Thursday, September 11, 2008

மாற்று அணியே இப்போதைய தேவை

ஜனநாயக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதிலும், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துவதிலும் நம்பிக்கை கொண்ட கட்சிகள் தமக்குள் ஒன்றுபட்டு குறைந்தபட்சத் திட்ட அடிப்படையில் மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இதற்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது' என ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருந்தேன்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைய வேண்டுமென பாமக கூறியுள்ளது. ஆனால் அதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் இல்லை. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுவதற்கான அறிகுறியும் இல்லை.
காங்கிரஸ் பாஜக ஆகிய கட்சிகள் இல்லாத மூன்றாவது அணி அமைக்க வேண்டுமென இடதுசாரி கட்சிகள் கூறியதோடு நில்லாமல் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றன. அகில இந்திய அளவில் இப்படி ஒரு நிலை எடுப்பது சரியாக இருக்கக் கூடும். ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் காங்கிரஸும் பாஜகவும் வலிமை வாய்ந்த கட்சிகள் அல்ல. இரு கழகங்களுக்குப் பின்னோடும் கட்சிகளே. இந்நிலையில் திமுகவைப் பொருத்தவரையில் காங்கிரஸுடனுள்ள கூட்டணியை முறித்துக் கொள்ளத் தயாராக இல்லை. அதை எப்படியும் என்ன விலை கொடுத்தேனும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது. அதிமுகவைப் பொருத்தவரையில் தனது கூட்டணியில் காங்கிரஸை இணைத்துக் கொள்ள மறைமுகமான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனவே கழகங்களுடன் கூட்டுச் சேருவது என்பது மறைமுகமாகக் காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ கூட்டுச் சேருவதாகிவிடும்.
தனித்துவிடப்பட்டுள்ள பாஜக., அதிமுகவுடன் அல்லது திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்ள ஆர்வம் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் காங்கிரஸ் பாஜக கட்சிகள் அல்லாத கூட்டணி என்று சொன்னால் அதிமுக கூட்டணியுடன்தான் கம்யூனிஸ்டுகள் கூட்டுச் சேர வேண்டியிருக்கும். இது எந்த வகையில் இடதுசாரிகளின் நிலைப்பாட்டிற்கு உதவும் என்பது சந்தேகத்திற்குரியது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்ற தியாகத் தழும்புகளை ஏற்ற கம்யூனிஸ்டுகள் நாடு விடுதலை பெற்ற பிறகும் விவசாயிகள் தொழிலாளர்கள் ஆகியோருக்காகத் தொடர்ந்து போராடி பல தியாகங்களைச் செய்தவர்கள். அடக்குமுறைகளை ஏற்றவர்கள். சேலம் சிறைப் படுகொலையை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. வெண்மணியில் ஒடுக்கப்பட்ட விவசாயக் குடும்பங்கள் நிலப் பிரபுக்களால் உயிருடன் கொளுத்தப்பட்டக் கொடூர நிகழ்ச்சி போன்றவற்றை தீரமுடன் சந்தித்த கம்யூனிஸ்டு தோழர்களின் போர்க்குணம் மங்கிவிட்டதாக நான் நினைக்கவில்லை.
தமிழ்நாட்டில் ஊழல் சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டிய வேளை இது. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில இடங்களுக்காக சமரசம் செய்து கொள்வது நாட்டிற்கும் மக்களுக்கும் பெருந்தீங்கை இழைத்துவிடும் என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்க முடியாது.
மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் உரிமைகளைப் பெற பல போராட்டங்களை நடத்தி, பல உயிர்களை இழந்து தியாகத் தழும்புகளை ஏற்ற ஒரு கட்சி பாமக என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. தமிழ், தமிழகப் பிரச்னைகள், ஈழப் பிரச்னை ஆகியவற்றிலும் பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
திமுகவை எதிர்த்து அக்கட்சியை விட்டு வெளியேறி வந்து, அதிமுக ஆட்சியில் கொடிய பொடா சட்டத்திற்கு ஆளாகி தியாகத் தழும்புகள் ஏற்றும், தொடர்ந்து தமிழர் நலனுக்காகவும் ஈழத் தமிழர் பிரச்னைக்காகவும் குரல் கொடுத்து வரும் இயக்கம் மதிமுக.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அவர்களை வலுவான ஒரு சக்தியாக ஆக்கியதில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்திற்கு பெரும் பங்கு உண்டு. தமிழக உரிமைகளுக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கமாகவும் திகழ்கிறது.
மேலும் பல புதிய கட்சிகள் அமைக்கப்பட்டு யாருடன் கூட்டு என்பதை அறிவிக்காமல் உள்ளன. இக்கட்சிகளும் இரு கழகங்களும் கூட்டுச் சேராமல் செயல்படுமானால் அது வரவேற்கத்தக்கதாகும்.
