Tuesday, August 12, 2008

உரத்தின் சுமையுடன் உற்பத்தி உயர...

""ஆடிப்பட்டம் தேடி விதை'' என்பது பழமொழி. ஆடி பிறந்துவிட்டால் தானிய விதைகளைத் தேடி விதைப்பவர்கள் குறைந்தும், பக்தி விதைப்பவர்கள் பெருகியும் வருகிறார்கள். ஒரு பக்கம் பார்த்தால் கிராமங்களில் ஆடி மாதம் அம்மன் திருவிழாக்கள்.
மறுபக்கம், டி.வி.யைத் திருப்பினால், ஊருக்கு ஊர் திருவிழா நடத்தும் அதே விவசாயிகள், ""விதை உண்டு, மழை உண்டு, ஆனால், உரம் இல்லையே'' என்று உரத்த குரலில் பேட்டி தருகின்றனர் ஆமாம். இந்த ஆண்டு உரத்தட்டுப்பாடு மிகவும் கடுமையாகத்தான் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உரப் போராட்டம் வீதிக்கு வந்துவிட்டது.
ஏன் இந்த உரத் தட்டுப்பாடு? சொல்லப்படும் பல காரணங்களில் உரத்தின் விலையேற்றம், உரத்தில் கள்ளச்சந்தை, உரம் அழுத்தும் நிதிச்சுமை, தேவையுள்ள இடத்தில் கிட்டாத நிலை. பசுமைப்புரட்சி தொடங்கிய காலகட்டத்தில் ஒரு விவசாயியின் சம்மதம் இல்லாமலேயே இலவசமாக வயல்களில் யூரியா தெளித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று கேட்டாலும் கிடைப்பதாக இல்லையாம். இப்படி ஒரு சோகம் இருந்தாலும் இந்த உரத்தட்டுப்பாட்டால் தமிழ்நாடு காவிரி டெல்டா பகுதிகளில் பல விவசாயிகள் இயற்கை உரத்துக்கு மாறியுள்ளனர்.
ரசாயன உரம் என்பது புதைவு எரிசக்தி நெருக்கடியுடன் தொடர்புடையது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் யூரியா விலையும் உயரும் என்ற உண்மையை முன்கூட்டியே உணர்ந்து விழிப்புணர்வுடன் என்றுமே கிடைக்கும் இயற்கை உரங்களை நம்பியவர்கள் விழித்துக் கொண்டவர்கள் என்றாலும்கூட, குறட்டை விட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டிய யதார்த்தங்களைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும்.
யூரியா, அமோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களுக்குரிய மூலப்பொருள் நாஃப்தா. இதுவும் ஒரு பெட்ரோலியப் பொருள். இது முழுக்கவும் இறக்குமதி செய்துதான் யூரியா உற்பத்தியாகிறது. இது நான்கு மடங்கு விலை உயர்ந்துவிட்டது. மைய அரசு நாஃப்தாவுக்கு மானியம் வழங்குகிறது. அப்படியும் உரம் ஒரு டன் அடக்கவிலை ரூ. 17,000. நாஃப்தா விலை உயர்வால் இன்றைய அடக்கவிலை டன் ஒன்றுக்கு ரூ. 50,000.
நிதிச்சுமை காரணமாக விலையேற்றத்திற்கு ஏற்ப மைய அரசின் மானியச் சலுகை நின்றுவிட்டதால் உரக் கம்பெனிகள் உற்பத்தியைக் குறைத்துவிட்டன என்று கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை காரணம் கூறியுள்ளார். மைய அரசு வழங்கும் தகவலின்படி உரமானியம் 2004 05 இல் 15,779 கோடி ரூபாய் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து 2008 09இல் 95,000 கோடி ரூபாய் என்றாகிவிட்டது. இது மொத்த இந்திய வருமான மதிப்பில் (எ.ஈ.ட.) 1.9 சதம். இந்த நிலை நீடித்தால், வரும் ஆண்டுகளில் உர மானியம் 2,00,000 (இரண்டு லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு உயர்ந்துவிடும். மைய அரசின் கஜானா காலியாகிவிடும். சுகத்தைத் தரவேண்டிய உரம் இன்று விவசாயிகளுக்கும் அரசுக்கும் சுமையாகிவிட்டது. இதனால் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சமும் உள்ளது. இச்சுமையை நீக்கி உற்பத்தி உயர என்ன செய்ய வேண்டும்?
புதைவு எரிசக்தி (ஊர்ள்ள்ண்ப் உய்ங்ழ்ஞ்ஹ்) இருப்புக்குறைவதால் ஏறும் பெட்ரோல் விலைக்கு மாற்றாகக் கண்ணுக்குத் தெரியும் காளை மாட்டையும், கரும்பு எத்தனாலையும் மறந்துவிட்டுக் கவைக்கு உதவாத காட்டாமணக்கையும் ஆபத்தான அணுசக்தியையும், சுற்றாத காற்றாடிகளையும், சுடாத சூரிய ஒளி சாதனங்களையும் நினைக்கத் தெரிந்த மனம், ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை உர உற்பத்தியை மறப்பது ஏனோ புரியவில்லை.
உற்பத்தித்திறன் மிகுந்த அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் அதிகபட்சமாக இயற்கை உரம் இட்ட பின்னர் அளவோடு ரசாயன உரத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கு மிகவும் குறைவாக இயற்கை உரத்தை இட்டு, அதிகபட்சமாக ரசாயன உரம் இடும் ஒரு தவறான மரபால் மண் வளம் இழக்கப்பட்டு உணவு உற்பத்தி குறைகிறது.
மண் பற்றிய ஓர் அடிப்படையான விஷயத்தை நமது விவசாயப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்குக் கற்பிப்பது இல்லை. விவசாயிகளிடமும் சொல்வது இல்லை. ஒரு பிடி மண்ணில் நுண்ணுயிரிகள் மில்லியன், பில்லியன் அளவில் இருந்து பணிபுரிந்தால்தான் உற்பத்தி உயரும். சத்துள்ள மண் பொலபொலப்பாகவும், அதேசமயம் ஈரமண் பிள்ளையார் பிடிக்கும் அளவில் சற்று கெட்டித் தன்மை (ஈரம் காக்க) யுடையதாகவும் இருக்க வேண்டும். நீர் விட்டால் வேர் சுவாசிக்க வேண்டும். மண்புழு, எறும்பு, கரையான் உள்ள மண்களில் இந்நிலை கிட்டும். இக்கால நுண்ணுயிரிப் படிப்பில் (ஙண்ஸ்ரீழ்ர் ஆண்ர்ப்ர்ஞ்ஹ்) மண்ணில் பயன் தரும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா, காளான், வைரஸ் போன்றவற்றின் பெருக்கம் போதிக்கப்படுகிறது. அதை மண்ணில் செயல்பட வைக்கும் நடைமுறை பலவீனமாயுள்ளது.
வேதகாலத்தில் மைக்ராஸ்கோப் இல்லாமலேயே மண்ணில் நுண்ணுயிரிகளைப் பெருக்கும் வித்தைகளை சித்தர்களும் முனிவர்களும் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளதை விருட்சாயுர் வேதம் கூறுகிறது. மண்ணில் குணபம் (அதாவது இறந்து நொதித்த உடலி, இறைச்சி, மீன், கோழி) செயல்படுகிறது. நுண்ணுயிரிப் பெருக்கத்திற்கு இறந்த உடலிகளில் கழனீர், சாணம், புளிப்பு ஏறிய சாத்தூத்தம், மது, கள், பால், மோர், நெய், தேன், பிண்ணாக்கு (எள், கடுகு) போன்றவற்றை எவ்வாறு சேர்த்து நொதிக்க வைத்துப் பக்குவம் செய்யும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கால நுண்ணுயிரிப் படிப்பில் பெருக்கம் தரவேண்டிய அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ஈ.எம். திறமி நுண்ணுயிரி சூடோமோனோபாஸ், விருடி போன்றவை எல்லாமே குணபஜலத்தில் அடக்கம்.
ரசாயன உரப் பயன்பாட்டில் உள்ள பல தவறான எண்ணங்கள் மாறினால்தான் வேளாண் உற்பத்தித் திறன் கூடும். ரசாயன உரம் என்பது எரியும் தன்மையுள்ள மெழுகுத்துகள் ஊட்டங்களாயுள்ளன.
