Monday, August 18, 2008

இதுதான் மக்களாட்சி மகத்துவம்!

இந்திய ஜனநாயகம் 61 வயதினை அடைந்த பின்னர், அதனால் நமது மக்களுக்குக் கிடைத்த பலன்கள் என்ன என்பதனை ஆராய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். நாம் கடந்து வந்த பாதையை நோக்கும்போது நன்மை பயக்காமல், இந்திய ஜனநாயகம் பல தீமைகளை விளைவித்துள்ளதோ எனும் சந்தேகம் எழுகிறது. காரணம் இன்றும் 113 கோடி மக்களில், 83 கோடியே 60 லட்சம் பேர் ஒரு நாளைக்கு ரூ. 20க்கு கீழே வருமானம் உள்ளவர்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.
ஜனநாயகம் எனும் மக்களாட்சி முறை சுமார் 2500 ஆண்டுகளுக்குமுன் உலகில் தோன்றி மறைந்து, அதன்பின் 2000 ஆண்டுகள் கழித்து மறுபடியும் உருவாகி 20ம் நூற்றாண்டில் பலமான ஓர் ஆட்சிமுறையாக உலகெங்கிலும் உருவானது. சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், அரசியல் தத்துவஞானி பிளாட்டோ கூறிய கருத்துகளின்படி ஜனநாயகம் மக்களுக்கு நல்லாட்சியைத் தர முடியாது.
ஜனநாயகத்தின் அடிப்படை மூன்று அம்சங்கள். அவை பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் மற்றும் சட்டவிதிமுறைகளாலான ஆட்சி ஆகியனவாகும். ஆனால், இவற்றைச் சரியான முறையில் உபயோகிக்க, ஜனநாயக ஆட்சிமுறையில் பங்கேற்று அரசுகளை அமைக்கும் சக்தியைப் பெற்ற பொதுமக்கள் விவரமறிந்தவர்களாக இருப்பது அவசியம் என பிளாட்டோ வாதிட்டார்.
""எல்லா மக்களுக்கும் அரசில் பதவி வகிக்கவும், பொது சட்டதிட்டங்களை உருவாக்கவும் உரிமை உண்டு எனும் விதி மேலெழுந்தவாரியாக நோக்கும்போது சிறப்பாகத் தெரிந்தாலும் நடைமுறையில் சரிவராது'' என்பது அவரது வாதம்.
கல்வியறிவு இல்லாதவர்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை எனவும், இதுமாதிரியான மக்களை டெமஃகாக் என அழைக்கப்படும் மேடைப்பேச்சு வல்லுநர்களான தலைவர்கள் தவறான விளக்கங்களை அளித்து கெட்ட பாதைக்கு இட்டுச்சென்று அவர்களது ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்து விடுவார்கள் என்றும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியல் ஞானிகளான பிளாட்டோவும் அவரது ஆசான் சாக்ரட்டீசும் சொல்லி இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. நடப்பு அரசியலை 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே கணித்திருக்கிறார்கள் என்பது தான் அதிசயம்.
தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியாக மாறி நமது ஜனநாயகம் வழங்கிய சுதந்திர அம்சங்களான பேச்சுரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை உபயோகித்து படிப்படியாக மக்கள் ஆதரவினைப் பெற்று அரசமைத்தார்கள் என்பதனை ஆராய்ந்தால் மேலே குறிப்பிட்ட கிரேக்க நாட்டு சித்தாந்தவாதிகளின் கூற்று உண்மை என நமக்குப் புரியும்.
திமுகவின் ஆரம்பகாலங்களில் தி.க.வில் பெற்ற அனுபவத்தால் மேடைப்பேச்சுகளும், நாடகங்களும், சினிமாவும் மக்களைக் கவர்ந்திழுக்கப் போதுமானது என்பது அக்கட்சியின் தலைவர்களுக்குப் புரிந்திருந்தது. அண்ணா இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தினார்.
தூத்துக்குடியில் கே.வி.கே.சாமி எனும் திமுகவைச் சார்ந்த தொழிற்சங்கத் தலைவர் 1956ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அதற்கான இரங்கல் கூட்டத்தில் அண்ணாதுரை சொற்பொழிவாற்றும்போது, "கொடி கட்டி வாழ்ந்த தமிழகம், குடிகெட்டுப் போனதை இங்கு நான், இடிபட்ட மனதுடன் எடுத்துரைக்கின்றேன்! கே.வி.கே. சாமி காட்டிலே வெட்டப்பட்டிருந்தால் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். நாட்டிலே, நடுரோட்டிலே பட்டப்பகலிலே, பலர் மத்தியிலே வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது நாம் கட்டிக்காத்த நெறிமுறைகளை கொட்டிக் கவிழ்த்து விட்டதன்றோ?'' என்று பேசினார்.
இந்தமாதிரியான அடுக்குமொழி மேடைப்பேச்சினைக் கேட்கப் பல ஊர்களிலிருந்து மக்கள் பஸ்களில் சைக்கிள்களில் பயணம் செய்து, ஆயிரக்கணக்கில் கூடுவார்கள். எதுகை, மோனை சகிதம் ஒலிகளின் ஏற்ற இறக்கத்துடன் பேசுபவர்கள் பெரிய தலைவர்கள் எனக் கருதப்பட்டார்கள்.
இவ்வாறான பேச்சுகள் ஏதேனும் உருப்படியான கருத்துகளை, நல்வாழ்வுத் திட்டங்களை விளக்குகின்றனவா எனும் உணர்வு இல்லாமல் பெருந்திரளாகக் கூடிய சாதாரண மக்கள் தங்களது தகுதிக்கேற்ப நிதிகளையும் வழங்கினார்கள்.
பெரிய பொதுக்கூட்டங்களில் தொண்டர்கள் பை ஏந்தி பண வசூல் செய்வார்கள். மகாநாடுகள் நடத்தப்படும். அதற்கு நுழைவுக் கட்டணமும் நிதிகளும் பெறப்படும். பெரிய தொகைகள் வசூலான விவரம் மேடைகளிலே அறிவிக்கப்பட்டு கரகோஷம் எழும்.
இதுமாதிரியான மேடைப்பேச்சு ஒருபுறமும் அரசியல் வசனங்கள் நிறைந்த நாடகங்கள் மறுபுறமும், மக்களைக் கவர்ந்திழுப்பதைக் கண்ட திமுக, பேச்சாளர்களை உருவாக்கி, பயிற்சியளித்து மாநிலமெங்கும் பொதுக்கூட்டங்களை நடத்தியது. அக்காலத்தில் "ஏன் வேண்டும் இன்பத்திராவிடம்?' எனும் கேள்வியை எழுப்பி, தென்மாநிலங்களான ஆந்திரம், மைசூர், கேரளம், தமிழ்நாடு ஆகியவற்றைச் சேர்த்து நாம் கேட்கும் திராவிட நாட்டைவிட, ஸ்வீடன், டென்மார்க், பல்கேரியா, யூகோஸ்லாவியா, ருமேனியா, மலேசியா, இத்தாலி போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் சிறிய நாடுகள். நாம் உலகின் சிறந்த ஒரு நாடாக அமைய முடியும். தபால்துறை, டெலிபோன் துறை ஆகியன நம் கைக்கு வந்தால் நமது பணத்தை வடநாட்டுக்காரன் கொண்டு போக முடியாது'', என முழங்குவார்கள் திமுகவின் குட்டிப் பேச்சாளர்கள். இதுபோன்ற எண்ணற்ற கேலிக்கூத்துகளுக்கு ஒரு உதாரணம் தான் இது.
அடுத்து எழுத்து சுதந்திரம் என்ற போர்வையில் பத்திரிகையில் எந்த ஒரு சமுதாய தார்மிகப் பொறுப்புமற்ற செய்திகளும் விமர்சனங்களும் வெளிப்படும். 1967ம் ஆண்டு தேர்தலின்போது பெருந்தலைவர் காமராஜ் குடியிருந்த வாடகை வீட்டினைப் படம்பிடித்து பெரிய வால் போஸ்டர்களாக அச்சடித்து திமுக தமிழகமெங்கும் ஒட்டியது. போஸ்டரின் தலைப்பு, ""ஏழைப் பங்காளர் வசிக்கும் எட்டடி குச்சில் பாரீர்!''
இன்றைய இளைஞர்கள் மேலே சொன்ன சிறிய உதாரணங்களின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அலங்கார மேடைப்பேச்சுகள், நாடகங்கள், பத்திரிகைச் செய்திகள், பொய்ப் பிரசாரங்கள் மக்களை மாக்களாக மாற்றியது என்பதுதான்! படிப்பறிவில்லாத கிராமப்புற ஏழை எளிய மக்கள் இவர்களை மிகப்பெரிய தலைவர்கள் எனவும் இவர்கள் ஆட்சி மட்டும் ஏற்பட்டுவிட்டால் சுபிட்சம் தானாக வந்துவிடும் எனவும் நம்பினார்கள். 1967ல் இதுமாதிரியான மக்களின் ஆதரவினால் இவர்கள் ஆட்சியையும் பிடித்தார்கள்.
ஆட்சிமுறையில் மக்களுக்கான முன்னேற்றத் திட்டங்களை நிறைவேற்றுவது என்பது மேடைப் பேச்சு மாதிரியான எளிதான விஷயமல்ல என்பது புரிந்தது. ரூபாய்க்கு மூன்று படி அரிசி தரப்படும் என அரிசித் தட்டுப்பாடு தலையாய பிரச்னையாக இருந்த தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, அரசமைத்தபின் ரூபாய்க்கு ஒரு படி அரிசி ரேஷனில் கிடைக்கும் என அறிவித்துவிட்டு அதே அடுக்குமொழி வசனத்தில் முதல்வர் அண்ணா, ""முதலில் ஒருபடி, பின் படிப்படியாக எப்படியும் மூன்று படி'' எனும் வாக்குறுதியை உதிர்த்தார்! அடுத்த சில மாதங்களிலே ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டுவிட்டது.
மக்களின் முன்னேற்றத்திற்கு அரசுகள் முக்கியத்துவம் அளிக்காமல் சாதாரணமான பிரச்னைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்து உண்மையான மக்கள் பிரச்னைகள் பின்தள்ளப்படுகின்றன என்பதும் ஊழலும் சுயநலமும் உச்சகட்டத்தை அடைந்து நாடு சீரழிந்து வருகிறது என்பதும் 61 ஆண்டு ஜனநாயக அரசாட்சியின் பலன் எனலாம். தமிழகத்தில் 40 ஆண்டுகள் நாம் சாதித்தது முதல் 20 ஆண்டுகள் சாதித்ததைப்போல் இல்லை என்பது தான் கசப்பான உண்மை.
இக்கருத்து சரிதான் எனும் வகையில் பேசியுள்ளார், உலகின் தலைசிறந்த வளர்ச்சிப் பொருளாதார மேதை அமார்த்தியா சென். சுதந்திர தினத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றிய அவர் இந்தியாவில் நிலவி வரும் கொடுமையான மூன்று விஷயங்களைக் கவனிக்கத் தவறிவிட்டன அரசுகள் எனக் கூறியுள்ளார்.
அவை: 1. பெருவாரியான ஏழைக் குழந்தைகள் சரியான ஊக்க உணவளிக்கப்படாமல் வளருவது. 2. ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதி இல்லாதது. 3. இன்றளவும் ஆரம்பக் கல்விகூட எல்லா மக்களுக்கும் கிடைக்காமல் இருப்பது ஆகியனவாகும்.
அதற்குக் காரணம் இதுபோன்ற பிரச்னைகளை கையிலெடுக்காமல் அவற்றை மறைத்துவிடக் கூடிய பல விஷயங்களில் கவனம் செலுத்திப் போராட்டங்கள் செய்து வருகிறார்கள் நமது அரசியல்வாதிகள் என்பதை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார் அவர்.
அதாவது தமிழ் செம்மொழி ஆவதும், கிராமியக் கலைகள் சங்கமம் எனும் பெயரில் பெரிய விழாவாக பல நாள்கள் அரசு செலவில் கொண்டாடப்படுவதும், நிறைய சினிமாப் பின்னணி பாடல்களைப் பாடி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் விழா எடுப்பதும், நகராட்சியை மாநகராட்சியாக்க கோடிகள் செலவு செய்து விழா எடுப்பதும், மின்சாரப் பற்றாக்குறை உள்ள போது ஒரு லட்சம் டியூப் லைட்கள் சீரியல்கள் ஒளிவீசும் விழாக்கள் பல எடுப்பதும், பெட்ரோல், டீசல் விலைகள் மக்களை வாட்டி வதைக்கும்போது 250 கார்கள் புடை சூழ அமைச்சர்கள், அதிகாரிகள் இம்மாதிரி விழாக்களில் பங்கு கொள்வதும், இன்னும் பல விஷயங்களும், இலவசங்கள் உள்பட, அமார்த்தியா சென் சொன்ன ஏழைகளுக்கு நன்மை செய்யும் ஊட்டச்சத்து உணவு, மருத்துவ வசதி, கல்வி வசதி ஆகிய அம்சங்களில் சிறிதளவு பங்களிப்பும் செய்யாது.
1947ம் ஆண்டு சுதந்திரப் பிரகடனம் செய்வதற்கு முன்னர் நடந்த விவாதங்களில் நமது தலைவர்கள், கிரேக்க நாடுகளிலும், பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் உருவாகி நடந்து வந்த ஜனநாயக முறையிலான மக்களாட்சியை விடவும் அதிக சுதந்திரத் தன்மைகளை உள்ளடக்கிய அரசியல் சட்டத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என முடிவு செய்தார்கள்.
பரவலான ஜனநாயக உரிமைகள் படிப்பறிவில்லாத ஜனங்களை அதிகமாகக் கொண்ட இந்தியாவிற்கு சரிப்பட்டு வராது எனும் கருத்தினை அன்றைய வைஸ்ராய் லார்ட் மவுண்ட்பேட்டன் கருதினார். தற்குறிகளான ஏழை எளியவர்களின் ஓட்டுகளை வசதி படைத்தவர்கள் விலைக்கு வாங்கி காங்கிரஸை அழித்து விடுவார்கள் என்பது அவரது கருத்து.
ஆனால் இதற்குப் பதிலாக பண்டித ஜவாஹர்லால் நேரு, ""ஆண்டாண்டுகாலம் அடிமைத்தளையில் இருந்த ஏழை எளிய மக்களின் கையில் ஓர் ஓட்டுச்சீட்டினைக் கொடுத்து, அவர்களைத் தேடி ஜமீன், மிட்டா மிராசு, படித்தவன், பணக்காரன் எல்லோரும் சென்று கெஞ்சிக் கூத்தாடி ஓட்டுக் கேட்கும் நிலைமையை உருவாக்குவேன், அது ஒன்றே போதும்!'' எனக் கூறினார்.
ஆனால், ஓட்டுகளை கையில் வைத்திருப்பவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டு தங்களைத் தாங்களே சீரழிப்பார்கள் என்பதை 61 ஆண்டு சுதந்திர இந்தியாவின் ஜனநாயகம் நமக்கு உணர்த்தியுள்ளது. பிளாட்டோவும், மவுண்ட்பேட்டனும் சரியாக நம்மைக் கணித்தார்கள் எனும் எண்ணமே, மிஞ்சுகிறது!
என். முருகன்
நன்றி : தினமணி

பத்து ரூபாய் போராட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சின்ன கிராமம் தீர்த்தான்பட்டி. சில வாரங்களுக்கு முன் ஒரு நாள் இந்தக் கிராம மக்களால் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகம் முற்றுகையிடப்பட்டது.
அதற்கு முதல் வாரம் பெரம்பலூர் மாவட்டத்தில் பசும்பலூர் அருகேயுள்ள சிற்றூர், இரூர்சிற்றூர், செட்டிக்குளம்சிற்றூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அடுத்தடுத்த நாள்களில் கடும் வெயிலில் பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூட்டையும் போலீஸாரின் கண்மூடித்தனமான தடியடி தாக்குதலையும் சந்தித்தனர் திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டணை கிராம மக்கள்.
இவையெல்லாம் எதற்காகத் தெரியுமா?
பத்து ரூபாய்க்காக!
ஆமாம். ஆச்சரியப்படாதீர்கள். இந்தப் பத்து ரூபாய்க்கான போராட்டக் காட்சிகள் மத்திய அரசின் வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்களில் மிக சகஜமானவை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கனவுத் திட்டமாகவும் அக்கட்சியின் "இளவரசர்' ராகுல் காந்தியின் விருப்பத் திட்டமாகவும் "சிலாகிக்கப்படும்' திட்டம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்.
புதிய பொருளாதாரக் கொள்கையால் கிராமப்புற வேலைவாய்ப்புகளை ஒழித்துக்கட்டிய பாவத்திலிருந்து தப்பிக்க காங்கிரஸ் தேடிக்கொண்ட ஓட்டுவேட்டை வழிகளில் இதுவும் ஒன்று.
நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், கிராமப்புறங்களில் வாழும் ஒரு குடும்பத்துக்கு, ஓர் ஆண்டில் வெறும் 100 நாள்கள் மட்டும் சாதாரண உடல் உழைப்பு சார்ந்த வேலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. (மீதி நாள்களில் வயிற்றில் ஈரத்துணிதான்).
நீர்நிலைகளைத் தூர்வாரும் சீரமைக்கும் பணி, பாசன மேம்பாட்டுப் பணி, ஊரகப் பகுதிகளில் இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முக்கியப் பணிகளாகும். கிராமங்களில் வசிக்கும் குடும்பங்களில் 18 வயதான கூலி வேலைசெய்யத் தயாராகவுள்ள அனைவரும் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யத் தகுதியுடையோர்.
வேலை வேண்டுவோர் தன் பெயரைப் பதிவு செய்துகொண்டு தங்களுக்கான வேலையைக் கேட்டு ஊராட்சி நிர்வாகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அளிக்கப்படும் வேலை ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் அளிக்கப்படலாம். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்சக் கூலி வாரக் கடைசியிலோ 15 நாள்களுக்குள்ளாகவோ வழங்கப்படும்.
சரி. கூலி எவ்வளவு தெரியுமா? ஒரு நாளைக்கு ரூ. 80!
ஆனால் இந்த எண்பது ரூபாயும்கூட வேலை செய்வோருக்கு முழுமையாகக் கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் இப்போதைய பிரச்னை.
ஏன்?
இத்திட்டத்தின் கீழ், ஒரு பணி மேற்கொள்ளப்படும்போது அதற்கான திட்ட மதிப்பீட்டையும் காலக்கெடுவையும் மதிப்பிடும் அலுவலர்கள், தங்கள் கணக்குத் தவறும்போது தொழிலாளர்கள் தலையில் கை வைத்துவிடுவதே காரணம்.
இதற்கு நம் அலுவலர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?
""இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் வேலைகள் பெரும்பாலும் மண் வேலைகள். ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ. 80 கூலியாக பெற சாதாரண மண் உள்ள பகுதியில் 83.70 கன அடி; கடின மண் உள்ள பகுதியில் 57.56 கன அடி வேலை பார்க்க வேண்டும். குழு குழுவாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கான வேலையையும் குறிப்பிட்டே தருகிறோம். ஆனால், சிலர் சரியாக வேலை பார்ப்பதில்லை. எஞ்சும் வேலையால் திட்ட மதிப்பீட்டு நாள்கள் கூடுதலாகிவிடுகிறது. எனவே, கூலியைப் பகிர்ந்து தர வேண்டியதாகிவிடுகிறது. இதனாலேயே, ரூ. 80க்குப் பதிலாக ரூ. 70, ரூ. 60 எனக் கூலியைக் குறைத்துத் தர வேண்டியிருக்கிறது'' என்கிறார்கள் நம் அலுவலர்கள்.
ஆனால், தொழிலாளர்கள் சொல்லும் காரணங்கள் வேறு.
""மழைக்காலத்தில் மண் வெட்டும் பணி இலகுவாக இருக்கும். ஆனால், கோடையில் பதம் மாறும். தவிர, ஊருக்கு ஊர், பகுதிக்குப் பகுதி மண்வாகு மாறுபடும். ஆனால், அலுவலர்களோ இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. அறைக்குள் உட்கார்ந்து அவர்கள் போடும் கணக்கு, நடைமுறைக்கு ஒத்துவருவதில்லை'' என்கிறார்கள் தொழிலாளர்கள்.
அலுவலர்களின் வாதத்தையே எடுத்துக்கொள்வோம். சிலர் வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்பதற்காக எல்லோருடைய வயிற்றிலும் அடிப்பது எப்படி நியாயமாகும்? வேலையை ஆள் வைத்துக் கண்காணிக்காதது யாருடைய தவறு?
பத்து ரூபாய் என்பது அத்தனை சாதாரணமானதல்ல அலுவலர்களே!
நன்றி : தினமணி

படாத பாடு படுத்தும் பத்து வினாடி!


உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்திய அணி விளையாடத் தகுதி பெற்றது. ஆனால் கடைசி நிமிடத்தில் ஒரு சிக்கல்: ஆட்ட விதிகளின்படி ஷூ போட்டுக் கொண்டுதான் பந்தாட வேண்டும். ஆனால் இந்திய அணியோ, பயணத்திற்கே கோவணத்தை விற்றுத்தான் டிக்கெட் வாங்க வேண்டிய பொருளாதார நிலையில் இருந்தது. அவர்களை வாயிற் காவலர்கள் ஏற இறங்கப் பார்த்துவிட்டு ""புழுதிக் காலெல்லாம் கூடாது, பூட்ஸுக் காலுக்குத்தான் அனுமதி'' என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். இந்திய ஃபுட்பால், அன்றைக்குச் சுருண்டு படுத்ததுதான்!
வெறும் கால் நாட்களிலிருந்து வெகு தூரம் வந்துவிட்டது ஸ்போர்ட்ஸ் விஞ்ஞானம். இன்றைக்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதே டெக்னாலஜிதான்:
* இந்த முறை பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நூறு மீட்டர் ஓட்டத்தின் சாம்பியனான பாவெல், காலில் இறகு அணிந்து கொண்டு ஓடுகிறார். பிரத்தியேகமான பாலிமர் இழைகளால் கம்பளம் நெய்வதுபோல் தயாரிக்கப்பட்ட அவருடைய ஷூவின் எடை சுமார் நூறு கிராம்தான். காலில் ஷூ இருப்பதோ, ஏன் கால் என்று ஒன்று இருப்பதோ கூடத் தெரியாது! செவ்வாய் கிரகத்திற்குச் சென்ற மார்ஸ் ரோவர் வாகனத்தில் பயன்பட்ட அதே விண்வெளி தொழில்நுட்பத்தில் விளைந்தது இந்த பாலிமர்.
* மைதானத் தரை கூட மாறிவிட்டது. பந்தயம் ஓடுவதற்கான ட்ராக் முன்னேயெல்லாம் வெறும் கட்டாந்தரையாக இருக்கும். இப்போது அதுவும் ஹைடெக். அதன் மேல் தாவும் கால்களின் சக்தியை உள்வாங்கி வெளியிட்டு ஸ்பிரிங் மாதிரி எகிறச் செய்கிறது. அடியில் ஓர் உறுதியான ஆதார லேயர், அதன் மீது ரப்பர் நுரை, அதன் மேல் சிவப்பு நிற பாலியூரித்தேன் அடுக்கு என்று கலர் கலராக சுதந்திர தின கேக் மாதிரி அமைக்கிறார்கள். பார்த்தால் அப்படியே கடித்துத் தின்று விடலாம் போல் இருக்கிறது!
*888 அன்று பெய்ஜிங் ஒலிம்பிக்ஸின் துவக்க விழாவில் பத்து கோடி டாலர் செலவில் வாண வேடிக்கை விட்டுக் காசைக் கரியாக அடித்தார்கள். உலகிலேயே காஸ்ட்லியான இந்தத் தீபாவளியை டிசைன் செய்தவர் கை என்ற சுருக்கமான பெயர் கொண்ட சீனஅமெரிக்கர்; பைரோ டெக்னிக்கில் கை தேர்ந்தவர். ஒவ்வொரு பட்டாசும் துல்லியமாகத் தத்தமது நேரத்தில் வெடிப்பதற்காக அவற்றுக்குள் சிலிக்கான் சில்லு பொருத்தி கம்ப்யூட்டர் உதவியால் நெருப்பு நடனங்களை வடிவமைத்தார்.
* உலகிலேயே காற்றில் மாசு அதிகம் உள்ள நகரங்களில் ஒன்று பெய்ஜிங். மென்னியைப் பிடிக்கிற பொல்யூஷன்! சர்வ தேச விளையாட்டு வீரர்கள் இருமப் போகிறார்களே என்பதற்காகப் பல மாதமாகவே புகையைக் குறைக்கப் பாடுபட்டு வருகிறது சீனா. கம்யூனிச நாட்டில் ஒரு சௌகரியம், தொழிற்சங்கத் தொல்லைகள் கிடையாது. எனவே பல தொழிற்சாலைகளை ஒரேயடியாக மூடிவிட்டார்கள். ரோட்டில் கார்கள் போவதற்குக் கட்டுப்பாடுகள். மணிக்கு ஒரு முறை காற்றின் தூய்மையை அளந்து பார்த்து கந்தகம் ஓசோன், தூசு மாசு எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள்.
* எல்லாவகை ஆட்டக்காரர்களுமே தாங்கள் பயிற்சி செய்வதை டிஜிட்டல் காமிராக்களில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். கோச்சுடன் உட்கார்ந்து அதை ஸ்லோ மோஷனில் போட்டுப் போட்டுப் பார்த்து அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு அசைவையும் செப்பனிட்டுக் கொள்வார்கள். ஒலிம்பிக்ஸ் தரத்து போட்டிகளில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே மயிரிழைதான் இடைவெளி. ஒரு செகண்டின் நூறில் ஒரு பாகம்கூட முக்கியம். எனவே மனித உடம்பு, உடை, காற்று போன்றவற்றின் இயற்பியலை அக்கக்காக அலசி எல்லாவற்றையும் உன்னதமாகத் தீட்டிக் கொள்கிறார்கள்.
* அடுத்த ஒலிம்பிக்கிற்காக ஆஸ்திரேலியாவில் இப்போதே ஒரு புத்திசாலி நீச்சல் குளம் அமைத்திருக்கிறார்கள். குளம் முழுவதும் தண்ணீருக்கு மேலேயும் அடியிலும் காமிராக்கள். (நீச்சல் வீரர்கள் நழுவாத ஜட்டி அணிவது அவசியம்). அங்கங்கே காந்தக் கதவுகள், எலக்ட்ரானிக் கருவிகள் பொருத்தி நேரம், வேகம் எல்லாவற்றையும் நுணுக்கமாக அளந்து, போட்டியின் ஒவ்வொரு கணத்தையும் நீச்சல் குளமே பதிவு செய்துவிடுகிறது.
* ஸ்பீடோ கம்பெனி ஒலிம்பிக்ஸை மனதில் வைத்து லேசர் ரேஸர் என்று ஒரு நீச்சல் உடை தயாரித்திருக்கிறது. உடலோடு ஒட்டி மற்றொரு தோல் மாதிரி இருக்கும் இந்த உடையை அணிந்து கொண்டால் நாமும் வாளை மீனாய் நீந்த ஆரம்பித்து விடுவோமாம். நவீன ஃபாஷன் டிசைனரால் வடிவமைக்கப்பட்டு, நாசாவின் ஆராய்ச்சி சாலைகளில் பரிசோதனை செய்யப்பட்ட இந்த ஹைடெக் நீச்சல் உடை, கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஐம்பது புதிய நீச்சல் ரெக்கார்டுகளை உருவாக்கியிருக்கிறது. ""இனிமேல் ரேஸர் இல்லாமல் நீச்சல் போட்டியில் இறங்க யாரும் துணிய மாட்டார்கள்'' என்று பேசிக்கொள்கிறார்கள்.
* போல்வால்ட் (இதற்குத் தமிழ் என்ன? கோல் தாண்டல்? போட்டியில் முதலில் ஹிக்கரி மரக் குச்சிகளைத்தான் உபயோகித்து வந்தார்கள். ஐந்து மீட்டர் உயரம் என்பது உலக ரிக்கார்டாக இருந்தது. பிறகு மூங்கிலை அனுமதித்தார்கள். மூங்கில் லேசாக இருப்பதால் சற்று அதிக உயரம் தாண்ட முடிந்தது. 1960 வாக்கில் கண்ணாடி ஃபைபர் குச்சிகள் வந்த பிறகு அநாயசமாக ஆறரை மீட்டர் தாண்ட ஆரம்பித்துவிட்டார்கள். உச்சியில் இருக்கும்போது குச்சி மளுக்கென்று முறியாது என்ற நம்பிக்கை வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஒரு மனிதன் நூறு மீட்டர் ஓட்டத்தை முடிக்கும் தூரம் வருடா வருடம் இம்மி இம்மியாகக் குறைந்து கொண்டே வருகிறது, இம்மி என்றால் எம்மி? ஒரு செகண்டில் ஆயிரத்தில் ஒரு பாகம்! இவ்வளவு நுணுக்கமாக நேரத்தை அளக்க வேண்டுமென்றால் பாரம்பரியமான ஸ்டாப் வாட்ச் வைத்துக் கொண்டு நிற்கும் குண்டு அம்பயரின் விரல்களுக்கு வேகம் போதாது. வினாடிக்கு ஆயிரம் தடவை துடிக்கும் ஒளி இழைகளையும் ஃபோட்டோ சென்ஸர் என்கிற ஒளி உணரும் கருவியையும் வைத்துக் கொண்டுதான் வெற்றி தோல்விகள் நிச்சயிக்கப்படுகின்றன.
* ஈட்டி எறிதல், வட்டு வீசுதல் போன்ற போட்டிகளுக்குத் தேவைப்படும் இயற்பியல், விமானங்களை வடிவமைக்கும் அதே விஞ்ஞானம். காட் (இஅஈ) மென்பொருள் வைத்துக்கொண்டு இவற்றை டிசைன் செய்ய ஆரம்பித்ததில் இந்த ஸ்போர்ட்ஸ் எங்கேயோ போய்விட்டது. 1906ல் ஐம்பது மீட்டருக்கு ஈட்டி வீசினால் உலக ரெக்கார்ட். இப்போது நூறு மீட்டர்கூட சர்வ சாதாரணம். ஒரேயடியாக எதிர்ப் பக்க காலரியில் பாய்ந்து பார்வையாளர் யாரையாவது தீர்த்துக் கட்டிவிடப் போகிறதே என்று கவலையாக இருக்கிறது.
* ஒலிம்பிக்ஸ் ஆரம்பிப்பதற்கு முன் சம்பிரதாயமாக ஒரு தீவட்டியை எடுத்துக்கொண்டு நாடு நாடாக ஓட வருவார்களே, அதில் கூட ப்ரோபேன், ப்யூடேன் போன்ற திரவ எரிபொருள்கள், காற்று மழையில் அணையாமல் இருக்க தனிப்பட்ட பர்னர் அமைப்பு என்று சிக்கலான டெக்னாலஜி இருக்கிறது. தண்ணீருக்கு அடியிலும் இமயமலை உச்சியிலும் நின்று எரியும் கெமிக்கல் தீவட்டிகள் உண்டு. 1976 ஒலிம்பிக்ஸில் கிரேக்க நாட்டில் ஏற்றப்பட்ட தீவட்டியின் சக்தியை மின்சார அலைகளாக மாற்றி சாட்டிலைட் வழியாக கனடாவுக்கு அனுப்பி, அங்கே லேசர் வைத்து ஜோதியை மறுபடி ஏற்றினார்கள்.
* எதிராளியைவிட எப்படியாவது சில மில்லிசெகண்ட் அல்லது சில மில்லி மீட்டர் முந்திவிட வேண்டும் என்ற வெறியில் விளையாட்டு வீரர்களும் நம் அரசியல்வாதிகள் மாதிரி நிழலான செயல்களில் இறங்கிவிட்டார்கள். ஜீன் டோபிங் (ஞ்ங்ய்ங் க்ர்ல்ண்ய்ஞ்) என்பது, உடலின் தசைகளுக்குள் செயற்கை மரபீனிகளைப் புகுத்தி அவற்றை வலுவாக்கும் முறை. இந்த விளையாட்டெல்லாம் கடைசியில் கான்சரில் போய் முடிந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை; அந்த பத்து செகண்ட் போட்டியில் வாழ்நாளில் ஒரு முறை வென்றால் போதும்!
* ஆர்வக் கோளாறில் நம் ஊரிலும் ஒலிம்பிக்ஸை நடத்திப் பார்க்க வேண்டுமென்று யாருக்காவது தோன்றினால், ஒரு நடை கனடாவுக்குப் போய் விசாரித்துவிட்டு வரவும். 1976ல் மாண்ட்ரியால் நகரம் தன் சக்திக்கு மீறி கடன் வாங்கி ஒலிம்பிக்ஸை நடத்தியது. அடுத்த முப்பது வருடம் வயிற்றில் ஈரத் துணி போட்டுக் கொண்டு கடனை அடைக்க வேண்டியிருந்தது!
நன்றி : தினமணி