Wednesday, September 10, 2008

தலைவர்களின் குற்றம்!

ஒரு நாள் மன்னன் பிம்பசாரன் தான் புதிதாக வடிவமைத்திருக்கும் அழகிய தோட்டத்திற்குப் புத்தனை அழைத்து விருந்து வைத்து அப் பெருமானுக்கு விரிந்து பரந்த அந்தத் தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டே வந்தானாம். புன்முறுவலோடு பார்த்துக் கொண்டு வந்த அந்தப் பெருமான், ஒரு குறிப்பிட்ட மிகமிகச் சிறிய இடம் மட்டும் சுற்றியுள்ள தோட்டத்தின் வனப்புக்குப் பொருத்தமில்லாமலும், ஒழுங்குபடுத்தப்படாமலும் இருப்பதைக் கண்டு வியப்புற்று மன்னனிடம் "ஏன் அதை மட்டும் அப்படியே விட்டு விட்டீர்கள்' என்று கேட்டாராம்.
அந்த இடம் புட்டு அவித்து விற்கும் ஒரு கிழவிக்குச் சொந்தமானது; அந்தச் சிறிய இடத்திற்கு ஒன்றுக்கு நூறாக விலை தருவதாகச் சொல்லியும் அவள் அதை விற்க மறுத்துவிட்டாள். அவள் மூதாதையர் சொத்தாம் அது. அதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று அந்த இடத்தை விட்டு விட்டுச் சுற்றிலும் தோட்டம் அமைத்தேன். அந்த அழகுக் குறைவு பெருமானுடைய கண்களிலும் பட்டு விட்டதே என்று பிம்பசாரன் வருந்த, புத்தர் மறுமொழி பகன்றாராம்:
""அந்தப் புட்டு விற்கும் எளிய கிழவியின் உரிமைக்குள் உன்னுடைய அதிகார வாள் செல்ல நாணப்பட்டதன் மூலம், இந்தத் தோட்டம் மட்டுமன்று; உன்னுடைய நாடே அழகுடையதாக மாறிவிட்டது'' என்று பாராட்டினாராம்.
ஏன் என்று யாரும் கேட்க முடியாத வானளாவிய அதிகாரம் பெற்ற மன்னன் கூடத் தன் அதிகாரத்தின் எல்லை தருமநெறியோடு மோதுகின்ற இடத்தில் முற்றுப்பெற்று விடுவதாகவே கருதுகிறான்.
உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல் நிர்ணயச் சட்டத்தைப் பெற்றிருக்கும் நாட்டில், ஒரு மந்திரி இருபது கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தைச் "சும்மா பெயருக்கு ஒரு விலையைக் கொடுத்து விட்டுக் கையகப்படுத்திக் கொள்ள' முயன்றிருக்கிறார்.
நிலத்தின் உடைமையாளர்கள் அந்த அக்கிரமத்திற்கு உடன்படாதபோது, அவர்கள் தூக்கிச் செல்லப்பட்டு, உயிர் குறித்து அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் நாற்றமெடுத்தபின், முதலமைச்சர் கருணாநிதி என்.கே.கே.பி. இராசாவை அமைச்சர் பொறுப்பிலிருந்து வேறு வழியில்லாமல் விடுவிக்கிறார்!
இதேபோல் இன்னொரு அமைச்சர் பூங்கோதை, தன்னுடைய இரத்த உறவினர் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டிருக்கும் சிக்கலில், உறவினரைக் காப்பாற்ற லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் தன் பதவிச் செல்வாக்கைச் செலுத்தியபோது, அவருடைய பேச்சு ஒலி நாடாவில் பதிவாகித் தப்ப முடியாத நிலை ஏற்பட்டதால், பதவி விலகுகிறார்!
பிறிதொரு வலிமை வாய்ந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலத்தில் இருபதாயிரம் சதுர அடி இடத்தை வசத்திற்குக் கொண்டு வர, எண்பது ஆண்டுகளாக அங்கே குடியிருந்து வந்த முப்பத்தியொரு குடும்பங்களை இம்சித்தும், அச்சுறுத்தியும் காலி செய்ய வைத்தார் என்று வந்த புகாரை விசாரிக்கும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் கட்டளை இட்டிருக்கிறது. ஆனால் கருணாநிதியின் போலீஸ் என்ன ஸ்காட்லாந்த் யார்டா?
வருவாய்க்கு மீறிய சொத்துச் சேர்த்த வழக்கில் இன்னொரு அமைச்சர் கீதா ஜீவனை உயர் நீதிமன்றம் விடுவிக்க மறுத்து, கீழ் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளுமாறு கட்டளையிட்டிருக்கிறது.
"இராமர் பால இடிப்புப் புகழ்' மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தன்னுடைய இரு மகன்களுக்கும் மலிவு விலையில் எரிவாயு உரிமம் வழங்குமாறு, தன்னுடைய கனபரிமாணமுள்ள கூட்டணி மந்திரி பதவியின் செல்வாக்கு அழுத்தத்தை மைய அரசின் மீது செலுத்தி இருக்கிறார்.
""உன் குடும்பத்திற்கு வழியில்லாத வழியில் அரசுரிமம் பெற்றுத் தொழில்களை உருவாக்கவா மந்திரி பதவி? உடனடியாக ராஜிநாமா செய்'' என்று நாடாளுமன்றத்தில் கூக்குரல் எழுந்தபோது, மிகவும் குளுமையாக, "அதனாலென்ன?' என்று கேட்டார். அந்த நொடியிலேயே நாடாளுமன்றத்தின் நாடி அடங்கிவிட்டது!
மேற்கூறிய அமைச்சர்களின் ஆள் கடத்தல்கள், அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள், ஊழல்கள் அனைத்தும் அண்மைக்காலத்தில் அடுத்தடுத்து நடந்தவை.
இந்தச் சில மந்திரிகள்தாம் நெறிக் குறைபாடு உடையவர்களென்றால், அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடலாம்!
ஆனால் இங்கே மொத்த அமைச்சரவையே தறிகெட்டுப் போயிருக்கும்போது, யாரைத்தான் தள்ளுவது? யாரைத்தான் கொள்ளுவது?
கருணாநிதியேகூட ஒரு நேரத்தில் கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொள்ளும்போது, எல்லாப் பிழைகளுக்கும் மூலத்தை அறிந்து கொள்ள மாட்டாரா? அன்று காந்தி இருந்தார். இளைஞர்களைப் பொதுவாழ்வுக்கு வாருங்கள் என்று அழைத்தார்.
நல்லவர்களெல்லாம் நம்மைத்தான் காந்தி அழைக்கிறார் என்று பொதுவாழ்வுக்கு வந்துவிட்டார்கள். கெட்டவர்களெல்லாம் இந்தக் கிழவன் அழைப்பது நம்மை அல்ல என்று ஒதுங்கிக் கொண்டார்கள்! ஆகவே நாட்டின் பொதுவாழ்வு பளிங்கு போல் தூய்மையானதாக இருந்தது.
அடுத்த காலகட்டத்தில் அதற்குப் பிறகு வந்த தலைவர்களும் வழக்கம்போல், இளைஞர்களைப் பொதுவாழ்வுக்கு அழைத்தார்கள்.
நல்லவர்களெல்லாம் இந்த அழைப்பு நமக்கில்லை என்று ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள்.
கெட்டவர்களெல்லாம், "நம் தலைவர் நம்மைத்தான் அழைப்பார்' என்று உரிமையோடு உள்ளே வந்து விட்டார்கள்!
அழைக்கின்றவர் யார் என்பதைப் பொறுத்துப் பின்பற்றுகிறவர்கள் அமைகிறார்கள்!
அன்று நாட்டுக்குப் பணியாற்ற அறிவும், நெறி சார்ந்த வாழ்வும் உடையவர்களெல்லாம் முன் வந்தார்கள். அவர்கள் பல்வேறு ஜாதிகளில் பிறந்தவர்களாய் இருந்தார்கள். அதிகாரம் கைமாறும்போது இயற்கையாகவே பல்வேறு ஜாதிகள் பிரதிநிதித்துவம் பெற்று, சமூகம் சமநிலை எய்தியது! இது முறையான பிரதிநிதித்துவம்!
தமிழ்நாடு ஈன்றெடுத்த தவப்பெருமக்களைப் பாருங்கள்!
வ.உ.சி: நாட்டு விடுதலைக்காக இரண்டு ஆயுள்தண்டனை பெற்றுச் சிறையில் செக்கிழுத்தவர். இவரைத் தந்தது பிள்ளைமார் சமூகம்!
இராஜாஜி: இவரை மிஞ்சிய அரசியல் அறிஞன் இந்திய மண்ணில் இல்லை. அதிகார நாற்காலியில் ஒரு முனிவனைப்போல் அமர்ந்து ஆட்சி நடத்தியவர். இவர் பிறப்பால் பார்ப்பனர்!
ஈவேரா பெரியார்: தமிழர்களைச் சூத்திர நிலையிலிருந்து விடுவித்துச் சுயமரியாதை கொள்ள வைத்தவர். இணையற்ற சிந்தனையாளர். ஜாதி எதிர்ப்பாளரான இவர் பிறப்பால் கன்னட நாயக்கர்!
காமராஜ்: பத்தாண்டுகள் நாட்டு விடுதலைக்காகச் சிறையில் தவமிருந்தவர். பத்தாண்டுகள் நாட்டு மேன்மைக்காக நாடாண்டவர்; இவருடைய ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் பொற்காலம்! இவர் பிறப்பால் நாடார் சமூகத்தினர்!
முத்துராமலிங்கத் தேவர்: காந்தியால் ஈர்க்கப்பட்டு நாட்டு விடுதலைப் போரில் தன்னை உருக்கிக் கொண்டவர். பின்னாளில் நேதாஜியின் தளபதி. இவர் பிறப்பால் மறவர்!
ஓ.பி. இராமசாமி ரெட்டியார்: விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியவாதி. முதலமைச்சராகக் கோலோச்சியவர். நேர்மையின் பிறப்பிடம். பிறப்பால் ரெட்டியார் சமூகத்தினர்!
கக்கன்: விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியப் பட்டறையில் உருவாக்கப்பட்டவர். அரிசன ஆலய நுழைவுப் போரின் தளபதியான வைத்தியநாத ஐயரின் தளபதி. நேர்மை மனித உருக்கொண்டு கக்கனானது! இவர் பிறப்பால் அரிசன வகுப்பினர்!
அண்ணா: புலவர்கள் மட்டத்தில் சுருங்கிப் போயிருக்க வேண்டிய தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை மக்கள் மட்டத்திற்குக் கொண்டு சென்று, தமிழர்களை இன உணர்வு கொள்ள வைத்த தானைத் தலைவர்; ஜாதி மறுப்பாளரான இவர் பிறப்பால் முதலியார் சமூகத்தினர்.
இப்படி, இங்கே பட்டியலிட இடம்போதாத, இன்னும் எத்தனை எத்தனையோ சமூகங்களில் பிறந்து நாட்டுத் தொண்டாற்றிய தலையாய மக்கள் பலர்; அவர்கள் ஒவ்வொரு வகையில் சிறப்புக்குரியவர்கள். நிறைவான பெருமக்கள்!
அவர்களிடம் அழுத்தம் பெற்று நிற்கும் அறிவு மற்றும் பண்பு நலன்களுக்கேற்ப அவர்கள் உயரும் வகையில் நாட்டின் மதிப்பீடுகளை மாற்றி அமைத்தார் காந்தி!
நல்லது வாழவும், நயவஞ்சகம் அழியவும், உண்மை வாழவும், பொய் ஒழியவும், அறிவு வாழவும் அறியாமை தேயவுமான ஒரு புதிய சமூக மதிப்பீட்டின் அடிப்படையில் பொதுவாழ்வை உருவாக்கினார்!
ஆனால் பிந்தி வந்த தலைவர்கள் சந்தர்ப்பவாதத்தையும், ஜாதி அரசியலையும் ஆயுதமாகக் கொண்டவர்கள். ஒட்டுமொத்தக் குடும்பம்தான் இவர்களின் ஒரு பெருங் கொள்கை. இத்தகையவர்களின் ஏறுமுகம் நாட்டின் இறங்குமுகமாகி விட்டது.