தமிழகத்தைப் பொருத்தவரையில் மாற்று அணி என்பது திமுக அதிமுக அல்லாத அணியாக மட்டுமே இருக்க முடியும். காங்கிரஸை எதிர்ப்பது என்ற பெயரிலேயோ மதவாத சக்திகளை எதிர்ப்பது என்ற பெயரிலேயோ இரு கழகங்களில் ஏதாவது ஒன்றுடன் கூட்டு வைத்துக் கொள்வது என்பது எந்த வகையிலும் சரியானதாகவோ, தொலைநோக்குடன் கூடியதாகவோ இருக்க முடியாது. இரு கழகங்களும் தேர்தலுக்கு முன்பு இல்லாவிட்டாலும் தேர்தலுக்குப் பின்பு மத்தியில் காங்கிரஸோ அல்லது பாஜகவோ ஆட்சி அமைக்குமானால் அவர்களுடன் கைகோர்த்துக் கொள்ள போட்டி போடுவார்கள் என்பது கல்லின் மேல் எழுத்துப்போல உறுதியான ஒன்றாகும். 1971ஆம் ஆண்டிலிருந்து இப்போதுவரை இரு கழகங்களும் காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ கூட்டு சேரவும் மத்திய ஆட்சியில் பதவிகளைக் கேட்டுப் பெறவும் ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழ்நாட்டில் பலவீனமான நிலையில் இருக்கும் காங்கிரஸிற்கும் பாஜகவுக்கும் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உள்ளாட்சி மன்றங்களிலும் சில இடங்களைத் தாரை வார்த்து அக்கட்சிகளை உயிர்ப்பிக்கும் வேலையை இரு கழகங்களும்தான் மாறி மாறிச் செய்கின்றன. மாநிலத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக தில்லியில் ஆளும் கட்சிக்கு அடிபணிந்து நிற்க இரு கழகங்களும் கொஞ்சமும் தவறியதில்லை.
தமிழ்நாட்டில் தடம்பதிக்க வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த பாஜகவிற்கு ஆதரவு தந்து அவர்களைப் பல்லக்கிலே தூக்கிச் சுமந்து வளர்த்த பழியும் பாவமும் இரு கழகங்களையே சாரும். இன்று வரையிலும்கூட பாஜகவிற்கு எதிராக இரு கழகங்களும் குரல் கொடுக்கத் தயங்குகின்றன. ஏனென்றால் நாளை மீண்டும் தில்லியில் பாஜக ஆட்சி பீடம் ஏறுமானால் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கை உணர்வின் விளைவே இதுவாகும்.
தமிழ்நாட்டிலிருந்து பத்து அல்லது பதினைந்து நாடாளுமன்றத் தொகுதிகள் தனக்குக் கிடைத்தால் போதும் என காங்கிரஸ் தலைமை கருதுகிறது. அதற்கிணங்க இரு கழகங்களுடனும் மாறி மாறிக் கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்கள் காமராஜ் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோமென மூச்சு விடாமல் முழங்கிக் கொண்டிருப்பது வேடிக்கையானதாகும். ஏனென்றால் தமிழகத்தின் கல்விக் கண்களைத் திறந்தவர் காமராஜ். அவரது பொற்கால ஆட்சியின் சிறந்த சாதனை இதுவேயாகும். ஆனால் கடந்த 40 ஆண்டு காலத்தில் இரு கழகங்களின் ஆட்சியில் கல்வி வணிகமாக்கப்பட்டுவிட்டது. காமராஜ் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி பெற்றார்கள். இன்றைக்கு மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரிகளாகவும் இன்னும் பல துறைகளில் உயர் நிலையிலும் அவர்கள் உயர முடிந்ததென்று சொன்னால் காமராஜரின் தொலைநோக்குத் திட்டத்தின் விளைவாலேயே ஆகும். ஆனால் இரு கழகங்களின் ஆட்சியில் பணம் படைத்தோருக்கே கல்வி என்ற நிலை உருவாகிவிட்டது. கழகங்களின் இந்த பெருந்தவறுக்கு காங்கிரஸுக்காரர்களும் உடந்தையாக இருந்தார்கள் என்பதை காமராஜ் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.
கடந்த 40 ஆண்டுகாலத்தில் இரு கழகங்களும் மாறி மாறி தமிழகத்தைச் சீரழித்ததைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். சிங்காரவேலர், ராஜாஜி, பெரியார், திரு.வி.க., காமராஜ், ஜீவா, பி. இராமமூர்த்தி, ம.பொ.சி. போன்ற பெரும் தியாகத் தலைவர்கள் தம்முடைய வாழ்வை அர்ப்பணித்து எண்ணற்ற தியாகங்கள் செய்து உருவாக்கித் தந்த தமிழகம் எனும் பூங்கா குரங்கு கைப் பூமாலையாகச் சீரழிவதை எத்தனை நாளைக்கு நாம் அனுமதிக்கப் போகிறோம்?
இரு கழகங்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களை மீட்க வேண்டிய கடமை நம் முன் காத்து நிற்கிறது. தேர்தலில் போட்டி போடும் கட்சிகள், போட்டியிடாத கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், தலித் அமைப்புகள், தமிழ் அமைப்புகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், ஆசிரியர் மாணவர் மகளிர் அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய அனைவரும் கரம் கோர்த்து நின்று போராட வேண்டிய வேளை வந்துவிட்டது. இது நமது நீங்காத கடமையாகும்.
இக்கடமையைச் செய்ய நாம் தவறினால் மக்கள் ஒருபோதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
உண்மையில் இரு கழகங்களும் பலவீனமாக உள்ளன. 1967ம் ஆண்டிலிருந்து இன்று வரை கூட்டணி பலத்தினால் மட்டுமே இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கின்றன. இரு கழகங்களையும் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளும் இணைந்து நின்று தேர்தல் களத்தில் இறங்கினால் இரு கழகங்களின் உண்மை பலம் அம்பலமாகும். காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் இரு கழகங்களும் கூட்டுச் சேர்ந்தாலும் பயன் இருக்கப் போவதில்லை.
தேர்தலை விட, தமிழகத்தைப் பிற்போக்கு சக்திகளிடமிருந்து மீட்பது மிக மிக முக்கியமானது. அந்த மாபெருங்கடமை நம்மை எதிர்நோக்கியிருக்கிறது. கடமையாற்றுகிறோமா இல்லையா என்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி

0 comments: