Saturday, August 9, 2008

விஷத்தை இறக்க வேண்டும் அரசு!

சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் வசிப்பவர்கள் இப்போதெல்லாம் கவலையுடன் பேசுவது வீட்டுக் கடன் வட்டி வீதம் பற்றியும் வீட்டு வாடகையைப் பற்றியும்தான் என்றால் மிகையில்லை.
"எலி வளையானாலும் தனி வளை' வேண்டும் என்ற எண்ணத்தில் சொந்தமாக வீடு அல்லது அடுக்குமனை வாங்க வேண்டும் என்ற ஆசையில், கடன் வாங்கி வீடு கட்டியவர்கள் அனைவரும் இப்போது வலையில் சிக்கிய மான் போலத் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
அனைவருக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான குடியிருப்பு வசதிகளைச் செய்துதர வேண்டிய கட்டாயக் கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. ஆனால் வசதி படைத்தவர்களுக்குத்தான் இந்த வாழ்வுரிமை என்ற பாணியிலேயே இந்த அரசுகள் நடந்துகொள்கின்றன.
ஒரு புறம் ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே போய், வாங்கும் சக்தியை இழந்துகொண்டிருக்கிறது. மறுபுறம் மாதச் சம்பளக்காரர்கள் வாங்கிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி வீதம் விஷம்போல ஏறிக்கொண்டிருக்கிறது. இந்த இருமுனைத் தாக்குதல்களால் மன அமைதி இழந்து, இரவுகளில் தூக்கம் கெட்டு, உடல் நலனையும் கெடுத்துக் கொண்டிருப்பவர் எண்ணிக்கை பல லட்சம். "கடன்பட்டார் நெஞ்சம் போல' என்ற வாசகத்தில் "வீட்டுக்கடன்பட்டார் நெஞ்சம் போல' என்று இனி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டத் தரும் கடன்கள் மீது 7.5% வட்டிதான் வசூலித்தார்கள். இப்போது 11.5% ஆகிவிட்டது. சில அமைப்புகள் 12.25% கூட வசூலிக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கடனையும் அடைக்க முடியாமல், அந்த வீடுகளையும் விற்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
இந்த நிலை நீடித்தால் நடப்பு நிதியாண்டின் இறுதியில் வீட்டுக்கடன் இனத்தில் மட்டும் வாராக்கடனின் அளவு 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று "கிரிசில்' என்ற மதிப்பீட்டு அமைப்பு எச்சரிக்கிறது.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் வீட்டுக்கடன்கள் மீதான வட்டி குறைக்கப்பட்டதால், ஏராளமான பேர் சொந்த வீடு வாங்கும் கனவை நனவாக்கிக்கொள்ள கடன் வாங்கத் தொடங்கினர். அப்போது வட்டி வீதமும் அவ்வப்போது குறைந்துகொண்டே வந்ததால், மாறுபடும் வட்டி வீதத்தையே 98% மனுதாரர்கள் தேர்வு செய்தனர்.
வீட்டுக் கடன் வாங்குவது என்று எடுத்த முடிவுக்காகவும், அதிலும் மாறுபடும் வட்டியைத் தேர்வு செய்ததற்காகவும் இப்போது அவர்கள் அனைவரும் தங்களுடைய விதியை நொந்துகொள்கின்றனர்.
நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்டித்தர குடிசை மாற்று வாரியம் என்ற முன்னோடித் திட்டத்தை இந்தியாவுக்கே தந்தது தமிழகம். இப்போது தமிழக முதல்வர் என்ன காரணத்தாலோ நடுத்தர மக்களின் வேதனையை அறியாதவர் போல ஒதுங்கியிருக்கிறார்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில், இன்னும் குறிப்பாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுள்ள ஊர்களில் ஏழை, நடுத்தர மக்களுக்கு அடுக்குமனை வீடுகளை கட்டித்தர புதிய அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். அந்த வீடுகளில் வாடகை அடிப்படையில் மட்டும் மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும்.
அடி மனையும் வீடும் அரசுக்கே சொந்தமாக இருக்க வேண்டும். வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டப்படி நிர்ணயிக்கும் அடிப்படையிலேயே, சதுர அடிக்கு இத்தனை ரூபாய் என்று மிகக்குறைந்த வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், குறைந்த செலவில் தரமான பள்ளிக்கூடங்களில் மாணவர்களைச் சேர்க்க முடியாத நிலைமை, கட்டுபடியாகும் வாடகைக்குக்கூட வீடு கிடைக்காத அவலம் எல்லாம் மக்களை நரகத்தில் தள்ளி வருகின்றன. அடிப்படையான இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் இலவச கலர் டி.வி., சமையல் எரிவாயு, பிரஷர் குக்கர் என்ற இலவசங்களைத் தருவது நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல.
நன்றி :தினமணி

ஏது கல்வி வளர்ச்சி?

காமராஜர் பிறந்த நாளை "கல்வி வளர்ச்சி நாளா'கக் கொண்டாட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அதற்காக அரசு நிதியிலிருந்து ரூ. ஒரு கோடியே ஏழு லட்சமும், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து ரூ. இருபத்திநான்கு லட்சமும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் அனுமதித்துள்ளார்.
இதன்மூலம் காமராஜரின் தியாக வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படவும் வாய்ப்பாக அமையும். அமைய வேண்டும் என்பது அனைவரது விருப்பமும். ஆனால், கல்வித்துறையில் நடந்து கொண்டிருப்பது என்ன?
அனைவருக்கும் கல்வித் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவும், கிராமப்புறங்களில் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உதவுமாறு மத்திய அரசை, மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான திட்ட வரைவை மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கிடம் தமிழகக் கல்வியமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ளார்.
இந்த நிதியைப் பயன்படுத்தி மாநிலத்தில் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி, 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நீண்டநாள் கனவையும் நனவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகக் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார், தெரிவித்துவிட்டால் போதுமா? செயல்படுத்த வேண்டாமா?
"அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பரிசீலனை செய்ய' ஓர் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. அதற்காக 2006 செப்டம்பர் 8ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் முத்துக்குமரன் தலைமையில் தமிழக அரசின் உயர்நிலைக்குழுவும் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதுபற்றி எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கவே, முதலமைச்சரும், கல்வியமைச்சரும், "சமச்சீர் கல்வி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்' என்று அறிவித்தனர். ஆனால், இது அறிவிப்போடு நிற்கிறது. இந்தக் கல்வியாண்டிலும் செயல்படுத்தப்படவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பள்ளிக் கல்வித்துறை சார்ந்த கல்விச் சட்டங்களை ஒன்றாய் இணைத்து இக்காலச் சூழலுக்கு ஏற்றாற்போல "தமிழ்நாடு கல்விச் சட்டம்' கொண்டுவர வேண்டும்.
மாநில வாரியம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு கல்வி வாரியங்களை ஒன்றாய் இணைத்து ஒரே பள்ளிக் கல்வி வாரியமாக அமைக்க வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 க்கு மேல் போகக்கூடாது என கோத்தாரி குழு அறிக்கை சுட்டிக்காட்டியபடி இருக்க வேண்டும்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி முழுமையும் தாய்மொழி தமிழில் அளிக்கப்பட வேண்டும். மழலையர் கல்விப் பொறுப்பை அரசே ஏற்றுக்கொண்டு அனைத்துப் பள்ளிகளிலும் மூன்று வயது நிரம்பிய குழந்தைகள் அனைவருக்கும் மழலையர் பிரிவு தொடங்க வேண்டும்.
பொது அறிவைப் பெறவும், நல்ல குடிமகனாக வாழவும் தேவையான அறிவைப் பெறும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும். மாணவர்களின் பன்முகத் தன்மையை வளர்த்தெடுக்கும் வகையில் சுற்றுலா, நூலகம் மற்றும் உடற்பயிற்சி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு சமச்சீர் கல்விக்கான பரிந்துரைகளை முத்துக்குமரன் குழு முன் வைத்துள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவது கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சிக்கும் ஆக்கம் தரும். சமுதாய முன்னேற்றமே கல்வி முன்னேற்றத்தில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்தாமல் "கல்வி வளர்ச்சி நாள்' கொண்டாடுவதால் என்ன பயன்?
கும்பகோணம் பள்ளி தீவிபத்தும், அதில் 94 குழந்தைகள் இறந்ததும், நமது கல்வி முறையின் அவலத்தையும், அலங்கோலத்தையும் படம் பிடித்துக்காட்டின. அதனை எதிர்த்து மாணவர் அமைப்புகளும், கல்வியாளர்களும் தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் சமச்சீர் கல்வியின் தேவையை வலியுறுத்தின. இதனால் இது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் தேர்தல் வாக்குறுதியாகக் கூறப்பட்டது.
நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் தேவையான "சமச்சீர் கல்வி'யை நடைமுறைப்படுத்தாமல் தமிழ்நாடு கல்வித்துறை புதிய குழப்பத்தைப் புகுத்திக் கொண்டுள்ளது. அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் "செயல்வழிக் கற்றல்' (அஆக) என்பதே அது. கூறுபட்டும், வேறுபட்டும் கிடக்கிற கல்வி முறைகளை ஒருமுகப்படுத்த வேண்டிய நேரத்தில் எதிர்பாராமல் இன்னொரு புதிய முறையைப் புகுத்துவது கல்வித்துறையில் மேலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தாதா?
ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை புத்தகம் இல்லை; தேர்வு இல்லை; எழுத்துப்பயிற்சி இல்லை; வகுப்பு மாற்றம் இல்லை; அட்டைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒரே வகுப்பறையில் மாற்றமில்லாமல் அமர்ந்து படிப்பது மாணவர் இடையே மனச்சோர்வை ஏற்படுத்தாதா? அரசு பாடநூல் நிறுவனம் வெளியிடும் பாடநூல்களை என்ன செய்வது?
பாடப் புத்தகங்களைக் கொண்டு பாடம் நடத்துகிற நடைமுறையை இத்திட்டத்தின் மூலம் கைவிட்டதால் படிக்கும் திறன், எழுத்துப்பயிற்சி, நூலறிவு, மனப்பாடப் பயிற்சி மாணவர் மத்தியில் இல்லாமல் போய்விட்டது. சென்னை மாநகராட்சியில் மட்டுமே இருந்து வந்த இந்தத் திட்டம், இப்போது தமிழகம் எங்கும் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் இப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து வருகிறது. இருக்கும் மாணவர்களையும் பெற்றோர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கி, இந்தத் திட்டத்தை அமல்படுத்தாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால் ஏழை எளிய மாணவர்களுக்குப் புகலிடமாக இருந்துவரும் அரசு மற்றும் ஒன்றியப் பள்ளிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இப்படியொரு பாடமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று எந்தக் கல்விக்குழு பரிந்துரை செய்தது? இது நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு முடிவடைந்து விட்டது. இந்த ஓராண்டின் முடிவில் இதன் நிறைகுறைகளை ஆய்வு செய்து இரண்டாம் ஆண்டு தொடங்கியிருக்க வேண்டும். குறைபாடுகளைக் களையாமல் இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் பணியைக் கல்வித்துறை செய்து வருகிறது.
இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது எனப் பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். மாணவர் சேர்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது என்று ஆசிரியர்கள் கவலைப்படுகின்றனர். சமச்சீர் கல்விக்கு இது தடையாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர். இதனைத் தமிழகக் கல்வித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆசிரியர் இயக்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
முன்பே, "அரசுப் பள்ளிகளில் தரமில்லை' என்ற கருத்து பொதுமக்களிடம் இருக்கிறது. இதனைப் பயன்படுத்தியே பணம் பண்ணும் பள்ளிகள் புற்றீசல்கள் போல் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தப் புதிய கல்வி முறையில் தனியார் பள்ளிகள் காட்டில் மழை பெய்தது போல ஆகிவிட்டது. இதனால்தான் இந்தத் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தமிழகத் கல்வித்துறை மறைமுகமாகத் துணை போகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தச் "செயல்வழிக் கற்றல்' பற்றி "அனைவருக்கும் கல்வி'த் திட்ட இயக்ககம் இடைவிடாமல் விளம்பரம் செய்கிறது. இதற்குச் சில மாணவர்களும், சில ஆசிரியர்களும், சில அதிகாரிகளும் பயன்படுத்தப்படுகின்றனர். இவர்களில் விவரம் புரிந்தவர்களும் மேல் அதிகாரிகளுக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறுவதில்லை. அவர்களைத் திருப்திப்படுத்துவதும், அதன் மூலம் பலனடைவதுமே அவர்கள் நோக்கம்.
"ஒரு தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது' என்றது கோத்தாரி கல்விக்குழு. இந்தியாவின் எதிர்காலம் என்பது மாணவர்களின் எதிர்காலம். அவர்களின் வாழ்க்கையோடு விளையாடக் கூடாது.
ஊதயை மு. வீரையன்

நன்றி : தினமணி

வாழ்க ஜனநாயகம், பாவம் மக்கள்!

பெட்ரோல், டீசல், காஸ் விலையேற்றம், உணவுப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் விலையேற்றம், உரத் தட்டுப்பாடு என சாமான்யனை வதைக்கும் பொருளாதாரச் சிக்கலில் நாடு அல்லாடிக் கொண்டிருக்கிறது.
நாட்டின் முதுகெலும்பு எனப்படும் விவசாயம், இன்று முதுகொடிந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. "சுகபோகம் வேண்டாம், ஒரு போகமாவது நல்ல விளைச்சல் எடுக்க விடுங்கள்' என்னும் விவசாயிகளின் ஓலம் எந்தக் "கரைவேட்டிகள்' காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.
பொருளாதார சக்தியிடம் போட்டியிட முடியாமல் விவசாய நிலங்களை விற்றுவிட்டு குழந்தை குட்டிகளுடன் நகரங்களுக்கு குடிபெயர ஆரம்பித்துவிட்டனர் விவசாயிகள். விவசாயக் கூலிகள் அரை வயிற்றுக் கஞ்சியிலிருந்து கால் வயிற்றுக் கஞ்சிக்கு மாறி, பிழைப்புக்காக நகரங்களில் தஞ்சமடைய ஆரம்பித்துவிட்டனர்.
ஆக, கிராமங்கள் இன்று சப்தமில்லாமல் காலியாகிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இதுபோன்ற காரணங்களால் சுமை தாங்க முடியாமல் சிறு, பெரு நகரங்கள் திணறி வருகின்றன. தொலைநோக்குப் பார்வையில்லாத அரசு நிர்வாகத்தால் ஏற்படும் குழப்பங்களுக்கு விலை தான் இன்று நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது ஊரறிந்த உண்மை.
விவசாயம் குறைந்ததால் உணவுப் பொருளுக்காக வெளிநாடுகளில் கையேந்தி நிற்கும் தொடக்க நிலையிலேயே இவ்வளவு "சூடு' (விலையேற்றம்) என்றால் வருங்காலத்தில்? தூக்கத்தில்கூட கஞ்சித் தொட்டிகள் வந்து வந்து பயமுறுத்துகின்றன.
இப்படி, அன்றாட வாழ்க்கையை ஓட்டவே அல்லல்படும் சாமான்யனை புதிய பொருளாதாரக் கொள்கையும், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும் என்ன செய்துவிட முடியும்? இந்நிலையில், அமெரிக்காவை நம்பி அணுசக்தி ஒப்பந்தம் செய்யப் போவதையும், அதற்கு எதிர்ப்புக் கிளம்புவது ஏன் என்றும் சிந்திக்கும் சக்தி சாதாரண மக்களுக்கு இல்லை. ஆனால், இப்பிரச்னையால் அரசு கவிழுமா, கவிழாதா என பத்திரிகைகள் வாரக்கணக்கில் பரபரப்புச் செய்தி வெளியிட்டதால் சாமான்யனும் காதைத் தீட்ட ஆரம்பித்தான்.
மத்திய அரசுக்கு ஆபத்து என்றதும் மும்முரமாக ஆரம்பித்தது ஆள்பிடிக்கும் படலமும், குதிரை பேரமும். எதிர்க்கட்சியினரும் அதற்கு சளைத்தவர்களா? அவர்களும் தங்களது "பங்கு'க்கு வலைவீசினர். ரூ.25 கோடியில் தொடங்கி ரூ. 100 கோடி வரை பேரம் நடந்தது.
கரன்சி விஷயத்தில் மட்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரபட்சமில்லாமல் கட்சிகள் "ஒற்றுமையாய்' இருப்பது மக்களுக்கு தெரியாமல் இல்லை. என்றாலும், நம்பிக்கை வாக்கெடுப்பன்று, ஆளும்கட்சியினர் தங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக்கூறி கட்டுக்கட்டாகப் பணத்தை, பாஜகவினர் கொட்டிய காட்சி, கடல் கடந்து இந்திய மானத்தை கப்பலேற்றி விட்டது.
இந்திய அரசியல்வாதிகளிடம் ஜனநாயகம் படும்பாடு அண்டை தேசங்களுக்கும் அம்சமாய்ப் புரிந்திருக்கும். ஒருவழியாக வாக்கெடுப்பில் வென்று மத்திய அரசு தப்பித்தது. இனி எஞ்சியுள்ள நாள்களை இடதுசாரிகளின் இம்சை இல்லாமல் காங்கிரஸ் கழித்துவிடும்.
1987ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெ. மற்றும் ஜானகி அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. ஜானகி அணியைச் சேர்ந்த எம்பி தங்கராஜை தங்கள் பக்கம் இழுக்க, ஜெயலலிதா அணியினர் ரூ.5 லட்சம் கொடுத்ததாக நாடாளுமன்றத்தில் பிரச்னை கிளப்பப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற போலீஸ் ஸ்டேஷனில் புகார் பதிவாகியிருக்கிறது. அதன் பிறகு இந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
அப்போதைக்கும் இப்போதைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான், அப்போது ரூ.5 லட்சம், இப்போது கோடி.
வெற்றிலை, பாக்குக்கு 10 ரூபாய் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை "வேலூருக்கும்', "திஹாருக்கும்' அனுப்பி வைக்கும்போது, கோடிக்கணக்கில் விலை போனவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க எந்தச் சட்டம் குறுக்கே நிற்கிறது?
இதேநிலை நீடித்தால், "லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்' என்ற வாசகத்தை நாடாளுமன்ற வாசலிலும் எழுதிப் போடச் சொல்லி மக்கள் கேட்கும் காலம் விரைவில் வரும்.
எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுவது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் சந்திரதேவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு விசாரணையைத் துவக்கியுள்ளது.
"லஞ்சம் கைமாறியபோது தனியார் தொலைக்காட்சி எடுத்ததாகக் கூறப்படும் வீடியோ டேப் தங்கள் வசம் உள்ளதாகவும், ஆனால், அதை ஒளிபரப்பும் முடிவை சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சிதான் எடுக்கவேண்டும்' எனவும் இக்குழு கூறியுள்ளது.
ஆனால், இப்பிரச்னையில் திடீர் திருப்பமாக "லஞ்ச வீடியோ பதிவை' ஒளிபரப்பத் தற்போது அந்தத் தொலைக்காட்சி மறுத்து வருகிறது. பரபரப்பு காட்டவா அதை படம் பிடித்தார்கள்?
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், தொடர்ந்து 10 முறை எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான மக்களவைத் தலைவர் சோம்நாத்தை அவர் சார்ந்த கட்சி "ஒத்துழைக்கவில்லை' என்று கூறி நீக்கியதுதான் பெரும் சோகம்.
அதுவும், அவரது பிறந்தநாள் நெருங்கி வந்த சமயத்தில் மார்க்சிஸ்ட் எடுத்த நடவடிக்கை, கட்சி பாகுபாடின்றி அனைவரிடமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டது.

கோவை ஜீவா
நன்றி : தினமணி