Friday, October 24, 2008

கிராம வங்கிகளின் நோக்கம் நிறைவேறுகிறதா?

ஏழைகளுக்குக் கடன் வழங்குவதில் ""பாங்க்ளா கிராமீன் பேங்க்'' போல மற்றொரு அமைப்பு உண்டா என்று உலகம் முழுக்க இப்போது பாராட்டுகிறார்கள்; அத்தோடு விட்டார்களா, அதைப் போலவே நம் நாட்டிலும் வங்கிகள் தேவை என்று அதன் பாணியைப் பின்பற்றி வங்கிகளைத் திறக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வங்கிக்கும் அதைத் தோற்றுவித்த முகம்மது யூனுஸுக்கும் ஒரு சேர நோபல் விருது கூட தந்துவிட்டார்கள்.
அந்த வங்கிக்கு இணையாக சொல்லக்கூடிய நம்முடைய ""பிராந்திய ஊரக வங்கிகள்'' (ஆர்.ஆர்.பி.) கூட சமீபத்தில் ஒரு சாதனையைப் படைத்துள்ளன. அச் சாதனை ஏழைகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்த சாதனை அல்ல; 1993ல் மரணப்படுக்கையில் விழுந்துவிட்ட பிராந்திய ஊரக வங்கிகள், அரசு அடுத்தடுத்து எடுத்த சீரமைப்பு நடவடிக்கைகளால் புத்துயிர் பெற்று மீண்டும் எழுந்து நடமாடும் அளவுக்குத் தெம்பைப் பெற்றதுடன் லாபமும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டன.
அப்படியானால் நாமும் அதுகுறித்து சந்தோஷப்படலாம்தானே? அதுதான் இல்லை. எந்த நோக்கத்துக்காக இந்த வங்கிகள் தொடங்கப்பட்டனவோ அவற்றையெல்லாம் கைவிட்டு, லாபம் ஒன்றே குறி என்று பாதை மாற்றப்பட்டதால்தான் இந்த புத்துயிரும், மீட்சியும் என்னும்போது எப்படி பாராட்ட முடியும்?
இலக்குகள் என்ன? பிராந்திய கிராமப்புற வங்கிகளின் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் அது தொடங்கப்பட்டதன் நோக்கத்தையும் அதிலிருந்து வெகுதூரம் விலகி வந்திருப்பதையும் நம்மால் உணர முடியும்.
1975ல் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது இந்த வங்கிகள் திறக்கப்பட்டன. அந்தந்த மாநில மொழிக்கேற்ப இதற்கு கிராம வங்கி, கிராமின் பேங்க், கிராம்ய பேங்க், கிராமீனா பேங்க், எலாகாய் திஹாட்டி பேங்க், காவோன்லியா பேங்க் என்றெல்லாம் நாமகரணம் சூட்டப்பட்டது.
சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற கைவினைஞர்கள், வீதிகளில் கூவி வியாபாரம் செய்யும் தலைச்சுமை வியாபாரிகள், வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் ஏழைகள் ஆகியோருக்குக் கடன் தரத்தான் இந்த கிராம வங்கிகள் திறக்கப்படுகின்றன என்று இந்த வங்கி பற்றிய அரசின் விளக்கக் குறிப்பின் முதல் வாசகமே தெரிவிக்கிறது.
வணிக வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் ஏதோ ஒரு காரணத்தால் கிராமப்புற ஏழைகளுக்குக் கடன் தரும் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்பதால், அந்தக் குறையை இட்டு நிரப்பவே கிராமப்புற வங்கிகள் தொடங்கப்பட்டன.
எம். நரசிம்மன் தலைமையில் அவசர அவசரமாக நிறுவப்பட்ட ஒரு செயல்பாட்டுக்குழு அளித்த பரிந்துரைகளின்பேரில்தான் இந்த கிராம வங்கிகள் தொடங்கப்பட்டன. வங்கித்துறையின் கூடுதல் செயலராகப் பதவி வகித்தவரும், 1990களின் தொடக்கத்தில் நிதித்துறை சீர்திருத்தம் குறித்து பரிந்துரைகளை அளித்தவருமான அதே நரசிம்மன்தான் இவர்.
இந்த கிராமப்புற வங்கி தொடங்கப்பட்டபோது மத்திய அரசு, வங்கி இருந்த மாநிலத்தின் அரசு, இந்த வங்கியைத் தாங்கிப்பிடிக்க வேண்டிய மாவட்ட முன்னோடி வங்கி ஆகிய மூன்றும் சேர்ந்து பங்கு மூலதனத்தை 50:15:35 என்ற விகிதத்தில் செலுத்த வேண்டும் என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டது.
சமூகப் பலனும், செலவும்: இந்த வங்கி ஏழைகளுக்கும், தொலைதூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடன் தரப்போகிறது என்பதால் இது லாபகரமாக இருக்க முடியாது, நஷ்டம்தான் ஏற்படும் என்று முதலிலேயே எதிர்பார்த்து அதற்கேற்பச் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவை நஷ்டங்களே அல்ல, ஏழைகளை முன்னேற்ற அரசு எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கான செலவுகளே இவை என்று முதலில் கருதப்பட்டன.
இவை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 1990க்குள் இவற்றின் எண்ணிக்கை 196 ஆகவும் இவற்றின் கிளைகளின் எண்ணிக்கை 14,500 ஆகவும் உயர்ந்தன. அதுவரை வங்கிச் சேவை என்றால் என்னவென்றே தெரியாத காடு, மலை, பழங்குடி பகுதிகளுக்கெல்லாம் இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டது. 12 கோடியே 30 லட்சம் பேர் இந்த வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றனர்.
இந்த வங்கிகள் செய்த சேவையை இப்படியெல்லாம் மதிப்பிடாமல் அதன் லாபநஷ்ட கணக்கைப் பார்த்தனர் அதிகாரிகள். தொடங்கிய நாள்தொட்டு 199192 வரையில் இந்த வங்கிகளால் ஏற்பட்ட மொத்த நஷ்டம் வெறும் 621 கோடி ரூபாய்தான்; அப்போதிருந்த 196 கிராமவங்கிகளில் 152 லாபம் ஈட்டாமல் செயல்பட்டுவந்தன. அந்த நஷ்டத்தை மொத்த வங்கிகளின் எண்ணிக்கையால் வகுத்தால் ஒரு வங்கிக்கு ஆண்டுக்கு 18 லட்ச ரூபாய்தான் வருவாய் இழப்பு. ஏழைகளுக்கு அது ஆற்றிய தொண்டுடன் ஒப்பிட்டால் இது ஒரு நஷ்டமே அல்ல.
லாபமே குறி: அரசின் கொள்கைகளை வகுக்கும் அதிகாரிகளுக்கு இந்த கிராமப்புற வங்கிகள் லாபம் சம்பாதிக்காமல் இருப்பது பெரிய உறுத்தலாக இருந்தது. எனவே சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார்கள். அதற்காக இந்த வங்கிகள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டனவோ அந்த லட்சியங்களிலிருந்து விலகினாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்தார்கள்.
முதல் நடவடிக்கையாக, ஏழைகளுக்கு மட்டுமே கடன் தருவது என்ற முடிவை மாற்றி, தேவை என்று கேட்டால் பணக்காரர்களுக்கும் கடன் கொடுக்கலாம் என்று அனுமதித்தார்கள்.
குறைந்த வட்டியில் கடன் என்ற லட்சியம் அடுத்து காவு கொடுக்கப்பட்டது. வங்கி அதிகாரிகளுக்குக் கொடுத்த செயல்பாட்டுச் சுதந்திரம் காரணமாக, பிற வணிக வங்கிகளைவிட அதிக வட்டியை வசூலிக்க ஆரம்பித்தார்கள்.
கிராமப்புறங்களில் டெபாசிட்டுகளைத்திரட்டி அவற்றை கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கே பயன்படுத்த வேண்டும், நகர்ப்புறங்களில் கிடைக்கும் தொகையையும் கிராமப்புறங்களில் கடன்தர திருப்பிவிட வேண்டும் என்ற லட்சியம் அடுத்து கைவிடப்பட்டது. விளைவு, டெபாசிட்டாகத் திரட்டப்பட்ட தொகையில் சரிபாதிதான் அந்தந்த பகுதியில் கடனாக வழங்கப்பட்டது.
தலைகீழாகிவிட்டது: நகர்ப்புற நிதி கிராமப்பகுதி வளர்ச்சிக்குக் கிடைப்பதற்குப் பதிலாக, கிராமப்புறத்தவர்கள் போடும் டெபாசிட் தொகையில் கணிசமான பகுதி நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குக் கடன்தர திருப்பிவிடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் தங்களுக்குக் கிடைக்கும் டெபாசிட்டுகளை நகர்களில் முதலீடு செய்யும் அளவை 55% முதல் 60% வரை இந்த வங்கிகள் உயர்த்திக் கொண்டுள்ளன.
2007ல் கிராமப்புற வங்கிகள் டெபாசிட்டாகத் திரட்டிய தொகையின் அளவு ரூ.83,143.55 கோடி. அதில் ரூ. 45,666.14 கோடியை அதிக வருமானம் பெற வேண்டும் என்பதற்காக பங்கு பத்திரங்களில் முதலீடு செய்தனர்.
கிராமப்புறங்களில் ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிச் சேவையைக் கொண்டு செல்வதுதான் நாலாவது பெரிய லட்சியமாக இருந்தது. ஆனால் சீர்திருத்த நடவடிக்கைகள் இந்த நோக்கத்துக்கு உகந்ததாக இல்லை. நஷ்டம் ஏற்பட்டதால் 1.014 கிராமப்புற கிளைகள் மூடப்பட்டு நகர்ப்புறங்களிலும் பெரு நகரங்களிலும் புதிய கிளைகளாக முகிழ்த்தன.
