Thursday, November 6, 2008

காலம் கடந்த ஞானம்

20ம் நூற்றாண்டில் மகத்தான அறிவியல் சாதனைகளின் காரணமாக உணவுப்பொருள் உற்பத்தி பன்மடங்கு பெருகியபோதிலும் உலகின் பல பகுதிகளில் மக்கள் கால் வயிறு, அரை வயிறு உணவு மட்டுமே பெற முடிவது மனித இனத்துக்கே தலைகுனிவை உண்டாக்கும் விஷயம்.
இயற்கையைப் பாதுகாக்கிறதாகச் சொல்லிக்கொண்டு வதந்திகளையும் புரளிகளையும் பரப்புகிற ஒரு கூட்டம்தான் இந்த விஷயத்தில் குற்றம்சாட்டப்பட வேண்டியவர்கள். உதாரணமாக மரபு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குறைந்த செலவில் அதிக விளைச்சலைத் தருவதாக நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவற்றை எதிர்த்துக் கூச்சல் போட எல்லா நாடுகளிலும் ஒரு கூட்டம் இருக்கிறது.
இளவரசர் சார்லஸ் போன்ற பிரமுகர்கள் மரபு மாற்றப்பட்ட பயிர்களை எதிர்த்துக் குரலெழுப்பும்போது குறிப்பாக மேலைநாட்டு ஊடகங்கள் அவர்களுக்குப் பெரும் விளம்பரத்தை அளிக்கின்றன. மரபு மாற்றம் செய்த பருத்தியைச் சரியான முறையில் சாகுபடி செய்து லாபம் சம்பாதித்த விவசாயிகளை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. மாறாக, போலி விதைகளையும் தவறான உத்திகளையும் கையாண்டு சீரழிந்த விவசாயிகளைத்தான் அவை பிரபலப்படுத்துகின்றன. இத்தகைய விஷமங்களுக்கு மேலை நாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் நிகழும் அதர்மப் போட்டியே காரணம்.
1960களில் இயற்கையைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு அணுமின் நிலையங்கள் நிறுவப்படுவதை இக்கூட்டம் தடுத்தது. அதன் காரணமாகவே இன்று பெட்ரோல், டீசல் விலையேற்றமும் ஆற்றல் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளன. இன்று அதே கூட்டம் எத்தனால் பெட்ரோலை உற்பத்தி செய்வதற்காக சோளம், கரும்பு போன்ற பயிர்களைப் பயிரிட உதவித்தொகை தரும்படி அரசுகளைக் கட்டாயப்படுத்துகிறது. அதன் காரணமாக உணவுப் பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
அடுத்து இயற்கைக் காவலர்கள் மனிதச் செயல்களால் உலகின் சராசரி வெப்பநிலை உயர்ந்து கொண்டிருப்பதாகவும், துருவப் பகுதிகளிலுள்ள பனியாறுகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து பல கடற்கரையோர ஊர்களையும், சிறு தீவுகளையும் இன்னும் பத்தாண்டுகளில் மூழ்கடித்துவிடும் என்று மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலை நாடுகளின் அரசுகளும் தொழிலதிபர்களும் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளிலுள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமில வாயு போன்ற பசுங்குடில் வாயுக்களே இதற்குப் பொறுப்பு எனப் பழி போடுகின்றனர். அதன் மூலம் வளரும் நாடுகளின் தொழில் வளப் பெருக்க வேகத்தை முடக்குவதே அவற்றின் இலக்கு என்பது தெளிவு.
ரஷிய விஞ்ஞானிகள் தென்துருவத்தில் 3.5 கிலோமீட்டர் ஆழத்திலிருந்து பனிக்கட்டி மாதிரிகளை எடுத்துச் சோதித்துக் கடந்த நான்கு லட்சம் ஆண்டுகளில் வாயு மண்டலத்தின் கூட்டமைப்பிலும் உலகளாவிய வெப்பநிலையிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றின் மூலம் உலக வெப்ப நிலை உயர்வுக்குக் கரியமில வாயுச்செறிவு அதிகரித்தது காரணமில்லை எனவும் அதற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்தது தான் கரியமில வாயுச்செறிவு அதிகரித்ததற்குக் காரணம் என்று அவர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். வாயு மண்டல வெப்பநிலை உயர்ந்து 500, 600 ஆண்டுகளுக்குப் பின்னரே கரியமில வாயுச்செறிவு உயரத் தொடங்குகிறது. அதாவது இன்று வாயு மண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு உயர்வதற்கு 300 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மேலைநாட்டுத் தொழிற்புரட்சிச் சம்பவங்களே கூடக் காரணமாயிருக்கலாம்.
அத்துடன் கரியமில வாயுவைவிட 5 முதல் 10 மடங்கு அதிகமான செறிவில் நீராவி வாயு மண்டலத்தில் பரவியிருக்கிறது. வாயு மண்டலத்தின் வெப்பநிலை உயர்வுக்குக் கரியமில வாயுவைவிட நீராவியன் பங்குப்பணி பன்மடங்கு அதிகம் என ரஷிய விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சூரியப்புள்ளிக் கதிர்வீச்சு, பூமியின் அச்சுத் தலையாட்டம் கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள், கடலின் மேற்பரப்பில் உப்பின் செறிவு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களாலும் உலகளாவிய வெப்பநிலை உயரும். எனவே கரியமில வாயுவை மட்டும் அதற்குப் பொறுப்பாக்கக் கூடாது. உண்மையில் வாயு மண்டலத்தில் கரியமில வாயு அதிகமாகிறபோது கடல்களிலும் நிலங்களிலும் தாவரங்களும், பயிர்களும் காடுகளும் பெருகியிருக்கின்றன என்று ரஷிய விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இன்றிருப்பதைவிடப் பத்து லட்சம் மடங்கு அதிகமான செறிவில் கரியமிலவாயு பரவியிருந்த காலகட்டங்களில் கூட உயிரினப் பரிணாமம் குலைந்து விடவில்லை என அருட்யுனாவ் என்ற ரஷிய விஞ்ஞானி கூறுகிறார். உலகின் சமன்செய்யும் அமைப்புகள் வானிலையில் ஏற்படும் தீவிர மாற்றங்களின் கடுமையைக் குறைத்து விடுகின்றன. உதாரணமாக வெப்பநிலை உயர்ந்தால் கடல் நீர் அதிக அளவில் ஆவியாகிக் கனத்த மேகங்கள் தோன்றிச் சூரியக்கதிர்களைத் தடுத்துப் பூமிப்பரப்பின் வெப்பத்தைக் குறைக்கும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வளிமண்டல வெப்பநிலை உயர்வைத் தடுப்பதற்கான கியோட்டோ விதிமுறைகள் மேலைநாடுகளின் அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் வளர்ந்து வரும் நாடுகளை முடக்கி விடச் செய்த சதி என கபிட்சா என்ற ரஷிய அறிஞர் கூறுகிறார். அவற்றுக்கு எதிரான கருத்துகளைக் கூறுகிறவர்களுக்குச் சர்வதேச அரங்குகளில் பேச அனுமதி கிடைப்பதில்லை. மேலைநாட்டு ஊடகங்கள் அவர்களை இருட்டடிப்புச் செய்கின்றன. அவர்களுடைய ஆய்வுக்கட்டுரைகள் மர்மமாகக் காணாமல் போக்கப்படுகின்றன.
ஆற்றல் செலவைக் குறைக்கவும், அதிகச் செயல்திறனுள்ள தொழில் உத்திகளை உருவாக்கவும் கியோட்டோ விதிமுறைகள் செய்யும் முயற்சிகளை வரவேற்கலாம். ஆனால் அது நிஜமான சுற்றுச்சூழல் பிரச்னைகளையும், நிலமும் நீரும் தொழில் துறையினரால் மாசுபடுத்தப்படுவதையும் கண்டுகொள்வதில்லை. அது கரியமில வாயுவில் மட்டுமே அளவுக்கு அதிகமான கவனத்தைச் செலுத்துகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் குளிர்சாதனங்களில் பயன்படுத்தப்படும் இஊஇ வாயுக்கள் வளிமண்டல மேற்பரப்பில் உள்ள ஓசோன் படலத்தை அழித்து ஓட்டையாக்குவதாகவும் அதன் மூலம் மக்களுக்குத் தோல் புற்றுநோய் உண்டாகும் எனவும் பெரிதாகப் பிரசாரம் செய்யப்பட்டது. 1982ல் மான்ட்ரியால் விதிமுறைகள் அந்த வாயுக்களின் பயன்பாட்டைத் தடை செய்தது. அதற்கு மாற்றாக பிரியான் என்ற வாயுவைப் பயன்படுத்த உலக நாடுகள் வற்புறுத்தப்பட்டன. அதற்கு ஏகபோகக் காப்புரிமை பெற்றிருந்து டூபான்ட் என்ற அமெரிக்க நிறுவனம் பல்லாயிரம் கோடி டாலர் லாபமடைய அந்தத் தடை உதவியது. ஆனால் இஊஇ வாயுக்கள் ஓசோன் படலத்துக்கு அருகில் கூடப் போவதில்லை என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. பிரியான் வாயு நச்சுத்தன்மையும், வெடிக்கும் தன்மையும் கொண்டது என்று தெரிய வந்ததும் பிரியான் விற்பனை படுத்துவிட்டது.
1970களில் உலக வெப்பநிலை சற்றுக்குறைந்தபோது இதே மேலை நாட்டு அறிஞர்கள் பனியுகம் வரப்போவதாயும் உலகம் முழுவதும் உறைந்து விடப் போவதாயும் பெருங்குரல் எழுப்பினார்கள். அதற்கு வளரும் நாடுகளின் தொழில் துறைகள் வெளியிடும் புகையும் தூசுகளும் சூரியக் கதிர்களைத் தடுப்பதாகக் காரணம் சொன்னார்கள்.
உண்மையில் சூரியப்புள்ளி விளைவு காரணமாக 30 ஆண்டுகளுக்கு வாயுமண்டல வெப்பநிலை படிப்படியாகக் குறைவதும் அடுத்த 30 ஆண்டுகளுக்குப் படிப்படியாக அதிகரிப்பதாயும் தான் இருக்கிறது என்று ரஷிய ஆய்வுகள் காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் அன்டார்டிக்காவில் சராசரி வெப்பநிலை குறைந்து வருவதாயும் அங்குள்ள பனிப்பாறைகளின் அளவு அதிகரித்து வருவதாயும் அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கே.என். ராமசந்திரன்
நன்றி : தினமணி

0 comments: