Friday, August 1, 2008

வியாபாரமா? வாழ்வாதாரமா?

""பூவா தலையா போட்டுப் பார்ப்போம். பூ விழுந்தால் நான் ஜெயித்தேன்; தலை விழுந்தால் நீ தோற்றாய்!'' என்கிற கதைதான் வளர்ச்சியடைந்த நாடுகளின் அடிப்படைச் சித்தாந்தம் போலிருக்கிறது. சமீபத்தில் தோல்வியில் முடிந்திருக்கும் தோஹாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைக்குக் காரணமாக அமைந்திருப்பது இந்த மனப்போக்குதான்.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப் பிரச்னையில், அமெரிக்காவின் நிர்பந்தங்களுக்குப் பணிந்துவிட்டோம் என்கிற களங்கத்தைத் துடைக்கும்விதத்தில், தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமார் 100 வளர்ச்சி அடையும் நாடுகளைச் சேர்ந்த நூறு கோடி விவசாயிகளின் சார்பில் குரலெழுப்பி இருக்கிறார் இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத். கமல்நாத் மட்டும் தலையசைத்திருந்தால் இந்திய விவசாயம் ஒட்டுமொத்தமாக அழிந்திருக்கும் என்றுகூடக் கூறலாம்.
அப்படி என்னதான் நடந்தது உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில்? இந்த அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளாகவே இந்தியாவைப் போன்ற வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளும், பின்தங்கிய நாடுகளும் தங்களது இறக்குமதி விதிகளையும், அதற்கான சுங்க வரிகளையும் குறைத்து, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருள்கள் தங்குதடையின்றி இந்த நாடுகளின் சந்தைகளில் விற்பனை செய்ய அனுமதிப்பது பற்றி விவாதித்து வருகிறது. உலகமயம் என்கிற பெயரில், வளர்ச்சி அடையாத நாடுகளின் சந்தையை வளர்ச்சி அடைந்த நாடுகள் ஆக்கிரமிப்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படை நோக்கம்.
ஆனால், ஆரம்பம் முதலே இந்தியா ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்து வருகிறது. உலகமயம் என்கிற பெயரில் வெளிநாட்டுப் பொருள்களுக்கு நமது சந்தையைத் திறந்துவிடும் அதேநேரத்தில், பல்வேறு அரசு மானியம் பெற்று வளர்ச்சி அடைந்த நாடுகளில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்கள் குறைந்த விலையில் இந்தியச் சந்தைக்கு இறக்குமதியாவதை நாம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதை ஏற்றுக்கொண்டால் இந்தியாவிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமே அழிந்துவிடும் என்பது மட்டுமல்ல, இந்தியாவில் விவசாயமே இல்லாமல் போய்விடும்.
""குறைந்த விலையில் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்வதில் என்ன தவறு? விவசாயக் கூலி வேலைக்கு கிராமங்களில் ஆள் கிடைக்காத நிலையில் நாம் ஏன் விவசாயம் செய்ய வேண்டும்? லாபமில்லாத விவசாயத்தைத் தொடர்வதைவிட, அங்கே தொழிற்சாலைகளையும் குடியிருப்புகளையும் அமைத்து உணவுப் பொருள்களை வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்வதல்லவா புத்திசாலித்தனம்?'' என்கிற வாதங்களை சிலர் முன்வைக்கிறார்கள்.
ஒரு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவுடன் இருப்பதில்தான் அந்த தேசத்தின் பாதுகாப்பே இருக்கிறது என்பதுதான் உண்மை. இறக்குமதியை நம்பி ஒரு தேசம் இருக்குமானால், அந்த நாட்டிற்கு உணவு அனுப்புவதை நிறுத்திப் பட்டினி போட்டு, அங்கே அரசுக்கு எதிராகப் புரட்சியை ஏற்படுத்தி விடலாம். கப்பலை நம்பி மக்களின் வயிறு இருப்பதுபோல ஆபத்து எதுவுமே கிடையாது. இதை அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் உணர்ந்ததால்தான் விவசாயத்துக்கு முன்னுரிமையும், விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்களையும் அளித்து அவர்களது உபரி உற்பத்தியை அரசே வாங்கிக் கொள்கின்றன.
வளர்ச்சி அடைந்த நாடுகள் இப்படி வாங்கும் உபரி உற்பத்தியைக் குறைந்த விலையில் வளர்ச்சி அடையும் இந்தியா போன்ற நாடுகளில் கொட்டி, அங்கிருக்கும் விவசாயத்தை நசிக்கச் செய்து தங்களது கைப்பிடியில் இந்த நாடுகளை வைக்க முயல்கின்றன. அதைத்தான் பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா எதிர்த்து வந்தன, வருகின்றன. இப்போது இந்தியாவைத் தவிர ஏனைய நாடுகளும் அடிபணிந்து விட்டதாகத் தெரிகிறது.
அதுமட்டுமல்ல. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து ஏற்றுமதியாகும் பொருள்களைப் பொருத்தவரை, இதே வளர்ச்சி அடைந்த நாடுகள் தடைகளை நீக்கி இருக்கின்றனவா என்றால் இல்லை. இந்த அளவுக்கு மேல் இந்த நாட்டிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதில்லை என்று வரம்புகள் விதித்திருக்கின்றன. இந்தியத் துணிவகைகளை இத்தனை மில்லியன் டாலர்கள்தான் இறக்குமதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா போன்ற நாடுகளில் நிபந்தனைகள் உண்டு.
""நான் செய்தது சரியா, தவறா, நான் வில்லனா, ஹீரோவா என்பதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளில் விவசாயம் என்பது வியாபாரம். ஆனால் எங்கள் இந்தியாவில் விவசாயம் என்பது அறுபது கோடி மக்களின் வாழ்வாதாரம். அதைப் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. எனது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வளர்ச்சியடையும் நாடுகளில் உள்ள ஏழை விவசாயிகள் சார்பில் நான் குரல் எழுப்பினேன், அவ்வளவுதான்'' என்று கூறியிருக்கும் இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்துக்குப் பாராட்டும் நன்றியும் கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்!



நன்றி : தினமணி

நம்பிக்கை சரிகிறது...!

கடந்த 22ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிகளைச் சார்ந்த 14 எம்.பி.க்கள் அரசுக்கு ஆதரவாகவும், ஆளுங்கட்சியினை ஆதரிக்க வேண்டும் என்று தங்கள் கட்சி முடிவெடுத்து விப் எனப்படும் சட்டபூர்வமான தாக்கீது அனுப்பிய பின்னரும் 6 சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்களும் ஒரு காங்கிரஸ் எம்.பி.யும் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மேலும் 7 கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் சபைக்கு வராமல் புறக்கணித்துள்ளனர்.
நமது நாட்டிற்கு அணுசக்தி ஒப்பந்தம் இன்றியமையாத ஒன்று. அதனைத் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியினர் எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல் தேசநலனைக் கருத்தில் கொள்ளாமல் எதிர்க்கின்றனர். எனவே நாங்கள் எங்கள் கட்சியின் கட்டுப்பாட்டினையும் மீறி ஆளுங் கூட்டணிக்கு ஆதரவளிக்கின்றோம் என முடிவெடுத்து 14 எம்.பி.க்கள் செயல்படவில்லை.
அதுபோலவே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நாட்டு நலனுக்கு எந்த நன்மையும் பயக்காமல் அது நமது நாட்டின் இறையாண்மையை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடமானம் வைக்க செய்யப்படும் ஒரு மறைமுக ஏற்பாடு எனும் இடதுசாரிக் கட்சிகளின் பிரசாரம் சரி எனும் கருத்துடன் தங்கள் கட்சியின் கட்டளையை மீறி அரசுக்கு எதிராக 7 எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. எந்த ஒரு சரியான முகாந்திரமும் இல்லாமல் 10 எம்.பி.க்கள் சபைக்கு வராமல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நிறைவேற மறைமுகமாக உதவியுள்ளனர்.
இவை எல்லாவற்றிருக்கும் காரணம் என்னவாயிருக்க முடியும் என்பதை, மொரீனா நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.பி. அசோக் அர்கால் சபையினுள்ளே ஒரு பெரிய பையிலிருந்து கத்தை கத்தைகளாக நோட்டுக்களை அள்ளி வீசி சாதாரண இந்தியக் குடிமகனுக்கு உணர்த்தினார்.
ஓட்டெடுப்பிற்கு சில நாட்களுக்கு முன்னரே மரியாதைக்குரிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பரதன், ஒரு எம்.பி.க்கு ரூ.25 கோடி விலை பேசப்படுகிறது என்னும் தகவலை குற்றச்சாட்டாக மக்கள் மன்றத்தில் வைத்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் எல்லா நடவடிக்கைகளும் நடந்தேறி அகில இந்தியாவும் அதிர்ச்சிக்குள்ளாகி, ""எங்கே போகிறது இந்தியா?'' எனும் கேள்வியை நம்முன் எழுப்பி, நமது நாட்டிற்கு ஜனநாயகம் தேவைதானா? என்னும் அடிப்படைக் கேள்வியை எழுப்பியுள்ளது.
""ஜனநாயகம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் ஒரு அரசியலமைப்பு. ஏனென்றால், சரியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் அறிவு முதிர்ச்சியும் கல்வியும் பெற்றவர்கள் அல்லர் சாதாரண பெருவாரியான மக்கள்!'' எனச் சொன்னவர் இந்த உலகின் முதல் முதலாக ஜனநாயகம் பிறந்து நடைமுறையிலிருந்த கிரேக்க நாட்டின் தலைசிறந்த தத்துவஞானி பிளாட்டோ! அந்தக் காலம், அதாவது கி.மு. 430வில் ஏதென்ஸ் மாநகரின் சிட்டி ஸ்டேட் எனப்படும் நகர அரசாங்கத்தை நாம் கூர்ந்து நோக்கினால் அங்கே நேரடி ஜனநாயகம் தழைத்து நடைமுறையில் இருந்ததைக் காணலாம்.
நகர அரசாங்கம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது: மக்களாலான ஒரு அசெம்பிளி, இரண்டாவது ஒரு கவுன்ஸில், மூன்றாவதாக ஒரு நீதிமன்றம். அசெம்பிளியில் ஏதென்ஸ் மாநகரில் 30 வயதைத் தாண்டிய எல்லா ஆண்களும் உறுப்பினர்கள். அன்றைய ஏதென்ஸ் நகரில் சுமார் 3 லட்சம் பிரஜைகள். எனினும், அடிமைகள், வெளிநாட்டவர், பெண்கள், வயோதிகர், சிறுவர்கள் ஆகியோர் தவிர்த்து சுமார் 5000 பேர்கள் அசெம்பிளி உறுப்பினர்கள். அதாவது, தகுதி வாய்ந்த எல்லா மக்களும் அசெம்பிளி உறுப்பினர்களே! கவுன்சிலில் 500 உறுப்பினர்கள். இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். கவுன்ஸில் தினமும் கூடும். அரசியலமைப்புச் சட்டங்களையும், சட்டம் ஒழுங்கினையும் பராமரிக்க ஜட்ஜ்கள் அசெம்பிளியின் உறுப்பினர் மக்களிலிருந்து பெயர்களின் அகர வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பேர்!
இதுபோன்ற நேரடி ஜனநாயகம் அதிக எண்ணிக்கையில் எல்லா மக்களுக்கும் வாக்குரிமை வழங்கிய பின்னர் நடைமுறைப்படுத்த முடியாது என்பதனால் ஏற்பட்டதுதான் மறைமுக ஜனநாயகம். நாடாளுமன்ற மறைமுக ஜனநாயகத்தில் மக்களின் பிரதிநிதிகளாக உதித்தவர்களே எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும். நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தேசத் தலைவர்கள் அன்றைய காலகட்டத்தில் என்னென்ன வகையான தவறுகளும் சிக்கல்களும் நமது அரசியமைப்பில் உருவாகலாம் என்றெல்லாம் சிந்தித்து விவாதித்து அவற்றிற்கெல்லாம் விடைகாணும் விதமாக நமது சட்ட விதிகளையும் நடைமுறைகளையும் வகுத்தார்கள். ஆனால் அவர்களது அறிவாற்றலையும் நுண்ணறிவையும் மீறி நமது மக்கள் பிரதிநிதிகள் நடந்து வருவது சில காலமாகவே தொடர்ந்துள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், இப்போது நிலக்கரி மந்திரி பதவியை எதிர்பார்த்து அரசுக்கு சாதகமாக ஓட்டளித்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர், சிபு சோரன் ரூ.1.62 கோடி பணம் வாங்கிக் கொண்டு அன்றைய பிரதமர் நரசிம்மராவின் அரசு கவிழாத வண்ணம் வாக்களித்தார்.
1996ம் ஆண்டு சி.பி.ஐ. திடீர் ஆய்வு செய்து முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் சுக்ராமின் இல்லத்திலிருந்து 3 கோடியே 60 லட்சம் ரூபாயை கைப்பற்றியது. பங்குச் சந்தை ஊழலில் பிடிபட்ட ஹர்ஷத் மேத்தா என்னும் நபர், அன்றைய பிரதமருக்கு ரொக்கமாக ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 2001 ஆண்டு பாஜக தலைவர் பங்காரு லஷ்மணனிடம் ரூ.ஒரு லட்சம் ரொக்கமாக கொடுக்கப்பட்ட பணம் மறைத்து வைக்கப்பட்ட கேமாராக்களில் படமாக்கப்பட்டு எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. 2005ல் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப பணம் வாங்கியதில் கையுங்களவுமாக பல எம்.பி.க்கள் பிடிபட்டு அவையிலிருந்து நீக்கப்பட்டனர்!
இவற்றைச் சரியான முறையில் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்க நமது சட்டங்களில் இடமில்லை. நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பெரிய தலைவர்கள் இதுபோன்ற ஊழல் அரசியல் நடவடிக்கைகளைத் தங்கள் சந்ததியினர்கள் செய்வார்கள் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொது வாழ்க்கையில் ஒழுக்கம் நமது இந்திய கலாசாரத்தில் இல்லையோ எனும் ஐயப்பாடு எழுகிறது!
நம்மோடு அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், உயரதிகாரிகள், நமது பக்கத்து வீட்டுக்காரர், நமது நண்பர்கள் போன்றவர்கள் சிறிய காரியத்திற்காகக் கூட சொல்கின்ற பொய்கள், செய்கின்ற தில்லுமுல்லுகள் நமது பிரதிபலிப்பான எம்.பிக்களின் இதுபோன்ற முறைகேடுகளை நமக்கு விளக்குகின்றன! இதுபோன்ற மக்களின் பிரதிநிதிகள் எது போல் இருப்பார்கள் என்னும் கேள்வி எழுகின்றது. ""மக்களின் தகுதிக்கேற்ற அரசே அவர்களுக்கு'' என வின்ஸ்டன் சர்ச்சில் கூறினார்.
மறைமுக ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் மிகவும் இன்றியமையாதவை. ஒத்த எண்ணங்கள் உடைய மக்கள் ஒன்றாக சேர்ந்து கட்சிகள் உருவாகின்றன. கொள்கைகளை உருவாக்கி, அவற்றை மக்களுக்கு விளக்கிச் சொல்லி எந்த கொள்கை முக்கியமோ அதனை முன்வைத்து மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தின் அடிப்படை!
ஆனால் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர் அதிகாரத்தை சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டு தனது கட்சியின் உறுப்பினர்களை அடக்கி வைக்க அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு நாட்டு நலன் பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லாத அரசியல் தலைவர்கள் பிற்காலங்களில் உருவாகி ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக மாற்றுவார்கள் என நமது தேசப்பிதா மகாத்மா காந்தி நினைக்கவே இல்லை! அதனால்தான் அவர் காங்கிரஸாருக்கு ஒரு அறிவுரை வழங்கினார்:
""நீங்கள் பார்த்திருக்கும் மிகவும் பலவீனமான ஏழை மனிதன் ஒருவனை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் நடவடிக்கை ஏதாவது ஒரு வகையில் அவனுக்கு உதவுமா என கணக்கிடுங்கள். பசியுடன் இருக்கும் ஏழை இந்தியர்களுக்கு உங்கள் நடவடிக்கையினால் என்ன பயன் என்பதை எண்ணிப் பாருங்கள்!''
உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா எனப் பெயரெடுத்தது. அதுமட்டுமன்றி உண்மையான ஜனநாயக நெறிமுறைகள் குறிப்பாக சிறப்பான தேர்தல் நடைமுறைகள் மற்றும் பயமின்றி எல்லா விஷயங்களையும் நடுநிலையுடன் விவாதம் செய்யும் பத்திரிகைகள் உள்ள நாடு எனும் பெயரையும் பெற்ற நாடு.
சமீபகாலமாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் ஏற்படும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசுகள் அமைவது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த நிலையில், தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாக கூட்டணி கட்சிகளின் தவறான பல கோரிக்கைகளுக்கு உட்பட்டு நன்நடத்தை விதிகளை காற்றில் பறக்கவிட்டு, மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுவது ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள அனைவரையுமே வேதனைப்பட வைக்கிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை, பாராளுமன்ற உறுப்பினர்களின் நாணயமான நடத்தை என்பது சரித்திரம் நமக்கு போதித்த பாடம். 1774ம் ஆண்டு எட்மண்ட் பர்க் எனும் ஆங்கிலேய நாடாளுமன்ற உறுப்பினர் தன்னை தேர்ந்தெடுத்த பிரிஸ்டல் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு கூறினார்: ""உங்கள் எம்.பி. ஆகிய நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாகவும் நல்லது செய்பவனாகவும் இருப்பேன்! ஆனால், நாட்டின் நன்மைக்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டு அது சில வழிகளில் தொகுதி மக்களாகிய உங்களை பாதிக்குமேயானால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் நாட்டு நன்மையை கருத்தில் கொண்டு நான் அச் சட்டத்திற்கு வாக்களிப்பேன்!''
இதனைப் படித்துப் பார்த்திருப்பார்களா நமது எம்.பி.க்கள். ஒரு நாட்டின் கலாச்சாரத்திற்கு ஒத்துவராத அரசியலமைப்பும் ஆட்சிமுறையும் அந்நாட்டின் மீது திணிக்கப்பட்டால் வெற்றியடைவது சாத்தியமல்ல என திடமாக நம்புகிறார் சிங்கப்பூரின் தேசப்பிதா லீ குவான் யூ. ""ஒரு நாட்டு மக்களின் பழைய காலத்திற்கு சிறிதும் ஒவ்வாத ஆட்சிமுறை, மேலைநாடுகளில் அது வெற்றி கண்ட காரணத்திற்காக மட்டும், திணிக்கப்படலாகாது! உதாரணமாக சைனாவில் நீங்கள் ஜனநாயகத்தை புகுத்தும் முன்னர் அந்நாட்டின் 5000 ஆண்டுகள் சரித்திரத்தில் தலைகள் எண்ணப்படவில்லை என்பதனையும், அரசர்கள் வைத்ததுதான் சட்டம், கீழ்ப்படியாதவர்களின் தலைகள் கொய்யப்படும் என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்! மேலைநாடுகளின் ஆட்சிமுறைக்கு ஆசிய மக்கள் தயாராக இல்லை!'' எனக் கூறினார் அவர்.
ஆண்டாண்டு காலம் அடிமைகளாக வாழ்ந்த நமக்கு சுதந்திர ஜனநாயக ஆட்சிமுறை சரிப்பட்டு வராதோ எனும் பயங்கலந்த சந்தேகம் சமீபகால சம்பவங்களால் ஏற்படுகிறது.

என். முருகன்
(கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற ஐ.ஏஎஸ். அதிகாரி)
நன்றி : தினமணி

நூலக வாசகர்களுக்கு "நேரம்' சரியில்லை!

""ஜூன் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் தாலுகா தலைநகரங்களில் உள்ள நூலக வாசகர்களுக்கு "நேரம்' சரியில்லாமல் போய்விட்டது!
மே 31ம் தேதி வரை காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருந்த நூலகங்கள் ஜூன் 1ம் தேதி முதல் பொது நூலகத் துறையால் புதிய வேலைநேரத்தில் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாமல் நூலகம் திறக்கப்படும் எனக் கூறி புதிய வேலை நேரத்தில் நூலகங்கள் திறக்கப்படுகின்றன.
மற்ற அரசு அலுவலகத்திற்கும் நூலகத்திற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதனால் தான் நூலகத்திற்கான வார விடுமுறை வெள்ளிக்கிழமை வைக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு வேலைநாள். ஞாயிறு நூலகம் இயங்கும். இதற்கு காரணம் விடுமுறை நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் நூலகத்திற்கு வந்து படிக்கவும் புத்தகம் எடுத்துச் செல்வதற்காகவும்தான்...!
1993ஆம் ஆண்டுக்கு முன்பெல்லாம் நூலகங்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் செயல்பட்டன. 1993ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நூலகத்தின் வேலைநேரம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படத் தொடங்கின. காலையில் அரை மணி நேரம் அதிகமாக்கப்பட்டு இரவில் அரை மணி நேரம் குறைக்கப்பட்டது.
இரவு 7.30 மணி வரை, படிக்கவும் புத்தகம் மாற்றவும் வரும் வாசகர்கள் அப்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்கள் பணிகளை முடித்துவிட்டு 6 மணிக்கு மேல் நூலகம் வந்தார்கள்; அதற்கு ஜெயலலிதா அரசு முட்டுக்கட்டை போட்டு ஏழு மணிக்கே நூலகத்தை இழுத்து மூட ஆணையிட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் 2008ஆம் ஆண்டில் நூலக வாசகர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
வாசகர்களின் விருப்பத்தைக் கேட்காமல் அரசே தன்னிச்சையாக நூலக வேலை நேரத்தை தாலுகா நூலகங்களில் மாற்றியுள்ளது பொதுமக்களுக்கும் நூலக வாசகர்களுக்கும் நிச்சயமாக மரண அடிதான். நூலகங்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு கங்கணம் கட்டி செயல்படுகிறதா? பொதுமக்கள் தங்கள் வீட்டு வரி கட்டும்போது நூலக வரி 10 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படுகிறது; அதாவது ஒருவர் வீட்டு வரி ரூ. 100 கட்டுகிறார் என்றால் நூலக வரி 10 சதவீதம் சேர்த்து ரூ. 110 வீட்டு வரியாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நூலக வரியை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் தனியாக நூலகத்துறையினரிடம் கொடுத்து விடுகிறார்கள். இந்த நூலக வரியைக் கொண்டு தான் நூலகத்தின் செலவினங்கள் செய்யப்படுகின்றன.
ஆக, நாம் ஒவ்வொருவரும் அரசு நூலகங்களின் பங்குதாரர்களாக உள்ளோம்; நூலக வளர்ச்சியில், அக்கறையில் நூலகத் துறையை விட நமக்குத்தான் அதிக உரிமை உள்ளது.
""பள்ளிக்கு மிக அருகில் அரசு நூலகங்கள் இருக்கும்போது, முன்கூட்டியே பள்ளிக்கு வரும் மாணவர்கள் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒருமணி நேரம் தங்களின் பொது அறிவை வளர்த்துக் கொள்ள அன்றைய நாளிதழ்களைப் படித்து வந்தார்கள். அனைத்து நாளிதழ்களையும் காசு கொடுத்து வாங்கிப் படிக்க முடியாத மாணவர்கள் காலை நேரத்தில் அரசு நூலகத்தில் இலவசமாக நாளிதழ்கள், வார, மாத இதழ்களைப் படித்து மகிழ்ந்தார்கள். பள்ளிக்குச் சென்று முக்கியமான செய்திகளை சக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். அந்த வாய்ப்பு இனிமேல் கிடைக்காது. மாணவர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் துறை ஊழியர்கள் தாங்கள் வேலைக்குச் செல்லும் முன் நூலகத்தைப் பயன்படுத்தினார்கள். பத்து மணிக்கு தான் அரசு அலுவலகங்களுக்கும் தனியார் அலுவலகங்களுக்கும் சென்று வந்தார்கள்.
இவர்கள் அனைவரும் 1ம் தேதியில் இருந்து நூலகத்தைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. நூலகம் காலை 10 மணிக்குத் திறக்கப்படும் போது எப்படி வர முடியும்? இவர்களால் மாலை நேரங்களிலும் நூலகத்தைப் பயன்படுத்த முடியாது. பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து வீட்டிற்குச் சென்று பிறகு நூலகம் வந்தால் 6 மணியைத் தாண்டிவிடும். இதேபோல்தான் வேலைக்குச் செல்பவர்களின் நிலையும். 6 மணிக்குத்தான் அரசு மற்றும் தனியார் துறை வேலை முடியும். கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளி முடிந்து, நகர்ப்புறத்திற்கு வரும்போது 6 மணியைக் கடந்து விடும். முன்பு 6 மணிக்கு மேல் தான் ஆசிரியர்கள் நூலகத்திற்கு வருவார்கள்.
குடிமகன்களின் தாகத்தைத் தீர்க்க டாஸ்மாக் மதுபானக் கடைகள் இரவு 11 மணி வரை திறந்திருக்கிறது. ஆனால், அறிவு தாகத்தைத் தீர்க்கும் அறிவுச் சுரங்கமான நூலகங்கள் மாலை 6 மணிக்கே பூட்டப்படுகிறது. என்ன கொடுமை ஐயா இது!
ஆர். ராஜதுரை

நன்றி : தினமணி

புழலா, தீவிரவாதிகளின் புகலா..?

சிறைச்சாலை என்பது தவறு செய்தவர்களைச் சீர்திருத்தும் இடம் என்பது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் சிறைச்சாலைகள் சதித்திட்டங்கள் தீட்டவும், சமூக விரோதிகளை உருவாக்கவும், குற்றம் செய்யாமல் தவறுதலாகக் கைது செய்யப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக்கவும்தான் பயன்படுகிறது என்பதுதான் நடைமுறை உண்மை போலிருக்கிறது. அதிலும், சமீபகாலமாகச் சிறைச்சாலைகளில்தான் தீவிரவாதிகள் சதித்திட்டங்களைத் தீட்டுகிறார்கள் என்று கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.
சிறைச்சாலை என்பதும் சிறைத்தண்டனை என்பதும் சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டு தனிமையும், கண்டிப்பும், கட்டுப்பாடுமாகக் கழிய வேண்டிய இடம் என்பதெல்லாம் பழங்கதை. இப்போது பல குற்றவாளிகள் வெளியில் இருப்பதைவிடப் பாதுகாப்புடனும் சகல செளகரியங்களுடனும்தான் சிறையில் இருக்கிறார்கள். செல்போன் முதல் ஸ்காட்ச் விஸ்கிவரை எதுவேண்டுமானாலும் அங்கிருக்கும் கைதிகளுக்குக் கிடைக்கிறது என்று சொன்னால் யாரும் ஆச்சரியப்பட வேண்டாம். அதுதான் யதார்த்த உண்மை.
ஆயுள்தண்டனைக் கைதியாக இருக்கும் நளினியை பிரியங்கா காந்தி ரகசியமாகச் சந்தித்துச் செல்கிறார். வேலூர் மத்திய சிறைச்சாலையில் எந்தவிதமான பதிவுகளிலும் அவர் கையெழுத்துப் போடவில்லை. அவர் எப்படி, யாருடைய உத்தரவின் பேரில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் ஒரு ஆயுள்தண்டனைக் கைதியைச் சந்தித்தார், என்ன பேசினார் என்பதை இதுவரை அரசு வெளியிடவில்லை. அதைப்பற்றி விசாரணை எதுவும் நடந்ததா என்பதும் தெரியவில்லை.
பிரியங்கா காந்திக்கு என்ன சட்டமோ அதுதானே இந்தியாவிலுள்ள ஏனைய பிரஜைகளுக்கும்! யார் வேண்டுமானாலும் போலி விலாசத்தைச் சொல்லிக் கொண்டு எந்தக் கைதியையும் சந்தித்துவிட முடியும் என்னும்போது புழல் மத்திய சிறையிலுள்ள பயங்கரத் தீவிரவாதி அலி அப்துல்லாவிடம் மொபைல் போனும், சிம் கார்டும் இருப்பதிலும், நெல்லையைச் சேர்ந்த செய்யது காசிம் என்ற ஹீரா அவனை அடிக்கடி புழல் மத்திய சிறையில் சந்தித்ததிலும் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?
பொருளாதாரக் குற்றங்களில், நிதிநிறுவன மோசடியில், அன்னிய நாட்டில் வேலைவாய்ப்பு என்று கூறி ஏமாற்றுவதில் ஈடுபடும் அனைவரும் சிறையில் ஆறு மாதம், ஒரு வருடம் கழிப்பதைத்தான் விரும்புகிறார்கள். பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள், சில லட்சங்களைச் சிறைத்துறை அதிகாரிகளுக்கும், காவலாளிகளுக்கும், காவல்துறையினருக்கும் செலவழித்துவிட்டு, மக்கள் தங்களை மறந்த பிறகு வெளியே போவதுதான் தங்களுக்குப் பாதுகாப்பு என்று கருதுகிறார்கள். இவர்கள் சிறைச்சாலையில் வாழும் ராஜவாழ்க்கை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.
1894ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட சிறைச்சாலைச் சட்டத்தை வைத்துக் கொண்டுதான் சுதந்திர இந்தியச் சிறைச்சாலைகள் செயல்படுகின்றன. காலனி ஆதிக்கச் சட்டங்கள் என்பதால், சிறை என்பது பொதுமக்கள் பார்வைக்கு அப்பாற்பட்ட, பத்திரிகைகள் மற்றும் பொதுநல ஆர்வலர்களின் புலன் விசாரணை தடை செய்யப்பட்ட பகுதியாகத்தான் இன்றுவரை இருந்து வருகிறது.
சிறைக்குள் நடப்பதைப் படம்பிடிக்க முடியாது. கேள்வி கேட்க முடியாது. அந்த நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் அது வெளியே தெரியாது, தெரியக் கூடாது. இந்த நிலைமை சமூக விரோதிகளுக்கும், சுயநல அதிகாரிகளுக்கும் வசதியாக இருக்கிறது. மக்களாட்சியில் யாரும் எதையும் மக்களின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கக்கூடாது என்பது ஏட்டில் இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை என்பதற்கு சிறைச்சாலைகள் ஓர் உதாரணம்.
221 ஏக்கர் பரப்பளவில், சுமார் ரூ. 77 கோடியில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் சார்பில் "ஹட்கோ' உதவியுடன் கட்டப்பட்டிருப்பதுதான் புழல் மத்திய சிறைச்சாலை. தண்டனைக் கைதிகளுக்கு, ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று மூன்று பகுதிகளும், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் போன்றவர்களை அடைத்து வைக்க 100 தனி அறைகளும் இந்தச் சிறையில் இருக்கின்றன.
கைதிகள் எளிதில் தப்பிவிட முடியாதபடி மின்சார வேலி, 16 கண்காணிப்பு கோபுரங்கள், பாதுகாப்புப் பணியில் இரவு பகலாக 90 கமாண்டோ படையினர், மருத்துவமனை, சிறைக் காவலர்களுக்கான குடியிருப்புகள் என்று புழல் சிறையின் புகழ் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. இத்தனை இருந்தும், தீவிரவாதிகளின் சதித்திட்டங்கள் உருவாகும் இடமாகச் சிறைச்சாலை இருந்தால் என்ன பயன்?
சிறைத்துறையின் மேலதிகாரிகள் என்னதான் திறமைசாலிகளாகவும், நேர்மையானவர்களாகவும் இருந்து என்ன பிரயோஜனம்? கீழ்மட்டத்தில் புரையோடிப் போயிருக்கும் ஊழலையும், தீவிரவாதிகள் மற்றும் சமூகவிரோதிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும் சிறைக்காவலர்களையும் களையெடுக்காதவரை, புழலும் ஏனைய சிறைச்சாலைகளும், சமூகவிரோதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் புகலிடமாகத்தான் தொடரும்.

நன்றி : தினமணி

இந்திய ஜனநாயகம் பிழைக்குமா?

நாடாளுமன்றத்தில் தனது அரசின் மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வெற்றி கிடைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது.
இந்த வெற்றிக்குக் கொடுக்கப்பட்ட விலை மிகப்பெரியது. கை மாறிய பணப்பெட்டிகளை நான் குறிப்பிடவில்லை. மாறாக நாட்டின் உன்னதமான ஜனநாயக மரபுகள் பலி கொடுக்கப்பட்டுவிட்டதைக் குறிப்பிடுகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களை வசப்படுத்த திரைமறைவில் நடைபெற்ற பேரங்கள் அளிக்கப்பட்ட ரகசிய வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியின் மரியாதையை மட்டுமல்ல, நாட்டின் மரியாதையை அடியோடு அழித்துவிட்டன.
மிகப் பழைமை வாய்ந்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஜனநாயகமே இளம் இந்தியாவுக்கு ஏற்றது என ஜவாஹர்லால் நேருவும் மற்ற தலைவர்களும் உறுதியாக நம்பினர். அதை ஏற்று இந்தியாவில் நடைமுறைப்படுத்தி உன்னதமான ஜனநாயக மரபுகளுக்கு நிலையான அடித்தளம் அமைத்தனர். சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியடிகள் தலைமையில் தொண்டு துன்பம் தியாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தூய்மையான அப்பழுக்கற்ற பொதுவாழ்வுக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்கள் உருவாக்கிய சிறந்த மரபுகள் இப்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்தியாவைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளில் ஜனநாயகம் மறைந்து சர்வாதிகாரம் தலைதூக்கியது. எடுத்துக்காட்டாக இந்தோனேசியாவின் சுதந்திரப் போராட்டத் தளபதியாக இருந்து அம்மக்களை வழிநடத்தி வெற்றி கண்ட சுகர்ணோ, தான் சாகும் வரை தானே அந்நாட்டின் குடியரசுத் தலைவர் என்பதை அரசியல் சட்டத்திலேயே இடம்பெறச் செய்தார். சர்வாதிகார நாடுகளுக்கு நடுவே இந்தியா ஒரு ஜனநாயகப் பசுஞ்சோலையாகத் திகழ்ந்தது.
நேரு விரும்பியிருந்தால் அவரும் அவ்விதமே செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்ய அவர் விரும்பவில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் தொகுதிக்குச் சென்று அந்த மக்களிடம் வணங்கி வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்வதை தனது கடமையாகக் கொண்டிருந்தார். நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் நடக்க வழிவகுத்து ஜனநாயகத்தைப் பரிமளிக்கச் செய்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருந்த அம்பேத்கர், எஸ்.ஏ. டாங்கே, ஹிரேன் முகர்ஜி, பூபேஷ் குப்தா, ஏ.கே. கோபாலன், சியாம பிரசாத் முகர்ஜி, கிருபளானி, லோகியா, மதுலிமாயி, என்.ஜி. ரங்கா, ஏ. கிருஷ்ணசாமி, இரா. செழியன், எம்.ஆர். மசானி, பிலுமோடி போன்ற தலைவர்கள் தங்களின் வாதத் திறமையால் ஜனநாயகம் தழைக்கப் பெரிதும் உதவினார்கள்.
1962ஆம் ஆண்டு சீனப்படையெடுப்புக்குப் பிறகு நேரு அரசின் மீது முதன்முதலாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் நேருவின் நெருங்கிய தோழர்களாக இருந்த கிருபளானி, லோகியா போன்றவர்கள் மிகக்கடுமையாக விமர்சனம் செய்தபோதுகூட நேரு கோபமடையவில்லை. நாடாளுமன்றத்திற்கு வெளியே ராஜாஜி ""நேரு பதவி விலக வேண்டும்'' என்று மிகக் கடுமையான தாக்குதலை நடத்தினார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இத்தகைய விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை மட்டுமல்ல, ஆட்சித் தேர் தடம் மாறாமல் செல்ல உதவும் காரணிகள் என்பதை உண்மை ஜனநாயகவாதியான நேரு தெளிவாக உணர்ந்திருந்தார். எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை... முறியடிக்க இழிவான வழிமுறைகளை அவர் ஒருபோதும் கடைப்பிடிக்கவில்லை. சொல்லாலும் செயலாலும் உண்மையான ஜனநாயகவாதியாகத் திகழ்ந்தார். இந்திய ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு அவரின் இந்தப் பண்பு நலன்களே பெரிதும் காரணங்களாக இருந்தன.
1964ல் நேரு மறைந்தபோது அவர் ஏந்தியிருந்த ஜனநாயக தீபத்தை உயர்த்திப் பிடிக்க பெருந்தலைவர் காமராஜர் முன்வந்தார். நேருவுக்குப் பின் யார் என்ற கேள்வி விசுவரூபம் எடுத்தது. இந்தியப் பெருந்தொழிலதிபர் ஒருவர் பணமூட்டைகளுடன் தில்லியில் வந்திறங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசத் தொடங்கினார். செய்தியறிந்த காமராஜர் அவரை அழைத்து எச்சரிக்கை செய்தார். ஜனநாயகத்தைக் கறைப்படுத்த முயன்ற அவர் அஞ்சி ஒதுங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசி கருத்தறிதல் முறையின் மூலம் நேருவுக்குப் பின் லால்பகதூர் பிரதமராகத் தேர்ந்தெடுக்க வழிகோலிய பெருமை காமராஜரைச் சாரும்.
லால் பகதூர் மறைந்தபோது இந்திராவுக்கும் மொரார்ஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தவிர்க்க வேண்டுமானால் காமராஜரே பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என மொரார்ஜி உள்பட பல தலைவர்கள் வற்புறுத்திய போதிலும் காமராஜர் ஏற்கவில்லை. பதவி, பண பேரங்களின் தலையீடு இன்றி ஜனநாயக ரீதியில் இந்திரா தேர்ந்தெடுக்கப்பட உதவினார்.
மிக நெருக்கடியான காலகட்டங்களில் ஜனநாயகப் பயிர் அழிந்துவிடாமல் காத்த பெருமை காமராஜருக்குரியது.
ஆனால் தங்களுக்குப் பிறகும் இந்நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்து நிற்க வேண்டுமென நேரு, காமராஜர் ஆகியோர் கண்ட கனவு இன்று சுக்குநூறாகச் சிதறியிருக்கிறது.
1975ஆம் ஆண்டில் நேருவின் மகளான இந்திரா காந்தி தடம் மாறினார். ஜனநாயக ரீதியில் எழுந்த எதிர்ப்புகளைச் சந்திக்க இயலாமல் அவசர கால நிலையைப் பிரகடனம் செய்து சர்வாதிகாரம் படர வழிவகுத்தார்.
அரசியலில் இருந்து விலகி சர்வோதயத் தொண்டு புரிந்து கொண்டு இருந்த ஜெயப்பிரகாச நாராயண் ஜனநாயகப் பயிரைக் காக்க முன்வந்து துணிந்து போராடினார். மக்கள் அவருக்குப் பின்னால் அணிதிரண்டனர். மீண்டும் ஜனநாயகம் ஆட்சிபீடம் ஏறியது.
பிரதமர் ராஜீவ் காலத்திலும் எதேச்சதிகாரபோக்கு தலைதூக்கியது. போபர்ஸ் ஊழல் பிரச்னையில் உண்மைகளை ராஜீவ் அரசு மூடி மறைத்ததைக் கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகிய அவலம் நிகழ்ந்தது.
பிரதமராக வி.பி.சிங் பதவியேற்றபோது மண்டல் பிரச்னையை முன் வைத்து அவரது அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்தபோது தவறான வழிகளைக் கையாண்டு பதவியில் நீடிக்க அவர் விரும்பவில்லை.
அவருக்குப்பின் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்ற சந்திரசேகர் காங்கிரஸின் நியாயமற்ற நிர்பந்தங்களுக்குப் பணிய மறுத்துப் பதவி விலக முனைந்தாரேயொழிய எப்படியாவது பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென விரும்பவில்லை.
பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது தனது அரசைக் காப்பாற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அது அம்பலமான விவகாரம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது பாஜக தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன், சமதா கட்சித் தலைவராக இருந்த ஜெயாஜெட்லி மற்றும் 31 பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் ஆயுத பேரம் தொடர்பாக பணம் பெற்றதை தெஹல்கா செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது. 2005ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்கு 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதை ஸ்டார் செய்தி நிறுவனம் ஆதாரப்பூர்வமாக வெளியிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள் பட்டியலும் பத்திரிகைகளில் வெளியானது.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் நமது நாடாளுமன்ற ஜனநாயக மரபுகள் நாளுக்கு நாள் சீர்குலைந்து வந்ததை எடுத்துக்காட்டுகின்றன.
மாநில சட்டமன்றங்களில் பதவிக்காகவும், பணத்திற்காகவும், கட்சி தாவுகின்ற போக்குகள் மலிந்திருந்தன. அண்மைக்காலமாக நாடாளுமன்றத்திலும் இந்த நோய் பரவிவிட்டது.
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளில் மிகப் பெரும்பான்மையான கட்சிகளிலிருந்து பலர் மன்மோகன் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். பாஜகவிலிருந்து 7, ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து 3, மதிமுகவிலிருந்து 2, தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதாதள், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிலிருந்து தலா ஒருவர் வீதம் கட்சி மாறி வாக்களித்திருக்கிறார்கள். ஆக பதவி பண பேரங்களுக்கு இரையாகாத கட்சிகளே இல்லை என்ற நிலை உருவாகியிருப்பது ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கு அறிகுறியாகும்.
பல்வேறு கட்சிகளிலிருந்து உறுப்பினர்களை வலைவீசிப் பிடித்ததைப் பெரும் சாதனையாகக் கருதி காங்கிரஸ் தலைவர்கள் கொண்டாடுகிறார்கள். தங்கள் கட்சியிலிருந்து ஏற்கெனவே விலக்கப்பட்ட ஹரியாணா உறுப்பினர் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் கட்டுப்பாடாக அரசுக்கு வாக்களித்ததையும், எதிர்க்கட்சியான பாஜகவிலிருந்து பலரைக் கட்சி மாறி வாக்களிக்க வைத்ததையும், இரட்டிப்பு வெற்றியாகக் காங்கிரஸ்காரர்கள் கருதுவது நேரு வகுத்த சிறந்த ஜனநாயக மரபுகளிலிருந்து விலகிச் செல்வதாகும் என்பதை அவர்கள் உணராததையே காட்டுகிறது.
இதன் விளைவாக வரவிருக்கும் அபாயத்தை அவர்கள் கொஞ்சமும் உணரவில்லை. அம்பானி போன்ற பெருந்தொழிலதிபர்களின் உதவியின் மூலம் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை விலைக்கு வாங்கியது நாளை தங்களுக்கும் எதிராகத் திரும்பும் என்ற உண்மையைக் காங்கிரஸ்காரர்கள் உணர வேண்டும்.
அமர்சிங் போன்ற, சந்தர்ப்பவாதிகளின் மூலம் காங்கிரஸ் கட்சியின் அதிகார மையத்திற்குள் அம்பானிகள் ஆதிக்கம் பெற்றுவிட்டார்கள் என்பது அப்பட்டமான உண்மையாகும்.
கொள்கை அடிப்படையில் இடதுசாரிகள் மட்டுமே கட்டுப்பாடாக நடந்துகொண்டு வாக்களித்துள்ளனர். ஆனாலும் கட்சி சார்பற்றவரான சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மீது நடவடிக்கை எடுத்ததன் மூலம் உயர் பதவிக்குரிய கண்ணியத்தையே காற்றில் பறக்கவிட்டு ஜனநாயக மரபுகளுக்கு இடதுசாரிகள் சேதம் விளைவித்துள்ளனர்.
மத்திய அரசின் வெற்றிக்கு உதவிய பல்வேறு சிறு கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குப் பரிசாகப் பதவிகளைப் பங்கு போடுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வீழ்ந்துவிட்ட ஜனநாயகப் பிணத்தைக் கொத்தித்தின்ன பதவிக்கழுகுகள் தில்லியில் மொய்த்துள்ளன.
இந்திய ஜனநாயகம் பதவிநாயகமாகவும், பணநாயகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் அரசு அமைப்பது, கவிழ்ப்பது ஆகிய எல்லாமும் பணநாயகத்தின் உதவியில்லாமல் நடைபெறாது. இந்தப் போக்கு இறுதியாக சர்வாதிகாரத்தில் போய் முடியும்.
இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியான முசோலினி ஜனநாயகம் பற்றி கூறியதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. ""ஜனநாயகம் என்பது மன்னர்கள் இல்லாத ஆட்சி முறையாகும். ஆனால் மன்னர்களைவிட கொடிய எதேச்சாதிகாரப்போக்கும் அழிவு சிந்தனைகளும் நிறைந்த பல மன்னர்களைக் கொண்டதே ஜனநாயகமாகும். உண்மையான சர்வாதிகாரிகளைவிட இவர்கள் மோசமானவர்கள்.''
பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி

இனிப்பான ஆபத்து!

"சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!' என்பது போன்ற கவர்ச்சியான விளம்பரங்களோடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டாத இனிப்புகளையும், சர்க்கரைக் கட்டிகளையும் நிறைய நிறுவனங்கள் விற்பனை செய்வதைப் பார்த்திருப்பீர்கள். உண்மையில் குளுக்கோஸ் உள்ள சர்க்கரையைப் பயன்படுத்துவதை விட, வேறு வகையான ரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் "சுகர் ஃப்ரீ' தயாரிப்புகளால் உடலின் பல பாகங்களுக்கு மருத்துவ ரீதியாகப் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது, என்கின்றனர் இதைத் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கும் வல்லுநர்கள்.
சர்க்கரை என்பது "குளுக்கோஸ்', "ப்ரக்டோஸ்' ஆகிய இரண்டும் கலந்த கலவையாகும். வெளிப்படையாக பார்த்தால் இவை இரண்டுக்கும் இடையே உருவத்தில் பெரிய வேறுபாடு எதுவும் தெரியாது.
இதில் குளுக்கோஸ் தன்மீது விழும் ஒளியின் கதிர்களை வலது பக்கமாகக் கடத்தும் தன்மையுள்ளது என்பதால் "டெக்ஸ்ட்ரோஸ்' என்றும், ஒளிக் கதிர்களை இடது பக்கமாக கடத்தும் "ப்ரக்டோஸ்', "லெவுலோஸ்' என்றும் குறிப்பிடப்படுகிறது.
பழங்களில் பெருமளவில் காணப்படும் ப்ரக்டோஸ் தனித்திருக்கும் போது இனிப்புத் தன்மை அதிகம் உள்ள பொருளாகும். ஆனால், குளுக்கோசுடன் சேர்ந்து சர்க்கரையாக உருப்பெறும்போது இதன் இனிப்புத் தன்மை குறைவாகவே இருக்கும். இவ்வாறு உருவாகும் சாதாரண சர்க்கரை உடலில் கலக்க இன்சுலின் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது லெவுலோஸ் என்ற பெயரில் உள்ள ப்ரக்டோஸ் உடலில் கலக்க இன்சுலின் தேவையில்லை என மாற்று இனிப்புப் பண்ட தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்சுலின் தேவை இல்லை என்பதையும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்னும் வியாபாரிகளின் கூற்றுகளையும் மருத்துவ ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். சர்க்கரையில் உள்ள குளுக்கோஸ் எனப்படும் டெக்ஸ்ட்ரோஸ் உடலில் உள்ள எல்லா பாகங்களிலும் எளிதாக கலக்கும் தன்மையுடையது. ஆனால், ப்ரக்டோஸ் பெரும்பாலும் கல்லீரலில் தான் கலக்கிறது. இதன் காரணமாக கல்லீரலின் அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படும். குறிப்பாக கல்லீரலில் "லெப்டின்', "இன்சுலின்' உள்ளிட்ட ஹார்மோன்கள் வெளியேறுவது பாதிக்கப்படுகிறது. இதனால், பசியைத் தூண்டும் செல்கள் பாதிக்கப்படுவதோடு, குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும்.
கல்லீரலில் ப்ரக்டோஸ் கலப்பதால் வழக்கமான ஹார்மோன்கள் வெளியேறுவது பாதிக்கப்படுவதோடு, வேறு சில தேவையற்ற சுரப்பிகள் சுரக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால், மாற்று இனிப்புப் பண்ட தயாரிப்பாளர்கள் கூறுவது போல இன்சுலின் தேவை இல்லை என கூறுவது சரியல்ல என்ற கருத்து வலுவடைந்து வருகிறது.
ப்ரக்டோஸை அடிப்படையாகக் கொண்டு இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பவர்கள் இது "லோ கிளைசமிக் இன்டெக்ஸ்' (கர்ஜ் ஞ்ப்ஹ்ஸ்ரீங்ம்ண்ஸ்ரீ ண்ய்க்ங்ஷ்) உடையது என்றும். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் கூறுவதை ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.
இதனால் வேறு சில கெடுதல்களும் உடலுக்கு ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது. "பிளாஸ்மா லிபிட்ஸ்', "யூரிக் ஆசிட்' அளவு அதிகரிக்கும். எனவே, குறைந்த அளவு மாதிரிகளைக் கொண்டு ப்ரக்டோஸை நல்லது என நம்புவது மனிதர்களின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அதிக அளவில் ப்ரக்டோஸ் சேர்வதால் உடலில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கும், உடல் பருமன் அதிகரிக்கும், "லோ டென்சிட்டி லிபிட்ஸ்' போன்றவை அதிகரிக்கும். இதன் காரணமாக உடலில் கொழுப்புச் சத்து அதிகரித்து இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு புரதச்சத்து இழப்பை ஏற்படுத்தி உடல் நல பாதிப்பை உண்டாக்குவதில் குளுக்கோஸைவிட ப்ரக்டோஸ் ஒரு விதத்திலும் குறைந்தது அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சிறுவர்களுக்கு ப்ரக்டோஸ் அதிகமாகக் கொடுத்தால் பல் சிதைவு ஏற்படும்.
ப்ரக்டோஸ் எனப்படும் லெவுலோஸ் அடிப்படையில் தயாரிக்கப்படும் இனிப்புப் பண்டங்கள் குறித்த பரிசோதனைகள் முன்பே திட்டமிடப்பட்ட ஒரு முடிவை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், மனிதர்களின் உடல் நலத்துடன் தொடர்புடைய இத்தகைய ஆய்வுகள் உண்மையைத் தேடும் முறையில் நடைபெற்றிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு அதிகார அமைப்பும் இதனை கடுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதே வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.
குறிப்பிட்ட சிலரின் லாபத்துக்காக அப்பாவி மக்களின் உயிருக்கு உலை வைக்கும் இத்தகைய இனிப்புப் பண்டங்களை அரசு எப்படி அனுமதித்தது என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி?
வி. கிருஷ்ணமூர்த்தி
நன்றி : தினமணி

உறவுகள்

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என குடும்பத்தில்அனைவரும் அமர்ந்து பேசி அளவளாவி மகிழ வேண்டும் என்ற ஆசைஅனைவரிடமும் இல்லாமல் இல்லை.ஆனால், குடும்பத்தில் உள்ளவர்களிடம் மேலோங்கி நிற்கும் கருத்துவேறுபாடுகள், சுமுக உறவு இல்லாமை ஆகியவற்றால் அந்த ஆசைநிறைவேறுவதில்லை.அண்மையில் நண்பர் ஒருவர் தன் சகோதரர் குடும்பத்தினருடன் சுற்றுலாசென்று வந்தார். சுற்றுலா சென்றுவந்த பிறகு நண்பரின் சகோதரரிடம் ஏற்பட்டமாற்றங்களால், தன் குடும்பத்திற்கும் சகோதரர் குடும்பத்திற்கும் இடையே உள்ளநெருக்கம் குறைந்து விட்டதாக அவர் வேதனையுடன் கூறினார்.ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகள் இடையே காலையில் தொடங்கும் சிறுசிறுசண்டை இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நீடிக்கும்.குழந்தைகள் தங்களுக்குள் சண்டையிடுவதும், அடுத்த சில நிமிஷங்களில்சிரித்துப் பேசுவதும் அவர்களிடையே இயல்பாக இருக்கும் குணங்கள்.பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம் ஆகியவற்றைக் கடந்து வேலைக்குச் சென்றுபணம் ஈட்டும் சக்தியைப் பெறும் போதுதான் எண்ண ஓட்டங்களில் மாற்றம்ஏற்படுகிறது.அதுவே திருமணத்திற்குப் பிறகு எழும் மாற்றங்களால் உறவுகளில் விரிசலைஏற்படுத்துகிறது.விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப்பக்குவம் குறைந்து, அதனால் ஏற்படும்மாற்றங்களால் உறவுகளுக்கிடையே விரிசல் அதிகரிக்கிறது.இதனால் தந்தை மகனுக்கு இடையே எழும் கருத்து வேறுபாடுகள், மாமியார் மருமகளுக்கு இடையே எழும் கோபம் ஆகியவை உறவில் பெரும்மாற்றங்களை, விரிசல்களை உருவாக்குகின்றன.திருமணம் ஆகிச் செல்லும் நம் வீட்டுப் பெண், புகுந்த வீட்டில் இருந்துபிரிந்து கணவருடன் தனிக் குடித்தனம் போய்விட வேண்டும் எனஎண்ணுகிறாள். அதே குடும்பத்தில் தன் மகன், வீட்டுக்கு வந்த மருமகளுடன்தனிக்குடித்தனம் செல்லட்டும் என்பதை எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள்.குடும்பங்களில் ஆண் வழி சொந்தங்களை விட பெண் வழி சொந்தங்களுடன்இருக்கும் தொடர்பே அதிகம். பெண் வழி சொந்தம் மனிதனின் வாழ்க்கையில்பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.ஒரு வீட்டுக்கு வரும் மருமகள் எந்த நம்பிக்கையில் வருகிறாள். தன்னைக்கரம் பிடிப்பவன், ஆயுள் முழுவதும் காப்பாற்றுவான். இன்ப, துன்பங்களிலும்முழுப்பங்கு எடுத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் தாய் வீட்டுச்சொந்தபந்தங்களை விட்டு, கணவன் என்ற உறவை நம்பி வருகிறாள்.ஆனால், இன்று கணவன் துணையின்றிக்கூட நாம் வாழலாம், வாழ வேண்டும்என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது.கல்வி, சமூக மாற்றம், அதனால் ஏற்பட்டுள்ள கலாசார மாற்றங்களால் இந்தஎண்ணம் மேலோங்கி வருகிறது.தான் சுதந்திரமாக இருக்க வேண்டும், தன்னுடைய செயல்பாடுகளில் பிறர்தலையிடக் கூடாது என்ற எண்ணம் எழும்போது, அவளது செயல்களில்மாற்றம் தென்படும். தன்னுடைய சுதந்திரத்திற்குப் பாதிப்பு வரும்போது அவள்மாறுபடுகிறாள்.இன்றைய சூழலில் குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச்சென்றால் மட்டுமே ஆடம்பர வாழ்க்கையை நாம் அனுபவிக்க முடியும்.நாளுக்குநாள் தேவைகள் அதிகரித்து வருகின்றன. நம் தேவைகளைப் பூர்த்திசெய்ய நாம் பணத்தைத் தேடிச் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்குத்தள்ளப்படுகிறோம்.சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிள், செல்போன்இதில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துகிறார். நடுத்தரக் குடும்பத்தினர்மேற்கண்ட இரு வசதிகளையும் அனுபவிக்க எண்ணுகிறார்.ஒரு காலத்தில் குடும்பத் தலைவன் உழைத்து அந்தக் குடும்பத்தைக்காப்பாற்றிய நிலை இருந்தது. அந்தச் சூழலில் குடும்பங்களில் பிரச்னைகள்அதிகம் இல்லை. கூட்டுக் குடும்ப முறை உறவை மேம்படுத்தியது.பள்ளிப் பருவத்தில் தந்தை, மகனுக்கு ஒரு நாயகனாகக் காட்சியளித்தார்.அவன் பருவ வயதை எட்டும் வரை தோழனாகக் காட்சியளித்தார். பின்னர்தந்தையின் ஆலோசனை தனயனுக்கு கசப்பைத் தரும். ஒருத்தியை கரம் பிடித்தபிறகு, தாய், தந்தையின் உதவியை அவன் நாடுவது குறைந்து விடும்.தான் எடுக்கும் முடிவுகள், செயல்களுக்கு தந்தையின் ஆலோசனைபெறவேண்டும் என்ற எண்ணம் அவனிடம் குறைந்து விடுகிறது.இளமைப் பருவத்தை அவன் கடக்கும்போது, தந்தையிடம் ஒரு வார்த்தைகலந்து பேசுவோம், அதன் பிறகு முடிவு எடுப்போம் என்ற எண்ணம்அவனிடம் எழும்போது, அவன் தந்தை இந்த உலகை விட்டுச் செல்லதயாராகியிருப்பார்.குடும்பத்தினரிடையே ஏற்படும் இடைவெளி, அதனால் உருவாகும்மாற்றங்களால் நாளடைவில் உறவுகளுக்கு இடையே பிரச்னைகள் அதிகரிக்கக்காரணமாகிறது.அதுவே உறவுகளுக்கு இடையே மிகப்பெரிய துண்டிப்பை ஏற்படுத்துகிறது.பள்ளிப் பருவத்தில் தந்தையின் செல்லமான கண்டிப்பு, தாயின் அரவணைப்பு,சகோதர சகோதரிகளிடையே இருந்த ஒற்றுமை காரணமாக குடும்பத்தில் பாசம்மேலோங்கி இருந்தது. அந்த ஆனந்தம் இன்று எத்தனை குடும்பங்களில்காணமுடிகிறது.விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து, தான் என்ற எண்ணம்மேலோங்கிய காரணத்தால் உறவுகளுக்கிடையே விரிசல் அதிகரித்துவிடுகிறது.இதனால், நமக்குள் எழும் சின்னச் சின்ன ஆசைகள் கூட நிறைவேறுவதில்லை.நாம், நம் குடும்பம் என விட்டுக் கொடுத்துச் சென்றால் உறவுகள் மேம்படும்,உள்ளமும் மகிழும்.

நன்றி : தினமணி

முதல் பதிவு

இந்த பதிவு நான் படித்த பத்திரிகை செய்தி மற்றும் கட்டுரை இங்கு அறிய தருகிறேன்.

நன்றி வணக்கம் .