Thursday, October 30, 2008

பெற்றோரைத் திணறடிக்கும் அதிவேகக் குழந்தைகள்

தற்போதைய தலைமுறைக் குழந்தைகளின் அதிவேகமும், துடுக்குத்தனமும், கேள்வி கேட்கும் திறனும் பெற்றோர்களை பெருமிதம் கொள்ளச் செய்தாலும் பல நேரங்களில் அவர்களது பிடிவாதப் போக்கும், கடுமையான செயல்பாடுகளும் முகம் சுளிக்க வைப்பது நிதர்சனமான உண்மை.
அவர்களது வேகம் பல நேரங்களில் அவர்களையே பாதிப்படையச் செய்வது வேதனைக்குரிய ஒன்று. இந்தக் குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது.
இக்குழந்தைகளால் அதிகம் பாதிப்புக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாவது பெற்றோர்தான். அதிலும் தாய், தந்தை இருவரும் பணிக்குச் செல்பவராக இருப்பின், இக்குழந்தைகளைப் பராமரிப்பது மேலும் சிரமமாகிறது.
இவ்வகை குழந்தைகளை அதீத சுறுசுறுப்பு மற்றும் கவனச் சிதறல் உள்ள குழந்தைகள் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தக் குழந்தைகள் வளர, வளர அவர்களது வேகம் அதிகரிப்பதுடன், வகுப்பறையில் கவனச் சிதறல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவர்களது வேகத்தை ஆரம்ப நிலையிலேயே திசை திருப்பாவிடில், அது அவர்களை எதிர்மறைப் போக்கில் கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளை உரிய மனோதத்துவ நிபுணரிடம் பரிசோதனை செய்து, அவர்களது வேகத்துக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.
பாதிப்பு அதிகம் இருந்தால்மட்டுமே மருந்து தேவைப்படும். இல்லையேல், இவ்வகைக் குழந்தைகளுக்கு எளிமையான பயிற்சிகளே போதுமானது. இது நோயல்ல; நடத்தை சம்பந்தப்பட்ட குறைபாடு மட்டுமே என்கின்றனர் மருத்துவர்கள்.
இவ்வகை குழந்தைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தாமல் அவர்களின் ஆற்றலை நீச்சல், ஸ்கேட்டிங், ஓவியம் தீட்டுதல் போன்று பிற செயல்களில் செலவிடச் செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களது வேகம் குறைவதோடு, கவனமும் அதிகரிக்குமாம்.
குழந்தைகள் அதிக நேரம் பெற்றோரை விட்டுப் பிரிந்து இருப்பது அவர்களை மனதளவில் பாதிப்புக்கு ஆளாக்குகிறது.
அதிலும் இதுபோன்ற அதிவேகக் குழந்தைகளுக்கு பெற்றோர் பிரிவு பிடிவாதப் போக்கை அதிகரிக்கச் செய்கிறது.
பொருள்களை விட்டெறிவது, அடிப்பது போன்ற முரட்டுச் செயல்களில் ஈடுபடவும் வைக்கிறது.
எனவே, இவ் வகை நடத்தையுள்ள குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களது தேவையைக் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். அவர்களது தேவையை அச்சமின்றி வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அவர்கள் அழும்போதோ, பிடிவாதமாகச் செயல்படும்போது அவர்களை அதிகம் பொருட்படுத்தக்கூடாது. நாம் அப்படி செயல்பட்டாலே அவர்களது போக்கு மாறிவிடும். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்களை சமாதானப்படுத்தலாம்.
அதைவிடுத்து, அவர்களது வேகத்தைக் கட்டுப்படுத்த அவர்களை அடிப்பது, கடிந்து கொள்வது, அவர்கள் மீது அதீதக் கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.
இது அவர்களது வேகத்தை மேலும் அதிகரிக்குமே தவிர, குறைக்காது. குழந்தைகளை தொலைக்காட்சியில் அதிவேகக் காட்சிகளைக் காணச் செய்யக் கூடாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
இந்தப் பிரச்னை குழந்தை வளரும் சூழ்நிலையில் ஏற்படுவதே தவிர, பிறவியில் ஏற்படுவதல்ல. வீட்டில் ஒரே குழந்தையாய் வளர்வது, பெற்றோர் அதிகமாகச் செல்லம் கொடுப்பது மற்றும் தொலைக்காட்சியில் பார்க்கும் சம்பவங்கள் போன்றவை இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறதே தவிர, உரிய காரணம் இன்னமும் நிரூபிக்கப்படவில்லை என்கின்றனர் அவர்கள்.
எல்.கே. கவிதா
நன்றி : தினமணி

0 comments: