Saturday, October 25, 2008

கேட்டால் கிடைப்பதில்லை!

தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே உள்ளன. நடுத்தர வருவாய்ப் பிரிவினர் பலரும் இந்த மாதத்தை நியாயவிலைக் கடைகள் மூலம் சமாளிக்கலாம் என்ற எண்ணம் பொய்யாகி வருகிறது.
ரூ. 50க்கு 10 மளிகைப் பொருள் திட்டத்தை தமிழக அரசு அக்டோபர் 2ம் தேதி தொடங்கி வைத்தது. ஆனால் இத்திட்டத்தின் பயன் சிலருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. பலருக்குக் கிடைக்கவில்லை.
இந்த 10 மளிகைப் பொருள்களில் அதிக எண்ணிக்கையில் இடம்பெறும் மளிகைப் பொருள், தற்போது உணவுப்பொருள் சந்தையில் முன்னிலையில் உள்ள நிறுவனத்தின் பொருள் என்பதால், எல்லா குடும்ப அட்டைதாரர்களும் ரூ.50 க்கு 10 மளிகைப் பொருள்களை வாங்கச் செல்கின்றனர். ஆனால் பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் இருப்பு இல்லை என்று திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
ஒவ்வொரு கடைக்கும் முதல்கட்டமாக குறைந்த எண்ணிக்கையிலேயே பொருள்கள் கொடுத்ததாகவும், வரவேற்பு அதிகரித்தால் அதற்கேற்ப விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளிக்கிறார்கள். பத்து மளிகைப் பொருள்களையும் ஒரே பாக்கெட்டில் போடுவதற்கு ஆள்பற்றாக்குறையால் தாமதம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், நியாயவிலைக் கடைகளில் மிகவும் வேண்டியவர்களுக்கு மட்டும் தடையின்றி வழங்கப்படுகிறது.
ஒரு மாவட்டத்துக்குத் தேவையான அனைத்து மளிகைப் பொருள்களும் மாவட்டத் தலைநகரில் வைக்கப்பட்டு பிரித்து அளிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நடைமுறைதான் ஊழலின் ஊற்றுக்கண். அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இது புரியாததோ தெரியாததோ அல்ல.
இதேபோன்றுதான் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்திலும் அரசின் ரகசியம் காக்கும் முறைகளால் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது.
தரமான அரிசியைத்தான் வழங்குகிறோம் என்று தமிழக அரசு சொன்னபோதிலும் பல நியாயவிலைக் கடைகளில் தரம் குறைந்த அரிசிதான் கிடைக்கிறது. மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
நியாயவிலைக் கடை ஊழியர்கள் தரும் விளக்கம் வேறுவிதமானது: அரசு நல்ல அரிசியைக் குறைந்த அளவிலும், தரம் குறைந்த அரிசியை அதிக அளவிலும் வழங்குகிறது. அவற்றை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அதே விகிதாசாரத்தில் அனுப்ப முடிவதில்லை. இதனால் நல்ல அரிசி முழுதும் பிரச்னை ஏற்படாமல் இருக்க நகர்ப்புறங்களுக்கு அதிகம் கொடுக்கப்படுகிறது. தரம் குறைவான அரிசி புறநகர்ப் பகுதிகளுக்கு அதிகம் திருப்பி விடப்படுகிறது.
இதில் எது உண்மை? அரசு கொடுக்கும் நல்ல பொருள் குறைவாக விநியோகிக்கப்படுகிறதா? அல்லது நல்ல பொருள் நியாயவிலைக் கடைக்கே வராமல் திசை திருப்பப்படுகிறதா? அல்லது நியாயவிலைக் கடை ஊழியர்கள் மக்களுக்குத் தராமல் இருக்கிறார்களா? இத்தகைய ஊழல் நடப்பதற்கு காரணமே தமிழக அரசு எல்லாவற்றையும் ரகசியமாகச் செய்ய வேண்டும் என்ற மனப்போக்குதான்.
வெளிச்சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.30க்கு விற்கப்படும்போது, தகுதியுடைய அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1க்கு ஒரு கிலோ அரிசியை எப்போதும் முதல்தரமாக வழங்குவது நடைமுறைக்குச் சாத்தியமே இல்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று.
அனைத்து அட்டைகளுக்கும் முதல் 5 கிலோ தரமான அரிசியாகவும், அடுத்த 10 கிலோ அரிசி இரண்டாம் தரத்திலான அரிசியாகவும், அதன் பின்னர் வண்டுகள் நெளிவதாகக் குறைகூறும் மூன்றாம் தர அரிசி 5 கிலோ என்றும் அரசே ஒரு வரையறையை வகுத்துவிட்டால், தமிழகத்தில் அனைவருக்கும் தரமான அரிசி 5 கிலோவாவது கிடைக்கும். அதற்குமேல், விருப்பப்பட்டவர்கள் தரம் குறைவான அரிசியை வாங்கிக்கொள்வர். ஊழலுக்கும் ஒரு தடை உண்டாகும்.
இதேபோன்றுதான் பாமாயிலும். அனைத்து அட்டைகளுக்கும் பாமாயில் கொடுக்கப்படுவதில்லை. குறைவாக வந்துள்ளது, ஒரு கார்டுக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறைதான் கிடைக்கும் என்று நியாயவிலைக்கடை ஊழியர்களே சட்டம் வகுக்கிறார்கள்.
எல்லாமும் எல்லாருக்கும் கிடையாது என்றால், யாருக்காக இந்தத் திட்டங்கள்?
நன்றி : தினமணி

0 comments: