Thursday, August 14, 2008

இந்திய சுதந்திரத்தின் குறிக்கோள்

ஆயிரம் ஆண்டுகளாக தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரத நாடு, 1947 ஆகஸ்டு 15இல் சுதந்திர நாடாக வெளிப்பட்டது. ஆண்டுதோறும் அந்த நன்னாளை இந்திய வரலாற்றின் பொன்னாளாகக் கொண்டாடுகிறோம்.
விடுதலை விழாவை நாம் கொண்டாடும் நேரத்தில், விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற வீரர்களை, நாடு ஒளிபெற இருண்ட வெஞ்சிறைகளில் வீழ்ந்து கிடந்த மேலோர்களை, உருண்டு வரும் செக்கடிகளில் சுருண்டு மடிந்த நல்லோர்களை அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டு தாய்நாடு திரும்பாமல், விடுதலை பெறும் நன்னாளைக் காண முடியாமலே அங்கேயே புதைகுழிகளில் அடங்கிவிட்ட தியாக சீலர்களை நாம் நினைவு கூர வேண்டும். வாழ்த்தி வணங்க வேண்டும்.
குதூகலத்துடன் கோலாகலமாக விடுதலை நாளைக் கொண்டாடும்பொழுது தியாகத் தீயில் புடம் போட்டு எடுக்கப்பட்ட சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், எத்தகைய குறிக்கோள்களுக்காக சுதந்திரத்தைப் பெற தியாகிகள் பாடுபட்டார்களோ அந்தக் குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டிய கடமையும் தற்பொழுது நமக்கு இருக்கிறது.
அடிமைப்பட்ட நாடு விடுதலை பெறுவது எவ்வளவு கடினமோ, அதைவிட கடினம் விடுதலை பெற்ற நாடு மீண்டும் அடிமைப்படாது இருக்க பாடுபடுவதாகும்.
1947 ஆகஸ்டு 15ஆம் நாளன்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு மக்களுக்கு அளித்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்:
""எதிர்காலம் நம்மை அழைக்கிறது. நாம் எங்கு போகிறோம்; எப்படிப்பட்ட செயல்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பவை குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும். நாம் பெற்ற சுதந்திரத்தை சுதந்திரம் தரும் வாய்ப்புகளை, பஞ்சத்திலும், அறியாமையிலும், நோய்நொடிகளிலும் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்குப் பயன்படுமாறு நாம் செயல்பட வேண்டும். வளமான, முற்போக்கான, ஜனநாயக முறையை அவர்களுக்கு நாம் தர வேண்டும். இந்தியாவிலுள்ள ஒவ்வொருவருக்கும் சமுதாய, பொருளாதார நீதிகள் முறையாகக் கிடைக்க நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.''
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலைமை வகித்த மாமனிதர் மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டு, 1948 ஜனவரி கடைசிவாரத்தில் பின்வருமாறு எழுதினார்:
""இந்தியாவின் அரசியல் விடுதலையைக் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. மேற்கொண்டு பொருளாதார, சமுதாய நேர்மை உணர்வு ஆகியவற்றில் இந்திய மக்களுக்குத் தேவையான விடுதலையையும் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு அந்தக் கட்சிக்கு இருக்கிறது. அரசியல் விடுதலையைவிட மேற்குறிப்பிட்டவைகளுக்காக நாம் நடத்த வேண்டிய போராட்டம் கடுமையானதாக இருக்கும். காங்கிரஸ் கட்சி அதிகாரங்களைக் கைப்பற்றும் வீணான போராட்டங்களில் ஈடுபட்டால், திடீரென ஒரு நாள் அக்கட்சி ஒன்றுமே இல்லாமல் போய்விடும். எனக்கு போதிய நேரமும், உடல்நலமும் இருந்தால் இது குறித்து தேசத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுடன் நான் கலந்தாலோசிக்கப் போகிறேன்''.
அவர் எழுதிய இந்தக் குறிப்பு 1948 பிப்ரவரி 1 "ஹரிஜன்' இதழில் வெளிவந்தது. ஆனால் அதற்குள் காந்தியடிகள் மறைந்துவிட்டார்.
காந்தியார் மறைந்துவிட்ட பிறகு, அவர் சொல்லிய அறிவுரைகளும் மறைந்துவிட்டன. அதற்குப் பின் வந்த காங்கிரஸ் கட்சியினரும் அவற்றை மறந்துவிட்டனர்.
தற்பொழுது எழுந்துள்ள அரசியல் பிரச்னைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் முக்கிய காரணம் மகாத்மா அச்சப்பட்டபடி அதிகாரங்களைக் கைப்பற்றும் போராட்டம்தான் மிகவும் வேகமாக வளர்ந்துள்ளது. காந்தியார் வகுத்த அரசியல், தியாகத்தின் இருப்பிடமாக இருந்தது. நேர்மையின் உறைவிடமாகத் திகழ்ந்தது. தற்பொழுது அரசியல் என்றாலே சாதாரண மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது.
உலக அரங்கில் மற்ற பெரிய நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக ஆக்குவதற்கு இந்திய ஆட்சியாளர்கள் முனைந்து திட்டமிடுகிறார்கள். ஆனால், இந்திய மக்களுக்கு ஒரு நல்லரசைத் தர கடந்த அறுபத்தோரு ஆண்டுகளில் தவறிவிட்டனர்.
சுதந்திர இந்தியாவில் போடப்பட்ட பல்வேறு சட்டங்கள், திட்டங்கள், தீர்மானங்கள் எல்லாம் வெறும் ஏட்டளவில் நின்றனவே தவிர, நாட்டு மக்களுக்கு நிலையான வளர்ச்சியைத் தரவில்லை. நாட்டின் வருமானமாகப் பல்லாயிரம் கோடிக்கணக்கில் பட்டியல்கள் தரப்படுகின்றன. அத்தகைய வளர்ச்சி லட்சாதிபதிகளை கோடிசுவரர்களாக, கோடிசுவரர்களை உலகக் கணிப்பில் பில்லியனர்களாக ஆக்கவே பயன்பட்டது. ஆனால் ஏழைகள் பரம ஏழைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். கிடைத்த வளர்ச்சி சரியான முறையில், நீதியான வகையில் பங்கிடப்படவில்லை.
இந்திய சுதந்திரத்தின் அடிப்படையாக கிராம சுதந்திரம் இருக்க வேண்டும் என்று காந்தியார் வலியுறுத்தினார். கிராமப்புறத்தின் அடிப்படையாக இருப்பது விவசாயம். கடந்த 61 ஆண்டு இந்திய வளர்ச்சியைப் பார்த்தால் பயிர்த்தொழில் தான் மிகவும் பரிதாபகரமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரமடைந்தபொழுது விவசாயிகளின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 70 சதவிகிதமாகவும், நாட்டின் மொத்த வருமானத்தில் விவசாயத் துறைக்கான பங்கு 60 சதவிகிதமாகவும் இருந்தன. மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள 2007 08ஆம் ஆண்டு பொருளாதாரக் கணிப்பின்படி தற்பொழுது 52 சதவிகிதம் உள்ள விவசாய உழைப்பாளிகளுக்கு நாட்டின் மொத்த வருமானத்தில் 18.5 சதவிகிதம் தான் கிடைக்கிறது. இந்த நிலைமையில் கடன்படாமல், தூக்குக்கயிற்றைத் தேடாமல் விவசாயி எப்படி இருப்பான்? கடன்படாத நிலைமைக்கு விவசாயத்தை வளர்த்துவிட, அரசாங்கம் கடந்த அறுபது ஆண்டுகளில் தவறிவிட்டது.
சுதந்திர இந்தியாவின் அடிப்படைச் சட்டத்தில் பத்து ஆண்டு காலத்திற்குள் 14 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு முழுமையான கட்டாய இலவசக் கல்வி தருவதாகக் கூறப்பட்டது. 61 ஆண்டுகள் கழித்தும் இன்றளவில்கூட அந்தக் குறிக்கோள் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கத்தின் பற்று வரவுக் கணக்கு நன்றாக இல்லை. நாட்டின் வரவுக்கணக்கு ஆண்டுதோறும் அதிகமானால்கூட, எழுதிவைத்த "பத்து ஆண்டு'க் கணக்கை ஆளவந்தவர்கள் மறந்துவிட்டனர். கிராமப்புற மக்களைப் பற்றி பற்றற்ற கணக்குத்தான் இப்பொழுது இருக்கிறது.
2004இல் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில், நாட்டின் மொத்த வருமானத்தில் கல்வித்துறைக்கு 6 சதவிகிதமும், சுகாதாரத் துறைக்கு 2 3 சதவிகிதமும் தரப்படும் என்று வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் கடந்த நான்காண்டு காலத்தில், மத்திய மாநில அரசுகளின் வரவு செலவுத் திட்டங்களை மொத்தமாகப் பார்த்தால், நாட்டின் மொத்த வருமானத்தில் கல்வித்துறைக்கு 2.88 சதவிகிதத்துக்கு மேற்பட்டு எந்த ஆண்டிலும் செலவிடப்படவில்லை.
அதேபோல், சுகாதாரத் துறைக்கு 1.39 சதவிகிதத்துக்கு உட்பட்டுத்தான் செலவு விகிதம் வந்திருக்கிறது.
கல்வி அறிவு தரப்படாமல், உடல் நலத்தைப் பாதுகாக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல், உழுபவனுக்கு உண்ண உணவில்லாமல், உழைப்பவனுக்கு வாழ்வு இல்லாமல், உலகில் பலவகைகளில் வளம் மிக்க நாடான இந்தியாவில் வறுமை மிக்க மக்கள் பெரும்பாலாக இருப்பதுதான் இன்றைய நிலைமை.
ஒரு நாட்டின் சுதந்திரத்தையும் சமுதாய நீதியையும் காப்பாற்ற, அதிகாரம் மிக்க நிர்வாகம் நாடாளுமன்றம் நீதிமன்றங்கள் ஆகியவை அடங்கிய அரசியல் அமைப்பு மட்டும் போதாது. மக்களின் தொடர்ந்த கண்காணிப்புதான் நாட்டில் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நிலைபெறச் செய்யும். தனிப்பட்டு ஒவ்வொரு குடிமகனையும் வளர்த்திடப் போடப்படும் மனிதவள முதலீடுதான் நாட்டின் மிக முக்கிய முதலீடாக இருக்க வேண்டும்.
நாட்டின் மண்வளத்தை மக்களின் வாழ்க்கை வளமாக மாற்றிட ஏற்றப்பட்ட சுதந்திர தீபம் என்றும் அணையாது ஒளிவிட, சுதந்திர நன்னாளில் மக்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களின் குரலுக்கு நாடாளும் மகேசர்கள் அடிபணியும் காலம் பிறக்கும்.
இரா. செழியன்

நன்றி : தினமணி

கனிந்தது கனவு; திறந்தது புதிய பாதை!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவுக்குப் புதிய பாதையைத் திறந்துவிட்டுள்ளார் அபிநவ் பிந்த்ரா. பல காலமாகக் கண்டு வந்த கனவு, இன்று நனவாகியிருக்கிறது.
பிந்த்ராவுக்கு கோடிகளும், லட்சங்களும் குவிந்து வருகின்றன. தொழில்முறையில் விளையாட்டை மேற்கொள்ள விரும்பும் எண்ணற்ற இந்திய இளைஞர்களுக்கு பிந்த்ராவின் வெற்றி, நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.
அபிநவைப் போன்ற ஏராளமான இளைஞர்கள் "உறுதி கொண்ட நெஞ்சும், தினவு பெற்ற தோளுமாக' வெற்றி இலக்கை நோக்கிக் கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஆனால் உழைப்புக்கேற்ற உடல் உரம் இன்றி, களத்தில் இறங்கியவுடனேயே தோல்வியைத் தழுவுகிறார்கள்.
நம் விளையாட்டு வீரர்களின் தோல்வியில் மாபெரும் பங்கு வகிப்பது, உணவுப் பழக்கம். சத்துணவு இன்மையால் உடல் தளர்ந்து, உற்சாகம் குன்றி, தோல்வியைத் தழுவும் வீரர்கள் ஏராளம்.
விளையாட்டில் சாதனை படைத்தபிறகு வீரர்களுக்கு பணத்தையும், பரிசையும் அள்ளிக் கொடுக்கும் அரசு, அவர்களின் ஆரம்பகாலப் பயிற்சிக்கும், உணவுக்கும் ஒரு பைசாகூட கொடுப்பதில்லை என்பதே நிஜம்.
ஒரு மாணவனிடம் குறிப்பிட்ட விளையாட்டின் மீது ஆர்வமும், திறமையும் மறைந்திருந்தால், அதை வெளிக் கொண்டு வருபவர்கள் பெரும்பாலும் பெற்றோரே. தங்கள் கை காசைப் போட்டு பிள்ளைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க முயற்சிப்பவர்களும் பெற்றோரே.
பள்ளியிலோ, கல்லூரியிலோ வாய்ப்புகள் கிடைத்தால், அதைப் பிடித்து முன்னேறும் இளைஞர்களே அதிகம்.
மாவட்ட, மாநில அளவில் சாதனை படைக்கும் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்கள், சாதாரண, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.
சத்தான உணவோ, தேர்ந்த பயிற்சியாளர்களோ இல்லாமல் மொட்டிலேயே கருகிப் போகும் வீரர்கள் பலர். கொண்டைக் கடலைக்குக்கூட வழியில்லாமல், சாதாரண அரிசிச் சாப்பாட்டைச் சாப்பிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்கள், வீராங்கனைகள் ஏராளம்.
செஸ், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டென்னிஸ் உள்ளிட்ட தனிநபர் விளையாட்டுகளில், பயிற்சி பெற்ற, திறமைவாய்ந்த பயிற்சியாளர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. நல்ல "கோச்' கிடைக்க வேண்டும் என்றால் வேறு மாநிலத்துக்கோ, மாவட்டத்துக்கோ செல்ல வேண்டியுள்ளது. நிறையப் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.
நடுத்தர விளையாட்டு வீரனால் பயிற்சிக்காகப் பெருந்தொகையைச் செலவிட முடிவதில்லை. உயிர் சுருங்கி, உடல் நோக கடும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஜொலிக்கும் வீரர்களுக்கு, மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோதான் வெற்றி கிடைக்கிறது. சர்வதேச அளவில் சாதனை படைக்கும் அளவுக்கு அவர்களின் உடலில் வலு இருப்பதில்லை.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, களத்திலிருந்தே விலகி வெற்றிக் கனவை தொலைத்துவிடுகிறார்கள். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்குப் பிறகு பயிற்சியாளர்களாக மாறிவிடுகிறார்கள்.
எல்லாத் தடையையும் தாண்டி, சர்வதேச அளவில் பிரகாசிப்பவர்கள் அபிநவ், விஸ்வநாதன் ஆனந்த், சானியா போன்று விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே.
வெற்றிக்குப் பிறகு விளையாட்டு வீரர்களுக்கு பணமாகவும், பொருளாகவும் வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகள், விதையிலேயே வேரூன்ற அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன்?
பழ மரத்தை நாடி வரும் பறவைகள்போல், வெற்றிக்குப் பிறகு ஏராளமான வாய்ப்புகள் தேடி வருவது இயல்புதானே. விதையிலிருந்து வேரூன்றி, செடியாகி மரமாவதுதான் கடினம்.
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் மறைந்திருக்கும் விளையாட்டுத் திறமையைக் கண்டறிந்து உற்சாகமூட்டி, ஊக்குவிக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் அக்கறை காட்டவேண்டும். தகுதியான வீரர்களின் உணவு, பயிற்சி, போட்டிகளில் பங்கேற்பதற்காகும் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.
இந்திய விளையாட்டு வீரர்களின் வெற்றி பகல் கனவாகப் போனதற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், கல்வி. விளையாட்டா, கல்வியா என்ற கேள்விக்கு, கல்வியே பிரதானம் என்பதே பெரும்பாலானோரின், நடுத்தர வர்க்க இந்தியர்களின் பதிலாக இருக்கிறது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் விளையாட்டு வீரர்கள், பயிற்சிக்காக கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. அதனால் மற்ற மாணவர்களைப் போல தினமும் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று படிக்க முடிவதில்லை. தினசரி சேரும் பாடச்சுமை அழுத்த, தேர்வில் தோல்வியைத் தழுவ நேரிடுகிறது. அல்லது சராசரி மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற நேரிடுகிறது.
இந்தத் தோல்வியை, சராசரி இந்தியப் பெற்றோரால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பொருளாதார ரீதியாகக் காலூன்ற "விளையாட்டைவிட படிப்பே மேல்' என்ற எண்ணமே பெரும்பாலான பெற்றோர்களின் ரத்தத்தில் ஊறிக்கிடக்கிறது. அதனாலேயே விளையாட்டில் திறமையும், ஆர்வமும் இருக்கும் வீரர்களில் பலர், படிப்புடன் ஒதுங்கி விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட வீரர்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டியது அரசின் கடமை. விளையாட்டு வீரர்களுக்கென தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வதும், அவர்களின் வசதிக்கேற்ப தேர்வு எழுத அனுமதிப்பதும் அவசியம்.
இதற்காக அந்த வீரர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருடன் பேசி, உரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிப்பதற்கு ஆகும் செலவு, ஆசிரியர்களுக்கான கூடுதல் ஊதியம் போன்றவற்றை அளிக்கவும் அரசு முன்வரவேண்டும்.
இரும்புபோல் உடலும், சாதனை படைக்கத் துடிக்கும் நெஞ்சமும் கொண்டவர்கள் நம் இளைஞர்கள். வறுமையும், வசதியின்மையும் அவர்களின் ஆர்வத்தை எந்தவிதத்திலும் அணைபோட அனுமதிக்கக்கூடாது.
இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள வெற்றியை, புதிய பாதைக்கான வாசலாக ஆட்சியாளர்கள் கருத வேண்டும். விளையாட்டுத் துறைக்காக கூடுதல் தொகையை ஒதுக்கி வீரர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்க வேண்டும்.
ஜி. மீனாட்சி
நன்றி : தினமணி

தங்கப் பதக்கத்துக்குப் பின்னே...

இந்தியாவின் 108 வருடக் கனவு நனவாகி இருப்பதை நாம் பதிவு செய்யாமல் இருந்தால் அதைத் தமிழ்கூறு நல்லுலகம் மன்னிக்காது. 29வது ஒலிம்பிக் போட்டி இந்திய சரித்திரத்தில் ஓர் அழுத்தமான நினைவாக, பொன்னெழுத்துப் பதிவாக நிலைத்திருக்கும் என்பதுதான் உண்மை. 1980ல் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை வென்ற பிறகு, இப்போதுதான் மீண்டும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றிருக்கிறது. அந்த வகையில் அபிநவ் பிந்த்ராவின் சாதனை ஒவ்வோர் இந்தியனையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி இருப்பதில் வியப்பில்லை.
அபிநவ் பிந்த்ராவின் துணிவும், தன்னம்பிக்கையும், உறுதியும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு வருடம் முன்பு அந்த இளைஞனுக்கு ஏற்பட்ட முதுகு வலியையும் பொருள்படுத்தாமல், ஜெர்மனிக்குச் சென்று இடைவிடாத பயிற்சி பெற்று ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் என்றால் அது அவரது உழைப்புக்கும் உறுதிக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் கூற வேண்டும்.
உலக அரங்கில் 17வது இடத்தில் இருந்த பிந்த்ரா, முதல் இடத்தில் இருந்த ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற சீனாவின் ஜு கினானையும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினெனையும் பின்னால் தள்ளி உலக சாதனை படைத்திருக்கிறார். 1900 முதல் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா கலந்து கொண்டாலும், தனிநபர் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது இப்போதுதான் என்பது நிச்சயமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்.
துப்பாக்கி சுடுவதில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே உலக அரங்கில் முன்னேறி வருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் ராஜ்யவர்தன்சிங் ராத்தோரும், கடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அபிநவ் பிந்த்ரா மற்றும் மானவ்ஜித்சிங் சாந்துவும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜஸ்பால் ராணாவும் துப்பாக்கி சுடுவதில் சாதனைகள் புரிந்து வந்திருக்கிறார்கள். ஆயினும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைப்பது என்பது நிச்சயம் கனவாகத்தான் இருந்தது.
நம்மால் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்பதை நிரூபித்தாகி விட்டது. ஆனால் இந்த மகிழ்ச்சிக்குப் பின்னால், பழம்பெருமை பேசுவதுடன் நின்று விடலாகாது என்பதுதான் நாம் அழுத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டிய சூளுரை. 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா போன்ற பல்வேறு தட்பவெப்ப நிலையை உடைய ஒரு நாடு, ஒரு தங்கப் பதக்கத்தை வென்றதுடன் திருப்தி அடைந்தால் எப்படி?
சீனாவுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் அழுகையே வருகிறது. நாம் இப்போதைய ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கத்தைப் பெற்றிருக்கும் வேளையில் சீனா இதுவரை குவித்திருக்கும் தங்கப் பதக்கங்கள் 17. இதே வேகத்தில் போனால் மொத்தப் பதக்கங்களின் பட்டியலில் அமெரிக்காவை சீனா விஞ்சிவிடும் என்று தோன்றுகிறது. 1984ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில்தான் சீனா தனது முதன்முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. இப்போது முதலிடத்துக்குப் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. அதற்குக் காரணம், துப்பாக்கி சுடுதல், பளு தூக்குதல் போன்ற அதிகமாக போட்டியில்லாத பல விளையாட்டுகளை அடையாளம் கண்டு, அதில் தனது வீரர்களுக்கு முனைப்புடன் பயிற்சி அளிக்கிறது சீனா. விளைவு? சீனா தங்கப் பதக்கப் பட்டியலில் முதலிடத்துக்குப் போட்டிபோட முடிகிறது.
கடந்த 2004 ஒலிம்பிக் போட்டியில், இதுவரை இந்தியா வாங்கியிருக்கும் மொத்த ஒலிம்பிக் பதக்கங்களைவிட அதிகப் பதக்கங்களை 17 நாடுகள் பெற்றிருந்தன. இதற்குக் காரணம் இந்தியாவில் திறமைசாலிகள் இல்லை என்பதல்ல பொருள். திறமைசாலிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை என்பதுதான் அர்த்தம்.
நமது ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு முறையாகப் பயிற்சி அளித்தால், உலக அளவில் சிறந்த சைக்கிள் ஓட்டும் வீரர்களாக முடியாதா? கேரள மாநிலம் தலைச்சேரி, கண்ணூரைச் சேர்ந்த சர்க்கஸ் வீராங்கனைகள் முறையான பயிற்சி இருந்தால் ஜிம்னாஸ்டிக்ஸ் பதக்கம் வெல்ல மாட்டார்களா? நமது இந்திய மீனவர்களில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்தால் உலக அரங்கில் படகுப் போட்டியிலும், நீச்சலிலும் பரிசுகளைக் குவிக்க மாட்டார்களா?
அரசுக்கு இதைப் பற்றிய அக்கறை வேண்டும். அதிகாரிகள் விளையாட்டுப் பயிற்சி மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ளாமல் இந்தியாவை உலக அரங்கில் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட வேண்டும். திறமைசாலிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் போக்கு பொதுநல விரும்பிகளிடமும், ஊடகங்களிடையேயும் வளர வேண்டும்.
இந்தியா வளர்ச்சி அடைகிறது, பொருளாதார ரீதியாக முன்னேறுகிறோம் என்று மார்தட்டிக் கொள்வதால் அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்று வளர்ச்சி அடைந்த நாடாகிவிட முடியாது. ஒருவகையில் ஒலிம்பிக் பதக்கங்களும் உலக அரங்கில் நமது அந்தஸ்தையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது. அபிநவ் பிந்த்ராவின் வெற்றி அதற்கு வழிகோலுமாக!
நன்றி : தினமணி