சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக ஏற்றத்தாழ்வு, வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் வெறுப்பு, நோயின் கொடுமை உள்ளிட்டவை தற்கொலைக்கான முக்கிய காரணங்களாக இருந்தன. தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.
ஆனால், இன்று வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகள், தோல்விகள், இடர்பாடுகளுக்காகக்கூட தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாட்டின் மொத்த இறப்பில் தற்கொலையின் விகிதம் 7.9 சதத்தில் இருந்து 10.3 சதத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி நாட்டில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருவர் தற்கொலை மூலம் இறப்பைத் தழுவுகிறார். இவர்களில் 30 வயதுக்கும் குறைவான வயதுடைய இளைஞர்களே அதிகம். தற்கொலை செய்து கொள்பவர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 வயது முதல் 30 வயதுக்குள்ளாக இருப்பவர்கள் விகிதம் 40 சதத்தை தாண்டுகிறது.
வட மாநிலங்களைவிட கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில்தான் தற்கொலை சம்பவங்கள் அதிகம் நடந்தேறுகின்றன.
இதற்கு சமுதாய பிரச்னைகளும், ஏற்றத் தாழ்வுகளுமே முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
அதோடு, தற்கொலைக்கு முயற்சிப்பவர்களில் ஆண்களே முதலிடம் வகிக்கிறார்கள்.
ஒருவர் தற்கொலை செய்துகொள்ள வறுமை, வேலையின்மை, காதல், விவாகரத்து, வரதட்சிணைக் கொடுமை, கல்வி, குடும்பம் என பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால், இவர்களில் கல்வியறிவு பெற்றவர்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற தகவல்தான் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தற்கொலை செய்து கொள்பவர்களில் மொத்த விகிதத்தில் கல்வியறிவு அற்றவர்கள் 23.4 சதம்தான், எஞ்சியவர்கள் படித்த "மேதைகள்' தான்.
உடலை வருத்தி மரணத்தைத் தைரியமாக எதிர்கொள்ளும் மன தைரியமும், துணிச்சலும் இருக்கும் இவர்களிடம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளையும், இடர்பாடுகளையும் சந்திக்கும் தைரியம் குறைவாக இருக்கிறது. இதற்கு மாறிப் போன நமது வாழ்க்கை முறையே முழுமுதல் காரணம் ஆகும்.
நமது வாழ்க்கை முறையில் இருந்து விலகி, நமது கலாசாரத்துக்கு சிறிதும் பொருந்தாத வாழ்க்கை முறைக்குள் செல்ல நினைப்பதும் ஒரு காரணம் ஆகும்.
பெற்றோர் ஏதோ ஒரு சிறு பிரச்னைக்கு கண்டித்தாலோ அல்லது கோபப்பட்டு திட்டினால்கூட இளைஞர்கள் தற்கொலையை நாடுவது அதிகரித்து வருகிறது.
சமுதாயத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் கஷ்டத்தால் தற்கொலை செய்து கொள்வதைவிட, சமுதாயத்தின் மேல்தட்டில் அனைத்து வசதிகளுடன் இருந்து வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்கிறவர்களின் எண்ணிக்கையே அதிகம் என அண்மையில் வெளியான ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டுகிறது.
மேலும், தற்போது வளர்ந்து வரும் மென்பொருள் துறையில் கணினி முன்பு ஒரு நாளில் முக்கால்வாசி பொழுதைக் கழிக்கும் இளைஞர்கள், மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதில் இருந்து அவர்கள் மீள முடியாமல், தற்கொலை அவர்களை ஆள்கொள்ளும் சம்பவம் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் பெங்களூரில் மென்பொருள் துறையில் இருப்போர் அதிகமாக தற்கொலை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
மாறிப்போன வாழ்க்கை முறை மட்டுமின்றி, கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் இளைஞர்களிடம் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு கல்வி பயின்று இயங்குகின்றனர். இதனால், இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் பணத்தை பிரதானமாக நினைப்பதால், வேறு எந்த விஷயங்களும் அவர்களை நாடுவது இல்லை. இதன் காரணமாக ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் வெறுப்படைந்து, தற்கொலையை நாடுகின்றனர்.
மேலும் இன்றைய இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் வரம்பை மீறி அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இதில் அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் சென்று விடும் சூழ்நிலையில் வெறுப்பின் உச்சத்துக்கு செல்லும் அவர்களின் அடுத்த முடிவு தற்கொலையாக இருக்கிறது.
வாழ்க்கையில் ஒரு பகுதி பணமும், செல்வமும் இருந்த காலம் சென்று, இப்போது பணம்தான் வாழ்க்கையில் அனைத்தும் என்ற நிலை வந்து விட்டது. இதனால், பணத்தைத் தேடி தனது வாழ்க்கை முழுவதும் இயந்திரமாக இயங்கும் ஒருவர், வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய இதர விஷயங்களை இழந்து விடுகிறார். வாழ்க்கையில் ஒரு நேரத்தில் இழந்த விஷயங்களை எண்ணி வெறுப்புற்று, தற்கொலை முடிவுக்கு செல்கிறார்.
இந்த நிலை மாற முதலில் பணத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சமூகம் மாற வேண்டும், அதற்கு அடிப்படையில் இருந்தே மாற்றங்கள் ஏற்பட வேண்டும். மேலும், குழந்தைகளுக்குப் பணத்தை சம்பாதிக்கும் கருவியாக மட்டும் கல்வியைக் கற்றுக் கொடுக்காமல், மனிதனின் வாழ்வில் அனைத்துக் கட்டங்களிலும் உதவக் கூடிய கல்வியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கக் வேண்டும். இந்த மாற்றங்கள் நிகழாதவரை தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்.
கே. வாசுதேவன்
நன்றி : தினமணி
Sunday, September 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment