Tuesday, October 28, 2008

அமெரிக்க நிதி நெருக்கடியும் இந்தியாவும்

உலகெங்கிலும் உள்ள அரசுகள் மற்றும் மத்திய வங்கிகள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்னை இதுதான். பூதாகரமாக எழுந்துள்ள அமெரிக்க நிதி நெருக்கடியின் தாக்கம் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சிதைத்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான்.
உலகப் பொருளாதாரம் ஒரே கூரையின் கீழ் வந்துவிட்ட நிலையில், அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சி இந்திய வங்கிகளை பாதிக்குமோ? என்று நம் நாட்டு முதலீட்டாளர்கள், கவலையில் இரவுத் தூக்கத்தை இழந்தது நிஜம்.
நல்லவேளையாக, இந்திய வங்கிகளுக்கு பாதிப்பில்லை என்ற உறுதிமொழி உரிய நேரத்தில் மத்திய அரசிடமிருந்து மக்களுக்குக் கிடைத்தது.
தற்போதைய நிலைமையைச் சற்று கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் தெளிவாகும்.
இன்றுள்ள நிலையில் இந்தியாவில் வங்கிகளுக்குப் பாதிப்பு இல்லை. ஆனால், இந்தியப் பொருளாதாரம் பாதிப்பிலிருந்து தப்பிக்குமா? உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், இந்தியப் பொருளாதாரத்துக்கு சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ பாதிப்பு இருக்கும் என்பது வெளிப்படை.
முதலில் வங்கிகளின் நிலையைப் பார்ப்போம். 1970, 1980களில் உலகிலேயே நிதி மேலாண்மையிலும், வங்கிச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கியவர்கள் அமெரிக்கர்கள்தான் என்று பரவலாகக் கருதப்பட்டது. அதனால் அமெரிக்கர்களின் நிதித்துறை நிபுணத்துவம் மற்றும் நடைமுறைகள் பல வளரும் நாடுகளால் பின்பற்றப்பட்டன. இந்தியா இதற்கு விதிவிலக்கு அல்ல.
அந்த காலகட்டத்தில், பிரகாஷ் டாண்டன் குழு (1975), கே.பி. சோரே குழு (1979), எஸ்.எஸ். மராத்தே குழு (1983) ஆகிய நிபுணர் குழுக்கள் கடன் வழங்கும் நடைமுறைகளை நெறிமுறைப்படுத்தின. அவை பெரும்பாலும் அப்போதைய அமெரிக்கப் பாணியில்தான் அமைந்திருந்தன. சொல்லப்போனால், கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ள எஸ்.எஸ். மராத்தே குழுவின் பரிந்துரைகள் 1983ல் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டபோது, ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர் தற்போதைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்.
இதுதவிர, வங்கிகளின் சொந்த மூலதனம் எவ்வளவு இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து குறைந்தபட்ச மூலதனம் படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இந்த நியதிகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்வகையில், இந்திய வங்கிகளுக்கு இன்றளவும் பேசல் 1, பேசல் 2 என்ற நியதிகள் அமலில் உள்ளன.
இந்த நியதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை பாரத ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.
ஆனால், அமெரிக்க வங்கிகள் பிற நாடுகளுக்குக் கற்றுக் கொடுத்த நிதி மேலாண்மைத் தத்துவங்களை அவர்களே பின்பற்றவில்லை. அதனால்தான் அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவால் ஆயின.
இந்திய வங்கிகள் மூலதன விகிதம், கடன் வழங்கும் நியதிகள் ஆகியவற்றைப் பின்பற்றுவதுடன், வங்கிச் செயல்பாடுகளில் நிதானமான போக்கையே பின்பற்றுகின்றன. அத்துடன் வாராக்கடன்களின் அளவும் படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாராக்கடனை வசூலிப்பதில் புதிய சட்டதிட்டங்கள் வங்கிகளுக்கு உதவிகரமாக உள்ளன. அதனால் இந்திய வங்கிகள் இன்றும் பாதுகாப்பாக உள்ளன.
ஒரே ஒரு தனியார் துறை வங்கி, அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட முதலீட்டு வங்கிகளுடன் நிதி கொடுக்கல், வாங்கல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதனால் அந்த வங்கிக்கு இழப்பு என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்களது நிகர சொத்து மதிப்புடன் ஒப்பிடுகையில் இந்த இழப்பு மிக மிகக் குறைவுதான். எனவே இதுகுறித்து முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இதுபோன்ற இழப்புகள் பற்றிய விவரங்களை அனைத்து வங்கிகளிடமிருந்தும் பாரத ரிசர்வ் வங்கி கோரியுள்ளது. அந்த விவரங்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்தவுடன் நிலைமை துல்லியமாகத் தெரிய வரும்.
அதேநேரம், அமெரிக்க நிதி நெருக்கடியால் இந்தியப் பொருளாதாரத்துக்கு எந்த எந்த வகையில் பாதிப்பு?
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து கணிசமான அளவு தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்துள்ளன. இந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 8 பில்லியன் டாலர் அளவு முதலீடுகளை எடுத்துள்ளன.
இந்தியப் பங்குச் சந்தையில் பங்குகளின் விலை இந்த அளவுக்குச் சரிந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
இந்தியப் பங்குச் சந்தையில் இப்போதுகூட 150 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய நிறுவன முதலீடுகள் உள்ளன. இந்நிலையில் உலக அளவில் நிகழும் ஒவ்வோர் அசைவும் இந்தியப் பங்குச் சந்தையைப் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
இரண்டாவதாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பல ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. இதனால் அன்னிய வர்த்தகத்தில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் இந்த இடைவெளி 49 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்திய ஏற்றுமதிகள் வெகுவாக அதிகரித்த பின்பும், அன்னிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்க முடியவில்லை. ரூபாயின் மதிப்பு குறைந்தால் இறக்குமதியின் விலை கூடும்.
ரூபாயின் மதிப்பு சரிந்ததால் இந்திய ஏற்றுமதியாளர்களாவது லாபம் அடைந்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இதற்குக் காரணங்கள் இரண்டு: ஒன்று, ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் கணிசமான பகுதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்டவை.
இரண்டு, இப்படி ரூபாயின் மதிப்பு சரியும் என்பது முன்னதாக எதிர்பார்க்கப்படவில்லை. மாறாக, ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். எனவே, எதிர்கால ஊக பேர வர்த்தக அடிப்படையில் தங்களுக்கு வரவேண்டிய டாலர்களை குறைந்த மதிப்பில் நிர்ணயம் செய்து ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். எனவே ரூபாயின் மதிப்பு சரிவால் கிடைக்க வேண்டிய ஆதாயம் கிடைக்காமல் போய்விட்டது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்துறையில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களது வாடிக்கையாளர்கள் பெரும்பாலானவர்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆவார்கள். இவர்களுக்கு இப்போது சரிவு ஏற்பட்டிருப்பதால், இவர்களிடம் இருந்து கொஞ்சகாலம் பெரிய அளவில் வியாபாரத்தை எதிர்பார்க்க முடியாது.
இவர்களும் எதிர்கால ஊக பேர அடிப்படையில் தங்களுக்கு வர வேண்டிய டாலர் தொகையை குறைந்த மதிப்புக்கு நிர்ணயம் செய்து கொண்டார்கள். எனவே இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்காமல் போய்விட்டது. ரூபாயின் மதிப்பு மேலும் உயரக்கூடும் என்று இவர்கள் தவறாக கணக்கிட்டதுதான் இதற்குக் காரணம்.
பொதுவாக, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது சோதனை காலம். முன்னதாக ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால் இழப்பு. இப்போது, அமெரிக்க நிதி நெருக்கடி காரணமாக, அமெரிக்காவில் மட்டுமல்லாமல், பல ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரிய அளவில் ஏற்றுமதி ஆர்டர்களை எதிர்பார்க்க இயலாது.
மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரத்துக்கு மோசமான பாதிப்பு இருக்காது என்று நம்பப்படுகிறது. காரணம், மூலதனக் கணக்கை முற்றிலும் மாற்றிக்கொள்ளும் முறை ( ஊன்ப்ப் இர்ய்ஸ்ங்ழ்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ் ர்ச் இஹல்ண்ற்ஹப் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்) இந்தியாவில் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. எனினும், உலகமய சூழலில் உலக அளவில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி, இந்தியாவை ஓரளவேனும் பாதிக்கவே செய்யும். அதை எதிர் கொள்வதற்குத் தேவையான உத்திகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்துள்ள சி.ஆர்.ஆர். விகிதக் குறைப்பு இத்திசையில் ஒரு ஆரம்பம். இந்தியாவில் மந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வில்தான், பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்) 9 சதவிகிதத்தில் இருந்து 8.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இதன் பயனாக, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்கான நிதி ஆதாரம் ரூ.20,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும். இதன் பயனாக வங்கிகள் அத்தியாவசியக் கடன் வழங்குவது அதிகரிக்கும். சிறு தொழில் துறைக்கு பெரும் உதவியாக இருக்கும்.
கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர்,
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
நன்றி : தினமணி

0 comments: