Thursday, August 28, 2008

தீதும் நன்றும் பிறர் தர வாரா

61வது சுதந்திர தின விழா எல்லா மாநிலங்களிலும் விமரிசையாகவும், அசம்பாவிதம் எதுவுமின்றி கொண்டாடப்பட்டது. சுதந்திர தினம் என்றாலே எல்லோருக்கும் அந்நாளில் ஏற்பாடு செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தான் நினைவுக்கு வரும். ஒரு லட்சம் போலீஸார் குவிப்பு, டிக் டிக் டிக்... சுதந்திர தினம் நெருங்குகிறது போன்ற தலைப்புச் செய்திகள் நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு.
சமீபத்திய பெங்களூரு, ஆமதாபாத், சூரத் நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. ஆமதாபாத்தில் நடந்த சம்பவம் மற்ற நிகழ்வுகளைவிட கொடுமையானது. சூரத்தில் ஒவ்வொரு நாளும் உயிருள்ள குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்படுகின்றன. இதுவரை 29 வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
""நல்ல தீவிரவாதி செத்தவனாகவே இருப்பான்'' இது பயங்கரவாத படிப்பில் கூறப்படும் முதுமொழி. பயங்கரவாதத்தில் தீவிரமாக ஈடுபடுபவன் தன் உயிரையும் இழப்பதற்குத் தயாராக இருப்பான்; அவன் சேர்ந்த அமைப்பிற்கு அவன் நல்ல தீவிரவாதி. பயங்கரவாதத்தை ஒடுக்கும் பணியில் உள்ள போலீஸார் இம்மாதிரி உயிர் தியாகத்திற்குத் தயாராக இருக்கும் தீவிரவாதியைச் சுட்டு வீழ்த்துவதிலே குறியாயிருப்பார்கள் அதற்காக தான் மேற்சொன்ன முதுமொழி.
வன்முறையாளர்கள் தங்களது முயற்சியில் பல முறை தோற்கலாம். ஒருமுறையாவது அவர்களது தீய எண்ணம் நிறைவேறினாலும் சமுதாயத்திற்கு பேரிழப்பாக முடிகிறது. உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும். ஒரு சிறு அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் எடுத்த முயற்சிகள் பெரும் பின்னடைவு அடையும். பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவு அணிகள் பல இடங்களில் பயங்கரவாதக் குழுக்களைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்துள்ளன. ஆனால் நுண்ணறிவுப் பிரிவுகள் தங்களது வெற்றிகளைப் பறைசாற்ற முடியாது. தோல்வியைத் தழுவினால் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
2003ல் இருந்து 95 இடங்களில் இந்தியாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஓர் உண்மை புலப்படும். தீய செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதக் குழுக்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ உள்ளூரில் உதவி கிடைத்துள்ளது. ஒரு சம்பவத்தில் தீவிரவாதிகள் அதிக வாடகை கொடுத்து வீடு எடுத்து தங்கி சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகியுள்ளனர். 1991ல் நிகழ்ந்த ""திருப்பெரும்புதூர்'' குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சிவராசன், சுபா சென்னை புறநகர்ப் பகுதியில் தங்கிப் பின்பு பெங்களூரு சென்றனர். மும்பையில் 2003ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குறித்த நேரத்தில் வெடிக்கக் கூடிய குண்டு மறைத்து வைக்கப்பட்ட பெட்டியைச் சம்பந்தமே இல்லாத மூன்றாம் மனிதர்கள் மூலம் மக்கள் நடமாடும் இடத்தில் வைக்கப்பட்டு சேதம் ஏற்படுத்தப்பட்டது. எவ்வளவுதான் மறைமுகமாக நாசவேலையில் ஈடுபடுபவர்கள் சதித் திட்டம் தீட்டினாலும் தெரிவு செய்த இடங்களில் செயல்முறைப்படுத்துவதற்கு முகப்பாளர்கள் வெளியில் வர வேண்டும். அல்லது சம்பந்தப்படாத மூன்றாம் மனிதர் மூலம் பொருள்களை வைக்க வேண்டும். இங்கு தான் உள்ளூர் சரக காவல் நிலையத்தினர் பொறுப்பு கவனத்திற்கு வருகிறது. காவல் நிலைய அதிகாரிக்கு பெரிய அளவில் மறைமுகமாக சதித்திட்டம் வகுப்பவர்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தனது சரகத்தில் புதிதாக வந்தவர்கள் பற்றியும், சந்தேகத்திற்குரிய நபர்கள் பற்றியும் கணித்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பு காவல் நிலைய அதிகாரிக்கு உண்டு.
இந்திய காவல் சட்டம் 1861 காவல் துறையின் முக்கிய பொறுப்பு எனப்படுவன குற்றங்கள் நடவாமல் தடுத்தல், தகவல் சேகரித்தல். இதை நிறைவேற்றுவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பொது மக்களும் சீருடை அணியாத போலீஸார் என்று கூறுவது உண்டு. ஏனெனில் ஏற்ற நடைமுறை சட்டத்தில் காவல்துறையினர்களுக்கான சில அதிகாரங்கள் பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தை அமல்படுத்துவதில் காவல்துறையினருக்கு உதவுவது ஒருவரின் பொறுப்புடன் கூடிய கடமையாகும்.
பொது மக்களின் நன்மதிப்பைப் பெறுவது காவல் நிலைய அதிகாரியின் அணுகுமுறையைப் பொறுத்தது. தமது எல்லைக்குட்பட்ட நிகழ்வுகளைப் பற்றியும், பிரச்னைகள் பற்றியும், குடியிருப்புகள், வியாபார மையங்கள், கல்வி நிலையங்கள், முக்கிய அலுவலகங்கள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். சமுதாயக் காவல் பணி என்பது மக்களோடு இணைவதற்கு முக்கிய பாலமாக அமைந்துள்ளது. சமுதாயக் காவல் மையங்கள் காவல் நிலைய சரகத்தின் முக்கிய இடங்களில் மக்களோடு தொடர்பு கொள்ள ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளன.
சமுதாயக் காவல் பணியை வெற்றிகரமாக திருச்சி நகரத்தில் வடிவமைத்துச் செயலாக்கியதற்காக திரிபாதி, இ.கா.ப. (ஐ.ஜி)க்கு பாரத பிரதமரின் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. திருச்சி நகரின் பிரச்னைகளைக் கண்டறிந்து பொது மக்களுக்கு உதவும் வகையில் குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்ற நிகழ்வுகள் பற்றிய அச்சத்தைப் போக்குவதற்கும், நகரத்தை ஒரு பிரிவில் 12,000 ஜனத்தொகை அடங்கிய 57 ரோந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. அந்த ரோந்து பிரிவிற்கு நான்கு காவலர்களை பிரத்யேகமாக நியமித்து அவர்களை ரோந்து அதிகாரிகள் என்ற உயர் தகுதியைக் கொடுத்து, அவர்கள் மக்களது பிரச்னையைக் கண்டறிந்து சுமுகமான தீர்வு காணும் திறமைசாலிகளாகச் செயல்பட்டனர். அந்தந்தப் பகுதிவாழ் மக்களிடம் சென்று அவர்களைப் பற்றிக் கணக்கெடுத்து, புதியவர்கள் குடிவந்தால் தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. குடிசைப் பகுதிகளை அரவணைக்கும் திட்டத்தின் கீழ் அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை மற்ற அரசாங்கத் துறைகளுடனும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடும் நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்து அவர்களது நம்பிக்கை பெறப்பட்டது. வேலை வாய்ப்புக்கான உதவியும் நல்கியதால் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.
இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கையால் குற்றங்களின் உறைவிடமாக இருந்த குலப்பட்டி என்ற பகுதி, குற்றப்பாதையை விடுத்து நல்வழியில் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொடுத்தது இந்த சமுதாயக் காவல் பணித் திட்டத்தின் சிறந்த சாதனையாகும். இதே மாதிரியான சாராய ஒழிப்புத் திட்டம் 1999ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு, குத்தப்பாக்கம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் இளங்கோவுடன் இணைந்து வெற்றிகரமாக மதுவிலக்கு போலீஸாரால் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கை அந்த கிராமம், பஞ்சாயத்து நிர்வாகத்தில் முன்மாதிரி கிராமமாக மாற வித்திட்டது.
சாதாரண நாள்களில் மக்களோடு ஒன்றிப் பழகி மனிதநேயத்தோடு குறைகளைத் தீர்வு செய்தால் அசாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எழும்பொழுது மக்களே முன்வந்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து நிலைமையைச் சீர்செய்ய உதவுவார்கள். ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குற்றங்கள் மூன்று வகை 1. தெருக் குற்றங்கள் 2. வட்டாரக் குற்றங்கள் 3. சரக எல்லைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் தாக்கத்தினால் விளையும் குற்றங்கள். தெருக் குற்றங்களை பார்வைபடக்கூடிய ரோந்து மூலம் நடவாமல் தடுக்கலாம். வட்டாரக் குற்றங்களைத் தெரிவு செய்து தடுப்பதற்கும், நடந்தால் கண்டுபிடிப்பதற்கும் அந்த சரக மேல் அதிகாரிகள் அண்டை சரகங்களோடு ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவது வகை குற்ற நிகழ்வுகள் நடவாமல் கண்காணிப்பது உயர்மட்ட காவல் அதிகாரிகளின் தலையாய கடமையாகும். பல மட்டங்களில் செயல்படும் நுண்ணறிவுப் பிரிவுகளோடு தொடர்பு வைத்து பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை ஆராய்தல் வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவைப் பற்றி பெங்களூரு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகுதான் பெங்களூரு போலீஸார் தெரிந்து கொண்டனர் என்பது நடைமுறையில் காவல் பிரிவுகளில் நிலவும் இடைவெளியைக் குறிக்கிறது. முன்பே அறிந்திருந்தால் பெங்களூரு ஜுலை சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகின்றது.
தொழில் நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி பெற்ற இந்நிலையில் காவல்துறை நவீன உபகரணங்களை உபயோகிக்காவிட்டால் வெற்றி இலக்கை அடைய முடியாது. லண்டன் நகரில் 7 / 7 என்று கூறப்படும் 2005ம் ஆண்டு ஜூலை 7ம் நாள் காலை 8.55 மணி முதல் ஒரு மணி நேரம் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 56 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். லண்டன் மாநகர பல முக்கிய இடங்களில் தானியங்கி காமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து கிடைக்கப்பெற்ற 2000க்கும் மேற்பட்ட படங்கள் ஆராயப்பட்டு சம்பவம் நடந்த காலை 8.30 மணிக்கு "கிங்க்ராஸ்' ரயில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட விடியோ படங்கள் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடிந்தது.
நியூயார்க் போன்ற நகரங்களில் பொது இடங்கள், தெருமுனைகள், வியாபார வளாகங்கள், அலுவலகங்கள் போன்ற பல இடங்களில் பொருத்தப்பட்ட காமிராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட படங்கள் தொடர்ச்சியாக ஆராயப்பட்டு காப்பகத்தில் வைக்க தனி அமைப்பு உள்ளது. சென்னை மாநகரக் காவலுக்கு சாலைகள், பொது இடங்களில் காமிராக்கள் மூலம் கண்காணிக்கவும், சமுதாய உதவி மையங்கள் அமைக்கவும், வெடிமருந்து கண்டுபிடிக்கக்கூடிய நவீன தணிக்கை மையங்கள் அமைக்கவும், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உபகரணங்கள் "மெகா சிட்டி போலீஸ்' திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ளன. நவீன அணுகுமுறை காவல்துறைக்கு அவசியம். காவல் நிலையங்களுக்கிடையேயான முக்கிய பிரச்னையான எல்லைப் பிரச்னை, குற்றங்கள் தலைதூக்குவதற்குதான் உதவும். இங்குதான் காவல்துறையின் உயர் ஆளுமை தலையிட்டு ஆரோக்கியமான தகவல் பரிமாற்றம் ஏற்பட வழி செய்தால் தான் அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும்.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதிகள். குற்றத்திற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்தையோ, பேசும் மொழி அடிப்படையிலோ, அவரது மதத்தை வைத்தோ ஒட்டுமொத்த சமூகத்தினரைப் பழிப்பது சமுதாயத்தில் பிரிவினையைத்தான் தூண்டும். இது மிக அபாயகரமானது. குற்றம் களையப்பட வேண்டும். வன்முறைகள் கவனமாக ஆராயப்பட வேண்டும். உடனடி புலன்விசாரணை, குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் பிரிவினை சக்திகள் தலைதூக்குவதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்து குறைகள் அகற்றப்பட்டு எல்லோரும் ஆரோக்கியமான முறையில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டால்தான் சுமூகமான தீர்வு ஏற்படும்.
நிலையான இந்த அஸ்திவாரத்தை மேலும் பலப்படுத்தி நல்லிணக்கத்தைப் பரிமளிக்கச் செய்வது சமுதாய நல்லெண்ணம் படைத்தவர்களின் பொறுப்பு.
ஆர். நடராஜ்
நன்றி :தினமணி

0 comments: