Tuesday, October 28, 2008

அமெரிக்க நிதி நெருக்கடியும் இந்தியாவும்

உலகெங்கிலும் உள்ள அரசுகள் மற்றும் மத்திய வங்கிகள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்னை இதுதான். பூதாகரமாக எழுந்துள்ள அமெரிக்க நிதி நெருக்கடியின் தாக்கம் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சிதைத்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான்.
உலகப் பொருளாதாரம் ஒரே கூரையின் கீழ் வந்துவிட்ட நிலையில், அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சி இந்திய வங்கிகளை பாதிக்குமோ? என்று நம் நாட்டு முதலீட்டாளர்கள், கவலையில் இரவுத் தூக்கத்தை இழந்தது நிஜம்.
நல்லவேளையாக, இந்திய வங்கிகளுக்கு பாதிப்பில்லை என்ற உறுதிமொழி உரிய நேரத்தில் மத்திய அரசிடமிருந்து மக்களுக்குக் கிடைத்தது.
தற்போதைய நிலைமையைச் சற்று கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் தெளிவாகும்.
இன்றுள்ள நிலையில் இந்தியாவில் வங்கிகளுக்குப் பாதிப்பு இல்லை. ஆனால், இந்தியப் பொருளாதாரம் பாதிப்பிலிருந்து தப்பிக்குமா? உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், இந்தியப் பொருளாதாரத்துக்கு சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ பாதிப்பு இருக்கும் என்பது வெளிப்படை.
முதலில் வங்கிகளின் நிலையைப் பார்ப்போம். 1970, 1980களில் உலகிலேயே நிதி மேலாண்மையிலும், வங்கிச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கியவர்கள் அமெரிக்கர்கள்தான் என்று பரவலாகக் கருதப்பட்டது. அதனால் அமெரிக்கர்களின் நிதித்துறை நிபுணத்துவம் மற்றும் நடைமுறைகள் பல வளரும் நாடுகளால் பின்பற்றப்பட்டன. இந்தியா இதற்கு விதிவிலக்கு அல்ல.
அந்த காலகட்டத்தில், பிரகாஷ் டாண்டன் குழு (1975), கே.பி. சோரே குழு (1979), எஸ்.எஸ். மராத்தே குழு (1983) ஆகிய நிபுணர் குழுக்கள் கடன் வழங்கும் நடைமுறைகளை நெறிமுறைப்படுத்தின. அவை பெரும்பாலும் அப்போதைய அமெரிக்கப் பாணியில்தான் அமைந்திருந்தன. சொல்லப்போனால், கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ள எஸ்.எஸ். மராத்தே குழுவின் பரிந்துரைகள் 1983ல் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டபோது, ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர் தற்போதைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்.
இதுதவிர, வங்கிகளின் சொந்த மூலதனம் எவ்வளவு இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து குறைந்தபட்ச மூலதனம் படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இந்த நியதிகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்வகையில், இந்திய வங்கிகளுக்கு இன்றளவும் பேசல் 1, பேசல் 2 என்ற நியதிகள் அமலில் உள்ளன.
இந்த நியதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை பாரத ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.
ஆனால், அமெரிக்க வங்கிகள் பிற நாடுகளுக்குக் கற்றுக் கொடுத்த நிதி மேலாண்மைத் தத்துவங்களை அவர்களே பின்பற்றவில்லை. அதனால்தான் அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவால் ஆயின.
இந்திய வங்கிகள் மூலதன விகிதம், கடன் வழங்கும் நியதிகள் ஆகியவற்றைப் பின்பற்றுவதுடன், வங்கிச் செயல்பாடுகளில் நிதானமான போக்கையே பின்பற்றுகின்றன. அத்துடன் வாராக்கடன்களின் அளவும் படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாராக்கடனை வசூலிப்பதில் புதிய சட்டதிட்டங்கள் வங்கிகளுக்கு உதவிகரமாக உள்ளன. அதனால் இந்திய வங்கிகள் இன்றும் பாதுகாப்பாக உள்ளன.
ஒரே ஒரு தனியார் துறை வங்கி, அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட முதலீட்டு வங்கிகளுடன் நிதி கொடுக்கல், வாங்கல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதனால் அந்த வங்கிக்கு இழப்பு என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்களது நிகர சொத்து மதிப்புடன் ஒப்பிடுகையில் இந்த இழப்பு மிக மிகக் குறைவுதான். எனவே இதுகுறித்து முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இதுபோன்ற இழப்புகள் பற்றிய விவரங்களை அனைத்து வங்கிகளிடமிருந்தும் பாரத ரிசர்வ் வங்கி கோரியுள்ளது. அந்த விவரங்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்தவுடன் நிலைமை துல்லியமாகத் தெரிய வரும்.
அதேநேரம், அமெரிக்க நிதி நெருக்கடியால் இந்தியப் பொருளாதாரத்துக்கு எந்த எந்த வகையில் பாதிப்பு?
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து கணிசமான அளவு தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்துள்ளன. இந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 8 பில்லியன் டாலர் அளவு முதலீடுகளை எடுத்துள்ளன.
இந்தியப் பங்குச் சந்தையில் பங்குகளின் விலை இந்த அளவுக்குச் சரிந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
இந்தியப் பங்குச் சந்தையில் இப்போதுகூட 150 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய நிறுவன முதலீடுகள் உள்ளன. இந்நிலையில் உலக அளவில் நிகழும் ஒவ்வோர் அசைவும் இந்தியப் பங்குச் சந்தையைப் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
இரண்டாவதாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பல ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. இதனால் அன்னிய வர்த்தகத்தில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் இந்த இடைவெளி 49 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்திய ஏற்றுமதிகள் வெகுவாக அதிகரித்த பின்பும், அன்னிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்க முடியவில்லை. ரூபாயின் மதிப்பு குறைந்தால் இறக்குமதியின் விலை கூடும்.
ரூபாயின் மதிப்பு சரிந்ததால் இந்திய ஏற்றுமதியாளர்களாவது லாபம் அடைந்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இதற்குக் காரணங்கள் இரண்டு: ஒன்று, ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் கணிசமான பகுதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்டவை.
இரண்டு, இப்படி ரூபாயின் மதிப்பு சரியும் என்பது முன்னதாக எதிர்பார்க்கப்படவில்லை. மாறாக, ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். எனவே, எதிர்கால ஊக பேர வர்த்தக அடிப்படையில் தங்களுக்கு வரவேண்டிய டாலர்களை குறைந்த மதிப்பில் நிர்ணயம் செய்து ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். எனவே ரூபாயின் மதிப்பு சரிவால் கிடைக்க வேண்டிய ஆதாயம் கிடைக்காமல் போய்விட்டது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்துறையில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களது வாடிக்கையாளர்கள் பெரும்பாலானவர்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆவார்கள். இவர்களுக்கு இப்போது சரிவு ஏற்பட்டிருப்பதால், இவர்களிடம் இருந்து கொஞ்சகாலம் பெரிய அளவில் வியாபாரத்தை எதிர்பார்க்க முடியாது.
இவர்களும் எதிர்கால ஊக பேர அடிப்படையில் தங்களுக்கு வர வேண்டிய டாலர் தொகையை குறைந்த மதிப்புக்கு நிர்ணயம் செய்து கொண்டார்கள். எனவே இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்காமல் போய்விட்டது. ரூபாயின் மதிப்பு மேலும் உயரக்கூடும் என்று இவர்கள் தவறாக கணக்கிட்டதுதான் இதற்குக் காரணம்.
பொதுவாக, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது சோதனை காலம். முன்னதாக ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால் இழப்பு. இப்போது, அமெரிக்க நிதி நெருக்கடி காரணமாக, அமெரிக்காவில் மட்டுமல்லாமல், பல ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரிய அளவில் ஏற்றுமதி ஆர்டர்களை எதிர்பார்க்க இயலாது.
மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரத்துக்கு மோசமான பாதிப்பு இருக்காது என்று நம்பப்படுகிறது. காரணம், மூலதனக் கணக்கை முற்றிலும் மாற்றிக்கொள்ளும் முறை ( ஊன்ப்ப் இர்ய்ஸ்ங்ழ்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ் ர்ச் இஹல்ண்ற்ஹப் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்) இந்தியாவில் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. எனினும், உலகமய சூழலில் உலக அளவில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி, இந்தியாவை ஓரளவேனும் பாதிக்கவே செய்யும். அதை எதிர் கொள்வதற்குத் தேவையான உத்திகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்துள்ள சி.ஆர்.ஆர். விகிதக் குறைப்பு இத்திசையில் ஒரு ஆரம்பம். இந்தியாவில் மந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வில்தான், பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்) 9 சதவிகிதத்தில் இருந்து 8.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இதன் பயனாக, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்கான நிதி ஆதாரம் ரூ.20,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும். இதன் பயனாக வங்கிகள் அத்தியாவசியக் கடன் வழங்குவது அதிகரிக்கும். சிறு தொழில் துறைக்கு பெரும் உதவியாக இருக்கும்.
கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர்,
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
நன்றி : தினமணி

மாறும் உலகில் மாறத்தான் வேண்டும்

இப்படியாகப் பேசினால் கைது செய்வார்கள் என்பது மதிமுக தலைவர் வைகோவுக்கு தெரியாத விஷயம் அல்ல. ஏற்கெனவே 18 மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு இதெல்லாம் தெரிந்தவைதான்.
ஆகவேதான் பேசினார்.
அதற்கான காரணங்கள் இரண்டு.
முதலாவதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இலங்கைத் தமிழருக்காக இந்திய அரசை எதிர்த்த அரசியல் தலைவர் என்ற புகழ் தனக்கே இருக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதிக்கு போய்விடக்கூடாது
இரண்டாவதாக, தமிழக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு குரல் கொடுத்தாலும், ஊடகங்கள் முக்கியத்துவம் தந்தாலும், தமிழ்நாட்டு மக்களிடையே 1980களில் நிலவிய உணர்ச்சிக் கொந்தளிப்பு காணப்படவில்லை.
அந்த கொந்தளிப்பை ஏற்படுத்தத்தான் தனித்தமிழ்நாடு பேச்சு, திரைத்துறை பேரணி, ரயில்எரிப்பு, ராஜீவ் சிலை உடைப்பு எல்லாமும். ஆனால் இவை தமிழக மக்களிடம் இலங்கைத் தமிழருக்கு ஆதரவான உணர்ச்சியைத் தூண்டுவதற்கு பதிலாக, எதிர்நிலை கருத்தையே உண்டாக்குகின்றன.
1980களில் இலங்கைத் தமிழருக்காக தமிழ்நாடு முழுவதும் கொதித்தெழுந்தது. ஆதரவு திரண்டது. நிதி திரண்டது. அவர்கள் சார்பில் நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சிகளில் புத்தகமும் கையேடும் வாங்காத தமிழரே இருக்க முடியாது. பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்காக மருந்துகளும், துணிகளும் மூட்டைமூட்டையாக எல்லா ஊர்களிலும் கொடுத்தார்கள்.
அன்றைய தினம் இலங்கைத் தமிழனை தமிழகத் தமிழன் பிரித்துப் பார்க்கவில்லை. பிரச்னையை மக்களிடம் கொண்டுசெல்வதற்காக காயமடைந்த, பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு தமிழக கல்லூரி மாணவர்கள்தான் தோழர்களாக நின்றனர். தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நடைபெற்ற ஊர்வலங்களில் பங்குகொண்டோர் அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழர்கள்.
இலங்கை ராணுவத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அனைத்து தாக்குதல்களும் புறநானூற்று வீரமாகக் கருதப்பட்டன.
திரைப்படத்தில், ஒரு வில்லனை வீழ்த்த ஓர் அப்பாவி கதாநாயகன் தானும் துப்பாக்கியைக் கையில் எடுத்து, வில்லனை கதிகலங்கச் செய்கிறபோது ரசிகர்களுக்கு ஏற்படும் மனமகிழ்ச்சிக்கு ஒப்பாக, இலங்கை ராணுவத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அனைத்து தாக்குதல்களும் ஆனந்தத்தைத் தந்தன. புலிகளின் மரணங்கள் கண்ணீரை வரவழைத்தன.
ஆனால் தமிழக மக்கள் அனைவரும் நெருப்பைத் தொட்டவர்கள் போல சுருண்டுபோன சம்பவமாக அமைந்தது ராஜீவ் காந்தி படுகொலை. அந்தக் கொலையை விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், தமிழ் மண்ணில், இலங்கைத் தமிழ்ப் போராளிகளால் நடத்தப்பட்ட இந்த மனிதவெடிகுண்டு தாக்குதல், இதுநாள்வரை ஆதரித்த தமிழர்களை குற்றவுணர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. ராஜீவ் கொலையை சிலர் மட்டும் நியாயப்படுத்திய போதிலும் பொதுவான தமிழர்களால் அந்த குற்றவுணர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை.
அதனால்தான் இன்று உணர்வு பூர்வமான கொந்தளிப்பு தமிழகத்தில் உருவாகவில்லை. அரசியல் கட்சியினரும், ஊடகங்களும் பேசிய போதிலும், இது ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் பேசுகிற, வேதனைப்படுகிற விஷயமாக மாறவில்லை.
இதற்கு ஓர் உதாரணம் இலங்கை அரசின் தாக்குதலை நிறுத்தக் கோரி மத்திய அரசுக்கு தந்தி கொடுக்கும்படி தமிழக முதல்வர் கருணாநிதி சொன்னார். எத்தனை தந்திகள் கொடுக்கப்பட்டன?.
இலங்கைத் தமிழர்வேறு விடுதலைப் புலிகள் வேறு என்று அரசியல் கட்சிகள் சொன்னாலும், அந்த சொல் தமிழக மக்களிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்த உண்மை புரிந்திருந்தும் புரியாததுபோல தமிழக அரசியல் தலைவர்கள் நடித்துக் கொண்டிருப்பதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான விஷயமாக இதை மாற்றுகிறது.
இலங்கைத் தமிழர் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசை நிர்பந்திக்கும் தமிழக அரசியல் கட்சிகள், ஆயுதத்தைக் கைவிட்டு, அரசியல் தீர்வு காண வேண்டும் என்று விடுதலைப் புலிகளிடம் வலியுறுத்த தயங்குகிறார்கள். ஒரு சகோதர தமிழன் உலகின் 30 நாடுகளில் பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவது பெருமையாக இருக்க முடியுமா?
விடுதலைப் புலிகளுக்குத் தேவையான "அனைத்தும்' தமிழக கடல்எல்லை வழியாகத்தான் செல்கின்றன என்பது தெரிந்திருந்தும், தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் இந்திய அரசு மௌனமாக இருப்பதும்கூட இலங்கைத் தமிழர் மீதான அக்கறைதான் என்பதை ஏன் தமிழக அரசியல் கட்சிகள் நினைத்துப்பார்க்கவில்லை?.
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, விடுதலைப் புலிகள் ஆயுதத்தை ஏந்தி நடத்திய கெரில்லா யுத்தம் தமிழரின் வீரமாக, அறப்போராகப் பார்க்கப்பட்டது. அவர்களைப் போராளிகள் என்றுதான் அழைத்தோம்.
ஆனால், கால்நூற்றாண்டில் உலகத்தின் போக்கு மாறிவிட்டது. "உள்நாட்டுப் போர்' என்ற சொல்லாடல் மறைந்து, ஆயுதம் எடுக்கும் எந்த ஒரு குழுவைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் பயங்கரவாதி என்பதுதான் இன்றைய இன்றைய உலகத்தின் பார்வை. ஆகவே அரசியல் வழியில் தீர்வு காண்பது மட்டுமே இலங்கை தமிழர் பிரச்னைக்கு சரியானதாக வழிமுறையாக இருக்கும்.
இன்று இந்தியா தலையிட்டு இலங்கை அரசைப் போர்நிறுத்தம் செய்ய வைத்தாலும் எத்தனை நாளைக்கு நீடிக்கும்? கால நிபந்தனை உண்டா? மீண்டும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கியதும், மீண்டும் தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் போராட்டத்தை கையில் எடுப்பார்களா? இன்னும் எத்தனை காலத்துக்கு இது தொடரும்?
விடுதலைப் புலிகள் ஒரு மாபெரும் சக்தி என்பதை இலங்கை அரசுக்கும் உலகுக்கும் நிரூபித்தாகிவிட்டது. இனியும் ஆயுதம் தேவைதானா?
கொடுமையை எதிர்க்க, ஒரு மாணிக்கம் மாணிக்"பாட்சா'வாக மாறி வில்லனுக்குத் தான் யார் என்பதைக் காட்டிய பிறகு, மீண்டும் பழைய மாணிக்கமாக மாற வேண்டும். மாறினால்தான் சுபம்.
இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி