Thursday, November 6, 2008

காலம் கடந்த ஞானம்

20ம் நூற்றாண்டில் மகத்தான அறிவியல் சாதனைகளின் காரணமாக உணவுப்பொருள் உற்பத்தி பன்மடங்கு பெருகியபோதிலும் உலகின் பல பகுதிகளில் மக்கள் கால் வயிறு, அரை வயிறு உணவு மட்டுமே பெற முடிவது மனித இனத்துக்கே தலைகுனிவை உண்டாக்கும் விஷயம்.
இயற்கையைப் பாதுகாக்கிறதாகச் சொல்லிக்கொண்டு வதந்திகளையும் புரளிகளையும் பரப்புகிற ஒரு கூட்டம்தான் இந்த விஷயத்தில் குற்றம்சாட்டப்பட வேண்டியவர்கள். உதாரணமாக மரபு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குறைந்த செலவில் அதிக விளைச்சலைத் தருவதாக நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவற்றை எதிர்த்துக் கூச்சல் போட எல்லா நாடுகளிலும் ஒரு கூட்டம் இருக்கிறது.
இளவரசர் சார்லஸ் போன்ற பிரமுகர்கள் மரபு மாற்றப்பட்ட பயிர்களை எதிர்த்துக் குரலெழுப்பும்போது குறிப்பாக மேலைநாட்டு ஊடகங்கள் அவர்களுக்குப் பெரும் விளம்பரத்தை அளிக்கின்றன. மரபு மாற்றம் செய்த பருத்தியைச் சரியான முறையில் சாகுபடி செய்து லாபம் சம்பாதித்த விவசாயிகளை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. மாறாக, போலி விதைகளையும் தவறான உத்திகளையும் கையாண்டு சீரழிந்த விவசாயிகளைத்தான் அவை பிரபலப்படுத்துகின்றன. இத்தகைய விஷமங்களுக்கு மேலை நாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் நிகழும் அதர்மப் போட்டியே காரணம்.
1960களில் இயற்கையைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு அணுமின் நிலையங்கள் நிறுவப்படுவதை இக்கூட்டம் தடுத்தது. அதன் காரணமாகவே இன்று பெட்ரோல், டீசல் விலையேற்றமும் ஆற்றல் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளன. இன்று அதே கூட்டம் எத்தனால் பெட்ரோலை உற்பத்தி செய்வதற்காக சோளம், கரும்பு போன்ற பயிர்களைப் பயிரிட உதவித்தொகை தரும்படி அரசுகளைக் கட்டாயப்படுத்துகிறது. அதன் காரணமாக உணவுப் பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
அடுத்து இயற்கைக் காவலர்கள் மனிதச் செயல்களால் உலகின் சராசரி வெப்பநிலை உயர்ந்து கொண்டிருப்பதாகவும், துருவப் பகுதிகளிலுள்ள பனியாறுகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து பல கடற்கரையோர ஊர்களையும், சிறு தீவுகளையும் இன்னும் பத்தாண்டுகளில் மூழ்கடித்துவிடும் என்று மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலை நாடுகளின் அரசுகளும் தொழிலதிபர்களும் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளிலுள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமில வாயு போன்ற பசுங்குடில் வாயுக்களே இதற்குப் பொறுப்பு எனப் பழி போடுகின்றனர். அதன் மூலம் வளரும் நாடுகளின் தொழில் வளப் பெருக்க வேகத்தை முடக்குவதே அவற்றின் இலக்கு என்பது தெளிவு.
ரஷிய விஞ்ஞானிகள் தென்துருவத்தில் 3.5 கிலோமீட்டர் ஆழத்திலிருந்து பனிக்கட்டி மாதிரிகளை எடுத்துச் சோதித்துக் கடந்த நான்கு லட்சம் ஆண்டுகளில் வாயு மண்டலத்தின் கூட்டமைப்பிலும் உலகளாவிய வெப்பநிலையிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றின் மூலம் உலக வெப்ப நிலை உயர்வுக்குக் கரியமில வாயுச்செறிவு அதிகரித்தது காரணமில்லை எனவும் அதற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்தது தான் கரியமில வாயுச்செறிவு அதிகரித்ததற்குக் காரணம் என்று அவர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். வாயு மண்டல வெப்பநிலை உயர்ந்து 500, 600 ஆண்டுகளுக்குப் பின்னரே கரியமில வாயுச்செறிவு உயரத் தொடங்குகிறது. அதாவது இன்று வாயு மண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு உயர்வதற்கு 300 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மேலைநாட்டுத் தொழிற்புரட்சிச் சம்பவங்களே கூடக் காரணமாயிருக்கலாம்.
அத்துடன் கரியமில வாயுவைவிட 5 முதல் 10 மடங்கு அதிகமான செறிவில் நீராவி வாயு மண்டலத்தில் பரவியிருக்கிறது. வாயு மண்டலத்தின் வெப்பநிலை உயர்வுக்குக் கரியமில வாயுவைவிட நீராவியன் பங்குப்பணி பன்மடங்கு அதிகம் என ரஷிய விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சூரியப்புள்ளிக் கதிர்வீச்சு, பூமியின் அச்சுத் தலையாட்டம் கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள், கடலின் மேற்பரப்பில் உப்பின் செறிவு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களாலும் உலகளாவிய வெப்பநிலை உயரும். எனவே கரியமில வாயுவை மட்டும் அதற்குப் பொறுப்பாக்கக் கூடாது. உண்மையில் வாயு மண்டலத்தில் கரியமில வாயு அதிகமாகிறபோது கடல்களிலும் நிலங்களிலும் தாவரங்களும், பயிர்களும் காடுகளும் பெருகியிருக்கின்றன என்று ரஷிய விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இன்றிருப்பதைவிடப் பத்து லட்சம் மடங்கு அதிகமான செறிவில் கரியமிலவாயு பரவியிருந்த காலகட்டங்களில் கூட உயிரினப் பரிணாமம் குலைந்து விடவில்லை என அருட்யுனாவ் என்ற ரஷிய விஞ்ஞானி கூறுகிறார். உலகின் சமன்செய்யும் அமைப்புகள் வானிலையில் ஏற்படும் தீவிர மாற்றங்களின் கடுமையைக் குறைத்து விடுகின்றன. உதாரணமாக வெப்பநிலை உயர்ந்தால் கடல் நீர் அதிக அளவில் ஆவியாகிக் கனத்த மேகங்கள் தோன்றிச் சூரியக்கதிர்களைத் தடுத்துப் பூமிப்பரப்பின் வெப்பத்தைக் குறைக்கும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வளிமண்டல வெப்பநிலை உயர்வைத் தடுப்பதற்கான கியோட்டோ விதிமுறைகள் மேலைநாடுகளின் அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் வளர்ந்து வரும் நாடுகளை முடக்கி விடச் செய்த சதி என கபிட்சா என்ற ரஷிய அறிஞர் கூறுகிறார். அவற்றுக்கு எதிரான கருத்துகளைக் கூறுகிறவர்களுக்குச் சர்வதேச அரங்குகளில் பேச அனுமதி கிடைப்பதில்லை. மேலைநாட்டு ஊடகங்கள் அவர்களை இருட்டடிப்புச் செய்கின்றன. அவர்களுடைய ஆய்வுக்கட்டுரைகள் மர்மமாகக் காணாமல் போக்கப்படுகின்றன.
ஆற்றல் செலவைக் குறைக்கவும், அதிகச் செயல்திறனுள்ள தொழில் உத்திகளை உருவாக்கவும் கியோட்டோ விதிமுறைகள் செய்யும் முயற்சிகளை வரவேற்கலாம். ஆனால் அது நிஜமான சுற்றுச்சூழல் பிரச்னைகளையும், நிலமும் நீரும் தொழில் துறையினரால் மாசுபடுத்தப்படுவதையும் கண்டுகொள்வதில்லை. அது கரியமில வாயுவில் மட்டுமே அளவுக்கு அதிகமான கவனத்தைச் செலுத்துகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் குளிர்சாதனங்களில் பயன்படுத்தப்படும் இஊஇ வாயுக்கள் வளிமண்டல மேற்பரப்பில் உள்ள ஓசோன் படலத்தை அழித்து ஓட்டையாக்குவதாகவும் அதன் மூலம் மக்களுக்குத் தோல் புற்றுநோய் உண்டாகும் எனவும் பெரிதாகப் பிரசாரம் செய்யப்பட்டது. 1982ல் மான்ட்ரியால் விதிமுறைகள் அந்த வாயுக்களின் பயன்பாட்டைத் தடை செய்தது. அதற்கு மாற்றாக பிரியான் என்ற வாயுவைப் பயன்படுத்த உலக நாடுகள் வற்புறுத்தப்பட்டன. அதற்கு ஏகபோகக் காப்புரிமை பெற்றிருந்து டூபான்ட் என்ற அமெரிக்க நிறுவனம் பல்லாயிரம் கோடி டாலர் லாபமடைய அந்தத் தடை உதவியது. ஆனால் இஊஇ வாயுக்கள் ஓசோன் படலத்துக்கு அருகில் கூடப் போவதில்லை என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. பிரியான் வாயு நச்சுத்தன்மையும், வெடிக்கும் தன்மையும் கொண்டது என்று தெரிய வந்ததும் பிரியான் விற்பனை படுத்துவிட்டது.
1970களில் உலக வெப்பநிலை சற்றுக்குறைந்தபோது இதே மேலை நாட்டு அறிஞர்கள் பனியுகம் வரப்போவதாயும் உலகம் முழுவதும் உறைந்து விடப் போவதாயும் பெருங்குரல் எழுப்பினார்கள். அதற்கு வளரும் நாடுகளின் தொழில் துறைகள் வெளியிடும் புகையும் தூசுகளும் சூரியக் கதிர்களைத் தடுப்பதாகக் காரணம் சொன்னார்கள்.
உண்மையில் சூரியப்புள்ளி விளைவு காரணமாக 30 ஆண்டுகளுக்கு வாயுமண்டல வெப்பநிலை படிப்படியாகக் குறைவதும் அடுத்த 30 ஆண்டுகளுக்குப் படிப்படியாக அதிகரிப்பதாயும் தான் இருக்கிறது என்று ரஷிய ஆய்வுகள் காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் அன்டார்டிக்காவில் சராசரி வெப்பநிலை குறைந்து வருவதாயும் அங்குள்ள பனிப்பாறைகளின் அளவு அதிகரித்து வருவதாயும் அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கே.என். ராமசந்திரன்
நன்றி : தினமணி

வெள்ளை மாளிகையின் கறுப்பு நிலா!

1964ம் ஆண்டு பிரபல ஆங்கில நாவலாசிரியர் இர்விங் வேலஸ் எழுதிய "தி மேன்' என்கிற புத்தகம் வெளிவந்தபோது, அவரது கற்பனை அடுத்த அரை நூற்றாண்டு காலத்திற்குள் நனவாகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் டக்ளஸ் தில்மன் என்கிற கறுப்பர் இன அமெரிக்க செனட்டின் தலைவரை, அதிபராக்கி வெள்ளை மாளிகையில் கோலோச்ச வைப்பதும், தில்மன் அந்தச் சவால்களை எதிர்கொள்ளும் விதமும்தான் இர்விங் வேலஸுடைய நாவலின் கரு.
"தி மேன்' நாவலின் நாயகன் டக்ளஸ் தில்மனுக்கும், அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பராக் ஹுசைன் ஒபாமாவுக்கும், இருவரும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு எந்தவித ஒற்றுமையும் கிடையாது. ஆனால், "தி மேன்' நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்த பல லட்சம் வாசகர்களின் கனவு இன்று நனவாகி இருக்கிறது. அந்தக் கனவை நனவாக்கிய பெருமை பராக் ஒபாமாவைச் சாரும்.
பராக் ஒபாமாவின் வெற்றியும், ஒரு கறுப்பர் இனத்தவர் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், மனித சமுதாயத்தின் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய இன்னொரு நாள். பராக் ஒபாமாவின் வெற்றி, மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, மானுடம் இன வேறுபாடுகளையும், நிற வேறுபாடுகளையும் கடந்து சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது என்பதற்கு சரித்திரச் சான்று பகர்ந்திருக்கிறது என்பது 21ம் நூற்றாண்டுக்கே கிடைத்திருக்கும் வெற்றி இது!
பராக் ஒபாமாவின் வெற்றிக்குப் பின்னால் இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனத்திற்குரியவை. முதலாவது, அவர் நிறவெறிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய குடியரசுக் கட்சியின் பிரதிநிதி அல்லர். மாறாக, அடிமைத்தனத்தை ஆதரித்த ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர். முதலாளிகளின் கட்சி என்றும் மாற்றத்தை விரும்பாதவர்கள் என்றும் முத்திரை குத்தப்பட்ட ஜனநாயகக் கட்சி, தனது வேட்பாளராக முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரியைத் தேர்ந்தெடுக்காமல், கறுப்பர் இனத்தவரான பராக் ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தது என்பதே மிகப்பெரிய சமுதாயப் புரட்சி என்றுதான் கூற வேண்டும்.
இரண்டாவதாக, கறுப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள் அல்லாதவரின் வாக்குகளை மட்டும் பராக் ஒபாமா பெற்றிருந்தால், வெற்றிக்கு அருகில்கூட போயிருக்க முடியாது. பெருவாரியாக உள்ள அமெரிக்க வெள்ளையர்கள் வாக்களித்து ஒபாமாவைத் தங்களது அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது, மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.
""கறுப்பர் என்பதால் தகுதியில்லாத ஒருவரை ஆதரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது!'' என்று சொன்ன மார்டின் லூதர்கிங்கின் அறிவுரையை அமெரிக்க வெள்ளையர்கள் பின்பற்றி இருக்கிறார்கள் என்றால், பராக் ஒபாமாவின் தகுதி நிர்ணாயகமான பங்கு வகித்திருக்கிறது. இது நடக்குமா என்று சந்தேகப்பட்ட உலகத்தை, அதை நடத்திக்காட்டி அதிசயிக்க வைத்திருக்கிறார்கள் அமெரிக்க வாக்காளர்கள். மக்களாட்சித் தத்துவத்துக்கு தாங்கள்தான் முன்னோடிகள் என்பதையும், சமுதாய மாற்றங்களுக்கும் அமெரிக்கா முன்னுதாரணமாக இருக்கும் என்பதையும் பராக் ஒபாமாவைத் தங்களது அதிபராகத் தேர்ந்தெடுத்து நிரூபித்திருக்கும் அமெரிக்கக் குடிமக்களை உலகமே தலைவணங்கிப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது.
அதிபராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் அமெரிக்காவின் அணுகுமுறையிலும், உலகளாவிய கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படுமா என்றால் சந்தேகம்தான். பொருளாதாரக் கொள்கையிலும் சரி, வெளிவிவகாரக் கொள்கையிலும் சரி, ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் அணுகுமுறையில் பெரிய வித்தியாசம் கிடையாது. மேலும், 1929க்குப் பிறகு, அமெரிக்கா சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதாரக் குழப்பத்தை எதிர்கொண்டு சமாளிக்கும் பொறுப்பை அதிபர் பராக் ஒபாமா ஏற்றிருக்கும் வேளை இது. இந்தச் சூழலில் முந்தைய ஜார்ஜ் புஷ் அரசின் நடவடிக்கைகளிலும், கொள்கைகளிலும் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்த அவரால் நிச்சயம் முடியாது.
அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த அமெரிக்காவுக்கும் இன்றைய அமெரிக்காவுக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றமுண்டு. உலகின் பல பகுதியைச் சேர்ந்த இனத்தவர்களும் அமெரிக்காவில் குடியேறி அதை ஓர் உலகக் கலாசாரங்களின் கலவையாக மாற்றி விட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கறுப்பர் இனத்தவர் ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது தார்மிக ரீதியாக, அந்த நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள உத்வேகத்தையும், நெஞ்சுரத்தையும் அளிக்கும்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றும் சாதுர்யம் இருப்பவர்தான் புத்திசாலி. நல்ல தலைவர். வெள்ளை மாளிகையில் உதித்திருக்கும் கறுப்பு நிலாவான பராக் ஹுசைன் ஒபாமா தன்னை ஒரு நல்ல தலைவர் என்று நிரூபிக்க நமது மனமார்ந்த வாழ்த்துகள்!
நன்றி : தினமணி

நனவாகுமா கனவு?

அனைவருக்கும் கல்வி என்கிற முழக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே எழுப்பப்பட்டு, தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என்கிற முனைப்பு அடித்தட்டு ஏழை, எளிய மக்கள்வரை ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய மெளனப் புரட்சி என்றுதான் கூற வேண்டும். என் குழந்தை எதற்காகப் படிக்க வேண்டும், பெண் குழந்தைகளுக்குக் கல்வி எதற்கு என்றெல்லாம் கேட்ட காலம் கனவாக மறைந்திருப்பது ஒரு மிகப்பெரிய சமுதாய மாற்றம்.
கடந்த 60 ஆண்டுகளாக அரசுத் தரப்பில் என்னென்னவோ முயற்சிகள் செய்தும், இன்னும் முழுமையாகப் பள்ளிக்குச் செல்லும் ஒரு தலைமுறையினரை இந்தியா காணவில்லை என்பது நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கும் விஷயம். பணக்காரர்களும், உயர் மத்திய தர வகுப்பினரும் பெறும் கல்வி, மத்தியதர வகுப்பினருக்குக் கிடைப்பதில்லை என்றால், ஏழை, எளிய மக்களும், வசதி இல்லாதவர்களும் தரமான கல்வியைக் கனவுகூடக் காண முடியாது என்கிற நிலைமை இன்னும் பல மாநிலங்களில் தொடர்கிறது.
பெற்றோருக்கு ஆசை இருந்தும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையும், அதற்கான செலவைத் தாங்கிக் கொள்ளும் வசதியும் இல்லாதவர்கள் இந்தியாவில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்; இந்த அப்பட்டமான உண்மையை நம்மில் பலரும் உணரவோ ஏற்றுக்கொள்ளவோகூடத் தயாராக இல்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், அடிப்படைக் கல்வி பெறுவதை ஒவ்வொரு குழந்தையின் ஜீவாதார உரிமையாக்க வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் குரலெழுப்பத் தொடங்கினார்கள். அதன் தொடர்விளைவாக, 6 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகளின் அடிப்படை உரிமையாக கல்வி கற்றுத் தரப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதியில் சொல்லத் தொடங்கின. கல்வி பெறும் உரிமைச் சட்டம் என்கிற பெயரில் ஒரு மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று சட்டமாகும்போது, அது அனைவருக்கும் கல்வி என்கிற கனவை நனவாக்கும் முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய உதவியாக இருக்கும். ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்ட 86வது அரசியல் சட்டத் திருத்தப்படி, இலவசக் கட்டாயக் கல்வி என்பது ஒவ்வோர் இந்தியக் குழந்தையின் ஜீவாதார உரிமையாக்கப்பட்டதே தவிர அந்த உரிமையைப் பெற்றுத் தருவதற்கு எந்த வழிமுறையும் கூறப்படவில்லை. இந்த மசோதா சட்டமாவதன் மூலம் அந்தக் குறை தீர்க்கப்படும்.
கல்வி பெறும் உரிமைச் சட்டம், மாநில மற்றும் மத்திய அரசுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்கிற விதிமுறைகளை வகுப்பதுடன், அத்தனை இந்தியக் குழந்தைகளும் கல்வி பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்கி, இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வழிகோலும் என்பதுதான் இதன் முக்கியத்துவத்துக்குக் காரணம். தரமான கல்விக்கு உத்தரவாதம் அளிக்கும் பொறுப்பும், இந்தத் திட்டத்தை முறையாக நிறைவேற்றும் கடமையும் அரசுக்கு ஏற்படுகிறது. இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ. 12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
கடந்த இரண்டாண்டுகளாகக் கடுமையான எதிர்ப்பை இந்த மசோதா சந்தித்து வந்தது. நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் மற்றும் திட்டக் கமிஷன் ஆகியவை ஏதாவது காரணம் காட்டி இந்த மசோதாவுக்கு முட்டுக்கட்டை போட்டவண்ணம் இருந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வந்தபோது, திட்டக் கமிஷனின் குறுக்கீட்டால் இந்த மசோதா அமைச்சரவையின் உயர்நிலைக் குழுவுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு விட்டது. அதற்குக் காரணம், கல்வித்துறை மாநில அரசின் அதிகார வரம்புக்கு உள்பட்டது என்பதால், ஒதுக்கப்பட்ட நிதியை, எப்படி பகிர்ந்து கொள்வது என்கிற பிரச்னை எழுந்ததுதான்.
இப்போது ஒரு வழியாக மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துவிட்டது என்றாலும், இந்த மசோதாவின் தலையெழுத்து இன்னமும் தீர்மானமாகி விட்டதாகக் கருத முடியாது. மசோதா, அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலத் தொடரில் நிறைவேற்றப்படாமல் போனால், இந்த அவை கலைக்கப்படுவதுடன் மசோதாவும் காலாவதியாகிவிடும். அடுத்துவரும் அரசு, முதலிலிருந்து மறுபடி தொடங்கி மீண்டும் இந்த மசோதாவை அடுத்த அமைச்சரவையின் ஒப்புதலுடன் நிறைவேற்ற வேண்டிவரும்.
தரமான அடிப்படைக் கல்வி, பள்ளி இறுதித் தேர்வுவரை இந்தியாவிலுள்ள அத்தனை குழந்தைகளுக்கும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும். பள்ளி இறுதித் தேர்வுவரை அனைத்துப் பள்ளிகளுமே அரசுப் பள்ளிகளாகச் செயல்பட வேண்டும். ஏழை, பணக்காரன், மேலோன், கீழோன், ஆண்டான், அடிமை என்கிற பாகுபாடுகள் அகல, அதுதான் அடிப்படையாக இருக்கும். அப்படியொரு கனவு நனவாகிறதோ இல்லையோ, ஒவ்வோர் இந்தியக் குழந்தையும் கல்வி அறிவு பெற்ற குழந்தையாகவாவது இருத்தல் வேண்டும்.
கல்வி பெறும் உரிமைச் சட்டம் என்பது ஒரு நீண்ட நாள் கனவு. அதை மன்மோகன் சிங் அரசு நனவாக்குமேயானால், இந்த அரசின் மிகப்பெரிய சாதனை அதுவாகத்தான் இருக்கும்!
நன்றி : தினமணி