2008 மார்ச் மாத கணக்குப்படி மொத்த கிராம வங்கிக்கிளைகள் 14,458. அவற்றில் உண்மையிலேயே கிராமங்களில் இப்போதும் உள்ளவற்றின் எண்ணிக்கை 11,353. பாதி நகர்ப்புறங்களாக வளர்ந்துவிட்ட பகுதிகளில் 2,561 கிளைகளும், நகரப்பகுதிகளில் 584ம் உள்ளன. இதைவிட அதிசயம் பெரு நகரங்களில் 60 வங்கிக் கிளைகள் செயல்படுகின்றன.
2005 செப்டம்பரிலிருந்து தொடங்கப்பட்ட வங்கிகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இவ்வங்கிகளின் பிராந்தியத் தன்மையும் அடிபட்டுப்போனது. 196 ஆக இருந்த பிரந்திய கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கை 2008 மே மாதத்தில் 88 ஆகக் குறைக்கப்பட்டது. ஒரே மாதிரியான வேளாண் பருவநிலை உள்ள பகுதியில் கிராம வங்கிகள் செயல்பட வேண்டும் என்ற முடிவுகள் கைவிடப்பட்டன. வங்கியின் செயல்பாட்டுக்கு உரிய மாவட்டங்கள் அடுத்தடுத்து இருக்க வேண்டும் என்ற வரையறையும் கைவிடப்பட்டது.
கடைசியாக, இந்த வங்கிகள் எந்த மாநிலத்தில் செயல்படுகின்றனவோ அந்த மாநில அரசு ஊழியர் வாங்கும் ஊதியமே இவர்களும் பெற வேண்டும் என்று, வங்கியின் செலவைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கால், பிற வணிக வங்கிகளின் ஊதிய விகிதமே கிராமப்புற வங்கிகளின் ஊழியர்களுக்கும் தரப்பட வேண்டும் என்று தேசிய நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி அந்த நோக்கத்தையும் முறியடித்தது.
இப்படியாக, பிற வணிக வங்கிகளைவிட அதிக லாப நோக்கமுள்ள வங்கியாக பிராந்திய கிராமப்புற வங்கிகள் மாற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் வங்கியின் லாபம் அதிகரித்தது என்பதை மறுக்க முடியாது.
200708ம் ஆண்டில் கிராமப்புற வங்கிகள் மூலம் கிடைத்த நிகர லாபம் ரூ.625.11 கோடி. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.617.13 கோடி. அதற்கும் முந்தைய ஆண்டு ரூ.748.11 கோடி.
தன்னுடைய சமூகப் பொறுப்பை உதறித்தள்ளிவிட்ட இந்த வங்கிகளால் இனி வணிக வங்கிகளாகக் கூட செயல்பட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. கடன் தள்ளுபடி, தவணைக்காலம் நீட்டிப்பு, வாராக்கடன் குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் நிதி நிலைமை பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகமாகி வருகிறது.
நாட்டில் உள்ள மொத்த வங்கிக்கிளைகளுடன் ஒப்பிடும்போது கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கையானது 19.58 சதவீதமாக இருக்கிறது. ஆனால் இவை திரட்டும் டெபாசிட்டுகளோ மற்ற வங்கிகள் திரட்டும் டெபாசிட்டுகளுடன் ஒப்பிட்டால் வெறும் 2.01 சதவீதமாக இருக்கிறது. அதே போல கிராமப்புறங்களில் செயல்படும் பிற வங்கிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கை 36.94% ஆக இருக்கிறது, ஆனால் அது தரும் வங்கிக் கடன் அளவு வெறும் 10% தான்.
கிராமப்புற வங்கிகளைச் சீரமைக்க எடுத்த நடவடிக்கைகளால் அது தன்னுடைய ஆரம்பகால லட்சியங்களிலிருந்து வெகுதூரம் விலகிவிட்டன; அப்படியும் அவை பிற வணிக வங்கிகளைவிட அதிக டெபாசிட்டுகளைத் திரட்டிவிடவில்லை, லாபத்தையும் சம்பாதிக்கவில்லை. கிராமப்புற வங்கிகள் இன்னமும் தனி அமைப்பாகத்தான் செயல்பட வேண்டுமா, அதன் நோக்கம் என்ன, லாபம் சம்பாதிப்பதா, கிராமங்களுக்குச் சேவை செய்வதா? அரசுடைமையாக்கப்பட்ட வணிக வங்கிகளால் ஏழைகள், சிறுகுறு விவசாயிகள், கிராமப்புற கைவினைஞர்கள் போன்றோருக்குக் கடன் தர முடியவில்லை என்பதற்காகத்தானே கிராமப்புற வங்கிகள் தொடங்கப்பட்டன, அவர்களுக்குக் கடன் தர மாற்று அமைப்புகள் உருவாகிவிட்டனவா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேவை. சில கேள்விகளுக்கு இந்த சீர்திருத்தங்களால்கூட விடை காண முடியாது.
பி.எஸ்.எம். ராவ்
நன்றி : தினமணி

0 comments: