Monday, August 18, 2008

இதுதான் மக்களாட்சி மகத்துவம்!

இந்திய ஜனநாயகம் 61 வயதினை அடைந்த பின்னர், அதனால் நமது மக்களுக்குக் கிடைத்த பலன்கள் என்ன என்பதனை ஆராய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். நாம் கடந்து வந்த பாதையை நோக்கும்போது நன்மை பயக்காமல், இந்திய ஜனநாயகம் பல தீமைகளை விளைவித்துள்ளதோ எனும் சந்தேகம் எழுகிறது. காரணம் இன்றும் 113 கோடி மக்களில், 83 கோடியே 60 லட்சம் பேர் ஒரு நாளைக்கு ரூ. 20க்கு கீழே வருமானம் உள்ளவர்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.
ஜனநாயகம் எனும் மக்களாட்சி முறை சுமார் 2500 ஆண்டுகளுக்குமுன் உலகில் தோன்றி மறைந்து, அதன்பின் 2000 ஆண்டுகள் கழித்து மறுபடியும் உருவாகி 20ம் நூற்றாண்டில் பலமான ஓர் ஆட்சிமுறையாக உலகெங்கிலும் உருவானது. சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், அரசியல் தத்துவஞானி பிளாட்டோ கூறிய கருத்துகளின்படி ஜனநாயகம் மக்களுக்கு நல்லாட்சியைத் தர முடியாது.
ஜனநாயகத்தின் அடிப்படை மூன்று அம்சங்கள். அவை பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் மற்றும் சட்டவிதிமுறைகளாலான ஆட்சி ஆகியனவாகும். ஆனால், இவற்றைச் சரியான முறையில் உபயோகிக்க, ஜனநாயக ஆட்சிமுறையில் பங்கேற்று அரசுகளை அமைக்கும் சக்தியைப் பெற்ற பொதுமக்கள் விவரமறிந்தவர்களாக இருப்பது அவசியம் என பிளாட்டோ வாதிட்டார்.
""எல்லா மக்களுக்கும் அரசில் பதவி வகிக்கவும், பொது சட்டதிட்டங்களை உருவாக்கவும் உரிமை உண்டு எனும் விதி மேலெழுந்தவாரியாக நோக்கும்போது சிறப்பாகத் தெரிந்தாலும் நடைமுறையில் சரிவராது'' என்பது அவரது வாதம்.
கல்வியறிவு இல்லாதவர்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை எனவும், இதுமாதிரியான மக்களை டெமஃகாக் என அழைக்கப்படும் மேடைப்பேச்சு வல்லுநர்களான தலைவர்கள் தவறான விளக்கங்களை அளித்து கெட்ட பாதைக்கு இட்டுச்சென்று அவர்களது ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்து விடுவார்கள் என்றும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியல் ஞானிகளான பிளாட்டோவும் அவரது ஆசான் சாக்ரட்டீசும் சொல்லி இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. நடப்பு அரசியலை 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே கணித்திருக்கிறார்கள் என்பது தான் அதிசயம்.
தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியாக மாறி நமது ஜனநாயகம் வழங்கிய சுதந்திர அம்சங்களான பேச்சுரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை உபயோகித்து படிப்படியாக மக்கள் ஆதரவினைப் பெற்று அரசமைத்தார்கள் என்பதனை ஆராய்ந்தால் மேலே குறிப்பிட்ட கிரேக்க நாட்டு சித்தாந்தவாதிகளின் கூற்று உண்மை என நமக்குப் புரியும்.
திமுகவின் ஆரம்பகாலங்களில் தி.க.வில் பெற்ற அனுபவத்தால் மேடைப்பேச்சுகளும், நாடகங்களும், சினிமாவும் மக்களைக் கவர்ந்திழுக்கப் போதுமானது என்பது அக்கட்சியின் தலைவர்களுக்குப் புரிந்திருந்தது. அண்ணா இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தினார்.
தூத்துக்குடியில் கே.வி.கே.சாமி எனும் திமுகவைச் சார்ந்த தொழிற்சங்கத் தலைவர் 1956ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அதற்கான இரங்கல் கூட்டத்தில் அண்ணாதுரை சொற்பொழிவாற்றும்போது, "கொடி கட்டி வாழ்ந்த தமிழகம், குடிகெட்டுப் போனதை இங்கு நான், இடிபட்ட மனதுடன் எடுத்துரைக்கின்றேன்! கே.வி.கே. சாமி காட்டிலே வெட்டப்பட்டிருந்தால் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். நாட்டிலே, நடுரோட்டிலே பட்டப்பகலிலே, பலர் மத்தியிலே வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது நாம் கட்டிக்காத்த நெறிமுறைகளை கொட்டிக் கவிழ்த்து விட்டதன்றோ?'' என்று பேசினார்.
இந்தமாதிரியான அடுக்குமொழி மேடைப்பேச்சினைக் கேட்கப் பல ஊர்களிலிருந்து மக்கள் பஸ்களில் சைக்கிள்களில் பயணம் செய்து, ஆயிரக்கணக்கில் கூடுவார்கள். எதுகை, மோனை சகிதம் ஒலிகளின் ஏற்ற இறக்கத்துடன் பேசுபவர்கள் பெரிய தலைவர்கள் எனக் கருதப்பட்டார்கள்.
இவ்வாறான பேச்சுகள் ஏதேனும் உருப்படியான கருத்துகளை, நல்வாழ்வுத் திட்டங்களை விளக்குகின்றனவா எனும் உணர்வு இல்லாமல் பெருந்திரளாகக் கூடிய சாதாரண மக்கள் தங்களது தகுதிக்கேற்ப நிதிகளையும் வழங்கினார்கள்.
பெரிய பொதுக்கூட்டங்களில் தொண்டர்கள் பை ஏந்தி பண வசூல் செய்வார்கள். மகாநாடுகள் நடத்தப்படும். அதற்கு நுழைவுக் கட்டணமும் நிதிகளும் பெறப்படும். பெரிய தொகைகள் வசூலான விவரம் மேடைகளிலே அறிவிக்கப்பட்டு கரகோஷம் எழும்.
இதுமாதிரியான மேடைப்பேச்சு ஒருபுறமும் அரசியல் வசனங்கள் நிறைந்த நாடகங்கள் மறுபுறமும், மக்களைக் கவர்ந்திழுப்பதைக் கண்ட திமுக, பேச்சாளர்களை உருவாக்கி, பயிற்சியளித்து மாநிலமெங்கும் பொதுக்கூட்டங்களை நடத்தியது. அக்காலத்தில் "ஏன் வேண்டும் இன்பத்திராவிடம்?' எனும் கேள்வியை எழுப்பி, தென்மாநிலங்களான ஆந்திரம், மைசூர், கேரளம், தமிழ்நாடு ஆகியவற்றைச் சேர்த்து நாம் கேட்கும் திராவிட நாட்டைவிட, ஸ்வீடன், டென்மார்க், பல்கேரியா, யூகோஸ்லாவியா, ருமேனியா, மலேசியா, இத்தாலி போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் சிறிய நாடுகள். நாம் உலகின் சிறந்த ஒரு நாடாக அமைய முடியும். தபால்துறை, டெலிபோன் துறை ஆகியன நம் கைக்கு வந்தால் நமது பணத்தை வடநாட்டுக்காரன் கொண்டு போக முடியாது'', என முழங்குவார்கள் திமுகவின் குட்டிப் பேச்சாளர்கள். இதுபோன்ற எண்ணற்ற கேலிக்கூத்துகளுக்கு ஒரு உதாரணம் தான் இது.
அடுத்து எழுத்து சுதந்திரம் என்ற போர்வையில் பத்திரிகையில் எந்த ஒரு சமுதாய தார்மிகப் பொறுப்புமற்ற செய்திகளும் விமர்சனங்களும் வெளிப்படும். 1967ம் ஆண்டு தேர்தலின்போது பெருந்தலைவர் காமராஜ் குடியிருந்த வாடகை வீட்டினைப் படம்பிடித்து பெரிய வால் போஸ்டர்களாக அச்சடித்து திமுக தமிழகமெங்கும் ஒட்டியது. போஸ்டரின் தலைப்பு, ""ஏழைப் பங்காளர் வசிக்கும் எட்டடி குச்சில் பாரீர்!''
இன்றைய இளைஞர்கள் மேலே சொன்ன சிறிய உதாரணங்களின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அலங்கார மேடைப்பேச்சுகள், நாடகங்கள், பத்திரிகைச் செய்திகள், பொய்ப் பிரசாரங்கள் மக்களை மாக்களாக மாற்றியது என்பதுதான்! படிப்பறிவில்லாத கிராமப்புற ஏழை எளிய மக்கள் இவர்களை மிகப்பெரிய தலைவர்கள் எனவும் இவர்கள் ஆட்சி மட்டும் ஏற்பட்டுவிட்டால் சுபிட்சம் தானாக வந்துவிடும் எனவும் நம்பினார்கள். 1967ல் இதுமாதிரியான மக்களின் ஆதரவினால் இவர்கள் ஆட்சியையும் பிடித்தார்கள்.
ஆட்சிமுறையில் மக்களுக்கான முன்னேற்றத் திட்டங்களை நிறைவேற்றுவது என்பது மேடைப் பேச்சு மாதிரியான எளிதான விஷயமல்ல என்பது புரிந்தது. ரூபாய்க்கு மூன்று படி அரிசி தரப்படும் என அரிசித் தட்டுப்பாடு தலையாய பிரச்னையாக இருந்த தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, அரசமைத்தபின் ரூபாய்க்கு ஒரு படி அரிசி ரேஷனில் கிடைக்கும் என அறிவித்துவிட்டு அதே அடுக்குமொழி வசனத்தில் முதல்வர் அண்ணா, ""முதலில் ஒருபடி, பின் படிப்படியாக எப்படியும் மூன்று படி'' எனும் வாக்குறுதியை உதிர்த்தார்! அடுத்த சில மாதங்களிலே ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டுவிட்டது.
மக்களின் முன்னேற்றத்திற்கு அரசுகள் முக்கியத்துவம் அளிக்காமல் சாதாரணமான பிரச்னைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்து உண்மையான மக்கள் பிரச்னைகள் பின்தள்ளப்படுகின்றன என்பதும் ஊழலும் சுயநலமும் உச்சகட்டத்தை அடைந்து நாடு சீரழிந்து வருகிறது என்பதும் 61 ஆண்டு ஜனநாயக அரசாட்சியின் பலன் எனலாம். தமிழகத்தில் 40 ஆண்டுகள் நாம் சாதித்தது முதல் 20 ஆண்டுகள் சாதித்ததைப்போல் இல்லை என்பது தான் கசப்பான உண்மை.
இக்கருத்து சரிதான் எனும் வகையில் பேசியுள்ளார், உலகின் தலைசிறந்த வளர்ச்சிப் பொருளாதார மேதை அமார்த்தியா சென். சுதந்திர தினத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றிய அவர் இந்தியாவில் நிலவி வரும் கொடுமையான மூன்று விஷயங்களைக் கவனிக்கத் தவறிவிட்டன அரசுகள் எனக் கூறியுள்ளார்.
அவை: 1. பெருவாரியான ஏழைக் குழந்தைகள் சரியான ஊக்க உணவளிக்கப்படாமல் வளருவது. 2. ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதி இல்லாதது. 3. இன்றளவும் ஆரம்பக் கல்விகூட எல்லா மக்களுக்கும் கிடைக்காமல் இருப்பது ஆகியனவாகும்.
அதற்குக் காரணம் இதுபோன்ற பிரச்னைகளை கையிலெடுக்காமல் அவற்றை மறைத்துவிடக் கூடிய பல விஷயங்களில் கவனம் செலுத்திப் போராட்டங்கள் செய்து வருகிறார்கள் நமது அரசியல்வாதிகள் என்பதை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார் அவர்.
அதாவது தமிழ் செம்மொழி ஆவதும், கிராமியக் கலைகள் சங்கமம் எனும் பெயரில் பெரிய விழாவாக பல நாள்கள் அரசு செலவில் கொண்டாடப்படுவதும், நிறைய சினிமாப் பின்னணி பாடல்களைப் பாடி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் விழா எடுப்பதும், நகராட்சியை மாநகராட்சியாக்க கோடிகள் செலவு செய்து விழா எடுப்பதும், மின்சாரப் பற்றாக்குறை உள்ள போது ஒரு லட்சம் டியூப் லைட்கள் சீரியல்கள் ஒளிவீசும் விழாக்கள் பல எடுப்பதும், பெட்ரோல், டீசல் விலைகள் மக்களை வாட்டி வதைக்கும்போது 250 கார்கள் புடை சூழ அமைச்சர்கள், அதிகாரிகள் இம்மாதிரி விழாக்களில் பங்கு கொள்வதும், இன்னும் பல விஷயங்களும், இலவசங்கள் உள்பட, அமார்த்தியா சென் சொன்ன ஏழைகளுக்கு நன்மை செய்யும் ஊட்டச்சத்து உணவு, மருத்துவ வசதி, கல்வி வசதி ஆகிய அம்சங்களில் சிறிதளவு பங்களிப்பும் செய்யாது.
1947ம் ஆண்டு சுதந்திரப் பிரகடனம் செய்வதற்கு முன்னர் நடந்த விவாதங்களில் நமது தலைவர்கள், கிரேக்க நாடுகளிலும், பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் உருவாகி நடந்து வந்த ஜனநாயக முறையிலான மக்களாட்சியை விடவும் அதிக சுதந்திரத் தன்மைகளை உள்ளடக்கிய அரசியல் சட்டத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என முடிவு செய்தார்கள்.
பரவலான ஜனநாயக உரிமைகள் படிப்பறிவில்லாத ஜனங்களை அதிகமாகக் கொண்ட இந்தியாவிற்கு சரிப்பட்டு வராது எனும் கருத்தினை அன்றைய வைஸ்ராய் லார்ட் மவுண்ட்பேட்டன் கருதினார். தற்குறிகளான ஏழை எளியவர்களின் ஓட்டுகளை வசதி படைத்தவர்கள் விலைக்கு வாங்கி காங்கிரஸை அழித்து விடுவார்கள் என்பது அவரது கருத்து.
ஆனால் இதற்குப் பதிலாக பண்டித ஜவாஹர்லால் நேரு, ""ஆண்டாண்டுகாலம் அடிமைத்தளையில் இருந்த ஏழை எளிய மக்களின் கையில் ஓர் ஓட்டுச்சீட்டினைக் கொடுத்து, அவர்களைத் தேடி ஜமீன், மிட்டா மிராசு, படித்தவன், பணக்காரன் எல்லோரும் சென்று கெஞ்சிக் கூத்தாடி ஓட்டுக் கேட்கும் நிலைமையை உருவாக்குவேன், அது ஒன்றே போதும்!'' எனக் கூறினார்.
ஆனால், ஓட்டுகளை கையில் வைத்திருப்பவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டு தங்களைத் தாங்களே சீரழிப்பார்கள் என்பதை 61 ஆண்டு சுதந்திர இந்தியாவின் ஜனநாயகம் நமக்கு உணர்த்தியுள்ளது. பிளாட்டோவும், மவுண்ட்பேட்டனும் சரியாக நம்மைக் கணித்தார்கள் எனும் எண்ணமே, மிஞ்சுகிறது!
என். முருகன்
நன்றி : தினமணி

0 comments: