Wednesday, October 1, 2008

நீதித்துறையில் தப்புத் தாளங்கள்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நீதிமன்ற ஊழியர்களின் பி.எப். பணத்தில் ரூ. 7 கோடி மோசடி நடந்துள்ள வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் 26 நீதிபதிகளிடம் சி.பி.ஐ., ஊழல் சம்பந்தமாக விசாரிப்பது இதுவே முதல் தடவையாகும். காஸியாபாத் நீதிமன்றத்தில் இந்த மோசடி நடந்துள்ளது.

எட்டு ஆண்டுகளாக நடந்த இந்த மோசடியில் நீதிபதியாக இருந்தவர்கள் பொய்யான விண்ணப்பங்களுக்குத் தாங்களே கையெழுத்து போட்டு அனுமதி தந்துள்ளனர். இதில் பணம் மட்டும் இல்லாமல், விலை உயர்ந்த பொருள்களையும் நீதிபதிகள் கையூட்டாகப் பெற்றதாகத் தகவல்களும் உலவுகின்றன.

இதில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளில் ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், ஏழு பேர் அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும், பனிரெண்டு பேர் உத்தரப்பிரதேச கீழாண்மை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகவும் மீதமுள்ள ஆறு பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாகவும் உள்ளனர். இவர்களை எல்லாம் விசாரித்து சி.பி.ஐ. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க நீதிபதிகள் அரிஜித் பசாயத், வி.எஸ். சிர்புர்கர், சிங்வி ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். துலாக்கோல் போன்று நீதியை வழங்கும் நீதிபதிகள் குற்றச்சாட்டுக்கு அப்பால் இருந்து தங்களின் பொறுப்பை உணர்ந்து பணியாற்றிய காலங்கள் உண்டு. நீதிபதிகள் சுப்பாராவ், எச்.ஆர். கன்னா, வி.ஆர். கிருஷ்ணய்யர், சின்னப்ப ரெட்டி, துணைக் குடியரசுத் தலைவராக விளங்கிய இதயத்துல்லா போன்ற பல நீதிபதிகள் தாங்கள் வகித்த பதவிக்குப் பெருமை தேடித் தந்தனர்.

நமது நீதித்துறையின் நம்பகத்தன்மை 80களின் இறுதியிலிருந்து கேள்விக்குறியாகி விட்டது. நீதிபதி செளமித்ரா சென் 1993ல் இந்திய ஸ்டீல் ஆணையகம் மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுக்கு இடையே நடந்த வழக்கில் ரூ. 32 லட்சத்தை வாங்கிக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அந்தப் பணத்தைத் தன்னுடைய கணக்கில் வங்கியில் சேர்த்து விட்டார் என்றும், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இவரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் மக்கள் அவையில் 100 எம்.பி.க்கள் ஆதரவும், மாநிலங்களவையில் 50 எம்.பி.க்களின் ஆதரவும் தேவை. ஏற்கெனவே 199192ல் நீதிபதி வி. இராமசாமி பிரச்னையில் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியதைப் போன்று செளமித்ரா சென் விஷயத்திலும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

எதிர்வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நீதிபதி சென் மற்றும் 26 நீதிபதிகளின் பிரச்னைகள் எழுப்பப்படும் என்று நம்பப்படுகிறது. நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் சங்கிலித் தொடர்போல நீட்சி அடைகிறது.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நீதிபதி வி. இராமசாமிக்கு எதிராக கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இராமசாமி பணியாற்றியபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. புகார் எழுப்பப்பட்ட நேரத்தில் இராமசாமி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். தீர்மானத்தை முன்மொழிந்து 108 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். ஆனால், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 196 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனர். தீர்மானத்துக்கு 3ல் 2 பங்கு எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காததால் நீதிபதி இராமசாமியைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வியடைந்தது.

இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் மீது அவர் குடும்பத்தார் நடத்திய வணிகத்திற்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய எம்.எம். புன்ஜிக்கு எதிராக 1998ம் ஆண்டு 25 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால், மூன்று முக்கிய நிபந்தனைகளை அவர்கள் நிறைவு செய்யவில்லை. நீதிபதிக்கு எதிராக எழுப்பப்படும் புகாரில் முழுமையான ஆதாரங்கள் இருக்க வேண்டும். அவற்றைத் தீர்மான நகலுடன் இணைக்க வேண்டும். குற்றச்சாட்டு பற்றிய விவரங்கள் முன்னணி ஊடகங்களில் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், இந்த மூன்று நிபந்தனைகளையும் நீதிபதி எம்.எம். புன்ஜிக்கு எதிரான புகாரில் நிறைவு செய்ய புகார் எழுப்பிய எம்.பி.க்களால் இயலவில்லை. எனவே, இந்தப் புகார் நாடாளுமன்ற விவாதத்திற்கு வரவில்லை. இதே புன்ஜியைதான் மத்திய மாநில உறவுகளைக் குறித்து அறியும் குழுவின் தலைவராக இன்றைய மத்திய அரசு நியமித்துள்ளது.

நீதிபதி ஆனந்த் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆட்பட்டார். கோல்கத்தாவில் பகாபதி பிரசாத் பேனர்ஜி என்ற நீதிபதி அங்குள்ள உப்பு ஏரி அருகில் உள்ள விலையுயர்ந்த வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றார் என்றும் அதைத் திரும்ப வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டார்.

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீதே குற்றச்சாட்டுகள் எழும்பொழுது மாவட்ட மற்றும் கீழாண்மை நீதிமன்ற நீதிபதிகளின் நிலைமை எப்படி இருக்கும் என்று நினைத்தால் வேதனையாக இருக்கிறது. நீதிபதிகள் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. எவ்விதக் குற்றச்சாட்டுகளும் எழாவண்ணம் நீதித்துறையும், நீதித்துறையைச் சார்ந்தவர்களும் கவனம் செலுத்த வேண்டும். தற்பொழுது ஒரு நீதிபதியிடம் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர் வாதாடினால் வழக்கில் வெற்றி பெறலாம் என்ற தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. நீதிமன்றங்களின் மீது தவறான குற்றச்சாட்டுகள் வலுவடையும் வகையில் அமையுமானால், அது ஜனநாயக அமைப்பிற்கு முற்றிலும் முரணானதாக ஆகிவிடும். தற்பொழுது நீதிமன்றங்களில் இடைக்கால நிவாரணங்கள் கொடுக்கும்பொழுது சரியான நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு பிரச்னைக்கு ஒரு நீதிபதி இடைக்கால நிவாரணம் தருகிறார். அதே பிரச்னை வேறு நீதிபதியிடம் வரும்பொழுது இடைக்கால நிவாரணங்கள் மறுக்கப்படுகின்ற சூழ்நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நீதித்துறையின் மீதான நம்பிக்கை காக்கப்பட வேண்டும்.

நமது அரசமைப்புச் சட்டத்தில் நீதித்துறை முக்கியத் தூணாகும். நீதிமன்றம் நாதியற்றவர்களுக்கு நம்பிக்கையாகவும், திக்கற்றவர்களுக்கு திசையாகவும் விளங்கக்கூடிய மக்களின் நம்பிக்கைக் கருவறையாகும். நீதித்துறை நேர்மையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் செயல்பட கண்ணியமிக்க நீதிபதிகள் இன்றைக்குத் தேவை. நீதித்துறையிலும் இன்றைக்கு வம்சாவளி முறை புகுந்துவிட்டது. நீதிபதிகளின் உறவினர்கள் நீதிபதிகளாகவும், வழக்கறிஞர்களாகவும் தங்கள் தந்தையார் நீதிபதியாகப் பணியாற்றுகின்ற நீதிமன்றங்களில் இன்றைக்குப் பணிகளை மேற்கொள்வது பல சந்தேகங்களைக் கிளப்புகின்றன. இந்தியா முழுவதும் 540 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஏறத்தாழ 120 நீதிபதிகள் ஏற்கெனவே பதவி வகித்த நீதிபதிகளின் உறவினர்கள் என்ற புள்ளி விவரமும் உண்டு. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படையான நடைமுறைகளுக்காக கடைப்பிடிக்க வேண்டும்.

பாகிஸ்தானில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியின் திடமான, நியாயமான செயல்பாடுகளுக்காக அந்நாட்டு வழக்கறிஞர்கள் அவரைப் பாராட்டியது மட்டுமல்லாமல் அந்நாட்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் அது வழிவகை செய்தது. இன்றைக்கு நீதிபதிகளின் போக்கு கவலை அளிக்கிறது. அவர்கள் அன்பளிப்பு பெறுவதும், கேளிக்கை விருந்துகளில் கலந்துகொள்வதும் நீதித்துறைக்கு நல்லதல்ல. இதுபோன்ற கொடிய புற்றுநோய் வருவதற்கு முன் அதைத் தடுக்க வேண்டும்.

நீதிபதிகள் சமுதாயத்தில் கலக்கக் கூடாது என்ற எண்ணம் கிடையாது. ஆனால் அதுவே பல சந்தேகங்களுக்கும், பல பிரச்னைகளுக்கும் துணையாகி விடுமோ என்ற பயம் ஒருபக்கம் எழுகிறது.

நீதிபதிகளின் மீது பொதுவாக ஊழல், லஞ்சம், நடுநிலை இல்லாமை, சமூகப் பார்வை இல்லாமை என்ற கொடிய இயல்புகள் இருப்பதாக வி.ஆர். கிருஷ்ணய்யர் குறிப்பிடுகின்றார். சில நீதிபதிகள் வழக்குகளை விரைவில் முடிக்காமல் இழுத்தடிப்பதாலும் வழக்குகளின் தன்மைகள் புரியாமல் சில வழக்குகளின் தீர்ப்புகள் இருப்பதாலும் பிரச்னைகள் எழுகின்றன என அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

பிரபல மூத்த வழக்கறிஞர் சாந்திபூஷண், 40 சதவீதம் பேர் உயர் நீதிமன்றங்களிலும் 80 சதவீதம் பேர் கீழாண்மை நீதிமன்றங்களிலும் ஊழலில் சிக்கியுள்ளனர் என்றும், இதை ரகசியமாகப் பெறுவதால் புலன் விசாரித்தே நிரூபிக்க முடியும் என்றும் கூறுகிறார்.

இவ்வாறு ஊழல், மற்றொரு பக்கம் வழக்கை பைசல் செய்வதில் தாமதம் என்று பல பிரச்னைகள் மட்டுமில்லாமல் தற்பொழுது நீதித்துறை அவமதிப்பு வழக்குகள் அதிகமாகத் தாக்கல் செய்யப்படுவது போன்ற பல சூழல்கள் நீதித்துறையைப் பாதித்து வருகின்றன. நீதித்துறையைச் சீர்திருத்தவும், சரிசெய்யவும் திடமான நடவடிக்கைகள் இன்றைக்குத் தேவை. நீதித்துறையின் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டிய பிரச்னைகளை மத்திய மாநில அரசுகள் கவனிக்க வேண்டும்.

நீதிமன்றம் ஆலயத்திற்கு ஒப்பானது. பிரச்னைகள் வரும்போது பிரார்த்தனைகளோடு தங்களுக்கு ஏற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்வது போன்று சிக்கல்கள் ஏற்படும்போது பரிகாரம் தேட நீதிமன்றம் செல்கின்றனர். இன்றைக்கு மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப வழக்குகளும் அதிகமாகிவிட்டன. நீதிமன்றங்கள் அன்றாட மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகத் திகழ்கின்றன.

நீதிமன்றங்கள் சரிவர செயல்பட்டால்தான் ஜனநாயகத்தையும், அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மற்றும் பல சிவில் பிரச்னைகளையும் தீர்க்க முடியும். ஆனால், இன்றைக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கவலையான சூழல் மேலும் பிரச்னைகளை உருவாக்கி விடக் கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஊழல், முறைகேடுகள் என்று இத்துறையில் புகுந்துவிட்டால் இதை யார் கண்காணிப்பது என்பதுதான் இன்றைய கவலையும் சலிப்பும் ஆகும்.

நன்றி : தினமணி

0 comments: