Friday, October 31, 2008

நஷ்டங்கள் மட்டுமே நாட்டுடைமையாகும்

உலக நிதிச்சந்தை நெருக்கடியின் பரிமாணங்கள் விசுவரூபம் எடுத்து நிற்கின்றன. அமெரிக்காவில் திவாலாகிப் போன வங்கிகளைக் காப்பாற்றிக் கடைத்தேற்றுவதற்காக மக்கள் வரிப் பணத்திலிருந்து 70,000 கோடி டாலர்களை அந்நாட்டு நாடாளுமன்றம் சட்டம் இயற்றி ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் அடங்கிய 7 நாடுகள் மட்டுமே 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி டாலர்களை இதே வகையில் ஒதுக்கீடு செய்துள்ளன.
"அமெரிக்காவில் நிகழ்ந்த நிதிச்சந்தை நெருக்கடி இந்தியாவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது' என்று வீரவசனம் பேசிய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூட இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக 1 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் பயன்படுத்திக் கொள்வதற்காகத் திறந்துவிடச் செய்துள்ளார்.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான அரசின் முடிவைச் செயல்படுத்தியுள்ள வங்கிகளுக்கு, அந்தவகையில் ரூ.25,000 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பங்குச் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அவற்றின் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக மேலும் 20,000 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள் மூலமாகப் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்துள்ளது. "கடன் வழங்குவதைத் தங்கு தடையின்றித் தொடர்க; பணப்புழக்கத்தைத் தேவையான அளவுக்கு அதிகரிக்கிறோம்' என்று நிதியமைச்சகம் நம் நாட்டு வங்கிகளுக்கு "அறிவுரை' வழங்கியிருக்கிறது.
இந்திய நாட்டின் பங்குச் சந்தை வியாபாரத்தை சரிவிலிருந்து மீட்கவும், வங்கித் துறையை பாதிப்பிலிருந்து காப்பாற்றவும் இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் எந்தக் குறைவும் வைக்காமல் செய்து தருகிறோம் என்று பிரதமரும், நிதியமைச்சரும், திட்டக்குழுத் துணைத் தலைவரும், ரிசர்வ் வங்கி கவர்னரும், நிதியமைச்சகச் செயலாளரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவரும் நாள் தவறாமல் அபயக்குரலை அருள்வாக்காகக் கூறி வருகிறார்கள். இவற்றையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால், மத்திய அரசு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை உள்நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்திருக்கிறது விளங்கும்.
நிதிச்சந்தை நெருக்கடி தொடர்பான பரபரப்புச் செய்திகள் அன்றாடம் தலைப்புச் செய்திகளாகப் பத்திரிகைகளையும், தொலைக்காட்சி அலைவரிசைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில், நாடு முழுவதும் காய்கறிச் சந்தைக்கும், மளிகைக் கடைகளுக்கும் அன்றாடம் சென்று வருகிற கோடிக்கணக்கான சாதாரண மக்களை மிகக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வுப் பிரச்னை திட்டமிட்டே பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
விலைவாசி கடுமையாக உயர்ந்து, அரசாங்கத்தின் புள்ளிவிவரக் கணக்கின்படி பணவீக்கம் 12 சதவிகிதத்தைத் தாண்டிய நிலையில், சில வாரங்களுக்கு முன்பாகக் கூட நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும் விலைவாசி உயர்வுக்கு உள்நாட்டில் பணப்புழக்கம் கூடுதலாக இருப்பதுதான் காரணம் என்று சொன்னார்கள். இந்தப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதே தலையாய கடமை என்று ஏற்றுக் கொண்டு, இன்று எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நேர் எதிராக, வங்கிகளில் இருந்த பணத்தை உறிஞ்சி எடுக்கும் விதமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது; ரொக்க இருப்பு விகிதத்தைக் கூட்டியது. இன்றும் பணவீக்கம் 11.8 சதவிகிதம் என்ற அளவிலேயே நிலை கொண்டிருக்கிறது என்பதும், சந்தையில் மக்களின் அன்றாடத் தேவைக்கான பண்டங்களின் விலைகள் மேலும் உயர்ந்து வருவதும், ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்காமல் போயிருப்பது வேதனையான நிகழ்வு. மிதமிஞ்சிய பணப்புழக்கம்தான் பணவீக்கத்திற்குக் காரணம் என்று முன்னர் சொன்னது உண்மையானால், இப்போது மடைதிறந்து விடப்படும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கத்தைக் கூடுதலாக்கும்; அதன் விளைவாக விலைவாசி உயர்வு மேலும் கொடிகட்டிப் பறக்கும் என்பதும் நிச்சயமான ஒன்றுதானே!
நிதித்துறை நெருக்கடி, பணவீக்க உயர்வு இரண்டுமே இந்த அரசின் முன்பாகவுள்ள முன்னுரிமைப் பிரச்னைகள் என்று அண்மையில் கூறிய நிதியமைச்சர் சிதம்பரம், இரண்டாவது பிரச்னையை மட்டும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அன்றாடம் பங்குச்சந்தை திசை நோக்கிக் கவனத்தைச் செலுத்துவது ஏன்? பங்குச் சந்தைக் குறியீடுகளான "சென்செக்ஸ்' 30 கம்பெனிகளையும், "நிஃப்டி' 50 கம்பெனிகளையும் மட்டும் சார்ந்தவை என்பதை இப்போது புதிதாய்க் கண்டுபிடித்தது போல் சுட்டிக்காட்டிய நிதியமைச்சர், அந்தப் புள்ளிகளின் சரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவற்றைத் தாங்கிப் பிடித்து மேலே தள்ளுவதற்கு ஓய்வு ஒழிச்சலின்றிக் கடமையாற்றுவது ஏன்? பங்குச் சந்தை வியாபாரத்தில் நிகழும் ஏற்ற, இறக்கங்கள், பங்குகளில் முதலீடு செய்துள்ள சிறு முதலீட்டாளர்களை பாதிப்புகளுக்கு உள்ளாக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அந்த சிறுமுதலீட்டாளர்கள் நாட்டின் மொத்த ஜனத்தொகையில் மிகச்சிறிய சதவிகிதம் தானே! அவர்களின் நலன்களைக் காப்பதில் ஆர்வம் காட்டுவதாகவே ஆட்சியாளர்களின் இன்றைய அவசர நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்பதை வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும், மற்ற பெருந்திரளான மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசிப் பிரச்னையில் அக்கறையின்றி அரசு மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது அல்லவா?
விலைவாசி உயர்வுக்கு அடிப்படையான காரணிகளில் முக்கியமான ஒன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 120 டாலரைத் தொட்டபோது ஏற்றிய விலையை, அதன் விலை 80 டாலராகச் சரிந்து நிற்கிற இப்போதும் குறைக்க மறுப்பது எந்த வகையில் நியாயமாகும்?
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும், இந்த நிதிச்சந்தை நெருக்கடியை எதிர் கொள்வதற்காக மக்கள் வரிப்பணத்தில் மூன்றரை லட்சம் கோடி டாலர்களை அள்ளியெடுத்துத் தாரை வார்ப்பதற்கு எதிர்வினைக் கேள்விகள் வலுவாக எழுந்து வருகின்றன. இதைச் சமாளிப்பதற்காக பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் கையாண்ட தந்திரம், தனியார் நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் திவால் நிலைமைக்குத் தள்ளப்பட்ட வங்கிகளை அரசாங்கம் தேசியமயமாக்கும்; அவற்றுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் அரசாங்கத்தின் பங்குகளாகக் கணக்கிடப்பட்டு, அந்த வங்கி நிர்வாகங்கள் அரசின் பொறுப்பிலும், கட்டுப்பாட்டிலும் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார். கார்டன் பிரவுனின் உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்காவிலும் கோரிக்கை எழவே, அதிபர் ஜார்ஜ் புஷ் இப்போது அதே பாணியில், அரசாங்கத்தின் நிதி உதவி, சம்பந்தப்பட்ட வங்கிகளில் பங்கு மூலதனமாகவே செலுத்தப்படும். அவை "தாற்காலிகமாக' தேசியமயமாக்கப்படும், அந்த வங்கிகளின் நிலைமை சீரடைந்தபிறகு, அதன் நிர்வாகங்கள் அரசாங்கத்தின் கையிலுள்ள பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்க நேர்ந்தது.
இந்த நிகழ்ச்சிப் போக்குகள் உணர்த்துகிற உண்மைகள், பொருளாதார சீர்திருத்தங்களை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்தவர்களுக்குக் கசப்பானவையாகவே உள்ளன. உலகமயம் தாராளமயம் என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டுப்பாடற்ற சதிராட்டத்திற்கு வழிவகுத்துவிட்டது. அதன் பயன்பாடு உலக நாடுகளின் அடிப்படைப் பொருளாதார வளர்ச்சிக்கு எள்ளளவும் உதவி செய்யாமல், நிதிச்சந்தை சூதாட்டத்தின் மூலம் ஒரு சிலர் சில பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிக் குடும்பங்கள், அவற்றின் உயர் அதிகாரிகள் மட்டும் கொள்ளை லாபம் கொழிப்பதற்கு இட்டுச் சென்றுவிட்டது.
கடிவாளம் இல்லாத குதிரையாக சந்தைப் பொருளாதாரத்தைப் பாய்ச்சல் மேற்கொள்ள இனியும் அனுமதிக்க முடியாது. கட்டுப்பாடுகள் தேவை. கண்மூடித்தனமான தனியார்மயம் தீங்கானது. நிதி நிறுவனங்களைத் தேசியமயமாக்குவது தாற்காலிகமாகவேனும், முழுமையாக இல்லாமல் பகுதியாகவாவது மிக மிக அவசியம். இவையே அந்தக் கசப்பான உண்மைகள்.
இவற்றுக்கு அப்பால் பொதிந்து கிடக்கிற அடிப்படையான அம்சம் ஒன்றையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தின் மேன்மையை வியந்து பாராட்டும் உலகமயதாராளமயப் பொருளாதாரக் கோட்பாடு, "லாபம் என்றால் தனியார்மயம், நஷ்டம் வந்தால் நாட்டுடைமை' என்பதையே தவிர்க்க முடியாத விதியாக உருவாக்கி இருக்கிறது என்பதே அந்த அடிப்படையான அம்சம்! "இப்போது நெருக்கடியில் சிக்கிவிட்ட நிலையில் அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டாலும், லாபம் வரத்தொடங்கிய பின்னர் அரசாங்கத்தின் பங்குகளைத் திருப்பவும் தனியாரிடம் ஒப்படைப்போம்' என்று அமெரிக்க அதிபர் "தேசியமயம் தாற்காலிகமானதே' என்று வாக்குறுதி தருவதும் இந்த விதியை அடியொற்றித்தான். இந்தியாவில் அமெரிக்காவைப் போலவோ, ஐரோப்பிய நாடுகளைப் போலவோ, நிதித்துறை முழுமையாகத் தனியார் மயமாகி விடவில்லை இன்றுவரை! இடதுசாரிகளின் கொத்தடிமையாகவே செயல்பட நேரிட்டதாகப் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டினாரே அதில் வேறு எந்த உண்மையும் இல்லாமல் போனாலும், அவரும், ப. சிதம்பரமும் மேற்கொள்ளத்துடித்த நிதித்துறைச் சீர்த்திருத்தங்களுக்கு இடதுசாரிகள் நந்தியாகக் குறுக்கே நின்று தடுத்து வந்தனர் என்பது மட்டும் கடந்த நான்காண்டுகள் காட்டியுள்ள உண்மை.
இன்று சர்வதேச நிதிச்சந்தையில் ஓங்கி அடிக்கும் சுனாமிப் பேரழிவு அலைகள் ஓயாத நிலையிலும், நிதித்துறைச் சீர்திருத்தங்களை விரைவில் செயல்படுத்துவது அவசியம் என்று நம் நாட்டின் நிதியமைச்சர் வலியுறுத்தி வருவது யாருடைய நன்மைக்காக என்ற கேள்வி முன் நிற்கிறது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1969ல் 14 பெரிய வங்கிகள் தேசியமயமானது வரை 488 தனியார் வங்கிகள் திவாலாகி விட்டன என்பது பழைய வரலாறு. அதற்குப் பிறகு 1969 முதல் 2004 வரையிலான 35 வருடங்களில் 24 தனியார் வங்கிகள் திவாலாகி விட்டன என்பது புதிய வரலாறு. இந்த திவாலாகிப் போன வங்கிகளையெல்லாம் இணைத்துக் கொண்டு அவ்வங்கிகளின் வாடிக்கையாளர் சேமிப்பையும், வங்கித் துறையின் மீது நம்பிக்கைகளையும் உயர்த்திப் பிடிப்பது பொதுத் துறை வங்கிகள் தாம். இருப்பினும் தனியார்மய மோகம் சற்றும் குறையவில்லை ஆட்சியாளர்களிடம் என்று பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி என்ற வங்கி ஊழியர் மாத ஏடு சுட்டிக்காட்டியுள்ளது நிதர்சனமான உண்மை. இந்த வகையில் "நஷ்டங்கள் மட்டுமே நாட்டுடைமையாகும்' "லாபங்கள் அனைத்தும் தனியார்மயம்' என்ற கோட்பாட்டை மேலை நாடுகளுக்கே "கொடையாக'த் தந்துள்ள பெருமை இந்தியாவின் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களைச் சாரும்!
உ . ரா. வரதராசன்
நன்றி : தினமணி

0 comments: