Friday, August 22, 2008

கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்?

ஔவை சொல்கிறாள்: "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே'. வங்கிகளில் கல்விக் கடன் வாங்குவதைப் பிச்சை என்று சொல்ல முடியாதுதான். ஆனால் மாணவர்களையும் பெற்றோர்களையும் பிச்சைக்காரர்களைப் போலத்தான் நடத்துகின்றன வங்கிகள்.
அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 8800 இடங்களும் சுயநிதிக் கல்லூரிகளில் 67500 இடங்களும் உள்ளன.
அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஆகிறது. ஆனால் சுயநிதி கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ. 75 ஆயிரம் தேவைப்படுகிறது. கல்விக்கடனைத் தேடி அலைபவர்களில் 90 சதவீதம் பேர் சுயநிதி கல்லூரிகளைத் தேர்வு செய்தவர்களே.
"ரூ. 4 லட்சம் வரை எந்தப் பிணையும் இல்லாமல் கல்விக் கடன் வழங்க வேண்டும்' என்பது மத்திய அரசின் நிபந்தனை. ஆனால் வங்கிகள் "காற்றில் பறக்கவிடும்' முதல் நிபந்தனை இதுதான்.
தொழிற்கல்வியை முடித்தவுடன் வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நிலையிலும்கூட, பிணை (ஸூரிடி) இல்லாமல் கல்விக்கடன் தர வங்கி மேலாளர்கள் எவரும் தயாராக இல்லை. எல்லாரும் முன்ஜாக்கிரதையுடன் இருக்கிறார்கள்.
வங்கிகள் கேட்கும் மற்ற "போனபைடு சர்டிபிகேட்', சம்பளச் சான்று போன்றவை கல்வித்துறையை வங்கிகள் புரிந்துகொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
போனபைடு சர்டிபிகேட் முதலாண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கும்போதுதான் கிடைக்கும். ஆனால் மாணவர்கள் அதற்கு முன்பாக ரூ.75 ஆயிரம் கட்ட வேண்டும். இதில் விடுதிக் கட்டணமும் சேர்ந்தால் குறைந்தது ரூ.1 லட்சமாக இருக்கும்.
வங்கிகள் கடன் தராத நிலையில், கந்துவட்டிக்கு கடன்வாங்கி கல்லூரியில் சேர்ந்துவிட்டு பின்னர் போனபைடு சர்டிபிகேட்டுடன் வங்கி வாசல்படியை மிதிக்க வேண்டும். கந்துவட்டி வாங்கி கல்லூரிக்குப் பணம் செலுத்திய கட்டண ரசீதுகளை ஏற்க மறுக்கின்றன வங்கிகள்.
அடுத்து சம்பளச் சான்றிதழ். மாத வருவாய் ரூ.12,000க்கு குறையாமல் இருந்தால் மட்டுமே கல்விக் கடன் வழங்க பரிசீலிக்கலாம் என்று வங்கிகள் தங்களுக்குள் ஒரு ரகசிய வரையறை வைத்துக்கொண்டுள்ளன.
மாதச்சம்பளம் ரூ.12,000க்கு இருக்க எல்லாரும் என்ன அரசு ஊழியர்களா? சாதாரண நிறுவனங்களில் மாதக்கூலியாகப் பணியாற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் பலர்.
சம்பளப் பதிவேட்டையே பார்த்திருக்காதவர்கள். சம்பளச் சான்று கிடைக்கவே வழியில்லை.
நிலைமை இப்படியாக இருக்கும்போது வங்கிகளின் அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்து கல்விக் கடன் பெறுவோர் யார் யார்? சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக இடஒதுக்கீட்டுக்கு சில "ல'கரங்களைக் கொடுத்துவிட்டு, கல்விக்கட்டணம் செலுத்தும் வசதி படைத்தோர் மட்டுமே!. இவர்களில் பலர் பணக்காரர்கள், பெரும்வியாபாரிகள், அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள்.
இவர்களுக்கு பிணை கையெழுத்துப் போட ஆட்கள் உண்டு. இவர்கள் கல்விக் கடன் பெறுவது பணம் இல்லாமையால் அல்ல. அரசு தரும் வரிச்சலுகையைப் பெறவும், தங்கள் சட்டவிரோதப் பணத்தை முறைப்படுத்திக்கொள்ளவும்தான்.
வங்கி அலுவலர்களுக்கு இவர்களைக் கண்டால் கொள்ளை மகிழ்ச்சி. ஏனென்றால் கல்விக்கடன் இலக்கை எட்ட முடிவதுடன் தங்களுக்குப் பிரச்னையும் வராது.
ஆனால், மிக நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் நடுத்தர வருவாய் பிரிவைச்சேர்ந்த மாணவன் என்றால் வங்கிகள் கடன் தராமல் இழுத்தடிக்கும்.
தொழிற்கல்வி பயிலும் அனைத்து மாணவனுக்கும் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் எந்த சான்று, பிணை இல்லாமல் கல்விக்கடன் தர முடியும். அதற்கு வங்கிகள் இஸ்லாமிய வங்கி நடைமுறைக்கு மாறியாக வேண்டும்குறைந்தபட்சம் கல்விக்கடனில் மட்டுமாகிலும்.
வட்டிக்குப் பணம் கொடுப்பதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஒருவரை முன்னேற்றுவதற்கு கடனுதவி அளிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது.
இந்தக் கடனுதவி வட்டியை எதிர்நோக்கியதாக இல்லாமல், லாபத்தில் பங்கு என்பதாக மாறுவதுதான் இஸ்லாமிய வங்கி முறையின் நுட்பம். இதை "முதரபா' அல்லது "லாபத்தில் பங்கிடுதல்' என்பதாக இஸ்லாமிய சட்டம் சொல்கிறது.
இஸ்லாமிய வங்கியில் தொழில் கடன் பெறுவோர், முதலில் தனது தொழில் திட்டத்தை, தனது திறமையை, சந்தை வாய்ப்புகளை வங்கியிடம் விவரிக்க வேண்டும்.
வங்கியின் தொழில் வல்லுநர் குழு இந்த புதிய தொழில்முயற்சியின் வெற்றிவாய்ப்பை ஆராயும். அவர்கள் இது முறையான, நஷ்டம் தராத தொழில்தான் என்று உறுதிகூறிய பிறகு கடன் கிடைக்கும். இந்த புதிய தொழிலில் வங்கி ஒரு பங்குதாரராக இருக்கும்.
தொழில் விருத்தியடைந்து, லாபம் பெருகும்போது, ஒரு பங்குதாரரை அவருக்கான தொகையைக் கொடுத்து வெட்டிவிடுவதைப்போல விலக்கிவிடலாம். நஷ்டம் வந்தால்? வங்கியின் வல்லுநர் குழுவின் கணிப்புகள் எந்த இடத்தில் தவறாகப் போனது என்பதை வங்கி ஆராயும். சரிசெய்யும் வாய்ப்பு இருந்தால் தானே களத்தில் இறங்கும். இல்லையானால், நஷ்டம் தொடங்கியபோது அத்தொழிலை நிறுத்திவிடும். கணிப்புகள் தவறானால் வல்லுநர் குழுவுக்குப் பெருத்த அவமானம் என்பதால், சரியான விதத்தில் கணிப்பார்கள்.
தொழில்கடனுக்குப் பொருந்தும் இந்த இஸ்ஸாமிய வங்கி நடைமுறை ஏன் தொழிற்கல்வி பயிலும் மாணவருக்குப் பொருந்தாது?
ஒரு மாணவரின் மதிப்பெண், அவரது அறிவுத்திறன், பேச்சுத்திறன், அவர் தேர்வு செய்துள்ள பாடப்பிரிவு, அதில் அவருக்கு உள்ள வேலைவாய்ப்பு அனைத்தையும் வங்கியின் வல்லுநர் குழு மதிப்பீடு செய்து, எந்தப் பிணையும் இல்லாமல் கல்விக் கடன் தர முடியும். லாபத்தில் பங்கீடு என்ற அதே முறையில், இவர்கள் சம்பாதிக்கத் தொடங்கியதும் இவர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு பகுதியை ஒப்பந்தப்படி பெறலாமே.
இதை செய்வதற்கு, ஒரு மாணவனை கணிக்கும் அறிவும் ஆற்றலும், துணிச்சலும் தேவை.
வாழ்க்கையில் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் மாதம்தோறும் சம்பளம் மட்டும் கைநிறைய எதிர்பார்க்கும் அதிகாரிகளே நிறைந்து வழியும் வங்கிகளில் ரிஸ்க் எடுப்பவர்கள் சிலர் மட்டுமே.
அதனால்,
பாத்திரம் அறிந்து பிச்சைபோடும் திறன் இல்லாத வங்கிகள் முன்பாக மாணவரும் பெற்றோரும் பிச்சைக்காரர்களாக நிற்கிறார்கள் கைகளை ஏந்தியபடி!
ஏழை சொல் அம்பலம் ஏறாது எனும்போது அதிகாரிகளிடம் செல்லுமா என்ன?
இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி

சிறு தொழிலுக்கு உதவிக்கரம்


சிறு தொழிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. சமீப காலம் வரை, இந்தியாவின் ஒட்டுமொத்தத் தொழில் உற்பத்தியில், கிட்டத்தட்ட 40 சதவீதம் சிறு தொழில்களின் பங்களிப்பே. அதேபோல் ஏற்றுமதியில் இதன் பங்கு 40 முதல் 45 சதவீதம் ஆகும். முக்கியமாக வேலைவாய்ப்புகள் அளிப்பதில் சிறு தொழில்களின் பங்களிப்பு 40 சதவீதத்துக்குக் குறையாமல் இருந்து வந்தது.
வேலைவாய்ப்புகள் தொடர்பாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ஒரு தொழில் முனைவோர் ரூ.10 லட்சம் வங்கிக்கடன் வாங்கி சிறு தொழில் தொடங்கினால் அதன் மூலம் 10 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி என்ற நிலை இருந்தது. தற்போது, நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பெரிய அளவில் முதல் போட்டு தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் சராசரியாக ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.
சிறு தொழில்களுக்கு இருந்த சிறப்புகள் பழம் கதையாகி வருகின்றன. சமீபத்தில் வெளிவந்துள்ள இந்திய தொழில் சங்கங்களின் சம்மேளனம் (Assocham) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை கவலை அளிக்கிறது.
ஏற்கெனவே நலிவுற்று இருந்த சிறு தொழில்கள் மேலும் சரிந்துள்ளதை அது படம் பிடித்துக் காட்டுகிறது. ஒட்டு மொத்த உற்பத்தியில், சிறு தொழில்களின் பங்கு 10 சதவீதம் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் 7 சதவீதம் குறைந்து விட்டது என அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதற்குக் காரணம், பெரிய தொழில் கூடங்களும் நடுத்தர தொழில் கூடங்களும் தங்களது உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருள்களின் தேவைகளை மலிவான இறக்குமதியின் மூலம் பூர்த்தி செய்து கொள்கின்றன என்பதுதான்.
அதிலும் குறிப்பாக தற்போது தலை தூக்கியுள்ள பொருளாதார மந்தநிலையின் காரணமாக, சிறு தொழில் நிறுவனங்களால் பெரும் மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் தேவைகளை சகாயமான விலையில் வழங்க முடியவில்லை. வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து வரும் சூழலில், சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்கூடங்களை நவீனமாக்கிக் கொள்ள இயலவில்லை. தொழில் நுட்பத்தை மேம்படுத்திக்கொள்ள தேவையான நிதி ஆதாரம் இல்லை. இதனால், சிறு தொழில்கள், அதிகரித்துவரும் போட்டிகளை எதிர்கொள்ளும் சக்தியை இழந்துவிட்டன.
""அசோசெம்'' தலைவர் சஜ்ஜன் ஜின்டால் கூற்றின் படி, கடந்த நிதி ஆண்டு இறுதியில் 44 லட்சமாக இருந்த சிறு தொழில் நிறுவனங்கள் தற்போது 40 லட்சமாகக் குறைந்து விட்டன. இத்துறையில் 2 கோடியே 38 லட்சம் பேர் பணியாற்றி வந்தார்கள். அவர்களில் 13 லட்சம் பேர் வேலை இழந்து விட்டனர். இவ்வளவும் கடந்த 6 மாதங்களில் நிகழ்ந்துள்ளன.
தொழிற் சங்கங்களின் சம்மேளனம் தரும் தகவல்கள், பிரச்னையின் விளிம்பை மட்டுமே தொட்டுள்ளன. முழுமையான பிரச்னை இன்னும் கடுமையானது என்பதே உண்மை.
200102ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் சிறு தொழில் பிரிவுகளில் மூன்றில் ஒரு பங்கு நலிவடைந்த நிலையில் இருக்கின்றன. இவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மூடப்படும் நிலையை எட்டிவிட்டன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், பஞ்சாப், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகியவை இதில் முக்கிய இடம் வகிக்கின்றன.
1970 முதல் 1990 களின் தொடக்கம் வரை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் சிறு தொழில்களுக்கு கடன் வழங்குவதை முன் உரிமை அடிப்படையில் செய்தன. 1992இல் இருந்து பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் என்ற பெயரில் வங்கிகள் பெரிய தொழில்களுக்கு கடன் வழங்குவதில் காட்டிய அக்கறையை சிறு தொழில்களுக்கு கடன் வழங்குவதில் காட்டவில்லை. காரணம் வங்கிகளின் லாப நோக்கத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. சிறு தொழில் பிரிவுகளுக்கு முன்னுரிமை கடன் வழங்கும் மரபு பின்னுக்குத் தள்ளப்பட்டது.
சிறு தொழில்களுக்கு வழங்கும் கடன் வாராக்கடனாக மாறிவிடுமோ என்று வங்கிகள் அஞ்சின. பின்னர் வந்த நாயக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் கடன் உத்திரவாத நிதி (Credit Guarantee Fund) போன்ற திட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
உலகமயமாக்கல் விளைவாக, இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அந்நியநாட்டுப் பொருள்கள் மலிவு விலையில் இந்திய சந்தையில் குவிக்கப்பட்டன.
இதனால் சிறு தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. அவற்றின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதில் முன் எப்போதும் இல்லாத அளவு கடும் போட்டி ஏற்பட்டது.
அதே நேரம், எண்ணற்ற சட்டதிட்டங்கள், ஆய்வு அதிகாரிகளின் கெடுபிடி ஆகியவை சிறு தொழில் நிறுவனங்களின் குரல்வளையை சுற்றி வளைக்கின்றன. இதனால், சிறு தொழில்கள் திணறுகின்றன.
மீண்டும் சிறு தொழில்கள் புத்துயிர் பெறவேண்டுமானால் பாரத ரிசர்வ் வங்கி, மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்.
சிறு தொழில்கள் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் கடனுதவியை உரிய நேரத்தில், போதிய அளவில் வங்கிகள் அளிப்பதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை வகுத்து செயல்படுத்த வேண்டும். வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது விவசாயம், சிறு தொழில் ஆகிய இரண்டும் முன்னுரிமை பெற்ற பிரிவுகளாகக் கருதப்படும் என நாடாளுமன்றத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்படி வங்கிகள் மீண்டும் செயல்பட்டாலே போதுமானது. வங்கிக் கடன்கள் மூலம்தான் சிறு தொழில்களுக்கு புதிய ரத்தம் பாய்ச்ச முடியும்.
மின்சாரம், தண்ணீர் ஆகிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதற்கு மாநில அரசுகள் முன்னுரிமை வழங்கவேண்டும். ஆய்வு அதிகாரிகளின் இடைவிடாத கெடுபிடிகள் குறைக்கப்பட வேண்டும்.
உற்பத்தியாகும் பொருள்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில், சர்வதேச தரத்துக்கு உற்பத்தி முறையையும், சாதனங்களையும் மாற்றிக்கொள்ள சிறு தொழில்கள் முன் வரவேண்டும். இதற்கு உதவியாக, ஜவுளித்துறைக்கு ஏற்கெனவே இருப்பதுபோல், தொழில்நுட்ப மேம்பாடு நிதி (Credit Guarantee Fund) போன்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு சிறு தொழில்களுக்கும் உருவாக்கலாம். இதன் மூலம் ஏற்றுமதிக்கும் ஊக்குவிப்பு தரமுடியும்.
சிறு தொழில்கள் நவீன இயந்திரங்கள், தளவாடங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தால், இறக்குமதி தீர்வையை மத்திய அரசு குறைத்து இறக்குமதி செய்ய உதவ வேண்டும்.
சிறு தொழில் உற்பத்திப் பொருள்களை மத்திய, மாநில அரசுத் துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும் முடிந்த அளவு வாங்குவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, அவை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். ஏற்கெனவே இருந்த இது போன்ற நடைமுறைகள் காலப்போக்கில் கைவிடப்பட்டன. பெரிய நிறுவனங்கள், சிறு தொழில் பிரிவுகளிலிருந்து கொள்முதல் செய்திடும் பொருள்களுக்கான பணத்தை பட்டுவாடா செய்வதற்கு பல மாதங்கள் ஆகின்றன. பொருள்களுக்கான தொகை குறிப்பிட்ட காலவரையறைக்குள் பட்டுவாடா செய்யப்படவேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே இதுபோன்ற நியதிகள் இருந்தன.
உதாரணமாக பெரிய தொழில் நிறுவனங்கள் அரசு வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதற்கு விண்ணப்பிக்கையில், மேற்கூறிய இனத்தில் நிலுவை ஏதும் இல்லை என உறுதி அளிக்க வேண்டும்.
ஆனால் இந்த நியதிகள் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. செயலளவில் நீர்த்துப்போய்விட்டன.
இதுபோல் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய விரிவான சிறுதொழில் கொள்கையை வகுத்து அதனை பாரத ரிசர்வ் வங்கி, மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு ஆகியவை முனைப்புடனும் இதய சுத்தியுடனும் செயல்படுத்தினால்தான் சிறு தொழில்கள் மீண்டும் தழைக்க முடியும்.

எஸ். கோபாலகிருஷ்ணன்
(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர்சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

நன்றி : தினமணி