Thursday, September 4, 2008

யாருக்காக ஒரு ரூபாய் அரிசி?

கிலோ அரிசி ஒரு ரூபாய் என்பதைக் கேட்டவுடன் மனதுக்கு இனிமை தந்தாலும், அதன் முழுப் பயன் யாருக்குப் போய் சேரும் என்பதை ஆராய்ந்து பார்த்தால், முடிவு கசப்பாகவே அமையும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
1967ல் ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்க வேண்டும் என்று அண்ணாவால் தொடங்கப்பட்ட திட்டம்தான் ""படிஅரிசித் திட்டம்''. 41 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கண்ட கனவுத் திட்டமான இதனை, அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி, செப்.15 முதல் ரேஷன் கடைகளில் செயல்படுத்த உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
29 ஆயிரத்து 760 கடைகள் மூலம் 1 கோடியே 86 லட்சம் பேருக்கு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ வீதம் 20 கிலோ அரிசி வழங்குவதன் மூலம், அரசுக்கு 400 கோடிக்கு மேல் கூடுதல் செலவாகும் என்றும் அறிவித்துள்ளார்.
எத்தனையோ பிரச்னைகளைத் தீர்க்க பல்வேறு கோரிக்கைகள் பல்வேறு அமைப்புகள் வைத்தும் கண்டுகொள்ளாத அரசு, திடீரென ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குவதாக அறிவித்துள்ளது வியப்பைத் தந்துள்ளது.
இப்போது அதற்கு ஏன் இவ்வளவு அவசரம். நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் திசை திருப்பும் முயற்சியோ என்றே தோன்றுகிறது.
நாட்டில் எந்த ஒரு பிரச்னையும் பெரிய அளவில் தலைவிரித்தாடும்போது, அந்த பிரச்னையைத் தீர்க்க முடியாத அரசு, மாறாக அதை விட்டு விட்டு, வேறு ஒரு புறம் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கும்.
தற்போது தமிழகத்தில் மிக முக்கிய பிரச்னை மின்வெட்டு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு. விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு. அண்டை மாநிலங்களுக்கு மணல்கடத்தல்.
அதோடு, நெருங்கி வரும் மக்களவைத் தேர்தல், விலகிச் செல்லும் கூட்டணி கட்சிகள் என பல பிரச்னைகள்.
ஏற்கெனவே ரேஷன் அரிசி அண்டை மாநிலங்களுக்கு அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பினால் அரிசி கடத்தல் மேலும் அதிகமாகுமே தவிர, அடித்தட்டு மக்களுக்கு எந்தப் பயனும் தராது.
மீனை தானமாக தருவதைவிட, மீன் பிடிக்க கற்றுத் தருவதே மேல் என்பது முதுமொழி.
அதுதான் உண்மை. உழைப்பில் சிறந்து விளங்குவோர் உள்ள தமிழகத்தில், குறிப்பாக விவசாயத்தில் அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து வாங்கி உற்பத்தி செலவை விட குறைவாக ரேஷன் கடையிலே தரும்போது, அதனைப் பயன் படுத்தும் பயனாளிக்கு அதன் அருமை தெரியாமல் போய்விடும்.
அதோடு அடுத்தாற்போல் யார் இதை விட குறைவான விலை அறிவிப்பார் என்ற எண்ணமும் தோன்றும். இதனால் அரசிடம் இருந்து ஓர் எதிர்பார்ப்பில் இருப்போர் எண்ணிக்கை கூடும். உழைக்க வேண்டிய அவர்களை சோம்பேறியாக்கிவிடும்.
மாறாக அரசு தொழில் வளத்தைப் பெருக்கி தந்தால், ஒரு ரூபாய்க்கு அரிசி தரவேண்டியதில்லை. அவர்களே கிலோ அரிசி ரூ.25 க்கு என்றாலும் கூட வாங்கும் சக்தியைப் பெற்றுக் கொள்வார்கள்.
இது ஒருபுறம் இருக்கட்டும், ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் நபர்களிடம் 2 ரூபாய்க்கு வாங்கி, 5 ரூபாய்க்கு விற்கின்றார். அதை மற்றொருவர் 8 ரூபாய்க்கு விற்கிறார். அங்கிருந்து கேரளத்திற்கு கடத்தப்பட்டு அங்கு 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் இவ்வாறு சுரண்டப்பட்டு, ரயில், பஸ்கள், லாரிகள் மூலம் கேரளத்திற்கு கடத்தப்படுகிறது.
ரயில்களின் கழிவறையில் கூட அரிசிப் பைகள் கிடப்பதுண்டு. இது அரசு அதிகாரிகளுக்குத் தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. பெயரளவுக்கு எங்கோ சில பைகளை பறிமுதல் செய்து, பத்திரிகைகளில் விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக அரிசி கைப்பற்றப்படும்போது கடத்தியவர் கண்டுபிடிக்கப்படமாட்டார். இதுவே தொன்று தொட்டு நடந்து வருகிறது.
தற்போது அரசு அறிவித்துள்ள ஒரு ரூபாய் அரிசித் திட்டம் மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறதோ இல்லையோ, இந்த அரிசி கடத்தல் காரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.
இதற்குத் தீர்வு என்ன. அரசு என்பது, ஏற்கனவே கூறியது போல, மீன் பிடிக்க கற்றுத்தரத்தான் வேண்டுமே யொழிய மீனை கொடுப்பது அழகல்ல. இந்த ஒரு ரூபாய் திட்டம் என்பது, இலவசத் திட்டம் போன்றதுதான். ஏனென்றால் கிராமங்களில் கூட டீ, காபி 2 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அரசு இவ்வாறு மக்களைத் திசைத் திருப்பும் நடவடிக்கையை விட்டுவிட்டு, மின்தடையை நீக்க வழி என்ன, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வழி என்ன, வேலைவாய்ப்பைப் பெருக்க வழி என்ன, தனிமனித வருமான உயர்வுக்கு வழி என்ன என்பதை ஆராய்ந்து செயல்பட்டாலே, பொதுமக்களின் பொருளாதாரம் பெருகும்.
அதைச் செய்ய அரசு முன் வரவேண்டும். அதைச் செய்தால் கூட்டணி கட்சிகள் பிரிந்தாலும், மக்களின் கூட்டணி உங்களுக்கு வலு சேர்க்கும்.
வை. இராமச்சந்திரன்
நன்றி : தினமணி

சிங்காரச் சென்னையின் உத்தபுரம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வடசென்னையில், வியாசர் பெருமானின் பெயர் தாங்கியுள்ள பகுதியில் வசிக்கும் இளைஞர்களுடான கலந்துரையாடலின்போது, வெளிப்பட்ட ஒரு கருத்து, நெஞ்சில் முள்ளாய்த் தைத்தது. அங்குள்ள படித்த இளைஞர்கள், சென்னையில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, வியாசர்பாடி என்று குறிப்பிடாமல், சென்னை என்றே தங்கள் முகவரியைக் குறிப்பிடுவார்களாம். நேர்முகத் தேர்வின்போதும், தாங்கள் வசிக்கும் பகுதியை கூடிய மட்டும் நேரடியாகக் குறிப்பிட மாட்டார்களாம்.
வியாசர்பாடி என்று குறிப்பிட்டால் தரமான வேலை கிடைக்காமல் போய்விடும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையில் இன்றும் அப்பகுதி படித்த இளைஞர்கள் உழல்கிறார்கள்.
வியாசர்பாடி, கொடுங்கையூர், காசிமேடு என்றாலே ரெளடிகள், சமூக விரோதிகள், குடிகாரர்கள் என்ற தவறான ஒரு பொதுக்கருத்து நிலவுவதே காரணம்.
தமிழ்நாட்டின் பெரிய திரைகளிலும், சின்னத்திரைகளிலும் ஓட்டுவதற்கு கதைகளுக்கு வேண்டுமானால் பஞ்சமிருக்கலாம். ஆனால், கதைகளுக்கு வேண்டிய வில்லன்கள் ராயபுரத்திலோ அல்லது காசிமேட்டிலோ உலவுவார்கள்.
படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு பட்டதாரி தென்சென்னையில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரிக்கு முதுநிலைப் பட்டத்திற்கு விண்ணப்பித்தார்.
நேர்முகத் தேர்வின்போது, தான் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள கல்லூரியில் இளநிலைப் பட்டம் முடித்து வந்துள்ளேன் என்று சொன்ன மாத்திரமே, இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று முதிர்ந்த ஒரு கல்வியாளரால் விரட்டியடிக்கப்பட்டாராம்.
சுகாதாரக் கேடு, சாராயம், கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டி, வெட்டுக்குத்து, ஓட்டு வங்கி அரசியல் ஆகியவற்றிற்கு நடுவில் வடசென்னை மக்கள் உழன்றாலும், அதற்கெல்லாம் காரணம், அங்குள்ள சாமானிய உழைப்பாளிகளின் அறியாமையும், அடுத்தடுத்து வந்த அரசுகளின் மாற்றாந்தாய் மனப்பான்மையும்தான்.
உடுத்திய கந்தல்துணி வியர்வையில் எப்பொழுதும் நனைந்தே இருக்குமளவிற்கு மிகக் கடுமையான உழைப்பாளிகளையும், மீனவர்களையும், துறைமுகம், எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றைச் சார்ந்த அமைப்பு சாரா ஒப்பந்தத் தொழிலாளிகளையும் அதிக அளவில் வடசென்னை கொண்டுள்ளதால், தென்சென்னையின் நடுத்தர வர்க்க, மேல்தட்டு வர்க்க நுகர்வுக் கலாசாரம் அங்கு இல்லை.
ஆதலால், அரசுக்குக் கிடைப்பது அவர்களின் உடல் உழைப்பும், சுலபமான ஓட்டுகளுமே தவிர, காந்தி நோட்டுகள் (மறைமுக, நேர்முக வரிகள்) அல்லவே. ஆதலால், புனிதமான உடல் உழைப்பிற்கு மதிப்பில்லாமை நம் சமுதாயத்தில் புரையோடிப் போயிருப்பதன் விளைவாக, அங்கு அரசுகளின் முதலீடுகளும் குறைந்த அளவே.
தென்சென்னையின் நுகர்வுக்கு ஈடு கொடுக்கும் சாலைகளும், ஐந்து நட்சத்திர விடுதிகளும், தரமான பள்ளிகளும், கல்லூரிகளும் அங்கு கிடையாது. ஆனால், குடிசைப்பகுதிகளில் தென்படுவது, திறந்தவெளி சாக்கடைகளும், குப்பைமேடுகளும் அவற்றின் மேல் கும்மாளமடிக்கும் குழந்தைகளும், பன்றிகளும் தெருநாய்களும்தான்.
கொடுங்கையூரிலிருந்து கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை வரை 200 ஏக்கருக்கும் மேல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே வருகிறது. குப்பை கொட்டும் வளாகம், தொடர்ச்சியாக சிந்திய வண்ணம் வரும் லாரிகள் கொட்டும், மக்கும், மக்காத குப்பைகள் ஒரு பக்கம், மருத்துவக் கழிவுகள் மறுபக்கம் என பல்வேறு வகையான குப்பைகள் கலந்து கட்டி கவிழ்க்கப்படுகின்றன.
பல்வேறு ஆலைகளிலிருந்து வெளியேறும் விதவிதமான புகை, டன் கணக்கில் டயர்களையும் குப்பைகளையும் எரிப்பதால் ஏற்படும் புகை என்று வடசென்னை மக்களுக்கு தினமும் போகிப் பண்டிகைதான். ஆதலால், அங்குள்ள மக்கள் மூச்சைப் பிடிப்பதையும், விடுவதையும், பிராணாயாமம் போன்று கைவந்த கலையாக்கிக் கொண்டுள்ளார்கள்.
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்குப் போனால், தொற்று நோய் வருவது நிச்சயமாகிவிடும். குழந்தைகள் முதல் முதியோர் வரை அங்குள்ள மக்களுக்கு, பருவம் தவறாமல் கிடைப்பது, மலேரியா, சிக்குன் குனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்கள்தான்.
தொடக்கப்பள்ளி முதல் கல்லூரிகள்வரை தரமான கல்வி வசதி, சுகாதார வசதிகள், கட்டமைப்பு வசதிகள், தனிமனித வருமானம் போதிய அளவில் இல்லாமையால், கணிசமான மாணவ, மாணவிகள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.
பள்ளிப்படிப்பை முடித்த சில இளைஞர்கள் ஐ.டி.ஐ. போன்ற தொழிற்கல்வி படிப்புகளைத் தொடருவதும் பெரும்பாலான இளைஞர்கள் அமைப்பு சாரா வேலைகளுக்குப் போவதுமே இன்றைக்கும் நிதர்சனம்.
வடசென்னையில் தெருவிற்கு தெரு திறந்து விடப்பட்டுள்ள, "டாஸ்மாக்' வியாபாரம் ஒருபுறமும், கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்கள் மறுபுறமும், ஆந்திரத்திலிருந்து இறங்கும் பாக்கெட் சரக்குகள் மற்றொரு புறமுமாக பேய், பிசாசு, அசுரன்கள் போல, பல குடும்பங்களை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கின்றன.
சஞ்சய் சுப்பிரமணியன் முதல், ஒயிலாட்டம் வரை கலைநுணுக்கத்துடன் ரசிக்கும் பெருமக்கள் அங்கு இல்லை என்று நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனங்கள் நினைத்துவிட்டன போலும்.
சிங்காரச் சென்னைக்கு வேண்டிய செம்மொழி மையம், தகவல் தொழில்நுட்ப வளாகங்கள், உலகத்தரத்தில் நூலகம், துணை நகரங்கள் என்று சென்னையின் செழுமைப் பகுதிகள் நீண்டு கொண்டே போனாலும், அதிகார மையங்களுக்கு அருகில் கூட வர முடியாத இளித்த வாயர்கள் என்பதாலோ, என்னவோ, வடசென்னையில் அபூர்வமாகத் தொடங்கப்பட்ட ஒரு மேம்பாலம்கூட அந்தரத்தில் தொங்குகிறது. தென்சென்னையில் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள் பவனி வரும் நிலையில், வடசென்னைக்கு ஓட்டை, உடைசல் பேருந்துகள்தான். அவையும் போதுமான அளவில் இல்லை. ஆதலால், பெரும்பாலான மக்கள் "ஷேர் ஆட்டோ'க்களை மட்டும் நம்பிப் பயணிக்கிறார்கள்.
சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியின்போது, வடசென்னையில் விளையாட்டு மைதானங்கள், சிறிய பூங்காக்கள் கூட மிகக் குறைவாகவே உள்ளன என்று மாணவர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். அப்பொழுது பேசிய அவ்வட்டாரத்து கம்யூனிஸ்டு தலைவர், இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, வியாசர்பாடிக்கு ஒரு பொது நூலகம் கொண்டு வர வேண்டும் என்று போராடியும் வெற்றி பெற முடியவில்லை என்று அங்கலாய்த்தார். உத்தபுரத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் கண்முன் தெரிந்ததால் கம்யூனிஸ்டுகள் அதனைச் சுலபமாக இடித்து விட்டனர். தென்சென்னைக்கும், வடசென்னைக்கும் நடுவில் உள்ள இந்த தீண்டாமைச் சுவர், தெரிந்தும் தெரியாமல், கண்களுக்குப் புலப்படாமல் நிழலாக இருப்பதால் இடிப்பது கடினம் என்று விட்டு விட்டார்களோ?
உத்தபுரத்துத் தீண்டாமைச் சுவரை இடிக்கப் புறப்பட்ட கட்சிகளே! அரசே! துணை நகரம், சிங்காரச் சென்னை, புதிய சட்டசபை வளாகம் போன்றவற்றை சற்றே தள்ளி வையுங்கள். வடசென்னை மக்களின் சமூக, பொருளாதார, சுகாதார, கல்வி சீரமைப்பிற்கென்று தனியான பட்ஜெட்டும், உயர்நிலைக்குழு ஒன்றும் நிறுவி சமூக நீதியை நிலைநாட்டப் புறப்படுங்கள்.
அ. நாராயணன்

நன்றி : தினமணி

அரசுதான் குற்றவாளி!

சென்னை தியாகராய நகரிலுள்ள சரவணா ஸ்டோர்சில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. அதிகாலையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து சுமார் பத்து மணிக்கோ அதற்குப் பிறகோ நேர்ந்திருந்தால் அதனால் ஏற்பட்டிருக்கும் உயிர்ச்சேதம் ஏராளமாக இருந்திருக்கும் என்பதை யாரால் மறுக்க முடியும்?
எந்தவித வரைமுறையும் இல்லாமல் அவரவர் இஷ்டப்படி வணிக வளாகங்களைக் கட்டிக்கொள்ள நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசு ஊக்கமளித்ததன் விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதற்கு, இந்தத் தீ விபத்து ஓர் உதாரணம். கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி நாம் "விதிமுறை மீறல்கள்' என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்களை இப்போது மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறோம்.
""ஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால்கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.
இந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தைச் சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்களுக்கு அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன? எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன?''
ஆங்காங்கே தீவிரவாதம் தலைதூக்கும் இன்றைய சூழ்நிலையில், தி.நகர் ரங்கநாதன் தெரு போன்ற குறுகிய சாலைகளில் இதுபோன்ற வணிக வளாகங்களைக் கட்ட அனுமதி அளிப்பது என்பதே தவறு. அப்படி இருக்கும்போது, எல்லா வரம்புகளையும் மீறி, சட்டதிட்டங்களைச் சட்டைசெய்யாமல் அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்ட அனுமதித்திருப்பது அதைவிடத் தவறு.
சரவணா ஸ்டோர்சில் தீ விபத்து ஏற்பட்டபோது, தாங்கள் அந்தத் தெருவின் உள்ளே நுழையவே சிரமப்பட்டதாகத் தீயணைப்புப் படையினர் கூறி இருக்கிறார்கள். குறுகலான அந்தத் தெருவில் மேலே உள்ள தளங்களில் தீ பிடித்தால் அதை அணைப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கி இருக்கிறார்கள். அதிகாலை நேரமாக இல்லாமல், உள்ளே நூற்றுக்கணக்கில் வாடிக்கையாளர்கள் இருந்திருந்தால், தங்களால் ஒன்றும் செய்திருக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்கும்போது, இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை சுட்டிக்காட்டி இடித்துத் தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், சட்டம் இயற்றி இந்த விதிமுறை மீறல்களை அங்கீகரிப்பதில் அரசு முனைப்புக் காட்டுகிறது. முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், தமிழக அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் மக்களுக்காகச் செயல்படவில்லை என்றுதானே பொருள்.
இனியாவது அரசு விழித்துக் கொண்டு, விதிமுறை மீறல்களைக் காப்பாற்றும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். வணிக வளாகங்கள் நூறடி சாலைகளில் மட்டும்தான் கட்டப்பட வேண்டும் என்று சட்டம் போட வேண்டும். அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு இந்த அரசு தயாரா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது!
நன்றி : தினமணி

நாடு எங்கே செல்கிறது?

""பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்'' என்றார் பாரதியார். அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டை விடுதலை செய்வதற்காக ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் கடமையை அவர் இதன் மூலம் நினைவுபடுத்துகிறார்; உரிமைக்காகப் போராடும்படி தூண்டுகிறார்.
சுதந்திரம் பெற்ற நாட்டின் நிலை என்ன? உடல், பொருள், உயிரை அர்ப்பணித்தவர்களின் தியாகங்களுக்கு மரியாதை உண்டா? விடுதலை பெற்ற தேசம் செல்லும் திசைவழி என்ன? சுதந்திரத்தின் பயனை மக்கள் அனுபவிக்கிறார்களா? விடுதலை பெற்றதன் நோக்கம் நிறைவேறி இருக்கிறதா?
உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்த நாடு இது. பல நாட்டு மன்னர்களும், மாவீரர்களும் படையெடுத்து வருவதற்கு அதன் செல்வ வளமும், சிந்தை வளமும்தானே காரணமாக இருந்தது. இப்போது எல்லாவற்றையும் இழந்து நிராயுதபாணியாக நிற்பது பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா? நினைத்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.
நாட்டையும், மக்களையும் முன்னேற்றுவதாகக் கூறிக் கொண்டு தங்களையும், தங்கள் சொந்தங்களையும் முன்னேற்றிக் கொள்வது ஆளும் கட்சிகளுக்கு மக்கள் அளித்த உரிமையாகிவிட்டது. அவர்களை ஆட்சி பீடத்திலிருந்து இறக்கிவிட்டு தாங்களும் அனுபவிக்கத் துடிக்கும் எதிர்க்கட்சிகள்; இதற்காகவே ஜாதி மதக் கலவரங்களைத் தூண்டிவிடும் சமூக விரோதிகள்.
தேர்தல் முடிந்து ஆட்சியைப் பிடித்ததும் ஆளும் கட்சிக்கு மட்டுமே அரசாங்கம் சொந்தமாகிறது. கட்சி சார்பில்லாத பொதுமக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டுமே மதிக்கப்படுகின்றனர்.
வாக்குகளைப் பதிவு செய்வதோடு அவர்கள் கடமை முடிந்து விடுகிறது. மக்கள் அரசாகச் செயல்படாமல் கட்சி அரசாகவே செயல்படுகிறது. "மக்கள் ஆட்சி' என்பதன் புதிய பொருளே இதுதான்.
அதிகாரிகள் எல்லாம் ஆளும் கட்சிகளின் எடுபிடிகளாகவும், காவல்துறையினர் அவர்களின் ஏவலர்களாகவும் செயல்படுவது அவர்கள் கடமை. செல்வம் படைத்தவர்கள் செல்லப்பிள்ளைகளாகவும், ஏழை எளிய உழைக்கும் மக்கள் பாவப்பட்டவர்களாகவும் நடத்தப்படுகின்றனர்.
மக்களுக்கு அளிக்கப்படும் கல்வியும், மருத்துவமும் வீண் செலவு என்பதால் அரசின் பணத்தை அதற்காகச் செலவழிப்பது அநாவசியம் என முடிவு செய்து எல்லாம் தனியாருக்கு ஒதுக்கப்படுகின்றன.
மதுக்கடைகளால் வருமானம் வருகிறது என்பதால் அரசாங்கமே நடத்துகிறது. அதிலும் குறைந்த போதையுடைய கள்ளுக்கடைகள் தேவையில்லை; அதிக போதை தரும் அயல்நாட்டு மதுவகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. "குடி குடியைக் கெடுக்கும்' எனவும் எழுதப்படுகிறது.
அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் "போலிப் பல்கலைக் கழகங்கள்' நடத்திக் கொள்ளலாம்; பயிற்சி நிறுவனங்கள் நடத்தி மக்களின் பணத்தை பட்டப்பகலில் கொள்ளையடிக்கலாம்.
அரசாங்கமும், கல்வித்துறையும் "அனுமதி பெறாத நிறுவனங்களில் சேர வேண்டாம்' என்று வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியிடும். அனுமதியில்லாமல் "மோசடி' செய்யும் நிறுவனங்களைக் கண்டு கொள்ளாது.
இந்த நாட்டு வங்கிகளில் விவசாயிகளுக்கு மாடு வாங்கக் கடன் கிடைக்காது; கார் வாங்க கடன் கிடைக்கும். அப்படியே மாடு வாங்கியவர்கள் கடன் தொகையைக் கட்ட முடியவில்லையென்றால் "ஜப்தி' செய்து வசூலிக்கவும் முடிகிறது.
வசதிகளும், அதிகாரங்களும் படைத்தவர்களுக்கு வங்கிகள் கோடிக்கணக்கில் கடன் கொடுக்கிறது. அதனைப் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு "வாராக்கடன்' என்று பெயர்சூட்டி தள்ளுபடி செய்யப்படும். அவர்களது பெயர்களை வெளியிடவும் வங்கிச் சட்டத்தில் இடமில்லை.
இப்போது இருக்கும் வாகனங்களுக்கே பெட்ரோல், டீசல் கிடைக்காத நிலையில், விவசாயிகளின் விளைநிலங்களைப் பறித்து, கார் தொழிற்சாலை கட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது.
அரசாங்கம் நாளைக்கு ஒரு சட்டமும், வேளைக்கு ஒரு திட்டமும் போட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆண்டு முடிவில் அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள், "இந்தத் திட்டங்களின் பயன்கள் கிராமப்புற மக்களைச் சென்றடையவில்லையே!' என்று வருத்தத்தோடும், அக்கறையோடும் பேசுவார்கள்.
இதுபற்றி பரிசீலிக்க விசாரணைக் குழுவும் அமைக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும், நீதிபதிகளுக்கும் வேலை வேண்டாமா?
சுதந்திரம் கிடைப்பதற்கு முன்புவரை புறம்போக்கு நிலங்களை மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர்; இப்போது பட்டா நிலங்களையே ஆக்கிரமித்துக் கொள்ளும் துணவு வந்துவிட்டது முன்னேற்றம்தானே!
இங்கு மக்களுக்குப் பாதுகாப்பு தேவையில்லை. அரசியல் தலைவர்களுக்குத்தான் பாதுகாப்பு எல்லாம். நமது காவல்துறை பாதுகாப்பு போதாது. துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை பாதுகாப்பு அவசியம்.
அதற்கும் மேலாக அவர்களது குண்டர் படை. இவ்வளவும் போதாமல் அவர்கள் வருகிறார்கள் என்றால் பொதுமக்கள் தெருக்களில் சாலைகளில் நடமாடக் கூடாது. அந்த அளவுக்கு தலைவர்களுக்கும், மக்களுக்குமான இடைவெளி பராமரிக்கப்படுகிறது.
சுதந்திர நாட்டில் அரசியல் கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது மட்டும் உண்மை பேசுகிறார்கள்; மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்; கோரிக்கைகளுக்காகப் போராடுகிறார்கள்; அவர்களே ஆளும் கட்சியாக வந்துவிட்டால் பேசியதையெல்லாம் மறந்து விடுவார்கள்.
உண்மை, நேர்மை, நடுநிலைமை என்னும் பண்புகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியது அரசும், அதனை நடத்தும் அரசியல் தலைவர்களும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் எல்லா இடங்களிலும் ஜாதி மற்றும் கட்சி சார்பாகவே அணுகும் நிலையே வளர்ந்து வருகிறது.
விளையாட்டுத் துறை இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா? அரசியல் தலையீடு காரணமாக 110 கோடி மக்களின் மனிதவளம் வீணாகிறது. ஒலிம்பிக் விளையாட்டில் உலக நாடுகளோடு இந்தியாவை ஒப்பிட்டுப் பாருங்கள்.
50வது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஒரு தங்கப்பதக்கம் பெறுவதற்கு 108 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நாட்டுப்புறங்களில் இல்லை. பல கிராமங்கள் நம் தலைவர்களின் பார்வைக்கு வருவதே இல்லை.
தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர்கள் பவனி வருகின்றனர். மக்களுக்கான "தரும தரிசனம்' அப்போதுதான். செவ்வாய் கிரகத்துக்கு வழிதேடும் இக்காலத்தில் பல கிராமங்களுக்குப் போக வர சாலைகளே இல்லை.
மன்னர் ஆட்சிக்காலத்தில் அரசனது தவறுகளைப் புலவர்கள் எடுத்துரைப்பார்கள்; சமயங்களில் இடித்துரைப்பார்கள். ஆனால் இந்த மக்களாட்சியில் அந்த நிலை இல்லை.
இங்கு அறிவார்ந்த பெருமக்கள் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூற அஞ்சுகின்றனர். அரசாங்கம் என்ன நினைக்கிறதோ அதற்குத் தக பேசி பதவிகள், விருதுகள், பாராட்டுகள் பெறவே விரும்புகின்றனர்.
இது ஒரு நல்ல சமுதாயத்தின் அடையாளங்கள் அல்ல; முன்னேற்றத்தை விரும்பும் நாட்டுக்கும் ஆட்சிக்கும் அழகல்ல; இது ஓர் ஆபத்தான போக்கு; என்ன செய்வது?
""எங்கே மனதில் பயமின்றித் தலைநிமிர்ந்து நிற்கிறார்களோ எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ எங்கே துண்டு துண்டாகச் சிதறாத உலகம் உள்ளதோ அங்கே எனது தேசம் விழித்தெழட்டும்...'' என்று பாடினார் தாகூர்.
தேசம் என்பது மண்ணும், மலைகளும் அல்ல; கடலும், நதிகளும் அல்ல; அது நல்ல மனிதர்களைப் பெற்றிருக்க வேண்டும்; அத்துடன் சிறந்த ஆட்சியாளர்களால் வழிநடத்தப்பட வேண்டும். இப்போது கூறுங்கள்: நாடு எங்கே செல்கிறது?
உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி