Friday, August 8, 2008

மனக்கவலைக்கு மருந்து

சென்னையில் ஒரு தனியார் பள்ளியிலும், ஓர் அரசு நிதியுதவி பெறும் பள்ளியிலும் நடத்திய கருத்தெடுப்பில், "90 சதவீத மாணவர்கள் மனக்கவலையில் இருக்கின்றனர்' என்கிறது ஆய்வின் முடிவு. இதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், குறிப்பாக பிளஸ் 1 மாணவர்களின் கவலைகள் அதிகம்.
கற்றலில் சிரமம், மனச்சோர்வு, தாங்கள் பயனற்றவர்கள் என்ற எண்ணம், தாழ்வு மனப்பான்மை போன்றவைதான் இந்த மனக்கவலைக்குக் காரணங்கள்.
பிளஸ் 2 தேர்ச்சி, வாழ்க்கையின் திருப்புமுனையாக இருக்கிறது. பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த வளர்இளம் பருவ மாணவர்களின் மீது இனம் புரியாத மனச்சுமையாக அழுந்துகிறது.
எந்தத் துறையாக இருந்தாலும், திறமை இருந்தால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையையும் வழிகாட்டுதலையும் அவர்களுக்குக் கல்வியோடு கலந்து அளிக்கும் பள்ளிச்சூழல் இன்று தமிழகத்தில் இல்லை. இது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மனக்கவலை தருவதாகும்.
மேலும், நகர்ப்புற மாணவர்களுக்குக் கிடைக்கின்ற கற்றல் முறைகளும், கற்பித்தலும், உயர்கல்விக்கான வழிகாட்டுதல்களும் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு மேலும் அருகிப்போகிறது.
கல்விக்கூடத்துக்கு வெளியே விரிந்து கிடக்கும் வாய்ப்புகள் பற்றிய புரிதலையும், அவரவர் திறமைக்கு ஏற்ப வாழ்க்கைப் பாதை விரிந்து செல்வதையும் பிளஸ் 2 மாணவர்களுக்கு விளக்கிச் சொல்வதும் ஆலோசனை வழங்குவதும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வியோடு இணைந்த நடைமுறையாக மாறுவதுதான் இத்தகைய மனக்கவலையை மாற்றும்.
நுழைவுத் தேர்வு இல்லை என்பதால் அரசுப் பள்ளிகள் எந்தக் கவலையும் கொள்ளவில்லை. ஆனால், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களை அகில இந்திய நுழைவுத் தேர்வில் பங்கேற்கத் தூண்டின. நிகழாண்டில் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் 99 சதவீதம் பேர் தனியார் பள்ளி மாணவர்களாகவே இருப்பார்கள். இந்திய அளவிலும், பிற மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டிலும் கிடைக்கும் வாய்ப்புகளைப் பெற்று சிறகுகளை விரிக்க இந்த கிராமப்புற மாணவர்களாலும் முடியும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் சொல்லப்படாமலேயே முடிந்து போயின.
அண்ணா பல்கலைக்கழக தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு வருவோரில், சரிபாதிப் பேர் கிராமப்புற ஏழை மாணவர்கள் என்பதைப் பார்க்கிறபோது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், "கட்ஆப்' மதிப்பெண் அதிகம் பெற்றிருந்தும்கூட, அரசு பொறியியல் கல்லூரிகளில் குறைந்த இடங்களே இருப்பதால், வேறுவழியின்றி சுயநிதிக் கல்லூரிக்குச் சேர்க்கை ஆணை பெற்று விழிபிதுங்குவதைப் காண வேதனையாக இருக்கிறது. இந்த ஏழை மாணவர்களுக்கு, அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு வழிகாட்டியிருந்தால், இந்தியா முழுவதிலும் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் நேரடியாகவும், மாநில ஒதுக்கீட்டிலும் இடம்பெற்று, குறைந்த கட்டணத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்திருப்பார்கள்.
நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண் பெற வைப்பது மட்டுமே ஒரு மேல்நிலைப் பள்ளியின் கடமையாக இருக்க முடியாது. அந்த மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் காட்டி, அவர்களே தங்களை அடையாளம் காண உதவும் கூடுதல் பொறுப்பும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உள்ளது. தற்போது இந்தப் பொறுப்பு ஒரு சில ஆசிரியர்களின் தனிப்பட்ட அக்கறையாக இருந்து வருகிறது. இதை நிறுவனத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாக மாற்ற வேண்டிய அவசியம் உருவாகி வருகிறது.
கிராமப்புற மாணவர்களும் உயர்கல்வியை அடைய வேண்டும் என்ற நோக்கில் "எஸ்எஸ்எல்சி பியுசி' இரண்டும் ஒன்றாக்கப்பட்டதே பிளஸ் 2 கல்விமுறை. சில மாநிலங்களில் இதற்கு "ஜூனியர் காலேஜ்' என்றும் பெயர். ஆனால் தமிழ்நாட்டில் 90 சதவீத மேல்நிலைப் பள்ளிகள் இன்னமும் வெறும் பள்ளிகளாகவே உள்ளன. ஆகவேதான் 90 சதவீத மாணவர்கள் மனக்கவலையில் ஆழ்கின்றனர்.


நன்றி : தினமணி

நூற்றுக்கு நூறு வேட்டை!

குழந்தைக்கு வாய்க்கு ருசியாய் உணவூட்டுகிறோம். பழமும், பாலும் தந்து உரமூட்டுகிறோம். ஏன், குழந்தை பசியாற வேண்டும், தேக ஆரோக்கியத்துடன் வளர வேண்டும் என்ற ஆசையில். அதற்காகத்தான் நாள்தோறும் நாம் பாடாய்ப்படுகிறோம். ஆனால், அப்படி நாம் பிரயாசைப்பட்டு வளர்க்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை முறையாகப் பாதுகாக்கிறோமா என்றால், இல்லை. ஆரோக்கியத்தை மட்டுமல்ல. குழந்தையின் சுதந்திரத்தை, உணர்ச்சியை, மகிழ்ச்சியை அனைத்தையும் செல்லாக் காசாய் சீர்குலைத்து விடுகிறோம். எதனால் இந்த முரண்பாடு? ஒரே ஒரு காரணம்தான். அதுதான் நூற்றுக்கு நூறு வேட்டை.
ஆமாம், இன்றைய தினம் இளம் பெற்றோரை துரத்திக் கொண்டிருக்கும் மிகப் பெரிய பூதம் இந்தக் "கனவு' தான். கல்வியாண்டு தொடங்கிவிட்டால் போதும். நூறு மதிப்பெண்ணைத் தேடி மூலைக்கு மூலை ஓடும் பதற்றம் என்ன? வராந்தாக்களில் தவம் இருக்கும் பரிதாபம் என்ன? அத்தோடு ஆயிற்றா, அவர்களின் ஆசைக்குத் தூபமிடும் போட்டா போட்டி விளம்பரங்கள்.
"உங்கள் குழந்தை நூற்றுக்கு நூறு வாங்க வேண்டுமா? அதற்கு உத்தரவாதம் எங்கள் பள்ளிக்கூடம்தான்'
"உங்கள் செல்லம் சாதனை படைக்க நீங்கள் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டிய இடம் எங்கள் பள்ளிக்கூட வாசல்படிதான்'
இவற்றைப் படித்ததும் அலாவுதீனின் அற்புத விளக்குக் கிடைத்த மாதிரி பூரித்துப் போய்விடுகிறார்கள் பெற்றோர்கள்.
"அப்படியா... இதோ என் பிள்ளை. எத்தனை ஆயிரம் வேண்டும். பிடியுங்கள். எப்படியாவது நூற்றுக்கு நூறு வேண்டும். அதற்கு வழி செய்யுங்கள். பிளீஸ்...'
இது போன்ற காட்சிகள்தான் நடுத்தட்டுக்கு மேலே அத்தனை குடும்பங்களிலும் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அன்றாடக் காலட்சேபத் தேவைகள், குடும்ப விஷயங்கள் அத்தனையும் புறம்தள்ளிவிட்டு குழந்தைகளின் கல்விப் பிரச்னையில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் இளம் பெற்றோர்கள்.
சற்று நிதானமாக யோசித்தால் இது தேவையற்ற வலுவில் தேடிக்கொள்ளும் அர்த்தமற்ற தடுமாற்றம் என்பது தெளிவாகப் புரியும்.
கல்வி என்பது மனித அறிவை வெளிக்கொண்டு வரும் ஒரு கருவி. அரிச்சுவடிதான் ஆரம்பம் என்றாலும், முடிவு என்பது முடிவில்லாதது. கல்வியால் கண்டு உணரப்படும் அறிவு விலைமதிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு செல்வம். அச் செல்வத்தைக் கொண்டு பண்டமாற்றுப்போல் பணம் தேடிக் கொள்வதுதான் வாழ்க்கை.
சுருங்கச் சொல்வதானால் கல்வியின் மூலமாக அறிவைப் பெறலாம். அறிவைக்கொண்டு சன்மானம் (ஊதியம்) பெறலாம். இந்த சுழற்சி விதிதான் இயல்பானது. ஏற்புடையது. எப்போதும் சிக்கலற்ற திசையில் செல்லக்கூடியது.
ஆனால், இச் சுழற்சி விதி தற்போது தடம்புரண்டுவிட்டது. கல்வியின் நோக்கமே பணம் பண்ணுவதுதான் என்ற தடாலடிக்கு வந்துவிட்டார்கள் மக்கள். அறிவுக்குப் பதிலாகப் பணத்தைக் குறிவைக்கும் அம்பாகிவிட்டது கல்வி.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று முதற்குரல் கொடுத்தவன் தமிழன்தான். "ஒற்றுமையை' தமிழன் வலியுறுத்தியது போல் உலகில் வேறு எந்த நாட்டுக்காரனும் வலியுறுத்துவது என்ன? நினைக்கக்கூட இல்லை.
மனித ஒற்றுமைக்கான சிந்தனை இது. அன்புக்கும் சமாதானத்துக்குமான இந்த அறைகூவலை "உலகமயமாக்கல்' என்ற ஜிகினாத்தனம் மாற்றிவிட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது. இந்த "உலகமயமாக்கல்' கொள்கையால் நம் பாரம்பரியப் பண்பு நலன்களையும், கலாசார நுட்பங்களையும் ஏற்கெனவே காற்றில் பறக்க விட்டுவிட்டோம். அந்தத் தாக்கம் இப்போது கல்வியிலும் பரவத் தொடங்கிவிட்டது.
நம் குழந்தைகள் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டாம் என்பதல்ல. நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும்; வளர வேண்டும்; வாழ வேண்டும். ஆனால், அது இயல்பாகப் பெற வேண்டும்.
நம் குழந்தைகளிடம் உள்ள இயற்கை அறிவு, இலக்கியமாக, கலையாக, அறிவியலாக, பொறியியலாக, மருத்துவமாக ஏதோ ஒன்றைச் சார்ந்திருக்கலாம். அதைப் புரிந்து அதற்கேற்ப குழந்தைகளைப் பெற்றோர்கள் வழிநடத்திச் செல்ல வேண்டும். மாறாக குழந்தைகளுக்குள்ளே நாம் புகுந்து கொண்டு நமது ஆசைகளைக் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது. இந்தத் தவறான முயற்சிகூட சில வேளைகளில் பலன் தரலாம். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அது எதிர்மறை விளைவுகளையே உண்டாக்குகிறது. கலிலியோவை மருத்துவம்தான் படிக்கவைத்தார்கள். ஆனால் அவருக்கு அதில் நாட்டமில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம், மருத்துவம் ஒரு அனுமானமே தவிர, தீர்வல்ல. சிகிச்சைக்கென்று போனால் டாக்டர் ல ஒரு மருந்து சொல்வார். டாக்டர் வ வேறொரு மருந்து சொல்வார். அந்த வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் சிகிச்சை செய்து கொண்டாலும் "நோய்' குணமாவது உறுதி இல்லை. ஆனால், நான்கையும் மூன்றையும் கூட்டினால் ஏழு என்பது உறுதி. இந்தத் தீர்வு நான் சொன்னாலும் ஒன்றுதான். நீங்கள் சொன்னாலும் ஒன்றுதான். இது யாராலும் மாற்ற முடியாத தீர்வு என்று கணிதத்துக்கு மாறினார், கலிலியோ.
அவ்விதம் மாறக்கூடிய வசதியும், தைரியமும் கலிலியோவுக்கு இருந்ததைப் போல் நம் குழந்தைகளுக்கு இல்லாமல் இருக்கலாம். பெற்றோர்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், பெற்றோர்கள் பெரும்பாலும் அப்படி இல்லையே. பிள்ளைகளை பள்ளிக் காம்பவுண்டுக்குள் விட்டுவிட்டு அங்குள்ள மரத்தடியில் கூடுவார்கள். ஒரு குட்டி மாநாடு நடக்கும். "என் பிள்ளை இப்படி... உன் பிள்ளை எப்படி' என்று கருத்துக் கணிப்பார்கள். அடுத்த குழந்தை தனது குழந்தையைவிட ஒரு மதிப்பெண் அதிகம் என்பது தெரிந்ததோ, கெட்டது கதை. குழந்தையின்பாடு. தாளம்படாது, தறிபடாது. "நீயும் தானே அவனை(ளை)ப் போல தின்றே. அவளைப் போல டிரஸ் பண்றே... வாரத்துக்கு ஒரு வாட்டர் பாட்டில்... மாதத்துக்கொரு ஸ்கூல் பேக்.. இத்தனை வாங்கிக் கொடுத்தும் என்ன பிரயோஜனம். மதிப்பெண் குறைஞ்சுட்டியே. உனக்கு வெட்கமா இல்லை. அறிவில்லை..' இப்படிக் குழந்தையை வசைமாரிப் பொழிவார்கள். கழி எடுத்தும் அடிப்பார்கள்.
இது ஒரு சராசரி மனதின் அவசர வெளிப்பாடு. தன் குழந்தையால் தனக்கு ஏதோ அவமானம் நேர்ந்ததாய்க் கருதும் ஆத்திரம்.
ஆனால், ஒன்றைச் சிந்திக்க வேண்டும். இயற்கை என்னும் விசித்திர தேவதை ஒவ்வொரு குழந்தையின் அழகை வித்தியாசப்படுத்தியுள்ளது. அதை நாம் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம்.
படைப்பின் ரகசியம் என்று பிரம்மாவுக்கு நன்றி சொல்கிறோம். ஆனால், அதே படைப்பின் ரகசியம் குழந்தைகளின் அறிவையும் வித்தியாசப்படுத்தியுள்ளது. அதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?
இன்னொன்று தெரியுமா? இக்கால எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு நுண்மான் நுழைபுலம் ( ள்ங்ய்ள்ண்ற்ண்ஸ்ங்) நம்மைக் காட்டிலும் அதிகம். பக்கத்து குழந்தையைவிட ஒரு மதிப்பெண் குறைந்த வருத்தம் நமக்கு முன்பே நமது குழந்தைகளின் மனதை கீறி விட்டிருக்கும். அதே சமயம் அடுத்த தேர்வில் பக்கத்து சீட்டை மிஞ்ச வேண்டும் என்ற சவாலும் குழந்தை மனதில் துளிர்விட்டிருக்கும். அது புரியாமல், புரிந்து கொள்ளப் பொறுமை இல்லாமல் நாம் வேறு தாக்கினால் அப்பிஞ்சு மனம் என்ன பாடுபடும்?
"அப்படியா... அதனால் என்ன... அடுத்த தடவை உனக்கு அதிக மதிப்பெண் வரும் பாரேன்...' என்று குழந்தையின் கன்னத்தில் ஒரு செல்லத் தட்டு தட்டுங்கள். அது பாரத ரத்னா விருது மாதிரி. குழந்தையின் அறிவை, ஆற்றலை, திறமையை உயர்த்திப் பிடித்துவிடும்.
குழந்தையிடம் காட்டும் கோபம், மற்ற குழந்தையுடன் ஒப்பிடும் போக்கு, இவற்றால் நம் குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மையும், மன அழுத்தமும் உண்டாகிறது. கொஞ்சம் பொறுமை காட்டினால் இவற்றைத் தவிர்த்து விடலாமே!
குழந்தைகளின் மனசுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது போலவே, அவர்கள் மனம்போல் விளையாடவும் அனுமதிக்க வேண்டும். விளையாட்டின் மூலம் ஆக்கப்பூர்வமான சிந்தனை, அனுசரித்துப்போகும் தன்மை, ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் உத்தி, குழந்தைக்குத் தானாகவே உண்டாகி விடுகிறது என்கிறார் பிகெட்( டண்ஹஞ்ங்ற்) என்ற உளவியல் அறிஞர்.
மனம்போல் விளையாட வேண்டும் என்றால் மணிக் கணக்கில் குழந்தை விளையாட வேண்டும் என்பதல்ல. ஊழ்ங்ங்க்ர்ம் ற்ர் ச்ங்ங்ப் என்பது ஊழ்ங்ங்க்ர்ம் ற்ர் ஹஸ்ரீற் என்பதாகாது. உரிய நேரம் வந்ததும் "கண்ணா... உன் விளையாட்டு நேரம் முடிந்தது' என்று மென்மையாக "கோடி' காட்டினால் போதும். குழந்தை புரிந்து கொள்ளும். எனவே, எல்லாக் குழந்தைகளும் அறிவுள்ள குழந்தைகள் என்று நம்புவோம். அறிவுக்கேற்ப அவர்கள் மதிப்பெண்கள் பெறுவார்கள். முன்னேற்றம் காண்பார்கள் என்பதில் உறுதியாக இருப்போம்.

தமிழினியன்

நன்றி : தினமணி

தோல்வியே தொடர்கதையா?

உலகின் நாடி நரம்பைப் பிடித்துப் பார்க்கும் அங்கே, வெட்டிப் பேச்சுப் பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிப்பவர்களுக்கு சிறிதும் இடமில்லை. டன் கணக்கில் தியாகம் செய்து நேரம் பார்க்காமல், கண் துஞ்சாமல் தான் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்கிற உயர்ந்த வைராக்கியத்துடன் ஆண்டுக் கணக்கில் பயிற்சிகள் மேற்கொண்ட திறமைசாலிகள் கூடும் களம்தான் ஒலிம்பிக்.
அதில் இந்தியாவின் "பேலன்ஸ் ஷூட்' 8 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம். அதாவது ஆடவர் ஹாக்கி குழு, நார்மன் பிரிட்சார்டு (தடகளம்), கசபா தாதா சாஹேப் யாதவ் (மல்யுத்தம்), லியாண்டர் பயஸ் (டென்னிஸ்), கர்ணம் மல்லேஸ்வரி (பளு தூக்குதல்), ராஜ்யவர்தன் சிங் ரதோட் (துப்பாக்கி சுடுதல்) ஆகியோர்தான் இந்திய சாம்ராஜ்யத்தின் ஒலிம்பிக் வலிமைக்கு இதுவரை கட்டியம் கூறியவர்கள்.
தற்போது 29வது ஒலிம்பிக் போட்டி சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தியாவிலிருந்து இம்முறை 56 வீரர், வீராங்கனைகளும் அவர்களுக்கு உறுதுணையாக பயிற்சியாளர் உள்ளிட்ட 42 உதவியாளர் குழுவும் 12 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கிறது. ஆனால் ஒன்றில்கூட பதக்கம் உறுதி எனக் கூறமுடியாத அவலம்தான் உள்ளது.
1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த போட்டியில் ஜெய்பால் சிங் தலைமையில் பங்கேற்ற இந்திய ஹாக்கி குழு தங்கப் பதக்கத்துடன் தாயகம் திரும்பியது. ஆடவர் ஹாக்கி விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் ஐரோப்பா அல்லாத நாடாக அப்போது இந்தியா திகழ்ந்தது. அதுமுதல் 1956ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த போட்டிவரை இந்திய ஹாக்கி குழுவை யாரும் அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கடைசியாக 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வி.பாஸ்கரன் தலைமையில் சென்ற குழு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஹாக்கி குழு, இம்முறை அதற்கான தகுதிப் போட்டியிலேயே தேறாமல் போனது, உச்சகட்ட ஏமாற்றத்தை அளித்துள்ளது. பத்தாண்டுகள் அல்ல, இருபது ஆண்டுகள் அல்ல, 84 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பை இந்திய ஹாக்கி அணி இழந்துள்ளது.
1900ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த போட்டி முதல் நூறாண்டுகளைக் கடந்து ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறோம். ஆனால் இந்தியாவின் கஜானாவில் வெறும் 17 பதக்கங்கள்தான். அதற்காக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாமானியனும் வருத்தப்பட்டிருப்பானோ, இல்லையோ தெரியவில்லை, நிச்சயம் நவீன ஒலிம்பிக் விளையாட்டைத் தோற்றுவித்த பியாரே டி கூபர்டின் இருந்திருந்தால் கண் கலங்கியிருப்பார்.
இந்தியாவில் அரசியல்வாதிகள் ஒலிம்பிக் போட்டியை தாங்கள் ஆட்சிசெய்வது மாதிரியே பார்க்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வேஷம் கலைப்பது போல, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்கையும் பார்க்கிறார்கள். போட்டி நடைபெறும் சமயத்தில் மட்டும் கவலை கொள்கிறார்கள். ஆனால், எந்த அரசியல்வாதியும் தனது ஆட்சிக் காலத்தில் ஜாம்பவான்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் களத்துக்கு வலிமையான வீரரையோ, வீராங்கனையையோ தயார் செய்யும் நீண்டகாலத் திட்டத்தின் அவசியத்தை ஆணித்தரமாக வலியுறுத்தியது கிடையாது. அப்படியொரு மகான் கிடைக்கும்வரை, ஒலிம்பிக் என்பது இந்தியாவுக்கு வெறும் சடங்காகவே இருக்கும்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், போட்டிக்காக நாம் திட்டமிடுவது மிகவும் மோசம். அப்படியிருந்தும் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதைபோல யாராவது ஒருவர் கடந்த சில போட்டிகளில் ஏதாவது ஒரு பிரிவில் பதக்கம் வென்று நாட்டின் கதாநாயகனாக ஆகிவிடுகிறார். அதைத் தொடர்ந்து போட்டிக்கான ஒட்டுமொத்தத் தோல்வி குறித்து விசாரணை நடத்தப்படும் என்ற பேச்சு, போட்டி முடிந்ததும் நாடாளுமன்றத்திலிருந்து வெளியாகும். இது தொன்றுதொட்டு இருந்துவரும் கதை.
அணுகுண்டு வெடித்து அறிவியல் முன்னேற்றத்தில் புரட்சி செய்துவரும் இந்தியா, தனது விளையாட்டு வலிமையை உலகுக்கு வெளிக்காட்டுவதில் சுணக்கம் காட்டிவருவது வேதனையான விஷயம். வெறும் 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நாடுகூட பதக்கத்தைக் கைப்பற்றும்போது, 115 கோடிக்கும் மேலான மக்கள் தொகையை உள்ளடக்கிய இந்தியா ஒரு பதக்கத்துக்காகப் போராடும் நிலைதான் உள்ளது.
அடுத்து, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, உலக ஹாக்கி சாம்பியன் போட்டி ஆகியவற்றைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக்கையும் நடத்த மேன்மை தாங்கிய இந்திய விளையாட்டு அமைப்பு தயாராகியுள்ளது. ஆதலால் ஆட்சி செய்யும் அதிகாரிகள் அதையும் மனதில் கொண்டு தங்களது வேலைப்பளுவில் ஒரு சிறிய சதவீதத்தை இந்த பாழாய்ப்போன விளையாட்டுக்காக இப்போதிலிருந்தே ஒதுக்கி முன்னேறப் பாடுபடவேண்டும். இல்லையேல் பங்கேற்புதான் முக்கியம்; பதக்கம் வெல்வது இரண்டாம்பட்சம் என்ற தத்துவத்துக்கு கிடைத்த வெற்றியுடன் திருப்தியடைவோம்!
வி. துரைப்பாண்டி
நன்றி : தினமணி