளிக்கும் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது.
முதியோருக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிவருகிறது மத்திய, மாநில அரசுகள். இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், முதியோருக்கு தலா ரூ.400 வீதம் மாதா மாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் பாதியாகப் பகிர்ந்து அளிக்கின்றன. முதியோர் ஓய்வூதியத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு ரூ.703.39 கோடியில் இருந்து ரூ.836.65 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுதவிர்த்து, நாடுமுழுவதும் கூடுதலான முதியோர் இல்லங்களை நிறுவுதல், சட்டரீதியாக முதியோருக்கு பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இது ஒருவகையில் மகிழ்ச்சி அளித்தாலும், முதியோர் இல்ல அதிகரிப்பு என்பது முதியோர் புறக்கணிப்பு அதிகரிப்பதைத்தான் காட்டுகிறது.
முதியோர்கள் வீட்டின் விலைமதிக்க முடியாத சொத்துகள்; அறிவு, அனுபவ பெட்டகங்கள் என்ற நிலை மாறி, அவர்களை சுமைகளாகக் கருதும் மனப்பக்குவம் இன்று மேலோங்கி வருகிறது. இந்த மோசமான நிலையை சமூகச் சீரழிவு என்றும், ஆரோக்கியமான சமூகத்தின் அடிமட்டத்தை செல்லரித்து விட்டது என்றேச் சொல்ல வேண்டும்.
முந்தைய தலைமுறையினர் அறிவாளிகளாகவும், ஒழுக்க சீலர்களாகவும் இருந்ததற்கு, அவர்கள் முதியோர்களின் உபதேசங்களால் ஊட்டி வளர்க்கப்பட்டவர்கள் என்பதையும், இன்றைய தலைமுறையினர் ஒழுக்கம் குறித்து கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளதற்கு முதியோர் உறவு துண்டிக்கப்பட்டதுமே முழுக்காரணம் என்பதை மறுத்திட முடியாது.
நமது சமூகத்துக்கென்று இருந்த தனித்த அடையாளங்களை தொலைத்து, மேலை நாட்டு மோகத்தில் நவநாகரீக வாழ்க்கை (?) நடத்திக் கொண்டிருக்கிறோம் நாம். ஆனால் பிரிட்டிஷ் குழந்தைகளோ தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்கின்றனர். இந்த மாற்றத்தை நினைத்து நாம் வெட்கித் தலைகுனியாமல் இருக்க முடியாது.
இது நமக்குத் தலைகுனிவாக உள்ளதோ இல்லையோ, சட்டத்தைக் கையில் எடுத்து, தங்களது பிள்ளைகளை நீதிமன்றத்துக்கு இழுத்து, உதவிகோரி தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகிவரும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை எண்ணி, வெட்கித் தலைகுனிவதைத் தவிர வேறுவழியில்லை.
நம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்க்கு இதுதான் நாம் செய்யும் கைமாறா? என்று ஒவ்வொரு இளைஞனும் மனசாட்சியைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
நீதி. செங்கோட்டையன்

நன்றி : தினமணி

அண்ணன் காட்டிய வழி!

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா பெரிய அளவில் தமிழகமெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. மிகக் குறுகிய காலம் மட்டுமே முதல்வராக இருந்த ஒரு தலைவனால் மக்களின் மனதில் இடம் பிடிக்க முடிந்தது என்றால் அதற்குக் காரணம், அந்த மனிதன் தன்னை மக்களுடன் இணைத்துக் கொண்டதும், அவர்களது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதும்தான்.
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது, அண்ணாவிடம் பண பலம் இருக்கவில்லை. காங்கிரஸ் என்கிற மாபெரும் சக்தியை எதிர்கொள்ளும் அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் இருக்கவில்லை. மக்களின் கவனத்தை ஈர்க்கும் மேடைப் பேச்சையும், கவர்ந்திழுக்கும் சினிமாவையும் தனது ஆயுதங்களாகக் கொண்டு களமிறங்கிய அண்ணாவால், மக்கள் மத்தியில் எழுச்சியையும், சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியையும் ஏற்படுத்த முடிந்ததென்றால் அதற்குக் காரணம், அவரிடம் காணப்பட்ட தலைமைப் பண்பும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சகோதர பாசமும், இதயத்தின் அடித்தளத்தில் சுரந்த மனித நேயமும், அனைத்துக்கும் மேலாக அவரிடம் இருந்த தன்னம்பிக்கையும்தான்!
1967ல் இந்தியாவின் பல மாநிலங்களில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ். ஏனைய மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஆனால், தமிழகத்தில் இன்றுவரை காங்கிரசால் ஆட்சியில் அமர முடியாமல் போனதற்குக் காரணம், அண்ணா அமைத்துக் கொடுத்த காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற அடித்தளமும், காங்கிரஸ் ஒரு பணக்காரர்களின் கட்சி என்கிற வெகுஜன அபிப்பிராயமும்தான்.
சி.என். அண்ணாதுரை எம்.ஏ. என்கிற அந்த எளிய மனிதரை இந்தத் தமிழகம் முழுவதுமே "அண்ணா' என்று அழைத்தது. அவர் மரணத்தின்போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்கள்பெருவெள்ளம் உலகம் இன்றுவரை கண்டறியாதது. இன்றளவும் கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. இவர்களன்றி, தமிழகத்தில் வானொலிப்பெட்டி இருந்த வீடுகள் முன்பாக கூடி நின்று அழுத நெஞ்சங்கள் பல கோடி.
இத்தனைப் பேரின் உள்ளங் கவர்ந்த தலைவர்அரசியல் உலகில் இருந்த அப்பாவி மனிதர் என்றால் மிகையாகாது. சட்டப்பேரவைக்கு போட்டியிட்டால் முதல்வராக முடியும் என்ற நிலைமை இருந்தபோதும் மக்களவைக்குப் போட்டியிட்டவரை அப்பாவி என்றுதானே சொல்ல இயலும்.
காங்கிரஸுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒரே கூட்டணியில் சேர்த்து ஆட்சியைப் பிடித்த அண்ணாவின் வெற்றிக்கு உழைப்பையும், தமிழையும் காரணம் என்று சொல்லாமல், "ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி லட்சியம், ஒரு படி நிச்சயம்' என்ற தேர்தல் வாக்குறுதிதான் காரணம் என்று கருதினால் அது பிழையாகத்தான் அமையும்.
அந்த ஒரு வாக்குறுதிக்காக தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதும், அதற்கு அடுத்துவந்த தேர்தலில் காங்கிரஸ் இதை முன்வைத்து பிரசாரம் செய்தபோதும் மக்கள் அதை பொருட்படுத்தவில்லை என்பதுமே அதற்குச் சான்று.
அண்ணா தன் குடும்பத்தை எந்த நாளிலும் முன்னிலைப் படுத்தியதே இல்லை. அவரது மனைவி மற்றும் வளர்ப்பு மகன் பெயரும் முகமும் அவரை நேசித்த பல கோடித் தமிழர்கள் அறியாதவை. அவர் தனக்காகவோ அல்லது தன் குடும்பத்துக்காகவோ நிறுவனங்களைத் தொடங்கவில்லை. அல்லது பல பன்னாட்டு நிறுவனங்களில் பல கோடிக்கு பங்குகள் வாங்கி வைத்து, குடும்பத்தினரின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் ஏற்படுத்தித் தந்ததில்லை.
அண்ணாவின் மிகப்பெரிய சாதனை என்ன? தமிழனுக்குத் தமிழன் என்கிற உணர்வையும், தமிழினத்துக்குத் தனித்துவம் தேவை என்கிற வேட்கையையும் அளித்தது சாதனை. அண்ணா இன்னும் தமிழர்களின் மனதில் தனியாசனம் இட்டு அமர்ந்திருப்பது ஏன்? புகழின் உச்சியிலும் எளிமை, பதவியிலும் பணிவு என்பதை வாழ்ந்து காட்டியதால்.
நன்றி ; தினமணி

Saturday, September 13, 2008

அரசியலில் என்.எஸ்.ஜி.யின் தாக்கம்

பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு மன்மோகன் சிங்குக்கு நிகரான வேறு ஆள் இல்லை என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஒரே காரணம், அணு மூலப்பொருள் வர்த்தகத்தில் இந்தியா ஈடுபடுவதற்கு அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி) கிடைத்த அனுமதிதான். 2004ல் பிரதமர் பதவி வேண்டாம் என சோனியா மறுத்ததால் மன்மோகனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. தற்போது, நிலைமை நேர் எதிராகத் திரும்பியுள்ளது. மன்மோகன் மறுத்தால்தான் பிரதமர் பதவி வேறு யாருக்கும் கிடைக்கும்.
என்.எஸ்.ஜி.யின் அனுமதிக்குப் பிறகு எழுந்துள்ள நிலையால் மன்மோகன் சிங்கின் மரியாதை கட்சிக்குள்ளும் வெளியிலும் உயர்ந்திருக்கிறது. அதனால் பிரதமர் பதவிக்கு வேறு யாரையும் பரிந்துரை செய்ய முடியாத தர்மசங்கடமான நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. சோனியா காந்தியே கூட இந்தக் கருத்தை அண்மையில் வெளியிட்டிருக்கிறார். மன்மோகன் சிங்குக்குப் பதிலாக ராகுல் காந்தியை முன்னிறுத்துவது பெரிய பிரச்னையாகாது என்றாலும், அவருக்கு அனுபவம் போதாது என்பதே பலரது கருத்து. அவருக்கு இன்னும் கொஞ்சம் புகழ் சேர்ந்த பிறகு, இதுபற்றி பரிசீலிக்கலாம் என்றே கட்சியின் பெரும்பான்மையோர் கருதுகின்றனர்.
வாக்குகளைக் கவரும் தலைவராகவும் பிரசார பீரங்கியாகவும் சோனியா இருப்பார். ஆயினும் அவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் இருக்கும் சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை. வேறு யாரையும் முன்னிறுத்தினால், அணுசக்தி ஒப்பந்தத்தை பிரசார ஆயுதமாகப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். ஆக, அணுசக்தி ஒப்பந்தம்தான் இந்த ஆட்சியின் வரலாற்றுச் சாதனை என்று கூறினால், அதில் மன்மோகன் சிங்கைக் குறிப்பிடுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
மக்களைக் கவர்ந்திழுக்கும் சக்தி மன்மோகனுக்குக் கிடையாது. அவரது தேர்தல் பிரசார கூட்டங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கட்சியினர் யாருமே அவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதில்லை. ஆனால், இப்போது அணுசக்தி ஒப்பந்தத்தின் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் அனைவருமே மன்மோகனுக்குப் பின்னால் அணி திரண்டிருக்கிறார்கள். அவரும் கடந்த நான்கரை ஆண்டுகளில் இருந்ததைவிட தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கியிருக்கிறார். இதனால், அவர் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
என்.எஸ்.ஜியில் கிடைத்த அனுமதியால் இந்தியாவில் பிரதமர் பதவிக்கான அரசியல் யுத்தம் சூடுபிடித்திருக்கிறது. எல்.கே. அத்வானி, மன்மோகன் சிங், மாயாவதி ஆகியோர்தான் இப்போதைக்கு யுத்த களத்தில் இருக்கிறார்கள். அதற்காக, இவர்களில் ஒருவர்தான் பிரதமராக வேண்டும் என்பதில்லை. அதுதான் இந்திய அரசியல்.
பொதுத் தேர்தல் நடக்கும் நேரத்தையும் என்.எஸ்.ஜி.யின் "அனுமதி' உறுதி செய்திருக்கிறது. தேர்தலை எப்போது நடத்துவது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இப்போது காங்கிரஸ் கட்சியின் கைக்கு வந்திருக்கிறது. அதனால், தங்களுக்குச் சாதகமான நேரத்தில் தேர்தலை அறிவிப்பதற்கு அந்தக் கட்சிக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தத்தால் எழுந்திருக்கும் ஆதரவான நிலையைப் பயன்படுத்தி உடனடியாகத் தேர்தலைச் சந்தித்தால் அது, காங்கிரஸுக்கு சாதகமாக அமையும்.
ஆனால், தேர்தலுக்கு காங்கிரஸ் இன்னும் தயாராகவில்லை. கூட்டாளிகளும் பிடிவாதக்காரர்கள். மக்களவையின் பதவிக்காலம் முடியும்வரை தேர்தல் நடத்தக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்து வருகிறார்கள். லாலுவுக்கு இந்த எதிர்ப்பில் முக்கியப் பங்கிருக்கிறது. என்.எஸ்.ஜி.யில் இந்தியாவுக்குக் கிடைத்த அனுமதிக்குப் பிறகும்கூட இந்தப் பிடிவாதம் தளரவில்லை. தேர்தலில் தமது கட்சிக்கு தற்போது இருக்கும் இடங்களைவிடக் குறைவாகவே கிடைக்கும் என லாலு பயப்படுவதே இதற்குக் காரணம்.
எது எப்படி இருந்தாலும் அக்டோபர் 17ல் தொடங்கும் கூட்டத் தொடரே 14வது மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடராக இருக்கும் என ஆளும் அணியில் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதன்பிறகு மக்களவை கலைக்கப்பட்டு வரும் பிப்ரவரியில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்குக் காரணங்களும் இல்லாமல் இல்லை.
இப்போதைய சூழலில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது கடினமாக இருக்கும். அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தைக் கொண்டு அரசுக்கு என்னென்ன நெருக்கடிகள் தரலாம் என எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை எழுதிய கடிதத்தில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய "ரகசியம்' அம்பலமான விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கும். நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியைப் பாதுகாக்க பிரதமர் தவறிவிட்டார் என்று பாஜகவும் இடதுசாரிகளும் கடுமையாகத் தாக்குவார்கள். அவர் மீது உரிமை மீறல் பிரச்னை அல்லது அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம். இத்தனை பிரச்னைகளை சந்திப்பதைவிட மக்களவையைக் கலைப்பதே மேல் என காங்கிரஸ் கருதுகிறது.
அடுத்ததாக சமாஜவாதி கட்சியின் நெருக்குதல் உத்தி. நம்பிக்கைத் தீர்மானத்தின்போது, அரசுக்கு முழு ஆதரவு கொடுத்தது சமாஜவாதி. அரசில் சேரவேண்டும் என்ற கோரிக்கையையும் படிப்படியாக விலக்கிக் கொண்டது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 8 முதல் 12 மக்களவைத் தொகுதிகளைத்தான் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க முடியும் என்று கூறியிருப்பதன் மூலம் கூட்டணிக்கு வேட்டு வைத்திருக்கிறார் அமர்சிங். இப்படிப்பட்டவர்களின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதைவிட தேர்தலே சிறந்தது என காங்கிரஸ் நினைக்கிறது.
என்.எஸ்.ஜி. அனுமதியால் மூன்றாவது அணியிலும் அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளில் சில வேண்டாக வெறுப்பாக காங்கிரஸை ஆதரிக்கும் நிலை இருந்து வந்தது. ஆனால், என்.எஸ்.ஜி.யின் அனுமதிக்குப் பிறகு இந்த நிலை மாறியிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்த கட்சிகள் அனைத்தும் மாயாவதியின் பின்னால் மூன்றாவது அணியாகத் திரண்டு கொண்டிருக்கிறன.
மாயாவதி, இடதுசாரிகள், சந்திரபாபு நாயுடு ஆகியோர் மூன்றாவது அணியை வலுப்படுத்துவதில் உறுதியாக இருக்கின்றனர். அதிமுகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரம் அரசியலாவதில் கவனிக்கத் தக்க மற்றொரு அம்சமும் இருக்கிறது. அது, இந்த விவகாரத்தில் முஸ்லிம்களின் நிலை என்ன என்பதுதான். தேர்தல் நேரத்தில் அவர்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பதை இப்போதே கணிக்க முடியாது. எனினும், ஒப்பந்தத்தை வெளிப்படையாகவே எதிர்த்துப் பேசிவரும் மாயாவதியை முஸ்லிம்கள் ஆதரிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இடதுசாரிகளின் ஆதரவும் அவருக்குக் கிடைத்திருப்பதால் இந்தக் கருத்து வலுப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் இப்படி நடந்தால், நாட்டின் பிறபகுதிகளிலும் அது எதிரொலிக்கும். முஸ்லிம் தலைவர்களில் பெரும்பான்மையினர் உயர்ஜாதியினராக இருப்பதால், தலித்முஸ்லிம் கூட்டணி என்பது நடைமுறையில் கடினமானதாகவே இருக்கும் என்ற கருத்தும் உள்ளது. எனினும், இது சாத்தியமானால், அது காங்கிரஸுக்கு பெருத்த அடி.
அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலமாக அமெரிக்காவின் நெருக்கமான கூட்டாளியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. இதனால், ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கப் படைகளுக்கு உதவியாக இந்தியாவும் வீரர்களை அனுப்ப வேண்டிய நிர்பந்தம் வரும். சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா மேற்கொள்ளும் நிலைக்கு ஆதரவாகவே இந்தியாவும் முடிவு எடுக்கும் நிலை ஏற்படும். கடந்த 60 ஆண்டுகளில் நட்புறவுடன் இருந்த சில முஸ்லிம் நாடுகளுடன் கூட இந்தியாவுக்கு கசப்புணர்வு தோன்றும். மிக மிக நெருக்கடியான நிலை அது.
இந்த விஷயம், இந்திய முஸ்லிம்களின் மனநிலையில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அண்மைக் காலமாக சிமி இயக்கம் நாடு முழுவதும் வலுவடைந்துள்ளது. காஷ்மீரில் பிரிவினைவாதப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அமெரிக்காவின் பிடியில் இந்தியா சிக்குவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை என்பதையே இவை காட்டுகின்றன.
1991ல் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது, மிகப் பெரும் பொருளாதார மாற்றத்தைச் சந்தித்தது. அதற்கு அவரே காரணமாகவும் இருந்தார். அது ஒருவகையில் வெற்றி என்றே கூறலாம். தற்போது அவரே பிரதமராக இருக்கும் நிலையில், மிகப்பெரும் அரசியல் மாற்றத்தை இந்தியா சந்திக்கிறது. இது முன்னேற்றமா வீழ்ச்சியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

புரியாத புதிராய் அவசர சிகிச்சை மையங்கள்!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள விபத்து அவசர சிகிச்சை மையங்கள் விழிப்புணர்வுடன் இயங்குவதால், சாலை விபத்துகளில் உயிர் இழப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்பது உண்மை.
ஆனால், விபத்தில் காயமடைந்தவர்கள் இந்த சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படும்போது அவர்கள் உள்ளே சிக்கித் தவிக்கும் நிலைதான் பரிதாபமாக உள்ளது.
இதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் காயங்களுடன் உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற யாரும் முன்வருவதில்லை.
அப்படியே காப்பாற்றினாலும்கூட, போலீஸ் விசாரணையில் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
இந்த நிலை இப்போது இல்லை. நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி அளிக்க அரசு ஆங்காங்கே விபத்து அவசர சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
20062007 புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் 50 கி.மீக்கு ஒரு விபத்து அவசர சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
மொத்தம் உள்ள 100 மையங்களில், 64 மையங்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
36 மையங்கள் அதிகபட்சம் மாதம் ரூ. 40 ஆயிரம் தமிழக அரசின் பங்களிப்பு நிதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த 36 மையங்களுக்கும் அரசு மாதம் ரூ. 1.74 கோடி, சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கி வருகிறது.
இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டதால் சாலை விபத்துகளில் உயிர் இழப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
20062007 புள்ளிவிவரப்படி, கொடூர சாலை விபத்தில் உயிருக்கு போராடிய 16,796 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த அவசர சிகிச்சை மையங்களின் செயல்பாடுகளினால் உயிர்கள் காப்பாற்றப்படுவது என்பது உண்மை. ஆனால் அதற்கு பின்னணியில் உள்ள நிலையைப் பார்த்தால்தான் பரிதாபமாக உள்ளது.
தனியார் மருத்துவமனை வைத்திருப்பவர்களே பெரும்பாலும் இந்த மையங்களையும் ஏற்று நடத்தி வருகின்றனர். விபத்து நடத்தவுடன் காயமடைந்தவர்களை மீட்டு தங்கள் மருத்துவனைக்கு எடுத்து வருகின்றனர் இவர்கள்.
முதலில் முதலுதவி செய்ய வேண்டும். அதன்பிறகு, காயம் பலமாக இருந்தால் காயமடைந்தவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு எவ்வித கட்டணமும் இன்றி தீவிர சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்பது அரசு விதி.
காயமடைந்தவர்கள் அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற விரும்பினால், அதற்கு எவ்விதத் தடையும் இல்லை.
அவசர சிகிச்சை மையங்களை நடத்தும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் முதலுதவி என்ற பெயரில் காயமடைந்தவர்களை அவசர சிகிச்சை வார்டில் சேர்த்து விடுகின்றனர்.
உறவினர்கள் யாரையும் உள்ளே சென்று பார்ப்பதற்குகூட இவர்கள் அனுமதிப்பதில்லை
அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றியோ தீவிர சிகிச்சை செய்வதற்கான அவசியம் குறித்தோ காயமடைந்தவர்களிடமோ, அல்லது அவரது உறவினர்களிடமோ மருத்துவர்கள் கூறுவதில்லை.
மணிக்கணக்கில் காயமடைந்தவர்களை அவசர சிகிச்சை வார்டில் வைத்து விடுகின்றனர். பிறகு உறவினர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகே, வெளியே உள்ள மருத்துமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கின்றனர்.
மருத்துவமனையை விட்டு செல்லும் போது சிகிச்சைக்குச் செலவாக பெரும் தொகையை சொல்லி அதை செலுத்த வேண்டும் என்கின்றனர்.
காயமடைந்தவரின் உயிருக்கு ஒருவேளை ஆபத்து ஏற்படும் என தெரிந்தால் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்து விடுகின்றனர்.
அந்த வாகனத்திற்கான கட்டணத்தைக்கூட உறவினர்களிடம் வசூலித்து விடுகின்றனர்.
சில நேரங்களில் அவசர வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து இருப்பதாகக்கூறி ஏமாற்றிப் பணம் வசூலிப்பதாகவும் உறவினர்கள் புகார் கூறுகின்றனர். இதனால் ஏழைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் சில மருத்துவமனைகளில் உறவினர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்குமிடையே தகராறே ஏற்படுகிறது. இந்த குறையை யாரிடம் சென்று முறையிடுவது என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
இதனால் அவசர சிகிச்சை மையங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறும் இதுபோன்ற மருத்துவமனைகளை அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். அந்த மருத்துவமனைகளில் போதுமான அடிப்படைக் கட்டமைப்பு மருத்துவ வசதிகள் உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும்.
புரியாத புதிராகவும், தொடர்ந்து தவறு செய்யும் அவசர சிகிச்சைப் பிரிவு உள்ள மருத்துவனை மையங்களுக்கான அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும்.
சு . பழனி
நன்றி : தினமணி

Friday, September 12, 2008

வயதும் வாகனமும்

கார்களின் விற்பனையைவிட இரு சக்கர வாகன விற்பனை கடந்த இரு மாதங்களாக அதிகமாக உள்ளது. மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஹீரோ ஹோண்டா நிறுவனம்தான் ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக 3.05 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதேகாலத்தைவிட இது 26 விழுக்காடு அதிகம். டிவிஎஸ் நிறுவனம் 11 விழுக்காடும், பஜாஜ் நிறுவனம் 5 விழுக்காடும் அதிக விற்பனை செய்துள்ளன.
கார்களின் விலையேற்றத்தால் இரு சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரிக்கிறது என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும், பள்ளி, கல்லூரிகள் ஜூன், ஜூலை மாதங்களில் திறக்கப்படுகின்றன என்பதும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கித் தந்து மகிழ்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மாநகர, நகரப் பேருந்துகளில் பயணிகள் நெரிசலும் இதற்கு ஒரு காரணம்.
மாநகரம் மற்றும் நகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சைக்கிள்களின் எண்ணிக்கைக்கு இணையாக மோட்டார் சைக்கிள்கள் எண்ணிக்கையும் உள்ளன. மாணவர் மட்டுமன்றி வளர்இளம் பருவத்தினர் இரு சக்கர வாகனங்களில் சிட்டாகப் பறப்பதை சாலைகளில் காண முடிகிறது.
ஆனால் இவர்கள் யாருக்குமே ஓட்டுநர் உரிமம் கிடையாது; கிடைக்கவும் சட்டத்தில் வழியில்லை.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி 18 வயது நிறைவடைந்த நபருக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தோமேயானால், ஒரு மாணவன் அல்லது மாணவி கல்லூரியில் சேர்ந்து இரண்டாம் ஆண்டில்தான் ஓட்டுநர் உரிமம் பெற இயலும். இருந்தும்கூட சாலைகளில் மாணவர்களும் மாணவிகளும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களில் செல்வது நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி 16 வயது நிறைவடைந்த ஒரு நபருக்கு 49.9 சிசி வாகனம் மட்டும் (அதாவது கியர் இல்லாத வாகனங்கள்) ஓட்டுவதற்கான உரிமம் அல்லது பழகுநர் உரிமம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பெருந்தொகையைச் செலவிடும் பெற்றோர் கியர் உள்ள வாகனங்களையே தேர்வு செய்கின்றனர்.
ஓட்டுநர் உரிமம் இல்லாத இவர்கள் விபத்தை ஏற்படுத்தினாலோ அல்லது விபத்தைச் சந்திக்க நேர்ந்தாலோ இவர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிற்பதைத் தவிர்க்கவே முடியாது. அதற்கான தண்டனைகளும் அபராதங்களும் அவர்களது வாழ்க்கையில் கருப்பு நிழலாகத் தொடர்ந்து வரும். வாகன காப்பீட்டுத் தொகை கிடைப்பது அரிது. பாதிக்கப்படுவோருக்கான இழப்பீட்டுத் தொகை கிடைப்பதும் கடினம். ஆகவே இந்த 18 வயது என்ற நிபந்தனையை ஏன் தளர்த்தக் கூடாது?
வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தில் வாழ்க்கைச் சூழல் வேறாக இருந்தது. வெளியுலகத்தை அறிந்துகொள்ளும் வசதி, வாய்ப்புகள் குறைவாக இருந்தன.
வளர்இளம் பருவத்தினர் சைக்கிள் வைத்திருப்பதே பெரிய விஷயமாகக் கருதப்பட்ட காலம் அது!. ஆனால் இன்றைய கணினி உலகம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. சிறார்கள் கணினியைப் பயன்படுத்தவும் கேட்பாரற்றுக் கிடக்கும் இணையதளங்களில் நுழையவும் செய்கிறார்கள்.
ஆகவே காலத்துக்கேற்ப சட்டங்களை மாற்ற வேண்டியுள்ளது. பாஸ்போர்ட் பெறுவோரில் உயர்கல்வி படித்தவர்களுக்கு மட்டுமே "குடிபெயர்வு சான்று தேவை இல்லை' ( ECNR) என்ற விதி தளர்த்தப்பட்டு, எஸ்எஸ்எல்சி படித்திருந்தாலே போதும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அதைப்போலவே, மோட்டார் வாகனச் சட்டத்திலும் குறிப்பிட்ட கல்வித் தகுதியை எட்டியவர்கள், 50 சிசிக்கும் அதிக சக்தியுள்ள இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் பெற வயது நிபந்தனையைத் தளர்த்த வேண்டும்.
ஒன்று, சட்டத்தைத் திருத்த வேண்டும். இல்லையெனில், சட்டத்தை பாரபட்சமின்றி அமல்படுத்த வேண்டும்.

நன்றி ; தினமணி

சகோதர, சகோதரிகளே...

சகோதர, சகோதரிகளே, இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அங்கிருந்த பல்வேறு நாடுகளையும், பல்வேறு மதங்களையும் சேர்ந்த 6 ஆயிரம் பேர் அசைவற்று நின்றனர். அதுவரை அப்படியொரு வார்த்தையை அவர்கள் மேடைப்பேச்சில் கேட்டதே இல்லை.
சீமான்களே, சீமாட்டிகளே வார்த்தைகளுக்கு பழகிப் போன அவர்களது காதுகளுக்கு, அந்த வார்த்தை சற்றே அதிர்ச்சியையும், ஒருவித சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது. முதல் வார்த்தையிலேயே அங்கு கூடியிருந்தவர்களை அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த நரேந்திரன் என்ற சுவாமி விவேகானந்தர், அடுத்து பேசிய வார்த்தைகளால் அனைவரையும் கட்டிப்போட்டார்.
காவி உடை தரித்து மேடையில் நிமிர்ந்த நெஞ்சுடன், நேர்கொண்ட பார்வையுடன் நின்றுகொண்டிருந்த இளைஞன் அன்று அனைவரையும் வசீகரித்தான். அந்த இளைஞன் பேச தொடங்கியதும், அங்கிருந்தவர்கள் அவரது குரல் வளத்துக்கும், வார்த்தைகளின் கருத்துச் செறிவுக்கும் தங்ளையே இழந்துவிட்டதாக அடுத்த நாள் அமெரிக்காவில் வெளியான பத்திரிக்கைகள் குறிப்பிட்டன.
1893ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இதே நாளில் சிகாகோவில் நடைபெற்ற உலக சர்வமத மாநாட்டில், கடைசியாக பேச சுவாமி விவேகானந்தர் அழைக்கப்பட்டபோது அவர் உரையை யாரும் கேட்பதற்குத் தயார் இல்லை என்ற தோரணையில் ஆங்காங்கு கூட்டமாக நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் சகோதர, சகோதரிகளே என்று பேச்சைத் தொடங்கியதும், நிசப்தம் ஏற்பட்டது. அனைவரது பார்வையும், எண்ணங்களும் விவேகானந்தரை நோக்கி செல்லத் தொடங்கியது.
அவர் பேசத் தொடங்கும் வரை, இந்தியா அறிவு இல்லாத மக்கள் வசிக்கும் நாடு, பொருளாதாரத்தில் மட்டுமன்றி அறிவிலும் ஏழைகளே அங்கு வசிப்பர், இந்து மதம் துறவறத்தை மட்டும் வலியுறுத்தும் என பலவாறு தாங்கள் நினைத்ததைப் பேசி வந்த மேலைநாட்டு மேதைகள் விவேகானந்தரின் உரையைக் கேட்ட பின்னர், தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டனர்.
பல நூற்றாண்டுகளாக இந்தியா மீதும், இந்து மதத்தின் மீதும் பிற நாட்டினர் வைத்திருந்த சில தவறான எண்ணங்களுக்கு, அவர் சில நிமிஷங்களிலே முடிவு கட்டினார்.
மற்ற மதங்களின் மதத் தலைவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தை பற்றி உயர்வாகவும், அவர்கள் வணங்கும் இறைவனை பற்றி புகழ்ந்தும், தங்களது கலாசாரமே உயர்ந்தது என்றும் பேசிவிட்டுச் சென்றனர். ஆனால், விவேகானந்தர் இந்து மதத்தின் சகிப்புத்தன்மை, பகுத்தறிவு பற்றி பேசிவிட்டு, இறுதியாக இம் மாநாட்டில் ஒலிக்கும் மணி ஒலி, மத வெறிக்குச் சாவு மணியாக இருக்கட்டும் என்று கூறியபோது அனைத்து மதத் தலைவர்களையும் உணர்ச்சிவசப்படச் செய்து, ஒன்றுபடச் செய்தது.
அதன்பின்னர் நடைபெற்ற மாநாட்டுக் கூட்டங்களில், விவேகானந்தர் பேச்சைக் கேட்பதற்காகவே மக்கள் அதிகமாகக் கூடினர். விவேகானந்தர் பேச்சே 10 நாள் மாநாட்டின் பிரதானமாக இருந்தது.
மாநாட்டின் முன்புவரை இந்தியர்களுக்கு அறிமுகமாயிருந்த விவேகானந்தர், மாநாட்டிற்குப் பின்னர் உலகின் அனைத்து நாட்டினருக்கும் அறிமுகமானார். இந்தப் புகழை அவர் சாதாரணமாகவோ, எந்த கஷ்டமும் இல்லாமலோ பெற்றுவிட்டதாகக் கூறிவிட முடியாது.
சென்னையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலாலும், முயற்சியாலும், சிகாகோவுக்கு அந்த ஆண்டு மே மாதம் கப்பலில் புறப்பட்ட விவேகானந்தருக்கு ஜூலை மாதம் சர்வமத மாநாடு என்று கூறப்பட்டு இருந்தது. சிகாகோவில் இறங்கிய விவேகானந்தருக்கு இடியேன ஒரு செய்தி கிடைத்தது. ஜூலை மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு, செப்டம்பர் மாதம் தள்ளிப் போடப்பட்டிருந்தது.
குறைவான பணத்துடனே சென்றிருந்த விவேகானந்தருக்கு அந்த குளிர் பிரதேசத்தில் இரண்டு மாதங்கள் எங்கு தங்குவது, எங்கு சாப்பிடுவது என்ற பல பிரச்னைகள் எழத் தொடங்கின. ஒருவாறு, திடீரென அறிமுகமாகிய சில நண்பர்கள் வீட்டில் தங்கி, நாள்களை ஓட்டினார் விவேகானந்தர். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பதிவுசெய்ய வேண்டிய தேதி முடிந்துபோன நிலையில், பின்னர் பதிவு செய்தவதற்காக அவர் ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.
பலவாறு கஷ்டப்பட்டு மாநாட்டுக்குச் சென்ற விவேகானந்தர், ஒட்டுமொத்த பாரதத்துக்காகவே பேசினார். விவேகானந்தர் பேச்சுக்கு அடிமையாகிப் போன அமெரிக்கர்கள், மாநாட்டுக்குப் பின்னர் அவரை உடனே நாடு திரும்ப விடவில்லை. அமெரிக்கர்களின் அழைப்பை ஏற்று, அவர்கள் எங்கெல்லாம் பேச அழைத்தார்களோ, அங்கெல்லாம் பேசினார். தனது ஒவ்வொரு மேடைப் பேச்சுக்கும் அவர்களிடமிருந்து பணமும் பெற்றுக் கொண்டார்.
அங்கிருந்து இரண்டு ஆண்டுகள் பிரசங்கம் செய்துவிட்டு, பின்னர் இங்கிலாந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு 1897ம் ஆண்டு பாரதம் திரும்பினார். தாயகம் திரும்பிய விவேகானந்தர், முதல் வேளையாக பேலூரில் தனது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பெயரில் ஒரு மடத்தை உருவாக்கினார். அந்த மடத்தின் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளைச் செய்ய, தனது சீடர்களை பணித்தார்.
இன்றுவரை அந்த மடத்தின் மூலம் அவரது சீடர்கள் பல்வேறு சமுதாயப் பணிகளைச் செய்து வருகின்றனர். அதோடுமட்டுமின்றி தற்போது நாடு முழுவதும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கீழ் பல ஆயிரம் பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
115 ஆண்டுகளுக்கு முன்னர் விவேகானந்தர் இந்தியாவுக்கு ஏற்படுத்திய புதிய முகாந்திரம்தான் இன்றளவும் நமக்கு வெளிநாடுகளில் உள்ளது. இந்தவேளையில், விவேகானந்தரையும், அவரது கருத்துகளையும் பற்றி மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
கே. வாசுதேவன்
நன்றி :தினமணி

Thursday, September 11, 2008

வரவேற்கத்தக்க நல்ல முடிவு!

நம்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள், வருங்கால வைப்பு நிதி (பிராவிடண்ட் பண்ட்) திட்டத்தில் கட்டாயம் உறுப்பினராகச் சேர்வதற்கு வழிசெய்யும் நடவடிக்கைகளை இந்தியத் தொழிலாளர் நலத்துறை எடுத்துவருகிறது.
இதற்கான அறிவிப்பு ஒருசில நாள்களில் வெளியாகும். இந்தியாவின் சமூகநலத் திட்டங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அல்லது ஊழியர்கள் சேருவது சட்டபூர்வக் கடமையாக்கப்படும்.
இந்திய பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பி, இங்கு சில காலம் பணிபுரிந்துவிட்டு மீண்டும் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தாலும், அவர்களும் இந்த திட்டத்துக்குச் சந்தா செலுத்துவது கட்டாயமாக்கப்படும்.
இந்தத் தொழிலாளர்கள் தங்களுடைய அடிப்படை ஊதியத்தில் 24%ஐ வருங்கால வைப்பு நிதிக்குச் செலுத்த வேண்டும். இதற்காக 1952ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவரப்படும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இதற்கு சந்தா செலுத்துவது இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பணிபுரிந்துகொண்டு சம்பளம் வாங்கினாலும் தாங்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறார்களோ அந்த நாட்டின் சமூகப் பாதுகாப்பு திட்டத்துக்குச் சந்தா செலுத்துகின்றனர். இதனால் அவர்களுக்குப் "பணி முறிவு' ஏற்படுவதில்லை.
இனி நமது வருங்கால வைப்பு நிதிக்கு சந்தா செலுத்தும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பும்போது, அவர்களுடைய கணக்கில் சேர்ந்த தொகையை முழுதாகத் தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். பிற நாடுகளில் இப்படி அனுமதிப்பது இல்லை. குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பணி புரிந்திருந்தால் மட்டுமே அவர்களுடைய வைப்பு நிதி சந்தாவைத் திரும்பத் தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசில ஆண்டுகள் மட்டுமே வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் இப்படி விட்டுவிட்டு வரும் தொகையே சில ஆயிரம் கோடிகள் இருக்கும்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியத் தொழிலாளர்கள் வேலை அல்லது ஒப்பந்தம் முடிந்து அந்த நாடுகளிலிருந்து திரும்பும்போது, சமூகப்பாதுகாப்பு திட்டத்தில் அவர்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சந்தாவை முழுதாகத் திரும்பப்பெற, பல்வேறு வெளிநாடுகளுடன் இந்தியத் தொழிலாளர் நலத்துறை தனித்தனியாக இருதரப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப் பேசிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் ஆலோசனை மற்றும் களப்பணிகளில் வேலை செய்யும் 80,000 இந்தியர்கள் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 6,750 கோடி ரூபாயை அமெரிக்க நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டத்தில் தங்கள் பங்குக்குச் சந்தாவாகச் செலுத்துகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்களுடைய பணி அல்லது ஒப்பந்தம் முடிந்துவிட்டாலோ, அவர்களே ஏதாவது காரணத்துக்காக வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பிவிட்டாலோ இந்தத் தொகை அவர்களுக்குத் தரப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த அவல நிலையைப் போக்க பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தம் முடிந்துவிட்டது. பிரான்ஸ், ஹங்கேரி, செக். குடியரசு நாடு ஆகியவற்றுடன் பேச்சு இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளுடன் இந்த மாதம் பேச்சு தொடங்கவிருக்கிறது. ஆஸ்திரேலியாவுடன் பூர்வாங்க பேச்சு தொடங்கிவிட்டது. அமெரிக்கா ஒரு குழுவையே இதற்காக அனுப்பியிருக்கிறது.
வேலைக்காக சொந்த நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குப் போவோர் எண்ணிக்கை உலகிலேயே சீனாவில்தான் அதிகமாக இருக்கிறது. அங்கு கிட்டத்தட்ட மூன்றரை கோடி பேர் வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். அடுத்த இடத்தை இந்தியா பிடிக்கிறது. இந்தியாவிலிருந்து 2 கோடிக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் வேலை தேடிச் சென்றுள்ளனர்.
அதே சமயம், இந்தியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 57 லட்சம். நம்ப முடிகிறதா? இருந்தாலும் உண்மை இதுதான்.
வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வோரின் நலன் கருதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கை உண்மையிலேயே அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியதுதான்.
நன்றி : தினமணி

மாற்று அணியே இப்போதைய தேவை

ஜனநாயக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதிலும், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துவதிலும் நம்பிக்கை கொண்ட கட்சிகள் தமக்குள் ஒன்றுபட்டு குறைந்தபட்சத் திட்ட அடிப்படையில் மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இதற்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது' என ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருந்தேன்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைய வேண்டுமென பாமக கூறியுள்ளது. ஆனால் அதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் இல்லை. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுவதற்கான அறிகுறியும் இல்லை.
காங்கிரஸ் பாஜக ஆகிய கட்சிகள் இல்லாத மூன்றாவது அணி அமைக்க வேண்டுமென இடதுசாரி கட்சிகள் கூறியதோடு நில்லாமல் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றன. அகில இந்திய அளவில் இப்படி ஒரு நிலை எடுப்பது சரியாக இருக்கக் கூடும். ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் காங்கிரஸும் பாஜகவும் வலிமை வாய்ந்த கட்சிகள் அல்ல. இரு கழகங்களுக்குப் பின்னோடும் கட்சிகளே. இந்நிலையில் திமுகவைப் பொருத்தவரையில் காங்கிரஸுடனுள்ள கூட்டணியை முறித்துக் கொள்ளத் தயாராக இல்லை. அதை எப்படியும் என்ன விலை கொடுத்தேனும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது. அதிமுகவைப் பொருத்தவரையில் தனது கூட்டணியில் காங்கிரஸை இணைத்துக் கொள்ள மறைமுகமான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனவே கழகங்களுடன் கூட்டுச் சேருவது என்பது மறைமுகமாகக் காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ கூட்டுச் சேருவதாகிவிடும்.
தனித்துவிடப்பட்டுள்ள பாஜக., அதிமுகவுடன் அல்லது திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்ள ஆர்வம் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் காங்கிரஸ் பாஜக கட்சிகள் அல்லாத கூட்டணி என்று சொன்னால் அதிமுக கூட்டணியுடன்தான் கம்யூனிஸ்டுகள் கூட்டுச் சேர வேண்டியிருக்கும். இது எந்த வகையில் இடதுசாரிகளின் நிலைப்பாட்டிற்கு உதவும் என்பது சந்தேகத்திற்குரியது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்ற தியாகத் தழும்புகளை ஏற்ற கம்யூனிஸ்டுகள் நாடு விடுதலை பெற்ற பிறகும் விவசாயிகள் தொழிலாளர்கள் ஆகியோருக்காகத் தொடர்ந்து போராடி பல தியாகங்களைச் செய்தவர்கள். அடக்குமுறைகளை ஏற்றவர்கள். சேலம் சிறைப் படுகொலையை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. வெண்மணியில் ஒடுக்கப்பட்ட விவசாயக் குடும்பங்கள் நிலப் பிரபுக்களால் உயிருடன் கொளுத்தப்பட்டக் கொடூர நிகழ்ச்சி போன்றவற்றை தீரமுடன் சந்தித்த கம்யூனிஸ்டு தோழர்களின் போர்க்குணம் மங்கிவிட்டதாக நான் நினைக்கவில்லை.
தமிழ்நாட்டில் ஊழல் சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டிய வேளை இது. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில இடங்களுக்காக சமரசம் செய்து கொள்வது நாட்டிற்கும் மக்களுக்கும் பெருந்தீங்கை இழைத்துவிடும் என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்க முடியாது.
மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் உரிமைகளைப் பெற பல போராட்டங்களை நடத்தி, பல உயிர்களை இழந்து தியாகத் தழும்புகளை ஏற்ற ஒரு கட்சி பாமக என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. தமிழ், தமிழகப் பிரச்னைகள், ஈழப் பிரச்னை ஆகியவற்றிலும் பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
திமுகவை எதிர்த்து அக்கட்சியை விட்டு வெளியேறி வந்து, அதிமுக ஆட்சியில் கொடிய பொடா சட்டத்திற்கு ஆளாகி தியாகத் தழும்புகள் ஏற்றும், தொடர்ந்து தமிழர் நலனுக்காகவும் ஈழத் தமிழர் பிரச்னைக்காகவும் குரல் கொடுத்து வரும் இயக்கம் மதிமுக.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அவர்களை வலுவான ஒரு சக்தியாக ஆக்கியதில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்திற்கு பெரும் பங்கு உண்டு. தமிழக உரிமைகளுக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கமாகவும் திகழ்கிறது.
மேலும் பல புதிய கட்சிகள் அமைக்கப்பட்டு யாருடன் கூட்டு என்பதை அறிவிக்காமல் உள்ளன. இக்கட்சிகளும் இரு கழகங்களும் கூட்டுச் சேராமல் செயல்படுமானால் அது வரவேற்கத்தக்கதாகும்.
தமிழகத்தைப் பொருத்தவரையில் மாற்று அணி என்பது திமுக அதிமுக அல்லாத அணியாக மட்டுமே இருக்க முடியும். காங்கிரஸை எதிர்ப்பது என்ற பெயரிலேயோ மதவாத சக்திகளை எதிர்ப்பது என்ற பெயரிலேயோ இரு கழகங்களில் ஏதாவது ஒன்றுடன் கூட்டு வைத்துக் கொள்வது என்பது எந்த வகையிலும் சரியானதாகவோ, தொலைநோக்குடன் கூடியதாகவோ இருக்க முடியாது. இரு கழகங்களும் தேர்தலுக்கு முன்பு இல்லாவிட்டாலும் தேர்தலுக்குப் பின்பு மத்தியில் காங்கிரஸோ அல்லது பாஜகவோ ஆட்சி அமைக்குமானால் அவர்களுடன் கைகோர்த்துக் கொள்ள போட்டி போடுவார்கள் என்பது கல்லின் மேல் எழுத்துப்போல உறுதியான ஒன்றாகும். 1971ஆம் ஆண்டிலிருந்து இப்போதுவரை இரு கழகங்களும் காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ கூட்டு சேரவும் மத்திய ஆட்சியில் பதவிகளைக் கேட்டுப் பெறவும் ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழ்நாட்டில் பலவீனமான நிலையில் இருக்கும் காங்கிரஸிற்கும் பாஜகவுக்கும் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உள்ளாட்சி மன்றங்களிலும் சில இடங்களைத் தாரை வார்த்து அக்கட்சிகளை உயிர்ப்பிக்கும் வேலையை இரு கழகங்களும்தான் மாறி மாறிச் செய்கின்றன. மாநிலத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக தில்லியில் ஆளும் கட்சிக்கு அடிபணிந்து நிற்க இரு கழகங்களும் கொஞ்சமும் தவறியதில்லை.
தமிழ்நாட்டில் தடம்பதிக்க வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த பாஜகவிற்கு ஆதரவு தந்து அவர்களைப் பல்லக்கிலே தூக்கிச் சுமந்து வளர்த்த பழியும் பாவமும் இரு கழகங்களையே சாரும். இன்று வரையிலும்கூட பாஜகவிற்கு எதிராக இரு கழகங்களும் குரல் கொடுக்கத் தயங்குகின்றன. ஏனென்றால் நாளை மீண்டும் தில்லியில் பாஜக ஆட்சி பீடம் ஏறுமானால் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கை உணர்வின் விளைவே இதுவாகும்.
தமிழ்நாட்டிலிருந்து பத்து அல்லது பதினைந்து நாடாளுமன்றத் தொகுதிகள் தனக்குக் கிடைத்தால் போதும் என காங்கிரஸ் தலைமை கருதுகிறது. அதற்கிணங்க இரு கழகங்களுடனும் மாறி மாறிக் கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்கள் காமராஜ் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோமென மூச்சு விடாமல் முழங்கிக் கொண்டிருப்பது வேடிக்கையானதாகும். ஏனென்றால் தமிழகத்தின் கல்விக் கண்களைத் திறந்தவர் காமராஜ். அவரது பொற்கால ஆட்சியின் சிறந்த சாதனை இதுவேயாகும். ஆனால் கடந்த 40 ஆண்டு காலத்தில் இரு கழகங்களின் ஆட்சியில் கல்வி வணிகமாக்கப்பட்டுவிட்டது. காமராஜ் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி பெற்றார்கள். இன்றைக்கு மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரிகளாகவும் இன்னும் பல துறைகளில் உயர் நிலையிலும் அவர்கள் உயர முடிந்ததென்று சொன்னால் காமராஜரின் தொலைநோக்குத் திட்டத்தின் விளைவாலேயே ஆகும். ஆனால் இரு கழகங்களின் ஆட்சியில் பணம் படைத்தோருக்கே கல்வி என்ற நிலை உருவாகிவிட்டது. கழகங்களின் இந்த பெருந்தவறுக்கு காங்கிரஸுக்காரர்களும் உடந்தையாக இருந்தார்கள் என்பதை காமராஜ் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.
கடந்த 40 ஆண்டுகாலத்தில் இரு கழகங்களும் மாறி மாறி தமிழகத்தைச் சீரழித்ததைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். சிங்காரவேலர், ராஜாஜி, பெரியார், திரு.வி.க., காமராஜ், ஜீவா, பி. இராமமூர்த்தி, ம.பொ.சி. போன்ற பெரும் தியாகத் தலைவர்கள் தம்முடைய வாழ்வை அர்ப்பணித்து எண்ணற்ற தியாகங்கள் செய்து உருவாக்கித் தந்த தமிழகம் எனும் பூங்கா குரங்கு கைப் பூமாலையாகச் சீரழிவதை எத்தனை நாளைக்கு நாம் அனுமதிக்கப் போகிறோம்?
இரு கழகங்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களை மீட்க வேண்டிய கடமை நம் முன் காத்து நிற்கிறது. தேர்தலில் போட்டி போடும் கட்சிகள், போட்டியிடாத கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், தலித் அமைப்புகள், தமிழ் அமைப்புகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், ஆசிரியர் மாணவர் மகளிர் அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய அனைவரும் கரம் கோர்த்து நின்று போராட வேண்டிய வேளை வந்துவிட்டது. இது நமது நீங்காத கடமையாகும்.
இக்கடமையைச் செய்ய நாம் தவறினால் மக்கள் ஒருபோதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
உண்மையில் இரு கழகங்களும் பலவீனமாக உள்ளன. 1967ம் ஆண்டிலிருந்து இன்று வரை கூட்டணி பலத்தினால் மட்டுமே இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கின்றன. இரு கழகங்களையும் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளும் இணைந்து நின்று தேர்தல் களத்தில் இறங்கினால் இரு கழகங்களின் உண்மை பலம் அம்பலமாகும். காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் இரு கழகங்களும் கூட்டுச் சேர்ந்தாலும் பயன் இருக்கப் போவதில்லை.
தேர்தலை விட, தமிழகத்தைப் பிற்போக்கு சக்திகளிடமிருந்து மீட்பது மிக மிக முக்கியமானது. அந்த மாபெருங்கடமை நம்மை எதிர்நோக்கியிருக்கிறது. கடமையாற்றுகிறோமா இல்லையா என்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி

சொல்லத் தெரியாமலே...

தமிழகத்தில் எந்தவொரு பட்டதாரி இளைஞரை எடுத்துக்கொண்டாலும் அவரது சான்றிதழ்களில் இருக்கும் மதிப்பெண்ணுக்கும் அவர்தம் திறனுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. இந்தத் திறன் என்று கருதப்படுவதுகருத்தை வெளிப்படுத்தும் ஆற்றல், அந்தந்த சூழலுக்கு ஏற்ப செயல்படும் அறிவு, பொதுவாக மற்றவர்களுடன் பழகும் விதம் ஆகியவைதான்.
கல்லூரி வளாக நேர்காணலுக்கு வரும் நிறுவனங்கள் மாணவர்களின் மதிப்பெண்களைவிட இந்த மூன்று விஷயங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றன.
தகவல் தொடர்புத் துறை நிறுவனங்கள்கூட, இந்த மூன்று எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோர் எந்தப் பாடப்பிரிவு மாணவர்களாக இருந்தாலும் தேர்வு செய்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "எல்லா பொறியியல் மாணவர்களுக்கும் ஒரளவு கணினி அறிவு இருக்கும். மேலும், வேலைக்குத் தேவையான கணினி அறிவை எங்கள் நிறுவனத்திலேயே பயிற்றுவிப்பது மிக எளிது' என்பதுதான்.
கருத்தை வெளிப்படுத்தும் திறன் இல்லாமல் போவதற்கு அடிப்படைக் காரணம் மொழியறிவு இல்லாததுதான். மொழியறிவு வேறு, மொழிப்புலமை வேறு. எல்லோரும் மொழிப்புலமை பெறவேண்டிய அவசியம் இல்லை. அது ஒரு தனித்தன்மை. நபருக்கு நபர் மாறுபடும். ஆனால் மொழியறிவு அனைவருக்கும் பொதுவானது.
இன்றைய தமிழக பட்டதாரி இளைஞர்களிடம் ஆங்கிலம் அல்லது தமிழில் 300 சொற்களில் எதைப் பற்றியாகிலும் எழுதும்படி சொன்னால், அவர்களால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுவது இயலாத ஒன்று. இதற்குக் காரணம் ஆங்கில மோகம் மட்டுமல்ல. அதுதான் காரணம் என்றால், ஆங்கிலத்தையாவது தவறு இல்லாமல் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டுமே! மொழியறிவை வளர்த்துக்கொண்டு பேசவும், கருத்தை வெளிப்படுத்தவும் தனியாக எம்பிஏ படிக்க வேண்டும் என்ற அவல நிலை இன்றைய பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே மொழிப்பாடம்தான் இப்போதும் உள்ளது. பெரிய மாற்றமில்லை. ஆனால் இன்றைய இளைஞனிடம் மட்டும் மொழியறிவு மறைந்தது ஏன் என்ற கேள்விக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
முதலாவதாக, ஒரு குழந்தை வீட்டிலும் தெருவிளையாட்டிலும் பயன்படும் தமிழ் மொழியை இயல்பாகக் கையாளும் திறன் பெறுவதற்கு முன்பே இன்னொரு மொழியைத் திணிக்கிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலம் என்பது அரசுப் பள்ளிகளில் 3ம் வகுப்பில்தான் தொடங்கியது. அதாவது, எல்கேஜி, யுகேஜி பிரபலமாகாத அந்த நாளில், 8 வயதில்தான் ஆங்கில அரிச்சுவடியை மாணவர் படிக்கத் தொடங்குவார். அந்த 8 வயது குழந்தை தமிழில் சரளமாகப் பேசவும், வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகளின் பேச்சுக்குப் புத்திசாலித்தனமாகப் பதில் அளிக்கவும், கேட்ட கதையை மீட்டுரைப்பதிலும் திறம்பெற்றிருக்கும். ஒரு மொழியின் லாவகம் மனதிற்குப் பிடிபட்ட வயதில், அது இந்தி என்றாலும், ஆங்கிலம் என்றாலும் உள்வாங்குவது எளிதாக இருந்தது.
இரண்டாவதாக, இப்போது பெரும்பாலான ஆசிரியர்கள் ஆங்கிலத்தைத் தமிழில் சொல்லி பாடம் நடத்துவதால், மாணவர்கள் மனதுக்குள் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யும் வழக்கம் ஏற்பட்டு, அதுவே இரு மொழிக்கும் பெரும் மனத்தடையாக ஆகிவிடுகிறது. ஆங்கில மொழிப்புலமை உள்ளவர்கள் அதே மொழியில் பேசி, குழந்தைகளைப் பேசவைத்து பாடம் நடத்தும்போது மனம், ஒரு மொழிபெயர்ப்பு இயந்திரமாகச் செயல்படாமல், ஒரு கண்ணாடியைப்போல பிரதிபலிக்கும் கருவியாக மாறுகிறது. வேலைக்காக வேறு மாநிலம் செல்லும் படிப்பறியா இளைஞர்கள் அம்மாநில மொழியில் பேசும் திறன் பெறும் முறையும் இதுதான்.
இந்த இரு காரணங்களுமே நியாயமான காரணங்கள்தான். இதை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தமிழக கல்வித் துறை ஈடுபட வேண்டும்.
எட்டாம் வகுப்புவரை மொழிக்கு மட்டும் தமிழ், ஆங்கிலம், இந்தி எதுவானபோதிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அறிவியல் மற்றும் கணிதத்தை அறிமுகம் செய்யும் அளவில் பாடதிட்டம் வைப்பதும், உயர்நிலைப் பள்ளி தொடங்கி மொழிப் பாடத்தைக் குறைத்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக விலக்கி, அறிவியல் கணித, கணினி பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவதுமான கல்விமுறைதான் இன்றைய தேவை.
நன்றி : தினமணி

Wednesday, September 10, 2008

தலைவர்களின் குற்றம்!

ஒரு நாள் மன்னன் பிம்பசாரன் தான் புதிதாக வடிவமைத்திருக்கும் அழகிய தோட்டத்திற்குப் புத்தனை அழைத்து விருந்து வைத்து அப் பெருமானுக்கு விரிந்து பரந்த அந்தத் தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டே வந்தானாம். புன்முறுவலோடு பார்த்துக் கொண்டு வந்த அந்தப் பெருமான், ஒரு குறிப்பிட்ட மிகமிகச் சிறிய இடம் மட்டும் சுற்றியுள்ள தோட்டத்தின் வனப்புக்குப் பொருத்தமில்லாமலும், ஒழுங்குபடுத்தப்படாமலும் இருப்பதைக் கண்டு வியப்புற்று மன்னனிடம் "ஏன் அதை மட்டும் அப்படியே விட்டு விட்டீர்கள்' என்று கேட்டாராம்.
அந்த இடம் புட்டு அவித்து விற்கும் ஒரு கிழவிக்குச் சொந்தமானது; அந்தச் சிறிய இடத்திற்கு ஒன்றுக்கு நூறாக விலை தருவதாகச் சொல்லியும் அவள் அதை விற்க மறுத்துவிட்டாள். அவள் மூதாதையர் சொத்தாம் அது. அதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று அந்த இடத்தை விட்டு விட்டுச் சுற்றிலும் தோட்டம் அமைத்தேன். அந்த அழகுக் குறைவு பெருமானுடைய கண்களிலும் பட்டு விட்டதே என்று பிம்பசாரன் வருந்த, புத்தர் மறுமொழி பகன்றாராம்:
""அந்தப் புட்டு விற்கும் எளிய கிழவியின் உரிமைக்குள் உன்னுடைய அதிகார வாள் செல்ல நாணப்பட்டதன் மூலம், இந்தத் தோட்டம் மட்டுமன்று; உன்னுடைய நாடே அழகுடையதாக மாறிவிட்டது'' என்று பாராட்டினாராம்.
ஏன் என்று யாரும் கேட்க முடியாத வானளாவிய அதிகாரம் பெற்ற மன்னன் கூடத் தன் அதிகாரத்தின் எல்லை தருமநெறியோடு மோதுகின்ற இடத்தில் முற்றுப்பெற்று விடுவதாகவே கருதுகிறான்.
உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல் நிர்ணயச் சட்டத்தைப் பெற்றிருக்கும் நாட்டில், ஒரு மந்திரி இருபது கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தைச் "சும்மா பெயருக்கு ஒரு விலையைக் கொடுத்து விட்டுக் கையகப்படுத்திக் கொள்ள' முயன்றிருக்கிறார்.
நிலத்தின் உடைமையாளர்கள் அந்த அக்கிரமத்திற்கு உடன்படாதபோது, அவர்கள் தூக்கிச் செல்லப்பட்டு, உயிர் குறித்து அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் நாற்றமெடுத்தபின், முதலமைச்சர் கருணாநிதி என்.கே.கே.பி. இராசாவை அமைச்சர் பொறுப்பிலிருந்து வேறு வழியில்லாமல் விடுவிக்கிறார்!
இதேபோல் இன்னொரு அமைச்சர் பூங்கோதை, தன்னுடைய இரத்த உறவினர் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டிருக்கும் சிக்கலில், உறவினரைக் காப்பாற்ற லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் தன் பதவிச் செல்வாக்கைச் செலுத்தியபோது, அவருடைய பேச்சு ஒலி நாடாவில் பதிவாகித் தப்ப முடியாத நிலை ஏற்பட்டதால், பதவி விலகுகிறார்!
பிறிதொரு வலிமை வாய்ந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலத்தில் இருபதாயிரம் சதுர அடி இடத்தை வசத்திற்குக் கொண்டு வர, எண்பது ஆண்டுகளாக அங்கே குடியிருந்து வந்த முப்பத்தியொரு குடும்பங்களை இம்சித்தும், அச்சுறுத்தியும் காலி செய்ய வைத்தார் என்று வந்த புகாரை விசாரிக்கும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் கட்டளை இட்டிருக்கிறது. ஆனால் கருணாநிதியின் போலீஸ் என்ன ஸ்காட்லாந்த் யார்டா?
வருவாய்க்கு மீறிய சொத்துச் சேர்த்த வழக்கில் இன்னொரு அமைச்சர் கீதா ஜீவனை உயர் நீதிமன்றம் விடுவிக்க மறுத்து, கீழ் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளுமாறு கட்டளையிட்டிருக்கிறது.
"இராமர் பால இடிப்புப் புகழ்' மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தன்னுடைய இரு மகன்களுக்கும் மலிவு விலையில் எரிவாயு உரிமம் வழங்குமாறு, தன்னுடைய கனபரிமாணமுள்ள கூட்டணி மந்திரி பதவியின் செல்வாக்கு அழுத்தத்தை மைய அரசின் மீது செலுத்தி இருக்கிறார்.
""உன் குடும்பத்திற்கு வழியில்லாத வழியில் அரசுரிமம் பெற்றுத் தொழில்களை உருவாக்கவா மந்திரி பதவி? உடனடியாக ராஜிநாமா செய்'' என்று நாடாளுமன்றத்தில் கூக்குரல் எழுந்தபோது, மிகவும் குளுமையாக, "அதனாலென்ன?' என்று கேட்டார். அந்த நொடியிலேயே நாடாளுமன்றத்தின் நாடி அடங்கிவிட்டது!
மேற்கூறிய அமைச்சர்களின் ஆள் கடத்தல்கள், அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள், ஊழல்கள் அனைத்தும் அண்மைக்காலத்தில் அடுத்தடுத்து நடந்தவை.
இந்தச் சில மந்திரிகள்தாம் நெறிக் குறைபாடு உடையவர்களென்றால், அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடலாம்!
ஆனால் இங்கே மொத்த அமைச்சரவையே தறிகெட்டுப் போயிருக்கும்போது, யாரைத்தான் தள்ளுவது? யாரைத்தான் கொள்ளுவது?
கருணாநிதியேகூட ஒரு நேரத்தில் கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொள்ளும்போது, எல்லாப் பிழைகளுக்கும் மூலத்தை அறிந்து கொள்ள மாட்டாரா? அன்று காந்தி இருந்தார். இளைஞர்களைப் பொதுவாழ்வுக்கு வாருங்கள் என்று அழைத்தார்.
நல்லவர்களெல்லாம் நம்மைத்தான் காந்தி அழைக்கிறார் என்று பொதுவாழ்வுக்கு வந்துவிட்டார்கள். கெட்டவர்களெல்லாம் இந்தக் கிழவன் அழைப்பது நம்மை அல்ல என்று ஒதுங்கிக் கொண்டார்கள்! ஆகவே நாட்டின் பொதுவாழ்வு பளிங்கு போல் தூய்மையானதாக இருந்தது.
அடுத்த காலகட்டத்தில் அதற்குப் பிறகு வந்த தலைவர்களும் வழக்கம்போல், இளைஞர்களைப் பொதுவாழ்வுக்கு அழைத்தார்கள்.
நல்லவர்களெல்லாம் இந்த அழைப்பு நமக்கில்லை என்று ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள்.
கெட்டவர்களெல்லாம், "நம் தலைவர் நம்மைத்தான் அழைப்பார்' என்று உரிமையோடு உள்ளே வந்து விட்டார்கள்!
அழைக்கின்றவர் யார் என்பதைப் பொறுத்துப் பின்பற்றுகிறவர்கள் அமைகிறார்கள்!
அன்று நாட்டுக்குப் பணியாற்ற அறிவும், நெறி சார்ந்த வாழ்வும் உடையவர்களெல்லாம் முன் வந்தார்கள். அவர்கள் பல்வேறு ஜாதிகளில் பிறந்தவர்களாய் இருந்தார்கள். அதிகாரம் கைமாறும்போது இயற்கையாகவே பல்வேறு ஜாதிகள் பிரதிநிதித்துவம் பெற்று, சமூகம் சமநிலை எய்தியது! இது முறையான பிரதிநிதித்துவம்!
தமிழ்நாடு ஈன்றெடுத்த தவப்பெருமக்களைப் பாருங்கள்!
வ.உ.சி: நாட்டு விடுதலைக்காக இரண்டு ஆயுள்தண்டனை பெற்றுச் சிறையில் செக்கிழுத்தவர். இவரைத் தந்தது பிள்ளைமார் சமூகம்!
இராஜாஜி: இவரை மிஞ்சிய அரசியல் அறிஞன் இந்திய மண்ணில் இல்லை. அதிகார நாற்காலியில் ஒரு முனிவனைப்போல் அமர்ந்து ஆட்சி நடத்தியவர். இவர் பிறப்பால் பார்ப்பனர்!
ஈவேரா பெரியார்: தமிழர்களைச் சூத்திர நிலையிலிருந்து விடுவித்துச் சுயமரியாதை கொள்ள வைத்தவர். இணையற்ற சிந்தனையாளர். ஜாதி எதிர்ப்பாளரான இவர் பிறப்பால் கன்னட நாயக்கர்!
காமராஜ்: பத்தாண்டுகள் நாட்டு விடுதலைக்காகச் சிறையில் தவமிருந்தவர். பத்தாண்டுகள் நாட்டு மேன்மைக்காக நாடாண்டவர்; இவருடைய ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் பொற்காலம்! இவர் பிறப்பால் நாடார் சமூகத்தினர்!
முத்துராமலிங்கத் தேவர்: காந்தியால் ஈர்க்கப்பட்டு நாட்டு விடுதலைப் போரில் தன்னை உருக்கிக் கொண்டவர். பின்னாளில் நேதாஜியின் தளபதி. இவர் பிறப்பால் மறவர்!
ஓ.பி. இராமசாமி ரெட்டியார்: விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியவாதி. முதலமைச்சராகக் கோலோச்சியவர். நேர்மையின் பிறப்பிடம். பிறப்பால் ரெட்டியார் சமூகத்தினர்!
கக்கன்: விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியப் பட்டறையில் உருவாக்கப்பட்டவர். அரிசன ஆலய நுழைவுப் போரின் தளபதியான வைத்தியநாத ஐயரின் தளபதி. நேர்மை மனித உருக்கொண்டு கக்கனானது! இவர் பிறப்பால் அரிசன வகுப்பினர்!
அண்ணா: புலவர்கள் மட்டத்தில் சுருங்கிப் போயிருக்க வேண்டிய தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை மக்கள் மட்டத்திற்குக் கொண்டு சென்று, தமிழர்களை இன உணர்வு கொள்ள வைத்த தானைத் தலைவர்; ஜாதி மறுப்பாளரான இவர் பிறப்பால் முதலியார் சமூகத்தினர்.
இப்படி, இங்கே பட்டியலிட இடம்போதாத, இன்னும் எத்தனை எத்தனையோ சமூகங்களில் பிறந்து நாட்டுத் தொண்டாற்றிய தலையாய மக்கள் பலர்; அவர்கள் ஒவ்வொரு வகையில் சிறப்புக்குரியவர்கள். நிறைவான பெருமக்கள்!
அவர்களிடம் அழுத்தம் பெற்று நிற்கும் அறிவு மற்றும் பண்பு நலன்களுக்கேற்ப அவர்கள் உயரும் வகையில் நாட்டின் மதிப்பீடுகளை மாற்றி அமைத்தார் காந்தி!
நல்லது வாழவும், நயவஞ்சகம் அழியவும், உண்மை வாழவும், பொய் ஒழியவும், அறிவு வாழவும் அறியாமை தேயவுமான ஒரு புதிய சமூக மதிப்பீட்டின் அடிப்படையில் பொதுவாழ்வை உருவாக்கினார்!
ஆனால் பிந்தி வந்த தலைவர்கள் சந்தர்ப்பவாதத்தையும், ஜாதி அரசியலையும் ஆயுதமாகக் கொண்டவர்கள். ஒட்டுமொத்தக் குடும்பம்தான் இவர்களின் ஒரு பெருங் கொள்கை. இத்தகையவர்களின் ஏறுமுகம் நாட்டின் இறங்குமுகமாகி விட்டது.
இவர்கள் தங்கள் மட்டத்திற்கு மேலானவர்களை உடன் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தப்பித் தவறி விவரமில்லாமல் யாரும் வந்துவிட்டாலும் அவர்களைப் பிதுக்கி வெளியே தள்ளி விடுவார்கள். ஆகவே கீழே உள்ள இரண்டாவது வரிசைத் தலைவர்களைத் தகுதி அடிப்படையில் அல்லாமல், ஜாதி அடிப்படையில் மட்டுமே உருவாக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
ஜாதி என்பது ஒரு சிறு அல்லது பெருங்கூட்டம். அந்தக் கூட்டம் அதிகாரத்தில் தனக்குரிய பிரதிநிதித்துவத்தைக் கோரும். அவ்வளவுதான்! அதோடு அமைதி அடைந்துவிடும்!
முன்பிருந்த ஜாதிகள்தாம் இப்போதும் இருக்கின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லா ஜாதிகளிலும் நல்லோரும் இருக்கிறார்கள்; தீயோரும் இருக்கிறார்கள்! முத்துராமலிங்கத் தேவரையும், காமராஜையும், கக்கனையும் அதே ஜாதிகள்தாம் அளித்தன. அவர்களின் அறிவும், தொண்டும், நேர்மையும் அவர்கள் பிறந்த ஜாதிகளைத் தாண்டி எல்லா ஜாதிகளையும் தேசத்தையும் உயர்த்தின.
என்.கே.கே.பி. இராசாவையும், டி.ஆர். பாலுவையும், கீதா ஜீவனையும், பூங்கோதையையும் அதே ஜாதிகள்தாம் தந்திருக்கின்றன.
இவர்களின் நெறியற்ற நடத்தைகள் பிறந்த ஜாதி உள்ளிட்ட எல்லா ஜாதிகளையும் முடிவாகத் தேசத்தையும் கீழறுக்கின்றன.
இது ஜாதிகளின் குற்றமல்ல; தேர்வு செய்யும் தலைவனின் குற்றம்!
பழ. கருப்பையா
நன்றி : தினமணி

சுமங்கலித் திட்டம்: சாபமா, வரமா?

""சுமங்கலித் திட்டம்"" இது வறுமையில் வாடும் ஏழை இளம்பெண்களின் திருமணத்திற்காக அரசு அறிவித்திருக்கும் திட்டம் அல்ல. மாறாக இவர்களின் வறுமையைப் பயன்படுத்தி மேலும் லாபத்தில் கொழிப்பதற்காக நூற்பாலை உரிமையாளர்கள் தங்கள் மூளையைக் கசக்கிக் கண்டறிந்த திட்டம்.
சுமங்கலித் திட்டத்தின் கீழ் இளம்பெண்களைப் பணிக்குச் சேர்ப்பதற்காக வறுமையில் வாடும் குடும்பங்களை இலக்காக கொண்டு அணுகுகின்றனர். பெண்களைப் பணிக்குக் கொண்டு வர இடைத்தரகர்களும் உண்டு.
இத்திட்டத்தின் கீழ் பணிபுரிய 13 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்ட திருமணமாகாத பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தங்கள் பெண்களைப் பணிக்கு அனுப்பச் சம்மதிக்கும் பெற்றோர்களுக்கு உடனடியாக ரூ. 10 ஆயிரம் முன்பணம் வழங்கப்படுகிறது. பணிக்குத் தேர்வு செய்யப்படும் பெண்கள் நூற்பாலைகளில் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை பணிபுரிய ஒப்பந்தம் போடப்படும். ஒப்பந்தப்படி பணிமுடிக்கும் பெண்களுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும். தங்குமிடமும், உணவும் இலவசமாக வழங்கப்படும். பெற்றோர்கள், பெண்களைப் பார்க்க வாரம் ஒருமுறை அனுமதி அளிக்கப்படுகிறார்கள். மருத்துவ வசதி செய்து தரப்படும் என பல வாக்குறுதிகள் அளிக்கப்படுகிறது. இதை முழுமையாக நம்பும் பெற்றோரும் தங்கள் பெண்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டதாக அகமகிழ்ந்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அவர்கள் 12 முதல் 16 மணிநேரம் பணிபுரியும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
மேலும், தங்குமிடம் என்ற பெயரில் ஒரு சிறிய அறைக்குள் 10 முதல் 15 பெண்கள் வரை ஆடு, மாடுகளை அடைப்பது போல் அடைக்கப்படுகின்றனர். இதனால் மிகக் கடுமையான மனஉளைச்சலுக்கு பெண்கள் ஆளாகின்றனர். மருத்துவ வசதியும் கிடையாது.
பெற்றோர்களையும் அவ்வளவு எளிதில் சந்திக்க அனுமதிப்பதில்லை. சந்திக்க வரும் பெற்றோரிடம் கொடுமைகளைப் பற்றி கூறிவிடக் கூடாது என்பதற்காக நிர்வாகத்தைச் சேர்ந்தவரும் உடனிருப்பார். தட்டிக் கேட்கும் பெற்றோரை அடியாள்கள் மூலம் மிரட்டுவது, ஊதியம் கொடுக்காமல் வெளியேற்றுவது ஆகியவையும் நடக்கிறது.
பாலியல் கொடுமை: இந்த கொடுமைகளுக்கு எல்லாம் உச்சகட்டமாக பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் கொடுமையும் நடக்கிறது என்பது அதிர்ச்சியளிப்பதாகும். பெண்களுக்கு இரவுப் பணி வழங்கப்பட மாட்டாது என்று கூறப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு அதிக நாள்கள் பெண்களுக்கு இரவுப் பணி வழங்கப்படுகிறது.
மேலும், அப்படிப்பட்ட சூழலில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களுக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்றுகளும் ஏற்படுகிறது. ஓராண்டிற்கு முன் கரூர் பகுதியில் உள்ள நூற்பாலையில் சுமங்கலித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த இளம்பெண்கள் 2 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு நிர்வாகத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு பெண்களுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் உடன்பணிபுரியும் பெண்கள் சிலரிடம் பரிசோதனை நடத்தினர். அதில் சில பெண்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவர அதிர்ந்த மருத்துவர்கள் அந்த ஆலையில் உள்ள பெண்கள் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை நடத்தியதில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ஆலையில் இரவுப் பணியின்போது பெண்களிடம் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஆண்கள் பலர் தவறாக நடந்திருப்பதும், அப்பாவிப் பெண்கள் நோய்த்தொற்றுக்கு ஆளானதும் தெரியவந்தது. இச்சம்பவம் வார ஏடுகளில் பரபரப்புச் செய்தியாக வந்தது. இதையடுத்து அந்த நூற்பாலை சீல் வைத்து மூடப்பட்டது. ஆனால், நிர்வாகிகள் மற்றும் தவறிழைத்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நடத்தப்படும் கொடுமைகளை சில மாதர் அமைப்புகள் அரசுக்குப் புகாராக அனுப்பின.
இதையடுத்து அரசு ஓரிரு மாதங்களுக்கு முன்பு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில் சுமங்கலித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 145க்கு குறையாத ஊதியம் வழங்கவேண்டும் என்றும் அரசு ஆணையை அமல்படுத்தாதபட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.
ஆனால், இரண்டு வாரங்களுக்கு பின்பு மதுரை புறநகர் பகுதியில் உள்ள நூற்பாலையின் அருகே 14 வயது மதிக்கதக்க 3 பெண்கள் அதிகாலை நேரத்தில் சுற்றியதைக் கண்ட அப்பகுதி பொது மக்கள் பெண்களை அழைத்து விசாரித்தபோது அப்பெண்கள் சுமங்கலித் திட்டத்தின்கீழ் பணிபுரிய அழைத்து வரப்பட்டதாகவும், ஆனால் பணியின் போது மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், உணவுகூட சரியாக வழங்காததால் நள்ளிரவில் ஆலையின் வளாகச் சுவர் ஏறிக்குதித்து தப்பியதாகவும் தெரிவித்தனர். இதைப்பற்றி தகவலறிந்த போலீஸார் அப்பெண்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆலை நிர்வாகத்தின் மீது வெறும் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டது.
இக்கொடுமைகள் திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் அதிகம் நடக்கிறது. விளக்கைக் கண்டுவிழும் விட்டில் பூச்சிகளாய் வறுமையால் வாழ்க்கையைத் தொலைக்கும் ஏழைப்பெண்களைக் காப்பாற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.பி. உமாமகேஸ்வரன்

Tuesday, September 9, 2008

வாடகைத் தாய்' எனும் வக்கிரத் "தொழில்'

"மஞ்சி'!
குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் கடந்த ஜூலை மாதம் பிறந்த பெண் குழந்தையின் பெயர் இது. இதன் தாய், தந்தையர் ஜப்பானியர்கள். ஆனால் இதை பிரசவித்தவர் ஓர் இந்தியப் பெண்; வாடகைத் தாய்!
மஞ்சி பிறப்பதற்கு முன்னதாக அந்தக் குழந்தையின் ஜப்பானியத் தாய் தந்தை விவாகரத்து பெற்றதால் நேரிட்ட குழப்பங்கள் நீதிமன்றத்தின் படிகளை எட்டியபோது, "வாடகைத் தாய்மை' பற்றிய எண்ணற்ற சட்டச் சிக்கல்கள் விவாதத்துக்கு வந்துள்ளன.
திருமணம் செய்து கொள்ளும் ஒவ்வொரு ஜோடியின் கனவுகளும் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றியதாகவே இருப்பது இயல்பு. ஆனால், குழந்தைப் பேறு கிட்டாத தம்பதியர்களின் எண்ணிக்கையும் குறைவாக இல்லை. மண் பயனற்றுப் போனால் கரம்பு; பெண் பயனற்றுப் போனால் மலடு என்று ஓர் ஆணாதிக்க சமுதாயச் சொல்லாடல், கருத்தரித்துக் குழந்தை பெற முடியாத பெண்களை இழிவுபடுத்துகிறது. இந்த மலட்டுத்தனம் ஆணிடமும் இருக்கலாம் என்ற இயற்கை நியதி கூடப் புறந்தள்ளப்படுவதன் கொடுமையாகவே, முதல் மனைவியைத் தள்ளி வைப்பதும், இரண்டாம் தாரத்தை மணம் புரிவதும் கூட மிக நியாயமானதாகவே சித்திரித்துக் காட்டப்படுவதுண்டு!
ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் சேர்ந்துதான் புதிய உயிர் உருவெடுக்கிறது என்பது உடற்கூறு விஞ்ஞானம். இந்தப் புதிய உயிரைத் தாங்கி வளர்ப்பது பெண்ணின் கருப்பையில் நிகழும் பரிணாம வளர்ச்சி. இதில் உடற்கூறுகளில் நேரிடும் சில பாதிப்புகள் காரணமாகத் தரித்த கரு, கருப்பையைச் சென்றடைய முடியாமல் போவதும் உண்டு. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அறிவியல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் போக்கில் நிகழ்ந்ததுதான் "சோதனைக் குழாய் குழந்தை' என்ற புதிய முயற்சி.
ஆணின் உயிரணுவையும், பெண்ணின் கருமுட்டையையும் சோதனைக் குழாயில் வைத்து சினைப்படுத்திய பின் அந்தக் கருவைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, இயல்பான தாய்மைப் பேறு முறையில் குழந்தை பிறக்கச் செய்வதுதான் இந்தப் புதிய சோதனை. உலகத்தில் முதன்முதலாக இப்படி ஒரு சோதனைக் குழாய் முறையில் பிறப்பெடுத்தது ஒரு பெண் குழந்தை. இங்கிலாந்து நாட்டில் 1978 ஜூலை 25 அன்று நிகழ்ந்த இந்தக் குழந்தையின் பிறப்பு ஒரு விஞ்ஞான சாதனையாகப் போற்றப்பட்டது. அந்தக் குழந்தையின் பெயர் "லூயி பிரவுன்'. அது இப்போது 30 வயதைக் கடந்து இயல்பான வளர்ச்சியைப் பெற்ற பெண்ணாக இன்னும் வாழ்கிறது.
அதே ஆண்டில் இந்தியாவிலும் ஒரு "சோதனைக் குழாய் குழந்தை' பிறந்தது என்பது வெளிச்சத்திற்கு அதிகம் வராத உண்மை. "லூயி பிரவுன்' பிறந்த 67 நாள்கள் கழித்து 1978 அக்டோபர் 3 அன்று துர்கா என்கிற "கானுப்பிரியா' என்ற அந்த சோதனைக் குழாய் பெண்ணின் பிறப்புக்கு விஞ்ஞான ரீதியாக வழிவகுத்த டாக்டர் முகோபாத்யாவின் இந்தச் சாதனை அங்கீகரிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல; அவர் விரக்தியில் 1981ல் தற்கொலை செய்து கொண்டு தன் வாழ்க்கையையே முடித்துக் கொண்டார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த அரிய விஞ்ஞான சாதனைகள் அப்போதிருந்தே பல விவாதங்களைக் கிளப்பின.
இவ்வாறு கருப்பைக்கு வெளியே உருவாக்கப்படும் "உயிர்க்கரு' கருப்பையில் செலுத்தப்பட்டுப் பின்னர் வளர்ந்து குழந்தையாகிப் பிரசவிக்கப்பட்டு வந்த பின்னர் அதன் உடலும், மூளையும் முழு வளர்ச்சி பெற்றதாக அமையுமா? அப்படி அமையாது போனால் அதன் விளைவுகளுக்கு யார் பொறுப்பு? என்ற கேள்விகள் எழுந்தன.
கூடவே, இந்த சோதனைக் குழாய்க் கருத்தரிப்பு முயற்சி என்பது, வேறொரு பெண்ணின் கருப்பையைப் பயன்படுத்திக் குழந்தை பிறப்பிக்கப்படுவதற்கு இட்டுச் செல்லாதா? அது வாடகைத் தாய்களை உருவாக்காதா? என்ற கேள்விகளும் கிளப்பப்பட்டன.
காலப்போக்கில் சோதனைக் குழாய் குழந்தை என்பது ஒரு வெற்றிகரமான விஞ்ஞான நிகழ்வாக மாறிவிட்டது. உலகத்தின் பல பகுதிகளிலும் இந்த முறையில், குழந்தைப் பேற்றுக்காக ஏங்கிய தம்பதியினர் தங்கள் ஏக்கம் தீர்ந்து மகிழ்வவடைவது நடைமுறைக்கு வந்தது.
ஆனால், இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறையில் சில நடைமுறைப் பிரச்னைகள் எழுந்தன.
கணவன் மனைவியாக இணைந்த இருவரின் உயிரணு கருமுட்டையை இணைத்துக் கருத்தரிக்க வைப்பது சில நேர்வுகளில் சாத்தியமாகாமல் போகலாம். இப்போது, வேறொரு பெண்ணின் கரு முட்டையைப் பயன்படுத்தி அந்த ஆணின் உயிரணுவை இணைத்துக் கருக்கொள்ள வைத்தபின், மனைவியின் கருப்பைக்குள் செலுத்திக் குழந்தை பிறக்க வைக்கலாம். இதில் கணவனின் குழந்தையைத் தனது கருப்பையில் வளர்த்துப் பிரசவித்த "தாய்மைப் பேறு' மட்டுமே அந்த மனைவிக்குச் சம்பவிக்கும். உடலுறவுக்கு அப்பாற்பட்டு நிகழும் கருத்தரிப்பு என்ற முறையில் இதையும் ஏற்றுக்கொள்ள அந்தத் தம்பதியர் சம்மதிக்கலாம்.
ஆனால், கணவன் மனைவி இருவரின் உயிரணு கருமுட்டையை வைத்தே கருத்தரிக்கச் செய்த பின்னரும், மனைவியின் கருப்பை, கரு வளர்ந்து குழந்தையாகப் பிரசவிப்பதற்கு இயலாததாக அமைந்து விடுகிற சூழலும் ஏற்படலாம். இப்படிப்பட்ட நிலைமையில்தான், தனக்குள் வளரும் சிசுவுக்கு எந்தவிதப் பங்களிப்பும் இல்லாத ஒரு மூன்றாவது பெண் தன் கருப்பையை மட்டும் அந்தக் குழந்தையின் பிறப்புக்குப் பயன்படுத்த இசையலாம். இதையே, கருப்பையை வாடகைக்கு விடுகிற ஏற்பாடு என்றும் அந்தப் பெண்ணை வாடகைத்தாய் என்றும் சொல்கிற புதிய நடைமுறைக்கு வழிவிட்டது.
கருப்பைக் கோளாறுகள் காரணமாக வாடகைத் தாயை நாடுவது என்ற தேவையையும் கடந்து, பேறுகாலச் சிரமங்களைத் தவிர்ப்பது என்பதற்காகவே, தன் குழந்தையை ஈன்றெடுக்க வேறொரு பெண்ணின் கருப்பையை வாடகைக்குப் பிடிப்பது என்ற நிலையையும் சில "தாய்மார்கள்' எடுப்பதும் நிகழ்கிறது!
சட்டப்படி இப்படி ஒரு மூன்றாவது நபரான வாடகைத் தாய் பிரசவிக்கும் குழந்தை, அந்த வாடகைத் தாயின் குழந்தையாகவே பதிவு செய்யப்படும். அந்தக் குழந்தையின் மரபணு ரீதியான பெற்றோர்கள் அந்தக் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்பதும் ஒரு நடைமுறை.
இந்த "வாடகைத் தாய்மை' என்பது இன்றைய உலகமயச் சூழலில் ஒரு சர்வதேசத் தொழிலாகவே மாறிவிட்டது என்பதுதான் இந்த விஞ்ஞான சாதனையின் பின் விளைவாக நேரிட்டுள்ள வக்கிரம். வாடகைத் தாயாக இருக்கச் சம்மதிக்கிற பெண், குழந்தை பிறந்த பின்னர் அதைப் பிரிய மறுக்கலாம்; பிரிந்த பின்னரும் அவளுக்கு உளவியல் ரீதியான பாதிப்புகள் நேரிடலாம்.
வெளிநாட்டவர்கள் இந்தியப் பெண்களை வாடகைத் தாயாக அமர்த்திக் குழந்தை பெற்றுப்போவது என்பது இப்போதைய நிலைமையில் 50 கோடி டாலர் வர்த்தகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது அதிர்ச்சித் தகவல். இந்தியாவில் இந்த "வாடகைத்தாய்'களைப் பிடித்துத் தருகிற "சேவை'யை மேற்கொள்ள 3,000 நிலையங்கள் உள்ளனவாம்!
வாடகைத் தாய்மை என்பதை முறைப்படுத்துவதற்கான சில நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தயாரித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையம் இது தொடர்பான பிரச்னைகளைக் கையில் எடுத்துள்ள நிலையில், நம் நாட்டின் மாதர் அமைப்புகளும், பொறுப்பான பல ஆலோசனைகளை முன்வைத்துள்ளன. அக்கறையோடு பரிசீலிக்கப்பட வேண்டிய பிரச்னை இது!
உ .ரா. வரதராசன்
நன்றி ; தினமணி

பாரம்பரியத்துக்கு ஆபத்து!

தஞ்சை நகரின் தனித்தன்மை மிக்க கட்டடங்களுள் ரயில் நிலையமும் ஒன்று. இப்போது மேம்பாட்டுப் பணி என்ற பெயரில் ரயில் நிலைய வளாகத்திலுள்ள பழமையான கட்டடங்களை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். ஏதோ தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு மட்டும் இந்த நிலை ஏற்படவில்லை. நாட்டின் பெரும்பாலான ரயில் நிலையங்கள் இன்று இந்த ஆபத்தைச் சந்தித்திருக்கின்றன.
ரயில் நிலையங்கள் இந்தியக் கட்டடக் கலையின் உன்னதங்களில் ஒன்றான "இந்தோ சார்சனிக்' கட்டடக் கலையின் எச்சங்களாக இன்று நம்மிடம் இருக்கின்றன. ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியபோது இந்தியக் கட்டடக் கலை மரபின் உன்னதத்தை உணர்ந்து இங்கு உருவாக்கிய கட்டடங்களை புராதன இந்தியக் கலை அடிப்படையிலேயே உருவாக்கினர். இந்தோ மொஹல் மேற்கத்திய கலை மரபுகளின் கூட்டுக் கலவையாக அவர்கள் உருவாக்கிய கட்டடக் கலையே "இந்தோ சார்சனிக்' கட்டடக் கலையாகும்.
இம்முறையிலான கட்டடங்கள் கட்டட எழிலுக்கு மட்டும் பேர் போனவை அல்ல; கோபுரக் கலசங்கள், வளைவு கோபுரங்கள், கூர் வளைவுகள், ஸ்தூபிகள், மினார்கள், உயர்ந்த விதானங்கள், மாட கோபுரங்கள் என அழகுக்கும் தடிமனான உறுதியான இரும்பு உத்தரங்கள், பெரிய தூண்கள், வெப்பத்தை எதிர்கொள்ளும் கனத்த சுவர்கள், நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் தரும் நேருக்கு நேரான ஜன்னல்கள் என வசதிகளுக்கும் ஒரு சேர முன்னுரிமை அளிப்பது இக்கலையின் சிறப்பம்சமாகும்.
"இந்தியா கேட்', "விக்டோரியா டெர்மினஸ்', "மெட்ராஸ் மியூசியம்', "விக்டோரியா மெமோரியல்' என இந்தியாவில் மட்டுமன்றி தங்கள் நாட்டிலும் பிரைட்டனில் "ராயல் பெவிலியன்', சந்தர்லாந்தில் "எலிஃபென்ட் டீரூம்ஸ்' என இக் கலையின் உன்னதத்தைப் பறைசாற்றும் ஏராளமான கட்டடங்களை ஆங்கிலேயர்கள் கட்டினர். ஒரு கட்டத்தில் ராபர்ட் ஃபெலோஸ் சிஸ்ஹாம், சார்லஸ் மேன்ட், ஹென்றி இர்வின், லுட்வின் என இக் கட்டடக் கலைக்கென மிகச் சிறந்த கலைஞர்கள் மரபே உருவானது.
ரயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள், ஆட்சி மன்றங்கள், கல்லூரிகள் என ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் இக் கட்டடக் கலையைப் பின்பற்றி இங்கு ஏராளமான கட்டடங்களை உருவாக்கியிருந்தாலும் காலப்போக்கில் அவற்றில் பல அடையாளம் மாறிவிட்டன.
மிகப் பிரபலமான சில கட்டடங்கள் தவிர்த்து இன்றளவும் இந்த உன்னதமான கலையின் எச்சங்களாக ரயில் நிலையங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஆனால், வலுவோடு நிற்கும் இந்தக் கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பணம் செலவழித்து அழித்துக் கொண்டிருக்கிறது ரயில்வே துறை.
சென்னையில் "இந்தோ சார்சனிக்' கட்டடக் கலைக்குச் சாட்சியம் கூறும் பல கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டுவிட்டன. எஞ்சி இருப்பவை, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களும், பல்கலைக்கழகம், மத்திய தபால் நிலையம் போன்ற கட்டடங்களும்தான். கடந்த இரண்டு ஆண்டுகளில், சென்னையின் பாரம்பரியம் மிக்க பல கட்டடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
"அட்மிராலிடி ஹவுஸ்' என்று அழைக்கப்பட்ட, அரசினர் தோட்டத்திலிருந்த 208 ஆண்டுகள் பழமையான ஆளுநர் மாளிகை தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. தற்போது, இந்திய விடுதலை இயக்கத்துடன் தொடர்புடைய கோகலே ஹாலும் இடிக்கப்பட இருக்கிறது.
இதுபோன்ற சரித்திரச் சின்னங்களையும், கட்டடக் கலையின் அடையாளங்களையும் பாதுகாத்து நமது வருங்காலச் சந்ததியருக்குத் தர வேண்டும் என்கிற மனப்போக்கு ஏனோ நம்மிடம் இல்லை. கட்டடங்களை இடிப்பதிலும், புதிய கட்டடங்களைக் கட்டுவதிலும் பலருக்கும் பொருளாதார லாபம் இருப்பதுதான் காரணம் என்பது வேதனையைத் தருகிறது.
பிரிட்டனிலோ பிரான்ஸிலோ இத்தகைய காரியங்கள் சாத்தியமில்லை. சீனாவும்கூட விழித்துக்கொண்டுவிட்டது. குயிங் ஆட்சியில் பிரசித்தி பெற்ற கியான்மென் வீதியை ரூ. 5,200 கோடி செலவிட்டு அந்நாடு பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
உள்ளபடியே இந்திய ரயில் நிலையங்களில் மேம்படுத்த எவ்வளவோ பணிகள் இருக்கின்றன. குறிப்பாக நம்முடைய கிராமப்புற ரயில் நிலையங்களின் தேவைகள் ஏராளம். நடை மேடை, கூரை கிடையாது. இருக்கைகள் கிடையாது. சரியான குடிநீர், கழிப்பறை வசதிகள்கூட கிடையாது எனப் பரிதாபகரமாகக் காட்சியளிக்கின்றன நம்முடைய கிராமப்புற ரயில் நிலையங்கள்.
ரயில்வே துறை இங்கெல்லாம் வசதிகளை மேம்படுத்தலாம். உச்சி வெயிலிலும் கடும் மழையிலும், ரயில் எப்போது வரும் எனத் தெரியாமல் இயற்கை உபாதையோடு பரிதவித்துப் போகும் கர்ப்பிணிகளும் வயோதிகர்களும் கழிப்பறைகளைக் கட்டி நன்கு பராமரித்தால் ரயில்வே துறையை வாழ்த்துவார்கள்.
நன்றி : தினமணி

Monday, September 8, 2008

அடிப்படைக் கல்விக்கு அடித்தளமிடுவோம்

நாடு சுதந்திரமடைந்து 61 ஆண்டுகள் ஆகியும் இன்னும் எழுத்தறிவு பெற்றோர் 100 சதவீதத்தை எட்ட முடியவில்லை. கிராம மக்களுக்கு கல்வியைக் கொண்டு செல்வதற்கு பல ஐந்தாண்டுத் திட்டங்களில் நிதி ஒதுக்கிடப்பட்டும் இன்னும் கிராம அளவில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
61 ஆண்டுகளில் சர்வதேச அளவில் மூன்று முக்கியப் புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. அவை பசுமைப் புரட்சி, தொலைத்தொடர்புப் புரட்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஆகியன. பசுமைப் புரட்சி, தொலைத்தொடர்புப் புரட்சி ஆகியவை இந்திய கிராமங்களை சென்றடைய பல காலம் பிடித்தன. ஆனால் தகவல் தொழில் நுட்பம் மட்டும் அந்தந்த வினாடியே இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை சென்றடைவதை இன்று நாம் காண முடிகிறது. இந்த புரட்சியில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்றுதான் கூற வேண்டும்.
ஆனால் அடிப்படைக் கல்வி அல்லது எழுத்தறிவை கிராம அளவில் உள்ளவர்கள் பெற்றால்தான் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் முழு பலன்கள் அனைவரையும் சென்றடையும்.
1965ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 8ம் நாள் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உலக கல்வி அமைச்சர்கள் மாநாடு முதன்முறையாகக் கூட்டப்பட்டது. உலகளாவிய எழுத்தறிவின்மையால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி மாநாடு தீர விவாதித்தது. இப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8ம் நாளை உலக எழுத்தறிவு நாளாகக் கொண்டாட வேண்டும் என்பது ஒரு முக்கிய அம்சமாகும். இதன் முக்கிய நோக்கம் எழுத்தறிவின்மையை அகற்ற வேண்டும் என்பதை பல்வேறு பிரசார அணுகுமுறைகள் மூலம் எடுத்துக் கூறுவதும் இதற்காக அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெளிப்படுத்துவதும் ஆகும். அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8ம் நாள் உலக எழுத்தறிவு நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1901ம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நூற்றுக்கு 5 பேர் எழுத்தறிவு பெற்றனர். இது 1931ம் ஆண்டு 10 சதவீதமாகவும், 1951ம் ஆண்டு 18 சதவீதமாகவும் உயர்ந்தது.
2001ம் ஆண்டு எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 65.4 சதவீதமாகும். இதே போல் தமிழகத்தின் எழுத்தறிவு சதவீதம் 73.5 சதவீதமாகும்.
இதிலும் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் எழுத்தறிவில்லாமல் இருக்கும் நிலையானது, பெண்கள் மட்டுமல்லாத ஆண்கள் உள்பட சமுதாயமே கவலைப்பட வேண்டியதொன்றாகும். ஏனெனில் அவர்களின் பங்கேற்பு இல்லாமல் பெண்கள் பற்றிய சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் மாறுதல் எதுவும் ஏற்பட்டு விடாது.
ஓர் ஆணுக்கு எழுத்தறிவைக் கற்பிப்பதன் மூலம் ஒரு தனி நபருக்கு எழுத்தறிவு வழங்கலாம். ஒரு பெண்ணுக்கு எழுத்தறிவை கற்பிப்பதன் மூலம் ஒரு குடும்பத்திற்கே எழுத்தறிவை வழங்குவதற்கு ஒப்பானது என்றதொரு முதுமொழி உண்டு. இந்தியாவில் மேலும் மேலும் பெண்கள் எழுத்தறிவு பெறுவதன் வாயிலாக இந்த உண்மை தொடர்ந்து நிரூப்பிக்கப்பட்டு வருகிறது.
சுதந்திரத்துக்குப் பின் நமது நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு எத்தனையோ வளர்ச்சித் திட்டங்கள் / நலத் திட்டங்கள் ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவையாவும் முழுமையான பலனை அளிக்காமைக்கான காரணம் மக்களிடையே எழுத்தறிவும், விழிப்புணர்வும் இல்லாமையே. இதைக் கருத்தில் கொண்டு தான் கி.பி.2012ம் ஆண்டுக்குள் ""எல்லோருக்கும் எழுத்தறிவு'' என்ற இலக்கில் தேசிய / மாநில அளவில் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கல்விக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தற்போது 1998 முதல் வளர்கல்வித் திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட்டு மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 14107 வளர்கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம் மையங்களில் மாலை நேர வகுப்பு / எழுத்தறிவு மையம், நூலகம் / வாசிப்பு மையம், கலந்துரையாடல், பயிற்சி (விழிப்புணர்வு / குறுகிய காலத் தொழில்), அரசு திட்டங்கள் போன்ற தகவல் மையம், விளையாட்டு / கலாசார மையம் மற்றும் சமுதாய மையமாக செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தும் நோக்கத்தில் வளர்கல்வித் திட்டத்துடன் இணைந்து மகளிர் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம், கணினி வழி எழுத்தறிவுத் திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகளுக்கான எழுத்தறிவுத் திட்டம், சிறைவாசிகளுக்கான எழுத்தறிவுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மைய அரசு முழு நிதியுதவி வழங்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 50:50 விகிதத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதியை பகிர்ந்து கொள்ள வேண்டும். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மக்களே ஏற்று நடத்த வேண்டும் என அரசு கருதுகிறது.
கற்கும் சமுதாயத்தை உருவாக்குவதற்கு பல்வேறு திட்டங்களின் மூலம் என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் திட்டத்தின் முக்கியப் பயனாளிகளின் முழுமையான, தொடர்ச்சியான வருகை, பங்கேற்புக்குத் தடைக் கற்களாக சில சூழ்நிலைகள் இருந்து வருகின்றன. இவற்றைச் சமாளிக்க பல புதிய உத்திகளையும் மாற்று அணுகுமுறைகளையும் திட்டத்தைச் செயல்படுத்துவோர் கையாள வேண்டும். திட்டச் செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றால்தான் அடிப்படை எழுத்தறிவு அளிப்பதுடன் தாம் கற்றுக் கொண்டதை மறக்காமல் இருக்க உதவும். இதன் மூலம்தான் கற்ற / கற்கும் சமுதாயத்தை உருவாக்க முடியும். வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கும் சமுதாயம் உள்ள நாடுதான் சிறந்த சாதனைகளைப் புரிய இயலும்.
ஆர். இராஜன்
நன்றி : தினமணி

யாருக்கு லாபம்?

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) வெளியிட்டிருக்கும் இரண்டாவது மாஸ்டர் பிளானைப் படிக்கும்போது ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. தனியார் அடுக்குமாடிக் கட்டட நிறுவனங்களுக்கு எப்படியெல்லாம், என்னவெல்லாம் சலுகைகளைச் செய்துதர முடியும் என்று ஆழ்ந்து சிந்தித்து, அதற்கு சட்ட வடிவமும் அமைத்துத் தந்திருக்கிறது இந்த மாஸ்டர் பிளான் என்பதுதான் அது!
அடுத்த 18 ஆண்டுகளில் சென்னை பெருநகரப் பரப்பு அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல, தற்போதைய 73 லட்சத்திலிருந்து அதன் மக்கள்தொகை 1.26 கோடியாக அதிகரிக்கும் என்பதும் உண்மை. இந்த வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில், குடியிருப்புகளும், வணிக வளாகங்களும், அலுவலகங்களும் அதிகரிப்பதுடன், சாலையை விரிவுபடுத்துதல், போக்குவரத்து வசதிகளை அதிகரித்தல், குடிநீர் வடிகால் வசதிகளை அதிகரித்தல் போன்ற வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டாக வேண்டும் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிவித்திருக்கும் 32,700 கோடி ரூபாய் திட்டத்தில் சில நல்ல அம்சங்கள் இல்லாமல் இல்லை. போக்குவரத்துக்கும், சாலை மேம்பாட்டிற்கும் இந்த மாஸ்டர் பிளானில் அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை வரவேற்காமல் இருக்க முடியாது. சென்னை நகரைச் சுற்றி அனைத்துப் புறநகர் பகுதிகளையும், தொழில் பகுதிகளையும் இணைக்கும் வட்டப்பாதை; ராட்சதத் தூண்களை அமைத்து அதன்மேல் அமையும் உயரப் பாதைகள்; சென்னையில் எல்லாப் பகுதிகளையும் இணைக்கும் "மெட்ரோ' ரயில் திட்டம்; சுமார் 300 கி.மீ. சாலைகளை விரிவுபடுத்தும் பணி; அதிகரித்த மாநகரப் பேருந்து வசதி மற்றும் பேருந்துகள் விரைவாகச் செல்ல உயரப்பாதைகள்; ஆங்காங்கே சாலையைக் கடக்க "சப் வே'க்கள்; ஏழு இடங்களில் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் என்று பல வளர்ச்சிக் கண்ணோட்டங்களும், அத்தியாவசியத் தேவைகளும் இந்த மாஸ்டர் பிளானில் இருப்பது உண்மை.
இப்படியெல்லாம் செய்துவிட்டு, ஒரு மிகப்பெரிய குண்டையும், தூக்கிப் போட்டிருக்கிறது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மாஸ்டர் பிளான். இனிமேல் 100 அடி அகலச் சாலைகளில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும், வணிக வளாகங்களுக்கும் உயரக் கட்டுப்பாடு முற்றிலுமாகத் தளர்த்தப்பட்டிருக்கிறது. இனிமேல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கார் நிறுத்துவதற்காக மண்ணுக்குக் கீழே தளம் அமைத்துக் கொள்வதற்கான விதிகள் தளர்த்தப்படுகின்றன. குறைந்த பரப்பளவு நிலத்திலும் வீடு கட்ட அனுமதி அளிக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது மட்டுமல்ல, 30 அடி அகலம் உள்ள சாலைகளிலும் இனி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட அனுமதிப்பது என்கிற பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு மழை பெய்தால் அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையின் சாக்கடைகள் அடைத்து ஆங்காங்கே தெருவெல்லாம் துர்நாற்றம் வீசும் அவலநிலை நீடிக்கிறது. சாக்கடைக் குழாய்களின் அளவு அதிகரிக்கப்பட்டு, மக்கள்தொகையின் தேவைக்கு ஏற்ப தனது கட்டுமான வசதிகளை வடிகால் வாரியம் அதிகரிக்காத வரையில், வரைமுறையற்ற அடுக்குமாடிக் கட்டடங்களை அனுமதிப்பது எந்தவகையில் சரி?
உயரம் அவரவர் இஷ்டத்துக்கு அதிகரித்து, சுற்றிலும் போதுமான இடம் விடாமல் கட்டுவது எந்தவிதத்தில் பாதுகாப்பு என்பதுதான் கேள்வி. தீயணைப்பு வாகனம்கூடப் புக முடியாத நிலையில் குறுகிய சாலையில் அமைந்த சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து ஒரு சமீபத்திய உதாரணம். சமீபகாலமாக அந்தமான் போன்ற இடங்களில் ஏற்படும் நில அதிர்வுகளின் தாக்கம் சென்னையில் காணப்படுகிறது. கட்டுப்பாடில்லாத அடுக்குமாடிக் குடியிருப்புகள் நில அதிர்வு தாக்கும் இடங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை ஏன் நமது அரசு உணரவில்லை?
லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்கள், கட்டடங்களின் வெளித்தோற்றத்திற்கும், உட்புற வசதிகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பலமான அஸ்திவாரத்தில் முதலீடு செய்வதில்லை என்கிற உண்மையை புஜ் மற்றும் ஆமதாபாத் பூகம்பம் உறுதிப்படுத்திய பிறகும் நம்மவர்களுக்கு ஏன் தெளிவு பிறக்கவில்லை?
அரசும் தனியார் அடுக்குமாடிக் கட்டட நிறுவனங்களும் கைகோர்த்துச் செயல்பட்டு "லாப'நோக்கில் தயாரிக்கப்பட்டிருக்கும் "மாஸ்டர் பிளான்' இது. என்ன செய்வது, ஆபத்துக்கு அரசே அச்சாரம் போடும் அதிசயத்தை அதிர்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டிய நிலைமையில் மக்கள்!
நன்றி : தினமணி

Sunday, September 7, 2008

நோய் நாடி நோய் முதல் நாடி...

பணவீக்கம் என்ற பொருளாதாரச் சொல் இப்போது அனைவருக்குமே பரிச்சயமாகிவிட்டது. அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வுக்கும் பணவீக்கத்துக்கும் உள்ள தொடர்புதான் இதற்குக் காரணம். அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக எல்லாம் நடந்தன. பணவீக்கம் மேலும் அதிகரித்தது; பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டது. அதேபோல், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் பணவீக்க விகிதத்துக்கும் விலைவாசி உயர்வுக்கும் தொடர்பே இல்லாதது மாதிரிதான் சாதாரண மனிதனின் அனுபவம் இருக்கிறது.
அத்தியாவசியப் பொருள்களுக்கு மக்கள் தரும் விலைக்கும், பணவீக்கத்துக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது, மொத்த விற்பனை விலைக் குறியீட்டைக் கொண்டுதான் பணவீக்க விகிதம் மதிப்பிடப்படுகிறது; சில்லறை விற்பனை விலையைக் கொண்டு அல்ல. சரக்குப் போக்குவரத்துக்கான செலவு, கமிஷன், ஆதாயம் ஆகியவை மொத்த விற்பனை விலையுடன் சேர்ந்து கொள்வதால் சில்லறை விற்பனை விலை கணிசமாக அதிகரித்துவிடுகிறது.
இரண்டாவதாக, 435 பொருள்களின் மொத்த விற்பனை விலையைக் கொண்டே பணவீக்க விகிதம் மதிப்பிடப்படுகிறது. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களுக்குக்கூட இதில் இடமில்லை. பணவீக்க விகிதத்துக்கும் சில பொருள்களின் விலை உயர்வுக்கும் இதனால் தொடர்பே இருப்பதில்லை.
மூன்றாவதாக, மொத்த விற்பனைவிலைக் குறியீட்டில் உள்ள பொருள்கள், விலைஉயர்வில் அவற்றுக்கு இருக்கும் "செல்வாக்கின்' அடிப்படையில் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றுக்கென தனித்தனி மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த மதிப்பீடுகள்கூட நடுத்தரக் குடும்பங்களின் பட்ஜெட்டை பிரதிபலிப்பதாக அமையவில்லை.
அடுத்தது, பணவீக்கம் குறைந்தால், விலைகள் குறையும் என்பதில்லை; குறைவான விலைகள் விகிதத்தில் அதிகரிக்கும் என்பதே சரி. உதாரணமாக பணவீக்கம் 12 சதவீதமாக இருந்தால், ரூ. 100க்கு விற்ற பொருளின் விலை ரூ. 112ஆக உயரும். பின்னர் பணவீக்கம் 10க்குக் குறைந்தால் அந்தப் பொருளின் விலை ரூ.123.20 (10 சதவீத உயர்வு) ஆகும். இந்த விலை உயர்வின் வலியைத்தான் சில காலமாக சாதாரண மக்கள் அதிகமாக அனுபவித்து வருகிறார்கள்.
பணவீக்கம் 5 சதவீதம்வரை இருப்பதை பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவு என்பார்கள். இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக் கொள்கை, இடைக்காலத்தில் பணவீக்கத்தை 3 சதவீதமாகக் குறைப்பதுடன், 5 சதவீதத்துக்குள் நிலைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்தக் கொள்கை கடந்த ஜூலையில் மறுஆய்வு செய்யப்பட்டபோது, நிதியாண்டின் முடிவில் பணவீக்கத்தை 7 சதவீதத்துக்குள் கொண்டுவருவதென திருத்தி அமைக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டுவதற்காக ரிசர்வ் வங்கியில் மற்ற வங்கிகள் இருப்பு வைக்க வேண்டிய நிதி விகிதத்தை (சிஆர்ஆர்) 0.25 சதவீதம் அதிகரித்தது. அதேபோல், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியையும் 0.5 சதவீதம் உயர்த்தியது.
ஆனால், இந்த விகிதங்களை உயர்த்துவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பெரிய அளவில் பலன் ஏதும் கிடைக்காது என்பது கடந்த 18 மாத அனுபவத்தில் தெரிய வந்திருக்கிறது. 2007ம் ஆண்டு ஜனவரியில் இருந்து கடன்களுக்கான வட்டியை 4 முறை உயர்த்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி. 7.25 சதவீதமாக இருந்த வட்டி, 3 முறை 0.25 சதவீதமும் ஒருமுறை 0.5 சதவீதமும் உயர்த்தப்பட்டு, கடந்த ஜூனில் 8.5 சதவீதமாகியது. அதேபோல் 2006ம் ஆண்டு டிசம்பரில் இருந்து சிஆர்ஆர் 13 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. அது, 5 சதவீதத்தில் இருந்து கடந்த ஜூலையில் 8.75 சதவீதமாகியது. இந்த அதிவேக உயர்வால், இதே காலகட்டத்தில் 5.8 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் 12 சதவீதமாக உயர்ந்தது.
வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டால் கடன்கள் குறைந்து பணவீக்கம் ஓரளவுக்கு கட்டுப்படும் என்பதே ரிசர்வ் வங்கியின் நம்பிக்கை. ஆனால், இந்த நம்பிக்கை பொய்த்துப் போனது, ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்களிலேயே தெரிகிறது. ஜூலை 2008 நிலவரப்படி, வங்கிக் கடன் ரூ. 4,85,709 கோடியாக இருந்தது. இது 25.9 சதவீத உயர்வு; ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறானது. அதேபோல், டெபாசிட்டுகளும் ரூ. 5,89,646 கோடியாக உயர்ந்தது. உயர்வு விகிதத்தில் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவுதான் என்றாலும், ரிசர்வ் வங்கி மதிப்பிட்டதை விட மிக அதிகம். கிரெடிட் கார்டுகள் மீதான கடன்களும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 87 சதவீதம் உயர்ந்து ரூ. 26,600 கோடியாகியது.
சிஆர்ஆர் விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியதன் மூலம் வர்த்தக வங்கிகளிடமிருந்த ரூ. 8 ஆயிரம் கோடி ரிசர்வ் வங்கிக்குச் சென்றிருக்கிறது. இதனால் வங்கிகளுக்கு வட்டி மூலம் கிடைக்க வேண்டிய லாபம் குறைந்திருக்கிறது. ஒவ்வொரு முறை 0.25 சதவீதம் சிஆர்ஆர் உயர்த்தப்படும்போதும் வங்கிகள் ரூ. 500 கோடி நஷ்டமடைகின்றன.
இந்தச் சூழலில்தான் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தின. அதேபோல் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் பணவீக்கத்தால் லாபமடையும் வகையில் டெபாசிட்டுகளுக்கான வட்டியும் உயர்த்தப்பட்டது. இருந்தபோதிலும், ஒப்பீட்டளவில் வங்கிகள் உயர்த்திய வட்டியைவிட பணவீக்கத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், வங்கியில் முதலீடு செய்பவர்களுக்கு உண்மையில் இழப்புதான் ஏற்படுகிறது.
கடன்களுக்கான வட்டி உயர்த்தப்படுவதால் தொழில்துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் பொருள்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி விலையும் அதிகரிக்கிறது. இது, பணவீக்கத்தை இன்னும் அதிகரிக்குமே தவிர குறைக்கப்போவதில்லை. வட்டிவிகிதங்களுக்கு ஏற்ற வகையில் முதலீடு அதிகரிக்கப்படாவிட்டால், அது பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கும். 8.5 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம், 8 சதவீதத்துக்கும் கீழே குறைந்தவிட்டதாக ரிசர்வ் வங்கியே அண்மையில் அறிவித்திருக்கிறது. அதேபோல், தொழில்துறை வளர்ச்சி 2007ம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்ததைவிட 2008ம் ஆண்டின் முதல் காலாண்டில் பாதியாகக் குறைந்து 5.2 சதவீதமாகி இருக்கிறது. அதற்கடுத்த காலாண்டிலும் இது தொடர்ந்திருக்கிறது.
ஆக, எந்த நோயால் "பணவீக்கம்' ஏற்பட்டது என்பதுகூட கண்டறியப்படவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, நோயைத் தவறாகக் கண்டறிந்து அதற்கொரு மருந்தும் கொடுத்து நோயை இன்னும் கடுமையாக்கிவிட்டிருக்கின்றனர். இந்த மருந்துகளைக் கொடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும். நோயைவிட அந்த மருந்துகள்தான் இன்னும் பயங்கரமானவை.
பி.எஸ்.எம். ராவ்

நன்றி : தினமணி

கலாசார மாற்றத்தால் அதிகரிக்கும் தற்கொலைகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக ஏற்றத்தாழ்வு, வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் வெறுப்பு, நோயின் கொடுமை உள்ளிட்டவை தற்கொலைக்கான முக்கிய காரணங்களாக இருந்தன. தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.
ஆனால், இன்று வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகள், தோல்விகள், இடர்பாடுகளுக்காகக்கூட தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாட்டின் மொத்த இறப்பில் தற்கொலையின் விகிதம் 7.9 சதத்தில் இருந்து 10.3 சதத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி நாட்டில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருவர் தற்கொலை மூலம் இறப்பைத் தழுவுகிறார். இவர்களில் 30 வயதுக்கும் குறைவான வயதுடைய இளைஞர்களே அதிகம். தற்கொலை செய்து கொள்பவர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 வயது முதல் 30 வயதுக்குள்ளாக இருப்பவர்கள் விகிதம் 40 சதத்தை தாண்டுகிறது.
வட மாநிலங்களைவிட கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில்தான் தற்கொலை சம்பவங்கள் அதிகம் நடந்தேறுகின்றன.
இதற்கு சமுதாய பிரச்னைகளும், ஏற்றத் தாழ்வுகளுமே முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
அதோடு, தற்கொலைக்கு முயற்சிப்பவர்களில் ஆண்களே முதலிடம் வகிக்கிறார்கள்.
ஒருவர் தற்கொலை செய்துகொள்ள வறுமை, வேலையின்மை, காதல், விவாகரத்து, வரதட்சிணைக் கொடுமை, கல்வி, குடும்பம் என பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால், இவர்களில் கல்வியறிவு பெற்றவர்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற தகவல்தான் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தற்கொலை செய்து கொள்பவர்களில் மொத்த விகிதத்தில் கல்வியறிவு அற்றவர்கள் 23.4 சதம்தான், எஞ்சியவர்கள் படித்த "மேதைகள்' தான்.
உடலை வருத்தி மரணத்தைத் தைரியமாக எதிர்கொள்ளும் மன தைரியமும், துணிச்சலும் இருக்கும் இவர்களிடம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளையும், இடர்பாடுகளையும் சந்திக்கும் தைரியம் குறைவாக இருக்கிறது. இதற்கு மாறிப் போன நமது வாழ்க்கை முறையே முழுமுதல் காரணம் ஆகும்.
நமது வாழ்க்கை முறையில் இருந்து விலகி, நமது கலாசாரத்துக்கு சிறிதும் பொருந்தாத வாழ்க்கை முறைக்குள் செல்ல நினைப்பதும் ஒரு காரணம் ஆகும்.
பெற்றோர் ஏதோ ஒரு சிறு பிரச்னைக்கு கண்டித்தாலோ அல்லது கோபப்பட்டு திட்டினால்கூட இளைஞர்கள் தற்கொலையை நாடுவது அதிகரித்து வருகிறது.
சமுதாயத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் கஷ்டத்தால் தற்கொலை செய்து கொள்வதைவிட, சமுதாயத்தின் மேல்தட்டில் அனைத்து வசதிகளுடன் இருந்து வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்கிறவர்களின் எண்ணிக்கையே அதிகம் என அண்மையில் வெளியான ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டுகிறது.
மேலும், தற்போது வளர்ந்து வரும் மென்பொருள் துறையில் கணினி முன்பு ஒரு நாளில் முக்கால்வாசி பொழுதைக் கழிக்கும் இளைஞர்கள், மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதில் இருந்து அவர்கள் மீள முடியாமல், தற்கொலை அவர்களை ஆள்கொள்ளும் சம்பவம் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் பெங்களூரில் மென்பொருள் துறையில் இருப்போர் அதிகமாக தற்கொலை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
மாறிப்போன வாழ்க்கை முறை மட்டுமின்றி, கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் இளைஞர்களிடம் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு கல்வி பயின்று இயங்குகின்றனர். இதனால், இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் பணத்தை பிரதானமாக நினைப்பதால், வேறு எந்த விஷயங்களும் அவர்களை நாடுவது இல்லை. இதன் காரணமாக ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் வெறுப்படைந்து, தற்கொலையை நாடுகின்றனர்.
மேலும் இன்றைய இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் வரம்பை மீறி அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இதில் அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் சென்று விடும் சூழ்நிலையில் வெறுப்பின் உச்சத்துக்கு செல்லும் அவர்களின் அடுத்த முடிவு தற்கொலையாக இருக்கிறது.
வாழ்க்கையில் ஒரு பகுதி பணமும், செல்வமும் இருந்த காலம் சென்று, இப்போது பணம்தான் வாழ்க்கையில் அனைத்தும் என்ற நிலை வந்து விட்டது. இதனால், பணத்தைத் தேடி தனது வாழ்க்கை முழுவதும் இயந்திரமாக இயங்கும் ஒருவர், வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய இதர விஷயங்களை இழந்து விடுகிறார். வாழ்க்கையில் ஒரு நேரத்தில் இழந்த விஷயங்களை எண்ணி வெறுப்புற்று, தற்கொலை முடிவுக்கு செல்கிறார்.
இந்த நிலை மாற முதலில் பணத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சமூகம் மாற வேண்டும், அதற்கு அடிப்படையில் இருந்தே மாற்றங்கள் ஏற்பட வேண்டும். மேலும், குழந்தைகளுக்குப் பணத்தை சம்பாதிக்கும் கருவியாக மட்டும் கல்வியைக் கற்றுக் கொடுக்காமல், மனிதனின் வாழ்வில் அனைத்துக் கட்டங்களிலும் உதவக் கூடிய கல்வியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கக் வேண்டும். இந்த மாற்றங்கள் நிகழாதவரை தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்.
கே. வாசுதேவன்
நன்றி : தினமணி

Friday, September 5, 2008

விபத்தைத் தொடரும் "விபத்து'கள்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. அப்படியானதொரு சம்பவம் தில்லி உயர் நீதிமன்றத்தில் சென்ற வாரம் நடைபெற்றது. மூத்த வழக்குரைஞர்கள் ஆர்.கே. ஆனந்த், ஐ.யு.கான் ஆகிய இருவருக்கும் தில்லி நீதிமன்றத்தில் ரூ.2000 அபராதமும், நான்கு மாதங்களுக்கு வழக்காடக் கூடாது என்ற தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனைக்கான காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான். கடற்படையின் முன்னாள் தளபதி எஸ்.எம். நந்தாவின் பேரன் ஓட்டிய கார் மோதியதில் 6 பேர் இறந்தனர். நந்தா தரப்பில் ஆர்.கே. ஆனந்த் வாதாடினார். ஐ.யு. கான் அரசுத் தரப்பு வழக்குரைஞர். ஆனால் இருவரும் ஒன்றுசேர்ந்து, குற்றவாளிக்கு எதிரான சாட்சியைப் பிறழ் சாட்சியாக மாற்ற முயற்சித்ததை தனியார் தொலைக்காட்சி படம்பிடித்து வெளியிட்டது. அதனால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.
இவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனை மிகக் குறைவானது என்று பலர் கருத்து தெரிவித்திருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் எல்லா நீதிமன்றங்களிலும் பரவலாக, ஊர் அறிந்த ரகசியமாக, நடைபெற்று வருகின்றன என்பது மட்டும் உறுதி.
ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளையை காப்பாற்றுவதற்காக அரசு வழக்குரைஞரும் எதிர்தரப்பு வழக்குரைஞரும் ஒன்று சேர்ந்து சாட்சியை பிறழ் சாட்சியாக மாற்றுவதென்பது எப்போதோ, எங்கோ நடைபெறும் ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், விபத்து வழக்குகள் பலவற்றில் காவல்துறை, வாதிபிரதிவாதிகளின் வழக்குரைஞர்கள் கூட்டணி அண்மைக்காலமாக பலம் பெற்று வருகிறது என்பதை மறுக்க முடியாது. இதனால் அதிக இழப்பை சந்திப்பது பெரும்பாலும் விபத்தில் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்.
விபத்து நடைபெற்ற விதத்தைப் பொருத்தும், உயிரிழப்பு அல்லது உடலுறுப்பு இழப்பைப் பொருத்தும் இழப்பீட்டுத்தொகை அதிகரிக்கும். விபத்தில் சிக்கியவர்தான் விபத்து ஏற்பட காரணம் என்ற பாதகமான சூழ்நிலை நிரூபிக்கப்பட்டால், விபத்தை ஏற்படுத்திய வாகனஓட்டுநர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே அத்தகைய சாதகமான சூழ்நிலைக்கு எப்போதும் விலை உண்டு.
விபத்து வழக்கிற்காக காவல்நிலையத்தை நாடினால், "நீங்கள் இந்த வழக்குரைஞரிடம் போங்கள்' என்ற வழிகாட்டப்படுகிறது. காவல்துறை அன்பர் சொல்லும் வழக்குரைஞர் திறமையானவர் அல்லர் என்பது பற்றியோ அல்லது உங்களுக்கு மிக நெருக்கமான வேறு வழக்குரைஞர் இருக்கிறார் என்பது பற்றியோ பேசுவது அங்கு பயன் தராது. காவல்துறை அன்பர் கைகாட்டியபடி நடந்துகொண்டால் இழப்பீடு (குறைவாக என்றாலும்) கைக்குக் கிடைப்பது உறுதி என்ற சூழல்தான் பலரது இன்றைய அனுபவமாகும்.
சில தருணங்களில் விபத்தில் சிக்கியவர் விபத்தை ஏற்படுத்தியவர் இருவரும் சமரசம் செய்துகொள்ள முற்படுவதுண்டு. மருத்துவச்செலவுகளை முழுமையாக ஏற்கவும் ஓரளவு நஷ்டஈடு தரவும் முன்வருவர். இத்தகைய சமரசம்கூட இந்த "கூட்டணி' திருப்தி அடைந்தால்தான் சாத்தியம் என்ற வேதனையான சூழ்நிலையைத்தான் பல சம்பவங்களில் காணமுடிகிறது.
இழப்பீட்டுத் தொகை கிடைத்தாலும்கூட, இழப்பீட்டுத் தொகையில் 20 முதல் 25 சதவீதம் வரை வழக்குரைஞருக்குக் கொடுக்க வேண்டும் என்ற நிலை மேலும் மனச்சோர்வு தருவதாக அமைகிறது. கூட்டணிக்குக் காரணமே கணிசமான இழப்பீட்டுத் தொகைதான்.
மரணங்கள் நிகழாத வெறும் வாகன விபத்துகளில் காப்பீட்டுத் தொகை பெற்ற போலியான சம்பவங்களில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் சில வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். ஆனால் அந்த வழக்கு விசாரணை என்ன ஆனது என்ற சுவடே தெரியாமல் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இந்த மோசடிகள் காவல்துறையின் துணையுடன்தான் நடத்தப்பட்டுள்ளன என்கிற உண்மை அத்துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் மெல்ல கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்கிறார்கள். விபத்து வழக்குகளைப் பொருத்தவரை, காவல்துறை தரும் ஆவணங்கள், வழக்குரைஞர்களின் வாதங்கள் எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் முடித்தவுடன், வாதிபிரதிவாதி இருவரையும் நீதிபதி தனித்தனியாக அழைத்து தனிஅறையில் பேசினாலே போதும், உண்மைகள் "மனம் உடைந்து' கொட்டும்!
நன்றி : தினமணி

சரித்திரம் படைத்த சுதேசிக் கப்பல்..!

தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்தை பி.ஐ.எஸ்.என். (British India Steam Navigation Company) என்ற பிரிட்டிஷ் நிறுவனம் தங்கு தடையின்றி நடத்தி வந்தது. இந்த இரண்டு ஊர்களுக்குமிடையில் கடல்வழி வாணிபம் அக்காலகட்டத்தில் செழித்தோங்கியிருந்தது.
இச் சூழலில் தூத்துக்குடியில் வாழும் வர்த்தகப் பிரமுகர்களில் சிலர் ஒன்று கூடி, தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே சுதேசிக் கப்பல் விட முயற்சித்தனர். வ.உ.சி.யின் நண்பர் சிவபுரம் நிலக்கிழார் சி.வ.நல்லபெருமாள் பிள்ளையைக் குறிக்கும் வகையில் "சி.வ. கம்பெனி' என்ற பெயரில் ஒரு சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினர். இந்த சுதேசிக் கப்பல்கள் பம்பாய் வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் குத்தகைக்கு எடுக்கப்பட்டவையாகும்.
தூத்துக்குடியில் ஏற்கெனவே வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்த ஆங்கிலேயக் கப்பல் கம்பெனியினர், சுதேசிக் கப்பலைக் குத்தகைக்குக் கொடுத்து உதவிய பம்பாய் வர்த்தகரை அணுகி, அவரைத் தங்களது சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைத்து சுதேசிக் கப்பல் முயற்சியை மூழ்கடித்தனர்.
குத்தகைக்குக் கப்பல்களை எடுத்து ஓட்டுவதால் ஏற்பட்ட இடையூறுகளை உணர்ந்த வ.உ.சி. சொந்தமாகக் கப்பல்களை வாங்கி ஓட்டத் துணிந்து முடிவெடுத்தார்.
1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி "சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட்' என்ற பெயரில் ஒரு கப்பல் கம்பெனியை அமைத்தனர். இச் செய்தியைக் கேட்டறிந்த பாலகங்காதர திலகர் "திருநெல்வேலியில் உத்தம தேசாபிமானியாகிய சிதம்பரம் பிள்ளை, தூத்துக்குடிக்கும் சிலோனுக்கும் சுதேசிக் கப்பல் போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது சுதேசியத்திற்கு அவர் செய்திருக்கும் பெரும் பணிவிடையாகும்' என்று பாராட்டிய செய்தி 24.10.1906ம் தேதிய சுதேசமித்திரன் இதழில் வெளியாகியிருந்தது.
புதிய சுதேசிக் கப்பல் முயற்சிகள் குறித்த திட்டத்தை விளக்கி ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கப்பல் கம்பெனியின் மொத்த மூலதனம் ரூபாய் பத்து லட்சம் என்றும், பங்கு ஒன்றுக்கு ரூபாய் இருபத்தைந்து வீதம் நாற்பதாயிரம் பங்குகள் சேர்க்கப்படும் என்றும், இந்தியர், இலங்கையர் முதலிய ஆசிய கண்டத்தாரிடமிருந்து பங்குகள் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பாலவநத்தம் ஜமீன்தாரும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவருமான பாண்டித்துரைத் தேவர் சுதேசிக் கப்பல் கம்பெனியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஹெச்.ஏ.ஆர்.ஹாஜி பக்கீர் முகமது சேட் அண்ட் சன்ஸ் கௌரவ செயலாளர்களாகவும், வ.உ.சிதம்பரம் பிள்ளை துணைச் செயலாளராகவும், வழக்கறிஞர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார், திருநெல்வேலி வழக்கறிஞர் கே.ஆர்.குருசாமி அய்யர், கோழிக்கோடு வழக்கறிஞர் எம்.கிருஷ்ண நாயர், தூத்துக்குடி வழக்கறிஞர் டி.எல்.வெங்கு அய்யர் ஆகியோர் சட்ட ஆலோசகர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
கம்பெனியின் இயக்குநர்களாக 15 முக்கியப் பிரமுகர்கள் செயல்பட்டனர். அவர்களுள் புகழ்மிக்க வர்த்தகக் குழுவான ஹெச்.ஏ.ஆர்.ஹாஜி பக்கீர் முகமது சேட் அண்ட் சன்ஸ், முகமது ஹாகீம் சேட், சி.வ. கப்பல் கம்பெனியைச் சேர்ந்த சி.வ.நல்லபெருமாள் பிள்ளை ஆகியோரும் அடங்குவர்.
இக் கம்பெனி தொடங்கப்படும்போதே இதன் நோக்கம் இன்னதுதான் என்று தெளிவாக உலகறியக் கூறிவிட்டனர். இக் கம்பெனியினர் பிரகடனப்படுத்திய எட்டு நோக்கங்களையும் ஆழக்கற்றுணர்ந்தால் வெள்ளையர்களிடமிருந்து முற்றாக விடுபட்டு, சொந்தக்காலில் நிற்கத் தூண்டுகிற போர் முரசாகவே அவை புரிந்து கொள்ளப்படும்.
வெறும் கப்பல் விடுவது மட்டுமல்லாது இந்தியர்கள், இலங்கையர்கள் மற்றும் ஆசியக் கண்டத்தவர் அனைவருக்கும் கப்பல் நடத்தும் தொழிலைப் பழக்குவித்து, அதன் மூலம் வரும் லாபத்தை அவர்களே அனுபவிக்கச் செய்வது கம்பெனியின் நோக்கங்களில் ஒன்றாகும். கப்பல் நடத்தும் தொழிலோடு, கப்பல் நிர்மாணம் செய்யும் தொழிலையும் கற்பித்தல், கப்பல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் கற்றுத் தருகிற பல்கலைக்கழகங்களை ஏற்படுத்துதல், கப்பல் தொழிலும் இன்னபிற வியாபார முறைகளிலும் இந்தியாஇலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்தி, ஒன்றுபட்டு உழைக்கும் மனோபலத்தை வளர்த்தல், வணிகம் நிறைந்த ஊர்களுக்கு இந்தியா, இலங்கை முதலிய ஆசியக் கண்டத்தவர்களை ஏஜெண்டுகளாக நியமித்தல், நீராவிப் படகு, நீராவிக் கப்பல்கள் போன்றவற்றை உருவாக்குவதற்கும், அவற்றைச் செப்பனிடுதல், சுத்தப்படுத்துதல் போன்றவற்றிற்குமான தனித்தனி துறைகளை ஏற்படுத்துதல், கம்பெனியார் விரும்பும் வேறுபல சுதேசி தொழில்களிலும், வியாபாரங்களிலும் ஈடுபடுதல் ஆகியவையே சுதேசிக் கப்பல் கம்பெனியின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டன.
வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் முயற்சிக்கு முன்னோடிகள் உள்ளனர். 1884ம் ஆண்டு வங்கத்தில் தொடங்கப்பட்ட உள்நாட்டு நதிவழி நீராவிக் கப்பல் போக்குவரத்து பணி முதல் முயற்சியாகும். வெள்ளையர் இந்த முயற்சியைத் தோற்கடித்த பின்னர், 1905ல் சுதேசி இயக்கம் சுடர்விட்டு பிரகாசித்தபோது "பெங்கால் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி' உருவாயிற்று. 1905 முதல் 1930 வரை சுமார் இருபது சுதேசிக் கப்பல் கம்பெனிகள் இந்தியாவில் தோன்றின.
இவை அனைத்தும் சுதேசி முயற்சிகளாக இருப்பினும், வணிக நோக்கு, தனி மனித லாபம் முதலியவை உள்ளடங்கியதாக அமைந்திருந்தன. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக வ.உ.சி. யின் முயற்சி திகழ்ந்தது. முழுக்க முழுக்க இந்தியர்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற சுதேசி உணர்வும், அந்நியர்களின் ஆதிக்கத்தை அடியோடு எதிர்க்கும் தன்னலமற்ற தன்மானச் சிந்தனையும், வெள்ளையர்களின் அடிமைகளாக இந்தியர்கள் இருக்கலாகாது என்ற விடுதலை வேட்கையும் ஒன்றிணைந்த கருத்துக் கலவையாகத் திகழ்ந்தவர் வ.உ.சி.
சுதேசிக் கப்பல் முயற்சியில் தனக்கு முன்னோடிகள் இருப்பினும், புரட்சிகர சிந்தனைகளின் மூலம் தானே ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் வ.உ.சி.
திட்டத்தை அறிவித்த பின்னர், அத்திட்டத்தைச் செயல்படுத்த சூறாவளிபோல் சுழன்று சுழன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அவர்.
நிதி திரட்டும் பணிக்காக பம்பாய் புறப்பட்டுச் சென்றபோது, மீண்டும் தமிழ்நாட்டுக்கு சுதேசிக் கப்பல்களோடுதான் வரப்போவதாகவும், அவ்வாறு கப்பல்களுடன் திரும்ப இயலாத சூழல் ஏற்படுமெனில், அங்கேயே கங்குகரை காணாத கடலில் மூழ்கி தனது உயிரை தானே மாய்த்துக் கொள்ளப்போவதாகவும் சபதமேற்றுத்தான் தமிழ்நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார் வ.உ.சி.
வ.உ.சி. பம்பாய் சென்றிருந்தபோது, அவரது மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோன செய்தி அவரை எட்டியது. அப்போது வ.உ.சி.யின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. வ.உ.சி. யை உடனே ஊருக்குத் திரும்புமாறு உறவினர்கள் வலியுறுத்தினர். ஆழ்ந்த கவலைக்குள்ளான வ.உ.சி., தகவல் தந்தவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, சுதேசிக் கப்பல் பணியை அங்கிருந்தவாறே தொடர்ந்து மேற்கொண்டார்.
கப்பல் முயற்சியின் ஒரு கட்டமாக வ.உ.சி. இலங்கைக்குச் சென்றார். இலங்கையில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ்கள் இவரின் வருகையைப் பாராட்டி தலையங்கம் எழுதின. வ.உ.சி. யின் பெருத்த முயற்சிக்குப் பின்னர் 1907 மே மாதத்தில் "எஸ்.எஸ். காலியோ, எஸ்.எஸ். லாவோ' என்ற இரண்டு கப்பல்களும் வெவ்வேறு நாள்களில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. இந்திய தேச பக்தர்கள் வ.உ.சி. யின் பகீரத முயற்சியை வெகுவாகப் பாராட்டினர்.
"வெகுகாலமாய் புத்திரப் பேறின்றி அருந்தவம் செய்து வந்த பெண்ணொருத்தி, ஏக காலத்தில் இரண்டு புத்திரர்களைப் பெற்றால் எத்தனை அளவற்ற ஆனந்தமடைவாளோ, அத்தனை ஆனந்தத்தை நமது பொது மாதாவாகிய பாரத தேவியும் இவ்விரண்டு கப்பல்களையும் பெற்றமைக்காக அடைவாளென்பது திண்ணமே. ஸ்ரீ வ.உ.சிதம்பரம்பிள்ளையும், அவருடனின்றுதவிய மற்ற நண்பர்களும், தாம் பிறந்து வளர்ந்த தாய் நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து விட்டார்கள்' என்று 1907 ஜூன் 15ம் தேதி வெளிவந்த "இந்தியா' இதழில் அதன் ஆசிரியர் மகாகவி பாரதியார் குதூகலத்துடன் குறிப்பிட்டார்.
தூத்துக்குடிகொழும்புக்கு இடையிலான சுதேசிக் கப்பல் போக்குவரத்து வெற்றி நடை போட்டது. இத்தகைய இமாலய சாதனையை சற்றும் எதிர்பாராத பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியினர் அதிர்ச்சியடைந்தனர். சுதேசிக் கப்பல் கம்பெனி திவாலாக சதித்திட்டம் தீட்டினர். எடுத்த எடுப்பிலேயே பயணக் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தனர். படிப்படியாகக் கட்டணம் இல்லாமலேயே ஏற்றிச் செல்வதாக அறிவித்தனர். பொதுமக்களிடம் தேசபக்த உணர்ச்சியைத் தூண்டி, சுதேசிக் கப்பலை ஆதரிக்கச் செய்வதில் வெற்றி பெற்ற வ.உ.சி., பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட பங்குதாரர்களிடம் வெற்றிபெற முடியவில்லை.
வ.உ.சி. க்கு பங்குதாரர்கள் ஒரு பக்கம் நெருக்கடி கொடுத்தனர்; ஆட்சியாளர்கள் இன்னொரு பக்கம் இறுக்கிப் பிடித்தனர். எவ்வளவோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையிலும் வ.உ.சி. யின் தனிப்பெரும் மக்கள் செல்வாக்கால் சுதேசிக் கப்பல் வணிகம் சுருண்டு படுக்காமல் காப்பாற்றப்பட்டது.
இருப்பினும், சுதேசிக் கப்பல் நிர்வாகிகள், கப்பல் கம்பெனிக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சியினர் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையைக் கண்டு அஞ்சினர். தங்களது கம்பெனி நிர்வாகக்குழுக் கூட்டத்தை அவசர அவசரமாகக் கூட்டினர். கம்பெனி பிழைத்துத் தப்பிக்க வேண்டுமானால் வ.உ.சி. தனது அரசியல் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்கள் கேட்டுக் கொண்டவாறு அரசியலில் இருந்து விலகுவதற்கு பதிலாக, சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகி, முன்னிலும் தீவிரமாக அரசியலில் மூழ்கினார் வ.உ.சி.
எந்தக் கப்பல் கம்பெனியாரை எதிர்த்து வ.உ.சி. சுதேசிக் கப்பலை மிதக்க விட்டாரோ, அதே பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியினருக்கு சுதேசிக் கப்பலை விலைக்கு விற்றுவிட்ட செய்தி சிறையிலிருந்த வ.உ.சி.யை எட்டியது.
இதைக் கேட்டுக் கொதித்தெழுந்த பாரதியார், "சிதம்பரம், மானம் பெரிது! ஒருசில ஓட்டைக் காசுகளுக்காக எதிரியிடமே அக் கப்பலை விற்றுவிட்டார்களே, பாவிகள்! அதைவிட அதைச் சுக்கல் சுக்கலாக நொறுக்கி, வங்காள விரிகுடாக் கடலில் மிதக்கவிட்டாலாவது என் மனம் ஆறுமே! இந்தச் சில காசுகள் போய்விட்டாலா தமிழ்நாடு அழிந்துவிடும்? பேடிகள்!' என்று ஆவேசத்தோடு எழுதினார்.
"அந்தக் கப்பல் கம்பெனி முறிந்து போனாலும், அதனால் தேசத்துக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. குறைந்த சார்ஜை வசூலித்ததினாலும் கம்பெனிக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. ஆயினும் அந்தப் பணம் நம்முடைய தேசத்தை விட்டுப் போய்விடவில்லை. நாங்கள் குறைந்த சார்ஜுக்கு விடுவதை உத்தேசித்து வெள்ளைக்காரக் கம்பெனியார்களும் குறைந்த சார்ஜில்விட, ஆரம்பத்தில் அவர்களுக்கு 95 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்தப் பணமும் நமது தேசத்தில்தான் இருந்திருக்கிறது. ஆகவே, அந்தக் கம்பெனி முறிந்து போனாலும் இந்தியாவுக்கு லாபமே தவிர நஷ்டமில்லை' என்று சுதேசிக் கப்பல் கம்பெனியின் வீழ்ச்சி குறித்து 1919ம் ஆண்டு வெளியான சுதேசமித்திரனில் குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி.

த. ஸ்டாலின் குணசேகரன்
(இன்று வ.உ.சி. பிறந்த தினம்; சுதேசி கப்பல் நிறுவன நூற்றாண்டு விழா)

நன்றி : தினமணி