Friday, August 15, 2008

தேசியக் கொடிக்கு வீர வணக்கம்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், பரப்பளவில் 7வது பெரிய நாடாகவும் விளங்கும் இந்தியாவின் கடந்தகால வரலாறுகளை இக்கால இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டிய நேரம் இது.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மிகப்பெரிய மகான்களும், ரிஷிகளும் பிறந்த இந்த புண்ணிய பூமியை, இன்றைய அரசியல்வாதிகள் ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்துக் கூறுபோடப் பார்க்கின்றனர்.
இளைஞர்களே! நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள்! ஊழல் களமாக மக்களவை மாறிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பணம் கட்டுக்கட்டாய் பறக்கிறது.
ஒரு காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்றோம்! இன்றோ அழுக்கு நிறைந்த அரசியல்வாதிகளே வெளியேறி விடுங்கள் என்று சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.
நமது நாட்டைக் காக்க எத்தனை பேர் எப்படி எல்லாம் போராடி மறைந்தார்கள். அரசுப் பதவியில் இருந்த ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் ஆட்சி செய்தார்கள் என்பதை சுதந்திர தின நாளன்று கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்! நாகரிகத் திருடர்களாக வலம் வரும் அரசியல்வாதிகளும் தெரிந்து கொள்ளட்டும். ஒவ்வொரு கசையடிக்கும் மகாத்மா காந்தி வாழ்க என்று மகிழ்ச்சியோடு உரக்கக் கத்திய இளைஞன் யதீந்திர தாஸ்; கிரிமினல் குற்றவாளியைப் போல் என்னைத் தூக்கில் தொங்கவிட்டு விடாதீர்கள்; துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுங்கள் என்று நீதிபதியிடம் கெஞ்சினான் பகத்சிங்.
எனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து விடாதீர்கள். என்னைப் போல் பலபேர் உருவாக என்னைத் தூக்கில் போடுவதுதான் நல்லது என்ற இளைஞனின் பெயர் சந்திரசேகர ஆசாத்.
எத்தனை முறை அடித்தாலும் என் கையில் இருக்கும் என் நாட்டின் கொடியை மட்டும் விட்டுவிட மாட்டேன் என அடிக்க அடிக்க கையில் கொடியுடன் மண்ணில் சாய்ந்த இளைஞன் திருப்பூர் குமரன்.
நம் தாய்நாட்டுக்காக மரணத்தை மகிழ்ச்சியோடு முத்தமிட்ட இந்த முத்துகள் அத்தனையும் 25 வயது கூட நிரம்பாத சின்னஞ்சிறு பிஞ்சுகள்.
ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டில் ஆங்கில ஆதிக்கத்தை சாடிவிட்டு எல்லோரையும் போல் மேடையை விட்டு இறங்காமல் அந்த மேடையிலேயே நம் நாட்டின் தேசியக் கொடியைப் பறக்க விட்டவர் மும்பையைச் சேர்ந்த மேடம் காமா என்ற பெண்மணி. அந்தக் கொடியில் காவி, சிவப்பு, பச்சை வண்ணங்கள் இருந்தன. அப்போது இந்தியாவின் 8 மாகாணங்களைக் குறிக்கும் வகையில் 8 தாமரை மலர்களும் வந்தே மாதரம் என்ற வாசகமும், கொடியின் ஒரு புறத்தில் பிறையும் மறுபுறத்தில் உதயசூரியனும் இடம்பெற்றிருந்தன.
மேடம் காமாவின் கணவர் இந்திய விடுதலையில் ஆர்வம் இல்லாதவராக இருந்ததால் அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்த மேடம் காமா தான், நம் நாட்டின் தேசியக் கொடியை (1907) முதன் முதலில் பறக்க விட்ட முதல் பெண்மணி.
பாரதத் தாய் சிலை அமைக்க முடிவு செய்த போது சிலை ஏழ்மையாக இருக்க வேண்டுமா அல்லது ஆபரணங்களுடன் இருக்கட்டுமா என்று சிற்பி கேட்டார் மகாகவி பாரதியிடம்.
போதுமான வளங்களும், நிறைவான செல்வங்களும் என் பாரதத் தாய்க்கு இருப்பதால் ஆபரணங்களுடன் இருக்கட்டும் என்றாராம் பாரதி.
என் தாயை எப்படி ஏழ்மையாக இருக்கட்டுமா என்று கேட்டீர்கள் என்று சிற்பியிடம் கோபமாகத் திருப்பிக் கேட்டாராம் அவர். பெற்ற தாயைவிட பிறந்த மண்ணை பாரதி உயிராக நேசிப்பதை அறிந்த சிற்பி வியந்து போனாராம். பாரதியின் வேண்டுகோளின்படி பாரதத்தாய் பூரண ஆபரணங்களுடன் வடிவமைக்கப்பட்டாள்.
வாக்களித்த மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு அமைச்சர்கள் காரில் சென்றது அந்தக் காலம். வாக்களித்தவர்கள் பெருமைப் பட வேண்டும் என்பதற்காகவே 100க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க அமைச்சர்கள் செல்வது இந்தக் காலம்.
அரசு தனக்கு அனுப்புகிற சம்பளத்தில் ரூ. 25 மிச்சமாகிறது. இனி சம்பளம் அனுப்பும் போது ரூ. 25ஐ எடுத்துக் கொண்டு மிச்சத்தை அனுப்பினால் போதும் என்று கடிதம் எழுதியவர் நம் நாட்டின் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி.
மகள் தேர்வில் தோற்று விட்டாள். மறு மதிப்பீடு செய்ய தந்தையிடம் கேட்டபோது, வேண்டாம் என்று மீண்டும் தேர்வு எழுதச் சொல்லி விட்டார்.
மறுமதிப்பீட்டில் நீ வெற்றி பெற்றதாக அறிவித்தால் நான் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திவிட்டேன் என்பார்கள் என்றார். மனம் வெறுத்த மகளோ தற்கொலை செய்து கொண்டார். இப்படிச் சொன்னவர் நம் நாட்டின் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய்.
ஆசிரியர் ஒருவர் காமராஜை பார்த்து அவருக்கு மாலை அணிவித்தார். என்னய்யா இது! படிக்காதவர்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டிய நீங்கள், படிக்காதவனுக்கு மாலை போட வந்திருக்கிறீர்களே என்றாராம்.
மரியாதை செய்ய வந்த ஆசிரியர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியதாம். 5 முறை எம்.எல்.ஏ. ஆகவும், 4 முறை எம்.பி.யாகவும், 9 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்த படிக்காத மேதை காமராஜ்.
அரசு மருத்துவமனையில் உடல் நலம் குன்றி உயிரிழந்த பின்பே அவர் காமராஜ் ஆட்சிக் காலத்தில் காவல்துறை மந்திரியாக இருந்தவர் என்பது தெரியும். அவர் தான் கக்கன்.
விமான நிலையத்தில் காத்திருந்த தொழில் அதிபரின் காரில் ஏற மறுத்து வாடகைக் காரில் வீடு வந்து சேர்ந்த முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். பாரதிக்கு நினைவு மண்டபம் கட்ட தன்னிடம் கடைசியாக இருந்த 50 ரூபாயையும் மகிழ்ச்சியாகக் கொடுத்த மற்றொரு முதல்வர் குமாரசாமிராஜா. இந்த மாமனிதர்கள், தடம் பார்த்து நடக்கவில்லை. தடம் பதித்து நடந்தார்கள்.
அரசுப் பணி செய்ய ஒரு விளக்கையும், சொந்தப் பணி செய்ய ஒரு விளக்கையும் பயன்படுத்தியது அந்தக் கால அரசியல்வாதிகள். அரசுப்பணி செய்ய ஒரு பேனாவும், சொந்த விஷயங்களை எழுத ஒரு பேனாவும் வைத்திருந்தார்கள் அன்றைய அரசியல்வாதிகள். ஆனால் இன்றோ அரசு முறைப் பயணமாக வெளிநாடு செல்லும் போது தன் மகனையும் அழைத்துச் செல்கிறார் ஒருவர்.
நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்காத அரசியல்வாதிகளைப் பார்ப்பது இன்று அரிதாக இருக்கிறது.
கத்தரிக்காய், வெண்டைக்காய் வாங்கும்போதுகூட பார்த்துப் பார்த்து வாங்கும் நாம், இனிமேலாவது மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருப்போம் என்று இன்று உறுதி எடுத்துக் கொண்டு நம் நாட்டின் தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.
தேசத்தின் வாழ்வுக்கும், மேன்மைக்கும் சிறந்த பாலமாக இருந்து சுதந்திர வானில் சிறகடித்துப் பறப்போம், வாருங்கள்!
எஸ். ஜோதிதாசன்
நன்றி : தினமணி

0 comments: