Sunday, August 31, 2008

இலங்கையில் வ.உ.சி.

1906அக்டோபர் 16ல் தூத்துக்குடியில் வ.உ.சி.யின் பெருமுயற்சியால் ""சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி லிமிடெட்'' எனும் பெயரில் சுதேசிக் கப்பல் கம்பெனி அமைக்கப்பட்டது.
தமது அருமைச் சீடர் சிதம்பரம் பிள்ளையின் புதிய சுதேசிய முயற்சியை அறிந்து திலகர் பாராட்டியது, சென்னை "சுதேசமித்திரன்' இதழில் (24101906) பின்வருமாறு செய்தியாக வெளியிடப்பட்டது.
""திருநெல்வேலியில் உத்தம தேசாபிமானியாகிய சிதம்பரம்பிள்ளை, தூத்துக்குடிக்கும் சிலோனுக்கும் சுதேசிக் கப்பல் போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது சுதேசியத்திற்கு அவர் செய்திருக்கும் பெரும் பணிவிடையாகும்''.
2782008 "தினமணி'யில் "தூத்துக்குடியில் செப்டம்பர் 5ல் சுதேசிக் கப்பல் நூற்றாண்டு விழா' எனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
2006ல் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய "நூற்றாண்டு விழா'வை 2008லாவது நடத்த முற்பட்டவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் பெரும்பாலோர் அறிந்திராத வ.உ.சி.யின் இலங்கைப் பயணம் பற்றிய செய்தி அறியப்பட வேண்டியதாகும்.
சுதேசி நாவாய்ச் சங்கத்திற்கு ஆதரவு திரட்ட வ.உ.சி. மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுள் ஒன்று, இலங்கைப் பயணம் ஆகும்.
வ.உ.சி. இலங்கை, கொழும்பு நகரில் பேட்டா எனும் பகுதியில் வாழ்ந்த தமிழ் வர்த்தகர்களின் ஆதரவைத் திரட்டச் சென்றார்.
கொழும்பு நகரில் இருந்து அக்காலத்தில் வெளிவந்த "தி சிலோன் அப்சர்வர்' எனும் மாலை நாளிதழில் ஏப்ரல் 6 (வெள்ளிக்கிழமை), 1906 இதழில் ""இலங்கையில் சுதேசி இயக்கம் கொழும்பு தூத்துக்குடியிடையே புதிய நீராவிக்கப்பல்'' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
இந்தச் செய்தியில் வ.உ.சி.யை பேட்டி கண்டு அவருடைய கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் சுருக்கம் வருமாறு.
""இந்தியாவில் சில காலத்திற்கு முன்பு தொடங்கிய சுதேசிய இயக்கம் வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 16க்குப் பிறகு விறுவிறுப்பு பெற்றது.
இதனுடைய பிரதிநிதியாக தூத்துக்குடி வழக்கறிஞர் (பிளீடர்) நம்மிடையே வந்துள்ளார். இவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் புரியும் செட்டிகளுக்குமிடையே அவர் ஆங்கிலம் அறிந்தவர் என்பதைத் தவிர வேறுபாடு ஏதும் இல்லை.
அப்சர்வரின் பிரதிநிதியொருவர் இன்று காலை பேட்டாவில் தங்கியிருந்த மிஸ்டர் சிதம்பரம் பிள்ளையை சில நிமிடங்கள் சந்தித்து சுதேசி இயக்கம் தொடர்பாக உரையாடினார்.
ஐரோப்பிய வர்த்தகத்தை பகிஷ்கரிப்பதே இந்த இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள் என்றும், "அந்நிய வர்த்தகம்' என்றால் "பிரிட்டிஷ் வர்த்தகமும்' அடங்கும் என்று மிஸ்டர் பிள்ளை கூறினார்.
இந்தியத் தொழில்களை மேம்படுத்தவே இந்த இயக்கம் முக்கியமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலோர் ஆதரவளித்துள்ளனர். இப்பொழுது இலங்கையின் ஆதரவைப் பெற விரும்புகின்றோம்.
இங்கு இயக்கத்தின் கொள்கைகளை விளக்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் போவதாகவும், முக்கியமானவர்களைச் சந்திக்கப் போவதாகவும் மிஸ்டர் பிள்ளை தெரிவித்தார்.
கொழும்பு தூத்துக்குடிக்கு இடையே நீராவிக்கப்பல் 20ம் தேதியில் இருந்து நாள்தோறும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிது காலம் கொழும்பு தூத்துக்குடிக்கு இடையே நிகழும் சேவை, பிறகு கடற்கரையைச் சுற்றி நிகழும் என்றும் மிஸ்டர் பிள்ளை கூறினார்.
புதிய கப்பல் சேவையானது, தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து தென்னிந்தியாவுக்கும் கூலிகளை ஏற்றிச் செல்லாது என்பதை சுதேசிய இயக்கத்தின் பிரதிநிதியிடமிருந்து அறிந்தோம்.
இந்த விளையாட்டை பி.ஐ. கம்பெனி சில காலத்திற்கு முன்பு தொடங்கியது என்றும், கூலிகளைக் கட்டணமின்றி இலவசமாக ஏற்றிக்கொண்டும், உடுக்க சிறிதளவு துணியும் கொடுத்தது என்றும் அவர் கூறினார்.''
அதிகார வருக்கத்தின் பக்கபலத்துடன் தூத்துக்குடி கொழும்பு கப்பல் போக்குவரத்தை நடத்திய "பி.ஐ.எஸ்.என்.'' எனும் பிரிட்டிஷ் கம்பெனியை எதிர்த்து வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனி இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
உதயதாரகை
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து 1841 முதல் அமெரிக்கன் மிஷன் சார்பில் வெளிவந்து கொண்டிருந்த, "மார்னிங்ஸ்டார் உதயதாரகை' எனும் நாளிதழிலும் வ.உ.சி.யின் இலங்கை விஜயம் குறித்து எழுதப்பட்டது.
ஏப்ரல் 12 (வியாழக்கிழமை), 1906ல் வெளிவந்த ""சுதேசாபிமானக் கிளர்ச்சி தி ஸ்வதேசி மூவ்மெண்ட்'' எனும் தலையங்கத்தில் வ.உ.சி. பற்றியும், "தி சிலோன் அப்சர்வர்' செய்தியும் இடம் பெற்றுள்ளன.
இலங்கையிலும் சுதேச தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று "உதயதாரகை' எழுதியது. வ.உ.சி. பற்றிய செய்தி மட்டும் இங்கு பின்வருமாறு எடுத்தாளப்படுகின்றது.
""வங்காளத்தில் தொடங்கிய இவ்வெழுச்சி இந்தியா முழுவதிலும் பரந்து இப்போது இலங்கையிலும் தாவியிருக்கின்றது... இலங்கையிலும் இவ்வாறு உபந்நியாசங்கள் செய்வதாய் தூத்துக்குடி வாசராகிய மெஸ் சிதம்பரம் பிள்ளை என்னுமொருவர் கொழும்பு வந்திருக்கின்றனர்.
""ஒப்சேவர்' பத்திரிகைக் கடிதரொருவர் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவர், "சுதேச கைத்தொழில் முயற்சிகளைத் தைரியப்படுத்தி பிற நாட்டுப் பொருள்களின் வரவைக் குறைப்பது மேற்குறித்த எழுச்சியின் நோக்கமென்றுங்..... கூறினார்....
தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையில் பிரித்தானிய கொம்பனிக் கப்பல்களுக்கெதிராய், பம்பாய்ப் பட்டணத்திலுள்ள "ஈசாயீ' கொம்பனியாரின் கப்பல்களோடும்படி செய்வதும் மேற்குறித்த சங்கத்தவர்களின் தீர்மானமென மெஸ். சிதம்பரப்பிள்ளை கூறுகின்றனர். இந்த பம்பாய்க் கொம்பனியாரின் கீழ் 50 கப்பல்கள் அங்கு மிங்குமோடி வியாபாரப் பொருள்களையும் பிரயாணிகளையுமேற்றித் திரிகின்றன.
தொடக்கத்தில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையிலோடும். சில நாள்களாய் வேறு கப்பல்களும் சேர்ந்து இலங்கையைச் சுற்றியும், இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலும் ஓடித் திரியும். இந்த மாதம் 20ம் தேதி முதல் இக் கப்பல்கள் ஓடத் தொடங்குமாம்!
வ.உ.சி. யின் இலங்கைப் பயணச் சுதேச இயக்கச் சொற்பொழிவுகள் அங்கிருந்த இதழ்களிலும், தமிழக இதழ்களிலும் பதிவாகியுள்ளனவா? என்பதும் கண்டறியப்பட வேண்டியதாகும்.
பெ.சு. மணி
(கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர்)
நன்றி ; தினமணி

இருண்ட காலத்துக்கான முன்னோட்டம்

கடந்த சில நாள்களாகவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரப்பூர்வ மின்வெட்டுடன் கூடுதலாக முன்னறிவிப்பற்ற மின்வெட்டையும் செயல்படுத்தி வருகிறது மின் வாரியம்.
பெரும்பாலும் நள்ளிரவிலும் அதிகாலையிலும் மேற்கொள்ளப்படும் இந்த மின்வெட்டால், மின் பயன்பாடற்ற கடந்த நூற்றாண்டு வாழ்க்கையை நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.
இந்நிலையில், நாமக்கல்லில் திங்கள்கிழமை ஒரு விழாவில் பேசிய மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, ""அரசு உத்தரவுக்கு மாறாக, கூடுதல் நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
ஆனால், அமைச்சர் இப்படி பேசிய அடுத்த 24 மணி நேரத்துக்குள் ""எந்த நேரமும் மின்தடை ஏற்படலாம்; மின்தடை ஏற்படும் நேரத்தைக் கணிக்க முடியாது'' என அறிவித்திருக்கிறது மின் வாரியம்.
ஏதோ அரசுக்குத் தெரியாமல் அலுவலர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைபோல் மின்தடையைச் சித்தரிக்கும் அமைச்சரின் பேச்சும் அதைத் தொடர்ந்து வந்திருக்கும் தலைகீழான இந்த அறிவிப்பும் கேலிக்குரியவை!
தமிழகத்தில் 2.95 கோடி மின் இணைப்புகள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் 6 லட்சம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
இதற்கேற்ப மின் தேவையும் ஆண்டுதோறும் 500 மெகாவாட் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
மாநிலத்தின் மின் தேவை 2005 06ல் 8,301 மெகாவாட்டாக இருந்தது. 2008 09ல் அது 9,576 மெகாவாட்டாக அதிகரித்திருக்கும் நிலையில், உற்பத்தி அதிகரிக்கப்படாததுடன் குறைந்தும் இருப்பதால் கடந்த சில மாதங்களாகவே 1,000 மெகாவாட் பற்றாக்குறை நீடித்து வருகிறது.
தென்னிந்தியாவிலேயே அதிக அளவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலகட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தடையற்ற மின் விநியோகம் என்ற உறுதிமொழியுடன் தொழில் நிறுவனங்களை வரவேற்கும் அரசு, அவற்றின் மின் தேவையைக் கணிக்காததும் அதற்கேற்ப மின் உற்பத்தியைப் பெருக்காததும் யாருடைய தவறு?
பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய அரசிடம் நாள்தோறும் 300 மெகாவாட் கேட்ட அரசு, முதல்கட்டமாக அளிக்கப்பட்ட 100 மெகாவாட்டுடன் பரிபூரண திருப்தியடைந்துவிட்டது.
1,000 மெகாவாட் தேவைப்படும் இடத்தில் 100 மெகாவாட் எந்த மூலை?
மின்தடை ஓர் அரசியல் பிரச்னையாக உருவெடுத்ததும் செய்யூர், மரக்காணம் அல்லது கடலூரில் இரு அல்ட்ரா மெகா மின் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகக் கூறியது அரசு. ஆனால், "ஜயங்கொண்டம் மின் திட்ட'மே 15 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்துக்கொண்டிருக்கும்போது இந்தப் புதிய திட்டங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எந்தக் காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை.
கடந்த இரு ஆண்டுகளில் மின் உற்பத்திக்கென எந்த உருப்படியான திட்டத்தையும் மின் துறை மேற்கொள்ளவில்லை. கைவசம் உள்ள திட்டங்களும் 2011க்குள் நிறைவடைய வாய்ப்பில்லை.
அரதப் பழசான சாதனங்களுடனும் நடைமுறைகளோடும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மின் வாரியத்தை லாபத்தில் இயங்கச் செய்யும் நடவடிக்கைகளும் இல்லை.
இவையெல்லாமே மின் துறை தோல்வியின் அப்பட்டமான வெளிப்பாடுகள். ஆனால், அதற்கான தண்டனையையோ மக்கள் மீது சுமத்திக்கொண்டிருக்கிறது அரசு.
ஏதோ இன்றோடு முடியப்போவதில்லை இந்தப் பிரச்னை. அடுத்த ஆண்டில் இப்பற்றாக்குறை 1,280 மெகாவாட்டாகவும் அதற்கடுத்த ஆண்டில் 1,860 மெகாவாட்டாகவும் அதிகரிக்கும் என மின் வாரியத்தினரே தெரிவிக்கின்றனர்.
இப்போதே நிலைமை இப்படியென்றால் அப்போது எப்படியிருக்கும்? நினைத்தாலே ஒரே இருட்டாக இருக்கிறது!
இந்தக் கொடுமையெல்லாம் கொசுக்களுக்கோ போர்வைகளுக்கோ புரிகிறதா என்ன? போர்த்தினால் வியர்க்கிறது; விலக்கினால் கடிக்கிறது!
சமஸ்
நன்றி : தினமணி