இவர்கள் தங்கள் மட்டத்திற்கு மேலானவர்களை உடன் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தப்பித் தவறி விவரமில்லாமல் யாரும் வந்துவிட்டாலும் அவர்களைப் பிதுக்கி வெளியே தள்ளி விடுவார்கள். ஆகவே கீழே உள்ள இரண்டாவது வரிசைத் தலைவர்களைத் தகுதி அடிப்படையில் அல்லாமல், ஜாதி அடிப்படையில் மட்டுமே உருவாக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
ஜாதி என்பது ஒரு சிறு அல்லது பெருங்கூட்டம். அந்தக் கூட்டம் அதிகாரத்தில் தனக்குரிய பிரதிநிதித்துவத்தைக் கோரும். அவ்வளவுதான்! அதோடு அமைதி அடைந்துவிடும்!
முன்பிருந்த ஜாதிகள்தாம் இப்போதும் இருக்கின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லா ஜாதிகளிலும் நல்லோரும் இருக்கிறார்கள்; தீயோரும் இருக்கிறார்கள்! முத்துராமலிங்கத் தேவரையும், காமராஜையும், கக்கனையும் அதே ஜாதிகள்தாம் அளித்தன. அவர்களின் அறிவும், தொண்டும், நேர்மையும் அவர்கள் பிறந்த ஜாதிகளைத் தாண்டி எல்லா ஜாதிகளையும் தேசத்தையும் உயர்த்தின.
என்.கே.கே.பி. இராசாவையும், டி.ஆர். பாலுவையும், கீதா ஜீவனையும், பூங்கோதையையும் அதே ஜாதிகள்தாம் தந்திருக்கின்றன.
இவர்களின் நெறியற்ற நடத்தைகள் பிறந்த ஜாதி உள்ளிட்ட எல்லா ஜாதிகளையும் முடிவாகத் தேசத்தையும் கீழறுக்கின்றன.
இது ஜாதிகளின் குற்றமல்ல; தேர்வு செய்யும் தலைவனின் குற்றம்!
பழ. கருப்பையா
நன்றி : தினமணி

சுமங்கலித் திட்டம்: சாபமா, வரமா?

""சுமங்கலித் திட்டம்"" இது வறுமையில் வாடும் ஏழை இளம்பெண்களின் திருமணத்திற்காக அரசு அறிவித்திருக்கும் திட்டம் அல்ல. மாறாக இவர்களின் வறுமையைப் பயன்படுத்தி மேலும் லாபத்தில் கொழிப்பதற்காக நூற்பாலை உரிமையாளர்கள் தங்கள் மூளையைக் கசக்கிக் கண்டறிந்த திட்டம்.
சுமங்கலித் திட்டத்தின் கீழ் இளம்பெண்களைப் பணிக்குச் சேர்ப்பதற்காக வறுமையில் வாடும் குடும்பங்களை இலக்காக கொண்டு அணுகுகின்றனர். பெண்களைப் பணிக்குக் கொண்டு வர இடைத்தரகர்களும் உண்டு.
இத்திட்டத்தின் கீழ் பணிபுரிய 13 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்ட திருமணமாகாத பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தங்கள் பெண்களைப் பணிக்கு அனுப்பச் சம்மதிக்கும் பெற்றோர்களுக்கு உடனடியாக ரூ. 10 ஆயிரம் முன்பணம் வழங்கப்படுகிறது. பணிக்குத் தேர்வு செய்யப்படும் பெண்கள் நூற்பாலைகளில் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை பணிபுரிய ஒப்பந்தம் போடப்படும். ஒப்பந்தப்படி பணிமுடிக்கும் பெண்களுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும். தங்குமிடமும், உணவும் இலவசமாக வழங்கப்படும். பெற்றோர்கள், பெண்களைப் பார்க்க வாரம் ஒருமுறை அனுமதி அளிக்கப்படுகிறார்கள். மருத்துவ வசதி செய்து தரப்படும் என பல வாக்குறுதிகள் அளிக்கப்படுகிறது. இதை முழுமையாக நம்பும் பெற்றோரும் தங்கள் பெண்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டதாக அகமகிழ்ந்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அவர்கள் 12 முதல் 16 மணிநேரம் பணிபுரியும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
மேலும், தங்குமிடம் என்ற பெயரில் ஒரு சிறிய அறைக்குள் 10 முதல் 15 பெண்கள் வரை ஆடு, மாடுகளை அடைப்பது போல் அடைக்கப்படுகின்றனர். இதனால் மிகக் கடுமையான மனஉளைச்சலுக்கு பெண்கள் ஆளாகின்றனர். மருத்துவ வசதியும் கிடையாது.
பெற்றோர்களையும் அவ்வளவு எளிதில் சந்திக்க அனுமதிப்பதில்லை. சந்திக்க வரும் பெற்றோரிடம் கொடுமைகளைப் பற்றி கூறிவிடக் கூடாது என்பதற்காக நிர்வாகத்தைச் சேர்ந்தவரும் உடனிருப்பார். தட்டிக் கேட்கும் பெற்றோரை அடியாள்கள் மூலம் மிரட்டுவது, ஊதியம் கொடுக்காமல் வெளியேற்றுவது ஆகியவையும் நடக்கிறது.
பாலியல் கொடுமை: இந்த கொடுமைகளுக்கு எல்லாம் உச்சகட்டமாக பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் கொடுமையும் நடக்கிறது என்பது அதிர்ச்சியளிப்பதாகும். பெண்களுக்கு இரவுப் பணி வழங்கப்பட மாட்டாது என்று கூறப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு அதிக நாள்கள் பெண்களுக்கு இரவுப் பணி வழங்கப்படுகிறது.
மேலும், அப்படிப்பட்ட சூழலில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களுக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்றுகளும் ஏற்படுகிறது. ஓராண்டிற்கு முன் கரூர் பகுதியில் உள்ள நூற்பாலையில் சுமங்கலித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த இளம்பெண்கள் 2 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு நிர்வாகத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு பெண்களுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் உடன்பணிபுரியும் பெண்கள் சிலரிடம் பரிசோதனை நடத்தினர். அதில் சில பெண்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவர அதிர்ந்த மருத்துவர்கள் அந்த ஆலையில் உள்ள பெண்கள் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை நடத்தியதில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ஆலையில் இரவுப் பணியின்போது பெண்களிடம் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஆண்கள் பலர் தவறாக நடந்திருப்பதும், அப்பாவிப் பெண்கள் நோய்த்தொற்றுக்கு ஆளானதும் தெரியவந்தது. இச்சம்பவம் வார ஏடுகளில் பரபரப்புச் செய்தியாக வந்தது. இதையடுத்து அந்த நூற்பாலை சீல் வைத்து மூடப்பட்டது. ஆனால், நிர்வாகிகள் மற்றும் தவறிழைத்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நடத்தப்படும் கொடுமைகளை சில மாதர் அமைப்புகள் அரசுக்குப் புகாராக அனுப்பின.
இதையடுத்து அரசு ஓரிரு மாதங்களுக்கு முன்பு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில் சுமங்கலித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 145க்கு குறையாத ஊதியம் வழங்கவேண்டும் என்றும் அரசு ஆணையை அமல்படுத்தாதபட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.
ஆனால், இரண்டு வாரங்களுக்கு பின்பு மதுரை புறநகர் பகுதியில் உள்ள நூற்பாலையின் அருகே 14 வயது மதிக்கதக்க 3 பெண்கள் அதிகாலை நேரத்தில் சுற்றியதைக் கண்ட அப்பகுதி பொது மக்கள் பெண்களை அழைத்து விசாரித்தபோது அப்பெண்கள் சுமங்கலித் திட்டத்தின்கீழ் பணிபுரிய அழைத்து வரப்பட்டதாகவும், ஆனால் பணியின் போது மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், உணவுகூட சரியாக வழங்காததால் நள்ளிரவில் ஆலையின் வளாகச் சுவர் ஏறிக்குதித்து தப்பியதாகவும் தெரிவித்தனர். இதைப்பற்றி தகவலறிந்த போலீஸார் அப்பெண்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆலை நிர்வாகத்தின் மீது வெறும் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டது.
இக்கொடுமைகள் திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் அதிகம் நடக்கிறது. விளக்கைக் கண்டுவிழும் விட்டில் பூச்சிகளாய் வறுமையால் வாழ்க்கையைத் தொலைக்கும் ஏழைப்பெண்களைக் காப்பாற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.பி. உமாமகேஸ்வரன்