Saturday, August 30, 2008

தமிழர்களுக்கு தலைக்குனிவு!

மதுவின் சுவையே தெரியாமல் வளர்ந்த தலைமுறை ஒன்று உண்டு; அந்த ருசிக்கு அடிமையானவர்கள் கூட, குடிப்பழக்கத்திலிருந்து மீளமுடியாமல் ஊருக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக் குடித்த காலம் ஒன்று உண்டு.
""இருபது ஆண்டுகள் ஆண்டுவிட்டு எலியைத் தின்னச் சொன்னதாக'' கூறப்படும் காங்கிரஸ் கட்சி ஆண்ட ""இருண்ட காலம்'' அது. இப்போதோ, தமிழர்களின் நலனுக்காகவே அவதாரம் எடுத்துள்ள பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் மது அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி தமிழகம் முழுவதுமே தவிக்கிறது.
செங்கோட்டை அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 12வது வகுப்பு மாணவர்கள் இருவர் கடந்த திங்கள்கிழமை மது புட்டியுடன் பள்ளிக்கூடத்துக்கு போதையிலேயே வந்து, பையிலிருந்து எடுத்து மேலும் குடித்திருக்கின்றனர். சக மாணவர்கள் அவர்களை ஆசிரியரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். பிறகு, தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தி பெற்றோரை வரவழைத்து பள்ளியைவிட்டு நீக்கியுள்ளார்
இந்த பள்ளிக்கூடத்தின் புகழ் இத்தோடு நின்றுவிடவில்லை, ஏற்கெனவே பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் இதே போல குடித்துவிட்டுப் பள்ளிக்கூடத்துக்கு வந்ததற்காக, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனராம்.
சென்னையிலே மற்றொரு சம்பவம். ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் தனது திருமண நாளுக்கு முதல் நாள் இரவு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க மது அருந்தியிருக்கிறார். நண்பர்களில் ஒருவன் குடி போதையில், ""உனக்குப் பார்த்த பெண் அழகாக இல்லை'' என்று கூறியிருக்கிறார். அந்தக் குடி வெறியிலும் அதை அப்படியே எடுத்துக் கொண்ட மணமகன், ""எனக்கு இந்தத் திருமணமே வேண்டாம்'' என்று அந்தத் திருமண மண்டபத்தைவிட்டு வெளியேறி எங்கோ போய் உட்கார்ந்திருக்கிறார். போலீஸார் தலையிட்டு அவரை, சமாதானம் செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துவந்துள்ளனர். ""குடிகாரனைத் திருமணம் செய்துகொண்டு என்னால் நிம்மதியாக வாழ முடியாது'' என்று அந்த மணமகளோ சரியான முடிவெடுத்து அவரை நிராகரித்துவிட்டாள்.
இவ்விரு செய்திகளையும் படித்ததும் தமிழ்நாடு போகும் பாதை சரியானதுதானா என்ற கவலைதான் மேலிடுகிறது. தமிழ்நாட்டை ஆளும் கட்சியும், ஆளத்துடிக்கும் பிரதான எதிர்க்கட்சியும் மதுவிலக்கில் தங்களுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை என்பதை ஏற்கெனவே தெரிவித்துவிட்டன.
இலவசத் திட்டங்களை அறிவித்து அதை ஏழைகளுக்குக் கொடுத்தாலே தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற புதிய உத்தியைக் கட்சிகள் கண்டுபிடித்துவிட்டன. ""கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க'' தமிழ் இனம் தயாராக இருக்கும்போது சுயநலத் தலைவர்களுக்கு இனி என்ன கவலை?
""தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு இனி சாத்தியமில்லை; கள்ளச்சாராயம் ஆறாகப் பெருக்கெடுக்கும்; அதைத் தடுக்க நமது காவல்துறையைப் பத்து மடங்காகப் பெருக்கினாலும் போதாது; பிற மாநிலங்களுக்கு நம் தமிழர்கள் குடிப்பதற்காகவே குடியேறிவிடுவார்கள்; குடிப்பதை நிறுத்தினால் உடல் நலம் கெட்டு விரைவிலேயே பரலோகம் போவார்கள்; நம்முடைய நல திட்டங்களுக்குப் பணம் கிடைக்காமல் திண்டாட நேரிடும்; காமராஜ் காலத்திலேயே கள்ளச் சாராயத்தைத் தடுக்க முடியவில்லை'' என்றெல்லாம்தான் ஆள்வோர் தரப்பிலிருந்து பதிலாக வருகிறது.
மதுவிலக்கு அவசியம் என்று இப்போதைக்கு ஒரேயொரு கட்சிதான் கூறி வருகிறது. இந்தக் குரல் தனிக்குரலாக இருந்துவிடக்கூடாது. காந்தியவாதிகளும் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை உள்ள நல்லவர்களும் இதற்கு வலு சேர்க்க வேண்டும். இது சவாலான வேலைதான்; இந்தச் சவாலில் வெற்றி காணும் நாள்தான் தமிழர்களுக்கு உண்மையிலேயே நல்லநாள். தமிழர்களுக்கு எதிரி வெளியில் இல்லை, மது என்ற வடிவில் நம்முடனேயே இருக்கிறான். மதுவை ஒழிப்போம், மனிதர்களைக் காப்போம்.
நன்றி : தினமணி

2 comments:

said...

அரிசி ஒரு ரூபா !
தண்ணீர் ஒரு லிட். பதினாலு ரூபா !!
ஆடுவோமே தள்ளடுவோமே !!!

said...

அகநாழிகை வருகைக்கு நன்றி