Monday, November 3, 2008

அமெரிக்கத் தேர்தலில் புதுமையும், நுணுக்கமும்

அமெரிக்காவில் வரும் 4ம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளைப் பொருத்துதான் அமெரிக்க அரசியல் நடைபெறுகிறது. தேர்தல் போட்டிகளும், வெற்றி, தோல்விகளும் இந்த இரு கட்சி அரசியல் வட்டத்திற்குள் அடங்கி இருக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அமெரிக்க செனட் சபையின் ஒவ்வோர் உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என இருந்தாலும், மூன்றில் ஒரு பகுதியினரின் தேர்தல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் மட்டுமே. அமெரிக்கக் கூட்டாட்சியின் மத்திய அமைப்புகளைத் தவிர மாநிலங்கள்தோறும் உள்ள ஆளுநர், மாநிலத்துக்கான செனட் பிரதிநிதி உறுப்பினர்களுக்கும் குறிப்பிட்ட பதவிக் காலத்திற்குப் பிறகு நடைபெறும் தேர்தல்கள், அமெரிக்க அதிபர், செனட் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கான தேர்தல்களுடன் இணைத்து ஒரே சமயத்தில் நடத்தப்படுகின்றன.
எல்லோருக்கும் சமமான மனித உரிமைகளை உள்ளடக்கியதாக அமெரிக்க அரசமைப்புச் சட்டம் 1788ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும் அமெரிக்காவில் குடியேற்றப்பட்டு பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த கருப்பு இனத்தவர்களுக்குக் குடிமக்கள் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் நீண்ட காலமாகத் தரப்படாமல் இருந்தது. கருப்பர்களின் சமஉரிமைக்காகப் போராடிய ஆப்ரகாம் லிங்கன் உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றுக் கருப்பர்களின் அடிமைத்தனத்தைச் சட்டப்படி நீக்கினாலும், நடைமுறையில் பலகாலம் கருப்பர்களுக்குச் சமஉரிமை வழங்கப்படவில்லை. அவருக்குப் பிறகு நீக்ரோ இனத்தவர்களுக்கு உரிமைகள் தருவதற்காக நான்கு முறைகள் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இருப்பினும் வாக்களிக்கும் உரிமையைத் தடுக்கும் வகையில் பல தடைகளைத் தென் மாநிலங்கள் போட்டிருந்தன.
1964ல் வந்த 24வது அரசமைப்புச் சட்டத் திருத்தம்தான் தடைகளை நீக்கி நீக்ரோ மக்களுக்கும் வாக்குரிமையை உறுதிப்படத் தந்தது.
தேர்தலில் நின்று அமெரிக்க செனட் சபைக்கு இதுவரை பின்வரும் மூன்று கருப்பு இனத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்: 1. எட்வர்ட் புரூக் (1967 79, மாசசூஸெட்ஸ்), 2. கரோல் மோஸ்லீ பிரெளன் (முதல் கருப்பு இனப் பெண்மணி, 199298, இல்லினாய்ஸ்), 3. பாரக் ஒபாமா (2004 முதல் இல்லினாய்ஸ்). ஆயினும் முதன்முறையாக அமெரிக்க கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒபாமா அதிபருக்கான தொடக்கத் தேர்தலில் வெற்றி பெற்று இதுவரை வந்துள்ள கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.
இதற்கு மேலாக, அமெரிக்கத் தேர்தலில் சில புதுமைகளும், தேர்தல் நுணுக்கங்களும் வெளிப்படுகின்றன. ஜனநாயககுடியரசு ஆகிய இரு முக்கியக் கட்சிகளைத் தவிர, அமெரிக்க மாநிலங்களில் உள்ள விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் பல இருக்கின்றன. அவற்றின் சார்பாக அதிபர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பெயர்களும் ஆங்காங்கு தமக்கு ஆதரவான மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் அதிகாரபூர்வமாக வாக்குச் சீட்டுகளில் இடம்பெற்றிருக்கின்றன.
அமெரிக்காவின் அதிபர், துணை அதிபர் பதவிகளுக்கு 11 கட்சிகள் போட்டியிடுகின்றன. பின்வரும் நான்கு கட்சிகள் அதிகாரபூர்வமாகப் பல மாநிலங்களில் தேர்தலைச் சந்திக்கின்றன. 1. அரசமைப்புச் சட்டக் கட்சி, 36 மாநிலங்களில் 2. விடுதலையாளர் கட்சி, 44 மாநிலங்களில் 3. பசுமைக் கட்சி, 31 மாநிலங்களில் 4. சுயேச்சை இதர கட்சிகளின் அணி 45 மாநிலங்களில்.
11 கட்சிகள் சில மாநிலங்களில் அதிபர் துணை அதிபர் பதவிகளுக்குப் போட்டியிடுகின்றன. மற்றும் 6 கட்சிகள் அதிபர் பதவிக்கு மட்டும் போட்டியிடுகின்றன. ஆக, அதிபர் தேர்தலில் ஜனநாயக குடியரசுக் கட்சிகளைத் தவிர்த்து, 17 கட்சிகள் போட்டியிடுகின்றன.
இருப்பினும், சில மாநிலங்களில் இத்தகைய போட்டிக் கட்சிகள் வாக்குகளைப் பிரித்துக்கொள்ளும்போது, பெரிய இரண்டு கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் மாறக்கூடும். எடுத்துக்காட்டாக, ரால்ப் நேடர் அமெரிக்க அதிபர் தேர்தலில் 1992ல் இருந்து தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். 2000ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாநிலத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ் பெற்ற வாக்குகள் 29,10,299; ஜனநாயக வேட்பாளர் அல்கோர் பெற்ற வாக்குகள் 29,09,911; அந்தச் சமயத்தில் பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட ரால்ப் நேடர் பெற்ற வாக்குகள் 96,839. அல்கோருக்கு வரவிருந்த வாக்குகளை நேடர் பிரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு அப்பொழுது வந்தது. புளோரிடா வாக்குகளில் பெரும்பான்மையைப் பெற முடியாத காரணத்தால் அல்கோர் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றார். ஆக, பல கட்சிகள் போட்டியிடுவது முக்கியமான இரு கட்சிகளின் தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடும்.
அமெரிக்கத் தேர்தலில் எழுதி வாக்களித்தல் எனும் முறை இருக்கிறது. அதாவது, அங்கீகாரம் பெறாத ஒரு வேட்பாளரின் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாது. இருப்பினும், அமெரிக்கத் தேர்தல் முறையில் வாக்குச்சீட்டில் ஒரு வெற்றிடம் தரப்பட்டு அதில் வாக்காளர்கள் விரும்பினால் அங்கீகாரம் பெறாத வேட்பாளரின் பெயரை எழுதி ஆதரவு அளிக்கலாம். இவ்வாறு எழுதி வாக்களிக்கும் முறையால் அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் உண்டு. 1954ல் ஜேம்ஸ் ஸ்ட்ரோம் தர்மண்ட் என்பவர் அமெரிக்க செனட் சபைக்கு "எழுதி வாக்களித்தல்' முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 2008ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் 65 வேட்பாளர்கள் "எழுதி வாக்களித்தல்' முறையில் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்கத் தேர்தல் 2008ம் ஆண்டு நவம்பர் 4ல் நடைபெறும் என்று இருந்தபோதிலும் அதற்கு முன்னதாகவே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் 31 மாநிலங்களில் தேர்தல் தேதிக்கு முன்னதாக வாக்களிப்பதற்குச் சட்டபூர்வமான வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் அக்டோபர் 13ம் தேதி தொடங்கி அக்டோபர் 30 வரை குறிப்பிட்ட சில இடங்களில் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தது.
2000ம் ஆண்டு தேர்தலில் 16 சதவிகித வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்தினர். 2004 தேர்தலில் 22 சதவிகித வாக்காளர்கள் முன்னதாக வாக்களித்தனர். தற்போதைய 2008 தேர்தலில் 30 சதவிகித அளவுக்கு முன்கூட்டி வாக்களிப்பவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வாக்களிப்பவரின் பெயரும், வரிசை எண்ணும், ஒளிப்படமும் தேர்தல் சாவடியில் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. முன்னதாக வாக்களிக்கும் முறையால் ஒரு வாக்காளர் பலமுறை வாக்களிக்கும் மோசடி இதுவரை எதுவும் நடைபெறவில்லை என்று தேர்தல் குழு தெரிவிக்கிறது. உடல்நலம் குன்றிய ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்குக் காரில் அழைத்துவரப்பட்டால், வாக்குச்சீட்டைத் தேர்தல் அதிகாரி எடுத்துச்சென்று ரகசியமாக அவருடைய வாக்கைப் பதிவு செய்ய வசதி செய்யப்படுகிறது. இவ்வாறு முன்கூட்டி நடைபெறும் வாக்குப் பதிவுகளை முறையாகப் பாதுகாத்து, நவம்பர் 4ம் தேதி போடப்படும் வாக்குகளுடன் சேர்த்து ஒரே நாளில் எண்ணப்படும்.
அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும் ஆண்டில் வாக்காளர்கள் அதிகமாக 60 சதவிகிதத்திற்குக் குறையாமல் வாக்களிக்க முன்வருகின்றனர். அதிபருக்கான வேட்பாளருக்கு நேரடியாக வாக்காளர்கள் தம்முடைய வாக்குகளைத் தந்தாலும், கடைசியில் 540 பேர்களைக் கொண்ட தேர்தல் குழுவினர் தரும் ஆதரவை வைத்துத்தான் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிபருக்கான தேர்தல் குழு என்பது அமெரிக்காவில் ஒரு வினோதமான அமைப்பு. மக்கள்தொகைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் குழு உறுப்பினர்கள் நிர்ணயிக்கப்படுகிறார்கள். இதன்படி கலிபோர்னியா 54, டெக்ஸாஸ் 34, இல்லினாய்ஸ் 32, நியூயார்க் 31, புளோரிடா 26 எனத் தொடங்கி அலாஸ்கா, டென்வர் போன்ற சிறிய மாநிலங்களுக்குக் குறைந்தபட்சமாக 3 உறுப்பினர்கள் தரப்படுகிறார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கலிபோர்னியா மாநிலத்தில் விழும் வாக்குகளில் 50.01 சதவிகிதம் கிடைத்த வேட்பாளருக்கு அந்த மாநிலத்திற்கான 54 அதிபர் தேர்தல் குழு உறுப்பினர்களும் முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் முறை இருக்கிறது. இதனால் வாக்களித்தவர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற அதிபருக்கான வேட்பாளர் தோற்றுவிடும் நிலை ஏற்படலாம்.
எடுத்துக்காட்டாக, 2000ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அமெரிக்கா முழுவதிலும் ஜனநாயக வேட்பாளர் அல்கோர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5 கோடி 10 லட்சத்துக்கு மேல். குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ் பெற்ற மொத்த வாக்குகள் 5 கோடி 5 லட்சத்துக்கும் குறைவானது. இருப்பினும், தேர்தல் குழு கணக்குப்படி புஷ் 271 பேர்களின் ஆதரவையும், அல்கோர் 266 பேர்களின் ஆதரவையும் பெற்றதால் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புளோரிடா மாநிலத்தில் அல்கோர் பெற்ற வாக்குகள் 29,12,253; புஷ் பெற்ற வாக்குகள் 29,12,790. இதன் விளைவாக, 543 வாக்குகள் அதிகம் பெற்ற புஷ் புளோரிடா மாநிலத்தின் 26 தேர்தல் குழுவினரின் ஒட்டுமொத்தமான எண்ணிக்கையை கூடுதலாகப் பெற்று அதிபர் ஆகிவிட்டார். இதைக் கவனிக்கும்பொழுது, அமெரிக்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கு அதிகமான வாக்குளை அல்கோர் பெற்றிருந்தாலும், புளோரிடா மாநிலத்தில் 543 வாக்குகள் குறைந்ததால், அவருக்கு அதிபர் பதவி கிடைக்கவில்லை.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட வினோதமான அதிபர் தேர்தல் குழு மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து பலராலும் கூறப்பட்டு வருகிறது. தற்பொழுது அமெரிக்காவில் பேராதரவு உள்ளவராகத் திகழும் பாரக் ஒபாமா சில மாநிலங்களில் ஏற்படும் தடுமாற்றங்களை மீறி, அவரே அதிகமான ஆதரவுடன், வாக்குகளுடன் அதிபராக வெளிப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
நன்றி : தினமணி

அனைவருக்கும்... பங்கு?

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ. 1 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாக ஆசிரியர் அமைப்புகளே கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த முறைகேடுகளை முறைப்படி விசாரிக்க வேண்டும் என்று தமிழக கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் வேலூர் மாவட்டத்தில் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடந்துள்ளன என்று ஆசிரியர் அமைப்புகள் சொல்லும்போது கல்வித் துறை மீது நமக்கு மேலதிகமான கவலை ஏற்படுகிறது.
சர்வ சிக்ஷ அபியான் (எஸ்எஸ்ஏ) எனப்படும் அனைவருக்கும் கல்வித் திட்டமானது, மத்திய, மாநில அரசு நிதி பங்களிப்புடன், 2010ம் ஆண்டுக்குள், 6 வயது முதல் 14 வயதுள்ள அனைவரையும் கல்வி கற்கச் செய்யும் திட்டம்.
இந்த நோக்கத்தை அடைவதற்காக, புதிய பள்ளிகளை உருவாக்குதல், புதிய கற்றல் சூழலை உருவாக்குதல், கழிவறைகள் மற்றும் கூடுதல் கட்டடங்களை ஏற்படுத்துதல், கற்றல் கருவிகள் வாங்கித் தருதல், ஊனமுற்ற குழந்தைகளுக்கு நிதியுதவி செய்தல், ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் நடத்துதல், தொடக்கப் பள்ளி அளவிலேயே கணினியை அறிமுகம் செய்தல், கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமுதாய நிகழ்ச்சிகளை நடத்துதல் எனத் திட்டத்தின் நோக்கம் பலவாக விரிந்து கொண்டே செல்கிறது.
மத்திய அரசின் அறிக்கைப்படி, 20072008 நிதியாண்டில், மார்ச் 2008 வரை மத்திய அரசின் பங்காக ரூ.464 கோடியும், மாநில அரசின் பங்காக ரூ.197 கோடியும் நிதி அளிக்கப்பட்டு, ரூ.614 கோடி செலவழிக்கப்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இதில் புதிய பள்ளிக் கட்டடங்களுக்காக ரூ.100 கோடியும், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்காக ரூ.77 கோடியும் கற்றல் கருவிகள் வாங்க ரூ.5 கோடியும் செலவிடப்பட்டது என்பது மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள புள்ளிவிவரம்.
கற்றல் கருவிகளை பள்ளித் தலைமையாசிரியரே வாங்கலாம் என திட்டம் அனுமதித்தாலும், இவை மாவட்ட அளவில் ஒரே அதிகாரியால் ஒரே கடையில் கொள்முதல் செய்யப்பட்டு, பல நேரங்களில் ஒரே ரசீது மட்டுமே அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளாட்சித் தணிக்கையின்போது மாவட்ட அளவில் "சுழல்கிறது'. இந்த ரசீதுகளில் நம்பகத்தன்மை இல்லாதது குறித்து உள்ளாட்சி தணிக்கைத் துறை அலுவலர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பு எழுதி வைத்தும்கூட, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கற்றல் கருவி வாங்குவது மிகச் சிறிய அளவிலான செலவுதான். ஆனால் கட்டடங்கள் கட்டுவதற்கான நிதியில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. தலைமையாசிரியர் பெயருக்கு நிதி வழங்கப்பட்டாலும், பள்ளி அமைந்துள்ள பகுதியின் உள்ளாட்சி அமைப்பின் தலைவரும் பள்ளித் தலைமையாசிரியரும் வங்கியில் கூட்டுக்கணக்கு தொடங்கி, இந்தப் பணத்தை கட்டடத்துக்காக செலவிட்டு, கணக்குகளை தணிக்கைத் துறைக்கு காட்ட வேண்டும்.
ஆனால், இதில் 50 சதவீதத்துக்கு அதிகமான பணம், கட்டடத்துக்குப் போகவில்லை என்பதும், உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள் இதில் நிறைய விளையாடியதுடன், இந்த "ஆட்டத்தில்' கல்வித் துறை அலுவலர்களையும் சேர்த்துக்கொள்வதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நடந்துள்ளது என்று ஆசிரியர் அமைப்புகள் சொல்லும்போது, இத்தனை காலம் ஏன் இந்தப் பிரச்னையை எழுப்பாமல் காலம் கடத்தினார்கள் என்று அவர்கள் மீது தார்மிக கோபம் இயல்பாக எழுகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் முறைகேடு நடந்ததால்தான் இத்திட்டத்தில் நடைபெற்றுவரும் அனைத்து முறைகேடும் தற்போது வெளியே வரத்தொடங்கியுள்ளன.
ஊனமுற்ற குழந்தை ஒவ்வொன்றுக்கும் ரூ. 1200 செலவிடவும் அந்தக் குழந்தைகள் பள்ளிகளுக்கு சக்கர நாற்காலியில் வந்தால் அவர்கள் சிரமம் இல்லாமல் வகுப்பறைக்குச் செல்ல சாய்தளம் அமைக்கவும்கூட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இவற்றை காண்பது அரிது.
கிராமத் தொடக்கப் பள்ளி என்றாலும்கூட, கணிப்பொறியை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காக மாவட்டத்துக்கு ரூ. 50 லட்சம் இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அந்தத் திட்டமும் முறைப்படி செயல்படுத்தப்படவில்லை. சமூக மக்களிடையே கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ. 50 லட்சம் நிதியை இத்திட்டம் அனுமதிக்கிறது. ஆனால் நாம் பார்த்ததெல்லாம், பள்ளிக் குழந்தைகளுடன் அந்தந்தப் பகுதியில் நடத்தப்பட்ட ஒருநாள் ஊர்வலம் மட்டுமே.
இந்த முறைகேடுகளைக் கண்டறிய தனிக் குழுக்கள் அமைத்து மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என்பதே ஆசிரியர் அமைப்புகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.
நன்றி :தினமணி

தாராளமயம் தந்த "பரிசு'

அனைத்து கெட்ட காரியங்களுக்கும் பணம்தான் மூல காரணம் என்கிறது பைபிள். போதுமான பணமின்மைதான் கெட்ட காரியங்களின் ஆணி வேர் என்கிறார் தத்துவமேதை பெர்னார்ட் ஷா.
இந்த இரண்டு விஷயங்களும் பொருந்துமிடம் ஒன்று உள்ளது என்றால் அது பங்குச் சந்தைதான்.
பங்குச் சந்தையில் சிறிய முதலீட்டாளராக இருந்தாலும் சரி, அல்லது அதிக அளவில் முதலீடு செய்பவராக இருந்தாலும் சரி வானவில்லின் அழகிய தோற்றம் போன்ற பங்குச் சந்தை ஏற்றத்தால் ஈர்க்கப்படுவர். வானம் மட்டுமல்ல வானவில்லும் தொட்டுவிடும் தூரம்தான் என பங்குச் சந்தையில் உயரே பறப்பவர் அதிகம். பணத்தின் மீதான தேடலைப்பொருத்து மனிதனுக்கு மனிதன் இது மாறுபடும்.
கடைசியில் வானவில்லை பிடிக்கப் போன மனிதனுக்கு என்ன கதி ஏற்படுமோ அந்த கதியைத்தான் கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அனுபவித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் 21 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் இன்று 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழாகச் சரிந்து விட்டது.
இதற்குக் காரணம் என்ன? இந்தியப் பங்குச் சந்தை என்ற சிறிய வட்டத்திலிருந்து, உலக பங்குச் சந்தையாக மாறியதுதான் முக்கியக் காரணம். ஆம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கதவுகள் திறந்து விட்டதிலிருந்தே இப்பிரச்னை தொடங்கிவிட்டது.
இந்தியாவில் தொழில் தொடங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், சர்வதேச அளவில் சரிவைச் சந்திக்கும்போது அதன் தாக்கத்தையும் இந்திய முதலீட்டாளர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம். அமெரிக்காவில் தொடங்கி இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பங்குச் சந்தையை மட்டுமல்ல, தொடர்ச்சியாக பல்வேறு துறைகளையும் இது பாதிக்கும். இதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் பல நாடுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன.
1930களில் இதுபோல அமெரிக்காவில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு அது பிற நாடுகளை பாதித்தது. இந்தியாவில் அதன் தாக்கம் தெரிந்ததா? என்பதை உணர முடியாத நிலை. அதற்குக் காரணம் அப்போது இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததுதான்.
ஆனால் "பெரு மந்தம்' எனப்படும் தேக்க நிலை பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகி அது பல நாடுகளையும் பாதிப்புக்குள்ளாக்கியது என்பதுதான் உண்மை. ஆனால் ஒவ்வொரு முறையும் சரிவுக்கான காரணம் மாறிக் கொண்டிருப்பதுதான் இதன் சிறப்புத் தன்மை.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகமயமாக்கலை அமெரிக்கா தொடங்கி, பிற நாடுகள் தம்மை சார்ந்திருக்கும் சூழலை உருவாக்கியது. அதனால்தான் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டாலும், கத்தரீனா சூறாவளி வீசினாலும் இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.
இதனால்தான் தற்போதைய சிக்கலுக்கு உலக நாடுகளுடன் சேர்ந்து தீர்வு காண அமெரிக்கா முயல்கிறது. அதற்காகத்தான் தனி மாநாட்டை கூட்டியிருக்கிறார் அதிபர் புஷ்.
1991களில் பொருளாதார தாராளமயம் என்ற கடிவாளம் இல்லாத காட்டுக் குதிரையில் சவாரி செய்ய அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு வழிகாட்டியவர் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்தான்.
கட்டுப்பாடற்ற வர்த்தக முறையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்ற மாயையில் அடுத்து வந்த பாஜக அரசும் இதே பாணியைத் தொடர்ந்தது. தற்போது சோனியா தயவால் பிரதமர் பதவியில் உள்ள பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கின் ஆலோசனையில் அவரை அடியொற்றி பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் ப. சிதம்பரமும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊதுகுழலாகவே மாறிவிட்டார்.
பங்குச் சந்தை முதலீட்டில் ஈடுபட்டுள்ளவர்களின் சதவிகிதம் வெகு சொற்பமே. ஆனால் அவர்களின் நலன் காக்க ஏறக்குறைய ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு இனங்களில் ரிசர்வ் வங்கி மூலம் விடுவித்துள்ளார் சிதம்பரம்.
ஆனால் பங்குச் சந்தை பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது ஓராண்டுக்கு மேலாகும் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் வங்கிகளை வலுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய அரசு என்பதே சாதாரண ஏழை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு. இதன் தாக்கம் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கும் என்ற நிலையில் அதைக் காக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது அனைவருக்கும் புரியாத புதிர்.
தாராளமயத்தைக் கடைப்பிடித்த போதிலும் சுயச் சார்பு நிலையைக் கைவிடாததால், சர்வதேச தாக்கம் சீனாவில் அதிக அதிர்வலையை ஏற்படுத்தவில்லை. இதை நமது ஆட்சியாளர்கள் உணர்ந்தால் மட்டுமே நமக்கு விமோசனம்.
சுதந்திரத்துக்கு முன்னரே சுயச் சார்புக் கொள்கையை வகுத்தவர் மகாத்மா. பொருளாதார வளர்ச்சிக்கு அரசுத் துறை நிறுவனங்களை உருவாக்கியவர் ஜவாஹர்லால் நேரு. ஆனால் தாராளமய கொள்கையைக் கைக்கொண்ட பிறகு அரசுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்தப்படவில்லை. நாட்டின் பிரதானமான வேளாண்துறை பின்னுக்குத் தள்ளப்பட்டது. சேவைத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால் இருக்கும் நிறுவனங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் தனியார்மயக் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இந்தியா பாடம் கற்றுத் திருந்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சர்வதேச தாக்குதல்கள் இந்தியாவை பாதிக்காமலிருக்கும். ஏழை இந்தியனின் நலன் காக்கப்படும்.
எம். ரமேஷ்
நன்றி : தினமணி