உதாரணமாக மணிச்சத்து என்ற அமோனியம் பாஸ்பேட்டில் நைட்ரஜன், ஆக்சிஜன், பாஸ்வரம் உண்டு. அதில் ட3ஞ5 என்ற ஃபார்முலாவில் பாஸ்வரம் (எரியம்) பணி செய்தாலும்கூட இந்த வடிவில் 5 சதம் உரம் மட்டுமே வேர் எடுத்துக் கொள்ளும். மீதி 95 சதம் உரம் மண்ணை இறுக்கி நுண்ணுயிரிகளை அழிக்கும். இவ்வாறே யூரியா, பொட்டாஷ் உரம் எல்லாமே முழுமையாகப் பயனுறாமல் மண்ணைக் கெட்டிப்படுத்தி வேர் வளராத நிலை உருவாகிறது. ஆகவே, பன்மடங்கு இயற்கை உரங்களை இட்டு சிறிது ரசாயன உரம் மட்டும் வழங்குவது நல்லது. மெல்ல மெல்ல அந்தச் சிறு அளவு ரசாயனத்தையும் நிறுத்திவிட்டால், மண்ணில் நுண்ணுயிரிகள் சிறப்புடன் பணிபுரியும்.
ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் நுண்ணுயிரிகளின் பண்பாடு நன்கு செயல்பட்டு உற்பத்தித்திறன் உயர்வாயுள்ளது. ஒழுங்குடன் திட்டமிட்டால் நகரக்குப்பைகளை உயிர் உரங்களாக மாற்றலாம்.
நகரக்குப்பைகளையும், அறுவடைக் கழிவுகளையும், காய்கறி அங்காடி, பழ அங்காடிக் கழிவுகளையும் வீணாக்காமல் உரமாக்கினால் இன்றுள்ள ரசாயன உரத் தட்டுப்பாட்டிலிருந்து இன்று இல்லாவிட்டாலும் நாளை மீளும் வழி உண்டு. ஆனாலும் அது இன்னமும் தேடுதலாயுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பச்சை வைரம் என்ற திட்டம் நகராட்சிக் குப்பைகளை மக்கிய உரமாக மாற்றி வருவது ஒரு தொடக்கம். தமிழ்நாட்டில் இங்குமங்குமாக ஒரு சில ஊராட்சி, நகராட்சிகளில் அற்ப சொற்பமாக இப்பணி நிகழ்கிறது. புதுச்சேரி பச்சை வைரம் ஆண்டுக்கு 70 டன் உரம் உற்பத்தி செய்கிறது.
ஊர் நகரக்குப்பை குறித்த புள்ளிவிவரம் நம்மைச் சிந்தையில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியா 1,20,000 டன்கள் குப்பைகளைக் குவித்து சுகாதாரக் கேடுகளை உருவாக்குகிறது. இவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் யோசனைகள் ஒப்புதல் பெற்றுச் சில பெருநகரங்களில் ""ஆஸ்திரேலியத் தொழில்நுட்பம், அது இது'' என்று அமர்க்களம் செய்து, கோடிகளைச் சுருட்டி, ஆலைகளைக் கட்டி முடித்துச் செயல்படும்போதுதான் ஒன்று புரிந்தது. ""இக்குப்பைகளில் உள்ள ஈரத்தைப் போக்கிப் பக்குவப்படுத்துவதற்குத் தேவையான மின்சாரம், இக்குப்பைகளிலிருந்து பெறக்கூடிய மின் உற்பத்தியை விடக் குறைவு'' என்பதால், அது தோல்வியில் முடிந்தது. எனினும் தேங்காய் உரிமட்டை மற்றும் செக்கு மட்டைகளை எரித்துச் செய்யும் அனல் மின்சாரம் வெற்றி தருகிறது என்றாலும், அதே உரிமட்டைகளைப் பொடி செய்து தூவினால் பொட்டாசிய உர இறக்குமதியை நிறுத்திவிடலாம்.
""திடக்கழிவு மேலாண்மை'', ""கிளீன் சிட்டி'' என்றெல்லாம் திட்டம் தீட்டிப் பல தொண்டு நிறுவனங்கள் உண்டு கழிக்கின்றனவே தவிர, ஊர்க்குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் உருப்படியாக எதுவும் இல்லை. ஊர்க்குப்பைகள், பெருநகரக் குப்பைகளில் உள்ள நச்சுப்பொருள், பிளாஸ்டிக் ஆகியவற்றை நீக்கிவிட்டு கவனித்தால் ஒவ்வொரு நாளும் 50,000 டன் மக்குப்பொருள் கிட்டும் வாய்ப்பு உள்ளது. ஊர்க்குப்பைகளை உரமாக மாற்றும் விஷயத்தில் தென் அமெரிக்க நாடுகளும், மத்திய ஆசிய நாடுகளும், வளர்ச்சி பெற்ற வடக்கு நாடுகளும் சிறப்பாகச் செயல்படுவதைக் கவனிக்க வேண்டும். மென்பொருள், சாஃப்ட்வேர், செல்ஃபோன், கார் ஆகியவற்றில் அவர்களைப் பின்பற்றும் நாம், அதே நாடுகளிலிருந்து குப்பைகளைச் செல்வமாக்கி எவ்வாறு ரசாயன உர இறக்குமதியையும், பயன்பாட்டையும் குறைக்கலாம் என்பதையும் கற்றுக்கொள்வது நன்றல்லவா? மறுசுழற்சி நுட்பங்களை உகந்தவாறு பயன்படுத்தினால் ஒருபோதும் உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. உற்பத்தி உயர்ந்திடும்.

ஆர்.எஸ். நாராயணன்
(கட்டுரையாளர்: இயற்கை வேளாண்மை பொருளியல் நிபுணர்)

நன்றி : தினமணி

"உளி' இல்லாத நவீன சிற்பிகள்!

மாதா, பிதா, குரு தெய்வம்' என்பது முதுமொழி. பெற்றோருக்கு அடுத்து பிள்ளைகள் வணங்கும் தெய்வமாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. எனவேதான் "எழுத்தறிவித்தவன் இறைவன்' என நமது முன்னோர் முன்மொழிந்தனர்.
ஆனால் தற்போது குழந்தைகளும் பெற்றோரும் ஆசிரியர்களை நண்பர்களாகக் கூட பார்ப்பது இல்லை என்பதே துரதிருஷ்டமான உண்மை.
பெருகிவிட்ட தனியார் பள்ளிகளால் வர்த்தகமாகிவிட்ட கல்வி; எதார்த்தத்தை இழந்துவிட்ட பள்ளிக்கூடச் சூழல்; ஊதியத்தை மையமாக்கி உழைக்கும் ஆசிரியர் என்ற சூழல்களே கற்பிப்போர் மீதான சமூகப் பார்வையை மாற்றிவிட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மாணவ, மாணவியருக்கு ஏற்படும் தனிப்பட்ட பாதிப்புக்கெல்லாம் ஆசிரியர்களது முரட்டுத்தனமான அணுகுமுறையே காரணம் என்பது போல அதிக அளவில் செய்திகள் வெளியாகின்றன. இதனால் இப்போது கற்பித்தல் என்பது "கம்பி மீது நடக்கும் வித்தை' போலாகிவிட்டது என ஆதங்கப்படுகிறார்கள் ஆசிரியர்கள்.
பள்ளிக்கூடம் என்பது வெறும் மொழி, கருத்துகளை மட்டும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் கூடமல்ல. சமூகத்தில் மேம்பட்ட நாகரிக மனிதனை உருவாக்கும் "பட்டறை' என்பது அறிஞர்களின் கருத்து.
எனவே "அறுக்கி வளர்க்காத மரம் உத்தரத்துக்கு ஆகாது; அடித்து வளர்க்காத பிள்ளை வாழ்க்கையில் உருப்படாது' என்ற பழமொழியை நினைவில் கொள்வது நல்லது.
ஆனால் கண்டிப்பு என்ற பெயரில் ஆசிரியர் சிலர் அத்துமீறுவதால் மாணவர்கள் உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்படுவதை மறுக்க முடியாது. சிற்பத்தை உருவாக்கும் உளியால் கற்களுக்கு சேதம் ஏற்படுவது சரியல்ல என்பது சமூகவியலாளர்கள் கருத்து.
சிற்பிகளான ஆசிரியர்களுக்கு நாவன்மை என்ற கூர்மையே முக்கியம். ஆனால் இன்றோ பேச இயலாதவர் கூட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி சான்று வைத்திருந்தால் பாடம் நடத்தலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.
வாக்கு வன்மையால் மாணவர்களைத் தன்பால் ஈர்க்கும் திறமைமிக்க ஆசிரியர்களை இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம். திறமையற்றவர்களே மிரட்டல், உருட்டல் வழிமுறை மூலம் மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். இதனால்தான் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியரின் திறமை குறித்து பணி ஓய்வு பெறும் வயதிலும் ஒருவரால் நினைவு கூர்ந்து பேச முடிந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஊதியம் ஈட்டலுக்கான தொழிலாகவே பெரும்பாலானோர் இதைக் கருதுகின்றனர்.
அத்துடன் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைப்போரே சிறந்த ஆசிரியர் என்ற கருத்தும் பரவலாக ஏற்கப்படுவதால் மாணவர்களை மனப்பாட எந்திரமாக்குவதிலே ஆசிரியர் கவனம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.
பெற்றோரும் தமது பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெறுவதே முக்கியம் என எண்ணுவதால், ஒழுக்க நிலைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.
இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இல்லாத நிலையில், கண்டிப்பதால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்தாலும் பலர் பிள்ளைகளது ஒழுக்கமீறல்களைக் கண்டுகொள்வதில்லை.
அம்மாக்கள் பலர் தொலைக்காட்சித் தொடர் மோகத்தில், பிள்ளைகளின் நடமாட்டத்தைக்கூட தொல்லையாகக் கருதுகின்றனர். இதனால் மாலை நேரத்தில் பிள்ளைகள் டியூஷன் நேரக் கைதிகளாகவோ, வழிகாட்டுதல் இல்லாத நிலையிலோ நேரத்தைக் கழிக்கின்றனர்.
மொத்தத்தில் கண்டிப்பு என்பது வீட்டிலும், வெளியிலும் இல்லாத சூழல் இளைய தலைமுறைக்கு ஏற்பட்டிருப்பது நல்லதல்ல.
மாணவர்கள் மதிக்கத்தக்க தனித்திறமைகளை ஆசிரியர் கொண்டிருப்பது அவசியம். ஆனால் தற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ப தங்களது திறன்களை ஆசிரியர் மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகமே!
இதற்கிடையே மாணவர்களை அடிக்காமல் படிக்க வைப்பது குறித்து யுனிசெஃப் அமைப்பும், தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநரகமும் ஆசிரியர் கருத்தை அறியும் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளன.
அதில் பங்கேற்றவர்கள் கரடுமுரடான கற்களைப் போன்ற மனநிலையில் வரும் மாணவர்களைத் தண்டனை என்ற "உளி'யால் செதுக்கி ஒழுக்கமுள்ள சிற்பங்களாக்குவது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், டாக்டர்களைப் போல தங்களுக்கும் மாணவர்கள் தரப்பு புகாரிலிருந்து பாதுகாக்க தனிச் சட்டம் தேவை எனவும் வாதிடத் தொடங்கியுள்ளனர். ஆக, தவறுகளைத் திருத்த வேண்டியவர்களே தங்களைச் சட்டத்தின் மூலம் பாதுகாக்க முயற்சிப்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல.
மொத்தத்தில், நல்ல சிந்தனை; அதை எடுத்துக்கூறும் நாவன்மை என்ற உளிகள் இல்லாமல் நாகரிக சமுதாயச் சிற்பங்களை ஒருபோதும் உருவாக்க முடியாது என்ற உண்மையை இந்த நவீன காலச் சிற்பிகள் எப்போதுதான் உணரப்போகிறார்களோ?
வ. ஜெயபாண்டி

நன்றி : தினமணி

இடியாப்பச் சிக்கலில்...

நாடு துண்டாடப்படுவதைப் பற்றியோ, சமுதாயம் பிளவுபடுவதைப் பற்றியோ நமது தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்தவிதக் கவலையும் கிடையாது. மக்களின் உணர்வுகளைத் தூண்டி, கலவரங்களை ஏற்படுத்தி, வன்முறைக்கு வித்திடுவதைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதாக இல்லை. யார் எக்கேடு கெட்டாலும், நாடும் மக்களும் எப்பாடு பட்டாலும், தங்களது கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டும்தான் அவர்களுக்கு ஒரே குறிக்கோள். இந்த விஷயத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல.
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்புக்கு அடிப்படைக் காரணம் அமர்நாத் யாத்திரையோ, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே காணப்படும் கருத்து வேறுபாடோதான் என்று யாராவது நினைத்தால் தவறு. அது மேலெழுந்தவாரியாகக் காணப்படும், வேண்டுமென்றே கிளப்பி விடப்பட்ட காரணங்கள். உண்மையான காரணம், வரும் அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு நடைபெற இருக்கும் தேர்தல்தான்!
பிரிவினைவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமர்நாத் யாத்ரீகர்களுக்குத் தனி இடம் ஒதுக்கியதைக் காரணமாக்கிப் பெரும் போராட்டம் நடத்திய மக்கள் ஜனநாயகக் கட்சிதான் இந்தப் பிரச்னையின் சூத்திரதாரி. காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த அந்தக் கட்சியின் அமைச்சர் ஒருவர்தான், அன்றைய ஆளுநரின் சிபாரிசுப்படி, அமர்நாத் யாத்ரீகர்களுக்குத் தங்கும் வசதிகளை ஏற்படுத்த இடம் ஒதுக்கீடு செய்தவர்.
அந்த இடத்தையே காரணமாக்கிப் பிரிவினை சக்தியான ஹுரியத்துடன் கைகோர்த்து ஒரு போராட்டத்தை உருவாக்கி, கூட்டணியிலிருந்து வெளியேறியதும் அதே மக்கள் ஜனநாயகக் கட்சிதான். இதன் மூலம் தனது கட்சிதான் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்காகப் பாடுபடும் கட்சி என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி, தனது அரசியல் எதிரியான பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியைத் தேர்தலில் தோற்கடிப்பதுதான், அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான முப்தி முகமது சையதின் திட்டம்.
அமர்நாத் யாத்ரீகர்கள் பல்டாலில் தங்கப்போவது வருடத்தில் நான்கே மாதங்கள். ஆண்டுதோறும் எட்டு மாதங்கள் அந்த இடம் பனியால் மூடப்பட்டிருக்கும். மேலும் அமர்நாத் யாத்ரீகர்களான இந்துக்கள், அங்கே நிரந்தரமாகத் தங்குவதற்கான வாய்ப்பே கிடையாது. யாத்ரீகர்களுக்காக அமைக்கப்படும் தாற்காலிகக் கூடங்களால் அந்தப் பகுதியின் இயற்கைச் சூழல் பாதிக்கப்படும் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமல்ல. அழகான தல் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைவிடவா இந்தத் தாற்காலிகத் தங்குமிடங்களால் பாதிப்பு ஏற்பட்டுவிடும்?
இந்துக்களும், வேற்று மாநிலத்தவரும் குடியேறி சமுதாய அமைப்பு மாறிவிடும் என்பதும் தவறு. வெளியேற்றப்பட்டிருக்கும் 50,000க்கும் அதிகமான காஷ்மீரப் பண்டிட்டுகளைத் திருப்பி அழைத்து சமுதாய அமைப்பைப் பாதுகாக்கத் தவறியவர்களின் வறட்டு வாதம் இது, அவ்வளவே. பண்டிட்டுகள் தங்களது தாய்மண்ணுக்குத் திரும்பத் தயாராக இல்லாதபோது, அமர்நாத் யாத்ரீகர்கள் அங்கே குடியேறப் போகிறார்களா என்ன?
இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமை என்றால், ஜம்முவில் நடப்பதிலும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஜம்முவைப் பொருத்தவரை, அங்கே போட்டி, காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில்தான். இந்துக்களின் சார்பாக உரத்த குரலெழுப்பி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஆப்பிள் மற்றும் பொருள்கள் வெளிமாநிலங்களுக்குப் போகாமல் தடுக்க முற்பட்டிருக்கிறது பாஜக. அதேபோல, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு எந்தவிதப் பொருள்களும் செல்லாமல் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தவும் முற்பட்டிருக்கிறது.
வெளிப்படையாக பாஜக இதைச் செய்யாவிட்டாலும், ஜம்முவில் நடைபெறும் போராட்டத்திற்கு பாஜகவின் ஆதரவு இருப்பது உலகறிந்த உண்மை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஜம்மு பகுதியில் காங்கிரஸ் கணிசமான இடங்களை வென்றதால்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்க முடிந்தது. இந்த முறை கணிசமான இடங்களை இந்தப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற முடியும் என்பது பாஜகவின் கணக்கு.
ஜம்முவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடை, பிரிவினை சக்திகளையும், மக்கள் ஜனநாயகக் கட்சியையும் பாகிஸ்தான் வசமிருக்கும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரை நாடும்படி செய்திருக்கிறது. அங்கிருக்கும் முசாபராபாத்தை நோக்கி நடைப்பயணம் போகப் பள்ளத்தாக்கு மக்களைத் தூண்டுகிறார்கள் பிரிவினைவாதிகள். துணைக்கு முப்தி முகமது சையதும்.
இந்த விஷயத்தில் ஜம்முவில் அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைத்த காங்கிரஸ் இருதலைக் கொள்ளி எறும்பாகி இருக்கிறது. தேசிய மாநாட்டுக் கட்சியின் நிலைமை அதைவிடப் பரிதாபம். மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன. அரசியல் ஆதாயம் தேட முயன்று இப்போது இடியாப்பச் சிக்கலில் முடிந்திருக்கிறது விவகாரம்.
துணிவும், துப்பாக்கியும், தெளிவும் இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். அந்த தைரியம் நமது அரசுக்கு இல்லாமல் போனால், விளைவு விபரீதமாக இருக்கும்!
நன்றி : தினமணி

அன்றும் இன்றும்

அண்மையில் ஒரு வார இதழில் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர், நடத்துநர், தரகர், பெட்டிக் கடைக்காரர் எனப் பல கீழ்நிலைச் சாமானியர்கள், அரசியல் கட்சிகளில் சேர்ந்து இன்று பல கோடீஸ்வரர்களாகப் பரிணமித்துவிட்ட வரலாறு விவரிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் எல்லாரிடமும் தென்பட்ட ஒரு பொது அம்சம், அவர்கள் பல கல்விச்சாலைகளின் உரிமையாளர்களாக இருப்பது. அதைப் படித்ததும் என் மனம் பின்னோக்கிப் பயணித்தது.
1970களில் தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன், பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கப்பட்ட விதத்தை ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதினார்.
அதற்காக அவர் பல மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளை ஆராய்ந்தார். அவருடன் தஞ்சை மாவட்டத்திலுள்ள சில கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் சென்று பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
கல்லூரிகளில் புகுமுக வகுப்பு இருந்தபோது, அறிவியல் செய்முறை வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு மூன்று ஆசிரியர்களும், இரண்டு அலுவலக உதவியாளர்களும் பணியாற்றினர். ஆய்வகங்கள் விசாலமாயும், பெரிய பெரிய மேஜைகளுடனும் இருந்தன.
ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் 80 மாணவர்களுக்கு ஒரு சிறிய ஆய்வகமும், ஒரே ஓர் ஆசிரியர் மட்டுமே இருந்தனர். பல பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் இல்லை. ஒவ்வொரு சோதனைக்கும் ஒரே ஒரு உபகரணம் மட்டுமே இருந்தது. ஆசிரியர் சோதனையைச் செய்து காட்டுவார். மாணவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள். கைடு நூல்களைப் பார்த்து ரிக்கார்டுகளை எழுதுவார்கள்.
ஏதாவது கருவி காணாமல் போனாலும், பழுதுபட்டாலும், உடைந்தாலும் அதற்கு ஆசிரியர் தான் ஈடுசெய்ய வேண்டியிருந்தது. அதனால், பல ஆசிரியர்கள், கருவிகளை கையால் தொட்டுப் பார்க்கக்கூட மாணவர்களை அனுமதிக்கவில்லை.
சிவராமன் கட்டுரைகள் அரசாங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அப்போது ஆண்ட கட்சியின் முக்கியபுள்ளி சிவராமனைப் பார்த்து, ""உங்களால் எங்கள் தூக்கம் கெட்டுவிட்டது'' என்றுகூடப் புலம்பினார்.
கல்லூரிகளிலேயே பிளஸ் 2 வகுப்புகளை வைத்திருந்தால் இவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது என்று சிவராமன் அவரிடம் கூறினார். கல்வி அமைச்சர், பள்ளி ஆசிரியராக இருந்தவர். அதனால், அவர் பள்ளிகளில் தான் பிளஸ் 2 வகுப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்ததாக அந்த முக்கியபுள்ளி அலுத்துக் கொண்டார்.
போதனை மற்றும் உள் கட்டமைப்புக் குறைபாடுகள் காரணமாக மாணவர்கள் தேர்வுகளில் தோல்வியுற்று மனமுடைந்து போகாமலிருப்பதற்காக தேர்வுத்தாள்களைத் திருத்துகிறவர்கள் கொஞ்சம் தாராளமாக இருக்குமாறு ஆலோசனை கூறப்படிருப்பதாக அந்த முக்கியபுள்ளி கூறினார்.
கிள்ளிக் கிள்ளி மதிப்பெண் போடும் தமிழாசிரியர்கள்கூட அள்ளி அள்ளி மதிப்பெண்களை வாரி வழங்கத் தொடங்கியதால் தமிழிலும் ஆங்கிலத்திலும்கூட 100 க்கு 100 மதிப்பெண்கள் தரும் போக்கு இன்று வரை நீடிக்கிறது.
அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைகளைக் கட்டவும், உபகரணங்களை வாங்கவும் அரசு நிறையப் பணம் ஒதுக்கியிருப்பதாக அந்த முக்கியபுள்ளி சொன்னார்.
தனியார் பள்ளிகள் பழைய மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றை அமைத்து, நன்கொடைகள் வசூலிக்க ஆலோசனை கூறப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
அதைக் கேட்டதும், சிவராமன் அதிர்ச்சியடைந்தார். நன்கொடை என்ற பெயரில் கட்டாய நிதிவசூல் நடக்கலாம் என்று அவர் எச்சரித்தார். ஆனால், அந்த முக்கியபுள்ளி, அப்படியெல்லாம் நடக்காமல் அரசு கண்காணிக்கும் என்று ஜம்பமாகச் சொன்னார். அதைச் சிவராமன் ஏற்காமல் கல்வி ஒரு வியாபாரப் பொருளாக மாறுவதற்கே அரசு வழிகோலி விட்டதாகக் கருத்துத் தெரிவித்தார்.
அவர் அஞ்சியபடியே தனியார் பள்ளிகள், மாணவர்களை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கக்கூட நன்கொடை என்ற பெயரில் பணம் குவிப்பதை இன்று நாம் காண்கிறோம்.
அப்படி மாணவர்களிடம் பிடுங்கிய பணத்தின் மூலம் கட்டப்பட்ட கட்டடங்கள் கல்வி முதலாளிகளின் தனிச் சொத்தாக ஆகி இன்று பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளாய் ஆகி இருக்கின்றன.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் வேந்தர், இணை வேந்தர், துணை வேந்தர் போன்ற பதவிகளில் அப்பா, அம்மா, பிள்ளை, பேரன் ஆகியோரே அமர்கிறார்கள்.
அவர்களுடைய போக்குவரத்து, மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றுக்குக் கல்விச்சாலை பணமே செலவழிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், அரசுக் கல்விச் சாலைகள் அவல நிலையிலுள்ளன. கிராமப்புறப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கூரையில்லை, கரும்பலகை இல்லை, சாக்பீஸ் இல்லை, கழிப்பறை இல்லை, ஆசிரியர் இல்லை என இல்லைப்பட்டியல் நீள்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன் நான் பணியாற்றிய ஒரு கிராமப்புறக் கல்லூரியில் பேராசிரியர்கள் கூட வேலியோரம் போய் மரங்களுக்குப் பின்னால் நின்று சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது. அரசுத்துறையில் கட்டடங்களும், ஆய்வகங்களும், சாதனங்களும், வசதிகளும் கிடைக்கப் பல ஆண்டுகள் ஆகும்.
மாணவர்களின் எண்ணிக்கை வெகுவேகமாகப் பெருகும்போது, அதற்கேற்ற வேகத்தில் ஆசிரியர்களின் நியமனமும் நடைபெறாது.
நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மிக விரைவாகக் கட்டடங்களையும் மற்ற வசதிகளையும் பெருக்கிக் கொண்டு, அதைக் காட்டியே கல்விக் கட்டணங்களை அதிகமாக்கிச் சிறப்பு நன்கொடைகளையும் வசூலிக்கின்றன.
நிதி வசதியில்லாதவர்கள் அரசுக் கல்வி நிலையங்களில் மட்டுமே சேர முடியும்.
ஆடம்பர ஹோட்டல்களைப் போலவே ஐந்து நட்சத்திரக் கல்வி நிலையங்கள் உருவாகியுள்ளன. காசுக்கேற்ற தோசை என்பதைப்போல அவற்றில் தரமான கல்வி வழங்கப்பட்டு, படிப்பு முடிவதற்கு முன்பே மாணவர்களுக்கு வேலைகூட பெற்றுத் தரப்பட்டு விடுகிறது.
கல்லூரி நிர்வாகிகள் ஒரு சில சிறந்த மாணவர்களுக்கு இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ கல்வியளித்துக் கல்வி வள்ளல்கள் என்ற விருதைப் பெற்று விடுகின்றனர்.
கே.என்.ராமச்சந்திரன்
நன்றி : தினமணி