Monday, September 15, 2008

நீதியே நிலைபிறழ்ந்தால்...?

உத்தரப்பிரதேசம் காஜியாபாதில் நான்காம் நிலை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருந்து ரூ.23 கோடி ரூபாயைச் சட்டவிரோதமாகக் கையாடிய ஊழலில், நீதித்துறையின் மூன்றடுக்கு வரிசை நீதிபதிகளுக்குப் பங்கிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.
பஞ்சாபில் அதைவிட வேடிக்கை; ஒரு நீதிபதிக்கு லஞ்சமாக அனுப்பப்பட்ட பணம் தவறுதலாக, அதே பெயரை உடைய இன்னொரு நீதிபதியிடம் தரப்பட, விஷயம் வெளிப்பட்டு பத்திரிகைகளில் வந்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த கே.கே. சபர்வால் தனது சொந்த மகன்கள் நலனை உத்தேசித்துத் தீர்ப்பு வழங்கினார் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே, அதற்கு என்ன சொல்ல?
சௌமித்ர சென், கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி. அவர் வழக்கறிஞராக இருந்தபோது ஒரு வழக்கில் நீதிமன்றத்தின் சார்பில் பெறப்பட்ட பணத்தைத் தனது சொந்த வங்கிக் கணக்கில் போட்டு மோசடி செய்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் 2006ம் ஆண்டு அந்தப் பணத்தைக் குறைந்த வட்டியுடன் திருப்பிச் செலுத்தியிருக்கிறார் சௌமித்ர சென். இதுபற்றிய விசாரணைகள் நடந்ததும், ""விருப்ப ஓய்வு பெறுங்கள் அல்லது ராஜிநாமா செய்துவிடுங்கள்'' என்று அவரிடம் கூறப்பட்டது. அவரோ இதில் எதையும் செய்ய மறுத்துவிட்டார். விடாப்பிடியாக, நீதிபதியாகத் தொடரத்தான் செய்வேன் என்று அடம்பிடிக்கும் அவரை என்ன செய்வது? அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரையே செய்திருக்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி.
ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. குறைந்தபட்சம் 100 மக்களவை உறுப்பினர்களோ அல்லது 50 மாநிலங்களவை உறுப்பினர்களோ, ""சம்பந்தப்பட்ட நீதிபதி பதவியிறக்கம் செய்யப்பட வேண்டும்'' என்று குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்க வேண்டும். இரு அவைகளிலும் தனித்தனியே பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்தால் மட்டும் போதாது; மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அவையில் இருந்தாக வேண்டும். 1968ம் ஆண்டு நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தின்படி ஒருவரைப் பதவி நீக்குவது என்பது உடனடியாக நடக்கக்கூடிய விஷயமல்ல என்பது நீதிபதி சௌமித்ர சென்னுக்குத் தெரியாதா என்ன?
தனது நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை சந்திப்பதைக்கூடத் தவிர்த்த நீதிபதிகள் இருந்த காலம் ஒன்று இருந்தது. இவ்வளவு இழிவான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியும் நீதிபதி பதவியிலிருந்து விலக மறுக்கும் சௌமித்ர சென் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இந்தக் காலம். இதற்கு முக்கியமான காரணம், நீதிபதிகள் தேர்வில் நடக்கும் முறைகேடுகள்தான்.
நீதிபதிகள் அந்தப் பதவியில் நியமிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களுடைய பின்னணி பற்றிய முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு, அப்பழுக்கில்லாதவர் என்று உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அவை எதுவும் பின்பற்றப்படுவதே இல்லை.
2006ல் நீதிபதிகள் விசாரணைச் சட்டம் பற்றிய முன்வடிவு தயாரிக்கப்பட்டு தூங்குகிறது. பதவியில் இருக்கும் நீதிபதிகளைக் கொண்ட தேசிய நீதிக்குழுமம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், தவறு நிரூபிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் ஆலோசனையைக் குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் அதிகாரத்தை அதற்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் விசாரணைச்சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏனோ அந்தச் சட்டம் இப்போதும் முன்வரைவாகவே தொடர்கிறது.
இந்திய ஜனநாயகத்தில் எத்தனை எத்தனையோ குறைகள் இருந்தாலும், நீதித்துறை ஓரளவுக்கு நேர்மையாக இருப்பதால்தான் அந்தக் குறைகளை மீறி நாம் தொடர்கிறோம். நீதித்துறை களங்கப்படுவதும், அதன் மீது மரியாதை குறைவதும் ஒரு நல்ல ஜனநாயகத்தின் அறிகுறி அல்ல. தவறுகள் வெளியில் தெரியக்கூடாது என்று மூடிமறைப்பதும், யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று தடுப்பதும், தவறுகள் அதிகரிக்கத்தான் உதவும்.
""தர்மோ ரக்ஷதி ரக்ஷித:'' என்று வடமொழியில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது, நாம் தர்மத்தைக் காப்பாற்றினால், தர்மம் நம்மைக் காப்பாற்றும் என்று அதற்குப் பொருள். நமக்கு நீதி வழங்கும் நீதித்துறையை நாம் பாதுகாக்கத் தயார்; நீதியே நிலை பிறழ்ந்தால் நம்மை யார் பாதுகாப்பது?
நன்றி : தினமணி

முதியோர் இல்லம் எனும் சமூகச் சீரழிவு!

மனித சமுதாயத்தின் மத்தியில் அன்பு, பாசம், அரவணைப்பு, சகிப்புத்தன்மை போன்ற உயரிய குணநலன்கள் மெதுவாகத் தேய்ந்து வருகிறது. உறவுச் சங்கிலியை அறுத்து உன்னதமான வாழ்க்கையின் பொருள் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறான் மனிதன்.
சுயநலம், சொந்த சௌகரியம் ஆகிய குணாதிசயங்கள் மனித சமுதாயத்தில் நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது.
ஒவ்வொரு உயிரும் முதுமை என்ற மைல்கல்லை கடந்தே தீர வேண்டும். இதிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது என்பதை ஏனோ இந்த மனிதன் உணருவதில்லை.
முதுமை அடைந்துவிட்டால் அவர்களை எதற்குமே உபயோகப்படாத பொருளாகக் கருதி, வீட்டில் பயன்படாத குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவது போல் ஓரங்கட்டிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற இழிவான, மனிதாபிமானமற்ற செயல் மேலை நாடுகளைவிட, உறவு முறையின் உன்னதத்தை உலகுக்கே உணர்த்திய இந்தியாவில் சர்வசாதாரண நிகழ்வாகிப் போனதுதான் இதயத்தில் ஈட்டியாய் குத்துகிறது. நாடுமுழுவதும் காளான்களாய் முளைத்திருக்கும் முதியோர் இல்லங்களே இதற்குச் சாட்சி.
2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் முதியோர்கள் எண்ணிக்கை 7 கோடியே 62 லட்சம். இதுவே அடுத்த 25 ஆண்டுகளில் 17 கோடியாக உயரும் என்பது சமூக நீதித் துறையின் கணிப்பு. தற்போதைய மொத்த முதியோரில் பாதிக்கு மேற்பட்டோர் தங்களது குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடைந்து, பாசத்துக்காக ஏங்கி, சோகமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் 33 சதவீதம் பேர் தங்களது வாழ்க்கைத் துணையை பிரிந்து வாழ்கிறார்கள்.
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட இன்னும் எத்தனையோ பெற்றோர்கள் விழிகளில் கண்ணீர் வழிய, விதியை நினைத்து, பித்துப் பிடித்தாற்போல் வீதிகளில் உலா வருவதைக் கண்கூடாய் காணும் போது, "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்' என்ற புரட்சிக் கவியின் வரிகள்தான் நெஞ்சில் தீப்பொறியாய் கிளம்புகிறது.
இன்று இளையவன், நாளைய முதியவன். இன்று ஒருவருக்கு பிள்ளை; நாளை மற்றொருவருக்கு தந்தை. இதுதான் மாறாத வாழ்வியல் விதி. இதை மறந்து மனம் போன போக்கிலே வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தால் நாம் செய்யும் தவறுக்கு நமது வருங்கால சந்ததி அளிக்கும் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது.
முதியோருக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிவருகிறது மத்திய, மாநில அரசுகள். இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், முதியோருக்கு தலா ரூ.400 வீதம் மாதா மாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் பாதியாகப் பகிர்ந்து அளிக்கின்றன. முதியோர் ஓய்வூதியத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு ரூ.703.39 கோடியில் இருந்து ரூ.836.65 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுதவிர்த்து, நாடுமுழுவதும் கூடுதலான முதியோர் இல்லங்களை நிறுவுதல், சட்டரீதியாக முதியோருக்கு பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இது ஒருவகையில் மகிழ்ச்சி அளித்தாலும், முதியோர் இல்ல அதிகரிப்பு என்பது முதியோர் புறக்கணிப்பு அதிகரிப்பதைத்தான் காட்டுகிறது.
முதியோர்கள் வீட்டின் விலைமதிக்க முடியாத சொத்துகள்; அறிவு, அனுபவ பெட்டகங்கள் என்ற நிலை மாறி, அவர்களை சுமைகளாகக் கருதும் மனப்பக்குவம் இன்று மேலோங்கி வருகிறது. இந்த மோசமான நிலையை சமூகச் சீரழிவு என்றும், ஆரோக்கியமான சமூகத்தின் அடிமட்டத்தை செல்லரித்து விட்டது என்றேச் சொல்ல வேண்டும்.
முந்தைய தலைமுறையினர் அறிவாளிகளாகவும், ஒழுக்க சீலர்களாகவும் இருந்ததற்கு, அவர்கள் முதியோர்களின் உபதேசங்களால் ஊட்டி வளர்க்கப்பட்டவர்கள் என்பதையும், இன்றைய தலைமுறையினர் ஒழுக்கம் குறித்து கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளதற்கு முதியோர் உறவு துண்டிக்கப்பட்டதுமே முழுக்காரணம் என்பதை மறுத்திட முடியாது.
நமது சமூகத்துக்கென்று இருந்த தனித்த அடையாளங்களை தொலைத்து, மேலை நாட்டு மோகத்தில் நவநாகரீக வாழ்க்கை (?) நடத்திக் கொண்டிருக்கிறோம் நாம். ஆனால் பிரிட்டிஷ் குழந்தைகளோ தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்கின்றனர். இந்த மாற்றத்தை நினைத்து நாம் வெட்கித் தலைகுனியாமல் இருக்க முடியாது.
இது நமக்குத் தலைகுனிவாக உள்ளதோ இல்லையோ, சட்டத்தைக் கையில் எடுத்து, தங்களது பிள்ளைகளை நீதிமன்றத்துக்கு இழுத்து, உதவிகோரி தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகிவரும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை எண்ணி, வெட்கித் தலைகுனிவதைத் தவிர வேறுவழியில்லை.
நம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்க்கு இதுதான் நாம் செய்யும் கைமாறா? என்று ஒவ்வொரு இளைஞனும் மனசாட்சியைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
நீதி. செங்கோட்டையன்

நன்றி : தினமணி

அண்ணன் காட்டிய வழி!

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா பெரிய அளவில் தமிழகமெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. மிகக் குறுகிய காலம் மட்டுமே முதல்வராக இருந்த ஒரு தலைவனால் மக்களின் மனதில் இடம் பிடிக்க முடிந்தது என்றால் அதற்குக் காரணம், அந்த மனிதன் தன்னை மக்களுடன் இணைத்துக் கொண்டதும், அவர்களது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதும்தான்.
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது, அண்ணாவிடம் பண பலம் இருக்கவில்லை. காங்கிரஸ் என்கிற மாபெரும் சக்தியை எதிர்கொள்ளும் அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் இருக்கவில்லை. மக்களின் கவனத்தை ஈர்க்கும் மேடைப் பேச்சையும், கவர்ந்திழுக்கும் சினிமாவையும் தனது ஆயுதங்களாகக் கொண்டு களமிறங்கிய அண்ணாவால், மக்கள் மத்தியில் எழுச்சியையும், சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியையும் ஏற்படுத்த முடிந்ததென்றால் அதற்குக் காரணம், அவரிடம் காணப்பட்ட தலைமைப் பண்பும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சகோதர பாசமும், இதயத்தின் அடித்தளத்தில் சுரந்த மனித நேயமும், அனைத்துக்கும் மேலாக அவரிடம் இருந்த தன்னம்பிக்கையும்தான்!
1967ல் இந்தியாவின் பல மாநிலங்களில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ். ஏனைய மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஆனால், தமிழகத்தில் இன்றுவரை காங்கிரசால் ஆட்சியில் அமர முடியாமல் போனதற்குக் காரணம், அண்ணா அமைத்துக் கொடுத்த காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற அடித்தளமும், காங்கிரஸ் ஒரு பணக்காரர்களின் கட்சி என்கிற வெகுஜன அபிப்பிராயமும்தான்.
சி.என். அண்ணாதுரை எம்.ஏ. என்கிற அந்த எளிய மனிதரை இந்தத் தமிழகம் முழுவதுமே "அண்ணா' என்று அழைத்தது. அவர் மரணத்தின்போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்கள்பெருவெள்ளம் உலகம் இன்றுவரை கண்டறியாதது. இன்றளவும் கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. இவர்களன்றி, தமிழகத்தில் வானொலிப்பெட்டி இருந்த வீடுகள் முன்பாக கூடி நின்று அழுத நெஞ்சங்கள் பல கோடி.
இத்தனைப் பேரின் உள்ளங் கவர்ந்த தலைவர்அரசியல் உலகில் இருந்த அப்பாவி மனிதர் என்றால் மிகையாகாது. சட்டப்பேரவைக்கு போட்டியிட்டால் முதல்வராக முடியும் என்ற நிலைமை இருந்தபோதும் மக்களவைக்குப் போட்டியிட்டவரை அப்பாவி என்றுதானே சொல்ல இயலும்.
காங்கிரஸுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒரே கூட்டணியில் சேர்த்து ஆட்சியைப் பிடித்த அண்ணாவின் வெற்றிக்கு உழைப்பையும், தமிழையும் காரணம் என்று சொல்லாமல், "ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி லட்சியம், ஒரு படி நிச்சயம்' என்ற தேர்தல் வாக்குறுதிதான் காரணம் என்று கருதினால் அது பிழையாகத்தான் அமையும்.
அந்த ஒரு வாக்குறுதிக்காக தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதும், அதற்கு அடுத்துவந்த தேர்தலில் காங்கிரஸ் இதை முன்வைத்து பிரசாரம் செய்தபோதும் மக்கள் அதை பொருட்படுத்தவில்லை என்பதுமே அதற்குச் சான்று.
அண்ணா தன் குடும்பத்தை எந்த நாளிலும் முன்னிலைப் படுத்தியதே இல்லை. அவரது மனைவி மற்றும் வளர்ப்பு மகன் பெயரும் முகமும் அவரை நேசித்த பல கோடித் தமிழர்கள் அறியாதவை. அவர் தனக்காகவோ அல்லது தன் குடும்பத்துக்காகவோ நிறுவனங்களைத் தொடங்கவில்லை. அல்லது பல பன்னாட்டு நிறுவனங்களில் பல கோடிக்கு பங்குகள் வாங்கி வைத்து, குடும்பத்தினரின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் ஏற்படுத்தித் தந்ததில்லை.
அண்ணாவின் மிகப்பெரிய சாதனை என்ன? தமிழனுக்குத் தமிழன் என்கிற உணர்வையும், தமிழினத்துக்குத் தனித்துவம் தேவை என்கிற வேட்கையையும் அளித்தது சாதனை. அண்ணா இன்னும் தமிழர்களின் மனதில் தனியாசனம் இட்டு அமர்ந்திருப்பது ஏன்? புகழின் உச்சியிலும் எளிமை, பதவியிலும் பணிவு என்பதை வாழ்ந்து காட்டியதால்.
நன்றி ; தினமணி