Tuesday, August 5, 2008

திசை திருப்பும் முயற்சி!

ஒருபுறம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்பு, சதி வேலைகள் என்று தொடர்கின்றன. இந்தச் சம்பவங்கள் நம்மை எல்லைப்புறப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த முடியாமலும், அதைப் பற்றிய செய்திகள் நம்மைப் பாதிக்காமலும் இருக்கிறதோ என்கிற அச்சம் எழுகிறது.
கடந்த சில நாள்களாகவே இந்திய பாகிஸ்தானிய எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ஈகிள் போஸ்ட் எனப்படும் எல்லையோரத்து ராணுவ முகாமைச் சேர்ந்த குமார் என்ற சிப்பாய் தேசத்துக்காகத் தனது உயிரைப் பலி கொடுத்திருக்கிறார். அதேபோல, ஒரு பாகிஸ்தானிய சிப்பாயின் உடலும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் எல்லையோரப் பதற்றம் தணிந்தபாடில்லை என்றுதான் செய்திகள் தெரிவிக்கின்றன.
வேண்டுமென்றே எல்லையோரக் காவலில் இருக்கும் இந்திய ராணுவத்தினரை பாகிஸ்தானியத் தரப்பு வம்புக்கிழுக்க முயற்சிக்கிறது என்று தெரிகிறது.
ஈகிள் போஸ்ட் பகுதியில் இந்திய எல்லைக்குள் ஒரு பாதுகாப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. இது தங்களது நாட்டின் எல்லைக்குள் அமைக்கப்பட்டிருப்பதாகக்கூறி, பாகிஸ்தானிய ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதே போலத்தான் நெளகம் பகுதியிலும், பாகிஸ்தானிய ராணுவம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதிகமான ஊடுருவல் இந்தப் பகுதியில்தான் நடைபெறுகிறது என்பதால் அமைக்கப்பட்ட எல்லையோரக் காவல் முகாம்தான் நெளகம் பகுதியிலுள்ள கெர்யான் போஸ்ட் என்பது. இங்கே சில நாள்களுக்கு முன்னால் சுமார் 16 மணி நேரம் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்திருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 19 முறை பாகிஸ்தானிய ராணுவம் சமாதான ஒப்பந்தத்தை மீறி இருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்திருக்கிறார். அது மட்டுமா? பாகிஸ்தானைச் சேர்ந்த ஜிகாதிகள் 60 தடவை இந்தியாவில் ஊடுருவ முயற்சித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதத்தில் 40 தடவைக்கு மேல் இந்த முயற்சியில் ஈடுபட்டதாகத் தமக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன என்கிறார் அமைச்சர் அந்தோனி. இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியான 742 கி.மீ. தூரத்தையும் கண்காணிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்கிற அமைச்சரின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.
இந்திய பாகிஸ்தான படைகளுக்கிடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு கடந்த நான்காண்டுகளாக அமைதி காத்த எல்லைப் பகுதியில் இந்த ஆண்டு திடீரென பதற்றம் நிலவுவதன் காரணம் என்ன? இந்திய எல்லைக்குள் ஜிகாதிகள் ஊடுருவுவதற்கு உதவத்தான் பாகிஸ்தானிய ராணுவத்தினர் வலிய துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள் என்பதுதான் உண்மை. ஒரு புறம் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடக்கும்போது, நமது எல்லையோரக் காவலர்களின் கவனம் திசைதிருப்பப்படுகிறது.
பாகிஸ்தானில் அமைந்திருக்கும் மக்கள் ஆட்சி பலவீனமாக இருப்பதும், எல்லையோரப் பகுதிகளில் பதற்றம் அதிகரிப்பதற்குத் காரணமாக இருக்கலாம். ஜிகாதிகள் மற்றும் பயங்கரவாதக் கும்பல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளைத் தொடரும் தைரியமும், பலமும், பலவீனமான பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசுக்கு இல்லாமல் இருப்பது ஒரு முக்கியமான காரணம்.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜிகாதிகள் தங்களது பயங்கரவாதச் செயல்களுக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பது, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது, உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலிருந்து நன்கொடை வசூலிப்பது போன்ற செயல்களில் எந்தவிதத் தலையீடும் இல்லாமல் செயல்பட முடிகிறது என்பது உலகறிந்த ரகசியம். அதேபோல, இந்த பயங்கரவாதக் குழுக்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன்தான் இந்தியாவுக்குள் ஊடுருவுகிறார்கள் என்பதை கார்கில் ஏற்கெனவே தெளிவாக்கியும் இருக்கிறது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானிய தரப்பினர் பொறுப்பான, பயன்பாடுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது ஒருபுறம் இருந்தாலும், இந்திய அரசு மெத்தனமாக இல்லாமல் எல்லைப் பகுதியிலான பாதுகாப்பை அதிகப்படுத்துவது நல்லது. ஆங்காங்கே வெடிக்கும் குண்டுகளும், அதனால் உருவாகும் பீதியும் அரசின் கவனத்தை எல்லையோரப் பாதுகாப்பிலிருந்து திசைதிருப்பிவிடக் கூடாது, ஜாக்கிரதை!
நன்றி : தினமணி

மாவட்டம் தோறும் பல்கலைக்கழகம்!

தமிழகத்தில் உயர்கல்வியை வளர்க்கும் நிறுவனங்களாக மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் போன்றவை பெரும்பங்கு வகித்து வருகின்றன. இத்தனை அமைப்புகள் இருந்தாலும் உயர்கல்வி என்பது சிலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரி, இராணி மேரிக் கல்லூரி, கோவை அரசுக் கல்லூரி, குடந்தை அரசினர் ஆடவர் கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள் ஆகிய அரசுக் கல்லூரிகளையும், கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி ஆகிய அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளையும் பல்கலைக்கழக நிலைக்கு உயர்த்திய அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் நிறைவடைந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான உடனே கல்லூரி ஆசிரியர் அமைப்புகள் தங்களது இயக்கங்களின் மூலம் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டன. அதேபோல் அனைத்து அரசியல் இயக்கங்களும் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து இரண்டு தனியார் பல்கலைக்கழக மசோதா சட்டமன்ற ஆய்வுக்குழுவுக்கு அனுப்பப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்கள் புதிதாகத் தொடங்கப்பட வேண்டும் என்ற முடிவு ஏன் உண்டானது என்ற கேள்வி எழாமலில்லை. தேசிய அறிவு சார் குழு இந்தியாவில் மேலும் 1500 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அவை இன்றைய நடைமுறை உலகியலுக்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட வேண்டும் என்றும், பன்னாட்டு உயர்கல்வித் தரத்துடன் இந்தியாவின் உயர்கல்வித் தரமும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் அக்குழு வலியுறுத்துவது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
"உலகமயமாக்கல்' என்ற அலை நம் நாட்டின் உயர்கல்வியையும் விட்டுவைக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதி 3இன் படி இன்று நாடெங்கிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் முளைக்கத் தொடங்கி கல்வித்துறையில் வியாபாரிகள் பெருகுவதற்கும், அந்நிய நாட்டு நிறுவனங்கள் உயர்கல்வியில் முதலீடு செய்வதற்கும் வழி வகுத்துள்ளன.
1947ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறியபோது அவர்கள் விட்டுச்சென்ற இரண்டு முக்கிய சொத்துக்கள் ஒன்று ஆங்கில மொழி, மற்றொன்று தாமஸ் மெக்காலேயால் உலகிற்கு பறைசாற்றப்பட்ட கல்விமுறை. இந்த இரண்டும் இந்திய மக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்தவையாகவே இன்றுவரை விளங்கி வருகின்றன. அதை அடியொற்றி உயர்கல்வி என்ற கட்டடமும் உருவாக்கப்பட்டு இன்று பல வகையில் உருமாற்றம் பெற்று உயர்ந்து கொண்டே வருகிறது.
நம் தமிழகத்தில் 1857இல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்துக்குப் பின் 17 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 9 சதவீதம் தான் என அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் வாயிலாக அறிய முடிகிறது. இன்றுள்ள பல்கலைக்கழகங்களில் 9 சதவீத மாணவர்களே உயர்கல்வி பயிலும் நிலை உள்ளதால், மேலும் பல பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் என தேசிய அறிவு சார் குழு சொல்வதில் உண்மையான பொருள் இருப்பதாகவே கொள்ளலாம்.
அதற்காக உயர்கல்வியைத் தனியார் வசம் தாரை வார்த்துவிட வேண்டும் என்ற கொள்கையிலிருந்து அரசு விடுபட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி வணிகத்தைச் செய்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு உயர்கல்வி வளர்ச்சி, அதன் தரம் ஆகியவற்றைக் காட்டிலும் போட்ட பணத்தை மீண்டும் எடுப்பதில்தான் முனைப்பு ஏற்படுகிறது. தனியார் பல்கலைக்கழகங்களின் தர நிர்ணயம் குறித்துத் தெளிவான முடிவை உறுதி செய்ய வேண்டும்.
பல்கலைக்கழகம் என்பது அனைத்துத் துறைகளையும் கற்பிக்கும் இடமாகவும், கற்கும் இடமாகவும் இருக்க வேண்டும். ஆனால், சில ஆண்டுகளாக நம் தமிழகத்தில் துறைக்கு ஒரு பல்கலைக்கழகம் என்ற புதிய கலாசாரத்தை நாம் தொடங்கியுள்ளோம். பொதுவாக அனைத்துத்துறை சார்ந்த கல்வியைப் போதிக்கும் இடமாக இவை இருப்பதால் தான் "சர்வ கலாசாலை' என அழைக்கப்பட்டு பின்னாளில் பல்கலைக்கழகம் என அழைக்கப்படலாயிற்று. அனைத்துத் துறைக் கல்வியையும் போதிக்கும் நிலை தற்போது தமிழக அரசால் நடத்தப்படுகின்ற எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லை.
ஆனால், 1929ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் அண்ணாமலை செட்டியாரால் உருவாக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், நிர்வாகம், வேளாண்மை, பொறியியல், மருத்துவம், கல்வியியல் போன்ற அனைத்துத்துறை கல்வியும் கற்பிக்கும் பல்கலைக்கழகமாக அப் பல்கலைக்கழகம் இப்போதும் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில், அரசின் மானியமாக சுமார் ரூ. 45 கோடி பெறும் பல்கலைக்கழகமாகவும் இது விளங்கி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூரில் தொடங்கப்பட்ட எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போல அனைத்துத்துறை சார்ந்த கல்வியைக் கற்பிக்கும் இடமாகவும் உள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள் போதிக்கும் அனைத்துத்துறை கல்வி முறைகள் தமிழக அரசால் நடத்தப்படுகின்ற பல்கலைக்கழகங்களில் இல்லையே ஏன்?
சமச்சீர் கல்வி முறை குறித்து நாம் அண்மைக் காலமாக அதிகம் பேசி வருகிறோம். ஆனால், ஏற்றத்தாழ்வும், பல வேறுபாடும் கொண்ட கல்விமுறையும் தான் சமச்சீர் கல்வி முறையா? என்பதைக் கல்வியாளர்களும், அறிவு சார் சான்றோர்களும் சிந்திக்க வேண்டும். மேலை நாடுகளில் உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களின் தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல்கலைக்கழகங்களில் அனைத்துத்துறை சார்ந்த கல்வியைக் கற்கும் இடமாக உள்ளன என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
தமிழகத்தில் முந்தைய ஆட்சியின்போது சில அரசுக் கல்லூரிகள் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கல்லூரி ஆசிரியர், அலுவலர் போராட்டத்துக்குப்பின் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. முந்தைய அரசின் அறிவிப்பைச் சற்று மாற்றி உறுப்புக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்ட கல்லூரிகளை எல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் பல்கலைக்கழகங்களாக அறிவித்துள்ளனர்.
1983 84ஆம் ஆண்டுகளில் அன்றைய தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகமும், கோவையில் பாரதியார் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன. அப்போது அந்தந்தப் பகுதி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், மாணவர்கள் தங்கள் உயர்கல்வித் தேவைக்காக சென்னைக்கு வருவதைத் தவிர்ப்பதற்காகவும், இப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படுகின்றன என அறிவித்தார். அந்த அறிவிப்பு அன்று அனைவரையும் கவர்ந்தது.
இன்று மருத்துவப் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம், விளையாட்டுத் துறைப் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகங்கள் போன்றவை சென்னையில் அமைந்துள்ளன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் தங்கள் தேவைக்காக சென்னையை நோக்கித்தான் இன்றும் வரவேண்டியுள்ளது.
தேசிய அறிவு சார் குழுமத்தின் பரிந்துரைப்படி மேலும் பல பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. பெருந்தலைவர் காமராஜ் ஊருக்கு ஓர் ஆரம்பப் பள்ளியை ஏற்படுத்தியதால் தான் தமிழ்நாட்டில் கல்விப் புரட்சி உண்டாயிற்று. அதுபோல் மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டால் அது உயர்கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாய் அமையும்.
தொடங்கப்படுகின்ற பல்கலைக்கழகங்களில் கலை, அறிவியல், சட்டம், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, நிர்வாகம், போன்ற அனைத்துத்துறை சார்ந்த கல்வியையும் கற்கும் பல்கலைக்கழகமாக அமைய வேண்டும். மாவட்டத்தில் ஏற்கெனவே இயங்கிவரும் கல்லூரிகள், அந்த மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளாக அமைய வேண்டும். ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் ஐம்பதுக்கு மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகள் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்கள் பட்ட மேற்படிப்பையும், முதுநிலை ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கின்ற இடமாக விளங்க வேண்டும். உயர் கல்வியில் ஓர் இலக்கை நோக்கிய வளர்ச்சி எட்டப்பட வேண்டும்.
எங்கள் ஆட்சியிலும் இத்தனை பல்கலைக்கழகங்களை உருவாக்கி விட்டோம் என்று சொல்வதற்காக மட்டுமன்றி உண்மையிலேயே சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் திட்டங்கள் தொலைநோக்குடன் அமைந்திட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி, ஓர் அரசு பொறியியல் கல்லூரி என உருவாகி அனைத்துத்துறை கல்வியையும் பெறுகின்ற இடமாக அம் மாவட்டம் திகழும்.
காமராஜ் சாலையில் மட்டும் ஐந்து பல்கலைக்கழகங்கள் இருப்பதைவிட ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம் என்ற நிலை உருவாகுமானால், உயர்கல்வியில் அம் மாவட்டம் தன்னிறைவு பெற வழிகோலும். மாவட்டத்தில் இருக்கின்ற சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் அமைவதற்கும், அங்குள்ள தொழில்கள் வளர்வதற்கும், இப் பல்கலைக்கழகங்கள் கவனம் செலுத்துவதற்கும் ஏதுவாகும்.
அரசால் அறிவிக்கப்படும் எந்த ஒரு திட்டமும் மாநிலத்தில் பெரும்பான்மை மக்களுக்கு நலம் பயக்கும் விதத்தில் அமைய வேண்டும். புதிதாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள் பெரும்பான்மை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையுமா என்பது ஐயத்திற்குரியதே! உரியவர்கள் சிந்திப்பார்களா?
வி.சீ. கமலக்கண்ணன்
நன்றி : தினமணி

'அனைத்தையும்' உள்ளடக்கிய வளர்ச்சி-என்.விட்டல்

"அது பொற்காலமாகவும் இருந்தது; மோசமான காலமாகவும் இருந்தது'. சார்லஸ் டிக்கின்ஸின் "இரு நகரங்களின் கதை' என்ற நாவல் இப்படித்தான் தொடங்கும். இந்தியா விடுதலையடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் இந்த வேளையில் இந்த வாசகம்தான் மனதில் பளிச்சிடுகிறது. மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற பட்டியலில் உள்ள இந்தியா என்ற பாம்பின் தலை 21ம் நூற்றாண்டிலும், வால் 17ம் நூற்றாண்டிலும் இருக்கின்றன.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் 4 இந்தியர்கள் இருக்கிறார்கள். பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். அதே நேரத்தில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பதாக, அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றி ஆய்வு செய்த சென்குப்தா கமிட்டி கூறுகிறது. இப்படி இருவேறு உச்ச நிலைகளைக் கொண்டிருப்பதால்தான் இந்தியாவை பாம்புடன் ஒப்பிட வேண்டியதாயிற்று.
இன்றைய அரசியல் தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் கையிலெடுத்திருக்கும் பிரச்னை இதுதான். "அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற வாசகமும் இதிலிருந்து பிறந்ததுதான். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, "அனைவரும் நலமாக இருக்க வேண்டும்' என்ற கோரிக்கையின் அடிப்படையிலேயே நமது தினசரி வழிபாடு அமைந்திருக்கிறது. அந்த வகையில் அறிந்தோ அறியாமலோ "அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற பொருளாதாரக் கோட்பாட்டை நாள்தோறும் உச்சரித்துக் கொண்டுதான் இருக்கிறோம். 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர், "எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே' என்று இறைவனை வேண்டினார். இதுவும் "அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை' வலியுறுத்தும் வழிபாடுதான்.
வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமே அனைத்து நேரங்களிலும் நல்லது எனக் கூறிவிட முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் ஐ.நா. அமைப்பு நடத்திய ஆய்வில் சில உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் மூலம் "அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற வாசகத்துக்கு இன்னும் குறிப்பான விளக்கத்தைப் பெறமுடியும்.
இந்த அடிப்படையில் விரும்பப்படாத பொருளாதார வளர்ச்சி என சிலவற்றைப் பட்டியலிடமுடியும். அவை, 1. வேலை வாய்ப்பில்லாத பொருளாதார வளர்ச்சி. 2. நாட்டின் சமூக, கலாசார, கட்டுப்பாடுகளை மீறும் "வேரற்ற வளர்ச்சி'. 3. ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்குப் பலன் கிடைக்கிறது என்பதற்காகப் பெரும்பான்மை மக்களுக்குச் சிரமம் உண்டாக்குவதன் மூலம் கிடைக்கும் "இரக்கமற்ற வளர்ச்சி'; பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்வது இதற்கு சரியான உதாரணம். 4. சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தலை உண்டாக்கும் வகையிலான "வருங்காலத்தை சிதைக்கும் வளர்ச்சி'.
பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். எல்லாக் காலகட்டத்திலும் "ஏழைகள்' இருக்கத்தான் செய்வார்கள். ஏனெனில் ஒவ்வொரு காலகட்டத்திலும் "ஏழை' என்பதற்கான வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக, பொருளாதார ரீதியாக இந்தியாவில் 77 சதவீதம் பேர் ஏழைகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு நாளைக்கு 2400 கலோரி சக்தியைத் தரும் உணவு கிடைக்காதவர்கள் என்ற அடிப்படையில் கணக்கிட்டால் 27 சதவீதம் பேர்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே வருவார்கள். அதனால், வறுமையை ஒழிப்பது அல்லது ஏழைகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவது என்பதை விட்டுவிட்டு, பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே உள்ளடக்கிய வளர்ச்சியின் உண்மையான அர்த்தமாகும்.
இந்திய மக்கள் அனைவருமே இந்தியாவின் குடிமக்கள் என்ற எண்ணமெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எப்போதுமே இருந்தது கிடையாது. "வாக்கு வங்கி' அடிப்படையில் மக்களைப் பிரித்து வைப்பதுதான் அவர்களது எண்ணம்.
உதாரணமாக, சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு பொருளாதார வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்று கூறி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வாக்கு வங்கி அரசியல் அல்லாமல் வேறொன்றும் இல்லை.
இதுபோன்று ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சிறப்புச் சலுகைகள் அளிப்பதால், அவர்கள் மற்றவர்களுடன் சேராமல் தனித்தே வாழும் அபாயம் இருக்கிறது. அத்துடன் அரசு தங்களுக்காக சிறப்புச் சலுகைகளே அளித்தே தீர வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு ஏற்படக்கூடும். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற நிலையை ஏற்படுத்துவதும் அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பு என்ற உரிமையை வழங்குவதும்தான் நல்ல நிர்வாகத்துக்கு அடையாளம். மதம் சார்ந்த கொள்கையை வகுப்பதன் மூலம், இந்த அடிப்படைக் கொள்கையே மீறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியானது, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் சென்றடைய வேண்டியது அவசியம். அப்படிச் செய்யாவிட்டால், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடையவே முடியாது.
அதேபோல், பொருளாதார வளர்ச்சியின் பயனை நகரங்களில் வசிப்போர் பெற்றிடும்போது, கிராமங்களில் வசிப்போர் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்தாக வேண்டும். நகரமயமாக்குவதை நாடு முழுவதுமே ஒரே சீராகச் செயல்படுத்த வேண்டும்.
ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரமான கல்வியும், சுகாதார வசதிகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். இவை இரண்டும் கிடைத்தால்தான் ஒரு மனிதன் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும்.
ஒரு குறிப்பிட்ட துறையை மட்டுமே மேம்படுத்துவது என்ற கொள்கையை விட்டுவிட்டு, அனைத்துத் துறைகளும் வளர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அண்மைக் காலமாக தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ந்து வரும்போது, வேளாண்துறை மிகவும் பின்தங்கி இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
சரி இந்த மாற்றங்களையெல்லாம் செய்வது யார் பொறுப்பு? அரசு, அரசு சாரா அமைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் போன்ற சமூக அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவைதான் இதைச் செய்ய முடியும். அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்தாக வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஊழலை ஒழிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்திருப்பதை மறுக்க முடியாது. தகவல் தொழில்நுட்ப வசதிகளும்கூட ஊழலை ஒழிப்பதிலும் நல்ல நிர்வாகத்தை வழங்குவதிலும் முக்கிய பங்காற்ற முடியும். ரயில்வே முன்பதிவு வசதி இதற்குச் சரியான உதாரணம்.
அனைத்துப் பிரிவு மக்களையும் அரசு சமமாகப் பாவிக்க வேண்டும். அரசின் கொள்கைகளும், தீட்டும் திட்டங்களும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும். வாக்கு வங்கியைக் குறிவைத்து நடத்தப்படும் பிரித்தாளும் தந்திர அரசியல் கைவிடப்பட வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் தனியார் நிறுவனங்களும் "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை' எட்டுவதில் சிறப்பாகப் பங்களிக்க முடியும். நகரங்களில் கிடைக்கும் வசதியை கிராமங்களில் கிடைக்கச் செய்வது என்ற டாக்டர் அப்துல் கலாமின் யோசனை மூலமாக நாடு முழுவதையும் நகர்மயமாக்க முடியும். இதற்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம்.
உலகமயமாக்கல் தத்துவம்கூட அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு உதவுகிறது. இதன் மூலம் உலகமே ஒரே ஊராக மாறி வருகிறது என்கிறார் தாமஸ் ஃபிரைட் மேன். இதற்காக அவர் பட்டியலிட்டுள்ள காரணிகள் மூன்று. அவை, 1. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பார்க்க முடிகிற செயற்கைக்கோள் டி.வி. 2. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். 3. சில்லறை வர்த்தகம் மூலமாக வேளாண் துறையையே நிறுவனங்களிடம் ஒப்படைப்பது. இவை அனைத்தும் அதிரடியான நகர்மயமாக்கலுக்கு உதவுவதுடன் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி நம்மை இட்டுச் செல்லும்.
மொத்தத்தில், பந்தயத்தில் ஒரு பிரிவினர் தவழ, ஒரு பிரிவினர் நடக்க, மற்றொரு பிரிவினர் ஓட என வேறுபட்ட வேகத்தில் பயணித்து வரும் இந்தியாவை ஒரே வேகத்தில் முன்னேறச் செய்வதற்கு பலவழி அணுகுமுறை அவசியம். அதைச் செய்வதற்கு இதுவே சரியான தருணம்!


(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்).

நன்றி : தினமணி

வேலியே பயிரை மேய்வதா?

ஆட்சியாளர்கள் சுயநலவாதிகளாகச் செயல்படுகிறார்கள் என்பதும், மக்கள் நலனைவிடத் தங்களது நலனுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதும் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய மக்கள் புரிந்து கொண்டுவிட்ட விஷயம். ஆனால் சமீப காலமாக, அதிலும் உலகமயம், தனியார் மயம் போன்ற கோஷங்கள் எழுந்தது முதல், ஆட்சி, அதிகாரம், பதவி போன்றவை தங்களையும் தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களையும் பாதுகாப்பதற்கு மட்டும்தான் என்கிற மனோநிலை அமைச்சர்கள் பலரிடம் காணப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
உலக சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நிதியாண்டில் சர்க்கரை உற்பத்தி ஏற்பட்டிருப்பதாக சர்வதேச சர்க்கரை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. அதாவது உலக உற்பத்தி இந்த நிதியாண்டில் சுமார் 168.7 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் உபயோகம் போக சுமார் 8 மில்லியன் டன் உபரியாக சர்க்கரை இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் மட்டும் என்ன? இந்த ஆண்டு கரும்பு உற்பத்தியும் சரி, சர்க்கரை உற்பத்தியும் சரி, தேவைக்கு அதிகமாகவே தான் இருக்கிறது. நமது தேவைக்கு மேல் 120 லட்சம் டன் உபரியாகவே சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. உற்பத்தி அளவுக்கு அதிகமாக இருந்தால் விலை குறைவதுதானே நியாயம்? ஆனால், அதுதான் இல்லை.
தாராளமயமாக்கல் என்கிற பெயரில் எதெல்லாம் தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்குமோ அதையெல்லாம் அனுமதிக்கும் நமது அரசு, எதெல்லாம் மக்களுக்குச் சாதகமாக இருக்குமோ அதை அனுமதிக்காது என்பதற்கு சர்க்கரை ஒரு நல்ல உதாரணம். இப்போதும், ஒவ்வொரு மாதமும் ஆலைகள் எவ்வளவு சர்க்கரையை சந்தை விற்பனைக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்கிற அளவை அரசுதான் நிர்ணயிக்கிறது. இதன்மூலம் சர்க்கரைக்கு தேவையை அதிகரிப்பதும், குறைப்பதும் அதன்மூலம் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்துவதும் அரசுதான்.
கடந்த நான்கு வாரங்களில் இந்தியா முழுவதுமாக சர்க்கரை விலை குவிண்டாலுக்கு ரூ.150 அதிகரித்திருக்கிறது. அதாவது ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.1.50 அதிகம். இந்த வருடக் கடைசிக்குள் சர்க்கரை விலை மேலும் 15 சதவிகிதம் அதிகரிக்கும் என்று சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன் மூலம் வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் ஒரு மிகப்பெரிய லாபத்தை இந்த சர்க்கரை ஆலைகள் அடைய இருக்கின்றன. இத்தனையும், நமது மாண்புமிகு மத்திய உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் உதவியுடன் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
கடந்த ஒரு மாதமாக விலை உயர்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உணவுத்துறை அதிகாரிகள், பண்டிகைக் காலத்தில் இது மேலும் அதிகரித்தால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்று பயந்தனர். உடனடியாக வெளி மார்க்கெட்டிற்கு ஆலைகளிலிருந்து அதிகமான சர்க்கரை வழங்கச் செய்வதன் மூலம் இந்த விலையேற்றத்தைத் தடுக்க முடியும் என்றும், அதனால் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டுமென்றும் அமைச்சருக்கு அதிகாரிகள் சிபாரிசு செய்திருக்கிறார்கள்.
என்ன காரணத்தாலோ தெரியவில்லை, நடப்பு மூன்று மாதப் பகுதியில் 37.50 லட்சம் டன் சர்க்கரை வெளிமார்க்கெட்டுக்கு ஆலைகள் வழங்கினால் போதும் என்று அமைச்சரிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது மொத்தத் தேவையில் வெறும் 70 சதவிகிதம் தான் என்பதும், இதன்மூலம் பண்டிகைக் காலங்களில் சர்க்கரை விலை அதிகரிக்கும் என்பதும் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
மற்ற மாநிலங்களைப்போல அல்லாமல் மகாராஷ்டிரத்தில் பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் கூட்டுறவு முறையில் நடத்தப்படுகின்றன. இந்த ஆலைகளில் விவசாயிகளுக்கும் பங்கு இருப்பதால், இந்த விலை உயர்வு அவர்களுக்கு சாதகமாக இருக்கும். அவர்களது ஆதரவு தனக்குத் தேர்தலில் தேவை என்பதாலும், இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நன்கொடைதான் சரத்பவாரின் அரசியலுக்கு ஆதாரம் என்பதாலும் அவர் அப்படி நடந்துகொண்டாரோ என்னவோ?
ஆனால், ஏனைய பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு இதனால் என்ன லாபம்? கரும்பின் கொள்முதல் விலை அதிகரிக்கப்படுகிறதா, இல்லை அவர்களுக்கு முறையாகப் பணப்பட்டுவாடாவாவது சர்க்கரை ஆலைகளில் செய்யப்படுகிறதா என்றால் கிடையாது. பொதுமக்களுக்கு இதனால் என்ன லாபம்? பண்டிகைக் காலங்களில் அதிகமான உற்பத்தி இருந்தும், செயற்கையான விலையேற்றத்தால் அவதிப்படுவதுதான் தலையெழுத்து போலும்.
வேலியே பயிரை மேய்கிறது. நாம் வேடிக்கை பார்ப்பதையும், அவதிப்படுவதையும் தவிர வேறு வழியில்லை.

நன்றி : தினமணி

கூல்.., அடுத்த கூகுள்?

இணையத்தில் தேடுவோர் அனைவருக்கும் தெரிந்திருக்கும் பெயர் கூகுள். தேடு பொறிகளின் அரசன் அது. அதற்கு முன்னும் பின்னும் எத்தனையோ தேடுபொறிகள் வந்தாலும் அத்தனையும் தடமில்லாமல் அழிந்துவிட்டன. ஏதோ யாகூவும், மைக்ரோசாப்டும் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்திருக்கின்றன. எனினும் அவற்றின் மொத்த வியாபாரம் வெறும் பத்து சதவீதம் மட்டும்தான். அப்படியானால் கூகுளின் ஏதேச்சாதிகாரத்தை ஒன்றுமே செய்ய முடியாதா? முடியவே முடியாது என்கிறார்கள் கூகுளின் நிர்வாகிகள். அதற்குக் காரணமும் இருக்கிறது. வலுவான முதலீடு, நல்ல கட்டமைப்பு, ரகசியம் காக்கும் திறன், அரசுகளையே ஆட்டிப் படைக்கும் தொழில்நுட்பம் ஆகியவைதான் கூகுளை நம்பர்1 ஆக வைத்திருக்கிறது.
ஆனால் இந்த நம்பிக்கை கடந்த வாரம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. அதற்குக் காரணம் கூல் என்ற புதிய தேடுபொறியின் உதயம்தான். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய அன்னா பேட்டர்சன், ரஸல் பவர் தம்பதிதான் இந்தத் தேடுபொறியை உருவாக்கினர். முகவரி www.cuil.com. "கூல்' என்றால் அறிவு என்று அர்த்தமாம். தொடக்க நாளில் மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதுவரை வேறு எந்தத் தேடுபொறிக்கும் கிடைக்காத அளவுக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.
கூகுள் தேடுபொறியை விட 3 மடங்கு அதிகமான இணையப் பக்கங்களை உள்ளடக்கியது, பல மடங்கு வேகமாகத் தேடித் தருவது, தேடுவதை மட்டுமல்லாமல் அவை தொடர்பான மற்ற தகவல்களையும் தருவது என்பன போன்ற பல்வேறு சிறப்புகள் கூறப்பட்டன. அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறது எனப் பார்ப்பதற்கு தளத்துக்குள் நுழைந்தால், நம் கண்ணில்படுவது மிக எளிமையாக கவர்ச்சிகரமான முதல்பக்கம். எந்த எளிமையால் கூகுள் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த எளிமையை, அதைவிட அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறது கூல். கறுப்புப் பின்னணி, தேடும் சொற்களை உள்ளிடுவதற்கான பெட்டியின் நளினமான வடிவமைப்பு ஆகியவை முதல்பார்வையிலேயே நம்மைக் கவர்ந்துவிடும்.
இவையெல்லாம் தேடுபொறிக்கு அவசியம்தான் என்றாலும், நமக்கு வேண்டிய தகவல்களை அள்ளித் தருவதைக் கொண்டுதான் அதன் தரத்தைத் தீர்மானிக்க முடியும். ஏதாவது சொற்களை உள்ளிட்டுக் கொண்டிருக்கும்போது அது தொடர்பான வேறு சொற்களின் பட்டியல் வருகிறது. அதிலிருந்துகூட ஏதாவது ஒரு சொல் அல்லது வாசகத்தை நாம் தேர்ந்தெடுக்க முடியும். தேவையான தகவலின் முக்கிய வார்த்தையை உள்ளிட்டதும், தகவல்கள் வந்து கொட்டுகின்றன.
அங்கும் சில சிறப்புகளைச் செய்திருக்கிறது கூல். மற்ற தேடுபொறிகளைப் போல் வரிசையான பட்டியலாக இல்லாமல், பக்கவாட்டில் பத்திகளாக இணையப் பங்கங்கள் தரப்படுகின்றன. ஒவ்வொரு இணையப் பக்கத்துக்கும் அது தொடர்பான படம் ஒன்றும் அருகிலேயே இருக்கிறது. இது தவிர, வலது ஓரத்தில் இருக்கும் ஒரு பட்டியலில் நாம் தேடிய தகவல்களை ஒத்த மற்ற தகவல்களின் பட்டியலும் கிடைக்கிறது. கூகுளுடன் ஒப்பிட்டால் வேகம் கொஞ்சம் அதிகம்தான். முதல்நாளிலேயே, 5 கோடி பேர் கூல் தேடுபொறியைப் பயன்படுத்தியிருப்பதாக பேட்டர்சன் கூறுகிறார். மற்ற தேடுபொறிகளுக்குக் கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் இது மிக அதிகம். ஆயிரக்கணக்கான சர்வர்களை கூகுள் பயன்படுத்தி வரும் நிலையில், வெறும் 120 சர்வர்களைக் கொண்டு இத்தனை வசதிகளையும் வழங்கும் கூல் தேடுபொறியின் சாதனை வரவேற்கத் தகுந்ததே.
ஆனால், கூல் தேடுபொறியைப் பயன்படுத்தியவர்கள் யாரும் அது கூகுளை விட சிறந்த தேடுபொறி என்றோ, சரியான போட்டியாக இருக்கும் என்றோ இதுவரை கூறவில்லை. கூல் தேடுபொறியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் புதிய வசதிகளை வரவேற்கும் அதே நேரத்தில், பொருத்தமான தகவல்களைத் தேடித் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. லட்சக்கணக்கான பக்கங்களைத் தேடித் தருவதைவிட பொருத்தமான சில பக்கங்களைத் தேடித் தருவதே பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயத்தில் கூல் வெற்றிபெறவில்லை.
அதேபோல், விக்கிபீடியா போன்ற முக்கிய இணைய தளங்களைக்கூட முதல்பக்கத்தில் காட்டுவதில்லை என்றும் பலர் கூறுகின்றனர். தேடித் தரும் இணைய தளங்களுக்கு அருகிலேயே அது தொடர்பான படங்கள் வருவது வசதியாக இருந்தாலும், அதில் சில ஆபாச படங்களாக இருப்பது முகம்சுளிக்க வைக்கிறது. கூல் நிறுவனத்தினர் கூறுவது போல் கூகுளைவிட அதிக இணையப் பக்கங்களை உள்ளடக்கியது எனக் கூறுவதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.
மீடியாவால்தான் இத்தனை பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பலர் குறைகூறுகின்றனர். உண்மையில் நல்ல விஷயங்கள் நண்பர்கள் மூலமாகத்தான் நம்மை வந்தடைய வேண்டும், மீடியா வழியாக அல்ல. கோலியாத்தை தாவீது வீழ்த்தியது போன்று அதிசயம் எதுவும் நடந்தாலொழிய கூகுளுக்கு எந்த அச்சுறுத்தலும் இப்போதைக்கு இல்லை.
எம்.மணிகண்டன்
நன்றி : தினமணி