Tuesday, August 19, 2008

ஓட்டு நன்மையைக் கருதாமல்...

இமயம் தொட்டு குமரி வரை இது ஒரேநாடு. இதை ஒரேநாடாக இன்றுவரை கட்டி காத்து வரும் பல அம்சங்களில் ஒன்று யாத்திரை. தனது வாழ்நாளில் ஒரு முறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என தினமும் பைசா பைசாவாகச் சேர்த்து ஓர் ஏழை விவசாயி வடக்கேயிருந்து புறப்பட்டு பக்தியுடன் யாத்திரை வருகிறான்.
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்துக்கு என்ன சிறப்பு என வினவினால் நீங்கள் வேறு எதையோ சொல்வீர்கள். ஆனால் சமீபத்திய புள்ளிவிவரம் சொல்கிறது தமிழகத்திலேயே கயிலாய யாத்திரை சென்றவர்கள் அதிகமுள்ள மாவட்டம் ஈரோடு என! தெற்கிலிருந்து வடக்கேயும் வடக்கிலிருந்து தெற்கேயும் ஓடக்கூடிய இந்த பக்தி ஓட்டம்தான் பாரதத்தாயின் ரத்த ஓட்டம்.
தென்பகுதியில் சபரிமலைக்கும், பழனிமலைக்கும் யாத்திரை போகிறார்கள். மேல்மருவத்தூருக்கும் யாத்திரை நடக்கின்றது. ஹிந்துக்களது வழிபாட்டினைப் பின்பற்றி வேளாங்கண்ணி யாத்திரையும் அவர்கள் துவக்கியிருக்கிறார்கள்.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம். ஆள்பவர்கள் தெய்வ நம்பிக்கை இல்லாத(?) கம்யூனிஸ்டுகளாகவே இருந்தாலும் யாத்ரீகர்களுக்கு வசதி செய்து தர வேண்டியது அரசின் கடமை.
ஆனால் மதசார்பற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற யாத்திரைக்கு வருபவர்களிடம் நுழைவு வரி, வாகன வரி, யாத்ரீகர் வரி என பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக உள்ளார்கள்.
இது தவிர தமிழகக் கோயிலில் விசேஷக் கட்டணங்கள் வேறு. ஆனால் அதற்குத் தக பக்தர்களுக்கு வசதி செய்து தரப்படவில்லை.
ஹிந்துக்கள் யாத்திரை செல்லும்போது வரி வசூலிப்பவர்கள் ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மட்டும் சலுகை வழங்குகிறார்களே என ஹிந்துக்கள் ஏற்கெனவே கோபத்தில் உள்ளார்கள்.
மதசார்பற்றவாதிகளது தாஜா செய்யும் போக்கு தாஜா செய்யப்படும் மதத்துக்கு எதிரான உணர்வை ஹிந்துக்களிடம் உண்டாக்கி விடுகிறது.
இதில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் அமர்நாத் சம்பவம். எங்கெல்லாம் லட்சக்கணக்கில் கூட்டம் கூடுகிறதோ அந்த பக்தி கேந்திரங்களின் மதிப்பைக் குறைக்க சில முயற்சிகள் திட்டமிட்டு நடைபெற்றன.
""சபரிமலை ஐயப்பன் சந்நதி தீட்டுபட்டு களங்கமாகிவிட்டது'' என ஒரு பிரசாரம்.
திருப்பதி மலை அருகிலேயே அரசின் ஆதரவுடன் கிறிஸ்தவ மதப் பிரசாரம். ""அமர்நாத் பனிலிங்கம் என்பது ஒரு மோசடி'' என ஒரு பிரசாரம். ஆனால் இந்தப் பிரசாரங்கள் எடுபடவில்லை.
அமர்நாத் பனிபடர்ந்த பகுதியில் உள்ளது. ஆண்டின் எல்லா நாள்களும் அங்கு செல்ல முடியாது. குறிப்பிட்ட இரண்டு மாதங்கள் மட்டுமே பனிலிங்கத்தை தரிசனம் செய்ய இயலும்.
இயற்கையின் இந்த கடும் குளிரைத் தாங்க இயலாமல் பலர் இறந்துபடுகிறார்கள். ஆனாலும் யாத்திரை வருபவர்கள் எண்ணிக்கை குறையவில்லை.
பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பலர் மடிந்தார்கள். ஆனாலும் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்தது.
1996ல் நடைபெற்ற விபத்தின் காரணமாக 250 யாத்ரீகர்கள் இறந்துபட்டார்கள். இது குறித்து விசாரித்த சென்குப்தா குழு தனது அறிக்கையில் யாத்ரீகர்கள் தாற்காலிகமாகத் தங்குவதற்காக ஸ்திரமான கட்டடங்கள் தேவையென்றும், வைஷ்ணவதேவி ஆலயத்துக்காக உள்ளது போல ஒரு வாரியம் அமர்நாத்துக்கும் அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. அந்த அமர்நாத் புனிதத்தலக் குழுவுக்கு ஆளுநரே தலைவராக இருப்பார் என்றும் பரிந்துரை செய்தது.
லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே. சின்ஹா ஆளுநராக இருந்தபோது 2003ம் ஆண்டே யாத்ரீகர்கள் தங்குவதற்கான தாற்காலிகக் குடியிருப்புகளைக் கட்டவும், தேவை முடிந்ததும் கட்டுமானப் பொருள்களைக் கழட்டி அகற்றுகின்ற வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டுமென வற்புறுத்தினார்.
எண்ணிக்கை அதிகமாக வருவதால் யாத்திரை காலத்தை 2 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்றும் ஆளுநர் பரிந்துரைத்தார். இதற்கு முதலமைச்சர் முப்தி முகமது சையத் 6 மாதத்துக்கு எந்த பதிலும் தரவில்லை.
இதற்கிடையே துணை முதலமைச்சர் மங்கத் ராம் சர்மா யாத்திரையின் காலம் 2 மாதங்கள் என நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துவிட்டார்.
முதலமைச்சர் நிருபர் கூட்டத்தைக் கூட்டி அமர்நாத் யாத்திரை ஒரு மாதம்தான் என மறுத்து அறிவித்தார். மோதல் தொடங்கியது. இந்த விஷயத்திற்காக காங்கிரஸ் கட்சியின் 4 அமைச்சர்கள் ராஜிநாமா செய்தார்கள்.
முப்தி முகமது இந்த விஷயத்தை ஸ்ரீநகர் உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால் நீதிமன்றமோ அமர்நாத் யாத்திரை குறித்த எல்லா விஷயங்களையும் முடிவு செய்யும் அதிகாரம் அமர்நாத் புனிதத்தல வாரியத்துக்குத்தான் உள்ளது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து முப்தி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்.
2008 மே மாதம் உச்ச நீதிமன்றம் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் தாற்காலிகக் குடியிருப்புகள் அமைக்க ஆணையிட்டுவிட்டது.
அதன் அடிப்படையில் அமைச்சரவை கூடி வனத்துறையின் 100 ஏக்கர் நிலத்தை வழங்க ஏகமனதாக பிடிபி உள்பட முடிவு செய்தது.
அமர்நாத் யாத்ரீகர்களுக்கு வசதி செய்து தர அமர்நாத் புனிதத்தல வாரியம் ஒன்றினை அரசு அமைத்துள்ளது. அது அரசு நியமித்த வாரியம். அதன் உறுப்பினர்களையும் அரசே நியமிக்கின்றது. ஆளுநர் அதன் தலைவர்.
அந்த வாரியம் மாநில அரசுக்கு வாடகை முன்பணமாக ரூ. 2 கோடியே 31 லட்சம் செலுத்தியுள்ளது. அதன் பிறகே நிலத்தை ஒதுக்கித் தரச் சம்மதித்தது. எத்தனை நாள்களுக்கு? 2 மாதங்களுக்கு மட்டும். பட்டா போட்டுக் கொடுத்துவிடவில்லை. வெறும் குத்தகைதான். நிலஉடமை வனத்துறையின் பொறுப்பிலேயே இருக்கும்.
எவருக்கும் தொந்தரவு இல்லாத வனப்பகுதியில் வெறும் 2 மாதங்களுக்குத் தாற்காலிகக் குடியிருப்புகளும், தாற்காலிகக் கழிவறைகளும் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கித் தந்தமைக்குத்தான் இந்த எதிர்ப்பு. மதவெறியர்களின் இந்த எதிர்ப்புக்கு "மதசார்பற்றவாதிகள்' கண்டனம் தெரிவிக்கவில்லை.
மதவெறியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பகிரங்கமாக இந்திய எதிர்ப்பு கோஷங்கள் முழங்கப்பட்டன.
இது நிலம் குறித்த பிரச்னை என என்னமாய் முகம் சிவந்து கோபப்படுகிறார் உமர் அப்துல்லா! 2 மாதம் நிலம் பயன்படுத்தியதால் என்ன நிலம் பறி போயிற்று?
இமயம் முதல் குமரி வரை உள்ள ஒவ்வொரு துளி மண்ணும் இந்தியனுக்குச் சொந்தம். உமர் அப்துல்லா பழையபடி பிரிவினை முழக்கம் துவக்கினால் நாமும் கோஹினூர் பங்களாவைத் தயார்ப்படுத்த வேண்டி வரும்.
தாற்காலிக ஹிந்து யாத்ரீகர்கள் வருவதால் மதரீதியான ஜனத்தொகை விகிதம் மாறிவிடும் என்றும் அவர்கள் பேசுகிறார்கள்.
சொந்த மண்ணிலிருந்து காஷ்மீரத்து பண்டிதர்களை அடித்து விரட்டி அதனால் லட்சக்கணக்கான காஷ்மீரத்து பண்டிதர்கள் காஷ்மீருக்கு வெளியே சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் மதரீதியான ஜனத்தொகை மாற்றம் குறித்து பேசவே யோக்யதை அற்றவர்கள்.
இது ஏதோ காஷ்மீரத்து மக்கள் பிரச்னை அல்ல; அமர்நாத் யாத்திரை செல்பவர்கள் தமிழர்களும்கூட. அதுமாத்திரமல்ல. நியாயமான ஒரு கோரிக்கைக்காக ஜம்மு மக்கள் போரிடும்போது தென்கோடியில் உள்ள நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் எனக் காட்ட வேண்டாமா?
தேர்தல் நெருங்கி வருவதால் முஸ்லிம்கள் ஓட்டுகளைப் பெற பிடிபி துடிக்கிறது. ஹிந்துக்கள் தரப்பு வாதத்தை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே பேசி வருகிறது.
காங்கிரசுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதனால் தெளிவில்லாமல், குழம்பிப் போய் உள்ளது. ஓட்டு நன்மை கருதாமல் நாட்டு நன்மை கருதிச் செயல்பட வேண்டிய விஷயம் இது.
இல. கணேசன்

நன்றி :தினமணி

0 comments: