Friday, October 31, 2008

பத்திரமானவைதானா இந்திய வங்கிகள்?

அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியால் பீதியடைந்துள்ள இந்திய மக்கள், இந்திய வங்கிகள் நம்பத்தகுந்தவையா, அவற்றில் போடப்பட்டுள்ள முதலீடுகள் பத்திரமாகவே இருக்குமா என்ற எளிதான, நேரடியான கேள்விக்கு விடை உண்டா என்பதை அறிய ஆவலாக இருக்கிறார்கள்.
இந்தச் சந்தேகத்தைத் தெளிவிப்பதற்குப் பதிலாக, வங்கிகள் ஏதேதோ சுற்றிவளைத்துக் கூறி அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதாக நினைத்து, சந்தேகத்தை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.
முதலீட்டாளர்களிடையே பரவலாகக் காணப்படும் இந்த அச்சத்தை நியாயமற்றவை என்றோ அளவுக்கு அதிகமானவை என்றோ கூறி ஒதுக்கிவிட முடியாது. தனிநபர்களின் சேமிப்புகளில் 55% வங்கிகளில்தான் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.
முதலீடுகளுக்கு வங்கிகள் தரும் வட்டி வீதம் மிகவும் சொற்பமானவைதான் என்றாலும் வங்கிகள் மீதுள்ள நம்பகத்தன்மை காரணமாகவே, கஷ்டப்பட்டு தாங்கள் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைகளுக்காக வங்கிகளில் சேமிக்கிறார்கள். இது சாதாரணமாகத் தெரிந்தாலும் இப்படிப்பட்ட சேமிப்புகளின் மொத்த மதிப்பு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களாகும்.
ரிசர்வ் வங்கியின் 2008 செப்டம்பர் 12 புள்ளிவிவரப்படி இந்த முதலீடுகளின் மதிப்பு மொத்தம் 34.05 லட்சம் கோடி ரூபாய்களாகும். இது இந்தியாவின் ஓராண்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 80% என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் பணம் எப்படி பயன்படுத்தப்படுகிறது? பொதுமக்களிடம் இப்படி முதலீடுகளாகத் திரட்டும் தொகையை வங்கிகள் எப்படிச் செலவு செய்கின்றன என்ற முழுமையான, துல்லியமான தகவல்கள்தான் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்ட முடியும். பிரதம மந்திரியும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கி கவர்னரும் அளிக்கும் வாக்குறுதிகளும், நம்பிக்கைகளும் அதற்குப் பிறகுதான்.
இப்படிப்பட்ட முழுமையான, துல்லியமான தகவல்களை எங்கிருந்து பெற முடியும். இந்திய ரிசர்வ் வங்கி தொகுத்துள்ள புள்ளிவிவரங்கள் ஓரளவுக்கு இந்தத் தகவல்களைத் தர முடியும்; அதே போன்றவைதான் வங்கிகளின் லாபநஷ்டக் கணக்கு அறிக்கையும். இந்த அறிக்கைகளை எல்லா சாமானியர்களாலும் படித்து எளிதில் புரிந்து கொள்ள முடியாது என்பதும், இந்த அறிக்கையும் வங்கிகள் உண்மையிலேயே எப்படிச் செயல்படுகின்றன என்பதைத் தெரிவித்துவிட முடியாது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. இருந்தாலும் இந்த அறிக்கைகளையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்தியாவில் உள்ள வங்கிகளுக்குப் போதுமான மூலதனம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. திரும்பி வருமோ வராதோ என்று சொல்ல முடியாத கடன்களின் மதிப்பைவிட 4% கூடுதலான அளவுக்கு அதாவது 13% அளவுக்கு இந்திய வங்கிகளின் மூலதனம் இருக்கிறது.
இதை ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போம். வங்கிகள் திரட்டும் மூலதனம் 100 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதில் "ரிஸ்க்' எடுத்து தரப்படும் கடன்களின் மதிப்பு 9 கோடி ரூபாய் என்றால் வங்கிகள் அதற்கு இணையான மதிப்புக்கு தங்கள் வசம் மூலதனம் திரட்டி வைத்திருக்க வேண்டும். "ரிஸ்க்' இனத்தில் கடன் வாங்கியவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் வங்கிகள் சுய மூலதனத்தை இட்டு அதை நிரப்ப முடியும். இந்தியாவில் இந்த மூலதனம் 13% ஆக, அதாவது தேவையைவிட 4% அதிகமாகவே இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் இந்த அம்சத்தில் அஞ்சத் தேவையில்லை.
இந்தியாவில் அரசுத்துறை, தனியார்துறை, அன்னிய நாட்டு வங்கிகள் என்று அனைத்தும் சேர்த்து கடன்கள், கடன் அட்டை இன முன்பணக் கடன்கள், வங்கி இருப்புக்கும் மேல் செலவு செய்ய அனுமதிக்கப்படும் கூடுதல் கடன் அளவு போன்றவற்றை அதிகரித்து வருகின்றன. இந்தத் தொகை ரூ.24.91 லட்சம் கோடியாகும். இது வங்கிகள் அனைத்தும் திரட்டி வைத்துள்ள முதலீட்டு மதிப்பில் 73% ஆகும்.
வங்கிகள் பங்கு பத்திரங்களில் மொத்தம் ரூ.10.05 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளன. இதில் ரூ.9.86 லட்சம் கோடி மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள பங்குகளில் செய்யப்பட்ட முதலீடுகளாகும். எஞ்சிய 0.19 லட்சம் கோடி, அங்கீகரிக்கப்பட்ட இதர பங்குகளில் செய்யப்பட்ட முதலீடுகளாகும்.
கட்டாய கையிருப்பு விகிதம்: வங்கிகள் தாங்கள் பெறும் முதலீடுகளைவிட அதிகத் தொகையைக் கடனாகக் கொடுத்துவிட்டு, கடனை வசூலிக்க முடியாமல் திவாலாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்திய ரிசர்வ் வங்கி சட்டப்பூர்வமாகவே சில கடமைகளை வங்கிகள் மீது திணித்துள்ளது. அவற்றில் முக்கியமானவை, சட்டப்பூர்வமான ரொக்க கையிருப்பு விகிதம் (எஸ்.எல்.ஆர்.), குறைந்தபட்ச கட்டாய ரொக்க கையிருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.) ஆகும். இதன்படி வங்கிகள் தாங்கள் திரட்டும் முதலீடுகளின் மதிப்பில் 25% தொகையை ரொக்கமாகவும், வங்கிகளின் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களில் முதலீடாகவோ பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
இதுபோக, ரிசர்வ் வங்கி அவ்வப்போது இடும் கட்டளைக்கு ஏற்ப "கட்டாய ரொக்க கையிருப்பு விகிதத்தை' பின்பற்ற வேண்டும். இது 3% முதல் 15% வரை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். வங்கிகள் கடன் தர போதிய ரொக்கம் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவும், முதலீட்டாளர்களின் பணம் அளவுக்கு அதிகமாக ஏதாவது ஒரு இனத்தில் போய் முடங்கிவிடக்கூடாது என்பதற்காகவும் ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்துக்கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட ஏற்பாடு அமெரிக்காவில் கிடையாது.
இந்தியாவில் மொத்த முதலீட்டாளர்களின் மதிப்பில் மூன்றில் இரு மடங்கு மட்டுமே கடனாகத் தர அனுமதிக்கப்படுகிறது. அமெரிக்க வங்கிகளோ தாங்கள் திரட்டிய முதலீட்டு மதிப்பைவிட ஐந்து அல்லது ஆறு மடங்குக்குக் கடன்களை அள்ளித்தந்து விடுகின்றன. கடன் வாங்கியவருக்கு அதைத் திருப்பிக் கட்டும் பொருளாதாரச் சக்தி இருக்கிறதா, அவர் வாங்கும் அல்லது கட்டும் வீடு உண்மையிலேயே நல்ல விலை மதிப்புள்ளதா என்றெல்லாம் பாராமலேயே கண்மூடித்தனமாக அமெரிக்க வங்கிகள் கடன் தந்துவிடுகின்றன. அதனாலேயே அங்கு சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவில் இப்படிப்பட்ட நிலைமை கிடையாது.
அமெரிக்காவில் நெருக்கடியைத் தீர்க்க மேற்கொள்ளப்படும் அவசரகால நடவடிக்கைகளை நாம் நிரந்தரமாகவே எடுத்துவருகிறோம். அமெரிக்க வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அந்நாட்டு அரசாங்கம் அவற்றுக்கு 35 லட்சம் கோடி ரூபாயைத் தந்து உதவுகிறது. அதாவது அந்த வங்கிகளை அரசே தனது உடைமையாக்கிக்கொண்டுவிட்டது என்றும் இதைக் கூறலாம்.
இந்தியாவில் அரசுடைமை வங்கிகள்தான் அதிகம். அவை நாட்டின் மொத்த முதலீடுகளில் 74.2%ஐத் திரட்டி வைத்துள்ளன. கடன் தொகையில் 73%ஐ அரசுடைமை வங்கிகள்தான் அளித்துள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று என்னவென்றால் அரசு வங்கியானாலும் தனியார் வங்கியானாலும் அவை மக்களின் பணத்தை முதலீடாக வைத்துதான் வியாபாரம் செய்கின்றன. அவற்றின் பணியோ இடைத்தரகர் வேலையைப் போன்றதே.
"பெரியதன்' விளைவு: எத்தனைதான் சொன்னாலும் விளக்கினாலும் எங்கோ ஓரிடத்தில் இடிக்கிறது. நம் நாட்டு வங்கிகளின் அதிலும் குறிப்பாக அரசு வங்கிகளின் நிதி நிலைமை நன்றாக இருக்கும்பட்சத்தில் அரசு அடுக்கடுக்காக பல நடவடிக்கைகளை எடுப்பானேன், ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் நிதித்துறை நிபுணர்களும் கூடிக்கூடிப் பேசுவானேன்? வெளிநாட்டு வர்த்தகத்துக்கு கதவைத் திறந்துவிட்டபிறகு, அங்கே அடிக்கும் காற்று நம்பக்கமும் வீசாது என்று நம்புவது பேதமை.
பங்குச் சந்தைகள் நேரடியாக வாங்கிக் கொண்டிருக்கும் அடிகளைப் பற்றி விளக்கவே தேவையில்லை. அன்னிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொண்டுவந்து முதலீடு செய்தபோது இந்திய பங்குச்சந்தை உப்பிப்பருத்தது. அவையே முதலீட்டைத் திரும்பப்பெற ஆரம்பித்ததும் சூம்பிச் சிறுத்துவிட்டது. அதே போல அமெரிக்க டாலர்களுக்கு தேவை அதிகம் ஏற்பட்டவுடன் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. ரூபாயின் மதிப்பு சரிந்ததால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்களை ஆராய இந்தக் கட்டுரை போதாது.
வங்கிகளுக்கும் பங்குச் சந்தைக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. எனவே அவற்றுக்கு ஆபத்து இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. எந்த அளவுக்கு என்பதுதான் விடை தேட வேண்டிய வினா.
வரவுசெலவு கணக்கு கூறுவது என்ன? வங்கிகள் ஆண்டுதோறும் வெளியிடும் வரவுசெலவு அறிக்கை, நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம் அளித்துவிடுவதில்லை; அதே சமயம் அவை தரும் சில தகவல்கள் முக்கியமானவை. சில விஷயங்களை நாம் ஊகித்தறிய அவை பெரிதும் உதவுகின்றன. ""அவசர செலவு இனத்தில்'' 200708ம் ஆண்டில் ரூ.18.57 லட்சம் கோடி செலவாகியிருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டு (200607) இது ரூ.12.70 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முந்தைய ஆண்டைவிட 46.16% அதிகம். இந்தத் தகவல் இந்திய வங்கிகள் சங்கம், அரசுத்துறை வங்கிகளின் நிதி நிலைமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. தனியார் வங்கிகளைப்பொருத்தவரை இந்தத் தொகை இதைவிட அதிகமாக இருக்கிறது. அனைத்து தனியார் வங்கிகளும் சேர்த்து 200708ல் ரூ.23.61 லட்சம் கோடியை இந்த இனத்தில் செலவாகக் காட்டியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 77.53% அதிகமாகும். முந்தைய ஆண்டு இத் தொகை ரூ.13.30 லட்சம் கோடியாகும்.
தனியார்துறையில் உள்ள 16 வங்கிகளில் புதிதாகத் தொழில் தொடங்கியுள்ள 8 வங்கிகள் மொத்தமாக ரூ.22.50 லட்சம் கோடியை இந்த இனத்தில் கணக்கு காட்டியுள்ளன. அனுபவம் உள்ள பிற 8 தனியார் வங்கிகள் இந்த இனத்தில் காட்டியுள்ள தொகை ரூ.1.11 லட்சம் கோடிதான். தனியார் துறையில் இப்போது மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்குதான் இதில் அதிகம். அது 48.76% அளவுக்கு அவசர செலவு இனத்தில் கணக்கு காட்டியிருக்கிறது. வரவுசெலவு கணக்கில் வராத தொகையாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி குறிப்பிட்டுள்ள ரூ.11.51 லட்சம் கோடியானது, வரவுசெலவு கணக்கில் அது குறிப்பிட்டுள்ள ரூ.3.99 லட்சம் கோடியைவிட 288% அதிகமாகும். அந்த வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகை அளவும் ரூ.5.62 கோடி அளவுக்கு அதிகமாகியிருக்கிறது.
அரசு வங்கிகளிடையே எஸ்.பி.ஐ. இதில் முதலிடம் வகிக்கிறது. அதன் பங்கு 43.66% ஆகும். வரவுசெலவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பணப்பரிமாற்றத்தைவிட, அதில் குறிப்பிடப்படாத பரிமாற்றம்தான் இந்த வங்கியைப் பொருத்தவரை அதிகம்.
வரவுசெலவில் வராத இனத்தில் இடம்பெறுபவை, டெரிவேடிவ்ஸ் எனப்படும் ஊக வாணிக குறியீடு, முன்பேர வர்த்தக ஒப்பந்தம், எதிர்கால ரொக்க மதிப்பு தொடர்பான வியாபாரம் போன்றவை. இவையெல்லாம் சாமானிய மனிதனுக்கு என்னவென்றே புரியாது. ஆனால் இவையெல்லாம்தான் மேலை நாடுகள் அனுபவிப்பதைப்போல ஆபத்தை உண்டாக்கவல்ல காரணிகள். எனவே ரிசர்வ் வங்கி இவற்றையெல்லாம் வரவுசெலவு கணக்கு மதிப்பீட்டு அறிக்கையிலேயே கொண்டுவர வேண்டும் என்று பணித்ததுடன் இந்த இனங்களில் நடந்துள்ள பரிமாற்றங்களையும் ஆய்வுக்கு உள்படுத்தியிருக்கிறது. இது சரியான நடவடிக்கை. இதன் முழு விளைவை அடுத்த ஆண்டு வரவுசெலவு அறிக்கையில்தான் நம்மால் உணர முடியும்.
இந்தத் தகவல்கள் எல்லாம் உணர்த்துவது ஒன்றுதான், உரிய காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், நிதி அமைச்சரும் ரிசர்வ் வங்கி கவர்னரும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒவ்வொரு வங்கியாக தனித்தனியாகப் பிரித்து அவற்றின் நிதிநிலையை ஆராய வேண்டும். அமெரிக்க நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நல்லதொரு வாய்ப்பாகப் பயன்படுத்தி வங்கிகளையும் பொதுச்சேமிப்புகளையும் பத்திரமாக பாதுகாக்கும் வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.
பி.எஸ்.எம். ராவ்
நன்றி : தினமணி

நஷ்டங்கள் மட்டுமே நாட்டுடைமையாகும்

உலக நிதிச்சந்தை நெருக்கடியின் பரிமாணங்கள் விசுவரூபம் எடுத்து நிற்கின்றன. அமெரிக்காவில் திவாலாகிப் போன வங்கிகளைக் காப்பாற்றிக் கடைத்தேற்றுவதற்காக மக்கள் வரிப் பணத்திலிருந்து 70,000 கோடி டாலர்களை அந்நாட்டு நாடாளுமன்றம் சட்டம் இயற்றி ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் அடங்கிய 7 நாடுகள் மட்டுமே 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி டாலர்களை இதே வகையில் ஒதுக்கீடு செய்துள்ளன.
"அமெரிக்காவில் நிகழ்ந்த நிதிச்சந்தை நெருக்கடி இந்தியாவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது' என்று வீரவசனம் பேசிய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூட இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக 1 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் பயன்படுத்திக் கொள்வதற்காகத் திறந்துவிடச் செய்துள்ளார்.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான அரசின் முடிவைச் செயல்படுத்தியுள்ள வங்கிகளுக்கு, அந்தவகையில் ரூ.25,000 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பங்குச் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அவற்றின் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக மேலும் 20,000 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள் மூலமாகப் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்துள்ளது. "கடன் வழங்குவதைத் தங்கு தடையின்றித் தொடர்க; பணப்புழக்கத்தைத் தேவையான அளவுக்கு அதிகரிக்கிறோம்' என்று நிதியமைச்சகம் நம் நாட்டு வங்கிகளுக்கு "அறிவுரை' வழங்கியிருக்கிறது.
இந்திய நாட்டின் பங்குச் சந்தை வியாபாரத்தை சரிவிலிருந்து மீட்கவும், வங்கித் துறையை பாதிப்பிலிருந்து காப்பாற்றவும் இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் எந்தக் குறைவும் வைக்காமல் செய்து தருகிறோம் என்று பிரதமரும், நிதியமைச்சரும், திட்டக்குழுத் துணைத் தலைவரும், ரிசர்வ் வங்கி கவர்னரும், நிதியமைச்சகச் செயலாளரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவரும் நாள் தவறாமல் அபயக்குரலை அருள்வாக்காகக் கூறி வருகிறார்கள். இவற்றையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால், மத்திய அரசு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை உள்நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்திருக்கிறது விளங்கும்.
நிதிச்சந்தை நெருக்கடி தொடர்பான பரபரப்புச் செய்திகள் அன்றாடம் தலைப்புச் செய்திகளாகப் பத்திரிகைகளையும், தொலைக்காட்சி அலைவரிசைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில், நாடு முழுவதும் காய்கறிச் சந்தைக்கும், மளிகைக் கடைகளுக்கும் அன்றாடம் சென்று வருகிற கோடிக்கணக்கான சாதாரண மக்களை மிகக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வுப் பிரச்னை திட்டமிட்டே பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
விலைவாசி கடுமையாக உயர்ந்து, அரசாங்கத்தின் புள்ளிவிவரக் கணக்கின்படி பணவீக்கம் 12 சதவிகிதத்தைத் தாண்டிய நிலையில், சில வாரங்களுக்கு முன்பாகக் கூட நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும் விலைவாசி உயர்வுக்கு உள்நாட்டில் பணப்புழக்கம் கூடுதலாக இருப்பதுதான் காரணம் என்று சொன்னார்கள். இந்தப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதே தலையாய கடமை என்று ஏற்றுக் கொண்டு, இன்று எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நேர் எதிராக, வங்கிகளில் இருந்த பணத்தை உறிஞ்சி எடுக்கும் விதமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது; ரொக்க இருப்பு விகிதத்தைக் கூட்டியது. இன்றும் பணவீக்கம் 11.8 சதவிகிதம் என்ற அளவிலேயே நிலை கொண்டிருக்கிறது என்பதும், சந்தையில் மக்களின் அன்றாடத் தேவைக்கான பண்டங்களின் விலைகள் மேலும் உயர்ந்து வருவதும், ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்காமல் போயிருப்பது வேதனையான நிகழ்வு. மிதமிஞ்சிய பணப்புழக்கம்தான் பணவீக்கத்திற்குக் காரணம் என்று முன்னர் சொன்னது உண்மையானால், இப்போது மடைதிறந்து விடப்படும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கத்தைக் கூடுதலாக்கும்; அதன் விளைவாக விலைவாசி உயர்வு மேலும் கொடிகட்டிப் பறக்கும் என்பதும் நிச்சயமான ஒன்றுதானே!
நிதித்துறை நெருக்கடி, பணவீக்க உயர்வு இரண்டுமே இந்த அரசின் முன்பாகவுள்ள முன்னுரிமைப் பிரச்னைகள் என்று அண்மையில் கூறிய நிதியமைச்சர் சிதம்பரம், இரண்டாவது பிரச்னையை மட்டும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அன்றாடம் பங்குச்சந்தை திசை நோக்கிக் கவனத்தைச் செலுத்துவது ஏன்? பங்குச் சந்தைக் குறியீடுகளான "சென்செக்ஸ்' 30 கம்பெனிகளையும், "நிஃப்டி' 50 கம்பெனிகளையும் மட்டும் சார்ந்தவை என்பதை இப்போது புதிதாய்க் கண்டுபிடித்தது போல் சுட்டிக்காட்டிய நிதியமைச்சர், அந்தப் புள்ளிகளின் சரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவற்றைத் தாங்கிப் பிடித்து மேலே தள்ளுவதற்கு ஓய்வு ஒழிச்சலின்றிக் கடமையாற்றுவது ஏன்? பங்குச் சந்தை வியாபாரத்தில் நிகழும் ஏற்ற, இறக்கங்கள், பங்குகளில் முதலீடு செய்துள்ள சிறு முதலீட்டாளர்களை பாதிப்புகளுக்கு உள்ளாக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அந்த சிறுமுதலீட்டாளர்கள் நாட்டின் மொத்த ஜனத்தொகையில் மிகச்சிறிய சதவிகிதம் தானே! அவர்களின் நலன்களைக் காப்பதில் ஆர்வம் காட்டுவதாகவே ஆட்சியாளர்களின் இன்றைய அவசர நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்பதை வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும், மற்ற பெருந்திரளான மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசிப் பிரச்னையில் அக்கறையின்றி அரசு மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது அல்லவா?
விலைவாசி உயர்வுக்கு அடிப்படையான காரணிகளில் முக்கியமான ஒன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 120 டாலரைத் தொட்டபோது ஏற்றிய விலையை, அதன் விலை 80 டாலராகச் சரிந்து நிற்கிற இப்போதும் குறைக்க மறுப்பது எந்த வகையில் நியாயமாகும்?
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும், இந்த நிதிச்சந்தை நெருக்கடியை எதிர் கொள்வதற்காக மக்கள் வரிப்பணத்தில் மூன்றரை லட்சம் கோடி டாலர்களை அள்ளியெடுத்துத் தாரை வார்ப்பதற்கு எதிர்வினைக் கேள்விகள் வலுவாக எழுந்து வருகின்றன. இதைச் சமாளிப்பதற்காக பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் கையாண்ட தந்திரம், தனியார் நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் திவால் நிலைமைக்குத் தள்ளப்பட்ட வங்கிகளை அரசாங்கம் தேசியமயமாக்கும்; அவற்றுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் அரசாங்கத்தின் பங்குகளாகக் கணக்கிடப்பட்டு, அந்த வங்கி நிர்வாகங்கள் அரசின் பொறுப்பிலும், கட்டுப்பாட்டிலும் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார். கார்டன் பிரவுனின் உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்காவிலும் கோரிக்கை எழவே, அதிபர் ஜார்ஜ் புஷ் இப்போது அதே பாணியில், அரசாங்கத்தின் நிதி உதவி, சம்பந்தப்பட்ட வங்கிகளில் பங்கு மூலதனமாகவே செலுத்தப்படும். அவை "தாற்காலிகமாக' தேசியமயமாக்கப்படும், அந்த வங்கிகளின் நிலைமை சீரடைந்தபிறகு, அதன் நிர்வாகங்கள் அரசாங்கத்தின் கையிலுள்ள பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்க நேர்ந்தது.
இந்த நிகழ்ச்சிப் போக்குகள் உணர்த்துகிற உண்மைகள், பொருளாதார சீர்திருத்தங்களை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்தவர்களுக்குக் கசப்பானவையாகவே உள்ளன. உலகமயம் தாராளமயம் என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டுப்பாடற்ற சதிராட்டத்திற்கு வழிவகுத்துவிட்டது. அதன் பயன்பாடு உலக நாடுகளின் அடிப்படைப் பொருளாதார வளர்ச்சிக்கு எள்ளளவும் உதவி செய்யாமல், நிதிச்சந்தை சூதாட்டத்தின் மூலம் ஒரு சிலர் சில பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிக் குடும்பங்கள், அவற்றின் உயர் அதிகாரிகள் மட்டும் கொள்ளை லாபம் கொழிப்பதற்கு இட்டுச் சென்றுவிட்டது.
கடிவாளம் இல்லாத குதிரையாக சந்தைப் பொருளாதாரத்தைப் பாய்ச்சல் மேற்கொள்ள இனியும் அனுமதிக்க முடியாது. கட்டுப்பாடுகள் தேவை. கண்மூடித்தனமான தனியார்மயம் தீங்கானது. நிதி நிறுவனங்களைத் தேசியமயமாக்குவது தாற்காலிகமாகவேனும், முழுமையாக இல்லாமல் பகுதியாகவாவது மிக மிக அவசியம். இவையே அந்தக் கசப்பான உண்மைகள்.
இவற்றுக்கு அப்பால் பொதிந்து கிடக்கிற அடிப்படையான அம்சம் ஒன்றையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தின் மேன்மையை வியந்து பாராட்டும் உலகமயதாராளமயப் பொருளாதாரக் கோட்பாடு, "லாபம் என்றால் தனியார்மயம், நஷ்டம் வந்தால் நாட்டுடைமை' என்பதையே தவிர்க்க முடியாத விதியாக உருவாக்கி இருக்கிறது என்பதே அந்த அடிப்படையான அம்சம்! "இப்போது நெருக்கடியில் சிக்கிவிட்ட நிலையில் அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டாலும், லாபம் வரத்தொடங்கிய பின்னர் அரசாங்கத்தின் பங்குகளைத் திருப்பவும் தனியாரிடம் ஒப்படைப்போம்' என்று அமெரிக்க அதிபர் "தேசியமயம் தாற்காலிகமானதே' என்று வாக்குறுதி தருவதும் இந்த விதியை அடியொற்றித்தான். இந்தியாவில் அமெரிக்காவைப் போலவோ, ஐரோப்பிய நாடுகளைப் போலவோ, நிதித்துறை முழுமையாகத் தனியார் மயமாகி விடவில்லை இன்றுவரை! இடதுசாரிகளின் கொத்தடிமையாகவே செயல்பட நேரிட்டதாகப் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டினாரே அதில் வேறு எந்த உண்மையும் இல்லாமல் போனாலும், அவரும், ப. சிதம்பரமும் மேற்கொள்ளத்துடித்த நிதித்துறைச் சீர்த்திருத்தங்களுக்கு இடதுசாரிகள் நந்தியாகக் குறுக்கே நின்று தடுத்து வந்தனர் என்பது மட்டும் கடந்த நான்காண்டுகள் காட்டியுள்ள உண்மை.
இன்று சர்வதேச நிதிச்சந்தையில் ஓங்கி அடிக்கும் சுனாமிப் பேரழிவு அலைகள் ஓயாத நிலையிலும், நிதித்துறைச் சீர்திருத்தங்களை விரைவில் செயல்படுத்துவது அவசியம் என்று நம் நாட்டின் நிதியமைச்சர் வலியுறுத்தி வருவது யாருடைய நன்மைக்காக என்ற கேள்வி முன் நிற்கிறது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1969ல் 14 பெரிய வங்கிகள் தேசியமயமானது வரை 488 தனியார் வங்கிகள் திவாலாகி விட்டன என்பது பழைய வரலாறு. அதற்குப் பிறகு 1969 முதல் 2004 வரையிலான 35 வருடங்களில் 24 தனியார் வங்கிகள் திவாலாகி விட்டன என்பது புதிய வரலாறு. இந்த திவாலாகிப் போன வங்கிகளையெல்லாம் இணைத்துக் கொண்டு அவ்வங்கிகளின் வாடிக்கையாளர் சேமிப்பையும், வங்கித் துறையின் மீது நம்பிக்கைகளையும் உயர்த்திப் பிடிப்பது பொதுத் துறை வங்கிகள் தாம். இருப்பினும் தனியார்மய மோகம் சற்றும் குறையவில்லை ஆட்சியாளர்களிடம் என்று பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி என்ற வங்கி ஊழியர் மாத ஏடு சுட்டிக்காட்டியுள்ளது நிதர்சனமான உண்மை. இந்த வகையில் "நஷ்டங்கள் மட்டுமே நாட்டுடைமையாகும்' "லாபங்கள் அனைத்தும் தனியார்மயம்' என்ற கோட்பாட்டை மேலை நாடுகளுக்கே "கொடையாக'த் தந்துள்ள பெருமை இந்தியாவின் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களைச் சாரும்!
உ . ரா. வரதராசன்
நன்றி : தினமணி