Monday, August 4, 2008

பறிபோகும் இறையாண்மை!

அணுசக்தி தேவையா இல்லையா என்பதில் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் விஷயங்களை சகித்துக் கொள்ள முடியாது என்பதில் கருத்து மாறுபாடுகள் இருக்க முடியாது.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு சர்வதேச அணுசக்தி முகமை ஒப்புதல் அளித்ததை ""இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி'' என்று குறிப்பிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். ஆனால், இந்நிகழ்வை ""உலகை அணு ஆயுதத்திலிருந்து விடுவிக்கும் கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றி'' என்று குறிப்பிட்டிருக்கிறார் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் முஹம்மது எல்பரதாய். உண்மையில் பரதாயே வெற்றி பெற்றிருக்கிறார்!
அணு ஆயதப் பரவல் தடைச் சட்டம் இயற்றப்பட்ட கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்திய அணுசக்தித் துறையை தன் கண்காணிப்புக்குள் கொண்டுவர அணு ஆயுத வல்லரசுகள் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டுவந்தன.
ஆனால், எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்படாமல் இருந்த இந்திய அணுசக்தித் துறை, அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாமலேயே அவர்களுடைய கண்காணிப்பில் கட்டுப்பாட்டில் போய்விட்டது.
நாட்டின் 14 அணு உலைகளை சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க அனுமதி அளித்ததன் மூலம் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் தன்னலமற்ற சேவையையும் நாட்டின் இறையாண்மையையும் ஒருசேர பறி கொடுத்திருக்கிறது அரசு.
ஹோமி பாபாவும், விக்ரம் சாராபாயும், ஹோமி சேத்னாவும், ராஜா ராமண்ணாவும் வளர்த்த இந்திய அணுசக்தித் துறை தன் சொந்த அரசாலேயே அதிகாரத்தை இழந்து நிற்கிறது.
இந்திய அணுசக்தித் துறையின் வளர்ச்சியானது பெரும்பான்மையாக நம்முடைய சுய முயற்சிகளாலானது; தடைகளும் முட்களும் நிறைந்த பாதையிலேயே வளர்ந்து வந்துள்ளது.
இந்தியா 1974ல் தன்னுடைய முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியபோது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி என இத்துறையில் இந்தியாவுக்கு அதுவரை உதவிவந்த எல்லா நாடுகளும் ஒதுங்கிக்கொண்டன (சோவியத் ஒன்றியம் மட்டும் சிதறும் வரை ரகசியமாக சில உதவிகளை அளித்துவந்தது).
அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையொப்பமிடாததால் ஏற்கெனவே ஏராளமான தடைகளை விதித்துவந்த அமெரிக்கா, நாம் அணுகுண்டு பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது.
இந்திய அணுசக்தித் திட்டங்களுக்கு தொழில்நுட்பத்தையோ எரிபொருளையோ வழங்கக்கூடாது என்பதற்காக ஒரு கூட்டமைப்பையே (என்எஸ்ஜி) அந்நாடு உருவாக்கியது. ரகசியமாக உதவிய ஓரிரு நாடுகளுக்கும் கடும் எதிர்வினையாற்றியது.
ஆனால், எல்லா தடைகளையும் மீறி இரண்டாம் முறையாக 1998ல் பொக்ரானில் இந்தியாவின் சுயசார்பிலான அணு ஆற்றலை வல்லரசுகளுக்கு உணர்த்தினர் நம்முடைய விஞ்ஞானிகள்.
இன்றும் இந்திய மின்சக்தித் துறையில் மகத்தான மாற்றங்களை தங்களால் உருவாக்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். உலகிலேயே அதிகமான தோரிய ஆதாரத்தைப் பெற்றிருக்கும் நாம், தோரியத்தை எரிபொருளாகக்கொண்ட முன்னேறிய தொழில்நுட்பத்தைப் பெறும்போது மின் துறையில் நாம் தன்னிறைவைப் பெறலாம் என அவர்கள் கூறினார்கள்.
இந்த ஆராய்ச்சியில் மிக முன்னேறிய நிலையில் நாம் இருக்கிறோம். ஆராய்ச்சி முழு வெற்றியடையும்போது 6 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்ய முடியும்; அடுத்த இருநூறாண்டுகளுக்கான மின் தேவையை நாமே சொந்தமாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
ஆனால், இதற்கு கொஞ்சம் காலஅவகாசம் வேண்டும். தோரியம் அடிப்படையிலான தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான ஒதுக்கீட்டை தொடர்ந்து குறைத்துவந்த அரசு, அணுசக்தித் துறை ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டில் நடப்பாண்டில் ரூ.188 கோடி குறைத்திருக்கிறது.
ராணுவ நோக்கில் அமைக்கப்பட்ட 8 அணு உலைகள் தவிர்த்து எஞ்சிய 14 அணு உலைகளும் சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் வரும் நாளில் இந்திய அணு உலைகளின் ரகசியங்களை மட்டும் இழக்கப் போவதில்லை.
நாம் இதுவரை கையாண்டுவரும் தொழில்நுட்பம், மேற்கொண்டுவரும் ஆராய்ச்சிகள், விஞ்ஞானிகள்பற்றிய விவரங்கள், ரகசியமாகச் சேமித்து வைத்திருக்கும் அணு ஆயுத தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் என எல்லாவற்றையுமே இழக்கப் போகிறோம்.



சமஸ்

நன்றி : தினமணி

0 comments: