Thursday, September 11, 2008

சொல்லத் தெரியாமலே...

தமிழகத்தில் எந்தவொரு பட்டதாரி இளைஞரை எடுத்துக்கொண்டாலும் அவரது சான்றிதழ்களில் இருக்கும் மதிப்பெண்ணுக்கும் அவர்தம் திறனுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. இந்தத் திறன் என்று கருதப்படுவதுகருத்தை வெளிப்படுத்தும் ஆற்றல், அந்தந்த சூழலுக்கு ஏற்ப செயல்படும் அறிவு, பொதுவாக மற்றவர்களுடன் பழகும் விதம் ஆகியவைதான்.
கல்லூரி வளாக நேர்காணலுக்கு வரும் நிறுவனங்கள் மாணவர்களின் மதிப்பெண்களைவிட இந்த மூன்று விஷயங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றன.
தகவல் தொடர்புத் துறை நிறுவனங்கள்கூட, இந்த மூன்று எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோர் எந்தப் பாடப்பிரிவு மாணவர்களாக இருந்தாலும் தேர்வு செய்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "எல்லா பொறியியல் மாணவர்களுக்கும் ஒரளவு கணினி அறிவு இருக்கும். மேலும், வேலைக்குத் தேவையான கணினி அறிவை எங்கள் நிறுவனத்திலேயே பயிற்றுவிப்பது மிக எளிது' என்பதுதான்.
கருத்தை வெளிப்படுத்தும் திறன் இல்லாமல் போவதற்கு அடிப்படைக் காரணம் மொழியறிவு இல்லாததுதான். மொழியறிவு வேறு, மொழிப்புலமை வேறு. எல்லோரும் மொழிப்புலமை பெறவேண்டிய அவசியம் இல்லை. அது ஒரு தனித்தன்மை. நபருக்கு நபர் மாறுபடும். ஆனால் மொழியறிவு அனைவருக்கும் பொதுவானது.
இன்றைய தமிழக பட்டதாரி இளைஞர்களிடம் ஆங்கிலம் அல்லது தமிழில் 300 சொற்களில் எதைப் பற்றியாகிலும் எழுதும்படி சொன்னால், அவர்களால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுவது இயலாத ஒன்று. இதற்குக் காரணம் ஆங்கில மோகம் மட்டுமல்ல. அதுதான் காரணம் என்றால், ஆங்கிலத்தையாவது தவறு இல்லாமல் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டுமே! மொழியறிவை வளர்த்துக்கொண்டு பேசவும், கருத்தை வெளிப்படுத்தவும் தனியாக எம்பிஏ படிக்க வேண்டும் என்ற அவல நிலை இன்றைய பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே மொழிப்பாடம்தான் இப்போதும் உள்ளது. பெரிய மாற்றமில்லை. ஆனால் இன்றைய இளைஞனிடம் மட்டும் மொழியறிவு மறைந்தது ஏன் என்ற கேள்விக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
முதலாவதாக, ஒரு குழந்தை வீட்டிலும் தெருவிளையாட்டிலும் பயன்படும் தமிழ் மொழியை இயல்பாகக் கையாளும் திறன் பெறுவதற்கு முன்பே இன்னொரு மொழியைத் திணிக்கிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலம் என்பது அரசுப் பள்ளிகளில் 3ம் வகுப்பில்தான் தொடங்கியது. அதாவது, எல்கேஜி, யுகேஜி பிரபலமாகாத அந்த நாளில், 8 வயதில்தான் ஆங்கில அரிச்சுவடியை மாணவர் படிக்கத் தொடங்குவார். அந்த 8 வயது குழந்தை தமிழில் சரளமாகப் பேசவும், வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகளின் பேச்சுக்குப் புத்திசாலித்தனமாகப் பதில் அளிக்கவும், கேட்ட கதையை மீட்டுரைப்பதிலும் திறம்பெற்றிருக்கும். ஒரு மொழியின் லாவகம் மனதிற்குப் பிடிபட்ட வயதில், அது இந்தி என்றாலும், ஆங்கிலம் என்றாலும் உள்வாங்குவது எளிதாக இருந்தது.
இரண்டாவதாக, இப்போது பெரும்பாலான ஆசிரியர்கள் ஆங்கிலத்தைத் தமிழில் சொல்லி பாடம் நடத்துவதால், மாணவர்கள் மனதுக்குள் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யும் வழக்கம் ஏற்பட்டு, அதுவே இரு மொழிக்கும் பெரும் மனத்தடையாக ஆகிவிடுகிறது. ஆங்கில மொழிப்புலமை உள்ளவர்கள் அதே மொழியில் பேசி, குழந்தைகளைப் பேசவைத்து பாடம் நடத்தும்போது மனம், ஒரு மொழிபெயர்ப்பு இயந்திரமாகச் செயல்படாமல், ஒரு கண்ணாடியைப்போல பிரதிபலிக்கும் கருவியாக மாறுகிறது. வேலைக்காக வேறு மாநிலம் செல்லும் படிப்பறியா இளைஞர்கள் அம்மாநில மொழியில் பேசும் திறன் பெறும் முறையும் இதுதான்.
இந்த இரு காரணங்களுமே நியாயமான காரணங்கள்தான். இதை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தமிழக கல்வித் துறை ஈடுபட வேண்டும்.
எட்டாம் வகுப்புவரை மொழிக்கு மட்டும் தமிழ், ஆங்கிலம், இந்தி எதுவானபோதிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அறிவியல் மற்றும் கணிதத்தை அறிமுகம் செய்யும் அளவில் பாடதிட்டம் வைப்பதும், உயர்நிலைப் பள்ளி தொடங்கி மொழிப் பாடத்தைக் குறைத்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக விலக்கி, அறிவியல் கணித, கணினி பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவதுமான கல்விமுறைதான் இன்றைய தேவை.
நன்றி : தினமணி

0 comments: