Thursday, August 21, 2008

ஆசை..ஆசை...பேராசை...

புதிதாக ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்படும்போதும், ராஜிவ் காந்தி, இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களின்போதும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்கிற ஆசையும் வேகமும் நமது காங்கிரஸ்காரர்களுக்கு வரும். மேடையேறிப் பேசும்போது இருக்கும் அந்த ஆவேசமும் ஆசையும், அடுத்த நாள் காலையில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் விழாவில் பேசிய தலைவர்கள் அனைவரும் சேர்ந்து காமராஜ் அரங்கத்தில் வழக்கம்போல மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது, கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது போன்ற பேசிப்பேசிச் சலித்த விஷயங்களை மீண்டும் ஒருமுறை பேசி ஓய்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு, தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்வரை ஓயப்போவதில்லை என்று சூளுரை வேறு விடுத்திருக்கிறார்.
இதுவரை காமராஜ் ஆட்சி என்று சொன்னவர்கள் இப்போது காங்கிரஸ் ஆட்சி என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். காமராஜ் மீண்டும் உயிர்த்தெழுந்து வரமுடியாது என்பதையும், அப்படியே வந்தாலும் அவரைப் போன்ற நேர்மையான ஆட்சியாளர்களுக்கு இங்கே இடமில்லை என்பதையும் இப்போதாவது நமது தமிழக காங்கிரஸ்காரர்கள் உணர்ந்தார்களே, அதுவரை மகிழ்ச்சி.
பெருந்தலைவர் காமராஜ் மறைவுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ்காரர்கள் கோஷ்டிப் பூசலில் நேரத்தை வீணாக்காமல் ஒன்றுபட்டு செயல்பட்டிருந்தால், தமிழக அரசியலின் போக்கே மாறியிருக்கும். அப்போதைய திண்டுக்கல் மற்றும் கோவை இடைத்தேர்தல்களின் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, காங்கிரஸா அல்லது எம்.ஜி.ஆரின் அதிமுகவா என்கிற கேள்வி எழுந்து திமுக என்கிற கட்சி காணாமல் போயிருக்க வேண்டும். திமுக இப்போதும் பலமான அரசியல் சக்தியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் காங்கிரஸாரின் கையாலாகாத்தனம்தான் என்பது சிறு பிள்ளைகளுக்குக்கூடத் தெரியும்.
காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதைவிட தங்களை வளர்த்துக் கொள்வதில் முனைப்பு காட்டும் தலைவர்கள் ஒருபுறம். தமிழகத்தில் செல்வாக்குள்ள தலைவர் யாரும் வளர்ந்துவிடாமல் தலையாட்டி பொம்மைகள்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று விரும்பும் காங்கிரஸ் மேலிடம் இன்னொருபுறம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர்வது என்பது எப்படி சாத்தியம்?
தனிப்பட்ட முறையில் தமிழக மக்களுக்கு நேரு குடும்பத்தின் மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் மதிப்பும் மரியாதையும் இருப்பதை மறுப்பதற்கில்லை. 1984 பொதுத் தேர்தலில், ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். பெற்ற வாக்குகளைவிட, அந்தத் தொகுதியில் மக்களவைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட கே.ஆர். நடராஜன் பெற்ற வாக்குகள் அதிகம். காரணம், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்ந்த அணியின் வேட்பாளர்களைத்தான் மக்கள் விரும்பினார்கள்.
இப்போது அதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாக காங்கிரஸ் உருவாக வேண்டும் என்று நினைத்த மக்களின் எண்ணத்தில் மண்ணை வாரிப்போட்ட பெருமை காங்கிரஸ் தலைவர்களைத்தான் சாரும். திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பத்தோ, இருபதோ மக்களவை இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்று காங்கிரஸ் தலைமை மட்டும் அல்ல, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களும் விரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை.
தனித்துப் போட்டியிடுவது என்று 1977லும், 1989லும், 1998லும் முடிவெடுத்த காங்கிரஸ் கட்சி, பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றதுமே, மீண்டும் திமுக மற்றும் அதிமுகவின் தோளில் சவாரி செய்ய முடிவெடுத்ததே தவிர, தனித்து நின்று கட்சியை வளர்க்கவோ ஆட்சியைப் பிடிக்கவோ முயலவில்லை.
ஒரு காலத்தில் திமுகவானாலும் சரி, அதிமுகவானாலும் சரி ஆட்சி அமைக்க வேண்டுமானால் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால்தான் சாத்தியம் என்கிற நிலைமை இருந்தது. ஏறத்தாழ 15%க்கும் அதிகமான வாக்குகளுடன் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் செல்வாக்குடன் திகழும் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. தொடர்ந்து திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சாமரம் வீசி, தனது வாக்கு வங்கியைத் தேர்தலுக்குத் தேர்தல் சுருக்கிக் கொண்டுவிட்டிருக்கிறது காங்கிரஸ். தேமுதிகவின் வளர்ச்சி என்பதே காங்கிரஸ் வாக்கு வங்கியில் ஏற்பட்டிருக்கும் சரிவுக்கான அடையாளம்தான்.
""தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி'' என்றெல்லாம் பேசினால், வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக தங்களுக்கு அதிக இடங்களைத் தராதா என்று தங்கபாலு எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவானா?' என்கிற பழமொழி தங்கபாலுவுக்குத் தெரியுமோ என்னவோ, திமுக தலைவர் கருணாநிதிக்கு நிச்சயம் தெரியும்!
நன்றி : தினமணி

0 comments: