Saturday, August 16, 2008

குதிரை, கழுதை எல்லாம் ஒரே விலை!

சந்தையில் ஒரே மாதிரியான பொருள்களை பல நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் நேரத்தில் இதில் யாருடைய விலை நிர்ணயம் சரியானதாக இருக்கும் என்ற கேள்வி எழும்போது "சந்தை தீர்மானிக்கும்' என்று சொல்வது வழக்கம்.
கல்விச் சந்தையில் நுகர்வோராக இருக்கும் பெற்றோர்களுக்கு இந்த தீர்மானிக்கும் சக்தி மறுக்கப்படுகிறது.
முதல் கலந்தாய்வுக் கூட்டத்தின் முதல் 10 நாள்களிலேயே சிறந்த கல்லூரிகள் அனைத்திலும் அனைத்து பாடப் பிரிவுகளிலும் மாணவர்கள் இடம்பிடித்து விட்டனர்.
அடுத்த 10 தினங்களில் நடந்த கலந்தாய்வில் மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகள் உள்ள ஒரே காரணத்தால் சில கல்லூரிகளில் அந்தப் பாடப்பிரிவில் மட்டும் மாணவர்கள் சேர்ந்தார்கள். மற்ற பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேரவே இல்லை என்ற நிலைதான் நீடித்தது.
மாணவர்கள், பெற்றோர் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கும் விதத்திலேயே அக்கல்லூரி பற்றிய மதிப்பீடு வெளிப்படுகிறது. இந்த வகையில், முதல் கலந்தாய்வில் 50 சதவீத இடங்கள் பூர்த்தியாகாத கல்லூரிகள் அனைத்துமே இரண்டாம்தர கல்லூரிகள் என்று முடிவுசெய்வதற்கு எந்த நிபுணர் குழு ஆய்வும் தேவையில்லை.
முதல் கலந்தாய்வில் (20 நாள்களில்) 50 சதவீத இடங்கள் கூட காலியாகாத சுயநிதி கல்லூரிகளும் ரூ. 32,500 கல்விக்கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இத்தகைய கல்லூரிகள் (அதாவது முதல் 20 நாள்களில் 50 சதவீதத்தும் அதிகமான இடங்கள் காலியாக உள்ள கல்லூரிகள்) கல்விக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க வேண்டும் என்ற நிபந்தனையை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கினால் என்ன?
ஆயத்த ஆடைகள் முதல் காய்கறி வரை, குறையுடையன யாவும் விலை குறைத்து விற்கப்படும்போது, கல்விச் சந்தையில் மட்டும் எல்லாமும் ஒர் நிறை, எல்லாமும் ஓர் விலை என்பது சரியல்ல.
தரமான கல்லூரியாக மாறும்போது தானாகவே மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். அப்படியான சூழல் வரும்போது அக்கல்லூரிகள் அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை முழுமையாகப் பெற்றுக் கொள்ளட்டுமே!
கல்விக் கட்டணம் ரூ. 32,500 என்று அரசு சொன்ன போதிலும், எந்த தனியார் சுயநிதி கல்லூரிகள் எதுவுமே குறைந்தபட்சம் ரூ. 75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றோரிடம் கறந்துவிடுவதுதான் நிகழாண்டின் உண்மை நிலை. நூலகம், ஆய்வுக் கூடம், கணினிக்கூடம், திரும்பத் தரக்கூடிய முன்வைப்புத் தொகை என்ற புதுப்புது தலைப்புகளில் சுயநிதிக் கல்லூரிகள் வசூலிக்கும் தொகை பற்றி அண்ணா பல்கலைக்கழகமும், உயர் கல்வி அமைச்சரும் தமிழக அரசும் கவலைப்படுவதே இல்லை.
பல கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ. 62,500ஐ எந்த வகையிலும், எந்தத் தலைப்பின்கீழும் இரக்கமின்றி வசூலிப்பதில்தான் ஆர்வம் காட்டப்படுகிறது.
இந்த காரணத்தாலேயே, அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு விழுப்புரம், திண்டிவனம், திருக்குவளை, பண்ருட்டி, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய இடங்களில் தொடங்கியுள்ள கல்லூரிகளில், எந்த வசதியும் இல்லை என்பது நிச்சயமாகத் தெரிந்திருந்தும், ஆசிரியர்கள் நியமனம்கூட இன்னும் நடத்தப்படவில்லை என்று தெரிந்திருந்தும் அனைத்துப் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை வேகமாக முடிந்துபோனது. இக்கல்லூரிகளில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் அனைத்தும் சேர்ந்தால்கூட ரூ. 20,000க்கு அதிகமில்லை.
சிறுபான்மையினர் கல்லூரிகள் நீங்கலாக அனைத்து சுயநிதி கல்லூரிகளும் 65 சதவீத இடங்களை அளித்துள்ளதாக சொல்லப்பட்டாலும், முன்னிலையில் உள்ள பல கல்லூரிகள் 50 சதவீத இடங்களை மட்டுமே ஒதுக்கீடு செய்தன என்ற குற்றச்சாட்டை பெற்றோர் முன்வைக்கின்றனர்.
மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினருக்கான இடங்கள் காலியாக இருந்தால், கலந்தாய்வு முடிந்த பின்னர் அவற்றை நிர்வாக ஒதுக்கீட்டில் பூர்த்தி செய்வதற்கான, காத்திருப்போர் பட்டியலை கல்லூரி நிர்வாகங்கள் இப்போதே வைத்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
சில கல்லூரிகள் சில புதிய பாடப்பிரிவுகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப குழுமத்தின் அங்கீரத்தைப் பெற்றுள்ளன. ஆனால் அவை தங்கள் புதிய பாடப்பிரிவுகளை கலந்தாய்வில் இடம்பெறச் செய்யவில்லை. கலந்தாய்வு முடிந்தபிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைப்படுத்திக்கொண்டு, சட்ட சிக்கல் இல்லாமல் அனைத்து இடங்களையும் நிர்வாக ஒதுக்கீட்டில் பூர்த்தி செய்ய காத்திருக்கின்றன என்று தெரிகிறது.. இந்த பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை பட்டியல் அவர்களிடம் தயாராக உள்ளது.
மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் அண்ணா பல்கலைக்கழகம் வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் பாடப்பிரிவுகள் வாரியாக எத்தனை இடங்கள் கலந்தாய்வுக்கு ஒதுக்கப்பட்டன. பூர்த்தியாகாத தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கான ஒதுக்கீடுகள் எந்த வகைப்படி பூர்த்தி செய்யப்பட்டன, கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்ற ஒவ்வொரு மாணவரிடமும் கல்லூரிகள் வசூலித்த மொத்த தொகை எவ்வளவு என்பதை வெளிப்படையாக இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி

கசக்கப் போகிறது சர்க்கரை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரும்புச் சாகுபடி பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. கரும்பு சாகுபடிக்கு ஏற்றவாறு மழை வளம் இல்லையென்ற காரணம் ஒருபுறம் இருக்க, கரும்புக்கு நிர்ணயிக்கப்படும் கொள்முதல் விலையும், விளைந்த கரும்பை வெட்டுவதற்கு சர்க்கரை ஆலைகள் செய்யும் தாமதமும், கரும்பைக் கொள்முதல் செய்த பிறகு அதற்குண்டான தொகையைத் தர சர்க்கரை ஆலைகள் எடுத்துக் கொள்ளும் அவகாசமும் விவசாயிகளை விரக்தி அடையச் செய்துள்ளன.
மிகச் சாதாரணமான இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் மனமோ, அக்கறையோ இல்லாமல் மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசியலில் நீண்ட அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற சரத் பவாரை விவசாய அமைச்சராக நியமித்தபோது, ""பொருத்தமானவர்தான் பதவி ஏற்றிருக்கிறார்'' என்றே விவரம் தெரிந்தவர்கள் மகிழ்ந்தார்கள். ஆனால் அவரோ விவசாயிகளின் நலனைவிட மகாராஷ்டிரத்திலும் பிற மாநிலங்களிலும் செல்வாக்குடன் திகழும் சர்க்கரை ஆலை நிர்வாகிகளின் நலனே முக்கியம் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது.
20062007 சர்க்கரைப் பருவத்தில் 285 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தி ஆனது. அதுவே பிறகு 20072008ல் 265 லட்சம் டன்களாகக் குறைந்தது. இப்போது 20082009ல் 220 லட்சம் டன்களாகச் சரியும் என்று புதிதாகத் திரட்டப்பட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மிகவும் கவலைதரத்தக்க விஷயமாகும்.
கரும்புச் சாகுபடியைவிட சோயா மொச்சை, மக்காச் சோளம் ஆகியவற்றை விவசாயிகள் நாடத்தொடங்கிவிட்டதால் கரும்புச் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. சோயா மொச்சை, மக்காச் சோளம் ஆகியவற்றுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைக்கிறது. அதன் அறுவடைக்கு யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை.
மக்காச் சோளத்தையும் சோயா மொச்சையையும் கால்நடைகளுக்கு உணவாக அளிப்பதில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தீவிரம் காட்டுவதால் சர்வதேசச் சந்தையில் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. எனவே சோயா, மக்காச்சோள சாகுபடியில் அதிக விவசாயிகள் இறங்க ஆரம்பித்துள்ளனர்.
சர்க்கரை உற்பத்தி அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் சர்க்கரை ஆலை அதிபர்களின் நலனைக் காப்பதற்கு மட்டுமே நடவடிக்கைகளை எடுப்பதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது. உள்நாட்டில் சர்க்கரைக்கு இருக்கும் தேவையைவிட சர்க்கரை உற்பத்தி அதிகரித்துவிட்டது என்றால், கணிசமான அளவு சர்க்கரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஏன் என்று கேட்டால், அன்னியச் செலாவணி கையிருப்பை உயர்த்துவதற்காக என்று பதில் அளிக்கிறது.
சர்வதேசச் சந்தையில் இந்தியா தன்னுடைய சர்க்கரையை விற்காவிட்டால், உலக நாடுகள் சர்க்கரை கிடைக்காமல் திண்டாடப் போவதில்லை. உள்நாட்டில் செயற்கையாக சர்க்கரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்ற ""நல்லெண்ணத்தின்'' அடிப்படையில்தான் மத்திய அரசு சர்க்கரையை ஏற்றுமதி செய்துகொண்டே இருக்கிறது.
1977ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தபோதுதான் சர்க்கரைத் தொழிலில் அமலில் இருந்த ""இரட்டை விலைக் கொள்கை'' கைவிடப்பட்டது. அதன் பலன், ரேஷன் கடைகளைவிட மளிகைக் கடைகளில் சர்க்கரை விலை குறைந்தது. அந்த துணிச்சலான நடவடிக்கைக்கு அப்போதைய நிதியமைச்சர் எச்.எம். படேல், நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் மோகன் தாரியா போன்றோர் துணையாக இருந்தனர்.
இப்போதுள்ள மத்திய அரசு தன்னை, ""ஐக்கிய முற்போக்கு கூட்டணி'' என்று அழைத்துக் கொண்டாலும் அதன் பெருவாரியான முடிவுகள் விவசாய விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளாகவே இருக்கின்றன. சர்க்கரையைப் பொருத்தவரை இப்போதைக்கு கையிருப்பில் 110 லட்சம் டன் பழைய கையிருப்பு இருப்பதால் நிலைமையைச் சமாளித்துவிடலாம். ஆனால் வரும் ஆண்டுகளில் கரும்புச் சாகுபடி பரப்பு வெகுவேகமாகச் சரிந்துவிட்டால் இறக்குமதி செய்துதான் நிலைமையைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அப்போது அதற்கான விலை மிக அதிகமாக இருக்கும், அந்தச் சுமை முழுக்க நுகர்வோர் தலையில்தான் விழும் என்று இப்போதே எச்சரிக்கிறோம்.