Saturday, November 8, 2008

மானம் இழந்த விவசாயம்

சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு கர்ணனைப் போல் வாழ்ந்த விவசாயிகள் இன்று குசேலர்களாகி விட்டார்கள். இன்று கிராமங்களில்கூட ஓட்டல்கள் உண்டு. காசுக்கு உணவு உண்டு. அந்தக் காலத்தில் கிராமங்களில் ஓட்டலும் இல்லை. வழிப்போக்கனிடம் காசும் இருக்காது. விவசாயிகள் கூப்பிட்டு அழைத்து வழிப்போக்கர்களுக்கு இலை போட்டு சாப்பாடு வழங்குவார்கள். அன்று கொடையாளியாக வாழ்ந்த விவசாயிகளின் வாரிசுகள் இன்று விருந்தினர்களாக வரும் சொந்தக்காரர்களுக்குக் கூட வயிராற ஒரு வேளை சோறு போட வக்கில்லாத தரித்திர நாராயணர்களாகிவிட்டார்கள்.
"மிகவும் தவறான விவசாய விலைக் கொள்கையைப் பின்பற்றி விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கிவிட்டுக் கடன் தள்ளுபடி... அது... இது... என்று ஏமாற்றுகிறார்கள். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் இல்லை. மானியமும் வேண்டாம். கடன் தள்ளுபடியும் வேண்டாம். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்குரிய விலை வழங்கப்பட்டாலே போதும்' இப்படிச் சொல்வது நான் மட்டுமல்ல, விவசாயிகள் சங்கத் தலைவரான மகேந்தர் சிங் திகாயத் கூறுவதும் இதுவே.
திகாயத் மேலும் கூறுகையில், ""1966ல் ஒரு டிராக்டர் விலை ரூ. 11,000. இன்று அதுவே ரூ. 3 லட்சமாகிவிட்டது. 40 பைசாவுக்கு விற்ற டீசல் இன்று ரூ. 34. உரம், பூச்சிமருந்து, விதை விலைகள் நூறு மடங்கு உயர்ந்துவிட்டன. 1966ல் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைத்தது. இன்று வாரத்தில் 3 நாள்கள் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. 1966ல் 100 கிலோ கொண்ட ஒரு கோதுமை மூட்டையை விற்று 5 மூட்டை சிமெண்ட் வாங்கினோம். இன்று 1 மூட்டை சிமெண்ட் வாங்க 5 மூட்டை கோதுமையை விற்க வேண்டும். 10 கிராம் தங்கம் அன்று ரூ. 250. இன்று ரூ. 11,000. அன்று கோதுமைக்கு ரூ. 760 என்றும் கரும்புக்கு ரூ. 130 (1 டன்) என்றும் நிர்ணயித்தார்கள். இன்று கோதுமைக்கு ரூ. 1,000 என்றும் கரும்புக்கு ரூ. 818 என்றும் நிர்ணயமாகியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த விலையேற்ற அடிப்படையில் கவனித்து கோதுமைக்குரிய விலை ரூ. 3,000 என்றும் கரும்புக்கு ரூ. 2,500 என்றும் நிர்ணயம் செய்வதுதான் நியாயம்''.
திகாயத் கூறியுள்ளதை இன்றுள்ள எதார்த்தங்களை வைத்து கவனித்தால் அவர் கூறியுள்ளதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
உலகமயமாதல் விளைவால் விற்பனைப் பொருள்களில் தடையற்ற வணிகம் என்பது ஏனோ அரிசி, கோதுமைக்கு இல்லை. அரிசிக்கும் கோதுமைக்கும் மட்டுமே கட்டுப்பாடான பொருளாதாரம் உள்ளது. அரசு, ஏகபோகமே நிகழ்கிறது. அரசு கொள்முதல் விலையை நிர்ணயிக்கிறது. அப்படி நிர்ணயிக்கப்படும் விலைக்கும் விஷம்போல் ஏறிவரும் சாகுபடிச் செலவுக்கும் தொடர்பே இல்லை. இந்திய விவசாயிகளில் ஐந்தில் நான்கு பேர் நடுத்தர சிறு குறுவிவசாயிகள். நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்வோரும் அடக்கம். பஞ்சாப் ஹரியாணா போன்ற மாநிலங்களில் நிலத்தின் விலை ஏறியதாலும் குத்தகையும் ஏறியதாலும் குத்தகை விவசாயிகளுக்கு நிறைய நஷ்டம். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை 2005 06ம் ஆண்டில் நிகழ்த்திய ஆய்வின்படி 1 ஏக்கர் கோதுமை சாகுபடி செய்ய சுமார் ரூ. 11,000 செலவாகிறதாம். அதில் குத்தகை முன்பணம் மட்டுமே ரூ. 5,000. அதன்பின் கூலி ஆள்கள் சம்பளம் ரூ. 1,700. இயந்திரங்கள், டிராக்டர், டிரில்லர் செலவு ரூ. 2,000. விதை ரூ. 400. உரம் ரூ. 1,100. பூச்சிமருந்து ரூ. 300. வட்டி ரூ. 200. இத்யாதி. இத்யாதி.
கேரள மாநிலத்தில் 2004 05ல் நிகழ்த்திய ஆய்வில் 1 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யவும் ஏறத்தாழ ரூ. 10,500 வரை ஆகிறதாம். இங்கு கூலி ஆள் சம்பளம் மட்டுமே ரூ. 6,000 ஆவதால் கேரள மாநிலத்தில் நெல் சாகுபடி அழிந்து வருவதுபோல் ஹரியாணாவில் கோதுமை சாகுபடி அழிந்து வருவதாக அப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வு கூறுகிறது. பசுமைப்புரட்சியில் கொடிகட்டிப் பறந்த பஞ்சாப், மேற்கு உத்திரப் பிரதேச மாநிலங்களிலும் கேரள வியாதி வந்துள்ளது. கூலிவேலை செய்ய பிகாரிகள் வருகின்றனராம். கூலி ஆள் சம்பளம் பற்றி அந்த நாள்களுடன் இந்த நாள்களை ஒப்பிட்ட திகாயத் கூறும் ஒரு கருத்து மிகவும் சிந்திக்கத்தக்கது.
"கூலிக்கு ஆள்கள் மலிவாகக் கிட்டிய காலத்தில் கூலி ஆள்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். இன்று 1 நாள் ஆண் கூலி ரூ. 120, பெண்கூலி ரூ. 70. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. கூலியை நெல்லாகவோ கோதுமையாகவோ வழங்கப்பட்ட அந்தக் காலத்தில் வேலை இல்லாத நாள்களில் பட்டினியிருக்க மாட்டார்கள். கூலி உயர்வு இருந்தாலும், பணவீக்கம் விலை ஏற்றம் காரணமாக கூலியாள்கள் இன்று வேலையில்லாத நாள்களில் பட்டினி கிடப்பதால் மகிழ்ச்சியாக இல்லை'. எனினும் சாகுபடிச் செலவில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் கூலிச் செலவு உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். சம்பளம் கொடுக்க வக்கில்லாத விவசாயிகளின் மானம் காற்றில் பறந்து கொண்டுள்ளது. விவசாயிகளின் மானம் மரியாதை மட்டுமல்ல; விவசாயமே மானம் இழந்துவிட்டதே. மண்ணுக்கும் மரியாதை குறைந்து வருகிறது.
உரங்களைப் பற்றிய உண்மை நிலவரம் மிகவும் கசப்பாயுள்ளது. 2002க்குப்பின் உரத்திற்குரிய விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. உர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியம் இதனால் படிப்படியாக உயர்ந்து மானியத் தேவை ரூ. 1,19,772 கோடியாக உயர்ந்தது. விவசாயிகளின் நலன் கருதி உரவிலை உயர்த்தப்படவும் இல்லை. அதேசமயம் பட்ஜெட்டில் போதுமான அளவு உரமானியம் ஒதுக்க இயலாமல் துண்டு விழுந்தது. பல உர நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் தலையில் துண்டுபோட்டுக் கொண்டன. அதாவது மூடுவிழா. யூரியா உற்பத்தியில் முதல்நிலை வகித்த ஃபர்ட்டிலைசர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் ஃபர்ட்டிலைசர் லிமிடெட் போன்றவை யூரியா, உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டன. உரமானியம் வழங்கப்படாத காரணத்தினால் மட்டுமல்ல, இறக்குமதி மூலப்பொருள் நாஃப்தா விலை உயர்வு காரணமாகவும் யூரியா விலை உயர்ந்தது.
இனி முழுக்க முழுக்க இறக்குமதி உரத்தை நம்பி இந்தியா வாழப் போகிறதா? இயற்கை விவசாயத்தை நம்பித்தான் வாழப் போகிறதா? இதற்குக் காலம் பதில் சொல்வது இருக்கட்டும். பூச்சிமருந்து விஷயத்தில் ஆரோக்கியமான மாற்றம் தென்படுகிறது.
பூச்சிமருந்து என்பது கொடிய நஞ்சு. அதனால் மனிதருக்கு நோய் ஏற்படுகிறது என்பது மட்டுமல்ல; இந்த விஷத்தின் விலையேற்றமும் (இரண்டு ஆண்டுகளில் 100 சதம்) காரணமாக மாற்றுப் பூச்சிமருந்தாக மூலிகைப்பூச்சி விரட்டி, வசம்பு, பூண்டு, மஞ்சள், திரிகடுகம், திரிபலா, வேப்பம்புண்ணாக்கு போன்றவற்றின் பயன் அதிகரித்துவிட்டது. ஆந்திரப்பிரதேசத்தில் பல கிராமங்களில் பூச்சிமருந்து முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. சற்றுக் கூடுதல் விலையில் பயோமருந்துகளும் அறிமுகமாகிவிட்டன.
எனினும், விவசாயம் மானம் இழக்க மற்றொரு முக்கியக் காரணம் விதை. தன்மானமுள்ள ஒரு விவசாயி காய்கறி விதைகளாகட்டும், நெல், புஞ்சைதானியம், கோதுமை, பயறுவகை விதைகளாகட்டும் சொந்தமாகத் தயாரித்துச் சேமித்தார். வீரியரக விதைகள் அறிமுகமான காலகட்டத்தில் வேளாண்மைத்துறையின் விதைவிற்பனை நிலையங்களைச் சார்ந்து நின்று, விவசாயிகள் தாங்களே அறுவடை செய்து வந்த பாரம்பரிய நெல் ரகங்களைச் சேமிக்காமல், ஐ.ஆர்.8 மற்றும் தைச்சுங் ஜீன் பொருந்திய ஏடிடி எண் வரிசைகளை நம்பி நெல்விதை சேமிக்கும் மரபை இழந்தபோதே இந்திய விவசாயம் மானம் இழந்தது.
""ஆத்தூரு கிச்சடிச்சம்பா, ஆற்காடு கிச்சடிச்சம்பா, ஆனைக்கொம்பன், வையக்குண்டான், தங்கச்சம்பா, குதிரைவால், டொப்பி போன்ற பல நூற்றுக்கணக்கான விதைநெல் யாவும் தமிழ்மண்ணில் கற்பரசிகளுக்குப் பிறந்தவை. வீரியரக நெல் விதைகள் அன்னிய மண்ணில் பிறந்தவை. வீரியரக விதை நம்மிடம் குடிகொண்டபோதே மண்ணின் மானம் கப்பலேறியது. ஜீன் மாற்று விதைகளை அதிக விலை கொடுத்து மஹைக்கோ, மான்சென்டோ போன்ற பன்னாட்டு நிறுவன விதைகளுக்கு இந்திய விவசாயம் அடிமையாகி இந்த மண்ணின் மானம் விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்குப் போனதால் இந்திய விவசாயிகள் இன்று அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். வீரிய ரக விதைகளை கிலோ ரூ. 20க்கு வாங்கி வந்த காலம் மாறிப்போய் இன்று ஜீன் மாற்று விதைகள் கிலோ ரூ. 200 முதல் ரூ. 1,000 வரை விலை கொடுத்து வாங்கிப் போதிய அளவு விளைந்தும்கூட அதற்குரிய விலைகளை விற்கும்போது பெற முடியவில்லை. திகாயத் கூறுவதுபோல், கூடுதல் விலை கொடுத்து வாங்கும் இந்த விதைகளின் சாகுபடிச் செலவும் கூடுதல் என்பதை கவனித்தல் நலம்.
விவசாயிகளைச் சுரண்டும் ஒரு புதிய விதைக் கொள்கை விவசாயத்தை மானமிழக்க வைத்துள்ளது. 2004 விதைச்சட்டம் 1966 விதைச்சட்டத்தைச் செல்லாக்காசாக்கிவிட்டது. புதிய விதைச்சட்டத்தில் தனியார் ஆதிக்கம் ஓங்கிப் பொதுத்துறை கேலிக்குரியதாகிவிட்டது. இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழகம் அரசுப் பணத்தைக் கொண்டு விதை ஆராய்ச்சி செய்து மாநில வேளாண்மைத் துறைக்கு விதைகளை அனுப்பியது. கட்டாக், ஆடுதுறை ஆராய்ச்சி நிறுவனங்கள் எல்லாம் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்துக்குக் கட்டுப்பட்டவை. வீரியரக விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலைக்கு வழங்கப்பட்டன. ஆனால் அரசு ஏகபோகத்தை அகற்றிவிட்டுப் பன்னாட்டு விதை நிறுவனங்களைத் தூக்கி நிறுத்தி, தன் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டது. பன்னாட்டு விதை நிறுவனங்களின் விரிவாக்கப் பணியின் சுறுசுறுப்பு பொதுத்துறையில் இல்லாத காரணத்தால் பன்னாட்டு விதை நிறுவனங்களின் வீரிய ஒட்டு மற்றும் ஜீன் மாற்று பிடிடி விதைகளின் புழக்கம் அதிகரித்துவிட்டது. இதில் மற்றொரு கொடுமை, வேளாண் விஞ்ஞானிகளின் துரோகச் செயல். அரசுத்துறையில் மக்கள் வரிப்பணத்தைச் சம்பளமாகப் பெற்ற இந்த விஞ்ஞானிகளைத் தனியார் பன்னாட்டு விதை நிறுவனங்கள் ஐந்து லகர சம்பளம் கொடுத்து வாங்கின.
அரசுப் பணியிலிருந்து தனியார் விதை நிறுவனங்களுக்குச் செல்லும்போது இந்த விஞ்ஞானிகள் அரசுப்பணத்தில் ஆராய்ச்சி செய்த மூலப்பொருள் சாதனங்களையும் கொண்டு போய்விட்டனர். அரசுத்துறை ஆராய்ச்சியே தனியார் ஆராய்ச்சியாக மாறியுள்ளது. பொதுத்துறை வழங்கிய வீரிய ரக நெல், கோதுமை விதைகளை விவசாயிகள் சேமித்து அடுத்த நடவுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் வீரிய ஒட்டு பி.டிடி விதைகள் ஒரு அறுவடைக்குப் பின் மலடாகிவிடும். ஆகவே, ஒரு விவசாயி தன் கையை நம்பக்கூடிய ஒரு தற்சார்பை இழந்து விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாகிவிட்டார். விஞ்ஞானிகள் துரோகிகளாகிவிட்டனர்.
இன்று பன்னாட்டு விதை நிறுவனங்கள் அளிக்கும் வீரிய ஒட்டு ஜீன் மாற்றம் பி.டிடி ரக விதைகளை மலட்டு விதைகளை என்று பயன்படுத்தினோமோ, அன்றே விவசாயத்தின் மானபங்கம் வெளிச்சமாகிவிட்டது. அன்று திரெளபதியின் வஸ்திரோபகர்ணத்திற்கு அதை நிகழ்த்த முடியாதபடி கண்ணபரமாத்மா காப்பாற்றினார். ஆனால் இந்தக் கலியுகத்தில் விவசாயம் விவசாயிகளின் வஸ்திரோபகர்ணத்தைக் காப்பாற்ற அந்தக் கண்ணபரமாத்மா வரவில்லையே, ஏன்? துரியோதனர்களின் சபைக்கூட்டம் தொடர்வதினால்தானோ!
ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி

சாலை விபத்துகளைத் தவிர்க்க என்ன வழி?

நாளிதழ்களைப் புரட்டினாலோ, தொலைக்காட்சியைப் பார்த்தாலோ சாதாரணமாகக் காணப்படுவது சாலை விபத்துகள் பற்றிய செய்திகள்தான்.
லாரிகார் மோதல், பஸ் மீது ரயில் மோதல், சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது போன்றவை அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.
விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் சாலை விபத்துகளைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை என்பதை உணரலாம்.
ஒரு நாளைக்கு இந்தியாவில் சராசரியாக 280 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. 2007ம் ஆண்டு புள்ளி விவரப்படி தமிழகத்தில் 59,140 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 65,726 வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.
இதனால், உயிரிழந்தவர்கள் 12,036 பேர். காயமுற்றவர்கள் எண்ணிக்கை 83,135 பேர். தக்க நடவடிக்கைகளின் மூலம் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை நாம் பெருமளவு குறைக்க முடியும். இதனால், விலை மதிக்க முடியாத உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.
மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆனால், சாலைகள் போதிய அளவு அதிகப்படுத்தப்படவில்லை. மாறாக ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகிவிட்டன. இதனால், சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்று காரணம் கூறப்படுகிறது. அப்படியானால் நான்கு வழிப்பாதையில் விபத்துகள் ஏற்படுவதில்லையா? சாலை விபத்துகளுக்கு இவை மட்டுமே காரணம் அல்ல.
உரிமம் பெறாமல் வண்டி ஓட்டுவது, சாலை விதிகளை மதிக்காமல் செல்வது, குடிபோதை மற்றும் தூக்கக் கலக்கத்தில் வாகனங்களை ஓட்டுவது, விவேகமில்லாத வேகத்தில் செல்வது, செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டுவது, பழுதுள்ள வாகனங்களை ஓட்டுவது ஆகியவற்றால் சாலை விபத்துகள் நடக்கின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
சாலை விபத்துகளைத் தடுக்க என்னதான் வழி? ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டுபவர் அந்த வாகனம் இயங்கும் விதம் பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். இதனால், நாம் எரிபொருளையும் சிக்கனப்படுத்த முடியும். விபத்துக் காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், முதலுதவி செய்வது எப்படி என்பது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
சாலை விதிகளை மீறிச் சென்றால் அல்லது குடிபோதையில் வாகனம் ஓட்டினால் தகுந்த வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இரவு 12 மணிக்கு மேல் 4 மணிக்குள்தான் அதிகமான பெரிய விபத்துகள் நேர்கின்றன. தூக்கக் கலக்கமே இதற்குக் காரணம்.
ஆகவே, இந்த நேரத்தில் வாகனங்களை ஓட்டவே கூடாது என்று தடை விதிக்க வேண்டும். பால், நாளிதழ் போன்றவை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் ஆம்புலன்ல் வண்டிகளுக்கும், காவல்துறை வாகனங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கலாம்.
குறித்த நேரப்படி நீண்ட தூரம் செல்லும், உதாரணமாக சென்னைகோவைபஸ்களுக்கு இந்த நேரத்தில் ஓட்ட அனுமதி அளிக்கலாம். இதன் மூலம் குற்றங்களையும் தடுக்க முடியும்.
செல்போன் எமதர்மராஜனின் பாசக்கயிறாக மாறி வருகிறது. தற்கால சாலை விபத்துகளைப் பற்றி ஆழ விசாரித்தால் அதில் செல்போன் சம்பந்தப்பட்டிருக்கும். ஆகவே, செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டினால் கடும் தண்டனை விதிக்க வேண்டும்.
விபத்துகளைத் தவிர்க்க வேகத்தடைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அமைக்கலாம். பஸ்கள் அதிக வேகம் செல்வதற்கு முக்கியக் காரணம் அதிகமான வேகத்தடைகளே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்.
வாகனங்களில் முறையான ஆவணங்கள் வைத்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். இரவில் வாகனங்களின் பின்புறம் அவசியம் சிவப்பு விளக்கு எரிய வேண்டும். லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதைத் தடை செய்ய வேண்டும். அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வேன்கள், ஆட்டோக்கள் தடுக்கப்பட வேண்டும்.
45 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு கண்பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமான ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்யலாம். பள்ளிப் பாடத்திட்டத்தில் வாகனங்கள் ஓட்டும் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும். இவற்றை எல்லாம் கடுமையாக அமல்படுத்தினால் விபத்துகள் குறைவது திண்ணம்.
இ. சுப்பிரமணியம்
நன்றி : தினமணி

தேவை சுயாட்சி அதிகாரம் பெற்ற மாநிலம்

இலங்கைத் தமிழ் மக்களிடையே காணும் உணர்ச்சிகளின் வேகமும், ஒற்றுமைக் குறைவும் தோல்விகளுக்கும், இழப்புகளுக்கும் காரணமாக அமைந்துவிட்டன. இலங்கை வாழ் தமிழ் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட்டு வருகின்றன. மலைவாழ் இந்தியத் தமிழர்களுக்கு வாழ்வு கொடுத்த ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதிகள் உண்டு. வியாபாரங்கள், தொழில்கள் செய்வதற்காகத் தமிழகத்திலிருந்து சென்ற இந்தியத் தமிழர்களும் பிற பகுதியைச் சேர்ந்த இந்தியர்களும் இலங்கை நாட்டில் பல்வேறு இடங்களில் வாழ்கின்றனர். கொழும்பு நகரில் வியாபாரம், தொழில்கள் பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
இந்திய அரசு, இலங்கை அரசோடு செய்துகொண்ட லால் பகதூர் சாஸ்திரி பண்டாரநாயகா ஒப்பந்தத்தின் விளைவாக லட்சக்கணக்கான தேயிலைத் தோட்டத் தமிழ்த் தொழிலாளர்களும், வியாபாரம், தொழில்கள் நடத்தியவர்களும் இலங்கையைவிட்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்த சரித்திர நிகழ்ச்சியும் நடந்தது. இந்த ஒப்பந்தத்தை அறிஞர் அண்ணா கடுமையாக எதிர்த்தார். இந்தியத் தமிழர்கள் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
இன்றைய கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களைத் திட்டமிட்டு குடியேற்றிய சிங்கள அரசின் துர்பாக்கிய நிகழ்ச்சியும் நடந்தது. கிழக்கு மாநிலத் தலைநகர் திரிகோணமலை. திரிகோணமலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கோனேஸ்வரன் மலைக்கோயில் உள்ளது. பூர்வீகத் தமிழரான சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று கிழக்கு மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த அமைச்சரவையில் முஸ்லிம் தமிழர் இஸ்புல்லாவும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் தமிழர் 1977ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவராக இருந்தார். வட பகுதியில் வாழும் தமிழர்களோடு சேர்ந்து ஒரு தனி மாநிலமாக அமைய வேண்டும் என்று போராடியவர்தான், கிழக்கு மாநிலத்தின் இன்றைய முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன். இவர் விடுதலைப் புலிக் குழுவைச் சேர்ந்தவர் தான். கருணா என அழைக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி இயக்கத் தளபதி விநாயகமூர்த்தி முரளீதரனுடன் போராட்டக் குழுவில் இருந்தவர்தான் முதலமைச்சராக அமர்ந்துள்ளார்.
மலைவாழ் தோட்டத் தொழிலாளர்களின் தலைவராகத் தோன்றி இலங்கை அமைச்சராகப் பணியாற்றியவர் செளமியமூர்த்தி பாஸ்கரத் தொண்டைமான். இவர் என்னுடைய திருப்பத்தூர் தொகுதியில் புதூர் எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் அமைச்சராக இருந்தபோது அவரைச் சந்தித்துப் பேசியது நினைவில் நிற்கிறது. இவருடைய உறவினர் ஆறுமுகத் தொண்டைமான் இன்றும் மலையகத் தமிழர்களின் தலைவராகவும், இந்தியத் தமிழ் மக்களின் சார்பாக இலங்கை அரசில் அமைச்சராகவும் உள்ளார். மலையகத் தொழிலாளர்களிடம் பேசியது தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தது, அந்தப் பகுதியில் முக்கிய நகரமான நுரேலியாப் பகுதிக்குச் சென்றது, அந்தப் பகுதியில் வாழ்ந்த தமிழ் வியாபாரிகளைச் சந்தித்தது எல்லாம் நினைவில் நிற்கிறது.
இந்தியத் தமிழர்கள் இலங்கையில் பல பகுதிகளில் வாழ்ந்தனர். தமிழன் அரசாண்ட கண்டிப் பகுதிக்குச் சென்றதும் நினைவுக்கு வருகிறது. இப்படிப் பல பகுதிகளுக்குச் சென்று இந்தியத் தமிழர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கையில் வாழும் அனைவரும் போற்றிப் புகழும் கதிர்காமம் முருகன் கோயில் நினைவுக்கு வருகிறது. தமிழர் பண்பாடு காத்து வளர்த்திடும் பல கோயில்கள் தமிழர்களால் பாதுகாக்கப்படுவது உண்மை வரலாறு.
1955ம் ஆண்டுக்குப் பிறகுதான் சிங்கள ஆதிக்கம் வெளிப்படத் தொடங்கியது. முதலில் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள், கல்வியில் சிறந்து, நீதிபதிகளாக, சிறந்த வழக்கறிஞர்களாக, அரசுத் துறைகளில் உயர் பதவிகள் வகித்தது சரித்திர உண்மைகள்.
சிங்கள மக்களின் எதிர்ப்பு உணர்வு வளர்ந்தது. சிங்களம் மட்டும் தான் ஆட்சிமொழி என்ற கொள்கை 1956ம் ஆண்டில் சட்டமாக அமல்படத் தொடங்கி தமிழர்கள் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்ட அரசியல் ஆதிக்கம் தோன்றத் தொடங்கியது. தமிழர் தலைவரான ஈழத் தந்தை செல்வநாயகம் அனைத்துத் தமிழர்களையும் ஒன்றுபடுத்த முயன்றார். 1957ம் ஆண்டு பண்டாரநாயகா செல்வநாயகம் ஒப்பந்தம், 1965ல் டட்லி சேனநாயக செல்வநாயகம் ஒப்பந்தம் என்ற இரண்டு ஒப்பந்தங்களை இலங்கைத் தமிழர்கள் உரிமைகளைப் பெற்றிட ஈழத் தந்தை செல்வா இலங்கை அரசோடு செய்து கொண்டு சரித்திரம் படைத்தார். ஆனால் சிங்களத் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தால் செயல்படுத்தப்படாமல் ஒப்பந்தங்கள் கைவிடப்பட்டன. இலங்கை அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை.
ஜனநாயக முயற்சிகள் வெற்றி தராததால் சிங்கள ஆதிக்கக்காரர்களின் வெறித்தன்மையை அழித்திட ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற உணர்வு தமிழ் தீவிரவாதத்திற்கு வித்திட்டது. ஈழத் தந்தை செல்வா மறைவிற்குப் பின் தமிழ் தீவிரவாதம் அதிகரித்தது. தமிழ்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்த பல ஈழத் தலைவர்கள் தீவிரவாதத்திற்குப் பலியாகினர். ஈழத் தந்தை செல்வாவின் மகனே இன்று இந்தியாவில் அகதியாக வாழ்கின்ற நிலை ஏற்பட்டது.
தீவிரவாதத்திற்கு இந்திய அரசு ஒத்துழைப்புத் தந்தது. மத்திய அரசின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டிலும் மாநில அரசும் ஆதரவு தரும் நிலை ஏற்பட்டது. ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் பாடுபட அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி முன்வந்தார். ஏராளமான பண உதவி செய்யப்பட்டது. இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பினார். இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் இருந்து பூர்வீகத் தமிழர்களைக் காப்பாற்றினார். இலங்கை ராணுவ வீரர் ஒருவரின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தன்னைத்தானே தலைகுனிந்து கொண்டு தப்பிய காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தோம். பிற்காலத்தில் இந்தத் தமிழ் மண்ணிலேயே தீவிரவாதத்திற்குப் பலியானார்.
ஆனால் அவர் செய்துகொண்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கை அரசின் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் தமிழர்கள் மாநில சுயாட்சியோடு ஆட்சி செய்கின்ற உரிமைகளைத் தர வேண்டும் என்ற இந்தியாவின் வேண்டுகோளை இலங்கை அரசு நிறைவேற்ற ஒப்புக்கொள்ளச் செய்தது பெரும் சாதனையாகும். அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டாலும் இன்னும் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை. சிங்களத் தீவிரவாதிகளின் எதிர்ப்பால் தடைபட்டுக் கொண்டே உள்ளது. இந்த ஒப்பந்தப்படி செயல்பட, இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளைப் பெற முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கேள்விகளை நான் எழுப்பினேன். பிற்காலத்தில் பிரதம அமைச்சரான அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைத் தமிழ்த் தீவிரவாதிகளுடன் இதுபற்றிப் பேசினால் உள்ள ஆபத்துகளை என்னிடத்தில் விளக்கிக் கூறினார்.
ராஜீவ் காந்தி அடித்தளம் போட்ட இலங்கை அரசின் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் பதின்மூன்றாவது திருத்தம் என்ற பெயரில் 1987ல் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் காந்தி முயற்சியால் இலங்கை நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டாலும் அமல் நடத்துவதில் சிக்கல் தொடர்கிறது. இந்தத் திருத்தச் சட்டம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தோற்றம் கொண்டது. இதன்படி மாநில அரசுகள் அமைய வேண்டும். மாநில சட்டசபைகள் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் லிஸ்ட் 1 பட்டியலில் அடங்கியுள்ளன. மத்திய, மாநில அரசுகள் இரண்டும் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் லிஸ்ட் 3 பட்டியலில் வரையறுக்கப்பட்டுள்ளன. தமிழ்மொழியும் இலங்கையில் ஆட்சிமொழியாக ஆகிட 13வது திருத்தச் சட்டம் வகை செய்துள்ளது. ஆங்கிலம் தொடர்பு மொழியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தின்படி சில மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து ஒரு மாநில ஆட்சியாக நிர்வாகத்தை நடத்திடவும் வழிவகை தரப்பட்டுள்ளது. இதன்மூலம் பூர்வீகத் தமிழர்கள் வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாநிலங்கள் எதிர்காலத்தில் ஒற்றுமையாகச் செயல்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் நிதியினை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து கொடுத்திட இந்தியாவில் இருப்பதைப்போல் நிதிக் கமிஷன் நியமித்து நிதிப் பங்கீட்டுக்கு வழிவகுக்கும் வாய்ப்பும் 13வது திருத்தச் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் பூர்ணமாக நல்ல நோக்கத்தோடு மாநில அரசுகள் அமைந்திட இன்றைய இலங்கை அரசு அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளது. மாநிலங்கள் சுயாட்சி உரிமை பெற்றுச் சுதந்திரமாக அதிகாரங்களையும், நிதி உதவிகளையும் பெற்றிட வழிவகைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் பூர்வீகத் தமிழர்கள் (ஈழத் தமிழர்கள்), மலையகத் தமிழர்கள் ஆகியோர்களின் பிரதிநிதிகளாக 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்கள் 225 பேர். அனைத்து இலங்கைத் தமிழர்களுக்கும் உரிமைகள் பெற்றிடும் வகையில் அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் அமைந்திட அனைத்துக் கட்சிக் குழுவில் விவாதங்கள் நடைபெறுகின்றன.
ராஜீவ் காந்தி முயற்சியால் இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைத்த மாநில ஆட்சி உரிமைகள் இந்திய நாட்டில் உள்ளதுபோல் அமைந்திட இன்றைய இந்திய அரசு முயற்சி எடுத்தால் இலங்கையில் அமைதி தோன்றிட வாய்ப்புள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி கற்றிடும் வாய்ப்புகளிலும் ஒதுக்கீடு செய்து வழி வகுக்கப்படுமானால் இன்னும் சிறப்பாக ஒற்றுமை தோன்றிட வாய்ப்புள்ளது. சிங்களவர்கள் நிறைந்த இன்றைய ஆளும் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் இந்திய அரசோடு ஒத்துழைக்கும் எண்ணம் கொண்ட கட்சிகளாக இருப்பது சாதகமான சூழ்நிலையாகும். தாய்த் தமிழக அரசியல் கட்சிகள் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை பிரிந்திட ஆதரவு தராமல் இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு தந்திட முயற்சிக்க வேண்டும். 25 மாவட்டங்களைக் கொண்ட இலங்கை முழுவதும் தமிழர்கள் அமைதியுடனும் உரிமையுடனும் வாழ்ந்திட எண்ணிட வேண்டும். இலங்கை மக்கள்தொகையில் சுமார் 25 சதவிகிதத்திற்கு குறையாது வாழும் இலங்கைத் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நிலை ஏற்பட வேண்டும்.
இன்று மீண்டும் இலங்கைத் தமிழர் வாழும் வடக்குப் பகுதிகளில் ராணுவத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. போர் விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. தமிழ்த் தீவிரவாதிகள் தங்கள் வசம் உள்ள போர் விமானத்தின் மூலம் இலங்கைத் தலைநகர் கொழும்பில் தாக்குதல் நடத்தியதாக ஏற்கெனவே செய்தி வந்தது. மீண்டும் இன்று தீவிரவாதிகள் போர் விமானம் கொழும்பில் மின்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கை நாட்டுக் கப்பல் மீது தீவிரவாதிகள் தங்கள் கப்பல் படை மூலம் தாக்கி அழித்தனர் என்று செய்தியும் வருகிறது.
இலங்கைத் தமிழர்களுக்குப் பேராபத்து தொடரும் நிலையில் தாய்த் தமிழகத்தின் தமிழர்கள் எல்லாம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று ஒன்று சேர்ந்திருப்பது சரித்திர நிகழ்ச்சியாகும். இந்த ஒற்றுமை தொடர்ந்து இலங்கையில் வாழ்கின்ற தமிழர் பகுதிகளில் எல்லாம் சுயாட்சி அதிகாரம் பெற்ற மாநிலங்கள் உருவாகிட, இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்புகள், ஆட்சி அமைப்புகள், நீதிமன்றங்கள் என்று அனைத்துத் துறைகளிலும் அங்கம் பெறும் உரிமை உள்ள வாய்ப்புகளைத் தந்து, உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் சம உரிமை வழங்கும் முறையிலும், சிங்களவர்களின் தனி ஆதிக்கம் இல்லாது வாழ்கின்ற நிலையைப் பெற்றிடும் புதிய சரித்திரம் தோன்றிட தாய்த் தமிழர்களின் ஒற்றுமை பயன்பட வேண்டும். அதற்கேற்ற முறையில் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்படத் தாய்த் தமிழக மக்களின் ஒற்றுமை உறுதுணையாக அமைந்திட வேண்டும்.
செ. மாதவன்
நன்றி : தினமணி

தவறா? குற்றமா?

சங்க காலம் முதல் நிகழ் காலம் வரை, ஒரு செயல் தவறா அல்லது குற்றமா என்பது விவாதத்திற்குரிய ஒன்றாகவே உள்ளது.
சோழ மன்னர் ஒருவர், பசு தன் கன்றை இழந்த மணியோசை கேட்டு, தவறு செய்தவன் தன் மகனேயாகினும், அது குற்றமே எனக்கருதி, அதற்குரிய தண்டனையும் வழங்கி, மனுநீதிச் சோழன் எனப்பெயர் பெற்றார் என்கிறது சரித்திரம்.
பாண்டியமன்னரின் அரசவையில் புலவர் நக்கீரன், ஈசன் எழுதிய பாடலில் குறை கண்டார் என அறிவோம். அக்குறையைத் தவறு எனக்கொள்ளாது, தமிழ் உயிரினும் மேலானது என்ற காரணம் கருதி, குற்றம் என்றே கண்டார் என்றும் அறிவோம். ஈசனே நேரில் வந்து நெற்றிக்கண்ணைக் காட்டினும் தான் கண்ட குற்றம் குற்றமே எனவும் வாதிட்டார் என்பதையும் அறிவோம்.
மன்னர்கள் காலத்தில் குற்றங்கள் தர்ம அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதை இதுபோன்ற காவியங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில், தர்ம நியாயங்களுக்குத் தனியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு செயல் தவறா அல்லது குற்றமா என்பது பெரும்பாலும் சட்ட நியாயத்தின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது. சாதாரண தவறுகள்கூட இடம், பொருள் மற்றும் காலம் காரணமாகக் குற்றங்களாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, புகை பிடிப்பது தவறு என்றால், தடை செய்யப்பட்ட இடங்களில் பிடிப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. அதேபோல, கண்ட இடங்களில் சாலையைக் கடப்பது தவறு என்றால், தடை செய்யப்பட்ட தடங்களில் கடப்பது குற்றமாகக் கொள்ளப்படுகிறது. எனவே இன்றைய சூழ்நிலையில், தவறுகளுக்கும் குற்றங்களுக்குமான இடைவெளி மெல்லியதாகி சில இடங்களில் மறைந்துவிடுவதையும் காணலாம். இத்தகைய தவறுகளிலிருந்து, மன்னிக்கக்கூடாத குற்றங்களை வேறுபடுத்திப் பார்க்கத்தெரிவது மிகவும் அவசியமாகும். ஏனெனில், தவறுகள் மறக்கப்பட வேண்டும், மன்னிக்கப்பட வேண்டும். குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டியிருக்கும்.
ஒருவர் மற்றொருவருக்கு இழைக்கும் தவறுகளால் இன்னல்கள் வருவது உறுதி. அத்தகைய இன்னல்களை மறப்பதும், அவர்களின் தவறுகளை மன்னிப்பதும் மனித நேயத்திற்கும் குடும்ப ஒற்றுமைக்கும் மிக மிக இன்றியமையாததாகும்.
இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர், ""இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்'' என்று சொன்னதோடு விடாமல், ""இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு'' என்றும் சொல்லி அக்கருத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இந்த உண்மையினைப் புரிந்து கொள்ளவில்லையெனின், சிறு தவறுகளைக்கூட மிகைப்படுத்தி, குறை மேல் குறை கண்டு, பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் குற்றமாகக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விடுவோம்.
பிறர் மற்றொருவருக்கு இழைக்கும் தவறுகளை மன்னிக்கவும் இன்னல்களை மறக்கவும், வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் மிகவும் அவசியம். அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தல்களும் அதைத்தொடர்ந்து வரும் நிகழ்ச்சி நிரல்களும் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே போட்டியிடப் போகும் நபர்களின் விவரங்கள் தெரிய ஆரம்பித்துவிடும். அவர்களின் தகுதி, திறமை மற்றும் அந்தரங்கங்கள் உள்பட அனைத்தும் அலசி எடுக்கப்பட்டுவிடும். தேர்தல் நெருங்க நெருங்க ஒருவரையொருவர் கொள்கையளவில் சாடுவதும் சொற்போர் நடத்துவதும் நாடு முழுவதும் ஒளிபரப்பாகும். போட்டி முடிந்து வெற்றி பெற்றவர் அதிபராக அறிவிக்கப்பட்டுவிடுவார்.
வெற்றி பெற்ற அதிபரின் மனைவிக்கு, தோல்வியடைந்த (நடப்பு அதிபராக இருந்து இரண்டாம் தவணையாக போட்டியிட்ட) அதிபரின் மனைவி, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையைச் சுற்றிக்காட்டி, அதன் அலுவலர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைப்பது வழக்கம். அதேபோல், வெற்றி பெற்ற அதிபரும், தன்னிடம் தோல்வியடைந்தவருக்கு வெள்ளை மாளிகையில் தேநீர் விருந்து கொடுப்பது சம்பிரதாயம்.
இதுபோன்ற வழக்கங்களும் சம்பிரதாயங்களும் மனிதகுல நாகரிக வளர்ச்சியின் சின்னங்கள். மனிதர்கள் ஒருவருக்கொருவர் இழைக்கும் தவறுகளையும் இன்னல்களையும் மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் சமுதாயம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள சந்தர்ப்பங்கள். இந்த உண்மையினை இவர்கள் அமெரிக்காவில் நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டார்கள். எனவேதான் முன்னாள் அதிபர்களான ஜிம்மி கார்ட்டரும், ஜெரால்டு போர்டும் அரசியலில் கருத்து வேறுபட்டாலும் வாழ்க்கையில் நண்பர்களாக வாழ முடிந்தது. வில்லியம் கிளிண்டனும், ஜார்ஜ் புஷ்ஷும் அரசியலில் நண்பர்களாக இல்லாவிடினும், வாழ்க்கையில் அன்பர்களாக வாழ முடிகிறது.
நம் வாழ்விலும் இதைக் கடைப்பிடித்தால், நெஞ்சுக்கு நிம்மதியும் நாம் வாழ்ந்த வாழ்விற்கு நிறைவும் கிடைப்பது உறுதி.
ராம் ராமனாதன்
நன்றி தினமணி