Friday, September 12, 2008

வயதும் வாகனமும்

கார்களின் விற்பனையைவிட இரு சக்கர வாகன விற்பனை கடந்த இரு மாதங்களாக அதிகமாக உள்ளது. மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஹீரோ ஹோண்டா நிறுவனம்தான் ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக 3.05 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதேகாலத்தைவிட இது 26 விழுக்காடு அதிகம். டிவிஎஸ் நிறுவனம் 11 விழுக்காடும், பஜாஜ் நிறுவனம் 5 விழுக்காடும் அதிக விற்பனை செய்துள்ளன.
கார்களின் விலையேற்றத்தால் இரு சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரிக்கிறது என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும், பள்ளி, கல்லூரிகள் ஜூன், ஜூலை மாதங்களில் திறக்கப்படுகின்றன என்பதும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கித் தந்து மகிழ்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மாநகர, நகரப் பேருந்துகளில் பயணிகள் நெரிசலும் இதற்கு ஒரு காரணம்.
மாநகரம் மற்றும் நகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சைக்கிள்களின் எண்ணிக்கைக்கு இணையாக மோட்டார் சைக்கிள்கள் எண்ணிக்கையும் உள்ளன. மாணவர் மட்டுமன்றி வளர்இளம் பருவத்தினர் இரு சக்கர வாகனங்களில் சிட்டாகப் பறப்பதை சாலைகளில் காண முடிகிறது.
ஆனால் இவர்கள் யாருக்குமே ஓட்டுநர் உரிமம் கிடையாது; கிடைக்கவும் சட்டத்தில் வழியில்லை.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி 18 வயது நிறைவடைந்த நபருக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தோமேயானால், ஒரு மாணவன் அல்லது மாணவி கல்லூரியில் சேர்ந்து இரண்டாம் ஆண்டில்தான் ஓட்டுநர் உரிமம் பெற இயலும். இருந்தும்கூட சாலைகளில் மாணவர்களும் மாணவிகளும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களில் செல்வது நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி 16 வயது நிறைவடைந்த ஒரு நபருக்கு 49.9 சிசி வாகனம் மட்டும் (அதாவது கியர் இல்லாத வாகனங்கள்) ஓட்டுவதற்கான உரிமம் அல்லது பழகுநர் உரிமம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பெருந்தொகையைச் செலவிடும் பெற்றோர் கியர் உள்ள வாகனங்களையே தேர்வு செய்கின்றனர்.
ஓட்டுநர் உரிமம் இல்லாத இவர்கள் விபத்தை ஏற்படுத்தினாலோ அல்லது விபத்தைச் சந்திக்க நேர்ந்தாலோ இவர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிற்பதைத் தவிர்க்கவே முடியாது. அதற்கான தண்டனைகளும் அபராதங்களும் அவர்களது வாழ்க்கையில் கருப்பு நிழலாகத் தொடர்ந்து வரும். வாகன காப்பீட்டுத் தொகை கிடைப்பது அரிது. பாதிக்கப்படுவோருக்கான இழப்பீட்டுத் தொகை கிடைப்பதும் கடினம். ஆகவே இந்த 18 வயது என்ற நிபந்தனையை ஏன் தளர்த்தக் கூடாது?
வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தில் வாழ்க்கைச் சூழல் வேறாக இருந்தது. வெளியுலகத்தை அறிந்துகொள்ளும் வசதி, வாய்ப்புகள் குறைவாக இருந்தன.
வளர்இளம் பருவத்தினர் சைக்கிள் வைத்திருப்பதே பெரிய விஷயமாகக் கருதப்பட்ட காலம் அது!. ஆனால் இன்றைய கணினி உலகம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. சிறார்கள் கணினியைப் பயன்படுத்தவும் கேட்பாரற்றுக் கிடக்கும் இணையதளங்களில் நுழையவும் செய்கிறார்கள்.
ஆகவே காலத்துக்கேற்ப சட்டங்களை மாற்ற வேண்டியுள்ளது. பாஸ்போர்ட் பெறுவோரில் உயர்கல்வி படித்தவர்களுக்கு மட்டுமே "குடிபெயர்வு சான்று தேவை இல்லை' ( ECNR) என்ற விதி தளர்த்தப்பட்டு, எஸ்எஸ்எல்சி படித்திருந்தாலே போதும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அதைப்போலவே, மோட்டார் வாகனச் சட்டத்திலும் குறிப்பிட்ட கல்வித் தகுதியை எட்டியவர்கள், 50 சிசிக்கும் அதிக சக்தியுள்ள இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் பெற வயது நிபந்தனையைத் தளர்த்த வேண்டும்.
ஒன்று, சட்டத்தைத் திருத்த வேண்டும். இல்லையெனில், சட்டத்தை பாரபட்சமின்றி அமல்படுத்த வேண்டும்.

நன்றி ; தினமணி

0 comments: