Monday, August 11, 2008

உலகமயம்உண்மை முகம்!

தோஹாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு உண்மையில் யார் காரணம்?
வளர்ச்சியடைந்த நாடுகள் மானிய விஷயத்தில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தன. விவசாயம், உரம் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கக் கூடாது என வளரும் நாடுகளை, வளர்ச்சியடைந்த நாடுகள் வலியுறுத்தின. இதனால்தான் பேச்சு தோல்வியடைந்தது என்று இந்தியா சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் கூறுகிறார்.
மாறாக, தோஹா பேச்சு தோல்விக்கு இந்தியாவும், சீனாவுமே காரணம் என்று அமெரிக்க வர்த்தக சபை குற்றம் சாட்டியுள்ளது. வளர்ந்த நாடுகள் தங்கள் சந்தைப் பொருளாதாரத்தில் மேலும் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று இந்தியாவும் சீனாவும் கோருகின்றன. ஆனால், இந்தியாவும் மற்ற வளரும் நாடுகளும் தங்கள் உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றன என்பதுதான் அமெரிக்க வர்த்தக சபையின் குற்றச்சாட்டு.
உண்மை நிலை என்ன? வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது விவசாயிகளுக்கு மானியத்துக்குப் பதிலாக ஊக்கத்தொகை (இன்சென்டிவ்) அளிக்கின்றன. ஊக்கத்தொகை என்ற பெயரில் மிகப்பெரிய தொகைகள் வழங்கப்படுகின்றன.
இப்படி உற்பத்தியான பொருள்களை இந்தியச் சந்தையில் அனுமதிக்கும்முன் இந்திய விவசாயிகளைக் காப்பதற்கு உரிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தான் வர்த்தக அமைச்சர் கமல்நாத் உலக வர்த்தக பேச்சுவார்த்தையில் கூறியுள்ளார். இதே நிலையைத் தான் சீனாவும் மேற்கொண்டது.
கிட்டத்தட்ட 40 நாடுகளைச் சேர்ந்த வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், இந்தியாவுக்காக மட்டுமல்லாமல், 100 வளரும் நாடுகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியதாக இந்திய வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் இங்கே பளிச்சிடுகிறது.
இங்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டுவது பொருந்தும்.
இதே அமெரிக்காவும் கடந்த காலத்தில் ஒரு வளரும் நாடாகத்தான் இருந்தது. அப்போது அமெரிக்கா சர்வதேச வர்த்தக விஷயத்தில் எடுத்த நிலைப்பாடு என்ன?
18வது நூற்றாண்டில் இங்கிலாந்து மிகவும் வளர்ச்சியடைந்த நாடு. அமெரிக்கா அப்போது வளரும் நாடு. அதுசமயம் ஆடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்கார்டோ போன்ற பொருளாதார வல்லுநர்கள், நாடுகளுக்கிடையே, ""ப்ரீ டிரேட்'' என்னும் ""தடையில்லா வர்த்தகத்தை'' முன்னிலைப்படுத்தினார்கள். அமெரிக்கா அதனை ஏற்கவில்லை.
""பணக்கார நாடுகள் மேலும் பணக்காரர்கள் ஆவது எப்படி? ஏழை நாடுகள் ஏழை நாடுகளாகவே தொடர்வது ஏன்?'' என்னும் நூலில் அதன் ஆசிரியர் எரிக் ரிநெர்ட் என்ன சொல்லுகிறார் தெரியுமோ? 1820களில் அமெரிக்கர்களின் கோஷம் இதுதான்: ""ஆங்கிலேயர்கள் சொல்வதைச் செய்யாதே! அவர்கள் செய்வதையே நீங்களும் செய்யுங்கள்!''
ஆக, இப்போது இந்தியர்கள் கோஷம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
""அமெரிக்கர்கள் சொல்வதைச் செய்ய வேண்டாம்! அவர்கள் செய்வதையே நாமும் செய்வோமாக!''
தோஹா பேச்சுவார்த்தை 2001ம் ஆண்டு தொடங்கியது. அதாவது, அமெரிக்காவில் பயங்கரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தாக்கினார்களே, அதற்குப் பின்னர் தான் இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. உலகப் பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கு இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம், தோஹா பேச்சுவார்த்தைதான், சர்வதேச வர்த்தகம் தொடர்பான, பன்முக வளர்ச்சி நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி எனலாம்.
இந்த முயற்சி வெற்றி பெற்றால், ஏழை நாடுகள் வளர்ந்த நாடுகளுடன் உலக வர்த்தகச் சந்தையில் சமவாய்ப்பு பெற இயலும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த ஏழு ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னரும் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. மாறாக, ஏழை நாடுகளின் வர்த்தக மேம்பாடு தொடர்பான இரண்டு முக்கியப் பிரச்னைகள், பேச்சுவார்த்தைகளில் பின்னுக்குத்தான் தள்ளப்பட்டன. அவை விவசாயம் சார்ந்த சந்தை மற்றும் விவசாயம் சாராத சந்தையில் பங்கேற்றல். இவ்விரண்டு முக்கியப் பிரச்னைகளும் ஆரம்பம் முதல் இன்று வரை தீர்க்கப்படாத பிரச்னைகளாகவே தொடர்கின்றன.
இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகள் அப்படி என்ன பெரிதாகக் கேட்கின்றன? தங்கள் நாடுகளில் ஏழ்மையில் வாடும் விவசாயிகளின் வயிற்றுப்பிழைப்புக்கான வருவாயை உறுதி செய்ய வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கை.
ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் கோருவது என்ன? உலக வர்த்தகத்தில் வணிக ரீதியிலான அதிகபட்ச லாபம்!
வளரும் நாடுகள் விவசாயத்துக்கு வழங்கும் மானியத்தைக் குறைக்க வேண்டும் என வளர்ந்த நாடுகள் வலியுறுத்துகின்றன. இதற்காக வளர்ந்த நாடுகள் வகுத்துள்ள சிறப்புப் பொருளாதாரப் பாதுகாப்பு உத்திகள், வளரும் நாடுகளுக்குச் சிறிதும் ஏற்புடையதாக இல்லை.
இது இந்திய விவசாயிகள் மட்டுமல்லாமல் 100க்கும் அதிகமான வளரும் நாடுகளைப் பாதிக்கும் என்பதாலேயே, இதற்கு இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை.
அதேசமயம், வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து, இறக்குமதி கடந்த மூன்று ஆண்டுகளோடு ஒப்பிட்டு, அது 40 சதவீத அளவுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என்று வளரும் நாடுகள் வலியுறுத்தின. வளரும் நாடுகளில் விவசாயிகளைக் காப்பாற்றும் நோக்கில்தான் இந்த இறக்குமதிக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டது. இதே நடைமுறையைத்தான் 1995ம் ஆண்டு மேற்கொண்ட உருகுவே ஒப்பந்தத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் பின்பற்றின. ஆனால் இந்தப் பரிந்துரையை வளர்ந்த நாடுகள் இப்போது ஏற்க மறுக்கின்றன. இது என்ன நியாயமோ?
ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே அடங்கிய சிறிய குழுவில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்ததே தோல்விக்கான காரணமாக இருக்கக்கூடும் என்று சில நாடுகள் கருதுகின்றன. மேலும் பல நாடுகள் அடங்கிய குழுவில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று இருந்தால் ஒருவேளை முடிவு வித்தியாசமாக இருந்திருக்கலாம் என்பது அவர்கள் கருத்து.
வளர்ந்த நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதுபோலவே வளரும் நாடுகளுக்கிடையேயும் கருத்து வேறுபாடுகள் இருப்பது துரதிர்ஷ்டவசமானதே. இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக அறிவிக்க வேண்டாம் என்றும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
மேற்கத்திய நாடுகள் தத்தம் வர்த்தக நன்மைகளையும் உள்நாட்டுத் தொழில்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இன்னும் சில மாதங்களில் புதிய அதிபர் பொறுப்பேற்க உள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், அடுத்த சுற்றுப்பேச்சு வார்த்தை மிக விரைவில் நடைபெறுமா என்று சொல்வதற்கில்லை.
ஆனால், ஒரு விஷயத்தை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போது அரங்கேறியுள்ள உலகமயம் அனைத்து நாடுகளுக்கும் சம வாய்ப்பு அளிப்பதாக இல்லை. எனவே இந்தியா போன்ற வளரும் நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்து கேட்பது யாசகம் அல்ல. சமநீதியே ஆகும்.
உலகமயமாக்கல் போர்வையில், வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாகவும், வளரும் நாடுகளுக்குப் பாதகமாகவும் உருவாகும் போக்குகள் நிச்சயமாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.
எஸ். கோபாலகிருஷ்ணன்
(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).
நன்றி : தினமணி

வெறும் கனவாகிவிடக்கூடாது!

பாகிஸ்தானின் ஆளும் கூட்டணிக் கட்சிகள், அதிபர் பர்வீஸ் முஷாரபை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்று முடிவெடுத்திருக்கின்றன. ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆஸிப் அலி ஜர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் நவாஸ் ஷெரீபும் ஒருவழியாக அதிபர் முஷாரபுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது என்பதிலும், முஷாரபால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்பதிலும் கைகோர்த்துச் செயல்பட இருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.
சொல்லப்போனால், அதிபர் முஷாரபை பதவி விலகச் செய்ய, தகுந்த காரணங்கள் பல இருக்கின்றன. தனது ஆதரவாளர்களின் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தபோதே அதிபர் முஷாரப் கெளரவமாகப் பதவி விலகி இருக்க வேண்டும். பாகிஸ்தான் அரசியல் சட்டப் பிரிவு 56ன்படி பிப்ரவரி மாதம் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்தபோது, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் தொடக்க உரை நிகழ்த்தி இருக்க வேண்டும். அதுவும் அவர் செய்யவில்லை.
அரசியல் சட்டத்தைத் திருத்தி இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, உச்ச நீதிமன்றத்துக்கு முஷாரப் ஓர் உத்தரவாதம் அளித்திருந்தார். அதன்படி, தேர்தல் நடத்தப்பட்டு முறையாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற மற்றும் பிராந்திய சட்டப்பேரவைகளின் அங்கீகாரத்தை அவர் பெற்றாக வேண்டும். அந்த உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து பார்த்தார் அதிபர் முஷாரப்.
ராணுவ ஆட்சியில் மக்கள் நலம் பேணப்படவில்லை என்பதற்குக் கடந்த எட்டாண்டு கால அதிபர் முஷாரபின் ஆட்சிதான் உதாரணம். பொருளாதாரம் முற்றிலுமாகச் சீர்குலைந்தது என்பது மட்டுமல்ல, மதத் தீவிரவாதம் கட்டுக்கடங்காத பயங்கரவாதமாக மாறியது, அதிபர் பர்வீஸ் முஷாரபின் ஆட்சியில்தான். மக்களின் தீர்ப்பு முஷாரபுக்கு எதிராக அமைந்ததில் யாருக்குமே ஆச்சரியம் ஏற்படாதது அதனால்தான்.
அதிபர் முஷாரபை பதவி இறக்குவதற்கு, முதல்கட்டமாக அத்தனை பிராந்திய சட்டப்பேரவைகளும், உச்ச நீதிமன்றத்தில் அவர் அளித்திருந்த வாக்குறுதிப்படி உடனடியாக நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற இருக்கின்றன. இந்த வாக்குகளின் அடிப்படையில் அதிபர் முஷாரபின் பதவி நீக்கத்துக்கு நாடாளுமன்றத்தில் கட்சிகள் எப்படி அணிசேரும் என்பது தெளிவாகிவிடும்.
அதிபர் முஷாரபை எப்படியும் பதவி நீக்கம் செய்துவிட முடியும் என்றும், தாங்கள் வெற்றிபெறப் போதுமான வாக்குகள் இருப்பதாகவும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் நம்புகின்றன. நாடாளுமன்றத்தில் இரு அரசியல் அணிகளுக்கும் சேர்த்து உள்ள மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 440. இதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், அதாவது 295 வாக்குகள், ஆதரவாக இருந்தால் மட்டும்தான் ஆளும் கூட்டணியால் அதிபர் முஷாரபை பதவி நீக்கம் செய்ய முடியும். முஷாரபின் ஆதரவுக் கட்சியான கயூம் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீகிலிருந்து கணிசமான பலர் தங்களது அணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று ஆளும் கூட்டணியினர் நம்புகிறார்கள்.
அதிபர் முஷாரபை பதவி நீக்கம் செய்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. நாடாளுமன்றத்தைக் கலைத்து, அவசரநிலைச் சட்டத்தைப் பிரகடனம் செய்யும் அதிகாரம் இப்போதும் அதிபர் முஷாரபிடம் இருக்கிறது. ஒரு காபந்து அரசை நியமித்து அதிகாரத்தில் தானே தொடர அதிபர் முஷாரப் விரும்ப மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
பாகிஸ்தான் ராணுவம் என்ன செய்யப் போகிறது என்பது அடுத்த கேள்வி. இத்தனை காலமும், சர்வ வல்லமையுடனும், அளவில்லாத அதிகாரத்துடனும் வலம் வந்த ராணுவம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அடிபணிந்து நடக்குமா என்பது சந்தேகம்தான். தங்களது ராணுவத் தளபதியைப் பதவி நீக்கம் செய்வதை ராணுவம் வேடிக்கை பார்க்காது என்று நம்பலாம். யார் நம்புகிறார்களோ இல்லையோ, நிச்சயமாக அதிபர் முஷாரப் ராணுவத்தை நம்புகிறார்.
ஐ.எஸ்.ஐ. எனப்படும் பாகிஸ்தானின் உளவுத்துறைத் தலைவராக இருப்பவர் அதிபர் முஷாரபின் உறவினர். அதிபர் முஷாரபை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் தோல்வி அடைய நிச்சயமாக ஐ.எஸ்.ஐ. ஆவன செய்யும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியே அது சாத்தியமில்லாவிட்டால், உள்நாட்டுக் கலகத்தையோ, இந்திய எல்லையில் பிரச்னையையோ ஏற்படுத்திப் பதவி நீக்கத்தைத் தடுக்க ஐ.எஸ்.ஐ. முனையும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
பாகிஸ்தானில் மக்களாட்சி மலர வேண்டும். அமைதி நிலவ வேண்டும். இந்திய பாகிஸ்தான் உறவு வலுப்பட வேண்டும். தெற்காசிய நாடுகளிடையே ஒற்றுமை வலுப்பட வேண்டும். இவையெல்லாம் நமது பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவைகள். அதற்கு முதல்கட்டமாக, அதிபர் முஷாரப் பதவி விலக வேண்டும். அது நடக்காத வரையில், மேலே சொன்ன அனைத்தும் வெறும் பகல் கனவுகளாகத்தான் இருக்கும்!
நன்றி : தினமணி

கம்ப்யூட்டருக்குள் ஒரு குட்டிச் சாத்தான்

சமீபத்திய குஜராத் குண்டுகளில் சில குண்டுகள் வெடித்தன, சில பிசுபிசுத்தன. ஆனால் சத்தமே இல்லாமல் பலமாக வெடித்த குண்டு ஒன்றைச் சிலர்தான் கவனித்தார்கள். அதுதான் இ மெயில் குண்டு! திரியில் நெருப்பு வைத்த கையோடு தீவிரவாதிகள் ஒரு மின் அஞ்சல் அனுப்பி ""பார்த்தாயா எங்கள் சாதனையை'' என்று கொக்கரித்தார்கள். ஒரு மின் அஞ்சல் எந்த முகவரியிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிப்பது சுலபம்.
எனவே போலீசார் எல்லா சைரன்களையும் ஒலித்துக் கொண்டு விரைந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட வீட்டில் போய்ப் பார்த்தால் அப்பாவி அமெரிக்கர் ஒருவர் திருதிருவென்று விழித்துக் கொண்டு நிற்கிறார். அவருடைய கம்ப்யூட்டரை அல்லது நெட் இணைப்பைப் பயன்படுத்தி வேறு யாரோ மெயில் அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும் அவரிடம் தீவிர விசாரணை செய்து லேப்டாப்பைப் பிடுங்கி வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலெல்லாம் உருப்படியாக எதுவும் சிக்குவது சந்தேகம்தான்.

கணிப் பொறி கிரிமினல்களால் நம்முடைய கம்ப்யூட்டரை உபயோகித்து நமக்குத் தெரியாமலே என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்; மெயில் அனுப்புவது உள்பட. கம்ப்யூட்டர் வைரஸ்கள் பற்றி எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம். இன்னும் கணினிப் புழு, ட்ரோஜன் குதிரை என்று பல வடிவங்களில் போக்கிரி மென்பொருட்கள் வருகின்றன. இவை எழுதப்படும் விதத்தில்தான் வித்தியாசமே தவிர, செய்யும் வேலை ஒன்றுதான்: நாசவேலை! உதாரணமாக, ஈஞந தாக்குதல் என்று இருக்கிறது.
தங்களுக்கு வேண்டாதவர்களின் வலை மனைக்கு சரமாரியாக ஆயிரக்கணக்கான கோரிக்கைகளை அனுப்பித் தாக்கினால் அவர்களுடைய சர்வர் எனப்படும் தாய்க் கம்ப்யூட்டர் சமாளிக்க முடியாமல் மடங்கி விழுந்துவிடும். ஏகப்பட்ட குழந்தைகள் பெற்றுவிட்ட தாயாரை அத்தனையும் ஒரே சமயத்தில் "சாப்பாடு, பாத்ரூம், குச்சி மிட்டாய்' என்று பிடுங்கி எடுத்தால் அவள் ஆயாசப்பட்டுப் போவதில்லையா, அதுபோல்தான்.
பாட்கள் ( bots) என்பவை மென்பொருளால் செய்த தானியங்கி ரோபாட்கள். குட்டிச் சாத்தான் மாதிரி நம் கம்ப்யூட்டருக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு, எங்கோ தூரத்திலிருக்கும் தன் எஜமானனின் ஏவல்களை நிறைவேற்றும். அப்படியே மலையாள மாந்திரீகம்தான்! சில பாட்கள் நம் கம்ப்யூட்டரைக் குடாய்ந்து பார்த்து ஏதாவது பாஸ் வேர்டு, கிரெடிட் கார்டு எண் அகப்படுகிறதா என்று தேடும். வேறு சில, நம் மின் அஞ்சல் முகவரிப் புத்தகத்தை அனுமதியில்லாமல் திறந்து பார்த்து அவர்களுக்கெல்லாம் ஏதாவது நய வஞ்சக மெயில் அனுப்பும்.
பாட்களை ஏவி விடும் திருடர்கள், பல்கலைக் கழகங்களிலும் அசட்டு அரசாங்க அலுவலகங்களிலும் நூற்றுக்கணக்கான கணினிகள் இருப்பதால் அவற்றைக் குறிவைத்துத் தாக்குவார்கள். பாட் ஒன்று ஒரு தடவை உள்ளே நுழைந்துவிட்டால் போதும்; தானாகவே அத்தனை கம்ப்யூட்டரிலும் தன்னுடைய ஜெராக்ஸ் காப்பிகளை அனுப்பி ஆக்கிரமித்துவிடும். ஹாலந்து நாட்டில் பொல்லாத பாட் ஒன்று ஒரே நேரத்தில் பதினைந்து லட்சம் கம்ப்யூட்டர்களைப் பிடித்துக் கொண்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ந்து போனார்கள்.
பாட்களை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள்? நிறைய அக்கிரமங்கள். ""வயாகரா மாத்திரையை வாங்குங்கள், வாங்குங்கள்'' என்று வலியுறுத்தும் விளம்பரங்கள் அடிக்கடி உங்கள் மின் அஞ்சல் பெட்டியை நிரப்புவதைப் பார்த்து நொந்திருப்பீர்கள். இந்த மாதிரி ஹோல்சேலில் அனுப்பப்படும் அஞ்சல்கள் அநேகமாக பாட்களின் வேலையாக இருக்கலாம். பாட்டை ஏவிவிட்ட அந்த... (ஸாரி... கதிரின் கௌரவமான வாசக சபை முன் வைக்கலாகாத கெட்ட வார்த்தையை நானே எடிட் செய்து விடுகிறேன்) , தானே இத்தனை மெயிலும் அனுப்பினால் செலவாகும் என்பதால் "ஊரான் வீட்டு நெய்யே' என்று உங்கள் கம்ப்யூட்டரை உபயோகித்துக் கொள்கிறான். வெடிகுண்டு புரளிகள், ஜார்ஜ் புஷ்ஷுக்கு கொலை மிரட்டல் என்பது போன்ற சட்ட விரோத மெயில்களுக்கும் "பாட்'கள் மூலம் அப்பாவிகளின் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்திக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. நம் கம்ப்யூட்டரிலிருந்து கெட்ட மெயில் ஒன்று அனுப்பப்பட்டிருந்தால் சந்தேக ஊசி முதலில் நம்மைத்தான் காட்டும். "நான் அதை அனுப்பவே இல்லை' என்று நிரூபித்து வெளியே வருவதற்குள் எத்தனை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்குமோ.
திருடர்களாலும் தீவிரவாதிகளாலும் நம் கம்ப்யூட்டர் ஹைஜாக் செய்யப்படாமல் காப்பாற்றுவது எப்படி? முதலாவதாக, நமக்கு வேண்டிய எல்லா மென் பொருள்களையும் முறையாகக் காசு கொடுத்து வாங்குவதே உத்தமம். (ஆம். விண்டோஸ் உட்பட) திருட்டுக் கூடாது என்று மகாத்மா காந்தி அறிவுரை கூறிச் சென்றது ஒரு புறமிருக்க, திருட்டு சாப்ட்வேரில்தான் வைரஸ்கள் வசிப்பதற்கு வாய்ப்பு அதிகம். கம்ப்யூட்டரை லோடு செய்யும் போது ஃபயர் வால் எனப்படும் தீச்சுவர்களை எழுப்பிப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு பட்டனை அமுக்க வேண்டியதுதான். அந்தப் பட்டன் எங்கே என்று கண்டுபிடிப்பதுதான் பெரும்பாடு.

கம்ப்யூட்டரையும் நாய்க்குட்டி போல் அவ்வப்போது அதன் வெட்னரி டாக்டரிடம் காட்டித் தடுப்பூசி போட்டு வர வேண்டும். நார்ட்டன், மக்கஃபே போன்ற வைரஸ் தடுப்பு மென்பொருள்கள் எப்போதும் கைவசம் இருக்கட்டும். உங்கள் கம்ப்யூட்டர் வழக்கத்தைவிட மசமசவென்று வேலை செய்தாலோ, திடீர் திடீரென்று காரணமில்லாமல் மண்டையைப் போட்டாலோ வைரஸ் தாக்குதல் காரணமாக இருக்கலாம். சில சமயம் கீ போர்டு, மவுஸ் எதற்கும் பதில் இருக்காது. பின்னணியில் வைரஸ் உக்கிரமாக வேலை செய்யும் போது மொத்த கம்ப்யூட்டரும் எதிர்பாராதவிதமாக நமீதாவை நேரில் கண்ட ரசிகன் போல் செயலிழந்து திகைத்து நின்றுவிடும். கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டாலும் உடனே ஸ்கான் செய்ய வேண்டும்.

இப்போதெல்லாம் பாட்களைக் கண்டுபிடித்து அழிக்கும் மென்பொருள் ஒன்று ஆண்டிபாட் என்று தனியாகவே கிடைக்கிறது. நியாயமாகப் பார்த்தால் அவர்கள் ஆண்ட்டி வைரஸுடன் இதையும்தான் சேர்த்துத் தரவேண்டும். ஆனால் இட்லிக்கு எக்ஸ்ட்ரா சாம்பார் கேட்டால் அதற்குச் சிலர் தனியாகக் காசு பிடுங்குவதுபோல் பாட் எதிர்ப்பு மென்பொருள்களையும் உபரியாக விற்கிறார்கள். இவர்களெல்லாம் கூடிய விரைவில் தொழில் போட்டி தாங்காமல் எல்லாவற்றையும் இலவசமாகவே கொடுத்துவிட்டு அண்டர்வேருடன் ஓடக் கடவதாக.
வைஃபை ( Wi-fi) என்ற ஒயர்லெஸ் தொழில் நுட்பத்தில் கம்பியில்லாமல் கணினியை நெட்டில் இணைத்துக் கொள்ள முடியும். மடிக் கணினியை எடுத்துக் கொண்டு வீடு பூரா சுற்றலாம், தோட்டத்தில் மாமரத்தடியில் உட்கார்ந்து மெயில் அனுப்பலாம். சுகமான விடுதலை! ஆனால் இதன் ரேடியோ அலைகள் நூறு மீட்டருக்கு மேல் பரவுவதால் பக்கத்து வீட்டுக்காரர்களும் உங்கள் செலவில் மெயில் அனுப்ப முடியும். நம் வீட்டு வாசலில் ஒரு ஓரமாக காரைப் பார்க் செய்துவிட்டு அதற்குள் உட்கார்ந்து கொண்டு தீவிரவாதிகளும் மெயில் அனுப்பலாம். நாளைக்கு ஏதாவது வில்லங்கம் என்றால் முதல் விலங்கு நமக்குத்தான்.
உங்களிடம் வைஃபை மோடம் இருந்தால் அதை ஜன்னல் ஓரமாக வைக்காதீர்கள். வீட்டின் நடுவே பொருத்திக் கொண்டால்தான் சற்று பாதுகாப்பு. ரேடியோ அலைகளின் சக்தியைக் குறைத்துத் தேவையான அளவுக்கு மட்டுமே வைத்துக் கொள்ளவும். இருப்பதிலேயே நீளமான பாஸ் வேர்டு போட்டு வையுங்கள். எங்கள் கட்டிடத்திலேயே பல அப்பாவிகள், பாஸ் வேர்ட் இல்லாமலேயே வைஃபை உபயோகிப்பது கண்டு பதறி ஓடிப் போய் எச்சரித்திருக்கிறேன். இன்னும் ஈஏஇடயை அணைத்து ரடஅ வை ஏற்ற வேண்டும் என்றெல்லாம் சொல்ல முற்பட்டால் அடிக்க வருவீர்கள். அக்கம்பக்கத்தில் மோட்டார் பைக் வைத்திருக்கும் இளைஞர்களிடம் கேட்டால் சொல்லித் தருவார்கள். நல்லவேளையாக இதெல்லாம் ஒருமுறை செய்தால் போதும்.
குண்டு வெடிப்பு மெயில் விவகாரத்தில் சிக்கியவர் அமெரிக்கராக இருந்ததால் அடி வாங்காமல் தப்பித்தார். நீங்களும் நானும் மாட்டியிருந்தால் லத்திக் குச்சியில் மிளகாய்ப் பொடியைத் தடவிக் கொண்டுதான் விசாரணையையே துவக்கியிருப்பார்கள். எனவே சற்றே கவனமாக நம் கம்ப்யூட்டரைப் பாதுகாப்போம்.

ராமன்ராஜா

நன்றி : தினமணி