Sunday, August 31, 2008

இருண்ட காலத்துக்கான முன்னோட்டம்

கடந்த சில நாள்களாகவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரப்பூர்வ மின்வெட்டுடன் கூடுதலாக முன்னறிவிப்பற்ற மின்வெட்டையும் செயல்படுத்தி வருகிறது மின் வாரியம்.
பெரும்பாலும் நள்ளிரவிலும் அதிகாலையிலும் மேற்கொள்ளப்படும் இந்த மின்வெட்டால், மின் பயன்பாடற்ற கடந்த நூற்றாண்டு வாழ்க்கையை நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.
இந்நிலையில், நாமக்கல்லில் திங்கள்கிழமை ஒரு விழாவில் பேசிய மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, ""அரசு உத்தரவுக்கு மாறாக, கூடுதல் நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
ஆனால், அமைச்சர் இப்படி பேசிய அடுத்த 24 மணி நேரத்துக்குள் ""எந்த நேரமும் மின்தடை ஏற்படலாம்; மின்தடை ஏற்படும் நேரத்தைக் கணிக்க முடியாது'' என அறிவித்திருக்கிறது மின் வாரியம்.
ஏதோ அரசுக்குத் தெரியாமல் அலுவலர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைபோல் மின்தடையைச் சித்தரிக்கும் அமைச்சரின் பேச்சும் அதைத் தொடர்ந்து வந்திருக்கும் தலைகீழான இந்த அறிவிப்பும் கேலிக்குரியவை!
தமிழகத்தில் 2.95 கோடி மின் இணைப்புகள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் 6 லட்சம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
இதற்கேற்ப மின் தேவையும் ஆண்டுதோறும் 500 மெகாவாட் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
மாநிலத்தின் மின் தேவை 2005 06ல் 8,301 மெகாவாட்டாக இருந்தது. 2008 09ல் அது 9,576 மெகாவாட்டாக அதிகரித்திருக்கும் நிலையில், உற்பத்தி அதிகரிக்கப்படாததுடன் குறைந்தும் இருப்பதால் கடந்த சில மாதங்களாகவே 1,000 மெகாவாட் பற்றாக்குறை நீடித்து வருகிறது.
தென்னிந்தியாவிலேயே அதிக அளவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலகட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தடையற்ற மின் விநியோகம் என்ற உறுதிமொழியுடன் தொழில் நிறுவனங்களை வரவேற்கும் அரசு, அவற்றின் மின் தேவையைக் கணிக்காததும் அதற்கேற்ப மின் உற்பத்தியைப் பெருக்காததும் யாருடைய தவறு?
பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய அரசிடம் நாள்தோறும் 300 மெகாவாட் கேட்ட அரசு, முதல்கட்டமாக அளிக்கப்பட்ட 100 மெகாவாட்டுடன் பரிபூரண திருப்தியடைந்துவிட்டது.
1,000 மெகாவாட் தேவைப்படும் இடத்தில் 100 மெகாவாட் எந்த மூலை?
மின்தடை ஓர் அரசியல் பிரச்னையாக உருவெடுத்ததும் செய்யூர், மரக்காணம் அல்லது கடலூரில் இரு அல்ட்ரா மெகா மின் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகக் கூறியது அரசு. ஆனால், "ஜயங்கொண்டம் மின் திட்ட'மே 15 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்துக்கொண்டிருக்கும்போது இந்தப் புதிய திட்டங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எந்தக் காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை.
கடந்த இரு ஆண்டுகளில் மின் உற்பத்திக்கென எந்த உருப்படியான திட்டத்தையும் மின் துறை மேற்கொள்ளவில்லை. கைவசம் உள்ள திட்டங்களும் 2011க்குள் நிறைவடைய வாய்ப்பில்லை.
அரதப் பழசான சாதனங்களுடனும் நடைமுறைகளோடும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மின் வாரியத்தை லாபத்தில் இயங்கச் செய்யும் நடவடிக்கைகளும் இல்லை.
இவையெல்லாமே மின் துறை தோல்வியின் அப்பட்டமான வெளிப்பாடுகள். ஆனால், அதற்கான தண்டனையையோ மக்கள் மீது சுமத்திக்கொண்டிருக்கிறது அரசு.
ஏதோ இன்றோடு முடியப்போவதில்லை இந்தப் பிரச்னை. அடுத்த ஆண்டில் இப்பற்றாக்குறை 1,280 மெகாவாட்டாகவும் அதற்கடுத்த ஆண்டில் 1,860 மெகாவாட்டாகவும் அதிகரிக்கும் என மின் வாரியத்தினரே தெரிவிக்கின்றனர்.
இப்போதே நிலைமை இப்படியென்றால் அப்போது எப்படியிருக்கும்? நினைத்தாலே ஒரே இருட்டாக இருக்கிறது!
இந்தக் கொடுமையெல்லாம் கொசுக்களுக்கோ போர்வைகளுக்கோ புரிகிறதா என்ன? போர்த்தினால் வியர்க்கிறது; விலக்கினால் கடிக்கிறது!
சமஸ்
நன்றி : தினமணி

0 comments: