Monday, September 1, 2008

எல்லோருக்கும் நல்லவர்!

புதுச்சேரியில் நடைபெற்றிருக்கும் அரசியல் மாற்றத்தை, ஆட்சி மாற்றம் என்பதைவிடக் காட்சி மாற்றம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இப்போது ஏற்பட்டிருக்கும் முதலமைச்சர் மாற்றம், மீண்டும் தேசிய சக்திகள் பலப்படுவதற்கான அறிகுறியாக அமையுமானால் அதை வரவேற்காமல் இருக்க முடியாது.
அந்நிய ஆட்சிக் காலத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலருக்கு அடைக்கலம் கொடுத்த பெருமை புதுச்சேரிக்கு உண்டு. அரவிந்தர், பாரதி, வ.வே.சு. அய்யர் போன்றவர்களுக்குப் புகலிடமாக அமைந்த புதுவைக்கு எப்போதுமே தனித்துவமும், தமிழ் மணமும் இருந்து வந்திருக்கிறது. மகாகவி பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும் வாழ்ந்த பெருமைக்குரிய பூமி அது.
ஆனால், இந்திய யூனியனில் இணைந்தது முதலே புதுவையின் அரசியல் சரித்திரம் நிலையற்ற ஆட்சிகளையும், அடிக்கொரு தரம் ஆட்சி மாற்றத்தையும் சந்தித்து வருவது ஏன் என்பதுதான் புதிராக இருக்கிறது. யூனியன் பிரதேசமாக இருந்த புதுச்சேரி இப்போது மாநில அந்தஸ்து பெற்ற பிறகும்கூட, இந்த நிலைமை ஏன் மாறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வராக மீண்டும் பதவி ஏற்க இருக்கும் வைத்திலிங்கத்தைப் பொருத்தவரை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஒரு நிலையான ஆட்சியை முதன்முதலில் நடத்திக் காட்டியவர் என்கிற பெருமைக்குரியவர். ஒரு மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்துக்கு சொந்தக்காரரும்கூட.
வைத்திலிங்கத்தின் பாட்டனார், பிரெஞ்சு ஆட்சிக்கு உள்பட்ட பாண்டிச்சேரியின் நெட்டப்பாக்கம் பகுதியில் மேயராக இருந்தவர். இவரது தந்தை வெங்கடசுப்பா ரெட்டியார் புதுவையின் முதல்வராகப் பலமுறை பதவி வகித்தவர் என்பது மட்டுமல்ல, அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று இப்போதும் புதுச்சேரி மக்களால் போற்றப்படுபவர். புதுவையின் சுதந்திரப் போராட்ட சரித்திரத்தில் முன்வரிசைத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் வெங்கடசுப்பா ரெட்டியார்.
இப்படி தனக்கென ஓர் அரசியல் பாரம்பரியத்தையும், சுமார் முப்பது ஆண்டுகால அரசியல் அனுபவத்தையும் உள்ளடக்கிய வைத்திலிங்கம், கடந்த முறை முதல்வராக இருந்த சூழ்நிலையிலிருந்து இப்போதைய சூழ்நிலை மிகவும் மாற்றமடைந்திருக்கிறது என்பதுதான் அவர் எதிர்நோக்க இருக்கும் மிகப்பெரிய சோதனை.
தனது கட்சிக்குள் அனைவரையும் அனுசரித்துப் போவது என்பது மட்டுமல்லாமல், ஆதரவு தரும் கூட்டணிக் கட்சிகளான திமுக மற்றும் பாமகவையும் அரவணைத்துக் கொண்டு ஆட்சி நடத்த வேண்டிய நிர்பந்தம் அவருக்கு உண்டு. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தியபோது துணிந்து பல முடிவுகளை அவர் எடுக்க முடிந்ததுபோல இப்போது செயல்பட முடியாது என்பது ஒரு மிகப்பெரிய பலவீனமாக இருக்கும்.
மேலும், "வாட்' வரிவிதிப்பு தேசிய அளவில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னால், புதுச்சேரியில் பொருள்களுக்குக் குறைந்த வரிகள் இருந்தன. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடும் உதவிகளும் தாராளமாகக் கிடைத்தன. யூனியன் பிரதேசம் என்பதாலும், வரிகள் குறைவு என்பதாலும் வெளிமாநிலத்தவர் பலர் புதுச்சேரியில் முதலீடு செய்து தொழில் தொடங்கினார்கள். இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது.
வைத்திலிங்கத்தின் முந்தைய ஆட்சிக்காலத்தில் புதுச்சேரி பெரிய அளவில் தொழில் வளர்ச்சி, கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் வளர்ச்சி என்று சாதனை நிகழ்த்தியது. இப்போது நிச்சயமாக மக்கள் அதேபோன்ற சாதனையை அவரிடம் எதிர்பார்ப்பார்கள். அதுமட்டுமல்ல, தேசிய சக்திகளை வலுப்படுத்தி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அவர் முயல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கட்சித் தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, கூட்டணிக் கட்சிகளைக் கோபப்படுத்தாமல், உள்கட்சி பூசல்களைச் சமாளித்துத் தனது பதவியையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் முதல்வர் வைத்திலிங்கத்திற்கு உண்டு. அதை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? "எல்லோருக்கும் நல்லவர்' இனி எல்லோரையும்விட வல்லவராகச் செயல்படுவார் என்று எதிர்பார்ப்போம்!
நன்றி : தினமணி

0 comments: